Sunday, February 19, 2006

தடிப்பசங்க : #2

காட்சி 2: சிவாஜியும் ரஜினியும்

ஒரே வீட்டில் ஒருத்தரு தீவிர சிவாஜி ரசிகனா இருக்காரு, இன்னொருத்தர் அதிதீவிர ரஜினி ரசிகனா இருக்காரு...அப்படி இருந்தா என்னாவும்? மூணாவதா ஒரு கமல் ரசிகரு இருக்காரு பாருங்க அவருக்கு தான் ஒரே கொன்டாட்டம். ரெண்டு பேரையும் நெண்டி விட்டுட்டு வேடிக்கை பாக்குறதுல ஒரு பரமானந்தம் கெடைக்குது பாருங்க...வா ரே வா!

"மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த..."
நாட்டிய பேரொளி பத்மினி மயில் போல தோகை விரித்தாட கம்பீரமாய் நடந்து வருகிறார் சோழ மன்னன் சிவாஜி கணேசன். "ஆகா! அங்க பாருங்கடா எங்க ஆளை! ஸ்டைலைப் பாருங்கடா! அந்த நடையை இன்னிய தேதிக்கு ஒரு பய நடக்க முடியுமாடா!" சிதம்பரம் வடுகநாதா தியேட்டரில் தான் தன் நண்பர்களுடன் பார்த்து ரசித்த பாட்டை ஏதோ ஒரு சேனலில் கண்டதும் எல்லையில்லா சந்தோஷத்தில் அப்ஸ் சொல்கிறார்.

"டேய் மோகன்ராஜ்! நிறுத்துடா அந்த டிவியை! எனுமோ இவுங்க ஆளு வாத்து மாதிரி நடந்து வருவாராம் அதெல்லாம் நாங்க பாக்கணுமாம். எல்லாம் நம்ம நேரம்!" ஒப்பன் பண்ணா ரஜினி ரசிகர் நச்சுனு போடறாரு ஒரு போடு.

தம்பி சொல்லுக்கு மறுபேச்சு ஏது? எக்ஸ்ட்ராவா கைப்பு ஒரு உள்குத்து- "அதானே! உங்காளு பெரியாளுன்னா அது உங்களோட! ஏன் அவரை மத்தவங்களோட கம்பேர் பண்ணனும்?"

"எவனாவது டிவி மேல கையை வச்சீங்க? நடக்கறதே வேற!"

"ஏன் என்னா பண்ணுவீங்களாம்? இந்த பிளேடையெல்லாம் எங்களால தாங்கிக்க முடியாது! இதுக்கு டிஸ்கவரியே பாக்கலாம்" - இது ரஜினி ரசிகரான தம்பி.

"எது! இது பிளேடா! அதானே நல்லதெல்லாம் உங்களுக்கு எங்க புடிக்கும். மண்டையிலே பூசணிக்காயை உடைச்சு அஜக்குன்னா அஜக்கு குமுக்குன்னா குமுக்குன்னா தான் நீங்கல்லாம் பார்ப்பீங்க?"

"ஆமா! எங்காளு கிட்ட நிக்க முடியுமா உங்காளால? அந்த பாட்டை தியேட்டர்ல போயி பாருங்க எத்தனை பேரு எந்திரிச்சு ஆடறாங்கன்னு தெரியும்!"

"ஆமா! இப்படி கையைக் காலை உதைச்சுக்கறதெல்லாம் தியேட்டரில் போய் பாக்கணுமாக்கும்?"

சபாஷ் சரியான போட்டி. கைப்புள்ள நீ எஞ்சாய்மா.

"பின்ன கைவீசம்மா கைவீசு கடைக்கு போலாம் கைவீசுன்னு கண்ணு போயி அழுவறதை தான் போயி பார்ப்பாங்களா?" பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சுல அட்டாக்குறார் இளவல்.

"அது தான்டா நடிப்பு! ஒரு பயலால அழுது நடிக்க முடியுமா அந்த மாதிரி?"

"கமலகாசன் கூட தான் அழுதிருக்காரு இந்த மாதிரி எத்தனையோ படத்துல?" - இது நான்.

"எல்லாம் சிவாஜியைப் பார்த்து கத்துக்கிட்டது தான். இன்னிய தேதிக்கு சிவாஜியோட இன்ஃப்ளூயன்ஸ் இல்லாம யாராலுமே நடிக்க முடியாது. அவரு நடிக்காத வேஷம் கெடையாது"

"சிவாஜியால இந்தியன் தாத்தா மாதிரி வேஷம் போட்டு நடிக்க முடியுமா?"

"அதெல்லாம் ஏற்கனவே சிவாஜி செஞ்சது தான். திருவருட்செல்வர்லேயே அப்பரா வருவாரு பாரு. முகத்துல சா டஸ்ட் (மரத் தூள்) ஒட்டிக்கிட்டு கண்ணைச் சுருக்கிக்கிட்டு ஒரு பார்வை பாப்பாரே...அந்த மாதிரி கஷ்டமான வேஷமெல்லாம் அப்பவே பண்ணது தான். ஒன்னும் தெரியாம வந்துட்டானுங்க பேசறதுக்கு?" சிவாஜியின் எல்லா படத்தையும் பாத்து புள்ளிவிவரத்தை மனப்பாடமா வச்சுருக்குற அப்புச்சி முன்னாடி கமல் ரசிகர் கைப்புள்ள கப்சிப்.

ஆனா புள்ளிவிவரம் இல்லன்னாலும் ரஜினி ரசிகரு எதப் பத்தியும் கவலை படற ஆளில்லை"எங்காளு இந்த மாதிரியெல்லாம் அழுதுட்டு உக்காந்திருக்க மாட்டாரு. மொதல்ல எங்காளுக்கு கண்ணே போகாது. கண்ணு போறதுக்கு முன்னாடி அடிக்க வர்றவனுங்க எல்லாம் காலியாயிருப்பானுங்க".

"நீ படத்தையும் ஒழுங்கா பாக்கலை. ஒனக்கு நடிப்புன்னாலும் என்னன்னு தெரியாது. உன்னை மாதிரி முட்டாப்பசங்க இருக்குறதுனால தான் லூசுத்தனமா என்ன நடிச்சாலும் படம் ஓடுது"

"அதானே?" இது நான்.

"ஸ்டைல் ஸ்டைலுங்கிறியே! புதிய பறவைல சிவாஜி சிகரெட்குடிக்குற ஸ்டைல் யாராச்சும் பண்ண முடியுமா? செயின் ஸ்மோக்கர்சே தோத்துடுவானுங்க"

"அது எல்லாம் ஒரு ஸ்டைலா? சிகரெட் தூக்கி போட்டு உங்காளால பிடிக்க முடியுமா?" ரஜினி ரசிகரு.

"அதானே?" இது உள்குத்துக்குள்ள உள்குத்து. குத்துபவர் கைப்ஸ்.

"அந்த மாதிரி லூசுப் பயலுங்க தான் புடிப்பானுங்க. எஜீக்கேட்டட் ஆளு எவனும் இந்த மாதிரி கோமாளித்தனமெல்லாம் செய்ய மாட்டான்"

"அலோ! என்னைப் பத்தி எது வேணாலும் பேசுங்க. எங்க தலைவரைப் பத்தி பேசுனீங்க சும்மா இருக்க மாட்டேன்"

"உண்மையத் தானே சொல்றேன். நீ தானே ஆரம்பிச்சே நான் சிவாஜி பாட்டைப் பத்திப் பேசுனதும் டிவியை நிறுத்த சொன்னே!"

"அதானே!"

"நீங்க தானே ஆரம்பிச்சீங்க இந்த மாதிரி நடக்க முடியுமா அப்படி இப்படின்னு"

"அதானே?"

"முரளி! கொஞ்சம் இரு! ரொம்ப நேரமா அதானே அதானேனு ஒரு நண்டு கிண்டிக்கிட்டே கெடக்குது" - ஆகா! அப்ஸு உஷாராயிட்டாரு.

"ஆமாங்க டாடி! இவன் தான் ரொம்ப நேரமா கிண்டி வுட்டுக்கிட்டே இருக்குறான்?" - லேசா கைப்சுக்கு புளி கரைக்குது. பின்ன ரஜினி ரசிகர் கையில் கெடச்சா அப்பளமாக்கிடுவாரே!

நெஜ சிவாஜி ரசிகரும் 'வர்றப் போற சிவாஜி' ரசிகரும் ஒன்னா சேர்ந்துக்குறதுக்கு முன்னாடி கிடைச்ச சைக்கிள் கேப்ல கைப்புள்ள எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்.

10 comments:

தருமி said...

சும்மா சொல்லக்கூடாது உங்க அப்ஸ. என்னம்மா சொல்றாருங்க: "உன்னை மாதிரி முட்டாப்பசங்க இருக்குறதுனால தான் லூசுத்தனமா என்ன நடிச்சாலும் படம் ஓடுது"

கைப்புள்ள said...

//சும்மா சொல்லக்கூடாது உங்க அப்ஸ. என்னம்மா சொல்றாருங்க: "உன்னை மாதிரி முட்டாப்பசங்க இருக்குறதுனால தான் லூசுத்தனமா என்ன நடிச்சாலும் படம் ஓடுது" //

வாங்க தருமி சார்,
என்னத்த சொல்றது...ஹி...ஹி!

G.Ragavan said...

கைப்புள்ளை..கலக்கீட்டீங்க போங்க.

உங்களுக்கு விஷட்யம் தெரியுமா....இந்தியன் படத்துல மொதல்ல சிவாஜி தான் நடிக்க வேன்டியதாம்....ஆனா உடல் நிலையைக் கொண்டு கதையை லேச மாத்தி...கமலே ரெண்டு வேஷத்துலயும் நடிச்சாராம். இதுவும் கமல் சொன்னதுதான்.

உண்மையிலேயே இந்தியன் தாத்தாவா நடிச்சிருக்க வேண்டியது சிவாஜி.

கைப்புள்ள said...

//கைப்புள்ளை..கலக்கீட்டீங்க போங்க.//
ரொம்ப நன்றிங்க.

//உண்மையிலேயே இந்தியன் தாத்தாவா நடிச்சிருக்க வேண்டியது சிவாஜி. //
அப்படியா? இது புது சேதியா இருக்கே?

சிவா said...

கைப்புள்ள,

//** அந்த மாதிரி லூசுப் பயலுங்க தான் புடிப்பானுங்க **//

சைடு கேப்புள சொல்ல வேண்டியத சொல்லிட்டீங்க :-)).

G.Ragavan said...

// //உண்மையிலேயே இந்தியன் தாத்தாவா நடிச்சிருக்க வேண்டியது சிவாஜி. //
அப்படியா? இது புது சேதியா இருக்கே? //

இல்ல..ரொம்பப் பழைய செய்தி. இந்தியன் வந்து கொஞ்ச நாள் கழிச்சி ஒரு பேட்டியில கமலஹாசன் சொன்னது.

கைப்புள்ள said...

//சைடு கேப்புள சொல்ல வேண்டியத சொல்லிட்டீங்க :-))//

நோ கமெண்ட்ஸ்!!
:)-

கைப்புள்ள said...

//இல்ல..ரொம்பப் பழைய செய்தி. இந்தியன் வந்து கொஞ்ச நாள் கழிச்சி ஒரு பேட்டியில கமலஹாசன் சொன்னது. //

தகவலுக்கு நன்றி ராகவன்.

Karthik Jayanth said...

இங்க எல்லாரும் கமல இல்ல ரஜினியானு அடுத்த எலக்கிய இம்சைக்கு அஸ்திவாரம் போடும்போது,
சத்தமே இல்லாம கேப்புல ஆப்படிக்குர மாதிரி போடுருக்குற பதிவுதான் " நயமான உள்குத்து " பதிவா ? :-)

Anonymous said...

//அந்த மாதிரி லூசுப் பயலுங்க தான் புடிப்பானுங்க.//

இதெல்லாம் நல்லாயில்ல ஆமாம் சொல்லிட்டேன்.

இதை கண்டிக்கும் விதமா ஒரு வாரம் உங்க பதிவுக்கு வராம லீவு விடப்போறேன்.