Thursday, December 28, 2006

ராஜஸ்தான் - ஒரு போட்டோ பயணம்

போன பிராஜெக்ட் அப்போ ராஜஸ்தான்ல பாத்த சில விஷயங்களை அதிகமாகப் பேசாம(வளவளனு எழுதாம) சுமாரான, படுசுமாரான சில படங்களை வச்சு விஷுவலாச்(!) சொல்லற ஒரு முயற்சி தான் இந்தப் பதிவு.


நாத் த்வாரா(Nathdwara) என்னும் இடத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநாத்ஜி எனும் இறைவனின் படம். ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரிலிருந்து 50 கி.மீ.தொலைவில் உள்ளது இத்தலம். படத்தின் கீழே குஜராத்தி மொழியில் எழுதியிருப்பது "ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா", ஆகஸ்ட் 9,2006


ஸ்ரீநாத்ஜியின் இன்னுமொரு திரு உருவம், , ஆகஸ்ட் 9,2006


ஜிலேபி சுடறாங்க. நாத்த்வாரா, ஆகஸ்ட் 9,2006


சலவைக்கல்(மார்பிள்) தொழிற்சாலை, நாத் த்வாரா - உதய்பூர் சாலை, ஆகஸ்ட் 9,2006


உங்களுக்கு எத்தனை கன அடி வேணும்?, நாத் த்வாரா - உதய்பூர் சாலை, ஆகஸ்ட் 9,2006


"அழகான சரி சோடி, ஆனை மேல அம்பாரி...", உதய்பூர் பேலஸ் செல்லும் வழியில், ஆகஸ்ட் 9,2006


மகாராணா பிரதாப் சிங் தன்னுடைய தாத்தாவின் நினைவாக உருவாக்கிய உதய்பூர் நகரிலுள்ள, உதய்பூர் மாளிகையின்(சிட்டி பேலஸின்) முகப்பு, ஆகஸ்ட் 9,2006


அருங்காட்சியகத்தைத் தன்னகத்தே கொண்ட சிட்டி பேலஸின் இன்னுமொரு படம், ஆகஸ்ட் 9,2006


சூரியவம்சத்தினரின் முதற் கடவுளான சூரியனார் மீசையோடு, ஆகஸ்ட் 9,2006


முகலாயர்களுடன் நடைபெற்ற ஹல்திகாட்டி யுத்தத்தில் (Battle of Haldighati), காலில் பலத்த காயங்கள் ஏற்பட்ட போதும் தன் தலைவனான மகாராணா பிரதாப்சிங்கைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுச் சேர்த்து விட்டப் பின்னரே தன் உயிரை விட்ட சேத்தக்(Chetak) குதிரையின் உருவ பொம்மை. யானைப்படைகளையும் கொண்டு போரிட்ட முகலாய ராணுவத்தைப் போலல்லாமல், ராஜபுத் வீரர்கள் குதிரைகளை மட்டுமே கொண்டு போரிட்டனர். குட்டி யானை போலத் தோன்றி தாக்க வரும் முகலாய யானைகளை ஏமாற்றுவதற்காகத் தும்பிக்கை போன்ற முகமூடி அணிந்திருக்கும் சேத்தக். உதய்பூர் சிட்டி பேலஸ் அருங்காட்சியகம், அகஸ்ட் 9,2006


தாஜ் லேக் பேலஸ் ஐந்து நட்சத்திர தங்கும் விடுதி. உதய்பூர் அருங்காட்சியகத்திலிருந்து காணக் கிடைக்கும் கோணம், ஆகஸ்ட் 9,2006


தார் பாலைவனத்தில் வெள்ளம் ஏற்படக் காரணமாயிருந்த அபரிமிதமான மழையினால் தளும்பி நிற்கும் உதய்பூர் ஏரி, ஆகஸ்ட் 9,2006


தங்களுடைய நாட்டுப்புறப் பாடலான "நிம்பூடா நிம்பூடா" பாடும் பார்மேர் மாவட்ட இசை கலைஞர்கள். "ஹம் தில் தே சுகே சனம்" படத்தில் வரும் பாடல் இவர்களுடைய இசையிலிருந்து தான் திருடப்பட்டது என வருத்தத்துடன் தெரிவித்தார்கள்(ஏனெனில் காலம் காலமாக அவ்விசையைப் பாதுகாத்து வரும் இவர்களுக்கு ஒரு கிரெடிட்டும் கிடைக்கவில்லையாம்). திரைப்படத்தில் வரும் பாடலைப் போலவே இப்பாடலும், துள்ளல் இசையோடே அமைந்திருந்தது, சித்தூர்கட், ஆகஸ்ட் 8,2006


ஸ்பிக் மேகே நடத்திய இக்கலாச்சார நிகழ்ச்சியில் 'கல்பேலியா'(Kalbeliya) நடனம் ஆடும் பெண், சித்தூர்கட், ஆகஸ்ட் 8,2006


'கல்பேலியா' பாரம்பரிய நடனம் - இன்னொரு படம். பளிச்சிடும் பரோட்டாவையும், செங்கண் குறைப்பையும்(Red Eye Reduction) கவனிக்காம விட்டதுக்கு அடிக்க வந்துடாதீங்கப்பா:), சித்தூர்கட், ஆகஸ்ட் 8,2006

Saturday, December 23, 2006

ஷேன் வார்னும் இளையராஜாவும்

இசைஞானி இளையராஜாவுக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? தொடர்பு இருக்குன்னு சொல்றாரு சமீபத்துல ப்ளாக் உலகத்துல, கோதாவுல குதிச்ச நம்ம கல்லூரி நண்பர் 'மாம்ஸ்' தியானேசுவரன். ஆங்கிலத்துல இருந்தாலும் புள்ளி விவரங்களையும், டெக்னிக்குகளையும் உதாரணங்களாகக் கொடுத்து நல்லா எழுதிருக்காரு. நீங்க ஷேன் வார்ன் ரசிகராக இருந்தாலும், ஷேன் வார்னைப் பத்தி ஏன் அவ்வளவு உயர்வாகப் பேசுகிறார்கள் எனத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றாலும் மாம்ஸின் இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள்.

Shane Warne - The best ever

நண்பர் தியானேசுவரனைப் பற்றி முன்னரே என் பதிவில் ஒரு முறை சொல்லியிருக்கேன்.

கிண்டி டைம்ஸ், எனும் இந்தப் பதிவில் இருக்கும், இந்தப் படத்தை வரைந்தவரே அவர் :)

Tuesday, December 19, 2006

தடிப்பசங்க #7

காட்சி #7 : செல்லமே செல்லம்

இந்த சின்ன வயசு, சின்ன வயசுன்னு ஒன்னு இருக்குதே...அந்த வயசுல தாங்க ஒரு மனுஷனால சக உயிர்களிடத்துல அதிக பட்சம் அன்பு பாராட்ட முடியும். இதுக்கு தடிப்பசங்களோட சின்ன வயசு மட்டும் விதிவிலக்கா என்ன? அன்புன்னா...சும்மா உங்க வீட்டு அன்பு எங்க வீட்டு அன்பு இல்ல...ரோட்டுல போறது வானத்துல பறக்குறது, இதையெல்லாம் வீட்டுல வச்சி வளர்த்து அழகு பாக்கறதுக்கு அம்மாவை நச்சரிக்கிற அளவுக்கு 'அன்போமேனியா' தான். ஆனா செல்லப் பிராணி வளர்க்க தடிப்பசங்க ஆசைப்பட்டா போதுமா, தடிப்பசங்களை வளர்க்கறவுங்க ஆசைப்பட வேணாமா? என்ன தான் பெட்(bet) கட்டி பெட்(pet) வளர்க்க ஆசை பட்டாலும் அதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேணுமில்ல? பெட்டு வளர்க்கற ஆசையை எப்படியாச்சும் சாம பேத தான தண்டங்களை உபயோகிச்சு கெடப்புல போட்டுருவாங்க. அட போங்கப்பா...யாருன்னு வேற சொல்லனுமாக்கும்?

"ஒரு அல்சேஷன் நாயை வளர்த்து பெரிய சங்கிலியை ஒன்னை கழுத்துல போட்டு(நாய் கழுத்துல தான்) தெருவுல பந்தாவா, வாக்கிங் கூட்டிட்டுப் போவனும்டா"இது தான் நம்ம இளவலோட நெடுநாளைய ஆசை.

ஆனாலும் அல்சேஷன் வளக்கறதுக்கும் அஸ்டிராலஜில எடம் இருக்கனும் போலிருக்கு. அல்சேஷனுக்கும் தடிப்பசங்களுக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம் தான். "நம்ம வீடே ரொம்ப சின்னது, இதுல நாய் வீட்டுக்கு வந்துச்சுன்னா எங்கே வச்சி வளர்ப்பீங்க?" அப்படீங்கறது தான் அல்சேஷன் வளர்ப்புக்கு எதிரா ஏவப்படற முதல் ஏவுகணை.

"நாயெல்லாம் ஒரு ஓரமா பால்கனியில படுத்துக்கும்மா. ஒரு சின்ன பப்பியாச்சும் வாங்கி குடுங்க" அப்படின்னு சொன்னா "சின்ன பப்பி மட்டும் சீப்புன்னு நெனக்கிறியா? அது என்ன வெலைன்னு தெரியுமா ஒங்களுக்கு? ஒரு சின்ன குட்டியே நாலாயிரம் அஞ்சாயிரம் இருக்குமாம். ஒங்களை வளக்கறதே பெருசு, இதுல நாய் வேற வளர்க்க போறீங்களா? அதெல்லாம் ஒன்னும் வேணாம்" அப்படின்னு தான் அநேகமா பதில் வரும்.

"சே! இந்த அம்மா எப்பவுமே இப்படி தாண்டா. எது கேட்டாலும் முடியாது முடியாதும்பாங்க. ஒரு சின்ன குட்டி நாலாயிரமா இருக்கும்? வாங்கித் தராம இருக்கறதுக்குன்னு ஓவரா டூப்படிக்கிறாங்கடா" - இது இளையவரு

"நாலாயிரமா இருந்தாலும் இருக்கும்டா"- இது நானு.

"அல்சேஷன் வெலை அதிகமா இருந்துச்சுன்னா ஒரு ராஜபாளையம் நாய் வாங்கி வளக்கலாமா? சின்ன குட்டியா வாங்குனா நூறு ரூபாக்குள்ள வாங்கிடலாம்" - வில்லு போல உடம்பு கொண்ட திமிறிக்கிட்டு ஓடற ஒரு அழகான நாயை வாக்கிங் கூட்டுட்டுப் போறதுன்னா சும்மாவா? அதுக்காக எல்லா விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளத் தம்பி தயாராவே இருந்தாரு.

எடப் பிரச்சினையை அல்சேஷனுக்குக் காரணமா சொன்னவங்க "ராஜபாளையம் மட்டும் ஒனக்கு நூறு ரூபால குடுக்கறாங்க வா. ராஜபாளையம் ரொம்ப கோவக்கார நாய். நீ கொஞ்சம் சரியா கவனிக்கலைன்னா உன்னையே கடிச்சி வைக்கும். கடிக்கிற நாயெல்லாம் வேணாம். வயித்தை சுத்தி பதினாறு ஊசி போட்டுக்க ரெடின்னா சொல்லு"ம்பாங்க. வேணாம்னு சொல்லறதுக்குக் காரணத்துக்கா பஞ்சம்? ஆனாலும் நாய் கடிக்கு வயித்தைச் சுத்தி பதினாறு ஊசி போட்டுக்கிட்ட ஒரு பையனையும் அவன் அழுத அழுகையையும் பாத்ததுக்கப்புறம் நாய் கடின்னா லைட்டா(லைட்டாத் தான்) ஒரு பயம். அதுனால வயித்தைச் சுத்தி 16 ஊசி அப்படீங்கற காரணம் நல்லா வர்க்அவுட் ஆகும்.

அதுக்கப்புறம் ஒவ்வொரு சீசன்லயும் ஒவ்வொரு நாய் வளர்க்கனும்னு தோனும். சில சமயம் ஜெர்மன் ஷெப்பர்டு, சில சமயம் வாலில்லாத டாபர்மேன் நாய், சில சமயம் புசுபுசு பொமரேனியன் நாய் இப்படின்னு. ஒவ்வொரு நாய் வளக்கறதுக்கும் என்னெல்லாமோ தில்லாலங்கடி வேலை எல்லாம் பண்ணி பாத்தோம். ஆனா நம்மளைப் பெத்தவங்க நாம சின்னப்பசங்களா இருக்கறதுக்கு முன்னாடியே சின்னப்பசங்களா இருந்துட்டாங்களா? அதனால நமக்கு எல்லா சீசன்லயும் ஸ்டாண்டர்டா எதாச்சும் ஒரு காரணத்தைக் காட்டி பல்பு குடுத்துருவாங்க.

"ஜெர்மன் ஷெப்பர்டு மாட்டுக் கறியைத் தான் சாப்புடுமாம். அதெல்லாம் வேணாம்", "டாபர்மேனா? வாலில்லாம எவ்வளவு அசிங்கமா இருக்குப் பாரு","பொமரேனியன் முடி வீடெல்லாம் கொட்டும். வீடே அசிங்கம் ஆயிடும்" இப்படின்னு நாங்க கேக்கற கேள்விக்குத் தகுந்த மாதிரி எதாச்சும் ஒரு சால்ஜாப்பு வந்துரும்.

காசு குடுத்து தான் நாய் வாங்க முடியலை. எங்கேயாச்சும் வெளில போகும் போது ரொம்ப அழகா, குட்டியூண்டா இருக்கற ஒரு நாக்குட்டியைப் பாத்தா அப்படியே வீட்டுக்கு எடுத்துட்டு வந்து எதாச்சும் டாமி, ஜிம்மின்னு பேரு வச்சி வளக்கனும்னு ரொம்ப ஆசையா இருக்கும். ரோட்டுல திரிஞ்சிட்டு இருக்கற குட்டி நாயைத் தூக்கிட்டு வர காசா? பணமா? காஸ்லியான நாயை வாங்கித் தர சொன்னாத் தான் முடியாதுங்கறாங்க, ரோட்டோரத்துல ஃப்ரீயா கெடைக்கிற நாயைத் தூக்கி வளக்கலாம்னு நெனச்சா...அது தான் ராசா முடியாது.

"அம்மா அந்த குட்டி நாய் அழகா இருக்குதும்மா. அதை தூக்கிட்டுப் போய் நம்ம வீட்டுல வச்சி வளக்கலாம்மா"

"அதெல்லாம் ஒன்னும் வேணாம். அதோட அம்மா இங்க தான் எங்கேயோ பக்கத்துல போயிருக்கு. நீ குட்டியைத் தூக்கற நேரம் உன்னை பாஞ்சு வந்து கடிச்சிடும்" அப்படின்னு குட்டியோட அம்மா எதோ எங்கம்மா கிட்ட பாத்துக்கங்கன்னு சொல்லிட்டுப் போன மாதிரி ஒரு பதில் வரும்.

"ரோடு காலியா இருக்கு. அதோட அம்மாவையும் காணும். அது வர்றதுக்குள்ள தூக்கிட்டு வந்துடலாம்மா" இது தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனான தம்பி.

"சரி! சும்மா குட்டியைத் தூக்கிட்டு வரேன் வரேன்னு சொல்லறியே? அது சின்ன குட்டியா இருக்கே? அதாலத் தானா சாப்புட முடியாதே? அதுக்கு யாரு சாப்பாடு குடுப்பா. அதுனால அதோட அம்மா கிட்டவே அது இருக்கட்டும். வா போலாம்" அப்படின்னு ஒரு பதில் வரும்.

"இல்லம்மா. அதை வளக்கனும்னு ஆசையா இருக்கும்மா. ப்ளீஸ்மா" அப்படின்னு அடுத்த முயற்சி எடுக்கப்படும்.

"நாய் வீட்டுல வச்சி வளத்தேன்னா அது கண்ட எடத்துல டூ பாத்ரூம்லாம் போவுமே? அதையெல்லாம் யாரு சுத்தம் பண்ணுவா? நான்லாம் ஒன்னும் பண்ண மாட்டேன். அதெல்லாம் சரி படாது, வா போவலாம்"அப்படின்னு அடுத்த பிரம்மாஸ்திரம் ஏவப்படும்.

"டூ பாத்ரூம்லாம் போச்சுன்னா நான் பாத்துக்கறேன்மா. ப்ளீஸ்மா"

"ஆமா, இவருக்கே ஒரு ஆளு வேணும். இவுரு நாயைப் பாத்துக்கறாராம். அடம் புடிக்காம் பேசாம வா. சும்மா ரோட்டுல கெடக்கற சொறி நாயெல்லாம் வீட்டுல கூட்டிட்டு வந்து வச்சிக்கிட்டா நீயும் அதை மாதிரி தான் சொறிஞ்சிக்கிட்டு நிப்பே". கரெக்டா அந்த நேரம் பாத்து தான் நாய்க்கும் சொறிஞ்சிக்கனும் போல தோணனுமா? "பாத்தியா? நான் சொன்னேன்ல எப்படி சொறியுது பாரு? நாய் வளக்கறாராம் நாய். பேசாம வா" அப்படின்னு சாம பேத தான தண்டத்துல நாலாவதான தண்டமும் உபயோகிக்கப் படும்.

அதுக்கப்புறம் எங்கேருந்து நாயைத் தூக்கிட்டு வர முடியும்? திருவல்லிக்கேணியில ஒரு சின்ன வீட்டுல வாழ்ந்ததுனால, எட நெருக்கடியைக் காரணம் காட்டி காட்டி, நாய் வளக்கற ஆசை அப்படியே படிப்படியா குறைஞ்சி போச்சு. அதுக்கப்புறம் வீட்டு மொட்டை மாடில டிவி சரியா தெரியலைன்னு(டிவி ஸ்டேஷன் ரொம்ப கிட்டத்துல இருந்ததுனால) ஆண்டெனா திருப்பப் போகும் போது எப்பவாச்சும் உக்காந்துருக்கற கிளியைப் புடிச்சு வளக்கலாம்னும் முயற்சி பண்ணி பாத்தோம். ஆனா நாங்க கிளி புடிக்கிறதுல கில்லாடின்னா, கிட்டப் போய் "தோ புடிச்சிட்டோம்"னு கத்தற நேரத்துல எஸ்கேப் ஆகறதுல கிளி கில்லாடிகளின் கில்லாடி. வீட்டு பக்கத்துலேயே நெறைய பூனைங்க திரிஞ்சிட்டு இருக்கும்ங்கிறதுனால எப்பவுமே பூனை வளர்க்கனும்னு தோணுனதேயில்லை.

இப்படியெல்லாம் பெட்டு எதுவும் வளக்க முடியாத ஏக்கத்துனாலேயே ஸ்கூல் பசங்களுக்காக என் தம்பி மொதலை வளக்க ஆரம்பிச்சிட்டாரு. ஸ்கூல்ல யாராச்சும் "எங்க வீட்டுல நாய் இருக்கு"ன்னு சொன்னா, இவரும் "எங்க வீட்டுல கூடத் தான் மொதலை இருக்குடா"ம்பாரு.

"என்னது முதலையா? உங்க வீட்டுக்கு நான் நாளைக்கு வந்து பாக்கறேன்" அப்படின்னு இளிச்சவாயன் யாராச்சும் சொன்னா "இல்லடா, அதுக்கு ஒடம்பு சரியில்லை. மொதலைக்குத் தக்காளி மட்டும் குடுக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிருந்தாரு. எங்கண்ணன் தெரியாம மொதலைக்குத் தக்காளி குடுத்துட்டான். அது சாப்புட்டுட்டு பயங்கரமா அழ ஆரம்பிச்சுடுச்சு. எங்கப்பா கூட ஏன் தக்காளி குடுத்தேன்னு எங்க அண்ணனை அடிச்சிட்டாரு. அதுனால அதை இப்ப ஆஸ்பிட்டல்ல சேத்துருக்கோம்"அப்படின்னு அவங்க அண்ணனை லூசாக்கி அடியும் வாங்க வச்சிடுவாரு.

சின்னப் பசங்களா இருந்த போது இருந்த "அன்போமேனியா" அப்படி அப்படியே குறைய ஆரம்பிச்சிட்டது. அதுக்கப்புறம் நாய் வளக்கனும்னு தோணவேயில்லை. புது வீட்டுக்குப் போன நேரம்(நான் அப்போ சென்னையில இல்லை), எதோ ஒரு ரோட்டுல போற நாய் க்கு ஒரு வேளை சோறு போட்டதும் அப்படியே வீட்டுப் பக்கமே சுத்த ஆரம்பிச்சுடுச்சு. போன்ல பேசறப்ப அம்மா இதெல்லாம் சொல்லிருந்தாங்க, ஆனா நான் அப்படியே மறந்துட்டேன்.

ரொம்ப நாளைக்கு அப்புறம் கடந்த மார்ச் மாசம் சென்னைக்கு வீட்டுக்குப் போயிருந்த போது...வீட்டுல புதுசா ஒரு நாய் படுத்துருந்துச்சு. புது ஆளான என்னைப் பாத்து மூடியிருந்த கேட்டுக்குள்ள படுத்துருந்த நாய் பயங்கரமா கொலச்சுது. என்னடா இது நம்ம வீட்டுல புதுசா ஒரு நாய் படுத்துருக்குது, அது என்னடான்னா நம்மளையே பாத்து கொலைக்குதேன்னு நெனச்சிக்கிட்டேன். ஆனா கேட்டைத் தெறந்து விட வந்த எங்கம்மா நாயை சமாதானம் படுத்த சொன்னதைக் கேட்டு தான் ஒரு நிமிசம் ஆடிப் போயிட்டேன்.

அப்படி என்ன சொன்னாங்கன்னா கேக்கறீங்க? "டேய் டைசன்! ஒன் அண்ணண்டா" அப்படின்னாங்க. உங்க வீட்டுல ஒரு நாய் வளத்தாங்கன்னா அந்த நாய்க்கு அண்ணன், தம்பி, மாமன், மச்சான் எல்லாமுமா நீங்களாத் தான் இருக்கணும். அது வீட்டுக்குள்ள போன உடனே தான் தெரிஞ்சிக்கிட்டேன்.

"டேய்! அல்சேஷன், ஜெர்மன் ஷெப்பர்டு, ராஜபாளையம் இதெல்லாம் பந்தாவா வளக்கனும்னு சொல்லிட்டு எதோ ஒரு தெரு நாயை வளக்குறே, அதுக்கு வேற நான் எதோ அண்ணனாம், அம்மா சொல்றாங்க" இது தடிப்பசங்கள்ல இளையவரு கிட்ட நானு.

"ஆமா! டைசன் என் தம்பி தான்" அப்படின்னான்.

"என்னடா பேரு அது டைசன்னு, வைக்கிறது தான் வைக்கிறே...ஒரு நல்லவன் பேரை வைக்கக் கூடாது?"

"அப்படியெல்லாம் இருந்தா தான் ஒரு பந்தா. எல்லாரும் அதப் பாத்து பயப்படுவாங்க"

"பயப்படறதுக்கா? மத்த நாய்ங்களோட சண்டை எல்லாம் போடுமா" அப்படின்னு நான் கேட்டதுக்கு "உஹூம், வீட்டுக்குள்ளேருந்து சவுண்டு வுடறதுன்னா நல்லாச் சத்தமா விடுவாரு, வெளியே போனா செமத்தியா ஒத வாங்கிட்டுத் தான் வருவாரு"அப்படின்னான்.

"என்னமோ போ... ஒரு பயந்தாங்கொள்ளி நாய்க்கு ஒரு அக்யூஸ்டு பயலோட பேரு"

"டாய்! என் தம்பியைப் பத்தி எதாவது சொன்னே? அப்புறம் நான் மனுசனா இருக்க மாட்டேன்" - டைசனோட சின்ன அண்ணாத்தே.

"பாத்தியா இந்த டைசன் பயலுக்குக் திமிரை? எதிர் வீட்டுல எலும்பைத் தின்னுட்டு வந்துட்டு நான் சாம்பார் சாதத்தைப் போட்டதும் தின்ன மாட்டேங்கறான். அப்படியே ஒன் தம்பிங்களை(என் தம்பியும், என் சித்திப் பையனும்) மாதிரி தான் இவனும், எல்லாம் நாக்குக்கு ருசியாத் தான் கேக்கும்" -டைசனோட அம்மான்னு சரியாக் கண்டு பிடிச்சிருந்தீங்கன்னாலும் பரிசு எதுவும் கெடயாது.

"ஒரு வேளை டைசனுக்கும் கடக ராசியா இருக்குமோ?" - சொல்லிட்டு மொத்து வாங்கறதுக்கு முன்னாடி ஜூட் விட்டவரு திருவாளர் டைசன் அவர்களோட பெரிய அண்ணாத்தை.

Wednesday, December 13, 2006

பால் காய்ச்சல்

அன்புடையீர்,

நிகழும் விய ஆண்டு கார்த்திகை திங்கள் 27 ஆம் நாள் (டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி 2006 ஆம் வருடம்) காலை 7 மணியிலிருந்து 11.23க்கு மத்தியில் செமத்தியாகக் கடிபடும் ராசியும், ஒட்டுமொத்தமாக பஞ்சர் ஆகக் கூடிய நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில்(!) எனது புதிய வார்ர்புரு புகுவிழாவிற்கும் அதையொட்டிய பால் காய்ச்சும் விழாவினையும் தாங்கள் தங்களது சுற்றமும் நட்பும் சூழ வருகை புரிந்திருந்து வாழ்த்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இங்ஙணம்,
கைப்புள்ள

அவ்வண்ணமே கோரும்
மாஞ்சா போட்டு காத்தாடி வுடற மொட்டை பாஸ்.


சரி, ரொம்ப ஜம்பமா பால் காய்ச்சுற விழான்னு போஸ்ட் போட்டு கூப்புட்டாச்சு. புது டெம்பிளேட்டை போணி பண்ண எதாச்சும் மொக்கை பதிவு போடோணுமில்ல...அதுக்காக யோசனை பண்ணதுல ஒரு கதை சொல்லலாம்னு தோணுச்சுங்க. நா....னே சொந்தமா எழுதுன கதை இது. கதைன்னதும் நெல்லிக்கா மாதிரியோ, கதிரேசன் கதை மாதிரியோ எதையாச்சும் எதிர்பாத்து வந்தீங்கன்னா ஏமாந்து போயிடுவீங்க. ஏன்னா நம்ம கதை அதை எல்லாத்தையும் தாண்டுன ஒரு சூப்பரான சூப்ரீமான மெகாஹிட் ப்ளாக்பஸ்டர் கதை. சரி...சரி...பில்டப்பு போதும். கதையைச் சொல்றேன் கேளுங்க. அதாவது நம்ம கதையில ஒரு பயங்கர நேர்மையான போலீஸ்காரர் இருக்காருங்க. அவரு தான் நம்ம கதையோட ஹீரோ. அவரு பேரு...ஆங்...சி.ஐ.டி.சங்கர். மனுசனுக்கு ஒடம்பு பூரா மூளை...சின்ன வயசுலேருந்து டன் கணக்குல வெண்டைக்கா சாப்புட்டதுனால, லைட்டா நம்ம சி.ஐ.டி.மண்டையில கொட்டுனா கூட கொட்டுறவங்க விரல்ல மூளை ஒட்டிக்கும்...அம்புட்டு மூளை. சங்கருக்குக் எந்த அளவு கொழந்தை மனசோ அந்த அளவுக்கு நேர்மையும் நாணயமும் ரொம்ப முக்கியம். புள்ளைத்தாச்சி பொண்டாட்டிக்கு தோசை போட்டுத் தர்றதுல காட்டுற அதே இண்டரெஸ்டைத் திருட்டுப் பயலுங்களைப் புடிக்கறதுக்காக வாத்து டிசைன்ல ஒரு பைக்கை வச்சிக்கிட்டு தண்ணிக்குள்ளேருந்து பாஞ்சு சண்டை போட்டு கெலிக்கிறதுலயும் காட்டுவாரு.


சி.ஐ.டி.சங்கர்னு இருந்தா சி.ஐ.டி.சகுந்தலா இல்லாமலயா இருப்பாக? அவிங்களும் இருக்காக. ஆனா அவங்க நம்ம கதையில சங்கருக்கு ஜோடி கெடையாது. காலேஜ்ல ஒன்னா படிக்கும் போது சங்கரை ரகசியமா சைட்டடிச்ச 'ஜஸ்ட் ஃப்ரெண்டு' தான். இங்கே நம்ம சகுந்தலாவைப் பத்தி சொல்லியே ஆவனும். ஸ்பாகெட்டி டாப்ஸ், ஜீன்ஸ் இதெல்லாம் போட்ட நல்ல 'வடிவான பெண்டு' தான். ஆனா கடமைன்னு வந்துட்டா பெண்டு நிமித்துறதுலயும் கில்லாடி. நம்ம சி.ஐ.டி.சங்கரோட தோஸ்த் ஒருத்தரு இந்த கதையில இருக்காப்புல. அவரு பேரு...என்னாதது?...ஆங்...ஆங்...சாரி. Sorry இல்ல Chaari. நம்ம சாரியிருக்காரே, பாக்கறது ஏட்டு வேலைன்னாலும் கடலை போடறதுல கிங். சி.ஐ.டி.சகுந்தலாவுக்கு நம்ம சாரி வுடற நூல் பாதியிலியே டீலாகிப் போறதுன்னால சீ...சீ...இந்தப் பழம் புளிக்கும்னு, அதை அப்படியே விட்டுட்டு புடிபடப் போறத் திருட்டுப் பயலைத் தப்பிக்க வைக்கிற கஷ்டமான தொழிலைச் செய்யறாரு.


இது இப்படியிருக்க மலையூர் மம்பட்டியான் மலையூர் மம்பட்டியான்னு ஒருத்தரு நாடு நாடாக் கொள்ளை அடிக்கிறாரு. எந்த நாட்டு போலீசாலயும் அவரைப் புடிக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஜெகஜால கில்லாடி அவரு. ஆயா வேஷம் போட்டு பாயா திருடறது, பணக்காரங்க கிட்டேருந்து கொள்ளை அடிச்சி ஏழைகளுக்குக் குடுக்காம தானே வச்சிக்கிறது, திருடுன பணத்தை வச்சி அடுத்த திருட்டுக்குப் பளான் போடறதுன்னு இப்படியே ஜாலியாப் போவுது அவரு பொழப்பு. இப்படியே பல எடத்துல திருடுனாலும், நம்ம மம்பட்டியானுக்கு ஒரு பழக்கம்ங்க. அதாவது திருடப் போற எடத்துலெல்லாம் சிலேட் பல்பத்தைத் தேடி ஏபிசிடின்னு எதனா கிறுக்கி வைக்கிற ஒரு எல்கேஜி பழக்கம். இப்படி ஒரு தபா ஒரு எடத்துல திருடிட்டு வரும் போது சிலேட்ல நம்மாளு ஏ ன்னு எழுதி வைக்க, அது நம்ம ஹீரோ சி.ஐ.டி.சங்கர் கையில மாட்டிக்குது...யார் கையில மாட்டிக்குது...நம்ம சி.ஐ.டி.சங்கர் கையில மாட்டிக்குது. ஒடனே சங்கரும், படக்குன்னு ஒரு கால்குலேட்டரை எடுத்து சொம்மா ஸ்டைலா ரெண்டு பட்டனை அழுத்தறாரு, கூட்டிக் கழிச்சு கணக்கு போட்டு நம்ம கால்குலேட்டர் மம்பட்டியான் அடுத்ததா திருடப் போற எடத்தைக் கரீட்டாச் சொல்லிடுது. அதைக் கண்டு புடிச்சி சொன்னதும் மம்பட்டியானைப் புடிக்கறதுக்காண்டி சி.ஐ.டி.சங்கரையும், சி.ஐ.டி.சகுந்தலாவையும், ஏட்டு சாரியையும் வச்சி ஒரு தனிப் படை அமைச்சு 'போய் லபக்குன்னு கோழி அமுக்கு அமுக்கிக்கின்னு வாங்கப்பா'ன்னு போலீஸ்ல அனுப்பி வைக்கிறாங்க.


மலையூர் மம்பட்டியானைப் புடிக்கறதுன்னா சொம்மாவா? சகுந்தலாக்கா எஃபெக்டுக்காக ஒரு பனியனை எடுத்து மாட்டிக்குது, "ஐ நீ மட்டும் தான் எஃபெக்டு காட்டனுமா? நாங்களும் தான் காட்டுவோம்"னு சொல்லி சங்கரும், சாரியும் சோக்கா பீச்சுல வைப்பாங்கல்ல கலர் கண்ணாடி அதை வாங்கி மாட்டிக்கிறாங்க. மூனு பேரும் அவுங்களுக்குள்ளேயே பேசிக்கிறதுக்காண்டி ஒரு மாடர்ன் டிரான்ஸிஸ்டர் வித் இயர்ஃபோன் எடுத்து காதுல மாட்டிக்கிறாங்க. ஆனா எம்புட்டுத் தான் டிரான்சிஸ்டர்ல இவுங்கல்லாம் பேசிக்கினாலும் நம்ம மம்பட்டியான்க்குறாரே மம்பட்டியான் சோக்கா செலை வேசம் போட்டு எப்படியோ லவட்ட வேண்டிய சமாச்சாரத்தை லவட்டிக்கிறாரு. நம்ம சி.ஐ.டி.சங்கருக்கு எப்படியோ இது தெரிஞ்சிப் போவ, சாரியை டிரான்சிஸ்டர்ல கூப்புட்டு உசார் பண்ணியும் நம்ம மம்பட்டியான் தாத்தா வேசம் போட்டு சாக்கடைக்குள்ள பூந்து எஸ்கேப் ஆயிடறாரு. நீ பாட்டுக்கு வரலாம், வந்து திருடிட்டுப் போலாம்னு பாத்தா சங்கரும், சாரியும், சகுந்தலாவும் வுட்டுருவாங்களா? எலிகாப்டர்லயும், மாட்டுவண்டிலயும் பயங்கரமா மம்பட்டியானைச் சேஸ் பண்ணுறாங்க...உங்க வீட்டு சேஸ் எங்க வீட்டு சேஸ் இல்ல...பயங்கரமான ஒரு சேஸ் பண்ணி...கடைசியா கோட்டை வுட்டுடறாங்க.

"சரி அடிச்சிக்கினு போனா போறான்...அடுத்தது ராஜா காலத்து அரை பிளேடு ஒன்னை அபேஸ் பண்ண மம்பட்டியான் கண்டிப்பா வருவான்" அப்படின்னு அங்கே அவனைப் புடிக்க எலிப் போன்ல மசால் வடை வைக்கிற மாதிரி லேசர் லைட்டெல்லாம் செட் பண்ணி ரெடியா நின்னுக்குனு இருக்காங்க சி.ஐ.டி.சங்கரும், சகுந்தலாவும். ஆனா மம்பட்டியான் வந்து பிளேடை அடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு பொண்ணு வந்து அபேஸ் பண்ணிடுது. ஆனா பிளேடை அபேஸ் பண்ணற நேரம் பாத்து சி.ஐ.டி.சங்கர் தன்னோட சகப் பரிவாரங்களோட ஸ்பாட்ல ஆஜராயிடுறாரு. ஆனா கையில வெலங்கு மாட்டிப் பொண்ணை அரெஸ்ட் பண்ணி எஃப் ஐ ஆர் எழுதறதுக்குள்ள, மம்பட்டியான் பறந்து வந்து பொண்ணையும் பிளேடையும் எஸ்கேப் பண்ணி கூட்டுக்கினு ஓடிடறாரு. இவுங்க ரெண்டு பேரும் எஸ் ஆகி மம்பட்டியானோட ரெசிடென்ஸுக்குப் போறாங்க. அங்கே அந்த பொண்ணு தன்னோட முகமூடியை வெலக்குது...அடங்கொக்க மக்கா சக்கை அழகுடான்னு கண்ணாத்தா (அதான் பாப்பா பேரு) அழகைப் பாத்து மம்பட்டியான் அப்படியே மயங்கி நிக்கிறாரு. அப்பால சில பல மோதல்களுக்கு அப்பால பாஸ்கெட் பால் ஆடிக்கினே கண்ணாத்தாவையும் தன்னோட தொயில்ல பார்ட்னராச் சேத்துக்கிறாரு நம்ம மம்பட்டியான். ஆனா நம்ம கண்ணாத்தாவுக்கு மராட்டிய மகராஜா பேரைக் கேட்டா மட்டும் புடிக்கவே புடிக்காது. அது ஏன்னு கேக்கப் பிடாது. அதெல்லாம் அப்படித் தான். ஆனா மம்பட்டியானோட, கர்ச்சீப்ல செஞ்ச டிரெஸ் எல்லாம் போட்டுக்கினு டான்ஸ் ஆடுவாங்க. அதுவும் அப்படித் தான்.


இந்த நேரம் பாத்து நம்ம சி.ஐ.டி.சகுந்தலாவுக்கு சி.ஐ.டி. வேலையெல்லாம் வேலையத்த வேலைன்னு ஒரு ஞானோதயம் தோணவே அவுங்களும் அப்படியே சைக்கிள் கேப்ல எஸ்ஸாயிகிடறாங்க. ஆனாலும் எஸ்ஸாவறதுக்கு முன்னாடி தன்னை மாதிரியே இருக்கற அவங்க தங்காச்சி ஒருத்தங்க ரிகோலெத்தா பார்டர் தோட்டத்தாண்ட தனியா தங்கியிருக்கறதைச் சொல்லிட்டு எஸ்ஸாயிடறாங்க. தற்செயலா, அட படு தற்செயலா நம்ம கண்ணாத்தாவும், மம்பட்டியானும் அதே எடத்துக்கு வந்துருக்கறதா சங்கருக்கும், சாரிக்கும் தகவல் கெடைக்குது. சரி...கம்பெனி செலவுல கடலைக்கு கடலையும் ஆச்சு...அப்படியே முடிஞ்சா மம்பட்டியானைப் புடிக்க முயற்சி பண்ணுவோம்னு சங்கரும், சாரியும் பார்டர் தோட்டம் வந்து சேருறாங்க.

இந்த எடத்துல கதையில ஒரு திருப்புமொனை இருக்கற நேரத்துல பதிவு ரொம்ப நீளமாயிடுச்சுன்னு "பால் காய்ச்சல்" தொடரும்னு ஒரு வெயிட்டீஸ் வுட்டுக்கலாமான்னு நெனச்சேன். ஆனா பதிவு நீளமா தெரியாம இருக்கறதுக்காண்டித் தானே டெம்பிளேட்டையே மாத்துனோம்ங்கிறது நெனப்பு வர, அந்த ஐடியாவை அப்படியே குழித் தோண்டி ரிகோலெத்தா தோட்டத்தாண்டையே பொதச்சிட்டு கதையை மேலே சொல்றேன் கேளுங்க. இண்டிரெஸ்டா உம் கொட்டிக்கினே கேக்கனும் ரைட்டா? அப்ப தான் கதை சொல்றவனுக்கும் ஒரு ஃபீலிங்ஸ் வரும். திருப்புமொனைன்னு சொன்னேனே அது என்ன திருப்புமொனை?


இந்த கண்ணாத்தா இருக்கே கண்ணாத்தா...அது மம்பட்டியானைப் புடிக்க சி.ஐ.டி.சங்கர் செட்டப் பண்ண ஆளு. அடங்கொக்கமக்கா!!! என்ன இப்படி ஒரு மெகா திருப்பம்னு நீங்கல்லாம் கேக்கறது புரியுது. மறுக்கா ஒரு டேங்க்யூ. கதை த்ரில்லிங்காப் போவுதில்ல? ஆனா பாருங்க கண்ணாத்தாவுக்கு மம்பட்டியான் மேல மெய்யாலுமே லவ்ஸ் உண்டாகிப் போவுது. ஆனா இந்த நேரம் பாத்து கண்ணாத்தா சி.ஐ.டி.சங்கரோட ஆளுன்னு மம்பட்டியானுக்குத் தெரிஞ்சிப் போவ ரோல் கேப் துப்பாக்கியால கண்ணாத்தாவுக்கு பயம் காட்டறாரு. பயத்துல கண்ணாத்தாவுக்கு லவ்ஸ் இன்னும் அதிகமாவ...ஒரு சின்ன லா லா லா நடக்குது:) அதுக்கப்புறம் என்ன... கண்ணாத்தாவும் மம்பட்டியானும் ஒன்னு சேர்ந்து சி.ஐ.டி.சங்கர் கண்ணுல மண்ணைத் தூவிட்டு ரிகோலெத்தாலயும் ஒரு மெகா ஆட்டையைப் போட்டுட்டு தாடி வேசம் எல்லாம் போட்டு எஸ்கேப் ஆக முயற்சி பண்ணறாங்க. ஆனா ரெண்டு பேத்தையும் சி.ஐ.டி.சங்கரும், சாரியும் ஹவர் சைக்கிளை எடுத்துக்குன்னு போயி தொறத்தோ தொறத்துன்னு தொறத்துறாங்க. அப்படியே தொறத்திட்டுப் போகும் போது, மலை மேல ஒரு முகனையில கண்ணாத்தாவும், மம்பட்டியானும் மாட்டிக்கிறாங்க.

அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு தானே கேக்கறீங்க? ஐ...ஐ...அஸ்கு புஸ்கு! நான் எப்படி சொல்லுவேன்? இப்பேர்ப்பட்ட என்னோட இந்த இண்டர்நேஷனல் கதையைத் தமிழ்ல கேப்டனை வச்சிப் படமாப் பண்ண நான் முயற்சி பண்ண நேரத்துல, "தர்மபுரி"க்குக் கேப்டன் பேரரசுக்கு டேட் குடுத்ததுனால, சும்மா இருக்க வேணாமேன்னு சி.ஐ.டி.சங்கரா அபிஷேக் பச்சனையும், சி.ஐ.டி.சகுந்தலாவா பிபாஷா பாசுவையும், மலையூர் மம்பட்டியானா ரித்திக் ரோஷனையும், கண்ணாத்தாவா ஐஸ்வர்யா ராயையும், சாரியா உதய் சோப்ராவையும் வச்சி "தூம் 2"ன்னு ஒரு இண்டர்நேஷனல் படம் எடுக்க வைச்சேன். அந்த கதை தான் நீங்க மேலே படிச்சது. கதையைப் படிச்சதும் இல்லாம க்ளைமாக்ஸையும் கேக்கறீங்களே? இது நியாயமா?

Tuesday, December 05, 2006

பஸ் பயணங்களில் #3

பஸ் பயணங்களில் #2
பஸ் பயணங்களில் #1

ஓட்டுநர், நடத்துனர், பணிமனை இதப் பத்தியெல்லாம் போன பதிவுகள்ல ஏதேதோ உளறிக் கொட்டியாச்சு. இருந்தாலும் பயணிகளைப் பத்தியும், பயண அனுபவங்களைப் பத்தியும் மாட்லாடலன்னா எப்படி? பேருந்துல பயணிகளையும், அவங்க நடவடிக்கைகளையும் கவனிச்சாலே நகைச்சுவை துணுக்குகளுக்கும், கொஞ்சம் வளமான கற்பனை கொண்ட எழுத்தாளர்களா இருந்தா எத்தனையோ சிறுகதைகளுக்கும் கதை களமா அமையக் கூடியது(ஏற்கனவே அமைந்தது) பேருந்து பயணம். மக்களைக் கவனிக்கறதுலயும் அவங்க செய்கைகளை ரசிக்கறதுலயும்(ரசிக்கக் கூடியவற்றிற்கு மட்டும்) ஒரு ஈடுபாடு வந்துடுச்சின்னா ரொம்ப மகிழ்ச்சியான அனுபவங்களாக அமையக் கூடியது இப்பயணங்கள்.

வெளியூர் செல்லும் பேருந்துகளில் இந்த மாதிரி பயணங்களின் போது தான் எங்காவது மோட்டலில் நின்று விட்டு பஸ் கெளம்புவதற்கு முன்னால், வெளியில் நின்று தம்மடித்துக் கொண்டிருக்கும் கணவர் வராததால், 'கொஞ்சம் நிறுத்துங்க இன்னும் அவர் வரலை' என்று யாராவது ஒரு பெண் பரிதாபமாகக் கெஞ்சுவதும், 'பத்து நிமிசத்துல வந்துடுங்கன்னு அப்பவே சொன்னேனேமா' என ஓட்டுநர் அலுத்துக் கொள்வதும் சம்பந்தப்பட்ட 'தம்-புரானின்' குடும்பத்தவர்களின் இதயத் துடிப்பை அதிகப் படுத்துவதற்காக ''ட்ர்ன்ன்ன் ட்ர்ன்ன்ன்ன்' என்று வண்டியை சவுண்டு அதிகமாகக் கொடுக்கச் செய்வதும், தம் அடித்துக் கொண்டிருந்தவர் எங்கிருந்தோ அவசரமாக அவசரமாக ஓடி வந்து ஏறுவதும் 'இப்ப அந்த சிகரெட் குடிக்கலைன்னா தான் என்னா?'னு வூட்டுக்கார அம்மாவிடம் பாட்டு வாங்கி அசடு வழிவதையும் காண முடியும். 'திண்டிவனத்துலேருந்து மூனு மணி நேரத்துல வண்டி தாம்பரத்துக்குப் போய்டும்ங்க' என வாக்கு கொடுத்துவிட்டு சீட் நிரம்பவில்லை என்பதால் புளியமரத்திற்குப் புளியமரம் தனியார் பேருந்து நின்று நின்று செல்வதையும், மூனு மணி நேரத்தில் செங்கல்பட்டைக் கூடத் தாண்டாத பேருந்தின் ஓட்டுநரையும், நடத்துனரையும் ஏகவசனத்தில் கரித்துக் கொட்டும் பயணிகளையும் காணலாம். ப்ராட்வே பேருந்து நிலையத்தில் ஒவ்வொரு வெளியூர் பேருந்தாக ஏறி இஞ்சி மரப்பாவும், டைம்பாஸ் கடலையும், பெப்சி ஐசும் விற்கும் சிறுவர்களால் ஒரு நாளைக்கு எவ்வளவு ஊதியம் ஈட்டிவிட முடியும் எனப் பலமுறை யோசித்ததுண்டு. இரயில் கடப்பதற்காகப் பேருந்து நிற்கும் அந்த சில மணித் துளிகளில் 'யக்கா பிஞ்சு நுங்குக்கா...வாங்கிக்கக்கா' என எட்டடி உயரத்தில் இருக்கும் எட்டாத ஜன்னல் வழியே நுங்கைப் பேரம் பேசி விற்க முயலும் சிறுமியின் ஏழ்மையைக் கண்டும் காணாமல் போகச் செய்யும் இயந்திர வாழ்க்கையினையே நாம் வாழ்கிறோம் என உணர்த்துவதும் பேருந்து பயணம்.

சென்னை நகரத்துப் பேருந்துகளில் 'ஒரு நந்தனம் ஹவுசிங் போர்ட் குட்ணா' என நடத்துனரைக் கேட்கும் லுங்கி கட்டிய கறுத்த இளைஞனின் சமூக நிலையை எடை போட பொருளாதார மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரம் பேருந்தின் 'இறங்கும் வழி' வாயிலாக ஏறும் கல்லூரி மாணவி 'ஒரு டூ ஃபிப்டி பாஸ் பண்ணுங்க' என அருகில் நிற்பவரிடம் பத்து ரூபாயைத் தருவதையும், ஸ்டேஜ் மாறுவதை உணர்ந்த நடத்துனர் 'எங்கம்மா போவனும்?' எனக் கேட்கும் கேள்விக்கு 'ஏத்ராஜ்' என நுனிநாக்கில் பதிலளிப்பதையும், கேட்கும் வழிப்போக்கனான நமக்கு, நம் வீட்டருகில் மாடு கட்டி பால் கறக்கும் எத்துராஜும், பகலிலேயே சரக்கடித்து விட்டு மல்லாந்து கிடக்கும் ரிக்ஷாகார எத்திராஜும் தங்கள் பெயர்களையும் இவ்வளவு அழகாக உச்சரிக்க முடியும் என்பதை அறிந்தால் மகிழ்வார்கள் என்றே தோன்றும். கையில் கொண்டு வந்திருக்கும் ஒத்தை நோட்டையும் பெண்கள் பகுதி சன்னலின் வழியாகப் பேருந்தினுள் வீசிவிட்டு வேகமாக ஓடும் பேருந்தில் படுலாவகமாக வித்தவுட்டும் ஃபுட்போர்டும் அடிக்கும் இளைஞன், அவன் பெற்றோரின் எதிர்பார்ப்புகளை எவ்வாறு நிரைவேற்றுவானோ எனத் தோன்றியதுண்டு. 'படிகட்டுப் பயணம் பரலோகப் பயணம்' என அறிந்தும் படியில் நிற்பவனை 'தம்பி மேலே வா மேலே வா' என அன்பாக அழைத்துப் பலனில்லை என உணரும் நடத்துனர் "டேய் சொல்றேன்ல மேல வாடா! காலங்காத்தால நம்ம தாலி அறுக்குறதுக்குன்னே வர்றானுங்க"என்று கடுமையாகப் பேசும் போது அப்பணியும் எளிமையானதல்ல என்றும் விளங்கும். மாறுவேடத்தில் பெண் போலீஸ் இருக்கக் கூடும் என்ற பயத்தினால், மாநகரப் பேருந்துகளில் உண்டான ஒழுங்கு தானாகவே உண்டாகியிருக்கும் பட்சத்தில் 'ஈவ் டீசிங்' இந்நேரம் இல்லாமல் போயிருக்கும் என்பதும் திண்ணம்.

இதெல்லாம் ஒருபுறம் என்றால் பேருந்தில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கழித்த நினைவுகளை மறக்கவும் முடியுமோ? ராயப்பேட்டையிலிருந்த பள்ளிக்கூடத்திலிருந்து திருவல்லிக்கேணியில் இருந்த வீட்டுக்குச் செல்ல தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் முயற்சியாக 'இராதாகிருஷ்ணன் சாலை எல்லோ பேஜஸ்' நிறுத்தத்தில் நண்பன் மன்னாரிடம்(பட்டப்பெயர் தாங்க) 45B பஸ்சுக்குக் காத்து நிற்கும் நேரத்தில் நீதிக் கட்சியும், தி.க.வும் தோன்றிய விதத்தினைப் பற்றியும், அவனைக் கவர்ந்த ஹிட்லர் எனும் 'பெருந்தலைவனை பற்றியும் கேட்ட கதைகள் இன்னும் பசுமையான நினைவுகளாக நிறைந்துள்ளன. தவறுதலாக ஒரு முறை, காலியாக இருந்த 'மகளிரும் சிறுவரும்' பேருந்தில் (நான் சிறுவனாக இல்லாத போது) ஏறிவிட்டு சட்டென்று உணர்ந்து கீழிறங்கியதையும், அருகில் இருக்கும் சில்ரன்ஸ் கார்டன் பெண்கள் பள்ளியைப் பற்றி 'ஈரமான ரோஜாவே மோகினி படிச்ச ஸ்கூல்டா இது' என நண்பனிடம் பகிர்ந்து கொண்ட வெட்டிப் பேச்சுகளையும் இன்று நினைத்தாலும் 'அந்த நாளும் வந்திடாதோ?' என ஏக்கம் பிறக்கும். வீட்டிலிருந்து கடற்கரை சாலையில் இருந்த எழிலகம் நிறுத்தம் வரை 'மினி டிராஃப்டரும்', 'இஞ்சினியரிங் டிராயிங் சார்ட்களும்' சுமந்துச் சென்று அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பேருந்து ஏறிய அந்த நான்கு ஆண்டு காலமும், வானொலி நிலையப் பேருந்து நிறுத்தத்தில் வழக்கமாக ஏறும் வேற்றுத் துறை மாணவியின் அழகினையும், அடக்கத்தினையும், சிரிப்பினையும், சின்ன அசைவுகளையும் ரசித்த நண்பன் சுரேஷினை வெறுப்பேற்ற 'டேய் மாம்ஸு, அந்த பொண்ணு இ.சி.ஈ.டா...பெரிய எடம். நாமெல்லாம் கட் ஆஃப்லியே அடிபட்டுப் போயிருவோம்டா. ஃபஸ்ஸி லாஜிக்கும்(Fuzzy Logic), இண்டக்ரேட்டடு சர்க்யுட்ஸும்(Integrated Circuits) எங்கே, நம்மளோட பீமும்(Beam), காலமும்(Column) எங்கே?' எனப் பேசியதும் 'டேய்! இ.சி.ஈ. என்னடா இ.சி.ஈ? எனக்கு கூட தான் ஐ.ஐ.டி. மெட்ராஸ்ல சீட் கெடச்சது...ஆனா நான் சிவில் படிக்கலை?' என அவன் பதிலிறுத்ததும் அதைக் கேட்டு வியப்பில் 'பின்னே ஏண்டா நீ ஐ.ஐ.டி.யில் சேரலை?' எனக் கேட்டதற்கு, 'ஹை கோர்ட்லேருந்து வர எல்.எஸ்.எஸ் பஸ் எதுவும் ஐ.ஐ.டி ஸ்டாப்புல நிக்காதுல்ல...அதனால தான்' என அவன் அந்த நிமிஷத்தில் செய்த 'நார்த் மெட்ராஸ் நெக்கலைக்' கேட்டுக் குலுங்கிச் சிரித்ததும் நினைவில் நிற்கின்றன.

இறுதியாக, பேருந்து பயணங்களைப் பற்றி எழுதப் போய் என்னென்னமோ பழைய நினைவலைகளுள் மூழ்கி, மைல் நீளப் பதிவுகள் மூன்று போட்டாயிற்று. இது வரை படித்தவர்கள் பலரும், தங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு இப்பதிவுகளுக்குச் சிறப்பு சேர்த்திருக்கிறீர்கள். பசுமை நிறைந்த நினைவுகளைத் துளிர்க்கச் செய்த தங்கள் அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்கிறேன்.

Sunday, December 03, 2006

பஸ் பயணங்களில் #2

பஸ் பயணங்களில் #1 இங்கேயிருக்கு...படிச்சிப் பாருங்க

The Whole is Greater than the sum of its Partsனு சொல்லுவாங்க. "Whole" ஆகிய பேருந்து பயணத்தினை முழுமையாக்கும் "Parts"கள் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர், பயணிகள், செக்கிங் இன்ஸ்பெக்டர் இன்னும் நம் கண்ணுக்குத் தெரியாத எண்ணற்றவர்கள். ஆனால் சில சமயம் இந்த பார்ட்ஸ்களைத் தனித் தனியே கவனிப்பதும் சுவாரசியமாகவே இருக்கும். உதாரணத்துக்கு இந்த நடத்துனர்களை எடுத்துக்கங்களேன்...தென்னாற்காடு மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் காவி வேட்டி கட்டிய நடத்துனர்கள் 'யார் சீட்டு...கேட்டு வாங்கிக்க' என்று கேட்பதிலாகட்டும், கோயம்புத்தூரில் சேரன்(முன்னாள்) பேருந்துகளில் ரைட்டு சொல்வதற்குப் பதிலாகத் தந்தி அடிப்பதிலாகட்டும், சென்னையில் நடத்துனர்கள் 'ரேய் ரேய்'வும் 'எறங்கி ஏறு'வும் 'அடுத்த ஸ்டேஜ்ல செக்கிங் வராங்க"ன்னுசொல்வதிலாகட்டும், கூட்டம் நிறைந்த வேளைகளில் பெங்களூர் கேஎஸ்ஆர்டிசி நடத்துனர்கள் கீழே இறங்கி 'பேகே இள்றி' என்று துரிதப் படுத்துவதிலாகட்டும், புது தில்லியில் டிடிசி(DTC) நடத்துனர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே ஹரியான்வி(கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக் பேசற மொழி) மொழியில் 'டிகிட் போள் பாய்' எனக் கூறுவதிலாகட்டும், நடத்துனர்களின் 'மேனரிசங்களைக்' கவனிப்பதும் ஒரு தனி ஜாலி தான். டிக்கட் கிழிப்பதிலும் நகரத்திற்கு நகரம், நடத்துனர்களுக்குள் பல விதமான வேறுபாடுகள். முன்னாள் திருவள்ளுவர்(இந்நாள் அரசு விரைவுப் பேருந்து, தமிழ்நாடு) பேருந்துகளில் நெயில்கட்டர் போன்ற ஒரு கருவி கொண்டு டிக்கட்டில் ஸ்டேஜை பஞ்ச் பண்ணி கொடுப்பார்கள். நம்ம சென்னை பேருந்து நடத்துனர்களின் டிக்கட் கிழிக்கும் வேகம் சும்மா சொல்லக் கூடாது...செம ஃபாஸ்ட். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சர்சர்ருன்னு கையாலேயே டிக்கட் கிழிச்சி குடுத்துட்டு "யாரு டிக்கட் யாரு டிக்கட்"னு கூட்டமான வண்டிக்குள்ளேயும் போய்க்கிட்டும் வந்துக்கிட்டும் இருப்பாங்க. இதுவே தில்லியை எடுத்துக்கிட்டீங்கன்னா அரசு பேருந்துகளில் நடத்துனர்கள் வண்டி கெளம்பும் போது மட்டும் தான் சீட்டுக்கு வந்து டிக்கெட் குடுப்பாங்க, அதுக்கப்புறம் உக்காந்த எடத்தை விட்டு எந்திரிச்சு வர மாட்டாங்க. மும்பை பெஸ்ட்(BEST) பேருந்துகளின் நடத்துனர்களைப் பாத்தீங்கன்னா சீருடையிலேயே ஒரு ஒழுங்கு தெரியும். சட்டையிலே பெயர் பலகை(Name Plate) குத்தியிருக்கும், சட்டை பட்டன்கள் கூட போலிஸ் சீருடையில் இருக்கற மாதிரி உலோக பட்டன்கள் இருக்கும், அதோட டிக்கட்களை அடுக்கி வச்சிக்க உலோகத்திலான ஒரு பலகை வச்சிருப்பாங்க.


நகரத்துக்கு நகரம் நடத்துனர்களுக்குள்ளே வேறுபாடுகள் இருந்தாலும், ஒரே நகரத்துக்குள்ளேயும் ஒவ்வொரு நடத்துனருக்குன்னும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். சில பேரு பல நாள் ஆனாலும் நம்ம நினைவுலேயே நிப்பாங்க. அது மாதிரி சென்னையில் திருவல்லிக்கேணியிலிருந்து தி.நகர் செல்லும் 13 எண் வழித்தடத்தில் வரும்(இந்நேரம் ஓய்வு பெற்றிருப்பாரு) ஒரு நடத்துனர், 'I knew him well and every truant knew' மாதிரியான மனிதர். ஏன்னா அந்த ரூட்டுல போறவங்க எல்லாருக்கும் அவரைப் பத்தி தெரிஞ்சிருக்கும். என்னோட பதிவுக்கு அப்பப்ப வரும் கல்லூரி நண்பன் ஜனாவுடன் கல்லூரி முடிந்து வீடு வரும் போதும் அவரைப் பத்திப் பேசிப்போம். ஏனோ அப்ப அவரோட பேரைக் கேட்டுக்கணும்னு தோணலை. எதாச்சும் செஞ்சிக்கிட்டே இருப்பார்...அவர் அந்த பேருந்துல இருக்கறது பயணிகள் எல்லாருக்கும் தெரிஞ்சிட்டே இருக்கும். நடத்துனராக இருப்பதைப் பெருமையாகக் கருதுபவர் என அவரைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றும். கம்மி சம்பளம், சில சமயம் பண்டிகை நாட்களில் கூட வேலை என்றிருந்தாலும் மகிழ்ச்சியாகத் தன் பணியைச் செய்து கொண்டு இருப்பவர்களைப் பார்த்தால் அதிசயமாகவும், சில சமயம் பொறாமையாகக் கூட இருக்கும். பஸ் பாஸ் எடுத்து நீட்டும் பிள்ளைகளிடம் "நீயே பஞ்ச் பண்ணிக்க பாப்பா" எனச் சிரித்து விட்டு சிநேகமாகக் கண்ணடிப்பார். ஸ்கூல் குழந்தைகள் எறங்கும் போது ஓட்டுநர் அவசரப் படுத்தி வண்டியை எடுக்க முயற்சிக்கும் போது "யோவ் இருய்யா...புள்ளைங்கள்லாம் எறங்குதில்ல? என்ன அவசரம்" என்று ஓட்டுநரைக் கடிந்து கொள்வார். பாரதி சாலை(Pycrofts Road) தணிகைவேலன் இனிப்பகம் வந்ததும் "வண்டியைக் கொஞ்சம் ஸ்லோ டவுன் பண்ணிக்கய்யா, மதியான சாப்பாட்டுக்கு பொகடா வாங்கிட்டு வந்துர்றேன்"அப்படீம்பாரு. கேக்கறதுக்கே காமெடியா இருக்கும். அதோட எப்பவும் "ரைட்டு ரைட்டு" என்றும் "ஹோல்ட் ஆன்" என்றும் திருத்தமாகத் தான் சொல்வார். டபுள் விசில், ஷார்ட் விசில் என்று உதட்டு நுனியிலிருந்து விசில் அடிக்கும் இளம் வயது நடத்துனர்களின் மத்தியில் நம்மாளு தனியாத் தெரிவாரு. பேருந்து நிறுத்தத்தை அடைந்ததும் "பெரிய தெரு புள்ளார் கோயில் எல்லாம் எறங்கு" அப்படின்னு சத்தமா சொல்லுவார். என்ன அதுல விசேஷம்னா அவரு சொல்றது Pullaar இல்லை Bullaar. அதைக் கேட்டதும் உங்களையும் அறியாமல் உங்கள் உதட்டில் ஒரு புன்னகை வந்து தொற்றிக் கொள்ளும். வழுக்கைத் தலையும், பெரிய உதடுகளும், சோடாபுட்டிக் கண்ணாடியும் போட்ட ஒரு வயதான நடத்துனர் தான் என்றாலும் என்னைப் பொறுத்தவரையில் அடுத்தவர் வாழ்வில் கடுகளவேனும் மகிழ்ச்சியை விதைக்கும் அத்தகையவர்கள் 'வாழும் முன்னாபாய்கள்' தான்.


நடத்துனர்களைப் போலவே ஓட்டுநர்களுக்குன்னு சில பழக்கங்கள் இருப்பதை கவனித்திருக்கிறேன். பயணிகள் ஏறி இறங்கும் வழியாகச் சுலபமாக ஏற முடிந்தாலும் சில ஓட்டுநர்கள் ஓட்டுநர் சீட் அருகில் இருக்கும் சிறிய கதவு வழியாகத் தான் கஷ்டப் பட்டு ஏறுவார்கள். கியர் பாக்ஸ் மேல் யாராவது உக்காந்தா ஓட்டுநர்களுக்குச் செம கோபம் வரும். ஒரு முறை ஒரு பயணி 'நிக்கிறதுக்குக் கஷ்டமா இருக்குன்னு தானே உக்காருறோம், இதுக்குப் போய் கோவப் படறீங்களே" எனக் கேக்க "எங்களுக்கு சோறு போடற தெய்வம்யா அது, அது மேல உக்காருறேன்னு சொல்றியே" என வெடுக்கென்று பதிலளித்தார். அதே போல பேருந்தில் தூங்குபவர்களைக் கண்டால் ஓட்டுநர்களுக்கு ஆகவே ஆகாது. கிண்டியிலிருந்து அண்ணா சதுக்கம் செல்லும் 45B வழித்தடத்தில் நான் ஸ்கூல் படிக்கும் போது நடந்தது இன்னும் ஞாபகமிருக்கிறது. கூட்டமான அந்த பேருந்தில் டிரைவருக்கு அருகாமையில் ஒருவர் நின்று கொண்டே தூங்கிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த டிரைவருக்கு வந்ததே கோபம் "என்னா சார்? நின்னுக்கிட்டே சாமியாடுறீங்களா? நான் சாமியாடுனா எல்லாரும் சாமியாட வேண்டியது தான்" என்று கூறியதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் எல்லாம் சிரித்து விட்டார்கள். பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் உயிரின் பொறுப்பு ஒரு ஓட்டுநரிடத்தில் இருப்பதால், பெரும்பாலான ஓட்டுநர்கள் மத்தியான சாப்பாடு கூட சரியா சாப்புட மாட்டாங்க...சாப்பிட்டா தூக்கம் வந்துடும்னு. அதோட உக்காந்தே வேலை பார்ப்பதனால் பைல்ஸ் நோய் ஓட்டுநர் வேலை பார்ப்பவர்களை மிக எளிதாகத் தாக்குகிறது என்று எப்போதோ படித்திருக்கிறேன். ஓட்டுநர்களை வித்தியாசப் படுத்திக் காட்டும் ஸ்டைல் விஷயம்னு பாத்தா அது கியர் போடுவதும், ஸ்டியரிங் வீலைப் பிடிப்பதிலும் தான். மற்றபடி ரோட்டைப் பார்த்து கவனமாக ஓட்டுவதில் ஓட்டுநர்களின் கவனம் இருக்கும் என்பதால் அதிகமாகப் பேசமாட்டார்கள். அதனால நடத்துனர்களைப் பத்தி எழுதுன அளவுக்கு ஓட்டுநர்களைப் பத்தி எழுதுறதுக்கு விஷயம் கெடைக்கறது கஷ்டம் தான்.


சென்னையின் பேருந்துகளில் பேருந்து வழித்தட எண்களைத் தவிர்த்து பேருந்துகளின் பக்கங்களிலும் பின்புறத்திலும் ADH505, TAG972, PRA912 போன்ற எண்கள் எழுதப்பட்டிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அந்த குறிப்பிட்ட பேருந்து எந்த டெப்போவினைச் சார்ந்தது(ராத்திரிக்கும் பேருந்து படுத்துக்கப் போற எடம் :) என்று தெரிந்து கொள்ளத் தான் அந்த குறியீடு. உதாரணமாக AD என்பது அடையாறு பணிமனையையும், TA என்பது தாம்பரம் பணிமனையையும், PR என்பது பெரம்பூர் பணிமனையையும் குறிக்கும் குறியீடு. பணிமனையைக் குறிக்கும் அந்த இரண்டு எழுத்துகளுக்குப் பின் வரும் G,H என்னும் எழுத்துகள் போக்குவரத்து கழகத்தில் புதிதாக பேருந்துகள் வாங்கும் போது அளிக்கப்படும் ஒரு சிரீஸ்(series). அதன் பின்னர் வரும் எண்கள் ஒவ்வொரு பேருந்துக்கும் வித்தியாசப்படும். நீங்கள் உங்கள் ரூட்டில் வரும் பேருந்துகளை உன்னிப்பாகக் கவனித்தால் இந்த எண்களும் நினைவில் நின்றுவிடும். பலமுறை பேருந்துகளின் பக்கவாட்டில் இந்த எண்களை அடையாளம் கண்டு கொண்டே பேருந்துசை ஓடிச் சென்று பிடித்த அனுபவங்களும் உண்டு. ஆனால் சில சமயம் ஒரே பணிமனையைச் சேர்ந்த பேருந்துகளை வேறு வழித்தடத்தில் மாத்தி விட்டுடுவாங்க...அப்போ மட்டும் உங்களுக்கு மனப்பாடம் ஆனது வேஸ்ட் ஆயிடும். என்னங்க ரொம்ப போர் அடிக்குதா? இந்த மாதிரி 'பொழுது போகாத பொம்மு' வேலை நெறைய பண்ணிருக்கோம்ல? இத மாதிரி பல பொ.போ.பொ வேலைகள்ல நம்ம கிட்ட அதிகமா மாட்டிக்கிட்டு முழிச்சவனும் ஜனா தான். அதெல்லாமும் வரலாற்றுல எடம் பெற்றுத் தானே ஆகனும்? அதான் இன்னிக்கு வச்சி ப்ளேடு போட்டாச்சு :)


"எல்லாம் சரி தான்...ஆனா பயணிகள் இல்லாத பேருந்து என்னய்யா பேருந்து. அத பத்தி நீ ஒன்னுமே எழுதலியே"னு கேள்வி கேக்கறீங்க...எனக்கும் அது புரியாம இல்லை. ஆனா பாருங்க திவ்யாவுக்கு ஆன்லைன்ல வந்து அட்வைஸ் பண்ண 'பாடிகாட் வெறகுவெட்டீஸ்வரர்' நேத்து நம்ம கனவுல வந்தாருங்க. எல்லா ரம்பத்தையும் ஒரே பதிவுல போடாதே...1, 2, 3ன்னு நம்பர் போட்டு போடுன்னு அருள்வாக்கு சொன்னாருங்க. அதுனால 'பாடிகாட் வெறகுவெட்டீஸ்வரர் துணை'யோட ரெண்டு சிங்கிளை முடிச்ச நம்ம பேருந்து, ஓட்டுநர் கண்டக்டர் டீ சாப்புட்டுட்டு வந்ததும் மூனாவது சிங்கிளை சீக்கிரமாவே ஆரம்பிக்கும்ங்க.

Saturday, December 02, 2006

பஸ் பயணங்களில் #1

இது ஒரு இன்ஸ்பிரேஷன் பதிவு. ஜூலை மாதம் கப்பி எழுதுன 'பஸ் பயணங்களில்' பதிவு படிச்சதுலேருந்து அதை போலவே நானும் ஒரு பதிவு எழுதனும்னு ரொம்ப நாளா நெனச்சி வச்சிருந்தேன். பொருத்தமான வேற தலைப்பு எதுவும் தோணாததால என் பதிவுக்கும் அதே பேரை வச்சிட்டேன். கப்பி பதிவுல நான் போட்ட பின்னூட்டத்தையும் ராயல்டி தராம இங்கே யூஸ் பண்ணிக்கிட்டேன். சின்ன வயசுல எனக்கும் என் தம்பிக்கும் பிடிச்சமான விளையாட்டுன்னு ஒன்னு சொல்லனும்னா அது பஸ் விளையாட்டு தாங்க. அது வெளையாடும் போது தான் ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காம, அடிச்சிக்காம இருப்போம். இல்லன்னா ரெண்டு பேரையும் மேக்கிறதுக்கே எங்க அம்மாவுக்குச் சரியா இருக்கும்.

டீச்சர் விளையாட்டு, டாக்டர் விளையாட்டு இதெல்லாம் கேள்வி பட்டுருப்போம்...அது என்ன பஸ் வெளையாட்டு? ஒன்னும் இல்லீங்க என் தம்பி டிரைவர், நான் கண்டக்டர் ரெண்டு பேரும் வாயாலேயே பஸ்சை ஓட்டிக்கிட்டுப் போவோம். எங்க வீட்டு மாடிக்குப் போற ஒரு படிக்கட்டுல என் தம்பி ஒக்காந்துக்குவான், படிக்கட்டுக்கும் செவுத்துக்கும் நடுவுல இருக்குற ஒரு சின்ன இடுக்குல ஒரு மொத்தமான குச்சியைச் சொருகி வச்சிக்குவான், அது தான் எங்க பஸ்சோட கியரு. நான் கண்டக்டராச்சே? என்னோட தொழிலுக்கான உபகரணங்கள்னு பாத்தா அம்மாவோட பழைய ஹேண்ட்பேக் ஒன்னு... அது தான் நம்ம கண்டக்டர் பை. அதுக்குள்ளே ரெண்டு விசில் கெடக்கும்...10 காசு 20 காசுன்னு சில்லறை கொஞ்சம் இருக்கும்(அப்போ தான் பையைக் குலுக்குன்னா கண்டக்டர் பையைக் குலுக்கற ஒரு எஃபெக்ட் கெடைக்கும்), அதோட பழைய பல்லவன் பஸ் டிக்கட் நெறைய இருக்கும். நாங்க பஸ்ல போகும் போதெல்லாம் கெடைக்கிறது, எங்க வீட்டுக்கு யாராவது வந்தாங்கன்னா அவங்க கிட்ட கேட்டு வாங்கறது இப்படின்னு 40காசு, 50காசு, 90காசு, 1.10ரூ இப்படின்னு பலவிதமான பஸ் டிக்கட் கண்டக்டர் பைல இருக்கும். பஸ் விளையாட்டு வெளையாடும் போது டிக்கட் எல்லாம் அழகா அடுக்கி என் கையில இருக்கும்...விசில் வாயில இருக்கும். நான் விசில் குடுத்ததும் டிரைவர் கியரைப் போட்டு டுர்ர்ர்...டுர்ர்ன்னு பஸ்சை எடுத்துக்கிட்டு கெளம்பிடுவாரு.

நெஜ பஸ்சுல கியர் போடும் போது ஏற்படற ஒரு உராய்வு சத்தம் (எனக்கென்னமோ அதை கேக்கும் போதெல்லாம் அரிசி கீழே கொட்டற மாதிரி இருக்கும்), பிரேக் போடும் போது ஏற்படற சத்தம் இப்படின்னு டிரைவர் வாயாலேயே ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்லாம் வேற தருவாரு. நடுவுல நடுவுல "யோவ் பாத்து போயா"ன்னு சவுண்டு வேற விடுவாரு எங்க கோவக்கார டிரைவரு(ரோட்டுல வண்டி ஓட்டிக்கிட்டு போறவரைக் கண்டிக்கிறாராம்) கண்டக்டர் நானு "டிக்கட் வாங்கிக்கங்க, டிக்கட் வாங்கிக்கங்க"னு குரல் விடுவேன். அது போதாதுன்னு"எங்க சார் டி.நகரா? பத்து ரூவா குடுத்தா எப்படி? சில்லறை இல்லியா?"ன்னு காத்தைப் பாத்து ஒரு அலம்பல் வேற. எங்களுக்குப் பிடிச்ச பஸ் ரூட்னு பாத்தா அது 6V தான். ஏன்னா சென்னையில அப்போ தான் எல்.எஸ்.எஸ் பஸ் விட்ட புதுசு. ஆனா நார்த் மெட்ராஸ்லே இருக்கற எடத்தோட பேரு எதுவும் தெரியாததுனால எங்க 6V பஸ் அமீர் மஹால், பெரிய தெரு, ராயப்பேட்டைன்னு எங்களுக்குத் தெரிஞ்ச எடங்களுக்குள்ளாவே போகும். அப்போ திருவல்லிக்கேணியிலிருந்து சுங்கச்சாவடி வரைக்கும் போயிட்டு இருந்த பஸ் அது. இப்போ அது பெசண்ட் நகர்லேருந்து சுங்கச்சாவடி போற 6Aன்னு நெனக்கிறேன். ஹ்ம்ம்ம்...அதெல்லாம் ஒரு காலம்!!!

படிக்கிறதுக்கு டெல்லிக்குப் போன புதுசுல பிராஜெக்ட் விஷயமா எங்கேயாச்சும் வெளியே போகனும்னா நண்பர்க்ள கிட்ட "பஸ்ல போலாம்டா"ன்னு சொல்லுவேன். என் கூட படிச்ச சில பசங்க "நான் என் வாழ்க்கையிலேயே இது வரைக்கும் பஸ்ல ஏறுனதில்லை. பஸ்ஸெல்லாம் நமக்கு ஒத்துவராது. இன்னிக்குக் காரை எங்க அண்ணன் எடுத்துட்டுப் போயிட்டான். வேணா ஆட்டோல போலாம்"பானுங்க. இப்படி அவங்க பேசறதைக் கேட்டுட்டு எனக்கு எப்பவும் மொதல்ல தோணுறது என்னன்னா "பஸ்லயே ஏறாம வாழ்க்கையில நெறைய எழந்திருக்கீங்கடா"ன்னு தான். ஏன்னா அந்த அளவு பஸ் பயணம் மனிதர்களைச் சந்திக்கிறதுக்கும், அவங்களோட பழக்க வழக்கங்களைத் தெரிஞ்சிக்கிறதுக்கும் ஒரு வழி ஏற்படுத்திக் குடுக்குது. பஸ்களில் காணக் கிடைக்கும் சில உரையாடல்களும், நகைச்சுவை சம்பவங்களும் எங்கும் காணக் கிடைக்காதவை. அதே சமயம் இன்றளவும் சில மனதைக் கஷ்டப் படுத்தும் சம்பவங்களும், பேருந்து பயணங்களில் நடக்கத் தான் செய்கின்றன என்றாலும் வாழ்வின் சின்ன சின்ன சந்தோஷங்களை நினைவுகளாக்கிப் பொக்கிஷமாகப் பாதுகாக்கறவங்களா நீங்க இருந்தீங்கன்னா பஸ் பயணம் என்பது நிரம்பி வழியும் கூட்டத்தையும், எல்லையில்லா காத்திருப்பையும் கூட சிறியதாய் தோன்றச் செய்யும் ஒரு சுகானுபவம் தான்.

என் வாழ்நாளின் பெரும்பகுதியைச் சென்னையிலும், நான்கில் ஒரு பகுதியை வெளிமாநிலங்களிலும் கழித்தவன் நான். அதிகமாக கிராமங்களையும் சிறு நகரங்களையும் கண்டதில்லை. இருந்தாலும் தென்னாற்காடு மாவட்டத்தில் எங்க ஆயா(பாட்டி) வசித்த கிராமத்தை நான் பார்த்தவரை, பஸ் என்பது கிராமத்து வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்ட ஒன்று என அறிந்து கொண்டேன். வள்ளிகந்தன் வந்துட்டானா? மீனாம்பிகா போயிட்டானா? என்று பிரைவேட் பஸ்களின் பெயரைச் சொல்லித் தங்கள் வீட்டுப் பிள்ளை போல விசாரிப்பதிலாகட்டும், 'விழுப்புரத்திலிருந்து பாண்டி நாப்பது கிலோ மீட்டர். ராமன் ரோடுவேஸ்ல போனீன்னா நாப்பது நிமிஷத்துல அடிச்சித் தள்ளிக்கிட்டுப் போயிடுவான்" எனப் பெருமையாகப் பேசுவதிலாகட்டும், "சீக்கிரம் கெளம்பு, பத்தரை மணி பெரியார் போயிடும்" என நம்பிக்கை தெரிவித்துத் தங்கள் வேலைகளை அதற்கேற்றாற் போல அமைத்துக் கொள்வதிலாகட்டும் பஸ் என்பது வெறும் ஒரு போக்குவரத்து சாதனம் என்பதை மீறிய ஒரு எமொஷனல் அட்டாச்மெண்டைக் காணலாம். அரசியல் காரணங்களை மேற்கோள் காட்டி போக்குவரத்துக் கழகங்களுக்கு வைத்திருந்த தலைவர்களின்(மக்களுக்காக உழைத்தவர்கள்) பெயர்களை எடுத்துவிட்டு அத்தகைய சக்தி வாய்ந்த ஒரு சாதனத்துக்கு வெறும் அரசு பேருந்து,மதுரை,திண்டுக்கல் எனப் பெயர் கொடுத்திருப்பதை ஏனோ ஜீரணிக்க முடியவில்லை. தோழர் ஜீவா, நேசமணி போன்றோர்கள் யார் என்றே தெரியாமல் வருங்கால சந்ததியினர் வாழ்ந்து மறைந்து விடக் கூடும். பஸ்களுக்கு அவர்கள் பெயர் இருந்தால், அவர்கள் யார் எனத் தெரிந்து கொள்ளும் ஒரு உந்துதலாவது ஏற்படும். இன்றளவும் என்னைப் பொறுத்தவரை ஆரஞ்சு வண்ண பஸ்கள் எல்லாம் பெரியார் தான், சாய்வு நாற்காலி கொண்ட பஸ்கள் எல்லாம் திருவள்ளுவர் தான்.

எழுதுனதுக்கப்புறம் தான் பாத்தேன்...பதிவு ரொம்ப பெருசாப் போச்சு. அதனால இதோட ரெண்டாம் பகுதியை நாளைக்குப் போடறேன்.

Friday, November 24, 2006

சென்னையின் ஜீரோ...பதில்கள்

நேற்று முன் தினம் இட்ட பொது அறிவு கேள்வி பதிவுக்கான விடைகள் இதோ:
1. "அந்தா கானூன்" என்ற திரைப்படம் எந்த பிரபல நடிகரின் முதல் இந்தி திரைப்படம்?
ரஜினிகாந்த் Die Hard சூப்பர் ஸ்டார் ரசிகர்களான சிபி, கப்பி ஆகியோர் இக்கேள்விக்கு வெகு விரைவாக சரியான பதிலைச் சொல்லி விட்டார்கள்:)

2. வெற்றியின் தேவதையாகக் கருதப் பெறும் கிரேக்க கடவுளின் பெயரைத் தழுவி அமைந்துள்ள விளையாட்டு பொருட்கள் நிறுவனத்தின் பெயர் என்ன?
நைக்கி(Nike) Nikeயை "நைக்கி"ன்னு சொல்லனும்னு கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டது தான். (ஒரு காலத்துல நமக்கு அது நைக் தான்). Nike நைக்கின்னா Spike ஸ்பைக்கியான்னு யாரும் என்னைய கேக்கப்பிடாது. ஏன்னா...ஏன்னு எனக்கு தெரியாது :)
http://en.wikipedia.org/wiki/Nike%2C_Inc.

3. ஆர்க்டிக் கடல் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் கடலில் விழுந்து கூட்டுத் தற்கொலை(mass suicide) செய்து கொள்ளும் விலங்கினத்தின் பெயர் என்ன?
லெம்மிங்ஸ்(Lemmings). ஆர்க்டிக் கடலைக் கடக்க முடியாமல் லெம்மிங்குகள் மூழ்கி உயிர் விடுவதைத் தற்கொலை எனத் தவறாகக் குறிப்பிடுவதாக சில அறிஞர்கள் கூறுகிறார்கள். நல்ல காலம்...இந்த லெம்மிங் நாங்க சின்னப் பசங்களா இருக்கும் போது எங்க கண்ணுல படலை...இல்லன்னா "அம்மா ப்ளீஸ்மா! நாம ஒரு லெம்மிங் வளர்க்கலாம்மா"ன்னு நச்சரிச்சிருப்போம்.

http://en.wikipedia.org/wiki/Lemming

4. மலேசியா, புரூனை, இந்தோனேசியா இம்மூன்று நாடுகளினாலும் பங்கிடப் பட்டுக் கொள்ளும் தீவின் பெயர் என்ன? அதாவது இத்தீவில் ஒரு பகுதி மலேசியாவைச் சேர்ந்தது, ஒரு பகுதி புரூனையைச் சேர்ந்தது ஒரு பகுதி இந்தோனேசியாவைச் சேர்ந்தது.
போர்னியோ(Borneo) இது உலகின் மூன்றாவது பெரிய தீவு என்பது கூடுதல் தகவல்.
http://en.wikipedia.org/wiki/Borneo

5. கெம்ஸ்போர்டு துரையினால் 1919ஆம் ஆண்டு ஜம்ஷெட்ஜி டாட்டா அவர்களின் நினைவாக ஜம்ஷேட்பூர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஊரின் இயற்பெயர் என்ன?
சாக்சி(Sakchi) ஜம்ஷேட்ஜி நசர்வான்ஜி டாட்டா அவர்கள் நிறுவிய சாக்சி என்ற பெயருடன் இந்நகரத்தை, 1919 ஆம் ஆண்டு கெம்ஸ்போர்டு துரை(Lord Chelmsford) "ஜம்ஷேட்பூர்" எனப் பெயர் மாற்றம் செய்தார்.
http://en.wikipedia.org/wiki/Jamshedpur

6. ஸ்கூபா டைவிங் பற்றி கேள்வி பட்டிருப்போம்? ஆக்சிஜன் பிராணவாயுவை சிலிண்டருக்குள் நிரப்பி முதுகில் கட்டிக் கொண்டு ஆழ்கடலுக்குள் மூழ்குவதை ஸ்கூபா டைவிங் என்கிறோம். இதில் ஸ்கூபா (SCUBA) என்ற பதத்தின் விரிவாக்கம் என்ன?
Self Contained Underwater Breathing Apparatus என்பதின் சுருக்கமே SCUBA
http://en.wikipedia.org/wiki/Scuba_diving

7. மத்திய பிரதேச மாநிலத்தின் அரசு கைவினைப் பொருட்கள் அங்காடியின்(Handicrafts emporium) பெயர் என்ன?
ம்ருகநயனி(Mriganayani)க்வாலியர் நகரின் ராஜா மான்சிங்கின் மனைவியின் பெயர் தான் ம்ருகநயனி("மான் போன்ற கண்களை உடையவள்" என்பது இப்பெயருக்குப் பொருள்). நம்ம ஊருல மீனு அவங்க ஊருல மானு போலிருக்கு?:)ம்ருகநயனி என்ற பெயரில் தூர்தர்ஷனில் ஒரு இந்தி சீரியல் வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
http://www.mptourism.com/dest/gwa_ms.html (நன்றி : பாலராஜன் கீதா)

8. மாண்டோவி, ஜுவாரி இவ்விரண்டும் எந்த இந்திய மாநிலத்தில் அமைந்துள்ள நதிகளின் பெயர்கள்?
கோவா புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரியான BITS, Goa(BITS Pilaniஇன் கிளை) ஜூவாரி நதியருகில் அமைந்திருப்பதாக அங்கு பணிபுரியும் என் நண்பர் ஒரு முறை தெரிவித்தார்.
http://en.wikipedia.org/wiki/Zuari

9. Quaid Post(க்வெய்ட் போஸ்ட்) என அழைக்கப்படும் பனிச் சிகரத்தை இந்திய ராணுவம் கைப்பற்ற அருஞ்சேவையாற்றி, அச்சேவைக்காக இந்திய ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா வழங்கப் பட்ட ராணுவ வீரரின் பெயர் என்ன? அச்சிகரம் இப்போது எந்த பெயரில் அறியப் பெறுகிறது?
சுபேதார் நாயக். பாணா சிங்(Nb.Sub. Bana Singh). உயிரோடு இருக்கும் போதே பரம்வீர் சக்ரா வாங்கிய 14 வீரர்களில் இவரும் ஒருவர். அவருடைய நிகரற்ற சேவையைப் பாராட்டி Quaid Post என்னும் சிகரத்தின் பெயர் பாணா டாப்(Bana Top) என்று மாற்றியமைக்கப் பட்டது.
http://www.hindustantimes.com/2005/Apr/23/
5922_1332688,0015002500020000.htm


10. கீழே உள்ள படத்தில் இருக்கும் பறவையின் பெயர் என்ன?

சொர்க்கத்தின் பறவை(Bird of Paradise) இந்தோனேசியா, நியூ கினீ மற்றும் வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும் இப்பறவை, தன்னுடைய வண்ணமயமான இறகுகளுக்காக மிகப் புகழ்பெற்றது. பெண் பறவையைக் கவர ஆண் பறவை ஆடும் நடனமும்(mating dance) பார்க்க நன்றாக இருக்கும்(நானும் டிஸ்கவரில பாத்தது தானுங்க). சரியாகப் பதில் அளித்தவர் துளசியக்கா மட்டுமே. கலக்கல். எப்படி கண்டுபிடிச்சீங்க?
http://en.wikipedia.org/wiki/Bird_of_paradise

11. விஜிதரோஹனா விஜயமுனி - இப்பெயரை எந்த இந்திய தலைவரோடு தொடர்பு படுத்துவீர்கள்? ஏன்?
ராஜீவ் காந்தி. ஜூலை 29,1987இல் இலங்கை ஒப்பந்தத்தில் அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயுடன் கையெழுத்திட்டு விட்டு, மறுநாள்(ஜூலை 30 அன்று) வீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது துப்பாக்கியால் ராஜீவைத் தாக்கிய இலங்கை கப்பல் படைவீரரின் பெயர் தான் விஜிதமுனி ரோஹனா டிசில்வா மன்னிக்கனும்...நான் பெயரைத் தவறுதலாக விஜிதரோஹனா விஜயமுனி என்று குறிப்பிட்டு விட்டேன். நேற்று கூகிளில் தேடித் தேடி அலுத்துப் போனவர்களிடத்தில் எல்லாம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் :( அப்படியிருந்தும் சில நண்பர்கள் சரியான பதிலளித்து விட்டார்கள்.
http://www.dailynews.lk/2001/11/03/wor03.html

12. சென்னை 150 கி.மீ., 350 கிமீ என மைல்கல்களில் பார்த்திருப்போம். அதற்கு அடிப்படையாக அமைந்துள்ள பெஞ்ச்மார்க் மைல்கல் எங்குள்ளது? அதாவது சென்னையின் ஜீரோ பாயிண்ட் எங்குள்ளது? அதாவது இந்த இடம் சென்னையிலிருந்து 150 கி.மீ தூரத்தில் இருக்கிறது எனச் சொல்ல வேண்டும் என்றால், சென்னையில் ஒரு இடத்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும் இல்லையா? அந்த இடம் சென்னையில் எங்கிருக்கிறது? மிகத்துல்லியமான இடத்தைச் சொல்ல வேண்டும்.
பாலராஜன்கீதா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சரியான பதிலை அவர் மட்டுமே கூறியிருக்கிறார். அவருடைய பதிலையே இங்கு பிரசுரிக்கிறேன். "சென்னை மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு சற்று வெளியே, பொது மருத்துவமனை சாலை / பெரியார் சாலை(பூந்தமல்லி நெடுஞ்சாலை)யும், வலது பக்கத்தில் அண்ணா சாலையின் ஆரம்பத்திலிருந்து பூங்கா - கோட்டை இரயில் நிலையங்களுக்கிடையில் ஒவர்ப்ரிட்ஜ் வழியாக வரும் சாலையும் (முத்துசாமி சாலை என்றால் எங்கே என்று கேட்பீர்கள் - அதனால் இப்படி) சந்திக்கும் இடத்தில் ஒரு மைல்கல் உள்ளது. அங்குதான் சென்னையின் ஜீரோ பாயிண்ட் ஆரம்பிக்கிறது என்று எப்பவோ படித்த நினைவு"


13. மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 06, 1949 வரை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் யார்?
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழகத்தின்(சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அப்போதைய மெட்ராஸ் ப்ரெசிடென்சி) பதினோறாவது முதலமைச்சர் இவர்.
http://en.wikipedia.org/
wiki/List_of_Chief_Ministers_of_Tamil_Nadu


14. முத்தங்களோடு தொடர்பு படுத்தப்படும் உலகப் புகழ்பெற்ற சாக்லெட்டுகளின் பெயர்(Brand Name) என்ன?
ஹெர்ஷேஸ் கிஸ்ஸஸ்(Hershey's Kisses) பென்சில்வேனியாவைச் சேர்ந்த என்ற ஹெர்ஷே நிறுவத்தினரால் தயாரிக்கப்படும் இந்த சாக்லேட்டுகளை, உற்பத்தி செய்யும் போது, இயந்திரங்கள் ஏற்படுத்தும் முத்தமிடுதல் போன்ற ஒலியினை முன்னிட்டு "ஹெர்ஷேஸ் கிஸ்ஸஸ்" எனப் பெயர் வந்ததாக இருக்கலாம் என்கிறார்கள் :)
http://www.hersheys.com/kisses/

15. திருவண்ணாமலையில் தியானத்தில் ஆழ்ந்திருந்த போது கரையான்களால் உடல் அரிக்கப் பட்ட நிலையில் இருந்த ரமண மகரிஷியைக் கண்டறிந்து உலகுக்கு அறிமுகப் படுத்திய துறவியின் பெயர் என்ன?
சேஷாத்ரி சுவாமிகள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இவர், தன்னுடைய 19ஆம் அகவையில் துறவு பூண்டார். இவர் தொட்டதெல்லாம் விளங்கியதால் இவருக்கு "தங்கக்கை சேஷாத்ரி" என்ற பெயரும் இருப்பதாகத் தெரிந்து கொண்டேன்.
http://www.arunachalasamudra.org/seshadri.html தளத்தில் படித்தது "Sometimes Sri Seshadri Swamigal, the older by ten years would be called ‘elder Seshadri’ (anna) and Sri Ramana ‘younger Seshadri’ (thambi). One time a devotee told Sri Ramana that everyone called Seshadri a mad man. Ramana smilingly replied that there were three mad men in Arunachala. One was Seshadri, the second was Arunachaleswarar and the third was himself."
இதையும் பாருங்கள் - http://www.omarunachala.com/seshadri.asp

கலந்து கொண்டு பதிலளித்த நண்பர்கள் அனைவருக்கும், என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

சென்னையின் ஜீரோ?...க்யூஸ் பதிவு

பதினைந்து கேள்விகளைக் கொண்ட ஒரு பொது அறிவு க்யூஸுங்க(Quiz தான்) இது. முயற்சி பண்ணுங்களேன் ப்ளீஸ்.
1. "அந்தா கானூன்" என்ற திரைப்படம் எந்த பிரபல நடிகரின் முதல் இந்தி திரைப்படம்?

2. வெற்றியின் தேவதையாகக் கருதப் பெறும் கிரேக்க கடவுளின் பெயரைத் தழுவி அமைந்துள்ள விளையாட்டு பொருட்கள் நிறுவனத்தின் பெயர் என்ன?

3. ஆர்க்டிக் கடல் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் கடலில் விழுந்து கூட்டுத் தற்கொலை(mass suicide) செய்து கொள்ளும் விலங்கினத்தின் பெயர் என்ன?

4. மலேசியா, புரூனை, இந்தோனேசியா இம்மூன்று நாடுகளினாலும் பங்கிடப் பட்டுக் கொள்ளும் தீவின் பெயர் என்ன? அதாவது இத்தீவில் ஒரு பகுதி மலேசியாவைச் சேர்ந்தது, ஒரு பகுதி புரூனையைச் சேர்ந்தது ஒரு பகுதி இந்தோனேசியாவைச் சேர்ந்தது.

5. கெம்ஸ்போர்டு துரையினால் 1919ஆம் ஆண்டு ஜம்ஷெட்ஜி டாட்டா அவர்களின் நினைவாக ஜம்ஷேட்பூர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஊரின் இயற்பெயர் என்ன?

6. ஸ்கூபா டைவிங் பற்றி கேள்வி பட்டிருப்போம்? ஆக்சிஜன் பிராணவாயுவை சிலிண்டருக்குள் நிரப்பி முதுகில் கட்டிக் கொண்டு ஆழ்கடலுக்குள் மூழ்குவதை ஸ்கூபா டைவிங் என்கிறோம். இதில் ஸ்கூபா (SCUBA) என்ற பதத்தின் விரிவாக்கம் என்ன?

7. மத்திய பிரதேச மாநிலத்தின் அரசு கைவினைப் பொருட்கள் அங்காடியின்(Handicrafts emporium) பெயர் என்ன?

8. மாண்டோவி, ஜுவாரி இவ்விரண்டும் எந்த இந்திய மாநிலத்தில் அமைந்துள்ள நதிகளின் பெயர்கள்?

9. Quaid Post(க்வெய்ட் போஸ்ட்) என அழைக்கப்படும் பனிச் சிகரத்தை இந்திய ராணுவம் கைப்பற்ற அருஞ்சேவையாற்றி, அச்சேவைக்காக இந்திய ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா வழங்கப் பட்ட ராணுவ வீரரின் பெயர் என்ன? அச்சிகரம் இப்போது எந்த பெயரில் அறியப் பெறுகிறது?

10. கீழே உள்ள படத்தில் இருக்கும் பறவையின் பெயர் என்ன?


11. விஜிதரோஹனா விஜயமுனி - இப்பெயரை எந்த இந்திய தலைவரோடு தொடர்பு படுத்துவீர்கள்? ஏன்?

12. சென்னை 150 கி.மீ., 350 கிமீ என மைல்கல்களில் பார்த்திருப்போம். அதற்கு அடிப்படையாக அமைந்துள்ள பெஞ்ச்மார்க் மைல்கல் எங்குள்ளது? அதாவது சென்னையின் ஜீரோ பாயிண்ட் எங்குள்ளது? அதாவது இந்த இடம் சென்னையிலிருந்து 150 கி.மீ தூரத்தில் இருக்கிறது எனச் சொல்ல வேண்டும் என்றால், சென்னையில் ஒரு இடத்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும் இல்லையா? அந்த இடம் சென்னையில் எங்கிருக்கிறது? மிகத்துல்லியமான இடத்தைச் சொல்ல வேண்டும்.

13. மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 06, 1949 வரை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் யார்?

14. முத்தங்களோடு தொடர்பு படுத்தப்படும் உலகப் புகழ்பெற்ற சாக்லெட்டுகளின் பெயர்(Brand Name) என்ன?

15. திருவண்ணாமலையில் தியானத்தில் ஆழ்ந்திருந்த போது கரையான்களால் உடல் அரிக்கப் பட்ட நிலையில் இருந்த ரமண மகரிஷியைக் கண்டறிந்து உலகுக்கு அறிமுகப் படுத்திய துறவியின் பெயர் என்ன?

Thursday, November 16, 2006

வயசாயிடுச்சாங்க?

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஆபீஸ்லேருந்து கெஸ்ட் அவுஸுக்குக் கார்ல திரும்பி வந்துட்டு இருக்கும் போது காரோட விண்ட்ஸ்க்ரீன் வழியாப் பாத்த காட்சி பயங்கரமான அதிர்ச்சியைத் தந்தது. அது என்னன்னா எங்க வண்டிக்கு முன்னாடி ஸ்கூட்டி ஓட்டிட்டுப் போயிட்டிருந்த ஒரு பொண்ணு(காலேஜ் படிக்கிற வயசு இருக்கும்னு நெனக்கிறேன்)காதுல மொபைலை வச்சிப் பேசிட்டுப் போச்சு. டூ வீலர்ல மொபைல்ல பேசிட்டே வண்டியே ஒட்டிட்டுப் போறதுன்னா எப்படின்னு கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க. கழுத்தை ஒரு பக்கமா சாய்ச்சு காதுக்கும் தோள்பட்டைக்கும் நடுவுல மொபைலுக்கு முட்டுக் கொடுத்து ரோட்டையும் பாத்து வண்டியையும் ஓட்டிக்கிட்டு பேசிட்டுப் போவணும். பேசி முடிச்சிட்டு ஒத்தை கையால வண்டியை ஓட்டிக்கிட்டே, மொபைலை எடுத்து ஜீன்ஸ் பின் பாக்கெட்ல சொருவி வச்சிக்கிச்சு. எங்க வண்டி எப்படியும் ஒரு நாப்பதுல போயிட்டிருந்துருக்கும்...எங்க முன்னாடி அந்த ஸ்கூட்டி போனதுனால அநேகமா அதுவும் அந்த வேகத்துல தான் போயிருக்கும். அதே வேகத்துல போன்ல பேசிக்கிட்டே ஒரு சிக்னல்ல வண்டியையும் அந்த பொண்ணு திருப்புச்சு. அந்த நேரம் எதிர் பக்கத்துலேருந்து ஒரு வண்டி வேற வந்துச்சு...ஸ்கூட்டி லைட்டா ஆட்டம் வேற கண்டுச்சு. நாங்க பின்னாடி கார்ல வந்துக்கிட்டு இதப் பாத்துக்கிட்டே இருந்தோம். இதப் பாத்ததும் எனக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி, ஒரு பக்கம் செம கோபம். மொபைல்ல பேசற அந்த ரெண்டு நிமிஷம் வண்டியை ரோட்டு ஓரமா நிறுத்திட்டு பேசிட்டு போனாத் தான் என்னான்னு? அதுவும் அந்த பொண்ணு ஓட்டிட்டு போனது நடு ரோட்டுல...வலது கை பக்கமா...வேகமா நகர்ற வாகனங்கள் போற லேன் அது.


கைபேசியில் பேசும் போது நம்ம கவனம் எல்லாம் பேச்சுல தான் இருக்கும், அதனால வண்டி ஓட்டும் போது மொபைல்ல பேசாதீங்கன்னு எவ்வளவு விளம்பரம் பண்ணறாங்க...ஆபத்துன்னு தெரிஞ்சே எதுக்கு வம்பை விலை கொடுத்து வாங்கனும்...அதோட இத படிச்சவங்களே பெரிய நகரங்கள்ல இருக்கறவங்க கூட பண்ணறாங்களேன்னு ஒரு ஆதங்கம். என் வாய் சும்மா இருக்காம "இந்த மாதிரி போன்ல பேசிட்டே வண்டியை ஓட்டறவங்களைப் போலீஸ் புடிச்சி ரோட்டோரத்துல வச்சி கன்னத்துலேயே ரெண்டு அறையனும்" அப்படின்னேன். எங்க கூட வண்டியில வந்துட்டிருந்த எங்க சீனியர் "ஏம்ப்பா உனக்கு அந்த பொண்ணு மேல என்னப்பா கோவம்?" அப்படின்னு சிரிச்சிட்டே கேட்டாரு. நான் சொன்னேன்"சார்! பொண்ணுங்கிறதுனால கன்னத்துல அறையனும்னு சொல்லலை. இந்த மாதிரி வண்டி ஓட்டும் போது போன் பேசறது, நம்ம உயிருக்கும் அடுத்தவங்க உயிருக்கும் ஆபத்துன்னு தெரிஞ்சே செய்யறாங்க பாருங்க...அவங்க ஆணா இருந்தாலும் சரி பொண்ணா இருந்தாலும் சரி அவங்களுக்கு இந்த தண்டனை தரனும்"னு சொன்னேன். அதுக்கு அவரு"அதுக்குத் தானேப்பா மொபைல்ல பேசினா ஃபைன்னு சட்டம் எல்லாம் இருக்கு"ன்னு சொன்னாரு. நானும் அப்ப கொஞ்சம் டென்சனா இருந்ததுனால "இல்லீங்க சார்! இந்த மாதிரி தப்புக்கு எல்லாம் 5000 ரூபாய் ஃபைன்னு சொன்னீங்கன்னா 500 ரூபாய் லஞ்சம் குடுத்துட்டு போயிடுவாங்க...500 ரூபாய் ஃபைன்னு சொன்னா 50 ரூபாய் லஞ்சம் குடுத்துட்டுத் தப்பிச்சிடுவாங்க. ரோட்டுலேயே நாலு பேருக்கு நடுவுல செவுள்லேயே ஒன்னு வுட்டீங்கன்னா நாளைக்கு அந்த அவமானத்துக்குப் பயந்துக்கிட்டு யாரும் இந்த மாதிரி செய்ய மாட்டாங்க"னு சொன்னேன். அதை கேட்ட அவரு "Mohanraj! You have a point. But it also goes to prove that you are becoming an old man"அப்படின்னாரு. எனக்கா இதை கேட்டு பயங்கர ஷாக்...ஏன்னா சொன்னவரு எப்பவும் சீரியஸாப் பேசறவரு...கிண்டல், நக்கல் இதெல்லாம் பண்ணாதவரு. "எதனால சார் அப்படி சொல்றீங்க?"ன்னு கேட்டேன். "இந்த மாதிரி ரோட்டுல வச்சி பொளேர்னு அரையறதைப் பத்தி எல்லாம் வயசானவங்க தான் யோசிப்பாங்க. நான் பல முறை அந்த மாதிரி யோசிச்சிருக்கேன்" அப்படின்னாரு. ஆஹா! என்னடா இது...55 வயசு ஆனவரு நம்மளையும் அவரோட லிஸ்டுல சேத்துட்டாரேன்னு நெனச்சேன். ஆனா இத பத்தி நானே ஓரிரு சமயங்கள்ல யோசிச்சிருக்குறேன். நாம தனியா ரூம்புக்குள்ள ஒக்காந்து யோசிச்சதை, ஒருத்தரு சபையிலே வச்சி கேட்டுருக்காரே ஒரு வேளை உண்மையா இருக்குமோ அப்படின்னு ஒரு analysisக்குத் தான் இந்தப் பதிவு.


போன மாசத்துல ஒரு நாள், சாயந்திரம் ஒரு எட்டரை மணி இருக்கும். எட்டரை மணி பிரைம் டைம் ஸ்லாட்டுல இருந்த சூப்பர் 10 கவுண்ட் டவுன், பெப்சி உமாவின் உங்கள் சாய்ஸ், திரை விமர்சனம், நீங்கள் கேட்ட பாடல் இதெல்லாத்தையும் மெகா சீரியலுக்குக் கெடக்கிற மெகா துட்டுக்கு ஆசை பட்டு ஒட்டு மொத்தமா ஞாயித்துக் கெழமைக்கு மாத்துன சன் டிவியின் உலக மகா பேராசையைக் கரிச்சுக் கொட்டிட்டே ரிமோட்டை வச்சி நோண்டிக்கிட்டு இருந்தேன்(ஆமதாபாளையத்துலயும் சன்னை விட்டா வேற ஒரு தமிழ் சேனலும் வர்றதில்லை). அப்போ சோனி டிவியில "பூகி-ஊகி"ன்னு (Boogie-Woogie)ஒரு நிகழ்ச்சி வந்தது. சன் டிவியில் முன்ன வந்துட்டு இருந்த "தில்லானா தில்லானா" மாதிரியான ஒரு நடனப் போட்டி நிகழ்ச்சி இந்த பூகி-ஊகி. எனக்கு மிகவும் பிடித்த ஒரு நிகழ்ச்சி இது. பங்கேற்கும் போட்டியாளர்களின் திறமையையும், அவர்களுடைய உத்வேகத்தையும் கண்டு பல முறை மலைத்துப் போயிருக்கிறேன். குறிப்பாக அந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் வந்து கலந்து கொள்ளும் போது பார்க்கணுமே? மிக அருமையாக இருக்கும். குழந்தைகள் ஆடும் வேகத்தைப் பெரியவர்களால் கூட பல சமயம் ஈடு கொடுக்க முடியாது. அதனுடன் சிறு குழந்தைகள் செய்யும் முகபாவங்களைப் பார்க்க வேண்டுமே...மிகவும் அழகாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கும். அன்று நான் பார்த்ததும் குழந்தைகள் பங்கு பெற்ற ஒரு நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சியை நான் பார்க்க ஆரம்பித்த நேரம் ஒரு பெண் குழந்தை ஒரு பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தது. அதை கண்டதும் எனக்கு ஒரு அதிர்ச்சி. காரணம், அக்குழந்தை ஆடிய பாடல் அத்தகைய பாடல்.
ஹிந்தி படங்களில் குறிப்பாக பீஹாரை மையமாக வைத்து வரும் படங்களில் வரும் ஒரு குலுக்கு நடனப் பாடல். பல கிராமத்து ஆண்கள் அமர்ந்து ரசிக்க அரைகுறை உடை அணிந்த ஒரு பெண் ஆடுவது போல அமைந்த ஒரு இரட்டை அர்த்தம் கொண்ட பாடல். அதை விட கொடுமை அப்பாடலுக்கு அக்குழந்தை அணிந்திருந்த உடை...சினிமாவில் வருவது போல முதுகு முழுவதும் தெரிவது போல அமைந்த ஒரு சிறிய மார்பு கச்சை. ஆடும் போது அக்குழந்தை காட்டிய முகபாவங்களும் அத்தகைய பாடல்களுக்கு, சினிமாவில் எப்படியிருக்குமோ அது போலவே இருந்தது(எப்படியென்று மேலும் விவரிக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்). அக்குழந்தை பாடலோடு ஒன்றி நன்றாக ஆடியிருந்த போதும் ஏனோ என்னால் அதை ரசிக்க முடியவில்லை. அதை காணும் போது வருத்தமாக இருந்தது. ஆடி முடித்த பின்னர் நடுவராக அமர்ந்திருந்த நடன இயக்குநர் ஜாவீத் ஜாஃப்ரி அக்குழந்தையைப் பார்த்து "இப்பாடலை உனக்கு செலக்ட் பண்ணி கொடுத்தது யார்" எனக் கேட்டார். அதற்கு அக்குழந்தை "எங்க மம்மி" என மழலையில் சொன்னது. மிஞ்சி மிஞ்சிப் போனால் அக்குழ்ந்தைக்கு ஐந்து அல்லது ஆறு வயசிருக்கும். சரியாகப் பேசக் கூட இன்னும் பயிலாத குழந்தையை மார்பு கச்சையோடு பார்க்கும் போது உண்மையிலேயே மனம் வேதனை அடைந்தது. இதை எப்படி பெற்றோர்கள் அனுமதித்தார்கள் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஜாவீத் அக்குழந்தையின் பெற்றோர்களிடம் "நல்லா ஆடுச்சு உங்க பொண்ணு. ஆனா பாடலைக் கொஞ்சம் பார்த்து தேர்வு பண்ணுங்க. இந்த மாதிரி அர்த்தம் கொண்ட பாடல்களுக்குக் குழந்தைகள் ஆடுனா நல்லாருக்காது. அதோட குழந்தையே இந்த பாடலுக்கு ஆடறேன்னு சொன்னா கூட நீங்க தடுக்கனும். குழந்தைகள் குழந்தைகளா இருக்கும் போது தான் நல்லாருக்கும்" அப்படின்னார். குழந்தைகள் குழந்தைகளாக இருக்கும் வரையே அழகு என்பதே என் எண்ணமும். குழந்தைகள் அறிவுப்பூர்வமாகப் பேசுவதை ரசிக்கலாம், சுட்டித் தனம் செய்வதை ரசிக்கலாம், ஓடி விளையாடுவதை ரசிக்கலாம். வயதுக்கு மீறிய செயல்களைச் செய்யும் போது ஏனோ ரசிக்க முடிவதில்லை. கவலையில்லாத குழந்தைப் பருவம் என்பது அதிகப் பட்சம் போனால் 10 அல்லது 11 வயது வரையிருக்கும். அதற்கு பிறகு அவர்கள் மீதும் பல எதிர்பார்ப்புகள் திணிக்கப் படுகிறது. இந்நிலையில் அவர்களுக்குக் கிடைக்கும் அந்த 10-11 ஆண்டு காலத்தை அவர்கள் குழந்தைகளாக இருக்க அனுமதிப்பதே நல்லதல்லவா?


என்ன தான் பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தை வளர்ந்து சீக்கிரம் பெரியவனாக/பெரியவளாக ஆக வேண்டும்...அதை கண் குளிர பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் "பருவத்தே பயிர் செய்" என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். இதே போன்று, வயதுக்கு மீறி ஒரு குழந்தை பேசுவது கண்டு எரிச்சல் உண்டானது "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தைக் கண்டு. இப்படத்தைப் பற்றி சர்ச்சையைக் கிளப்புவதல்ல என் நோக்கம். மணி ரத்னத்தின் பல படங்களை நானும் ரசித்திருக்கிறேன்...இப்படத்திலேயே பல எதார்த்தங்களினூடே நானும் ஒன்றிப் போயிருக்கிறேன். மணி ரத்னத்தின் படம் என்பதாலேயே குளிரையும் பொருட்படுத்தாமல் தில்லியில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் இப்படம் திரையிடப்பட்ட போது தனியாகச் சென்று பார்த்தேன். முதற் பாதியில் வெகுவாக மனதைக் கவர்ந்தது. ஆனால் இரண்டாம் பகுதியில் தன்னுடைய உண்மையான தாயை இலங்கையில் சென்று தேடும் போது, அக்குழந்தை பேசும் வயதுக்கு மீறிய பேச்சுகளும் செய்கைகளும் எரிச்சலை ஏற்படுத்தியது. நல்ல காலம் அப்போது என் கூட யாரும் வரவில்லை. வந்திருந்தால் அவனைப் படம் பார்க்க விடாமல் புலம்பி தீர்த்திருப்பேன். யார் என்றே பார்த்திராத தன்னுடைய உண்மையானத் தாயைத் தேடும் போது சிம்ரனைப் பார்த்து கீர்த்தனா பேசும் "நீங்க எங்க அம்மா இல்ல. எங்க அம்மா இலங்கையில இருக்காங்க"ன்னு சொல்றதெல்லாம் டூ மச்சாகப் பட்டது. இது போல இன்னும் சில வசனங்கள் அது சினிமாவில் வரும் ஒரு கற்பனை உரையாடல் என்ற உண்மையையும் தாண்டி படம் பார்த்த என்னை கோபம் கொள்ளச் செய்தது. பேபி கீர்த்தனாவைக் குறை சொல்லவில்லை. இயக்குநர் சொல்லிக் கொடுத்த மாதிரி கீர்த்தனா வசனம் பேசி அழகாக நடித்திருக்கிறாள். என்ன தான் கதை என்றாலும் இது வரை சீராட்டிப் பாராட்டி வளர்த்த தன் தாயைப் பார்த்து "நீங்க எங்க அம்மா இல்ல" என்று சொல்லும் தைரியமும் முதிர்ச்சியும் ஒரு ஒன்பது வயது குழந்தைக்கு உண்மையில் வருமா என்பதே என்னுடைய கேள்வி. ஒரு வேளை இந்த காலத்து குழந்தைகள் அவ்வாறு யோசிக்குமா? அவ்வாறு யோசித்தாலும் பெற்றோர் என்னும் ஒரு பாதுகாப்பை விட்டு விட்டு வேறு ஒரு இடம் தேடும் ஒரு தன்னம்பிக்கையும், தைரியமும் இருக்குமா? யாராச்சும் தெரிஞ்சவங்க சொல்லுங்க.


இது வரை நம்ம பதிவுல வராத கோப தாப மேட்டர் எல்லாம் இன்னிக்குப் போட்டாச்சு. சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறதுங்கிறதை இது வரைக்கும் பதிவுகள்ல உபயோகிச்சதில்லை. இன்னிக்கு அதை செயல்லயும் காட்டியாச்சு...சொல்லியும் காட்டியாச்சு. வூடு பூந்து அடிக்கிறவங்க கொஞ்சம் மெதுவா அடிங்க...ஓகேவா? சரி...இதெல்லாம் படிச்சிட்டு ஒரு 'angry young man' இல்லன்னா ஒரு 'angry old man' இமேஜ் உண்டாகியிருக்கும்னு நெனக்கிறேன். அப்படி எதுவும் உருவாகியிருந்தால் ஒன்னும் செய்ய முடியாது :) அதுக்கு முன்னாடி என் நிஜ வாழ்க்கையில் நடந்த ஒரு படு பயங்கரமான உண்மை சம்பவத்தை விவரிக்கிறேன். ஆனா தயவு செய்து இளகிய இதயம் கொண்டவர்கள் இதற்கு மேல் படிக்காதீர்கள். அதை படித்து விட்டு சொல்லொணா துயரத்தில் உங்கள் மனம் ஆழ்ந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. போன வருடத்தில் ஒரு நாள், பழைய கம்பெனியில் இந்தூரில் வேலை செய்து கொண்டிருந்த சமயம், வேலை நிமித்தமாக இந்தூரிலிருந்து ரயிலில் மும்பை செல்ல வேண்டியிருந்தது. ப்ளாட்பாரத்தில் ரயில் வந்து நின்றதும், பேச்சிலர் பசங்களுக்கே உரிய செய்கையான ரிசர்வேஷன் லிஸ்டைச் சரி பார்த்தலை முதல் வேலையாகச் செய்தேன். நம்ம பேரு லிஸ்ட்ல வந்துருக்கான்னு பாக்கற ஆர்வத்தை விட, ரயில் பயணத்துல கூட கடலை போட எதாவது ஃபிகர் இருக்குமான்னு தெரிஞ்சிக்கிற ஆர்வம் தான் அது:) நம்ம லக்கு பாருங்க அன்னிக்குன்னு பாத்து நம்ம சீட்டு நம்பருக்குப் பக்கத்து நம்பர்கள்ல ஒரு பொண்ணோட பேரும் இருந்தது. சரின்னு வண்டிக்குள்ள ஏறி உக்காந்தா இந்த பதிவுல பல இடங்களில் எழுதியிருக்கும் அதே ஷாக் மெகாவாட் கணக்குல அடிச்சது. காரணம் "வந்தது வந்தாள் துணையுடன் வந்தாள்". சரி...இதெல்லாம் நமக்கு சகஜம் தானே? நம்ம லக்குக்கும் நம்ம மோரக்கட்டைக்கும் எத்தனை ரயில் பயணங்கள்ல நாம கடலை போட்டுட்டே போயிருக்கோம்னு நெனச்சி என்னை நானே தேத்திக்கிட்டேன். அந்த பெண்ணின் கணவனுக்கு என்னை விட மிஞ்சிப் போனால் ஒரு வயது குறைவாக இருக்கும். (வட நாட்டுல தான் சின்ன வயசிலேயே கதற கதற புடிச்சி கட்டி வச்சிடுவாங்களே?) நல்ல உயரமாக இருந்தார், நல்ல நிறம். ரயில் பயணத்தில் என்னிடம் அவர்களும் பேசவில்லை நானும் பேசவில்லை. இப்படியே சென்றது அப்பயணம். இரவு படுக்கும் நேரம் வந்தது. அப்போது தான் அந்த பெண்ணின் கணவர் என்னிடம் முதல் முறையாகப் பேசினார். அவர் கேட்டது "அங்கிள்! என் வைஃப் பிரெக்னெண்டா இருக்கா. எங்க ரெண்டு பேருக்கும் அப்பர் பெர்த் குடுத்துருக்காங்க. இஃப் யூ டோண்ட் மைண்ட் உங்க லோயர் பெர்த்தை எக்சேஞ்ச் பண்ணிக்கிட்டு கொஞ்சம் மேல படுத்துக்குறீங்களா?"ன்னு. இதை கேட்டதும் ஒரு பேச்சிலர் மனசு என்ன பாடுபட்டிருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. கண்ணாடி போட்டு, மீசை வச்சிருக்கறவங்க எல்லாம் அங்கிளாடா? அப்படி பாத்தா எங்க ஊருக்கு வந்து பாத்தீன்னா பாதி பேரு அங்கிள் தாண்டான்னு சத்தமா கத்தனும் போல இருந்தது. ஆனா நம்ம நெஞ்சாங்கூட்டுக்குள்ள இருக்கறது சாதாரண் ஹார்ட் இல்லியே...எதையும் எந்த விதமான மெகா ஆப்பையும் தாங்கும் லயன் ஹார்ட்டாச்சே? அதனால அங்கிள் என்னும் அவப்பெயர் பெற்ற பின்னும் ஒன்னும் பேசாமல் அப்பர் பெர்த்ல போயி படுத்துக்கிட்டேன். இப்போ வார்னிங்கையும் மீறி மேலே படிச்சவங்க எத்தனை பேரு கோ கொள்ளன்னு அழுதீங்கன்னு உண்மையைச் சொல்லுங்க.


மேலே நம்ம கோபதாபங்களையும் நம்ம லயன்ஹார்ட் ரயில் அனுபவத்தையும் படிச்சிருப்பீங்க. எல்லாமே நியாயமானது தான்...எல்லாத்துலயும் பொண்ணுங்களைப் பத்தி எழுதிருந்தாலும் அது அவங்களுக்கு எதிரா எழுதுனது இல்லன்னு புரிஞ்சிக்கிட்டிருப்பீங்க அதுக்கெல்லாம் ரொம்ப நன்றி:). ஏற்கனவே இந்த பொற்கொடி பாப்பா நம்மளை "கைப்பு அங்குள் கைப்பு அங்குள்"னு கூப்பிடுது. Again at the risk of being branded "Uncle" உங்க கிட்ட எல்லாம் ஒரு கேள்வி - இதையெல்லாம் படிச்சா ஒங்களுக்கு என்னங்க தோணுது? நமக்கு மட்டும் ஏன் இந்த விஷயத்தைப் பாத்து கோவம் வருது? கார்ல என்கூட இன்னும் நாலு பேரு இருந்தாங்க...அவங்களுக்கெல்லாம் ஒன்னும் தோணலியே? அதே மாதிரி ஊரே கொண்டாடற நேஷனல் அவார்டு வாங்கின "கன்னத்தில் முத்தமிட்டால்" படம் ஏன் எனக்கு எரிச்சலாப் படனும்? உண்மையிலேயே நமுக்கு வயசாயிடுச்சாங்க?:)

Thursday, November 09, 2006

என்ன வண்டு கடிச்சிடுச்சுபா?

என்ன தமிழ்மண வலைப்பூ நண்பர்களே? என்ன நலமா? என்ன நான் நலம்? என்ன சே எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க? என்ன இன்னிக்கு ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு பயணம் சம்பந்தப்படாத பதிவெழுதலாம்னு ஆபிசிலிருந்து சீக்கிரம் வந்தேனா? என்ன அந்த நேரம் பாத்து கூகிள் சேட்ல ரெண்டு அப்பாவிங்க இன்னிக்கு ஆன்லைன் வந்தாங்களா? என்ன அந்த பாழாப் போன நேரம் ஒரு வண்டு வந்து என்னை கடிச்சி வச்சிச்சா? என்ன அந்த வண்டு பேரு "என்ன வண்டாம்"லே? என்ன அந்த வண்டு கடிச்ச நேரத்துலேருந்து எது எழுதுனாலும் "என்ன" சேர்ந்துக்குதா? என்ன பாவம் அந்த ரெண்டு பச்சை மண்ணுங்களும் போனா போவுது போனா போவுதுன்னு மரியாதை குடுத்து ஒரு அரை மணி நேரம் தாக்கு புடிச்சாங்க?

என்ன ஆனாலும் ராத்திரி நேரம்...ஆபிஸ்லேருந்து கெளம்பாம வயித்து பசியோட எம்புட்டு நேரம் தான் தாக்கு பிடிப்பாங்க? என்ன என்ன இருந்தாலும் என்னை அந்த வண்டு கடிச்சிருக்கக் கூடாது? என்ன என்ன இருந்தாலும் வண்டு கடிச்ச அந்த நேரத்துல அந்த ரெண்டு அப்பாவிங்களும் என்கிட்ட மாட்டிருக்கக் கூடாது? என்ன நான் போட்டு கடிச்ச கடியில ரெண்டு பேரும் துண்டை காணோம் துணியைக் காணோம்னு ஓடிட்டாங்க? என்ன ஆனாலும் "என்ன பைத்தியம்" புடிச்சாலும், மனிதாபிமானம்னு ஒன்னு இருக்கு இல்லியா?? என்ன அதனால தான் என்னோட அந்த 'என்ன பைத்தியம்' இருக்கும் போதே மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டு ஒரு ப்ளாக் எழுதலாம்னு ஒரு சின்ன எண்ணம்? என்ன ஆனா என்ன தான் 'என்ன பைத்தியம்' புடிச்சாலும் கடிப்பட்ட அந்த ரெண்டு பேரோட பேரை மட்டும் நான் சொல்லவே இல்லை பாருங்க? என்ன வண்டு கடிச்சாலும் அம்புட்டு ஸ்டெடி நானு? என்ன இந்த பதிவைப் போட்டுட்டு கொஞ்ச நேரத்துல தூங்கப் போயிடுவேனுங்கோ? என்ன காலைல தூங்கி எந்திரிச்சா இந்த 'என்ன பைத்தியம்' தெளிஞ்சிடும்னு நெனக்கிறேன்? என்ன அப்படியே ஒரு வேளை தெளியலைன்னு வையுங்க...? என்ன என்ன தெளியலைன்னா? என்ன அதெல்லாம் கண்டிப்பாத் தெளிஞ்சிடும்? என்ன நான் போட்ட பிளேடு தாங்காம ஆபிசுலேருந்து ரெண்டு பேரும் அழுதுகிட்டே போயிருக்காங்க? என்ன நாளைக்கும் தெளியலைன்னா என்னை கல்லெடுத்து அடிச்சி க்ளோஸ் பண்ணிடுவாங்க?


என்ன சரி...ஒரு கிறுக்கு பயலைப் பாக்க வந்துட்டீங்க? என்ன வந்ததுக்கு ரெண்டு படத்தைக் காட்டுறேன்...பாத்துட்டு கொஞ்சம் துப்பிட்டு போங்க சாமியோவ்?

என்ன இந்த மஞ்சா கலருலே ஒரு பூவு தெரியுதே...அது தான் அலமண்டா பூவு? என்ன அது கொத்து கொத்தா பூக்கும் பாக்க ரொம்ப அழகா இருக்கும்?


என்ன மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா?


என்ன செவ்வரளி தோட்டத்துலே உன்னை நெனச்சேன்?


என்ன என்ன பழம் இதுன்னு சொல்லுங்க? என்ன சின்னதா வெள்ளை கலர்ல ஒரு பூவும் இருந்துச்சு?


என்ன இதை படிச்சிட்டு கொலைவெறி வருதா?? என்ன கொலைவெறியோட ஒரு பின்னூட்டம் போடுங்க அம்மா, ஐயா?

Sunday, October 29, 2006

நாகா சாதுக்களும் ஒரு அறிவாளியும்

"சித்தூர்கட் செலவு" காட் ப்ராமிஸா...இத்தோட முழுசா செலவாவுதுங்க. இதுக்கு முந்தைய செலவுகள்

எனது சித்தூர்கட் செலவு
தொண்டையில் தண்ணி பாக்கலாம்

தீபாவளிக்குச் சென்னைக்குப் போயிட்டு அகமதாபாத் திரும்ப வந்து ரெண்டு நாளாவுது. எப்பவுமே லீவுக்கு வூட்டுக்குப் போயிட்டுத் திரும்பி வர்ற மொத சில நாளு கொஞ்சம் ஃபீலிங்ஸ் ஆஃப் பாகிஸ்தானா(எல்லாம் ஒரு சேஞ்சுக்குத் தான்...ஹி...ஹி...) இருக்கும். ஆனா கொஞ்ச நாள்லேயே, இங்க நமக்குன்னு வைக்கிற ஆப்புலயும், அடிக்கிற ரிவெட்லயும் இந்த ஃபீலிங்ஸ் எல்லாம் பஞ்சா பறந்துடும். புது பிராஜெக்ட் இப்போ தானே ஆரம்பிச்சிருக்கு...அதுனால ரெண்டு நாளா ஒரே மீட்டிங்ஸ் ஆஃப் குஜராத் தான். மீட்டிங்ஸையும் நாங்கல்லாம் ரொம்ப எஞ்சாய் மாடறோம்னு நெனச்சிக்கிட்டாங்களோ என்னவோ...பசங்க வேலை செய்யிறாங்களா இல்லையான்னு பாக்க வந்த எங்க கம்பெனியோட பெரிய தலை ஒருத்தரு(ப்ராஜெக்ட் மேனேஜருக்கும் மேல) நேத்து ஒரு மணி நேரம் ஒக்கார வச்சி ஒரே அட்வைஸ் மழை பொழிஞ்சிட்டாரு. நீங்கல்லாம் நெறய படிக்கணும், நெறைய தெரிஞ்சிக்கனும் அப்படின்னவரு திடீர்னு உங்கள்ல யாராச்சும் "தி கோல்" புஸ்தகம் படிச்சிருக்கீங்களான்னு கேட்டாரு. எல்லாரும் திரு திருன்னு முழிச்சோம். "I want, all my Client facing Consultants(அலைகடலென திரண்டு வரும் ஆப்புகளை வோல்சேலாக வாங்கிய பின்னும் வலிக்குதான்னு கேட்டா 'லைட்டா'ன்னு சொல்ற வீராதி வீர பரம்பரை) to go to Crossword, pick up a copy of 'The Goal' and start reading it. Its a very good book, you guys should know what has been written in it"அப்படின்னாரு. "சும்மா சொல்லிட்டு விட்டுட்டேன்னு நெனக்காதீங்க, அடுத்த வாரம் அதுலேருந்து கேள்வி கேப்பேன்"னு வேற பயமுறுத்திட்டு போயிருக்காரு. அத எழுதுனவரு பேரு கூட எதோ "தங்க எலி"யாம்(Goldrat). புக்கோட வெலை 350 ரூவா தானாம். நான் கேக்குறேன்...இல்ல தெரியாமத் தான் கேக்கறேன்...350 ரூவா காசு போட்டு புஸ்தகம் வாங்கி படிக்கிற வயசாய்யா இது? எதோ ப்ளாக்கைப் படிங்க, பின்னூட்டம் போடுங்கன்னு சொன்னா பெருந்தன்மையா பண்ணிட்டுப் போறோம்? அத விட்டுப் போட்டு கோலைப் படிங்க, கோலியைப் படிங்கன்னு என்னப் பேச்சு இது சின்னப்பில்லத் தனமா? கொஞ்சம் யோசிக்க வேணாம்? இருந்தாலும் இதெல்லாம் வயித்துப் பொழப்பு மேட்டரு...யாருன்னா அந்த பொஸ்தகத்தைப் படிச்சிருந்தா தங்கஎலி சொல்லிருக்குற கதையைக் கொஞ்சம் சொல்லுங்கய்யா...ஒங்களுக்குப் புண்ணியமா போவும்.


'முகத்தில் முகம் பாக்கலாம்'ங்கிற மாதிரி 'தொண்டையில் தண்ணி பாக்கலாம்'னு கிண்டலா போனப் பதிவுக்குப் பேரை வச்சிட்டாலும் ராணி பத்மினியோட வரலாறை எழுதுனதுனால ரொம்ப சீரியஸாப் போயிடுச்சு. மே மாசம் மொத மொதலா சித்தூர்கட் போனதுலேருந்து கோட்டைக்கு நாலு வாட்டி போயிருக்குறேங்க. அப்பவும் சில இடங்களை இன்னும் பாக்கலை(ஜெயின் தீர்த்தங்கரர்களின் கோயில்கள்). ஒவ்வொரு வாட்டியும் கோட்டையைப் பத்தி எதாச்சும் புதுசா ஒன்னு தெரிஞ்சிக்க முடிஞ்சுது. குறிப்பா ராணி பத்மினியைப் பத்தி ஒவ்வொரு தடவையும் எதாச்சும் ஒரு புது தகவல் கெடைக்கும். அதான் கெடச்சது எல்லாத்தையும் போன பதிவுல கொண்டாந்து கொட்டியாச்சு. கீழே இருக்குறது சித்தூர்கட் அரசு அருங்காட்சியகம். 1950கள்ல அரச பரம்பரையைச் சேர்ந்த யாரோ ஒருத்தரு இந்த மாளிகையைக் கட்டுனாராம்...ஆனா அதுல யாரும் வசிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அருங்காட்சியகம் ஆகிடுச்சாம். ஏழடி உயரம் உள்ள துப்பாக்கி, ஆளையே கூறு போடும் வல்லமை கொண்ட பல பயங்கரமான கத்திகள், கவசங்கள், கேடயங்கள், அலாவுதீன் கில்ஜி அழித்த சிலைகளின் மிச்சங்கள் ஆகியவை அங்கிருந்தன. சாஃப்ட்வேர் கம்பெனியெல்லாம் வர்றதுக்கு முன்னாடி ஆ ஊன்னா ஆன்சைட்டுக்குக் கத்தி தூக்கிட்டு கெளம்பிடுவாங்க போலிருக்கு.


ராணி பத்மினியின் மாளிகைக்கு அருகாமையில், ஒட்டக சவாரி செய்றதுக்கு வசதி இருக்கு. பாரம்பரிய ராஜஸ்தானி டிரெஸ் போட்டுக்கிட்டு ஒட்டகத்து மேல ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம். கீழே இருக்குற படத்துல இருப்பது ஒட்டகமும் நானும். இப்பவே சொல்லிட்டேன் லெஃப்ட் சைடுல இருக்குறது தான் ஒட்டகம்:). இந்த படம், கடைசி தரம் கோட்டைக்குப் போன போது ஃபிரெண்டு ஒருத்தன் எடுத்தது. படம் எடுத்துட்டு இருக்கும் போதே படம் எடுத்தவன் கூட நின்னுட்டிருந்த இன்னொருத்தன் "டேய் டேய் பின்னாடி திரும்பி பாருடா பாருடா"னு ஒரு பேய் கத்து கத்துனான். எனக்கா ஒரு பக்கம் பயம்... எப்படியோ பயப்படாத மாதிரி நடிச்சி படத்துக்குப் போஸ் குடுத்துட்டு வந்து படத்தைப் பாத்தா...ஐயோ சாமி! ஒட்டகத்துக்கு மம்புட்டி மம்புட்டியா பல்லு! நல்லா காலம்...நான் திரும்பி கிரும்பி பாக்கலை. அந்த ஒட்டகம் இந்தியன் படத்துல வர்ற சீலோ மாதிரி எங்கயாச்சும் கடிச்சி கிடிச்சி வச்சிருதுச்சுன்னா என்னாகியிருக்கும் என் நெலமை?



முதல் முறை மே மாசம் கோட்டைக்குப் போன போது, வெயிலுக்குப் பயந்துக்கிட்டு, சாயந்திரம் 6.30 மணிக்குக் கிளம்பி கீழே படத்துல இருக்குற கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்தோம். இந்த கோயிலோட பேரு 'காலிகா மந்திர்'. இந்த கோயிலைக் கட்டிருக்குறதைப் பாத்தா நம்ம ஊரு பக்கத்து வேலைபாடு மாதிரி இருந்தது. பொதுவா வட இந்தியாவுல கோயில்களைப் பாத்தா கல் வேலைபாடு எல்லாம் அவ்வளவா இருக்காது. ஆனா இந்த கோயிலைப் பாத்ததும் தமிழ்நாட்டு கோயில்கள் தான் நியாபகம் வந்துச்சு. இந்த கோயில் உள்ள படம் எடுக்க அனுமதி இல்லை. அதனால கோயில் வெளியே இருந்து எடுத்த ஒரு படம்.


இந்த கோயிலை நிர்வாகம் பண்ணறவங்க நாகா சாதுக்கள்னு எங்க கைடு சொன்னாரு. வாயை வச்சிக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம். எதோ நாகா சாதுக்களைப் பத்தி எல்லாம் தெரிஞ்சி கரை கண்டுட்டா மாதிரி "நாகா சாதுன்னு சொல்லறீங்க? இங்க இருக்குறவங்க டிரெஸ் எல்லாம் போட்டுருக்காங்க?"னு கேட்டுத் தொலைச்சிட்டேன். எங்க கைடு என்ன படுகேவலமா ஒரு லுக் விட்டுட்டு "அரே பாய்! ஹமாரி மா பெஹ்னோன் கோ இதர் நஹி ஆனா ஹை கியா?(நம்ம வீட்டு பெண்கள்(அம்மா, தங்கச்சி) அவுங்கல்லாம் வர்ற எடத்துல எப்படி டிரெஸ் இல்லாம இருப்பாங்க)ன்னு கேட்டுட்டாரு. இதை கேட்டுட்டு கூட இருந்தவனுங்க எல்லாம் சிரிச்சிட்டானுங்க. அவனுங்க சிரிச்சதும் எனக்கு ஒரே வெக்க வெக்கமாப் போச்சு. இதை எழுதும் போது, எங்க கூட வந்த தோஸ்த் ஒருத்தன் இந்த மாதிரி கைடு கிட்ட நாகா சாதுவைப் பத்தி கேள்வி கேட்டான், அத கேட்டு நாங்கல்லாம் வுழுந்து வுழுந்து சிரிச்சோம்னு எழுதலாமான்னு கூட ஒரு நிமிஷம் நெனச்சேன். நாம இம்புட்டு யோசிச்சி, இல்லாத மூளையெல்லாம் செலவழிச்சி ஒரு புத்திசாலித்தனமானக் கேள்வி கேட்டுருக்கோம், நாம கேட்ட கேள்விக்காக யாரு பெத்த புள்ளையோ...வேற ஒருத்தன் பேரை ஏன் ரிப்பேர் ஆக்கனும்னு நெனச்சி அந்த ஐடியாவைக் கைவிட்டுட்டேன்.


கோயில் வாசல்லயும் கோட்டை மேல பல எடங்கள்லயும் இந்த நீளமான வால் உள்ள கறுப்பு முகம் கொண்ட குரங்குகளைப் பெரும் எண்ணிக்கையில பாக்கலாம். இந்தூர்ல இருக்கும் போது எங்க ஆபிஸ்ல புகுந்ததுன்னு சொன்னேனே...அதுவும் இதே மாதிரியான குரங்கு தான்...ஆனா கொஞ்சம் பெரிய சைஸு.



ராணா கும்பாங்கிற மகாராஜா(மீரா பாயோட வீட்டுக்காரரு) குஜராத் சுல்தான் மேல படை எடுத்து ஜெயிச்ச வெற்றியைக் கொண்டாடுறதுக்காகக் கட்டப்பட்ட ஒரு நினைவுச் சின்னம், கீழே இருக்குற "விஜய் ஸ்தம்ப்". இது அக்காலத்துல ஒரு காவல் கோபுரமாவும் பயன் பட்டுருக்கு. ஏழு மாடி கொண்ட இந்த 53மீ உயரமுள்ள கோபுரத்தின் உச்சிக்கு படிக்கட்டுகளின் மூலமாகச் செல்லலாம். இக்கோபுரத்தின் ஏழாவது தளத்திலிருந்து பாத்தால் சித்தூர்கட் கோட்டையின் நால் புறங்களும் வெகு அழகாகத் தெரியும்.



விஜய் ஸ்தம்ப் எதுக்கு கட்டுனாங்கன்னு கீழே படிச்சிக்கோங்க.



11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட "சம்வித்தேஷ்வரா கோயில்" சித்தூர்கட் கோட்டையில் காண வேண்டிய ஒரு முக்கியமான பாயிண்ட்(கைடு பாஷையில). முதல் இரு முறைகள் கோட்டைக்கு கைடு இல்லாமல் சென்றதால் போது சம்வித்தேஷ்வரா கோயில், மீரா கோயில் போன்ற முக்கியமான இடங்களைக் காணாமல் வந்து விட்டோம், மூன்றாம் முறை கைடுடன் சென்ற போது அவ்விடங்களின் வரலாற்றுச் சிறப்பைத் தெரிந்து கொண்டதோடு இவ்விடங்களைக் காண்பதும் நன்றாக இருந்தது. ஆனா நாலாவது முறை புதிதாக வந்த நண்பருடன் சென்ற போது அதான் நீ இருக்கியே அப்புறம் எதுக்கு கைடுன்னு சொல்லி, கைடுக்குக் கொடுக்க வேண்டிய அந்த காசை மிச்சம் புடிச்சிட்டாங்க :(



சம்வித்தேஷ்வரா கோயிலின் வாசலில் உள்ள ஒரு கல்வெட்டு.



பிரம்மா, சிவன், விஷ்ணு - சம்வித்தேஷ்வரா கோவிலின் உள்ளே



கோயிலின் சுவற்றில் யானை, குதிரை, ஒட்டகம் மூன்றுடனும் போருக்குச் செல்லும் வீரர்கள். இது எதோ "குட்லக் சைன்" அப்படின்னு கைடு சொன்னாரு. க்ளிக் பண்ணிப் பாத்தீங்கன்னா பெருசாத் தெரியும்.



மாலையில், இருட்டும் நேரத்தில் எடுத்த படம் இது. இந்த குளத்தின் பெயர் "கோமுக்"(Gaumukh). கோ என்றால் பசு, முக் என்றால் முகம். இதை ஒரு புனித தீர்த்தமாகக் கருதுகிறார்கள். நாங்கள் இருந்ததே மலை உச்சி தான். மலை உச்சியின் மீது அவ்வளவு வேகமாகக் கொட்டுகிற நீர் எங்கிருந்து வருகிறது என்று யாருக்கும் தெரியாதாம்.



கும்மிருட்டில் எதை எடுக்கிறோம் என்றே தெரியாமல், கேமரா ஃப்ளாஷினை மட்டுமே நம்பி எடுத்த ஒரு படம். கோமுக் தீர்த்தத்தில் மிக வேகமாகத் தண்ணீர் கொட்டுகிறது. மழை காலத்தில் நீர் வரத்து அதிகமாக இருந்ததால் தீர்த்தத்தின் அருகில் இருந்த சிவலிங்கம் நீரில் மூழ்கி விட்டது.

கோமுக் என்ற பெயரைக் கேட்டதும் பள்ளியில் படித்த ஆபுத்திரன்(மணிமேகலையின் மகன்) கதை நினைவுக்கு வந்தது. சாவகம்(அக்காலத்து ஜாவா) செல்லும் வழியில் மணிபல்லவம் என்ற தீவில் தவறுதலாக இறங்கி விடும் ஆபுத்திரன், "கோமுகி" என்னும் ஆற்றில் அமுதசுரபி பாத்திரத்தை எறிந்து விட்டு உண்ணா நோன்பு இருந்து உயிர் துறந்ததாகப் படித்த நினைவு.



கோமுக் தீர்த்தத்தில் தான் ராணியர் நீராடுவார்களாம். நீராடிவிட்டு மேலே சொன்ன சிவலிங்கத்தை வழிபடுவார்களாம். அதை வழிபட்டு முடித்ததும் சதி தேவியின் கோவிலில் பூஜிப்பார்களாம். கீழே சதி தேவியின் கோயிலுக்குள்ளே தற்போது இருக்கும் "ராணி பத்மினியின் கற்பனை உருவம்"(Imaginary Statue). "என்னுடைய இந்த அழகினால் தானே என் நாடு அழிந்தது, என்னுடைய மக்கள் மாண்டார்கள்" என ராணி பத்மினி தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்து வருந்துவது போல அமைக்கப் பட்டுள்ளதாம் இச்சிலை.



சித்தூர்கட்டின் முழு வரலாற்றையும் இப்பலகையில் எழுதியிருக்கிறார்கள். படித்துப் பாருங்கள்.




ஜோதிகா புடவை, நயந்தாரா புடவைன்னு நம்ம ஊருல புடவைளுக்குப் பெயர் வைப்பது போல இங்கிருக்கும் கைவினைப் பொருட்கள் கடையில் "ராணி பத்மினி புடவை" என்ற ஒன்றை விற்கிறார்கள். அப்புடவையில் லேசாகத் தண்ணியைத் தெளித்து முகர்ந்து பார்த்தால் நறுமணம் வீசும் என்கிறார்கள். அப்போதைக்கு அவர்கள் செய்து காட்டும் போது நறுமணம் வீசத் தான் செய்கிறது. இது உண்மையாகவே நீடிக்குமா இல்லை ஏமாற்று வேலையா எனத் தெரியவில்லை. ஆனால் கிடைக்கும் கலர்கள் என்னமோ அடிக்கும் கலர்களான ரத்த சிவப்பு, கரும்பச்சை ஆகியவை. அதோடு ஹிந்துஸ்தான் ஜின்க் நிறுவனம் வெகு அருகில் இருப்பதால் ஜிங்க்கினால்(துத்தநாகம்) ஆன வளையல்கள், துத்தநாகத் தூள் தூவி புனையப்பட்ட சேலைகள் ஆகியவற்றை இங்கு வாங்கிக் கொள்ளலாம். ஆண்களுக்குன்னு குறிப்பா வாங்குற மாதிரி ஒன்னும் இந்த கடைகளில் இல்ல...அதுனால எதுவும் சொல்லலை. ஒடனே என்கூட சண்டைக்கு வந்துடாதீங்கப்பா. மொத்தத்தில்...சித்தூர்கட்டுக்குப் பணி நிமித்தம் சென்றாலும், அங்கு சென்று கண்டவை, கேட்டவை யாவும் மிக மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது. அதைத் தங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டதில் கூடுதல் மகிழ்ச்சியே.

-------------------சுபம்------------------------

Tuesday, October 24, 2006

தொண்டையில் தண்ணி பார்க்கலாம்

இப்பதிவு எனது சித்தூர்கட் செலவு பதிவின் தொடர்ச்சி. உலகில் இது வரை நடந்துள்ள ரத்தம் தோய்ந்த யுத்தங்களுக்குக் காரணங்களாக அமைந்தவை மூன்று - மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை. இதில் கடைசியாகச் சொல்லப்பட்ட பெண்ணாசை என்பது மனிதனை எந்த அளவுக்கு மிருகமாக்கும் என்பதற்கும், பெண்ணாசை காரணமாக, பெரும் போர்கள் மூளும் போது, அந்நிலையை நமது "இந்திய பெண்மை" எவ்வாறு எதிர் கொண்டிருக்கிறது என்று அறிந்து கொள்வதற்கும் ஒரு மிகச் சிறந்த வரலாற்றுச் சான்று சித்தூர்கட் கோட்டை.


சித்தூர்கட் என்று சொன்னதும் சில வரலாற்றுப் பெயர்கள் நினைவிற்கு வரும் எனச் சென்ற பதிவில் கூறியிருந்தேன். மீரா பாயைப் பற்றிச் சென்ற பதிவிலேயே பார்த்தோம். சித்தூர்கட்டுடன் தொடர்புடைய இன்னுமொரு முக்கியமான வரலாற்று பாத்திரம் ராணி பத்மினி. 14ஆம் நூற்றாண்டில் சித்தூர்கட்டை ஆட்சி புரிந்த ராஜா ரதன்சேனின் (Ratansen) மனைவி தான் ராணி பத்மினி. சித்தூர்கட்டின் வரலாற்றில் நடைபெற்ற மிகக் கொடூரமான போர்களில் ஒன்று ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தவர் ராணி பத்மினி. அதன் பின்னணியில் இருந்தது ராணி பத்மினியின் 'அழகு'. எப்படிப்பட்ட அழகு என்று கூற வேண்டுமானால், நீர் எடுத்து ராணி பருகினால், தொண்டை வழியாக நீர் செல்லுவது தெளிவாகத் தெரியும் அளவிற்கு அழகு என்று கைடு கூறினார். இப்பேர்ப்பட்ட அழகிகள்(legendary beauties) என்று சொல்லத் தக்கவர்கள் மூன்று பேர் இந்திய வரலாற்றில் இருந்திருக்கிறார்கள் என்றும் கூறினார். அவர்கள் -

1. ராணி பத்மினி - இப்பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது மேவார் ராஜியத்தின் வரலாற்றைக் கூறும் இத்தளத்தைக் கண்டேன். அதில் ராணி பத்மினியின் பூர்வீகம் சின்ஹல் த்ரீபம் (Sinhal Dripa எனப்படும் அக்கால இலங்கை என ஒரு தியரி குறிப்பிடப் பட்டுள்ளது). சிங்கள நாட்டு இளவரசி எவ்வாறு ராஜஸ்தான் மாநில மருமகள் ஆனாள்? இது எனக்கும் ஒரு புதிய செய்தி. எங்களுடைய கைடு இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. நீங்கள் யாராவது இதைப் பற்றி ஏதாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

2. ராணி ரூப்மதி - ராணி ரூப்மதியைப் பற்றி நான் ஏற்கனவே கேள்வி பட்டிருந்தேன். மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரிலிருந்து 120 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மாண்டு அல்லது மாண்டவ்கட்(Mandavgarh) என்ற சிற்றரசை ஆண்ட பாஸ் பகதூர்(Baz Bahadur) என்ற அரசனின் மனைவி ராணி ரூப்மதி. இயல், இசை, நாடகத்தில் ஈடுபாடு கொண்ட பாஸ் பகதூர் ஆடு மேய்த்து கொண்டிருந்த இந்து பெண்ணான ரூப்மதியை காதலித்துத் திருமணம் செய்து கொள்ள காரணமாக இருந்தது அவளின் அழகும், குரல் வளமும் தான். பின்னாளில் அக்பரின் படைத் தளபதியான ஆதம் கான் என்பவன் மாண்டுவின் மீது படை தொடுத்து பாஸ் பகதூரினைத் தோற்கடித்தான். ராணி ரூப்மதியை அபகரிக்கும் திட்டத்தினை நிரைவேற்றுவதற்கு முன்னரே மாற்றான் கையில் சிக்கக் கூடாது என்று விஷம் அருந்தி உயிர் நீத்தாள் ராணி ரூப்மதி. இந்தூரில் வேலை செய்து கொண்டி கொண்டிருக்கும் போது, இரு வருடங்களுக்கு முன் இவ்விடத்தைக் கண்டிருக்கிறேன். ஆனால் ரூப்மதி இப்பேர்ப்பட்ட பேரழகி என்று எங்கள் சித்தூர்கட் கைடு சொல்லித் தான் தெரியும்.

3. பாஜிராவ் மஸ்தானி - இப்பெயரை எங்கள் கைடு சொல்லக் கேட்டதும் 'என்னடா கதை விடுறாரே' என்று தான் நினைத்தேன். காரணம் "பாஜிராவ் மஸ்தானி" என்ற பெயரில் Black திரைப்படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். "சரி எதோ நம்மளை இளிச்சவாயன் என்று நினைத்து சினிமா பேரெல்லாம் சொல்லறார்" என்று அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு பிற்பாடு விகிபீடியாவில் பார்த்ததும் ஆச்சரியம். மஸ்தானி என்ற பெயரில் உண்மையில் ஒரு வீராங்கனை, ஒரு அழகி இருந்திருக்கிறாள். மராட்டிய அரசர்களின் அரசவையில் மிக முக்கியமான அமைச்சராகக் கருதப் பெற்ற பேஷ்வா பாஜிராவ் என்பவரின் இஸ்லாமிய மனைவி தான் மஸ்தானி. பாஜிராவ் மரணம் அடைந்து அவருடைய உடல் தகனம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பாரா வண்ணம், கணவரின் சிதையில் உடன்கட்டை ஏறியவள் மஸ்தானி. மேலே கொடுக்கப் பட்டுள்ள விகிபீடியா லிங்கைப் படித்துப் பாருங்கள், மஸ்தானியின் கதை படிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது.

சரி இப்போது ராணி பத்மினியுடைய வரலாற்றைப் பார்க்கலாம். கைடு சொன்ன கதையை ஒரு சில விழுக்காடு சேதாரங்களுடனும்(transit loss), ஆங்கில விகிபீடியா உதவியுடனும், சித்தூர்கட்டைச் சேர்ந்த நண்பர் கூறிய விபரங்களின் உதவியுடனும் நான் இங்கு எழுதியிருக்கிறேன். தன்னுடைய குடிகள் போற்றும் ஒரு சிறந்த அரசனாகத் திகழ்ந்தவர் ராஜா ரதன்சேன். அறநெறி வழுவாமல் ஆட்சி புரிந்த அத்தகைய அரசனின் அவையில் ராகவ் சேத்தன் என்றொரு மந்திரவாதி இருந்தான். குடிமக்களுக்குத் தீங்கு ஏற்படும் சில செயல்களில் அவன் ஈடுபட்டதால் கடுங்கோபம் கொண்ட ராஜா, அவனை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அவமானப் படுத்தி கழுதை மீதேற்றி நாட்டை விட்டே துரத்தி விட்டார். நாடு கடத்தப்பட்ட ராகவ், ராஜா ரதன்சேனைப் பழிவாங்கும் நோக்கோடு நேராக தில்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜியிடம் சென்று ராணி பத்மினி என்ற ஒரு அழகி, மேவார் ராஜியமான சித்தூர்கட்டில் இருக்கிறாள் என்றும் அப்பேர்ப்பட்ட அழகுகளை எல்லாம் உன் வசம் இல்லாத நீ எல்லாம் என்ன சுல்தான் என்று அலாவுதீன் கில்ஜியைத் தூண்டி விட்டான். உடனே ராணி பத்மினியை அடையும் எண்ணத்தோடு சுல்தான் சித்தூர்கட் மீது போர் தொடுத்தான். ஆயினும் சித்தூர்கட்டை நெருங்கியதும் வலுவான அரணினைக் கொண்ட கோட்டையைக் கண்டு சுல்தான் மலைத்துப் போனான்.

ராணியின் மாளிகையினுள் அமைந்த ரோஜா தோட்டத்தில் எடுத்த படம் கீழே. நல்லாருக்கா?


சித்தூர்கட் கோட்டை ஏழு அடுக்கு(seven layer security cordon) பாதுகாப்பு அரணை உடைத்த மிக வலுவான கோட்டை. ஆசியாவின் மிகப் பெரிய கோட்டை எனக் கருதப் பெறும் பாந்தவ்கட் கோட்டைக்கு அடுத்தபடி மிக வலுவான கோட்டை இதுவென்று எங்கள் கைடு கூறினார். உடனே ராஜா ரதன்சேனுக்கு அலாவுதீன் கில்ஜி ஒரு தூது அனுப்பினான். ராணி பத்மினியைத் தன் சகோதரியாகத் தான் பாவிப்பதாகவும் அவரை ஒரு முறை கண்ணால் கண்டு விட்டுத் திரும்பிச் சென்று விடுவதாகவும் செய்தி அனுப்பினான். நல்ல மனம் கொண்ட ராஜாவும் இதை உண்மை என நம்பி பத்மினியைத் தன் "சகோதரனை" ஒரு முறை காணுமாறு வேண்டினார். ஆனால் சுல்தானின் உள்நோக்கில் சந்தேகம் கொண்ட ராணி, நேரடியாக அவனைக் காண மறுத்துவிட்டார். பல வற்புறுத்தல்களுக்குப் பிறகு, நீரில் தன்னுடைய பிரதிபிம்பத்தை வேண்டுமானால் சுல்தான் பார்த்துக் கொள்ளட்டும் என ராணி அனுமதி அளித்தாள். நீரில் ராணியினுடைய பிரதிபிம்பத்தையும் நேரடியாக சுல்தானுக்குக் காட்டாமல், நீரில் விழுந்த பிரதிபிம்பத்தையும் கண்ணாடியின் வழியாகத் தான் அலாவுதீன் கில்ஜிக்குக் காட்டினார்களாம். கீழே உள்ளது ஜல்மஹலின் படம்(Jal Mahal), ராணியின் அரண்மனைக்கு அருகில் இருக்கும் ஏரியின் நடுவில் அமைந்துள்ள ஒரு மாளிகை இது. இம்மாளிகையின் கடைசி படிக்கட்டில் ராணி நின்று கொண்டு தன் பிரதிபிம்பத்தை நீரில் காட்டினாராம்.

அந்த பிரதிபிம்பத்தை கிட்டத்தட்ட நூறு மீட்டர் தூரமுள்ள ஒரு மண்டபத்தில் நிற்க வைத்து கண்ணாடி பிரதிபலிப்பின் மூலமாக சுல்தானுக்குக் காட்டினார்களாம். இந்த மண்டபத்தின் நான்கு சுவற்றிலும் நான்கு கண்ணாடிகள் இருந்தன. அதில் ஒன்றைத் தான் நீங்கள் கீழே காண்கிறீர்கள்.



இதில் ஏரியோ, கண்ணாடிகள் அமைந்துள்ள மண்டபத்தின் வெளிசுவர்களைப் பார்த்தவாறு இருந்தது. கண்ணாடியோ மண்டபத்தின் உள்சுவர்களில் இருந்தது.
நூறு மீட்டர் தூரத்தில் உள்ள மண்டபத்தில் உள்சுவற்றில் இருக்கும் கண்ணாடியில் எப்படியப்பா பிரதிபலிப்பு தெரியும் என்று கேட்டதற்கு இந்த ஆங்கிள், அந்த ஆங்கிள் என்று ஏதேதோ ஆங்கிள் எல்லாம் எங்கள் கைடு சொன்னார்...ஆனால் எங்களுக்குத் தான் பிரதிபலிப்பு அவ்வளவு தூரம் எப்படி வந்திருக்கும் என விளங்கவில்லை. இத்தளத்தில் எவ்வாறு கண்ணாடிகளை அமைத்திருந்தார்கள் என்றும் விவரித்துள்ளார்கள்.


ராணியின் நிழலுருவத்தைப் பார்த்தே(!) இப்படியொரு அழகா என்று வியந்த சுல்தான், அவளை அடையாமல் விடுவதில்லை என்று தீர்மானித்தான். சுல்தானை வழியனுப்ப ராஜா ரதன்சேன் வாயில் வரை வந்த போது ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த தன்னுடைய வீரர்கள் உதவியுடன் அவரைக் கடத்திச் சென்றான். ராஜா உயிருடன் திரும்ப வேண்டுமென்றால், ராணி தில்லிக்கு வர வேண்டும் என்று சித்தூர்கட்டுக்குச் செய்தி அனுப்பினான். இதனைக் கேள்வி பட்டு வெகுண்டெழுந்த ராஜபுத் வீரர்கள், சுல்தானுக்கு அவனது பாணியிலேயே பாடம் கற்பிக்க முடிவு செய்தார்கள். ராணி சுல்தானைச் சந்திக்க வருகிறாள் என்று செய்தி அனுப்பி விட்டு பல்லாக்குகளில் பெண் வேடம் தரித்த ராணுவ வீரர்கள் தில்லி சென்றனர். கடுமையாகப் போரிட்டு ராஜா ரதன்சேனை மீட்டு வந்தனர். ராஜாவை மீட்டு வருவதில் பெரும்பங்கு வகித்தவர்கள் ராணி பத்மினியின் மாமா கோராவும்(Gora) பன்னிரெண்டு வயதே நிரம்பிய மாமாவின் மகன் பாதலும்(Badal). இவ்விடத்தில் நானறிந்து கொண்ட இன்னொரு பொதுவான விஷயத்தைச் சொல்லிக் கொள்ள நினைக்கிறேன். நாம் மாமா மகன்களை முறை மாப்பிளைகளாகவும், மாமா மகள்களை முறைப்பெண்களாகவும் கருதுவது போல வட இந்தியர்கள் கருதுவதில்லை. மாமா மகள்களையும் சகோதரிகளாகத் தான் கருதுகிறார்கள். ரக்ஷா பந்தன் தினத்தன்று மாமன் மகள்களிடத்தும் ராக்கி கட்டிக் கொள்வார்கள். முதன் முறையில் இதை கேள்விபட்டதும் ஆச்சரியமாக இருந்தது.


பெண்ணாசை கண்ணை மறைக்க, பிறன்மனை நோக்குகிறோம் என்ற எண்ணமும் இன்றி மறுபடியும் தன்னுடைய பெரும்படையைத் திரட்டிக் கொண்டு வந்து சித்தூர்கட்டின் மீது போர் தொடுத்தான் சுல்தான் அலாவுதீன் கில்ஜி. இருப்பினும் சித்தூர்கட் கோட்டையானது மலை மேலே அமைந்துள்ள ஒரு ஊருக்குச் சமமானது. மலையின் மீதே விளைச்சல் எல்லாம் நடைபெற்று கொண்டிருந்தது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள் கோட்டை மேலிருந்து எடுத்த படம். இது கோட்டையின் ஒரு சிறிய பகுதி தான். இதன் மூலம் கோட்டையின் பரப்பளவை அரிதியிட்டுக் கொள்ளலாம்.


இம்முறை மலை அடிவாரத்தில் ஆறு மாதங்களுக்கும் மேலாக தன் படைகளுடன் காத்திருந்து கோட்டைக்குச் செல்லும் அனைத்து supply routesகளையும்(தமிழ்ல என்னங்க?) தடுத்து நிறுத்தினான். கடுமையான போருக்கு இடையே இன்றியமையா பொருட்களின் வரத்து நிற்கத் தொடங்கியதும், தாங்கள் போரில் தோற்கப் போகிறோம் என்று உணர்ந்த ராணி பத்மினி ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்தார்.

அதாவது மாற்றான் கையில் சிக்கி மானத்தை இழப்பதைக் காட்டிலும், ஜோஹர் புரிந்து உயிரை இழப்பது என்பது தான் அது. சரி! ஜோஹர்(Jauhar) என்பது என்ன? ஒரு மிகப் பெரிய சிதையில் தீ வளர்த்து நகரத்துப் பெண்கள் எல்லாம் அதில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளுதலே ஜோஹர் ஆகும். சதி(Sati) எனப்படும் உடன்கட்டை ஏறுதலுக்கும் இதற்கும் ஒரு வேற்றுமை உண்டு. சதி என்பது கணவன் மரணமடைந்ததும் அவனுடைய சிதையில் மனைவியும் இறங்கி தன் உயிர் நீப்பது ஆகும். ஜோஹர் என்பது சமுராய் வீரர்கள் செய்து கொள்ளும் ஹரா-கிரி போன்றது...இது ஒரு மதிப்பிற்குரிய தற்கொலை முயற்சி. கணவனின் இறப்பு ஜோஹார் புரிதலுக்குக் காரணமாகாது. அதன்படி ராணி பத்மினியும் சித்தூர்கட்டில் உள்ள 16000 பெண்களும்(ஆம் பதினாறாயிரம் தான்!!!) ஒரு மிகப் பெரிய தீ வளர்த்து அதில் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். தங்கள் வீட்டுப் பெண்கள் அனைவரும் உயிர் துறந்ததும் இனிமேல் எங்களுக்கு என்ன இருக்கு என என்ணி ஆண்கள் அனைவரும் சுல்தானின் படைகளோடு மிக ஆக்ரோஷமாகப் பொருதினர். மிகப் பயங்கரமான போர் மூண்டது. அங்கு ஓடிய ரத்த ஆற்றில் கன்றுக்குட்டிகள் அடித்துச் செல்லப் பட்டதாகக் கூறும் நாட்டுப் புறப் பாடல்கள் ராஜஸ்தானி மொழியில் இருப்பதாகச் சித்தூர்கட்டைச் சேர்ந்த நண்பர் தெரிவித்தார். ராணி பத்மினியின் மாமன் மகனான பாதல் என்ற சிறுவன் கடைசி வரை பகைவர்களுடன் போராடினானாம். அவனுடைய கால்களை வெட்டிய போதிலும் தரையில் வீழ்ந்த நிலையிலேயே தன் கைகளின் உதவியால் பகைவர் பலரை வெட்டிச் சாய்த்திருக்கிறான். (இதை கேட்டதும் வெள்ளையர்களுடன் போரிட்ட சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த பெரிய மருதுவின்(மருது சகோதரர்கள்) கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையிலும் மண்டியிடாமல் பகைவர்களைக் காரி உமிழ்ந்ததும் இறுதியில் வீரமரணம் அடைந்ததை பள்ளியில் படித்ததும் நினைவுக்கு வந்தது.) இறுதியில் ராஜபுட் வீரர்களைத் தோற்கடித்து கோட்டையைக் கைப்பற்றி உள்ளே நுழைந்ததும் அவர்களுக்குக் கிடைத்தது எரிந்த நிலையில் இருந்த பெண்களின் உடல்களும் எலும்புகளும் தான். இதை கைடு சொல்ல கேட்டதும் என்னுடைய முதல் ரியாக்ஷன் 'அட பாவிகளா!' என்பது தான். ஜோஹர் புரிந்து உயிர் நீத்த ராணி பத்மினியையும் மற்ற பெண்களையும் ராஜஸ்தானில் உள்ளவர்கள் கடவுளுக்குச் சமமாக நினைக்கின்றனர். ராணி பத்மினியின் கதையை, அவ்வரலாற்றை அறிந்த ராஜஸ்தானைச் சேர்ந்த யாரிடமாவது கேட்டுப் பாருங்கள், மிகவும் உணர்ச்சி ததும்ப விவரிப்பார்கள்(நம்மூர் நல்லத்தங்காள் கதை போல)


ராணி பத்மினியின் மாளிகையின் வாயிலில் அமைந்துள்ள tombstone.


சித்தூர்கட் பயணக்குறிப்பை இப்பதிவுடன் முடித்துவிட வேண்டும் என்று தான் எண்ணியிருந்தேன். நான் கேட்ட, படித்த ராணி பத்மினியின் வரலாற்றை எழுத எழுத நீண்டுக் கொண்டே சென்றது. பதிவின் நீளம் குறித்து இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். வேறென்ன...சித்தூர்கட் செலவு தொடரும் :)