ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஞாயித்துக் கெழமை கலைஞர் டிவியில அப்துல் அமீது அவர்கள் நடத்துற "பாட்டுக்குப் பாட்டு" நிகழ்ச்சி பாத்துட்டு இருந்தேன். அதுல ஒரு ஆண் பாடகர் 16 வயதினிலே படப் பாட்டான "செந்தூரப் பூவே" பாட்டு பாடுனாரு. ரொம்ப அருமையா உணர்வு பூர்வமா பாடுனாரு. அப்துல் அமீது கூட அவரை அந்த பாட்டைச் சிறப்பா பாடுனதுக்காக நல்லா பாராட்டினாரு. நான் கூட அந்த நேரம் யோசிச்சிப் பார்த்தேன், நமக்கு ரொம்ப புடிச்ச பாட்டுகள்ல பல பாட்டுகள் ஃபீமேல் சோலோக்களாச்சென்னு(Female Solos). என் ப்ளேலிஸ்டுல இருக்கற எனக்கு ரொம்ப புடிச்ச அடிக்கடி விரும்பிக் கேக்கற பாடல்கள் என்னன்னு பட்டியல் போட்டப்போ கீழே இருக்கற பாடல்கள் எல்லாம் உடனே நியாபகத்துக்கு வந்துச்சு.
1. "காற்றுக்கென்ன வேலி", எஸ்.ஜானகி, அவர்கள்
2. "இவள் ஒரு இளங்குருவி", எஸ்.ஜானகி, பிரம்மா
3. "செந்தூரப்பூவே செந்தூரப்பூவே", எஸ்.ஜானகி, 16 வயதினிலே
4. "பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்", எஸ்.ஜானகி, இன்று நீ நாளை நான்
5. "கண்கள் எங்கே", பி.சுசீலா, கர்ணன்
6. "லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்", பி.சுசீலா, அன்பே வா
7. "மாலை பொழுதின் மயக்கத்திலே", பி.சுசீலா, பாக்கியலட்சுமி
8. "கற்பூர பொம்மையொன்று", பி.சுசீலா, கேளடி கண்மணி
9. "மாலையில் யாரோ", ஸ்வர்ணலதா, சத்ரியன்
10. "வானவில்லே வானவில்லே", சாதனா சர்கம், ரமணா
இந்தப் பாடல்களைப் பத்தித் தனித்தனியாவே பதிவெழுதி போடலாம். அவ்ளோ ஃபீலிங்ஸும் அவ்ளோ சிறப்புகளும் இருக்கு இந்த பாடல்கள்ல.
மேலே இருக்கற இந்த லிஸ்டுல இல்லாத, எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு தனி பெண்குரல் பாடல் ஒன்னு இருக்குங்க. அது இன்னான்றீங்களா? அது ஒரு மராட்டி பாட்டு. லதா மங்கேஷ்கர் பாடுனது. "கைப்புள்ளையாரே உமக்கென்ன விசறே? மராட்டிய மொழிப் பாட்டினைக் கூட்டிக் கொண்டு தமிழ்வலையுலகில் வந்துள்ளீர்?" அப்படின்னு கன்னத்தில் முத்தமிட்டால்" பசுபதி போல தானே கேக்கறீங்க. அதுக்கும் முன்னாடி இன்னொன்னும் சொல்லிடறேன் மராட்டி எனக்கு தாய் மொழியோ, தந்தை மொழியோ, புகுந்த வீட்டு மொழியோ இப்படி எதுவுமே கெடையாது. ஒரு சில வார்த்தைகளைத் தவிர எனக்கும் மராட்டி சுத்தமாப் புரியாது.
ஆனா என்ன பொறுத்தவரை இசைக்கு மொழி கெடையாது. இது தொடர்பா நான் அடிக்கடி சொல்ற உதாரணம் - மைக்கேல் ஜாக்சன். ஒரு காலத்துல நான் மைக்கேல் ஜாக்சனோட பயங்கரமான ரசிகன். அவரோட பாப் பாடல்களைக் கேட்டா ரொம்ப உற்சாகமா, துள்ளலா, எழுந்து ஆடணும் போல இருக்கும். இவ்வளோ ரசிச்ச மைக்கேல் ஜாக்சனோட பாடல்கள் எதுவும் எனக்கு அப்போல்லாம் புரிஞ்சது கெடையாது. இப்ப கூட பெருசா புரியறது இல்ல, ஆனா லிரிக்ஸ் தெரியணும்னா இணையத்தில் தேடுனா சுலபமா கெடைச்சுடுது. எல்லாத்தையும் நெட்ல தேடிப் பார்த்து படிச்சிட்டு பொறந்ததுலேருந்து நான் இங்கிலீஷ் பாட்டு தவிர எதையுமே கேட்டதில்லைங்கிற ரேஞ்சுக்குப் பீலா விடறதுக்கு வழியும் வகையும் இப்ப இருக்கு:) சரி அதையெல்லாம் விடுங்க. இந்த இங்கிலீஷ் பாட்டுகளை மாதிரியே நம்ம நாட்டு மொழிகள்ல வந்த சில திரைப்படப் பாடல்கள்லயும் மொழி புரியாட்டியும் பிடிச்சிப் போற பாடல்கள் இருக்கத் தான் செய்யுது. இசைக்காகவும் வேறு சில காரணங்களுக்காகவும் மொழி புரியாட்டியும் நாம அந்த பாடல்களை ரசிப்போம்.
ரெண்டு பத்தி பில்டப்புக்கப்புறம் உண்மையான மேட்டருக்கு இப்போ வருவோம். இந்த பாட்டைப் பத்தி முதல்லேயே ஒரு விஷயம் சொல்லிடறேன். இது ஒரு 100% அக்மார்க் "இஸம்" பாடல். இதை நான் சொல்லலை. நெட்ல பாத்தீங்கன்னா இந்த படத்தைப் பத்தி பல பேரும் இந்த மாதிரி தான் சொல்றாங்க. மராட்டி திரைப்பட உலகின் க்ளாசிக் பாடல்களில் ஒன்றாக இப்பாட்டைக் கருதுறாங்க. "மீ ராத் டாக்கலி"ன்னு தொடங்குற இந்த பாட்டு இடம்பெற்றிருக்கும் படத்தின் பேரு "ஜைத் ரே ஜைத்"(Jait re Jait). ஒரு காலத்தில் இந்தி திரைப்பட உலகில் கொடிகட்டி பறந்த மறைந்த நடிகை ஸ்மிதா பாட்டில் அவர்கள் நடிச்ச படம் இது. அருமையான மெலடி இது. கீழே இருக்கற வீடியோல இந்த பாட்டோட ஆங்கில மொழிபெயர்ப்பும் இருக்கு பாருங்க. "என்னோட பழசை எல்லாம் கழித்து இன்று நான் புதிதாய் பிறந்தேன்" அப்படின்னுட்டு ரொம்ப சந்தோஷமா இயற்கையை ரசிச்சுக்கிட்டே ஸ்மிதா பாட்டில் பாடிக்கிட்டே போகிற மாதிரியும் "எவ்ளோ திமிராப் போறா பாரு இந்த பொம்பள" அப்படின்னு ரெண்டு காலிப்பசங்க பாறை மேல குந்திக்கிட்டு கிண்டல் பண்ணிப் பாடற மாதிரியும் இந்தப் பாடல் படமாக்கப் பட்டிருக்கும். ஆனா அந்த கிண்டலை எல்லாம் பொருட்படுத்தாம புதிய வாழ்க்கையை எதிர் நோக்கி ரொம்ப எதிர்பார்ப்போட உற்சாகத்தோட நடந்து போய்க்கிட்டே பாடிட்டுப் போகிற மாதிரி இருக்கும் இந்த பாட்டு.
படம் : ஜைத் ரே ஜைத்(Jait re Jait 1977)
பாடல் : என்.டி.மஹானோர் (N.D.Mahanor)
இசை : ஹிருதயநாத் மங்கேஷ்கர்
பாடியது : லதா மங்கேஷ்கர்
பாட்டைக் கேட்டீங்களா? ஒரு சிலருக்காச்சும் இந்த பாட்டு பிடிச்சிருக்கும்னு நம்பறேன். இதை படிக்கிறவங்கள்ல யாராவது ஒருத்தராச்சும், இந்தப் பதிவைப் படிக்கிறதுக்கு முன்னாடியே கேட்டிருப்பீங்கன்னும் ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருக்கு. முன்னொரு காலத்தில் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக் கிழமை மதியங்களில் அவார்டு வாங்கிய பிற மொழித் திரைப்படங்கள் போடுவாங்க பாத்திருக்கீங்களா? அந்த வரிசையில் நானும் இந்த படத்தைப் பாத்துருக்கேன். இந்த படம் பாக்கும் போது எனக்கு ஒரு பத்து-பதினொரு வயசு இருக்கும். தக்கர் எனப்படும் பழங்குடியின வகுப்பினரைப் பற்றிய படம், மேளம் அடிச்சு பிழைப்பு நடத்தும் ஒரு ஆணுக்கும் விவாகரத்தான ஒரு பெண்ணுக்கும் நடக்கும் காதல் கதைனு விக்கிபீடியால சொல்லிருக்கு. ஆனா அதெல்லாம் எனக்கு எதுவும் ஞாபகமில்லை. க்ளைமாக்ஸ் மட்டும் தான் லேசா ஞாபகம் இருக்கு. ஸ்மிதா பாட்டிலோட வேலை தேன் எடுக்கறது. க்ளைமாக்ஸ் சீன்ல மலைமேல கூடு கட்டி இருக்கற ராணி தேனீயோட கூட்டைக் கலைக்கற மாதிரி எதோ ஒரு வேலை வரும் ஸ்மிதா பாட்டிலுக்கு. அதுக்குப் பின்னாடி எதோ காரணமும் இருக்கும், ஆனா என்னன்னு இப்போ ஞாபகம் இல்லை. மலை மேல ஏறி தனக்கு கொடுக்கப்பட்டிருந்த வேலையை முடிச்சிடுவாங்க. ஆனா அந்த சமயம் தேனீக்கள் கொட்டுறதுனால உயரத்துலேருந்து கீழே விழுந்து இறந்துடற மாதிரி படம் முடியும். இறக்கும் போது தான் கர்ப்பிணின்னு சொல்ற மாதிரி ஒரு காட்சி வரும்னு நெனைக்கிறேன். ரொம்ப நாள் ஆச்சு இந்த படம் பார்த்து - யாராச்சும் பை சான்ஸ் இந்த படம் பாத்துருந்தீங்கன்னா நான் சொல்றது சரியா தப்பான்னு சொல்லுங்க. இருந்தாலும் கண்டிப்பா இந்த காட்சியைப் பாத்த மாதிரி தான் ஞாபகம். அப்புறம் ஒரு அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி இதே பாட்டு ரீ-மிக்ஸ் பண்ணி ஒரு ஆல்பமா வெளியிட்டாங்க. பாலே நடனம் கத்துக்க நெனக்கிற தன்னோட பெண்ணுக்கு ஒரு அம்மா எப்படி ஊக்கமாயிருந்து வழிநடத்துறாங்கன்னு அந்த வீடியோல சொல்லப் பட்டிருக்கும். பின்னணியில் இந்த பாட்டு ஒலிச்சிட்டிருக்கும். அந்த ஆல்பத்தைப் பாத்து தான் இந்த பாட்டு பல வருஷங்களுக்கு அப்புறம் ஞாபகம் வந்துச்சு. வழக்கம் போல நெட்ல தேடுனா ஒரிஜினல் பாட்டைப் பத்தி பல தகவல்கள் கெடைச்சது.
இந்த நேரத்துல இந்த பாட்டுல நடிச்சிருக்கற ஸ்மிதா பாட்டில் பத்தி சொல்லி ஆகணும். 31 வயதில் தன்னுடைய பிரசவத்தின் போது இவங்க இறக்கலைன்னா கண்டிப்பா மிகப் பெரிய நடிகையா வந்துருக்க வேண்டியவங்க. அவங்களோட பையன் ப்ரதீக், அமீர்கானின் தயாரிப்பான "ஜானே தூ யா ஜானே நா" அப்படீங்கற இந்தி படத்தில் ஜெனீலியாவோட சகோதரரா நடிச்சிருக்காராம். தூர்தர்ஷன்ல செய்தி வாசிப்பாளரா தன்னுடைய பணியைத் தொடங்குன இவங்க மெல்ல திரைப்படங்கள்ல நடிக்க வந்தாங்க. இந்திலயும், மராட்டிலயும் முத்திரை பதித்த பல திரைப்படங்கள்ல நடிச்சிருக்காங்க. ஜைத் ரே ஜைத், அர்த் சத்யா மாதிரியான ஆர்ட் படங்கள்லயும் நடிச்சிருக்காங்க. பல மசாலா படங்கள்லயும் நடிச்சிருக்காங்க. பாயும் புலி படப் பாட்டான "பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்" இந்தி பதிப்புல அமிதாப்போட இவங்க நடிச்சிருக்கறதை நீங்க பாத்துருக்கலாம். 'அழகி' படத்துல நந்திதா தாஸுக்குப் பதிலா வேற யாராச்சும் நடிக்கலாம்னா, இவங்க மட்டும் தான் பொருந்துவாங்கங்கிறது என்னோட தாழ்மையான எண்ணம். இவங்களைப் பத்தி சொல்றதானா என்னோட "சைல்ட் ஹூட் க்ரஷ்"னு சொல்லலாம். சில முகங்களைப் பாத்தா கறுப்பா களையா இருக்காங்கன்னு சொல்லுவாங்க இல்லை...அப்பேர்ப்பட்ட ஒரு களையான அழகான முகம் ஸ்மிதா ஆண்ட்டியோடது. ஐயயோ! கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலருன்னு சொல்லிட்டனா? பரவால்ல...இருந்துட்டு போவுது. சொல்லாம விட்டுப் போனது ஒன்னே ஒன்னு இருக்கு இன்னும்...இந்த பதிவு 16.02.2006லேருந்து அதாவது நான் பதிவெழுத ஆரம்பிச்ச ரெண்டாவது மாசத்துலேருந்து ட்ராஃப்டல இருந்த பதிவுங்கிறது தான் அது.
Showing posts with label ஸ்மிதா பாட்டில். Show all posts
Showing posts with label ஸ்மிதா பாட்டில். Show all posts
Wednesday, February 18, 2009
மீ ராத் டாக்கலி
Subscribe to:
Posts (Atom)