Showing posts with label பஸ் பயணங்களில். Show all posts
Showing posts with label பஸ் பயணங்களில். Show all posts

Tuesday, December 05, 2006

பஸ் பயணங்களில் #3

பஸ் பயணங்களில் #2
பஸ் பயணங்களில் #1

ஓட்டுநர், நடத்துனர், பணிமனை இதப் பத்தியெல்லாம் போன பதிவுகள்ல ஏதேதோ உளறிக் கொட்டியாச்சு. இருந்தாலும் பயணிகளைப் பத்தியும், பயண அனுபவங்களைப் பத்தியும் மாட்லாடலன்னா எப்படி? பேருந்துல பயணிகளையும், அவங்க நடவடிக்கைகளையும் கவனிச்சாலே நகைச்சுவை துணுக்குகளுக்கும், கொஞ்சம் வளமான கற்பனை கொண்ட எழுத்தாளர்களா இருந்தா எத்தனையோ சிறுகதைகளுக்கும் கதை களமா அமையக் கூடியது(ஏற்கனவே அமைந்தது) பேருந்து பயணம். மக்களைக் கவனிக்கறதுலயும் அவங்க செய்கைகளை ரசிக்கறதுலயும்(ரசிக்கக் கூடியவற்றிற்கு மட்டும்) ஒரு ஈடுபாடு வந்துடுச்சின்னா ரொம்ப மகிழ்ச்சியான அனுபவங்களாக அமையக் கூடியது இப்பயணங்கள்.

வெளியூர் செல்லும் பேருந்துகளில் இந்த மாதிரி பயணங்களின் போது தான் எங்காவது மோட்டலில் நின்று விட்டு பஸ் கெளம்புவதற்கு முன்னால், வெளியில் நின்று தம்மடித்துக் கொண்டிருக்கும் கணவர் வராததால், 'கொஞ்சம் நிறுத்துங்க இன்னும் அவர் வரலை' என்று யாராவது ஒரு பெண் பரிதாபமாகக் கெஞ்சுவதும், 'பத்து நிமிசத்துல வந்துடுங்கன்னு அப்பவே சொன்னேனேமா' என ஓட்டுநர் அலுத்துக் கொள்வதும் சம்பந்தப்பட்ட 'தம்-புரானின்' குடும்பத்தவர்களின் இதயத் துடிப்பை அதிகப் படுத்துவதற்காக ''ட்ர்ன்ன்ன் ட்ர்ன்ன்ன்ன்' என்று வண்டியை சவுண்டு அதிகமாகக் கொடுக்கச் செய்வதும், தம் அடித்துக் கொண்டிருந்தவர் எங்கிருந்தோ அவசரமாக அவசரமாக ஓடி வந்து ஏறுவதும் 'இப்ப அந்த சிகரெட் குடிக்கலைன்னா தான் என்னா?'னு வூட்டுக்கார அம்மாவிடம் பாட்டு வாங்கி அசடு வழிவதையும் காண முடியும். 'திண்டிவனத்துலேருந்து மூனு மணி நேரத்துல வண்டி தாம்பரத்துக்குப் போய்டும்ங்க' என வாக்கு கொடுத்துவிட்டு சீட் நிரம்பவில்லை என்பதால் புளியமரத்திற்குப் புளியமரம் தனியார் பேருந்து நின்று நின்று செல்வதையும், மூனு மணி நேரத்தில் செங்கல்பட்டைக் கூடத் தாண்டாத பேருந்தின் ஓட்டுநரையும், நடத்துனரையும் ஏகவசனத்தில் கரித்துக் கொட்டும் பயணிகளையும் காணலாம். ப்ராட்வே பேருந்து நிலையத்தில் ஒவ்வொரு வெளியூர் பேருந்தாக ஏறி இஞ்சி மரப்பாவும், டைம்பாஸ் கடலையும், பெப்சி ஐசும் விற்கும் சிறுவர்களால் ஒரு நாளைக்கு எவ்வளவு ஊதியம் ஈட்டிவிட முடியும் எனப் பலமுறை யோசித்ததுண்டு. இரயில் கடப்பதற்காகப் பேருந்து நிற்கும் அந்த சில மணித் துளிகளில் 'யக்கா பிஞ்சு நுங்குக்கா...வாங்கிக்கக்கா' என எட்டடி உயரத்தில் இருக்கும் எட்டாத ஜன்னல் வழியே நுங்கைப் பேரம் பேசி விற்க முயலும் சிறுமியின் ஏழ்மையைக் கண்டும் காணாமல் போகச் செய்யும் இயந்திர வாழ்க்கையினையே நாம் வாழ்கிறோம் என உணர்த்துவதும் பேருந்து பயணம்.

சென்னை நகரத்துப் பேருந்துகளில் 'ஒரு நந்தனம் ஹவுசிங் போர்ட் குட்ணா' என நடத்துனரைக் கேட்கும் லுங்கி கட்டிய கறுத்த இளைஞனின் சமூக நிலையை எடை போட பொருளாதார மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரம் பேருந்தின் 'இறங்கும் வழி' வாயிலாக ஏறும் கல்லூரி மாணவி 'ஒரு டூ ஃபிப்டி பாஸ் பண்ணுங்க' என அருகில் நிற்பவரிடம் பத்து ரூபாயைத் தருவதையும், ஸ்டேஜ் மாறுவதை உணர்ந்த நடத்துனர் 'எங்கம்மா போவனும்?' எனக் கேட்கும் கேள்விக்கு 'ஏத்ராஜ்' என நுனிநாக்கில் பதிலளிப்பதையும், கேட்கும் வழிப்போக்கனான நமக்கு, நம் வீட்டருகில் மாடு கட்டி பால் கறக்கும் எத்துராஜும், பகலிலேயே சரக்கடித்து விட்டு மல்லாந்து கிடக்கும் ரிக்ஷாகார எத்திராஜும் தங்கள் பெயர்களையும் இவ்வளவு அழகாக உச்சரிக்க முடியும் என்பதை அறிந்தால் மகிழ்வார்கள் என்றே தோன்றும். கையில் கொண்டு வந்திருக்கும் ஒத்தை நோட்டையும் பெண்கள் பகுதி சன்னலின் வழியாகப் பேருந்தினுள் வீசிவிட்டு வேகமாக ஓடும் பேருந்தில் படுலாவகமாக வித்தவுட்டும் ஃபுட்போர்டும் அடிக்கும் இளைஞன், அவன் பெற்றோரின் எதிர்பார்ப்புகளை எவ்வாறு நிரைவேற்றுவானோ எனத் தோன்றியதுண்டு. 'படிகட்டுப் பயணம் பரலோகப் பயணம்' என அறிந்தும் படியில் நிற்பவனை 'தம்பி மேலே வா மேலே வா' என அன்பாக அழைத்துப் பலனில்லை என உணரும் நடத்துனர் "டேய் சொல்றேன்ல மேல வாடா! காலங்காத்தால நம்ம தாலி அறுக்குறதுக்குன்னே வர்றானுங்க"என்று கடுமையாகப் பேசும் போது அப்பணியும் எளிமையானதல்ல என்றும் விளங்கும். மாறுவேடத்தில் பெண் போலீஸ் இருக்கக் கூடும் என்ற பயத்தினால், மாநகரப் பேருந்துகளில் உண்டான ஒழுங்கு தானாகவே உண்டாகியிருக்கும் பட்சத்தில் 'ஈவ் டீசிங்' இந்நேரம் இல்லாமல் போயிருக்கும் என்பதும் திண்ணம்.

இதெல்லாம் ஒருபுறம் என்றால் பேருந்தில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கழித்த நினைவுகளை மறக்கவும் முடியுமோ? ராயப்பேட்டையிலிருந்த பள்ளிக்கூடத்திலிருந்து திருவல்லிக்கேணியில் இருந்த வீட்டுக்குச் செல்ல தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் முயற்சியாக 'இராதாகிருஷ்ணன் சாலை எல்லோ பேஜஸ்' நிறுத்தத்தில் நண்பன் மன்னாரிடம்(பட்டப்பெயர் தாங்க) 45B பஸ்சுக்குக் காத்து நிற்கும் நேரத்தில் நீதிக் கட்சியும், தி.க.வும் தோன்றிய விதத்தினைப் பற்றியும், அவனைக் கவர்ந்த ஹிட்லர் எனும் 'பெருந்தலைவனை பற்றியும் கேட்ட கதைகள் இன்னும் பசுமையான நினைவுகளாக நிறைந்துள்ளன. தவறுதலாக ஒரு முறை, காலியாக இருந்த 'மகளிரும் சிறுவரும்' பேருந்தில் (நான் சிறுவனாக இல்லாத போது) ஏறிவிட்டு சட்டென்று உணர்ந்து கீழிறங்கியதையும், அருகில் இருக்கும் சில்ரன்ஸ் கார்டன் பெண்கள் பள்ளியைப் பற்றி 'ஈரமான ரோஜாவே மோகினி படிச்ச ஸ்கூல்டா இது' என நண்பனிடம் பகிர்ந்து கொண்ட வெட்டிப் பேச்சுகளையும் இன்று நினைத்தாலும் 'அந்த நாளும் வந்திடாதோ?' என ஏக்கம் பிறக்கும். வீட்டிலிருந்து கடற்கரை சாலையில் இருந்த எழிலகம் நிறுத்தம் வரை 'மினி டிராஃப்டரும்', 'இஞ்சினியரிங் டிராயிங் சார்ட்களும்' சுமந்துச் சென்று அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பேருந்து ஏறிய அந்த நான்கு ஆண்டு காலமும், வானொலி நிலையப் பேருந்து நிறுத்தத்தில் வழக்கமாக ஏறும் வேற்றுத் துறை மாணவியின் அழகினையும், அடக்கத்தினையும், சிரிப்பினையும், சின்ன அசைவுகளையும் ரசித்த நண்பன் சுரேஷினை வெறுப்பேற்ற 'டேய் மாம்ஸு, அந்த பொண்ணு இ.சி.ஈ.டா...பெரிய எடம். நாமெல்லாம் கட் ஆஃப்லியே அடிபட்டுப் போயிருவோம்டா. ஃபஸ்ஸி லாஜிக்கும்(Fuzzy Logic), இண்டக்ரேட்டடு சர்க்யுட்ஸும்(Integrated Circuits) எங்கே, நம்மளோட பீமும்(Beam), காலமும்(Column) எங்கே?' எனப் பேசியதும் 'டேய்! இ.சி.ஈ. என்னடா இ.சி.ஈ? எனக்கு கூட தான் ஐ.ஐ.டி. மெட்ராஸ்ல சீட் கெடச்சது...ஆனா நான் சிவில் படிக்கலை?' என அவன் பதிலிறுத்ததும் அதைக் கேட்டு வியப்பில் 'பின்னே ஏண்டா நீ ஐ.ஐ.டி.யில் சேரலை?' எனக் கேட்டதற்கு, 'ஹை கோர்ட்லேருந்து வர எல்.எஸ்.எஸ் பஸ் எதுவும் ஐ.ஐ.டி ஸ்டாப்புல நிக்காதுல்ல...அதனால தான்' என அவன் அந்த நிமிஷத்தில் செய்த 'நார்த் மெட்ராஸ் நெக்கலைக்' கேட்டுக் குலுங்கிச் சிரித்ததும் நினைவில் நிற்கின்றன.

இறுதியாக, பேருந்து பயணங்களைப் பற்றி எழுதப் போய் என்னென்னமோ பழைய நினைவலைகளுள் மூழ்கி, மைல் நீளப் பதிவுகள் மூன்று போட்டாயிற்று. இது வரை படித்தவர்கள் பலரும், தங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு இப்பதிவுகளுக்குச் சிறப்பு சேர்த்திருக்கிறீர்கள். பசுமை நிறைந்த நினைவுகளைத் துளிர்க்கச் செய்த தங்கள் அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்கிறேன்.

Sunday, December 03, 2006

பஸ் பயணங்களில் #2

பஸ் பயணங்களில் #1 இங்கேயிருக்கு...படிச்சிப் பாருங்க

The Whole is Greater than the sum of its Partsனு சொல்லுவாங்க. "Whole" ஆகிய பேருந்து பயணத்தினை முழுமையாக்கும் "Parts"கள் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர், பயணிகள், செக்கிங் இன்ஸ்பெக்டர் இன்னும் நம் கண்ணுக்குத் தெரியாத எண்ணற்றவர்கள். ஆனால் சில சமயம் இந்த பார்ட்ஸ்களைத் தனித் தனியே கவனிப்பதும் சுவாரசியமாகவே இருக்கும். உதாரணத்துக்கு இந்த நடத்துனர்களை எடுத்துக்கங்களேன்...தென்னாற்காடு மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் காவி வேட்டி கட்டிய நடத்துனர்கள் 'யார் சீட்டு...கேட்டு வாங்கிக்க' என்று கேட்பதிலாகட்டும், கோயம்புத்தூரில் சேரன்(முன்னாள்) பேருந்துகளில் ரைட்டு சொல்வதற்குப் பதிலாகத் தந்தி அடிப்பதிலாகட்டும், சென்னையில் நடத்துனர்கள் 'ரேய் ரேய்'வும் 'எறங்கி ஏறு'வும் 'அடுத்த ஸ்டேஜ்ல செக்கிங் வராங்க"ன்னுசொல்வதிலாகட்டும், கூட்டம் நிறைந்த வேளைகளில் பெங்களூர் கேஎஸ்ஆர்டிசி நடத்துனர்கள் கீழே இறங்கி 'பேகே இள்றி' என்று துரிதப் படுத்துவதிலாகட்டும், புது தில்லியில் டிடிசி(DTC) நடத்துனர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே ஹரியான்வி(கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக் பேசற மொழி) மொழியில் 'டிகிட் போள் பாய்' எனக் கூறுவதிலாகட்டும், நடத்துனர்களின் 'மேனரிசங்களைக்' கவனிப்பதும் ஒரு தனி ஜாலி தான். டிக்கட் கிழிப்பதிலும் நகரத்திற்கு நகரம், நடத்துனர்களுக்குள் பல விதமான வேறுபாடுகள். முன்னாள் திருவள்ளுவர்(இந்நாள் அரசு விரைவுப் பேருந்து, தமிழ்நாடு) பேருந்துகளில் நெயில்கட்டர் போன்ற ஒரு கருவி கொண்டு டிக்கட்டில் ஸ்டேஜை பஞ்ச் பண்ணி கொடுப்பார்கள். நம்ம சென்னை பேருந்து நடத்துனர்களின் டிக்கட் கிழிக்கும் வேகம் சும்மா சொல்லக் கூடாது...செம ஃபாஸ்ட். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சர்சர்ருன்னு கையாலேயே டிக்கட் கிழிச்சி குடுத்துட்டு "யாரு டிக்கட் யாரு டிக்கட்"னு கூட்டமான வண்டிக்குள்ளேயும் போய்க்கிட்டும் வந்துக்கிட்டும் இருப்பாங்க. இதுவே தில்லியை எடுத்துக்கிட்டீங்கன்னா அரசு பேருந்துகளில் நடத்துனர்கள் வண்டி கெளம்பும் போது மட்டும் தான் சீட்டுக்கு வந்து டிக்கெட் குடுப்பாங்க, அதுக்கப்புறம் உக்காந்த எடத்தை விட்டு எந்திரிச்சு வர மாட்டாங்க. மும்பை பெஸ்ட்(BEST) பேருந்துகளின் நடத்துனர்களைப் பாத்தீங்கன்னா சீருடையிலேயே ஒரு ஒழுங்கு தெரியும். சட்டையிலே பெயர் பலகை(Name Plate) குத்தியிருக்கும், சட்டை பட்டன்கள் கூட போலிஸ் சீருடையில் இருக்கற மாதிரி உலோக பட்டன்கள் இருக்கும், அதோட டிக்கட்களை அடுக்கி வச்சிக்க உலோகத்திலான ஒரு பலகை வச்சிருப்பாங்க.


நகரத்துக்கு நகரம் நடத்துனர்களுக்குள்ளே வேறுபாடுகள் இருந்தாலும், ஒரே நகரத்துக்குள்ளேயும் ஒவ்வொரு நடத்துனருக்குன்னும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். சில பேரு பல நாள் ஆனாலும் நம்ம நினைவுலேயே நிப்பாங்க. அது மாதிரி சென்னையில் திருவல்லிக்கேணியிலிருந்து தி.நகர் செல்லும் 13 எண் வழித்தடத்தில் வரும்(இந்நேரம் ஓய்வு பெற்றிருப்பாரு) ஒரு நடத்துனர், 'I knew him well and every truant knew' மாதிரியான மனிதர். ஏன்னா அந்த ரூட்டுல போறவங்க எல்லாருக்கும் அவரைப் பத்தி தெரிஞ்சிருக்கும். என்னோட பதிவுக்கு அப்பப்ப வரும் கல்லூரி நண்பன் ஜனாவுடன் கல்லூரி முடிந்து வீடு வரும் போதும் அவரைப் பத்திப் பேசிப்போம். ஏனோ அப்ப அவரோட பேரைக் கேட்டுக்கணும்னு தோணலை. எதாச்சும் செஞ்சிக்கிட்டே இருப்பார்...அவர் அந்த பேருந்துல இருக்கறது பயணிகள் எல்லாருக்கும் தெரிஞ்சிட்டே இருக்கும். நடத்துனராக இருப்பதைப் பெருமையாகக் கருதுபவர் என அவரைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றும். கம்மி சம்பளம், சில சமயம் பண்டிகை நாட்களில் கூட வேலை என்றிருந்தாலும் மகிழ்ச்சியாகத் தன் பணியைச் செய்து கொண்டு இருப்பவர்களைப் பார்த்தால் அதிசயமாகவும், சில சமயம் பொறாமையாகக் கூட இருக்கும். பஸ் பாஸ் எடுத்து நீட்டும் பிள்ளைகளிடம் "நீயே பஞ்ச் பண்ணிக்க பாப்பா" எனச் சிரித்து விட்டு சிநேகமாகக் கண்ணடிப்பார். ஸ்கூல் குழந்தைகள் எறங்கும் போது ஓட்டுநர் அவசரப் படுத்தி வண்டியை எடுக்க முயற்சிக்கும் போது "யோவ் இருய்யா...புள்ளைங்கள்லாம் எறங்குதில்ல? என்ன அவசரம்" என்று ஓட்டுநரைக் கடிந்து கொள்வார். பாரதி சாலை(Pycrofts Road) தணிகைவேலன் இனிப்பகம் வந்ததும் "வண்டியைக் கொஞ்சம் ஸ்லோ டவுன் பண்ணிக்கய்யா, மதியான சாப்பாட்டுக்கு பொகடா வாங்கிட்டு வந்துர்றேன்"அப்படீம்பாரு. கேக்கறதுக்கே காமெடியா இருக்கும். அதோட எப்பவும் "ரைட்டு ரைட்டு" என்றும் "ஹோல்ட் ஆன்" என்றும் திருத்தமாகத் தான் சொல்வார். டபுள் விசில், ஷார்ட் விசில் என்று உதட்டு நுனியிலிருந்து விசில் அடிக்கும் இளம் வயது நடத்துனர்களின் மத்தியில் நம்மாளு தனியாத் தெரிவாரு. பேருந்து நிறுத்தத்தை அடைந்ததும் "பெரிய தெரு புள்ளார் கோயில் எல்லாம் எறங்கு" அப்படின்னு சத்தமா சொல்லுவார். என்ன அதுல விசேஷம்னா அவரு சொல்றது Pullaar இல்லை Bullaar. அதைக் கேட்டதும் உங்களையும் அறியாமல் உங்கள் உதட்டில் ஒரு புன்னகை வந்து தொற்றிக் கொள்ளும். வழுக்கைத் தலையும், பெரிய உதடுகளும், சோடாபுட்டிக் கண்ணாடியும் போட்ட ஒரு வயதான நடத்துனர் தான் என்றாலும் என்னைப் பொறுத்தவரையில் அடுத்தவர் வாழ்வில் கடுகளவேனும் மகிழ்ச்சியை விதைக்கும் அத்தகையவர்கள் 'வாழும் முன்னாபாய்கள்' தான்.


நடத்துனர்களைப் போலவே ஓட்டுநர்களுக்குன்னு சில பழக்கங்கள் இருப்பதை கவனித்திருக்கிறேன். பயணிகள் ஏறி இறங்கும் வழியாகச் சுலபமாக ஏற முடிந்தாலும் சில ஓட்டுநர்கள் ஓட்டுநர் சீட் அருகில் இருக்கும் சிறிய கதவு வழியாகத் தான் கஷ்டப் பட்டு ஏறுவார்கள். கியர் பாக்ஸ் மேல் யாராவது உக்காந்தா ஓட்டுநர்களுக்குச் செம கோபம் வரும். ஒரு முறை ஒரு பயணி 'நிக்கிறதுக்குக் கஷ்டமா இருக்குன்னு தானே உக்காருறோம், இதுக்குப் போய் கோவப் படறீங்களே" எனக் கேக்க "எங்களுக்கு சோறு போடற தெய்வம்யா அது, அது மேல உக்காருறேன்னு சொல்றியே" என வெடுக்கென்று பதிலளித்தார். அதே போல பேருந்தில் தூங்குபவர்களைக் கண்டால் ஓட்டுநர்களுக்கு ஆகவே ஆகாது. கிண்டியிலிருந்து அண்ணா சதுக்கம் செல்லும் 45B வழித்தடத்தில் நான் ஸ்கூல் படிக்கும் போது நடந்தது இன்னும் ஞாபகமிருக்கிறது. கூட்டமான அந்த பேருந்தில் டிரைவருக்கு அருகாமையில் ஒருவர் நின்று கொண்டே தூங்கிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த டிரைவருக்கு வந்ததே கோபம் "என்னா சார்? நின்னுக்கிட்டே சாமியாடுறீங்களா? நான் சாமியாடுனா எல்லாரும் சாமியாட வேண்டியது தான்" என்று கூறியதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் எல்லாம் சிரித்து விட்டார்கள். பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் உயிரின் பொறுப்பு ஒரு ஓட்டுநரிடத்தில் இருப்பதால், பெரும்பாலான ஓட்டுநர்கள் மத்தியான சாப்பாடு கூட சரியா சாப்புட மாட்டாங்க...சாப்பிட்டா தூக்கம் வந்துடும்னு. அதோட உக்காந்தே வேலை பார்ப்பதனால் பைல்ஸ் நோய் ஓட்டுநர் வேலை பார்ப்பவர்களை மிக எளிதாகத் தாக்குகிறது என்று எப்போதோ படித்திருக்கிறேன். ஓட்டுநர்களை வித்தியாசப் படுத்திக் காட்டும் ஸ்டைல் விஷயம்னு பாத்தா அது கியர் போடுவதும், ஸ்டியரிங் வீலைப் பிடிப்பதிலும் தான். மற்றபடி ரோட்டைப் பார்த்து கவனமாக ஓட்டுவதில் ஓட்டுநர்களின் கவனம் இருக்கும் என்பதால் அதிகமாகப் பேசமாட்டார்கள். அதனால நடத்துனர்களைப் பத்தி எழுதுன அளவுக்கு ஓட்டுநர்களைப் பத்தி எழுதுறதுக்கு விஷயம் கெடைக்கறது கஷ்டம் தான்.


சென்னையின் பேருந்துகளில் பேருந்து வழித்தட எண்களைத் தவிர்த்து பேருந்துகளின் பக்கங்களிலும் பின்புறத்திலும் ADH505, TAG972, PRA912 போன்ற எண்கள் எழுதப்பட்டிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அந்த குறிப்பிட்ட பேருந்து எந்த டெப்போவினைச் சார்ந்தது(ராத்திரிக்கும் பேருந்து படுத்துக்கப் போற எடம் :) என்று தெரிந்து கொள்ளத் தான் அந்த குறியீடு. உதாரணமாக AD என்பது அடையாறு பணிமனையையும், TA என்பது தாம்பரம் பணிமனையையும், PR என்பது பெரம்பூர் பணிமனையையும் குறிக்கும் குறியீடு. பணிமனையைக் குறிக்கும் அந்த இரண்டு எழுத்துகளுக்குப் பின் வரும் G,H என்னும் எழுத்துகள் போக்குவரத்து கழகத்தில் புதிதாக பேருந்துகள் வாங்கும் போது அளிக்கப்படும் ஒரு சிரீஸ்(series). அதன் பின்னர் வரும் எண்கள் ஒவ்வொரு பேருந்துக்கும் வித்தியாசப்படும். நீங்கள் உங்கள் ரூட்டில் வரும் பேருந்துகளை உன்னிப்பாகக் கவனித்தால் இந்த எண்களும் நினைவில் நின்றுவிடும். பலமுறை பேருந்துகளின் பக்கவாட்டில் இந்த எண்களை அடையாளம் கண்டு கொண்டே பேருந்துசை ஓடிச் சென்று பிடித்த அனுபவங்களும் உண்டு. ஆனால் சில சமயம் ஒரே பணிமனையைச் சேர்ந்த பேருந்துகளை வேறு வழித்தடத்தில் மாத்தி விட்டுடுவாங்க...அப்போ மட்டும் உங்களுக்கு மனப்பாடம் ஆனது வேஸ்ட் ஆயிடும். என்னங்க ரொம்ப போர் அடிக்குதா? இந்த மாதிரி 'பொழுது போகாத பொம்மு' வேலை நெறைய பண்ணிருக்கோம்ல? இத மாதிரி பல பொ.போ.பொ வேலைகள்ல நம்ம கிட்ட அதிகமா மாட்டிக்கிட்டு முழிச்சவனும் ஜனா தான். அதெல்லாமும் வரலாற்றுல எடம் பெற்றுத் தானே ஆகனும்? அதான் இன்னிக்கு வச்சி ப்ளேடு போட்டாச்சு :)


"எல்லாம் சரி தான்...ஆனா பயணிகள் இல்லாத பேருந்து என்னய்யா பேருந்து. அத பத்தி நீ ஒன்னுமே எழுதலியே"னு கேள்வி கேக்கறீங்க...எனக்கும் அது புரியாம இல்லை. ஆனா பாருங்க திவ்யாவுக்கு ஆன்லைன்ல வந்து அட்வைஸ் பண்ண 'பாடிகாட் வெறகுவெட்டீஸ்வரர்' நேத்து நம்ம கனவுல வந்தாருங்க. எல்லா ரம்பத்தையும் ஒரே பதிவுல போடாதே...1, 2, 3ன்னு நம்பர் போட்டு போடுன்னு அருள்வாக்கு சொன்னாருங்க. அதுனால 'பாடிகாட் வெறகுவெட்டீஸ்வரர் துணை'யோட ரெண்டு சிங்கிளை முடிச்ச நம்ம பேருந்து, ஓட்டுநர் கண்டக்டர் டீ சாப்புட்டுட்டு வந்ததும் மூனாவது சிங்கிளை சீக்கிரமாவே ஆரம்பிக்கும்ங்க.

Saturday, December 02, 2006

பஸ் பயணங்களில் #1

இது ஒரு இன்ஸ்பிரேஷன் பதிவு. ஜூலை மாதம் கப்பி எழுதுன 'பஸ் பயணங்களில்' பதிவு படிச்சதுலேருந்து அதை போலவே நானும் ஒரு பதிவு எழுதனும்னு ரொம்ப நாளா நெனச்சி வச்சிருந்தேன். பொருத்தமான வேற தலைப்பு எதுவும் தோணாததால என் பதிவுக்கும் அதே பேரை வச்சிட்டேன். கப்பி பதிவுல நான் போட்ட பின்னூட்டத்தையும் ராயல்டி தராம இங்கே யூஸ் பண்ணிக்கிட்டேன். சின்ன வயசுல எனக்கும் என் தம்பிக்கும் பிடிச்சமான விளையாட்டுன்னு ஒன்னு சொல்லனும்னா அது பஸ் விளையாட்டு தாங்க. அது வெளையாடும் போது தான் ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காம, அடிச்சிக்காம இருப்போம். இல்லன்னா ரெண்டு பேரையும் மேக்கிறதுக்கே எங்க அம்மாவுக்குச் சரியா இருக்கும்.

டீச்சர் விளையாட்டு, டாக்டர் விளையாட்டு இதெல்லாம் கேள்வி பட்டுருப்போம்...அது என்ன பஸ் வெளையாட்டு? ஒன்னும் இல்லீங்க என் தம்பி டிரைவர், நான் கண்டக்டர் ரெண்டு பேரும் வாயாலேயே பஸ்சை ஓட்டிக்கிட்டுப் போவோம். எங்க வீட்டு மாடிக்குப் போற ஒரு படிக்கட்டுல என் தம்பி ஒக்காந்துக்குவான், படிக்கட்டுக்கும் செவுத்துக்கும் நடுவுல இருக்குற ஒரு சின்ன இடுக்குல ஒரு மொத்தமான குச்சியைச் சொருகி வச்சிக்குவான், அது தான் எங்க பஸ்சோட கியரு. நான் கண்டக்டராச்சே? என்னோட தொழிலுக்கான உபகரணங்கள்னு பாத்தா அம்மாவோட பழைய ஹேண்ட்பேக் ஒன்னு... அது தான் நம்ம கண்டக்டர் பை. அதுக்குள்ளே ரெண்டு விசில் கெடக்கும்...10 காசு 20 காசுன்னு சில்லறை கொஞ்சம் இருக்கும்(அப்போ தான் பையைக் குலுக்குன்னா கண்டக்டர் பையைக் குலுக்கற ஒரு எஃபெக்ட் கெடைக்கும்), அதோட பழைய பல்லவன் பஸ் டிக்கட் நெறைய இருக்கும். நாங்க பஸ்ல போகும் போதெல்லாம் கெடைக்கிறது, எங்க வீட்டுக்கு யாராவது வந்தாங்கன்னா அவங்க கிட்ட கேட்டு வாங்கறது இப்படின்னு 40காசு, 50காசு, 90காசு, 1.10ரூ இப்படின்னு பலவிதமான பஸ் டிக்கட் கண்டக்டர் பைல இருக்கும். பஸ் விளையாட்டு வெளையாடும் போது டிக்கட் எல்லாம் அழகா அடுக்கி என் கையில இருக்கும்...விசில் வாயில இருக்கும். நான் விசில் குடுத்ததும் டிரைவர் கியரைப் போட்டு டுர்ர்ர்...டுர்ர்ன்னு பஸ்சை எடுத்துக்கிட்டு கெளம்பிடுவாரு.

நெஜ பஸ்சுல கியர் போடும் போது ஏற்படற ஒரு உராய்வு சத்தம் (எனக்கென்னமோ அதை கேக்கும் போதெல்லாம் அரிசி கீழே கொட்டற மாதிரி இருக்கும்), பிரேக் போடும் போது ஏற்படற சத்தம் இப்படின்னு டிரைவர் வாயாலேயே ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்லாம் வேற தருவாரு. நடுவுல நடுவுல "யோவ் பாத்து போயா"ன்னு சவுண்டு வேற விடுவாரு எங்க கோவக்கார டிரைவரு(ரோட்டுல வண்டி ஓட்டிக்கிட்டு போறவரைக் கண்டிக்கிறாராம்) கண்டக்டர் நானு "டிக்கட் வாங்கிக்கங்க, டிக்கட் வாங்கிக்கங்க"னு குரல் விடுவேன். அது போதாதுன்னு"எங்க சார் டி.நகரா? பத்து ரூவா குடுத்தா எப்படி? சில்லறை இல்லியா?"ன்னு காத்தைப் பாத்து ஒரு அலம்பல் வேற. எங்களுக்குப் பிடிச்ச பஸ் ரூட்னு பாத்தா அது 6V தான். ஏன்னா சென்னையில அப்போ தான் எல்.எஸ்.எஸ் பஸ் விட்ட புதுசு. ஆனா நார்த் மெட்ராஸ்லே இருக்கற எடத்தோட பேரு எதுவும் தெரியாததுனால எங்க 6V பஸ் அமீர் மஹால், பெரிய தெரு, ராயப்பேட்டைன்னு எங்களுக்குத் தெரிஞ்ச எடங்களுக்குள்ளாவே போகும். அப்போ திருவல்லிக்கேணியிலிருந்து சுங்கச்சாவடி வரைக்கும் போயிட்டு இருந்த பஸ் அது. இப்போ அது பெசண்ட் நகர்லேருந்து சுங்கச்சாவடி போற 6Aன்னு நெனக்கிறேன். ஹ்ம்ம்ம்...அதெல்லாம் ஒரு காலம்!!!

படிக்கிறதுக்கு டெல்லிக்குப் போன புதுசுல பிராஜெக்ட் விஷயமா எங்கேயாச்சும் வெளியே போகனும்னா நண்பர்க்ள கிட்ட "பஸ்ல போலாம்டா"ன்னு சொல்லுவேன். என் கூட படிச்ச சில பசங்க "நான் என் வாழ்க்கையிலேயே இது வரைக்கும் பஸ்ல ஏறுனதில்லை. பஸ்ஸெல்லாம் நமக்கு ஒத்துவராது. இன்னிக்குக் காரை எங்க அண்ணன் எடுத்துட்டுப் போயிட்டான். வேணா ஆட்டோல போலாம்"பானுங்க. இப்படி அவங்க பேசறதைக் கேட்டுட்டு எனக்கு எப்பவும் மொதல்ல தோணுறது என்னன்னா "பஸ்லயே ஏறாம வாழ்க்கையில நெறைய எழந்திருக்கீங்கடா"ன்னு தான். ஏன்னா அந்த அளவு பஸ் பயணம் மனிதர்களைச் சந்திக்கிறதுக்கும், அவங்களோட பழக்க வழக்கங்களைத் தெரிஞ்சிக்கிறதுக்கும் ஒரு வழி ஏற்படுத்திக் குடுக்குது. பஸ்களில் காணக் கிடைக்கும் சில உரையாடல்களும், நகைச்சுவை சம்பவங்களும் எங்கும் காணக் கிடைக்காதவை. அதே சமயம் இன்றளவும் சில மனதைக் கஷ்டப் படுத்தும் சம்பவங்களும், பேருந்து பயணங்களில் நடக்கத் தான் செய்கின்றன என்றாலும் வாழ்வின் சின்ன சின்ன சந்தோஷங்களை நினைவுகளாக்கிப் பொக்கிஷமாகப் பாதுகாக்கறவங்களா நீங்க இருந்தீங்கன்னா பஸ் பயணம் என்பது நிரம்பி வழியும் கூட்டத்தையும், எல்லையில்லா காத்திருப்பையும் கூட சிறியதாய் தோன்றச் செய்யும் ஒரு சுகானுபவம் தான்.

என் வாழ்நாளின் பெரும்பகுதியைச் சென்னையிலும், நான்கில் ஒரு பகுதியை வெளிமாநிலங்களிலும் கழித்தவன் நான். அதிகமாக கிராமங்களையும் சிறு நகரங்களையும் கண்டதில்லை. இருந்தாலும் தென்னாற்காடு மாவட்டத்தில் எங்க ஆயா(பாட்டி) வசித்த கிராமத்தை நான் பார்த்தவரை, பஸ் என்பது கிராமத்து வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்ட ஒன்று என அறிந்து கொண்டேன். வள்ளிகந்தன் வந்துட்டானா? மீனாம்பிகா போயிட்டானா? என்று பிரைவேட் பஸ்களின் பெயரைச் சொல்லித் தங்கள் வீட்டுப் பிள்ளை போல விசாரிப்பதிலாகட்டும், 'விழுப்புரத்திலிருந்து பாண்டி நாப்பது கிலோ மீட்டர். ராமன் ரோடுவேஸ்ல போனீன்னா நாப்பது நிமிஷத்துல அடிச்சித் தள்ளிக்கிட்டுப் போயிடுவான்" எனப் பெருமையாகப் பேசுவதிலாகட்டும், "சீக்கிரம் கெளம்பு, பத்தரை மணி பெரியார் போயிடும்" என நம்பிக்கை தெரிவித்துத் தங்கள் வேலைகளை அதற்கேற்றாற் போல அமைத்துக் கொள்வதிலாகட்டும் பஸ் என்பது வெறும் ஒரு போக்குவரத்து சாதனம் என்பதை மீறிய ஒரு எமொஷனல் அட்டாச்மெண்டைக் காணலாம். அரசியல் காரணங்களை மேற்கோள் காட்டி போக்குவரத்துக் கழகங்களுக்கு வைத்திருந்த தலைவர்களின்(மக்களுக்காக உழைத்தவர்கள்) பெயர்களை எடுத்துவிட்டு அத்தகைய சக்தி வாய்ந்த ஒரு சாதனத்துக்கு வெறும் அரசு பேருந்து,மதுரை,திண்டுக்கல் எனப் பெயர் கொடுத்திருப்பதை ஏனோ ஜீரணிக்க முடியவில்லை. தோழர் ஜீவா, நேசமணி போன்றோர்கள் யார் என்றே தெரியாமல் வருங்கால சந்ததியினர் வாழ்ந்து மறைந்து விடக் கூடும். பஸ்களுக்கு அவர்கள் பெயர் இருந்தால், அவர்கள் யார் எனத் தெரிந்து கொள்ளும் ஒரு உந்துதலாவது ஏற்படும். இன்றளவும் என்னைப் பொறுத்தவரை ஆரஞ்சு வண்ண பஸ்கள் எல்லாம் பெரியார் தான், சாய்வு நாற்காலி கொண்ட பஸ்கள் எல்லாம் திருவள்ளுவர் தான்.

எழுதுனதுக்கப்புறம் தான் பாத்தேன்...பதிவு ரொம்ப பெருசாப் போச்சு. அதனால இதோட ரெண்டாம் பகுதியை நாளைக்குப் போடறேன்.