Saturday, February 16, 2008

வாலாட்டி நின்னானாம் சீமைத்துரை...

வந்தானாம் வந்தானாம் ஊமைத்துரை...பதிவின் தொடர்ச்சி.

பாளையங்கோட்டையிலிருந்து பின் தொடர்ந்து வந்து தாக்குதல் மேற்கொண்ட சிறு படையினால் கோட்டையை வீழ்த்த முடியாது என அறிந்த வெள்ளையர்கள் சென்னையிலிருந்தும், திருச்சியிலிருந்தும் கூடுதல் படைகளையும், தளவாடங்களையும் தருவித்தனர். கடுமையான பீரங்கித் தாக்குதலுக்குப் பின் அக்கோட்டை தகர்ந்தது. கன்னிமரா நூலகத்தில் நாங்கள் மிக ஆவலாகத் தேடிய ஜேம்ஸ் வெல்ஷ் எழுதிய 'போர் நினைவுகள்' புத்தகத்திலும் நாங்கள் எதிர்பார்த்த வகையில் கோட்டையின் கட்டுமானத்தைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. கோட்டையின் நீளம், உயரம், அகலம் மற்றும் அமைப்பு ஆகியவற்றைப் பற்றி குறிப்புகள் இருந்த அளவுக்கு கட்டுமானத்தைப் பற்றி எதுவும் இருக்கவில்லை. ஒரு ஆங்கிலேய அதிகாரியினுடைய போர்க் குறிப்புகளில் எதிரியினுடைய கட்டுமானத் நுட்பத்தைப் பற்றிய குறிப்புகளை எதிர்பார்த்தது எங்கள் தவறு தான்.

அதன் பின்னர் போர்ட்லாண்ட் சிமெண்டின் மூலக்கூறுகளைக் குறித்து படித்தோம். அதிலிருந்து எதாவது பிடிபடுமா என்ற எண்ணத்தில். கட்டுமானத்தில் உபயோகப்படுத்தப் படும் எந்தவொரு பொருளுக்கும் தாங்குதிறன்(Strength) இன்றியமையாத மூலக்கூறு(attribute). இத்தாங்கு திறன் இருவகைப்படும் -அவையாவன அழுத்தம் தாங்குதிறன்(Compressive Strength), இழுவை தாங்குதிறன்(Tensile Strength). அழுத்தம் தாங்குதிறன் ஆனது ஒரு பொருளின் மீது அதன் கொள்ளளவைக்(Volume) குறைக்கும் அழுத்தம் கொடுக்கப்படும் போது அதனால் தாங்கக் கூடிய சக்தியின் அளவு ஆகும். இழுவை தாங்கிதிறன் ஆனது ஒரு பொருளின் மீது அதன் நீளத்தை அதிகரிக்கக் கூடிய இழுவை சக்தி கொடுக்கப்படும் போது அதனால் தாங்கக் கூடிய சக்தியின் அளவு ஆகும். சுண்ணாம்பு, சிலிகா மற்றும் பல கேல்சியம் தாதுக்கள் அடங்கிய வெறும் சிமெண்டுக்கு அழுத்தம் தாங்குதிறன் அதிகம், ஆனால் இழுவை தாங்குதிறன் குறைவு. சிமெண்டினை இந்த குறைபாட்டினைக் களையவே மணல், சிமெண்ட் மற்றும் கருங்கல் கலவையான கான்க்ரீட் உபயோகிக்கிறார்கள். இக்கலவை நீரோடு நடத்தும் வேதியியல் மாற்றத்தை Hydration என்கின்றனர். Hydration எனும் மாற்றத்தால் கான்க்ரீட் கல் போன்ற தோற்றத்தைப் பெறுகிறது. சிமெண்டினைக் காட்டிலும் கான்க்ரீட்டின் அழுத்தம் தாங்குதிறன் அதிகமானது. ஆயினும் இழுவை தாங்குதிறன் ஆனது அதே அளவீட்டில்(proportion) பெருகுவதில்லை.

சிமெண்டினை விட தாங்குதிறன் அதிகமாகக் கொண்ட கான்க்ரீட்டினால்(Plain Cement Concrete -P.C.C) கூட அதிகமான இழுவையைத் தாங்க இயலாது. இக்குறைபாட்டினைப் போக்குவதற்காக கான்க்ரீட்டுடன் அதிக இழுவை தாங்குதிறன் கொண்ட எஃகினைப்(steel) பயன்படுத்துகின்றனர். இவ்வகை கான்க்ரீட்டினை(Reinforced Cement Concrete -R.C.C) பயன்படுத்துகின்றனர். பாஞ்சாலங்குறிச்சி கோட்டையினைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கரும்புச் சக்கையின் பயன்பாடு களிமண், சுண்ணாம்பு, பதநீர் கலவையைப் பலப் படுத்துவதற்காகத்(reinforcement) தான் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் RCCயில் பயன்படுத்தப் பெறும் ஸ்டீல் வழங்கும் தாங்குதிறனைக் கரும்புச் சக்கை வழங்குமா என்பது சந்தேகமே. Reinforcement ஆன கரும்புச் சக்கையை விடுத்து வெறும் களிமண், பதநீர் கலவையானது போர்ட்லாண்ட் சிமெண்டினைக் காட்டிலும் அதிக அழுத்தத் தாங்குதிறன் கொண்டாலும் இழுவை தாங்குதிறன் இல்லாமல் தற்கால கட்டுமானப் பணிகளுக்கு நம் "பழங்கால சிமெண்டினைப்" பயன்படுத்துவது சிரமமே என்று சிறுவர்கள் ஆகிய நாங்கள் பரிசோதனை சாலைக்கு செல்லாமல் நாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்தோம். அதன் பிறகு நான் 'C' படிப்பதிலும் 'CAT'க்குத் தயார் செய்வதிலும், நண்பன் ஃப்ரான்சிஸ் GREக்குத் தயார் செய்வதிலும் கவனம் செலுத்தத் துவங்கி விட்டோம்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு 2008இல் அப்போது நாங்கள் அவ்வளவு கஷ்டப் பட்டு தேடிய "போர் நினைவுகள்" புத்தகம் கூகிளில் மின்நூல் வடிவில் கண்டேன். அப்புத்தகத்தை நீங்களும் தரவிறக்கம் செய்யலாம், படிக்கலாம். கல்லூரியில் படிக்கும் போது சிமெண்டிற்காக மட்டும் ஆராய்ச்சி செய்த அப்புத்தகத்தை தற்போது மீண்டும் "ஊமைத்துரை" எனும் தலைவனுக்காகப் படித்தேன். ஏன் எனில் ஊமைத்துரை பெரும்பங்கு வகித்து வெள்ளையர்களை எதிர்த்த இரண்டாம் பாளையக்காரர்கள் போர்(Second Poligar War), ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தமிழ் மண்ணில் விளைந்த முக்கியமான ஒரு போராகும். 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகத்திற்கு முன்னோடியாகவும் விளங்கியது இப்போர். அதுவரை கும்பினியர் கண்டிராத அளவு அவர்களுடைய தரப்பில் பெரும் உயிர்ச் சேதத்தையும் விளைவித்த ஒரு போருமாகும். அப்போரில் ஊமைத்துரையின் பங்கினைக் குறித்து தேடிக் கொண்டிருந்த போது, வெல்சின் "போர் நினைவுகள்(Military Reminiscences)" மின்நூலையும், தமிழ் அரங்கத்தில் வேல்ராஜன் அவர்கள் எழுதிய "தென்னிந்தியாவில் துவங்கிய முதல் சுதந்திரப் போரின் தமிழகக் களம்" என்ற பதிவையும் படித்தேன்.



"ஆங்கிலேயர்களால் தரைமட்டமாக்கப்பட்டு, உழுது, எருக்கு விதைக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை ஆறே நாட்களில் அதிசயம் போல் எழுந்து நின்றது. தலித் மக்கள், மீனவர்கள் என்று எல்லாப் பிரிவு உழைக்கும் மக்களையும் திரட்டி ஊமைத்துரையும், சிவத்தையாவும் மக்களோடு மக்களாய் மண் சுமந்து இரவும் பகலும் அந்தக் கோட்டையைக் கட்டினார்கள். வெள்ளையனுக்கு எதிராக மக்களைத் திரட்டும் கலையில் தம்பிகள் அண்ணனை விஞ்சினார்கள். சிவத்தையா பாஞ்சாலங்குறிச்சியின் அரசனாக அறிவிக்கப்பட்டார்" என எழுதுகிறார் வேல்ராஜன்.

ஆறு நாட்களில் எழுந்து நின்ற கோட்டையையும் அதை பாதுகாத்துக் கொண்டிருந்த பாளையக்காரர்களையும் கண்டு மலைத்த ஆங்கிலேயப் படைகள், போரிட்டு மடிவது மூடத்தனம் என எண்ணி பாளையங்கோட்டைக்கு திரும்பச் சென்றனர் என எழுதுகிறார் வெல்சு.


பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பி வரும் அவசரத்தில், சிறை இருந்த வழியிலிருந்து ஒரு மைல் தூரத்தில் விருந்தில் கலந்துக் கொண்டிருந்த ஆங்கிலேயரைக் கவனிக்காமல் வந்துவிட்டனர் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள். சிறையிலிருந்து தப்பிய அவர்கள் மட்டும் ஆங்கிலேய உயரதிகாரி வீட்டில் விருந்தில் ஆயுதங்கள் ஏதுமின்றி கலந்து கொண்டிருந்த படையினர் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் நாங்கள் அனைவரும் மடிந்திருப்போம் என எழுதுகிறார் கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ். பாஞ்சாலங்குறிச்சி வரலாறும் வேறு விதமாக இருந்திருக்கும்.


"போர் நினைவுகள்" நூலில் அச்சிடப்பட்டிருக்கும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் படம்.


1977 ஆம் ஆண்டு தமிழக அரசால் கட்டப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை நினைவுச் சின்னம்.


திருச்சியிலிருந்து கர்னல் அக்னியூ தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி வந்து சேர்ந்த பீரங்கிப் படையினர், அக்கோட்டையைக் கண்டதும் இதை அழிக்கவா உங்களுக்குத் தளவாடங்கள் போதவில்லை என்று அங்கு ஏற்கனவே சண்டையிட்டுக் கொண்டிருந்த படையினரைப் பார்த்து ஏளனம் செய்தனராம். அக்கோட்டையை முதலில் கண்டவர்களுக்கு அக்கோட்டை "முட்டைக்கோசுகளைச் சேமித்து வைக்கும் ஒரு கிடங்கு போலத் தோன்றியதாம்".


சென்னையிலிருந்தும் திருச்சியிலிருந்தும் படைகள் வந்து சேருவதற்கு முன்னர், பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் காடல்குடியிலும் தூத்துக்குடியிலும் ஆங்கிலேயப் படைகளைத் தாக்கி வெற்றி பெற்றனர். தூத்துக்குடி கோட்டையில் இருந்த ஆங்கிலேய அதிகாரி பேக்கார்ட் என்பாரைப் போர்க் கைதியாகத் தூக்கி வந்துவிட்டனர் வீரர்கள். அவர்களைத் தொடர்ந்து கோட்டைக்கு வந்த பேக்கார்ட்டுடைய மனைவி தன் கணவனுக்கு உயிர்ப் பிச்சை கொடுக்குமாறு வேண்டினார். அதற்கு செவிமடுத்து அவ்வதிகாரியின் உயிருக்கு ஆபத்தில்லாமல் விடுவித்த மனிதாபிமானம் 'கேட்' என்று ஆங்கிலேயரால் அழைக்கப்பட்ட 'கட்டபொம்மன் நாயக்"கிடம் இருந்தது என்று எழுதுகிறார் வெல்சு. ஆனால் 1799ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட கட்டபொம்முவைக் குறித்து 1801 ஆம் ஆண்டில் வெல்சு தன் குறிப்புகளில் ஏன் குறிப்பிட வேண்டும் என்ற ஐயம் எழுகிறது. வேல்ராஜன் அவர்கள் அவ்வாறு உயிர்ப்பிச்சை தந்தவர் ஊமைத்துரை என்றே எழுதுகிறார். அவர் சொல்வது போல் அது ஊமைத்துரையாகத் தான் இருந்திருக்க வேண்டும்.


மற்ற பாளையக்காரர்களோடு நெருக்கமாகப் பழகி அவர்கள் அன்பினைப் பெற்றது போல் அல்லாமல் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கட்டபொம்மனோடு பேனர்மேன் தலைமையிலான ஆங்கிலேயர் கடுமையான முறையில் நடந்து கொண்டது ஏன் என்று தனக்கு தெரியவில்லை எனவும், அதன் காரணமாகவே அவர்கள் தங்களை எதிரிகளாகக் கருதினர் என்றும் தெரிவிக்கிறார் வெல்சு.


பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வீழ்ந்ததற்குப் பின் ஊமைத்துரை வெள்ளையர்களிடமிருந்துத் தப்பிக்கும் போது கடும் காயமடைகிறார். அச்சமயத்தில் அவரருகே இன்னொரு போர்வீரனும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். அவனைக் காண வரும் தன் தாயிடம் "அம்மா நான் பிழைக்க மாட்டேன், என் தலைவரைக் காப்பாற்றுங்கள்" எனக் கூறி உயிர் விடுகிறான். அச்சமயத்தில் எட்டையபுர படையினர் பின் தொடர அத்தாய் ஊமைத்துரையின் மீது வெள்ளைத் துணி போர்த்தி, பின் தொடர்ந்து வந்த படையினரிடம் "என் மகன் அம்மை நோயினால் இறந்து விட்டான்" எனக் கூறுகிறாள். இதைக் கேட்ட வீரர்கள் தலைதெறிக்க ஓடுகின்றனர். இவ்வாறாக ஊமைத்துரையின் உயிரைக் காப்பாற்றுகிறாள் அந்த ஏழைத்தாய். அதன் பின்னர் ஊமைத்துரை கமுதி சென்றடைகிறார். மருது சகோதரர்களின் துணையோடு போரைத் தொடர்கிறார். ஆனாலும் 1801ஆம் ஆண்டின் இறுதியில் வெள்ளையரால் கைது செய்யப்பட்டுத் தன் சகோதரர் துரைசிங்கத்துடன் தூக்கிலிடப் படுகிறார்.

இரண்டாம் பாளையக்காரர் போரில் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட கர்னல் ஜேம்ஸ் வெல்சு "தான் இதுவரை கண்ட மனிதர்களிலேயே மிகவும் மேன்மையும் சிறப்பும் கொண்ட தங்கிய மனிதனாக ஊமைத்துரையைக் காணுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். ஊமைத்துரையின் தலைமையை ஏற்று அவர் சொல்படி நடப்பதற்கு ஒவ்வொரு பாளையக்காரரும் தயாராக இருந்தனர் என்றும், அவருடைய வாக்கை வேதவாக்காக ஏற்றனர் என்றும் எழுதுகின்றார். ஒரு கையில் வைக்கோல் துண்டுகளை ஏந்தி தன் வாயால் அவற்றை ஊதி இது போல வெள்ளையர்களையும் ஊதி அழித்துவிடுவேன் என சைகையாலேயே தெரிவிப்பாராம்.


கடைசியாக, மே 2006இல் கீற்று இதழில் "கதையாடல்களில் கட்டபொம்மன் வரலாறு" எனும் தலைப்பில் பேராசிரியர்.மாணிக்கம் அவர்களுடனான பேட்டியில் அவர் சொல்லியுள்ள கருத்துகள் நினைவில் நிறுத்தத் தக்கன -
"கடந்த கால வரலாற்றைச் சரியாக உணர்ந்து கொண்டால் தான் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பது வரலாற்றுத் தத்துவம். அது ஒருபுறம் இருக்க, கட்டபொம்மன் ஊமைத்துரை, மருது பாண்டியர் போன்றவர்கள் ஆதிக்க சக்தியின் அடக்குமுறையை எதிர்த்த ஒரு பண்பின் கூறு, அல்லது வடிவமாகும். இத்தகைய பண்பு மனித சமுதாயத்திற்கு வேண்டிய ஒன்று. எல்லாக் காலங்களிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள். அடக்கு முறையை ஏவி மக்களை ஒடுக்குவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளதை வரலாறு உணர்த்துகிறது. எல்லாக் காலங்களிலும் ஏதாவது ஒரு இயக்கம் உரிமைக்காகப் போராடிக் கொண்டே இருக்கிறது"

"விடுதலைப் போராட்ட காலத்தில் மக்களிடம் விடுதலை உணர்வை ஏற்படுத்த கட்டபொம்மன் கதைப்பாடல்கள் பாடப்பட்டதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். எனவே தென்னாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களாகிய அழகுமுத்து சேர்வை, புலித்தேவர், கட்டபொம்மன், மருதுபாண்டியர், ஊமைத்துரை, வ.உ.சி., பாரதி போன்றவர்களைச் சாதிக் கூண்டுக்குள் அடைத்துவிடாமல், ஆதிக்கச் சக்திகளின் கொடுமையை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரப் பண்பின் அடையாளமாக - வடிவமாகக் கொண்டு சென்றால் மனித குலத்திற்கு நன்மை விளையும்."

ஒரு வாரமாக தமிழ்மண நட்சத்திரமாகப் பதிவிட வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கும், பின்னூட்டமிட்டு பெருமளவு ஆதரவு அளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு என் நட்சத்திர வாரத்தை இனிய நினைவுகளுடன் நிறைவு செய்கிறேன். வணக்கம்.

வந்தானாம் வந்தானாம் ஊமைத்துரை...

சில சமயங்களில் வரலாற்றில் புகழ்பெற்ற மனிதர்களையும், வீரர்களையும் பற்றித் தெரிந்து கொள்ளும் எண்ணமில்லாமல் வரலாற்றைத் தோண்டும் தேவை ஏற்படலாம். அப்படி ஒரு தேவை/வாய்ப்பு எனக்கு 1995இல் ஏற்பட்டது. ஒரு ஆர்வத்தில் பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு படிக்கும் போது நண்பன் பிரான்சிஸ் சேவியர் துணையுடன் பாஞ்சாலங்குறிச்சியின் வரலாற்றைப் படிக்க ஆரம்பித்தேன். நான் தெரிந்து கொள்ள நினைத்தது ஒன்று, ஆனால் அதை தாண்டிப் பல புதிய செய்திகளைத் தெரிந்து கொண்டேன். அதைப் பற்றித் தான் இந்தப் பதிவு.

1995ஆம் ஆண்டு அண்ணாப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படிக்கும் போது "பொறியியல் - அறிமுகம்"(Introduction to Engineering) என்று ஒரு தாள் எங்கள் பாடத்தில் இருந்தது. கிட்டத்தட்ட வரலாறு பாடம் போலத் தான் இருக்கும் அது. பொறியியல் உருவாகக் காரணமாக இருந்த வரலாற்று நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிட்டிருப்பார்கள். உதாரணமாக கரிகாலன் கல்லணை கட்டியது, ஜார்ஜ் ஸ்டீவன்சன் நீராவி எஞ்சின் கண்டுபிடித்தது, சார்லஸ் பேப்பேஜ் கணிப்பொறியின் முன்னோடியான ஒரு கருவி கண்டுபிடித்தது, வில்லியம் ஆஸ்பிடின் என்பார் போர்ட்லாண்டு சிமெண்டு கண்டுபிடித்தது இப்படியாகப் பல வரலாற்றுச் செய்திகளும் இந்நிகழ்வுகள் பொறியியலின் வளர்ச்சியில் ஏற்படுத்திய தாக்கங்களைப் பற்றியும் அதில் சொல்லப்பட்டிருக்கும். இதில் கடைசியாகச் சொன்ன போர்ட்லாண்டு சிமெண்டு பற்றிப் படிக்கும் போது, இச்சிமெண்டினைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் கட்டிடங்களையும், அணைகளையும் எவ்வாறு கட்டியிருப்பார்கள் என்ற ஒரு கேள்வி பிறந்தது.

அக்கேள்விக்கு விடை தேடிக் கொண்டிருந்த போது, வீரபாண்டிய கட்டபொம்மனின் மறைவிற்குப் பின்னர் பாளையங்கோட்டை சிறையில் அடைபட்டிருந்த கட்டபொம்முவின் இளைய சகோதரர்களான ஊமைத்துரை, துரைசிங்கம் ஆகியோர் வீரர்களின் துணையோடு சிறையில் இருந்து தப்பி தங்கள் ஊரான பாஞ்சாலங்குறிச்சி வந்தடைந்து ஆறே நாட்களில் ஒரு கோட்டை கட்டியது, அக்கோட்டையின் வலிமை, அதை அழிக்க வெள்ளையர்களின் கும்பினிப் படை பட்டபாடு ஆகியவற்றை தமிழ் துணைப்பாட நூலில் படித்ததும் நினைவுக்கு வந்தது. அக்கோட்டை கட்டப்படுவதற்கு என்ன மாவுப் பொருளை(சிமெண்ட்) உபயோகித்திருப்பார்கள் என ஆராய்ச்சி செய்யலாம் என நானும், நண்பன் பிரான்சிசும் முடிவு செய்தோம். அப்போதெல்லாம் சுலபமாக ஒரு செய்தியைத் தேடுவதற்கு இப்போதிருப்பது போல இணையம் என்று ஒன்று இருக்கவே இல்லை. அதனால் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்த போதிலும், எங்கிருந்து தொடங்க வேண்டும், எந்தப் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என அறிவதில் சில சிக்கல்கள் இருந்தன. முதற்கட்ட நடவடிக்கையாக எட்டாம் வகுப்பு(அது தான் என நினைக்கிறேன்) தமிழ்த் துணைப்பாட நூலைத் தேடினோம். அதிலிருந்து அக்கோட்டையைக் களிமண்ணும், சுண்ணாம்பும், பதநீரும் கலந்து கட்டினர் என்றுத் தெரிந்து கொண்டோம்.

அதன் பின்னர் ஜேம்ஸ் வெல்சு எனும் ஆங்கிலத் தளபதி, இந்தியாவில் தன்னுடைய போர் நினைவுகளை ஒரு தொகுப்பாக எழுதி வைத்திருந்ததையும், அப்போர்க் குறிப்புகள் பல வரலாற்று ஆசிரியர்களுக்குச் சான்றாகப் பயன்படுவதையும் அறிந்து கொண்டோம். அதிலும் நாங்கள் தேடிக் கொண்டிருக்கும் "பழங்கால சிமெண்ட்" பற்றிய குறிப்பு இருக்குமா எனத் தெரியாது. இருந்தபோதிலும் வெல்ஷ் எழுதிய "போர் நினைவுகள்"(Military Reminiscences) என்ற புத்தகத்தைத் தேடினோம். ஆனால் அப்புத்தகம், அண்ணாப் பல்கலைக்கழக நூலகம், சென்னைப் பல்கலைக்கழக நூலகம் என்று எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அது கிடைக்காத பட்சத்தில் வேறு வரலாற்று புத்தகங்களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் தேடிப் படித்தோம். அப்போது ஒரு விஷயம் நன்றாகப் புரிந்தது. பள்ளிக்கூடத்தில் வரலாற்றுப் புத்தகத்தில் ஒன்றிரண்டு பக்கங்களைப் படித்து ஒரு வரலாற்று நிகழ்வினை அறிந்து கொள்வதும், அதனை மனப்பாடம் செய்து மதிப்பெண் பெறுவதும் சுலபமானது. அதே வரலாற்று நிகழ்வினை வெவ்வேறு வரலாற்றுச் சான்றுகளில் இருந்து தேடிக் கண்டுபிடித்து அதிலிருந்து நாமாகவே ஒரு முடிவுக்கு வருவது என்பது மிக மிகக் கடினமானது. சிமெண்டினைப் பற்றி நாங்கள் வரலாற்று நூல்களில் தேடும் போது கட்டபொம்மனைப் பற்றியும், ஊமைத்துரையைப் பற்றியும் கூட நிறைய படித்தோம். ஆனால் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இவர்களைப் பற்றியும் இவர்களுடைய விடுதலைப் போரினைப் பற்றியும் ஒவ்வொரு விதமான கண்ணோட்டம் இருந்தது. வரலாறு என்பது சுலபத்தில் திரிக்கப் படக்கூடிய தன்மை பெற்றது எனவும் அறிந்தோம்.

தேவநேயப் பாவாணர் நூலகத்தில் இருந்து கிடைத்தத் தமிழில் எழுதப்பட்ட வரலாற்றுப் புத்தகங்களில் ஒன்றில் பாளையங்கோட்டையில் இருந்து தப்பி வந்து ஊமைத்துரை கட்டிய அக்கோட்டை களிமண்ணும், பதநீர் பாகும், கரும்புச் சக்கையையும் கலந்து செய்யப்பட்ட "மாயக் கோட்டை" என்று ஒரு வரியில் எழுதியிருந்தது. அதற்கு மேல் கோட்டையைப் பற்றிய நாங்கள் தேடிய விரிவான குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அப்புத்தகங்களின் பெயர்களும், அதை எழுதிய வரலாற்று ஆசிரியர்களின் பெயர்களும் எதுவும் தற்போது நினைவில் இல்லை. (ம.பொ.சி அவர்கள் கட்டபொம்மன் வரலாறு குறித்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார் என்பதையும் சமீபகாலங்களில் தான் தெரிந்து கொண்டேன். அதை அப்போது நான் படித்திருக்கவில்லை). அச்சமயத்தில் தான், சென்னையில் உள்ள அரசு கன்னிமரா பொது நூலகத்தில் பழமையான நூல்கள் இருக்கும் என்றும் அங்குச் சென்று தேடலாம் என்றும் யாரோ சொன்னார்கள். அங்கு ஜேம்ஸ் வெல்சு எழுதிய "போர் நினைவுகள்" போன்ற புத்தகங்களைக் குறிப்பெடுப்பதற்காக பொதுமக்களுக்கும் தருகின்றனர். இதற்கெனவே அங்கு ஒரு தனிப் பகுதி உள்ளது. புத்தகத்தின் பெயரையும், நமது விவரங்களையும் சொல்லிப் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு அங்கேயே குறிப்பெடுத்துக் கொண்டு திருப்பித் தந்துவிட வேண்டும். 1830 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட ஒரு புத்தகத்தை கையில் வாங்கி நான் படித்தது அதுவே முதல்முறை. அதை நினைக்கும் போது மெய்சிலிர்த்தது.

அதை படித்த போது தெரிந்து கொண்டது - கட்டபொம்மனின் மறைவிற்குப் பின்னர், பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர்களால் பெரிதாகத் தொல்லை ஏதும் வரப் போவதில்லை என்ற நினைப்பிலேயே ஆங்கிலேயர் இருந்தனர். பாளை சிறையில் இருந்து தப்பிய ஊமைத்துரை மற்றும் ஏனைய வீரர்களையும் பின் தொடர்ந்து சென்ற கும்பினிப் படை, பாஞ்சாலங்குறிச்சி மண்ணில் ஒரு புல் பூண்டு கூட வளரக் கூடாது என்று எண்ணி ஆமணக்கு விதைகளை விதைத்து அழித்திருந்த கட்டபொம்மனின் கோட்டை ஆறே ஆறு நாட்களில் மாயமாய் எழுந்து நின்றது கண்டு வியந்தனர். ஆயினும் அதைப் பெரிதாக எண்ணாமல் போர்புரியத் தொடங்கியவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கும்பினிப் படையின்(இது 'கம்பெனி படை' என்பதின் திரிபாக இருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன்) ஒவ்வொரு வீரனும் கோட்டையை நெருங்கிய மாத்திரத்திலேயே வேலாலும், வாளாலும் வெட்டித் தூக்கி எறியப் பட்டனர். ஆனால் தங்கள் படைவீரர்களைக் கொன்று குவிக்கும் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் கோட்டையின் எப்பகுதியில் ஒளிந்து தாக்குகிறார்கள் எனக் கண்டுபிடிக்கமுடியவில்லை. பாளையங்கோட்டையிலிருந்து பின் தொடர்ந்து வந்து தாக்குதல் மேற்கொண்ட சிறு படையினால் கோட்டையை வீழ்த்த முடியாது என அறிந்த வெள்ளையர்கள் சென்னையிலிருந்தும், திருச்சியிலிருந்தும் கூடுதல் படைகளையும், தளவாடங்களையும் தருவித்தனர்...

(நாளை நிறைவு பெறும்)

Friday, February 15, 2008

தடிப்பசங்க #8

காட்சி 8 : பாய் ஃப்ரெண்ட்ஸ் தானே கேர்ள்ஸின் பூஸ்ட் அல்லவா?

நமக்கு எத்தனை கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்கங்கிறதை விட நாம எத்தனை பேருக்கு பாய் ஃப்ரெண்டா இருக்கோம்ங்கிறது தான் முக்கியம். பில்லா மொழியில் சொல்லனும்னா சரித்திரத்தின் பக்கங்களை மெல்லமா புரட்டிப் பாத்தா அது நமக்கு கத்துக் கொடுக்கறது ஒன்னே ஒன்னு தான் - நாம ஊருக்குள்ள பெரிய மனுஷனா நடமாடனும்னா எத்தனை பொண்ணுங்களுக்கு வேணாலும் பாய் ஃப்ரெண்டா இருக்கலாம். நல்லாருக்காங்க? மண்டபத்துல யாருகிட்டயும் எழுதி வாங்காம நானே சுயமா சிந்திச்சு எழுதுனது. நிற்க - இது ஒரு டோட்டல் டேமேஜ் பதிவு...சே...சே...அண்ணன் நல்லவரு வல்லவருன்னு இண்ட்ரோ எல்லாம் கொடுத்துட்டு என்னை நானே டேமேஜ் பண்ணிக்குவேனா? தடிப்பசங்களில் இளையவரு நம்ம இளவல் யார் யாருக்கெல்லாம் பாய் ஃப்ரெண்டாப் பணியாற்றியிருக்காருன்னு மனம் தெறந்து சொல்லப் போறேன் - அண்ணன் கல்யாணம் ஆனவன்ங்கிறதுனாலே அடிக்க மாட்டாருங்கிற நம்பிக்கையில்:) மறுபடியும் நிற்க - நீ யாருக்கும் பாய் ஃப்ரெண்டா இருந்ததில்லையான்னா கேக்கறீங்க? தடிப்பசங்க #3 இல் இளையவரு எங்கம்மா கிட்ட சொன்ன அதே பதிலை நானும் சொல்லிக்கிறேன் - "நான் பொண்ணுங்க கிட்டல்லாம் பேச மாட்டேன் :)))))".

சரி...நீங்க ஒரு அரை டவுசர் போட்ட பாயா(boy) இருக்கீங்க. அக்கா, ஆண்ட்டி, ஆயா, க்ளாஸ் டீச்சர் இப்படின்னு யாரு கிட்டயும் பாகுபாடு காட்டாம கலகலப்பா துறுதுறுன்னு பேசறீங்க. என்னாகும்னு நெனக்கிறீங்க? உங்களை விட பெரிய ஏஜ் க்ரூப்புல இருக்கற கேர்ள்ஸ்:) பாயான உங்களைத் தங்களோட ஃபிரெண்டா ஏத்துக்குவாங்க. அந்த ஃப்ரெண்ட்ஷிப்பை எடுத்துச் சொல்ற விதம் கேர்ளுக்குக் கேர்ள் மாறுபடும். ஆனா ஒன்னுங்க...அடக்கமான பையன் அமைதியான பையன்னு மட்டும் ஸ்கூல்ல வீட்டுல சுத்துவட்டாரத்துல பேர் எடுத்திட்டீங்கன்னு வையுங்க...நான் மேலே சொன்ன விஷயங்களை எல்லாம் அனுபவிக்க முடியாது...அதை எல்லாம் அனுபவிச்சங்கச் சொல்றதைக் கேட்டு நான் எழுதறேன் பாருங்க...அந்த மாதிரி படர்க்கையில் எழுத தான் முடியும். டிரேடிஷனலா பாத்தீங்கன்னா கூட கேர்ள்ஸ்க்கு துடுக்காப் பேசற கார்த்திக் மாதிரியான கேரக்டர்(மௌன ராகம் "மிஸ்டர் சந்திரமௌலி") தான் புடிக்கும், மழையில நனைஞ்சி ஊரெல்லாம் சுத்திட்டு வந்தாலும், பேக்கு மாதிரி உக்காந்து பொண்ணு பாத்துட்டு புடிச்சிருக்குன்னு சொல்ற அப்பாவி "மோகன்" கேரக்டர்ல அவ்வளவா விருப்பம் இருக்காது...என்ன நான் சொல்றது சரி தானே? :)))

இளையவர் இருக்காரே அவரோட குழந்தைப் பருவம் முழுவதும், எங்க வீட்டு ஓனர் ஆண்ட்டி அவங்களோட மூனு பொண்ணுங்க கிட்டத் தான் கழிஞ்சது. மூணு நாலு வயசு வரைக்கும் அவரு எங்க வீட்டுல இருந்ததை விட அக்காங்க வீட்டுல இருந்தது தான் அதிகம். தலைவர் காலையிலே குளிச்சி முடிச்சி சாப்பிட்டதும் வந்து அவங்க வீட்டுக்குத் தூக்கிட்டுப் போயிடுவாங்க. அதுக்கப்புறம் நடுவுல லஞ்ச் பிரேக்குக்கு ஒரு தடவை கீழே எறங்கி வருவார். கொஞ்ச நேரம் தூக்கத்துக்கு அப்புறம் மறுபடியும் ஈவினிங் செஷன் அக்காங்க வீட்டுல. நடுவுல பிஸ்கட், நொறுக்குத் தீனி இதெல்லாம் கூட அவங்களே பாத்து குடுத்துடுவாங்க. கொஞ்சம் பெரியவர் ஆகி கால் முளைக்கத் தொடங்கினதும், "அம்மா! நான் அக்கா வீட்டுக்குப் போறேன்"னு தானாவே மாடிப்படி ஏறி மேலே போயிடுவாரு. இப்படியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வளர்ந்து பெரிதான நம்ம கதையின் ஹீரோ பள்ளிக்கூடம் போற நாளும் வந்துச்சு.

தினம் தினம் பள்ளிக்கூடம் போகறதுக்கு அழுது அடம்பிடிச்சி அடிவாங்கிட்டுப் போன அவங்க அண்ணன் மாதிரி இல்லாம சமத்தா நல்லப் புள்ளையா சந்தோஷமாப் போயிட்டு வருவாரு இளைய தடிப்பையர். ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சு கொஞ்ச நெனைவு தெரிய ஆரம்பிச்சதுக்கப்புறம், வீட்டுக்கு வந்து தினமும் ஒரு கதை சொல்லுவாரு. ஆரம்பத்துல கூடப் படிக்கிற பசங்களைப் பத்தி மட்டும் இருக்கும் அவருடைய கதைகள்...அவங்க விட்ட பீலாக்கள், அதுக்குப் பதிலாக இவர் விட்ட எதிர் பீலாக்கள் இப்படின்னு. நாள் ஆக நாள் ஆக இவருடைய கதைகளில் பசங்க வர்றது குறைஞ்சு மிஸ்ஸுங்க வர்றது அதிகம் ஆகிடுச்சு. அப்பத் தான் தெரிஞ்சிச்சி...பாயான தலைவர் பாடம் சொல்லிக் குடுக்கற மிஸ்ஸுங்களுக்கு "ஃபிரெண்ட்" ஆன சமாச்சாரம். இந்த சமயத்துல ஒன்னு நான் சொல்லியே ஆகனும்ங்க...இந்த "அக்கறைக்கு இக்கறை பச்சை"ங்கிற பழமொழி உலகத்துல இருக்கற பெரும்பாலான அம்மாக்களுக்கு மிகச் சரியாப் பொருந்தும்ங்க. உதாரணத்துக்கு எங்க அம்மாவையே எடுத்துக்கங்களேன்...கண்ணுக்கு நெறைவா அழகா எருமை கன்னுக்குட்டி போல ரெண்டு தடிப்பசங்க இருந்தாலும் வீட்டுல ஒரு "பொம்பளப்புள்ள" இல்லியேன்னு ரொம்ப ஏக்கப்படுவாங்க. நாங்க செய்யறது, சொல்லறது எல்லாத்துக்கும் பொண்ணுங்களோட ஒரு கம்பேரிசன் வேற. ஆனா இதுவே பொண்ணுங்க மட்டும் இருக்கற வீட்டுல, அம்மாங்க "சே! ஒரு பையன் இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்"னு ஏங்குவாங்க.

இப்படித் தான் பாருங்க...இளவல் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது அவருக்கு இங்கிலீஷ் பாடம் எடுத்த ஒரு மிஸ் அவருகிட்ட "எனக்கு பசங்கன்னா ரொம்ப இஷ்டம்டா...ஆனா எங்க வீட்டுல ரெண்டும் பொண்ணுங்க"ன்னு சொல்லுவாங்களாம்.

என் தம்பி படிச்ச அதே ஸ்கூல்ல தான் நானும் படிச்சேன். அந்த மிஸ் எனக்கும் பாடம் எடுத்திருக்காங்க. ஆனா என்கிட்ட எல்லாம் அந்த மாதிரி எப்பவும் பேசுனதில்லையேன்னு சில சமயம் தோணும்.
ஆனாலும் "கார்த்திக் வேற - மோகன் வேற"ங்கிற புரிதல் வந்து என்னை சமாதானப் படுத்திடும். திடீர்னு ஒரு நாள் மிஸ் இவரைப் பாத்து "நான் குண்டாயிருக்கேனாடா? என் பொண்ணுங்க எல்லாம் என்னை குண்டு குண்டுன்னு சொல்றாங்க"ன்னு சொன்னதா வந்து வீட்டுலச் சொல்லுவாரு, திடீர்னு ஒரு நாள் மிஸ் எனக்கு சாக்லேட் குடுத்தாங்கன்னு சாக்லேட் எடுத்துட்டு வருவாரு. இவரும் பொறந்த நாளுக்கு ஸ்கூலுக்குப் போகும் போது பாடம் எடுக்கற எல்லா மிஸ்ஸுகளுக்கு மட்டும் ஃபைவ் ஸ்டாரோ டெய்ரி மில்கோ வாங்கிட்டுப் போய்க் குடுப்பாரு. சில சமயம் எனக்கு தோணியிருக்கு...ஒரு வேளை ஸ்கூல் பசங்க கிட்ட கதை விட்ட மாதிரி வீட்டுல வந்து மிஸ் சொன்னாங்கன்னு கதை விடறாரோன்னு. இந்தப் பதிவைப் படிக்கிற ஸ்கூல் டீச்சரா இருந்த/இருக்கிறவங்களே? இப்ப நான் உங்களை கேக்கறேன்...இப்படியெல்லாம் நெஜமாவே நடக்குமா? இல்லை தலைவர் சொன்னதெல்லாம் பீலாவா?

எல்லாப் பசங்க கிட்டயும் அன்பா இருக்கற டீச்சருங்க மட்டும் தான் பாயான உங்களை ஃபிரெண்ட் ஆக்கிக்குவாங்கன்னு இல்லை. லக் இருந்தா முழு ஸ்கூலுக்குமே டெரரா இருக்கற மிஸ்ஸுக்குக் கூட நீங்க ஃபிரெண்டா இருக்கலாம். இப்படித் தான் எங்க ஸ்கூல்ல "ஃபிலோ மிஸ்"னு ஒரு டீச்சர் இருந்தாங்க. ஸ்கூல்ல எல்லாப் பசங்களுக்கும் அவங்களைப் பாத்தா அப்படி ஒரு பயம். ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஹோம் வர்க் செய்யலைனாக்கா, களாஸ்ல பேசுனாக்கா அடி பிச்சி எடுத்துருவாங்க. குண்டா இருப்பாங்க, கிட்டத்தட்ட ஐம்பது வயசிருக்கும், கையில் எப்பவும் ஒரு ஸ்கேல் வச்சிருப்பாங்க...அவங்க நமக்கு க்ளாஸுக்கு டீச்சரா வரலைன்னா சந்தோஷம்ங்கிற நெலமையில பசங்க அவங்களைப் பாத்து பயப்படுவாங்க. அப்படிப்பட்ட அந்த மிஸ் இளவலுக்கு நாலாப்புல க்ளாஸ் டீச்சரா வந்தாங்க. என்ன மாயமோ தெரியலை...மந்திரமோ தெரியலை...இவரு அவங்களுக்கும் ஃப்ரெண்டு ஆயிட்டாரு. ஃபிலோ மிஸ்னு மட்டும் அவங்கப் பேரைத் தெரிஞ்ச எங்களுக்கு அவங்களோட ஃபுல் நேம் "ஃபிலோமினா ரோட்ரிக்ஸ் மச்சாடோ" அப்படின்னு மேய்டன் நேம், சர்நேம், ஃபேமிலி நேம் எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டு வந்துச் சொன்னாரு இளவல். அதோட அவங்க ஊரு கோவாவைப் பத்தியும் அவங்க பசங்களைப் பத்தியும் எல்லாம் கூட இவரு கிட்டச் சொல்லுவாங்களாம். எனக்கு நம்பறதுக்குக் கஷ்டமாவும், ஆச்சரியமாவும் இருக்கும்.

ஒரு முறை கிறிஸ்துமஸ் சமயத்துல மிஸ்ஸுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அனுப்பனும்னு அம்மா கிட்ட வாங்கிட்டு வரச் சொன்னாரு. அவங்களும் போனாப் போகுதுன்னு ஒரு க்ரீட்டிங் கார்ட் வாங்கிட்டு வந்து குடுத்தாங்க. அந்த கார்டுல ரெண்டு பஞ்ச வர்ணக்கிளிகள் மரத்து மேலே உக்காந்திருக்குற மாதிரி இருக்கும். அதுக்குக் கீழே இளம் மஞ்சள் நிறத்துல "ஐ லவ் யூ"ன்னு எழுதிருந்துச்சு. அம்மா இதை பாக்காம வாங்கிட்டு வந்துட்டாங்க. கார்டு வாங்கிட்டு வந்து குடுக்கும் போதே ஆனா நான் பாத்துட்டேன். இருந்தாலும் என்ன தான் ஆகுதுன்னு பாப்போமேன்னு நான் ஃப்ரீயா விட்டுட்டேன் :). ஒரு நாள் கோவமா ஸ்கூல்லேருந்து வந்தாரு - "அம்மா! ஒரு நல்ல கடையில கார்டு வாங்காம, ரோட்டோரக் கடையில வாங்கி, உங்களால எனக்கு ஒரே வெக்கமாப் போச்சு"ன்னு வந்து ஆவேசமாக் கத்துனாரு. "என்னடா ஆச்சுன்னு" ரொம்பக் கரிசனமா உள்ளுக்குள்ளே சந்தோஷமா கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு "அந்த கார்டுல கிளிகளுக்குக் கீழே ஐ லவ் யூன்னு எழுதிருக்கும் போல, நான் பாட்டுக்கு அதைப் பாக்காம அனுப்பிட்டேன்". "அப்புறம் என்னாச்சி"ன்னு நானும் எங்கம்மாவும் ஆர்வமா கேட்டோம். "Mom! Who is the young chap who is loving you?"ன்னு அவங்க பெரிய பையன் கேட்டதாச் சொல்லி மிஸ் பெருசாச் சிரிச்சாங்கன்னு சொன்னதைக் கேட்டதும் என்னால நம்பவே முடியலை.

இது வரைக்கும் கேர்ள்ஸ் எப்படி இளவல் கிட்ட அன்பாப் பேசினாங்கன்னு பாத்தோம். ஆனா சில கேர்ஸ் "பாய் ஃபிரெண்டு"ன்னு கூட பாக்காம ஃபிசிக்கல் ஆயிடுவாங்க...அப்படியொரு அனுபவமும் தலைவருக்கு நடந்துருக்கு:). திருவல்லிக்கேணியில நாங்கத் தங்கியிருந்த வீட்டுல தண்ணி அடிக்கிறதுக்கு ரெண்டு வீட்டுக்குச் சேத்துப் பொதுவா ஒரு அடி பம்ப் இருக்கும். எப்பவாச்சும் ஒரு சின்ன வாளியில தண்ணி அடிச்சிட்டு வான்னு அம்மா சொல்லி அனுப்புவாங்க. இளவலும் போனாப் போவுதுன்னு ஒரு பக்கெட்டோ, ரெண்டு பக்கெட்டோ தண்ணி அடிச்சிக் கொடுப்பாரு. ஆனா கொஞ்ச நாளாத் தண்ணி நான் அடிச்சித் தர மாட்டேன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாரு. அம்மாவும் என்ன என்னன்னு கேட்டுப் பாத்தாங்க...சொல்லவே இல்லை. ஒரு நாள் வீட்டுல முறைவாசல் பண்ணற ஒரு ஆயா வந்தாங்க, எங்கம்மா கிட்ட "என்னம்மா சின்னப்புள்ளயை கொஞ்ச நாளாப் பாக்கவே முடியலை...உடம்பு நல்லாருக்கா"ன்னு கேட்டாங்க. அம்மாவும் "டேய்! இங்கே வா...உன்னை பாக்கத் தான் ஆயா வந்திருக்காங்க. முன்னெல்லாம் கரெக்டா அவங்கப் பெருக்க வர்ற நேரத்துல நீ தண்ணியடிச்சிட்டிருப்பே...அவங்களும் உன்னை பாத்துட்டுப் போவாங்க. இப்பத் தான் நீ தண்ணி அடிக்கவே போறதில்லையே...வா வந்து அவங்க கிட்டப் பேசு"ன்னு சொன்னாங்க. அதை கேட்டுட்டு இளவல் அம்மா பின்னாடி போய் ஒளிஞ்சிக்கிட்டாரு. "என்னடா...உன்கிட்ட பேசத் தானே வந்திருக்காங்க? வந்து அவங்க கிட்டப் பேசாம போய் என்னமோ ஒளிஞ்சிக்கிறியே"ன்னாங்க. அதுக்கு அவரு "போங்கம்மா...நான் போக மாட்டேன் அந்த ஆயா என் 'ஜில்'லைத் தொட்டு முத்தம் குடுக்கறாங்க" அப்படின்னாரு. அதை கேட்டுட்டு எங்கம்மா "சீ! உள்ள போடா"ன்னு சிரிச்சிக்கிட்டேச் சொல்லவும் "சின்னப் புள்ளையா இருக்குதாம்மா...பாக்குறதுக்கு ரொம்ப ஆசையா கொஞ்சனும்னு இருக்கு"ன்னு முறைவாசல் பண்ணற ஆயா சொன்னதைக் கேட்டு பயங்கரச் சிரிப்பு. ஆனாலும் கிராமமானாலும் நகரமானாலும் வயசானக் கிழவிகளுக்கு ஒரு பிடித்தமான பொழுதுபோக்கான இது, ஒவ்வொரு சின்னப்பையனுக்கும் ஒரு 'nightmare'னு ஏன் தெரிஞ்சிக்க மறுக்கறாங்க? :)))

இளவலின் வாழ்க்கையில் நடந்த இந்த மேற்கூறிய சம்பவங்களை எல்லாம் வச்சிப் பாக்கும் போது "பாய் ஃப்ரெண்ட்ஸ் தானே கேர்ள்ஸின் பூஸ்ட் அல்லவா?"ன்னு சொல்றது சரி தானுங்களே?

Thursday, February 14, 2008

ஷலபாஞ்சிகா - IIT நினைவுகள்

மேட்டர் என்ற சொல்லுக்கான பொருளை ஆங்கில அகராதியில் தேடினால் கிடைக்கும் அர்த்தம் - 1. the substance or substances of which any physical object consists or is composed: the matter of which the earth is made. 2. physical or corporeal substance in general, whether solid, liquid, or gaseous, esp. as distinguished from incorporeal substance, as spirit or mind, or from qualities, actions, and the like.
3. something that occupies space. இது தவிர இன்னும் ஒரு இருபத்தி சொச்சம் அர்த்தங்கள். ஆனால் பசங்களுக்கு மத்தியில் இச்சொல்லுக்கு அர்த்தம் ஒன்று தான். மேட்டர் படம், மேட்டர் புக் என்று இப்பதம் உபயோகிக்கப்பட்டிருக்கும் சொற்கள் அனைத்திற்கும் ஒரு கிளுகிளுப்புத் திறன் உண்டு. நில்லுங்க...என்னடா கைப்பு அறிமுகப் பக்கத்துல "என் மனதில் பல ஆயிரம் ஆயிரம் அழுக்குகள் இருந்தாலும் நல்லவற்றை மட்டுமே(அதாவது எல்லாரும் ரசிப்பவற்றை மட்டும்) என் வலைப்பூவில் எழுத வேண்டும் என்ற ஒரு கொள்கை வைத்துள்ளேன். அதை காப்பாற்றியும் வருகிறேன் என நம்புகிறேன் :)" இப்படிச் சொல்லிட்டு இப்ப என்னென்னமோ எழுதறானேன்னுட்டு ஓடிப் போயிடாதீங்க. நீங்க முகம் சுளிக்கிற மாதிரி எதுவும் இருக்காது.

சரி...ஒரு மேட்டர் புக், ஒரு ஹாஸ்டல் ரூம், சில வாலிபப் பசங்க. என்னாகும்னு நினைக்கறீங்க? ஒன்னும் ஆகாது. ஒரு அழகான சிலை உருவாகும். நம்ப முடியலியா? நெறைய கொசுவத்தி சுத்திட்டு கொஞ்சமா பதிவுக்கு சம்பந்தமான மேட்டர் சொல்றேன். 1999 முதல் 2001 வரை ஐஐடியில் நான் தங்கிப் படித்த ஹாஸ்டலின் பெயர் காரகோரம்(Karakoram). ஒவ்வொரு ஹாஸ்டலுக்கும் ஒரு படிக்கும் அறை(Reading Room) இருக்கும். இந்தப் படிக்கும் அறையில் பிரபல நாளிதழ்கள், சஞ்சிகைகள் எனப் பலவும் படிப்பதற்குக் கிடைக்கும். வருடா வருடம் ஹாஸ்டலுக்கு என்று ஐஐடி நிர்வாகத்தினால் ஒதுக்கப்படும் நிதியிலிருந்து இவற்றை வாங்குவார்கள். ரீடிங் ரூமைக் கவனித்துக் கொள்ள மாணவர்கள் தரப்பிலிருந்து ஒரு பையனை செயலாளராகத்(Reading Room Secretary) தேர்வு செய்வார்கள். இந்தப் பசங்களை சுருக்கமாக செகி என்பார்கள். படிக்கும் அறை, மெஸ், விளையாட்டு என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு செகி இருப்பார்கள். நான் கூட 2000-2001ஆம் ஆண்டு காரா ஃபோரம் செகி(Kara Forum Secy) பொறுப்பு வகித்தேன். ஹாஸ்டல் டேயின் போது நடக்கும் அலங்காரங்கள், போஸ்டர்கள் எழுதுவது, Calligraphy செய்வது இதெல்லாம் என் பொறுப்பில் இருந்தது. பாத்தீங்களா...மெயின் மேட்டரை விட்டுட்டு கிளை கதைக்குப் போயிட்டேன்...

படிக்கும் அறை சொன்னேன் இல்லையா - அதில் பசங்களின் பொது அறிவை வளர்ப்பதற்காக டெபொனேர்(Debonair), பேண்டசி(Fantasy) போன்ற ஒன்றிரண்டு புத்தகங்கள் இருக்கும். இது யாருக்கும் தெரியாமல் வாங்கப்படும் புத்தகங்கள் கிடையாது. ஐஐடி நிர்வாகத்தினாலேயே ஹாஸ்டலில் வைக்கலாம் என்று அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்கள். பசங்கள் படிப்போடு சேர்த்து மத்த விஷயங்களையும் தெரிஞ்சிக்கனும்ங்கிற எண்ணத்துல வாங்கி வச்சிருப்பாங்களா என்னன்னு தெரியாது. படிக்கும் அறையில் மாணவர்களின் பெற்றோர்களும் மாணவர்களைப் பார்க்க சில சமயம் வருவார்கள் என்பதால், இத்தகைய புத்தகங்களை மட்டும் பொதுவாக படிக்கும் அறையில் வைத்திருக்க மாட்டார்கள். இவை ரீடிங் ரூம் செகியிடம் இருக்கும். வேண்டும் என்றால் கேட்டு வாங்கிப் படித்துக் கொள்ள வேண்டும். ஹாஸ்டலைப் பொருத்த வரை மாணவர்களை, இளங்கலை மாணவர்கள் (பி.டெக், இண்டக்ரேட்டட் எம்.டெக்) மற்றும் முதுகலை மாணவர்கள் (எம்.டெக், எம்.எஸ், எம்.டெஸ், பி.எச்.டி, எம்.பி.ஏ)என இருகுழுக்களாகப் பிரிக்கலாம். இதில் இளங்கலை மாணவர்கள் எப்பிரிவினராக இருந்தாலும் பி.டெக் என்றும் முதுகலை மாணவர்கள் எப்பிரிவினராக இருந்தாலும் பொதுவாக எம்.டெக் என்றும் விளிக்கப்படுவர்.

மேட்டர் புத்தகங்கள் பி.டெக் மாணவர்கள் இடத்தில் போனால் திரும்ப வராது. செகியைக் கேட்டால் சர்க்குலேஷனில் இருக்கிறது என்று கூறி விடுவான்(அவனும் பெரும்பாலும் பி.டெக் பையனாகத் தான் இருப்பான்). பி.டெக் மாணவர்கள் அவர்களுக்குள்ளாகவே அதை சுழற்சி முறையில் வைத்துக் கொள்வார்கள். நீங்கள் எம்.டெக் மாணவராக இருந்து படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் யாராவது ஒரு பி.டெக் மாணவன் உங்களுக்கு நல்ல நண்பனாக இருக்க வேண்டும். நல்ல நண்பர்களாக இருந்தாலும் "வயசான காலத்துல என்ன செய்யப் போறீங்க? எம்.டெக் முடிக்கிற வழியைப் பாருங்க"ன்னு நக்கல் செய்து விடுவார்கள். இருக்கப் போறது ரெண்டு வருஷம் இதுக்கெல்லாமா சண்டை போடறதுன்னு நெனச்சி நாங்களும் விட்டுடுவோம். ஹாஸ்டலில் வருடாவருடம் ஆய்வு ஒன்று நடக்கும். ஹாஸ்டலினை எவ்வாறு அழகாக வைத்திருக்கிறார்கள், வசதிகள் என்னென்ன உள்ளது என்பதை எல்லாம் ஆராய்ந்து பேராசிரியர் குழு ஒன்று மதிப்பெண் வழங்கும். இதை BHM Inspection(Board for Hostel Management) என்று சொல்லுவார்கள். நமது ஹாஸ்டலுக்கு சிறந்த ஹாஸ்டல் விருது வர வேண்டும் என்று பலவாறாக இதற்காக உழைப்பார்கள். அந்த விஷயம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு போட்டி மனப்பான்மை அங்கு நிலவிக் கொண்டே இருக்கும். உதாரணமாக ஹாக்கி போட்டியில் ஹாக்கி விளையாடத் தெரிந்த பையன்கள் குறைவாக இருக்கிறார்கள் என்றால், நன்றாக ஓடக் கூடிய பையனாகப் பார்த்து அவன் கையில் ஹாக்கி ஸ்டிக்கைக் கொடுத்து விடுவார்கள். மைதானத்தில் போய் அவன் அடிபட்டு, உதைபட்டு, ரத்தம் சொட்ட வந்தாலும் வருவானே ஒழிய ஹாக்கி ஆடத் தெரியாது, நான் போக மாட்டேன் என்று சொல்ல மாட்டான்.

நான் சேர்ந்த புதிதில் பி.டெக் பையன்களோடு இணைந்து ஹாஸ்டலுக்குச் சில போஸ்டர்கள் எழுதிக் கொடுத்ததால் ஒரு சில பி.டெக் பையன்களோடு பழக்கம் இருந்தது. ஹாஸ்டலில் எனக்கு நண்பன் என்று பார்த்தால் அங்கே எம்.டெஸ்(Master of Design) படித்துக் கொண்டிருந்த சிவக்குமார் தான். அடிக்கடி அவன் அறையில் தான் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம் அல்லது இளையராஜா பாட்டு கேட்டுக் கொண்டிருப்போம். ஒரு முறை சிவக்குமார் அறையில் உக்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது எங்கள் இருவருக்கும் பழக்கமான ஒரு பி.டெக் பையன் வந்தான். அவன் பெயர் சந்தீப். பார்க்க அச்சு அசலாக மாதவ ராவ் சிந்தியா போலவே இருப்பான். அவனுடைய ஊரும் சிந்தியாவின் ஊரான க்வாலியர் தான். கதவருகில் நின்று கொண்டு கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு "யார்! BHM இன்ஸ்பெக்ஷனுக்காக எதாச்சும் செய்யனும். என்ன பண்ணலாம்னு எதாவது ஐடியா குடு"ன்னான். சரி ஏன் கதவு கிட்டே நிக்கிறே...முதல்ல உள்ள வான்னு சொன்னோம். அவன் தயங்கி தயங்கி உள்ள வந்தான், கையை அப்பவும் பின்னால தான் கட்டியிருந்தான். என்னடா கையிலன்னு கேட்டோம். அவன் கையில இருந்தது 'Fantasy'ங்கிற புத்தகம். "டேய்! வேலை வாங்கறதுன்னா மட்டும் வந்து பேசுடா...இதெல்லாம் கொண்டு வந்து காட்டாதே"னு திட்டினோம். அவனும் அசடு வழிஞ்சிக்கிட்டே அந்த புத்தகத்தைக் கொடுத்தான்.

புத்தகத்தைப் பிரிச்சி பாத்துட்டிருந்தோம் :). அப்பவும் அவன் BHM இன்ஸ்பெக்ஷன்னு புலம்பிக்கிட்டு இருந்தான். புத்தகத்தைப் பாத்துக்கிட்டு இருந்த சிவக்குமார், அந்தப் புத்தகத்துல இருந்த ஒரு படத்தைப் பாத்து திடீர்னு "ஹாஸ்டலுக்காக ஒரு சிலை செய்யலாமா"னு கேட்டான். அதை கேட்ட எங்களுக்கெல்லாம் ஆச்சரியம். சிலை செய்யறதுன்னா பின்ன என்ன சும்மாவா? சிவக்குமார் டிசைனர் அருமையா ஓவியம் வரைவான், நல்ல கலைஞன்னு எங்களுக்குத் தெரியும்...ஆனா சிலை வடிக்கிற அளவுக்குப் பெரிய ஆளுன்னு தெரியாது. "எனக்கு ஓவியம் வரையறதை விட சிலை வடிக்கிறது தான் ரொம்பப் பிடிக்கும்"னு அவன் சொன்னதை கேட்டு எங்களுக்கெல்லாம் செம உற்சாகம். அதுக்கப்புறம் ஹாஸ்டல் வார்டன் கையைக் காலைப் பிடிச்சு சிலை செய்து ஹாஸ்டல் வாசலில் வைக்கிறதுக்கும், அதுக்குண்டான செலவு செய்யறதுக்கும் அனுமதி வாங்கினாங்க. சிலை செஞ்சதைப் பத்தியும் நெறைய சொல்லனும்னு நெனச்சேன்...ஏன்னா அதை நான் கிட்ட இருந்து பாத்தது. ஆனா ஏற்கனவே மைல் நீளம் போனதுனால, ப்ளாஸ்டர் ஆஃப் பேரிஸ் வச்சி நண்பன் இந்த சிலையை வடிக்கும் போதெல்லாம் எனக்கு ஆல்-இன் -ஆல் அழகுராஜாவோட ஒரு வசனம் மட்டும் ஞாபகம் வந்துக்கிட்டே இருக்கும் - "டேய் நான் ஒரு சிற்பி மாதிரிடா...எப்படி செதுக்கறேன் பாத்தியா?" ஒரு வாரம் ராப்பகலாக அவனுடைய கடும் உழைப்பில் உருவானாள் கீழே நீங்கள் பார்க்கும் ஷலபாஞ்சிகா.


ஷலபாஞ்சிகா என்றால் Wood Nymph(மரப் பாவை). இது ஃபேண்டஸி சஞ்சிகையில் வெளியாகியிருந்த ஷலபாஞ்சிகா சிலையின் உருவ மாதிரி(replica). இச்சிலையில் அப்பெண் கொண்டிருக்கும் வடிவம்(posture) - த்ரிபங்கா(Tribhanga) என்பது. அதாவது இச்சிலையை மேலிருந்து பார்த்தீர்களானால் மூன்று இடங்களில் நெளிவுகளைக் காணலாம்(எப்படி சொல்வதென்று தெரியவில்லை) - அவை தலை, தோள்கள் மற்றும் இடை. சிலையை நேர் பக்கமாக முன்னாலில் இருந்து பார்த்தீர்கள் ஆனாலும் மூன்று இடங்களில் நெளிவுகளைக் காணலாம். அவை கழுத்து, மார்பு மற்றும் இடை. ஆங்கிலத்தில் சுருக்கமாகச் சொல்லப் போனால் இது ஒரு Triple Torsion Statue.

சிலையைப் பற்றிச் சொல்லி விட்டேன். சிலை வடித்தவனைப் பற்றிச் சொல்கிறேன். பல திறமைகளைக் கொண்ட ஒரு கலைஞன், ரசிகன். எம்.டெஸ் படித்து முடித்துவிட்டு பிரபல நிறுவனம் ஒன்றிற்கு மோட்டார் சைக்கிள்களை வடிவமைத்துக் கொடுக்கும் இந்தியாவின் திறமையான டிசைனர்களில் ஒருவன். எல்லாவற்றிற்கும் மேலாக இவன் 2006 ஆம் ஆண்டிலேயே உங்களுக்கு எல்லாம் அறிமுகம் ஆனவன் தான். திறமையான கேமரா கவிஞர்களால் கூட எடுக்க முடியாத நீங்கள் அனைவரும் ரசித்த இந்த ஒளி ஓவியத்தை எடுத்த நல்லவன்...வல்லவன்...நாலும் தெரிஞ்சவன்...ஆனாலும் என்னை பொறுத்த வரை ஒரு துரோகி :)

Wednesday, February 13, 2008

The Valentines

நேற்று மாலை எங்கள் முழுமுதற் தலைவியோட:) சேட்டிக் கொண்டிருந்தேன். "வணக்கம் மேடம்! நாளைக்கு வேலண்டைன்ஸ் டே. கொண்டாடறதுக்கு என்னா ப்ளான்?" அப்படின்னு ஒரு பெரிய ஸ்மைலியைப் போட்டுக் கேட்டேன். அதுக்கு அவங்க சொன்னது பயங்கரமா என்னை யோசிக்க வச்சி கன்னாபின்னான்னு இன்ஸ்பையர் பண்ணிடுச்சு. அதுக்கு அவங்க"பிப்ரவர் 14 வேலண்டைன்ஸ் டேங்கிறது எல்லாம் உங்களுக்குத் தான். எங்களுக்கு எல்லாம் தினம் தினம் வேலண்டைன்ஸ் டே தான்"னு சொல்லி என்னை விடப் பெரிய ஸ்மைலி போட்டாங்க. பல்பு வாங்கினாலும் தலைவி சொன்ன பதிலைக் கேட்டு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. பின்னே அப்படித் தானே இருக்கணும்...இல்லியா? மதர்ஸ் டே, ஃபாதர்ஸ் டே, ஃப்ரெண்ட்ஸ் டேன்னு இப்படி வருஷத்துல ஒவ்வொரு நாளுக்கு மட்டும் நமக்கு பிரியமானவங்க கிட்ட நம்ம அன்பைச் சொல்லி நிறுத்திக்காம நம்ம வாழ்நாள் பூராவும் அந்தப் பிரியத்தை வெளிப்படுத்திக்கிட்டே இருக்கணும்ங்கிறது தான் என்னோட கருத்தும். (நடிகர் சூர்யா மதர்ஸ் டே பத்தி சொல்லிருந்தத் தன்னோட கருத்தை இந்தப் பதிவுல பின்னூட்டப் பகுதியில படிச்சுப் பாருங்க). இருந்தாலும் பிப்ரவரி 14 அன்னிக்குக் காதலர் தினம்னு தனியா ஒரு நாளை வச்சி அதை கொண்டாடறது ஒன்னும் தப்பில்லைங்கிறது தான் என்னோட தாழ்மையான கருத்து.

தலைவி "திருவள்ளுவி:)"யைப் போல ரெண்டு வரியில சொன்னாலும், அவங்க சொன்ன கருத்து ரொம்ப ஆழமானது. அது என் மனதில் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. "நான் ஆழமால்லாம் ஒன்னும் சொல்லலை...சும்மா ஒன்னை கலாய்ச்சேன்"னு தலைவி சொல்ல வாய்ப்பிருக்கு. கலாய்ச்சிருந்தாலும் பரவாயில்லை...நான் ஆழமா ஃபீல் பண்ணிட்டேன்:). யோசிச்சிப் பாத்தா வேலண்டைன்ஸ் டேன்னா என்னங்க? ஆர்ச்சீஸ்ல ஒரு கார்டையும், ஒரு சேப்பு கலர் ரோஜாப்பூவையும், ஒரு சாக்லேட் டப்பாவையும் வாங்கி நமக்கு விருப்பமானவங்க கிட்ட "ஐ லவ் யூ" சொல்லிக் கொடுக்கறதுக்கும் ஃபிகர்களைக் கவர் பண்ணறதுக்கும் உண்டான ஒரு நாளா? மணமாகதவங்கன்னா "நம் இருவருக்கும் இடையே தோன்றியிருக்கும் இவ்வன்பு இன்று போல என்றும் நிலைத்திருக்கும்"னும் மணமானவங்கன்னா "நம் இருவருக்கும் இடையே இருக்கும் இந்த அன்பு நாம் வாழும் காலம் வரை மாறாதிருக்கும்"னும் ஒருத்தருக்கு ஒருத்தர் உறுதி மொழி தர்ற ஒரு நாளா இருக்கணுமில்லையா? இதை தவிர காதலர் தினத்தன்று செய்யற மத்ததெல்லாம் தவறில்லை என்றாலும் மேலோட்டமானது என்பதும் என் தாழ்மையான எண்ணம்.

2006ஆம் ஆண்டு இறுதியில் அகமதாபாளையம் போன போது ஒரு ஜோடியைப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டேன். ஆனா நேத்து எங்க தலைவி என்னை ஆழமா ஃபீல் பண்ண வச்சதுல அவங்களைப் பத்திய நினைவு மறுபடியும் துளிர்த்திடுச்சு. அவங்களைப் பத்தி இந்த ஊருக்கே தெரியும்...ஏன் இந்த உலகத்துக்கே தெரியும். இருந்தாலும் அவர் அவங்களுக்கு வருடாவருடம் ரோஜாப்பூ கொடுத்தாரா அவங்களுக்குச் சாக்லேட் பிடிக்குமான்னெல்லாம் தெரியாது. அதப் பத்தித் தெரிஞ்சிக்க நான் முயற்சிக்கவும் இல்லை. ஆனா என்ன தெரியும்னா கணவன், மனைவியா வாழ்ந்த அந்த இருவரின் அன்புக்கு அடிப்படையா இருந்தது...ஒருத்தர் கருத்துக்கு இன்னொருவர் அளிக்கும் மதிப்பு, கணவன் மனைவியாக இருந்தாலும் ஒருத்தர் தனித்துவத்தில் இன்னொருவர் தலையிடாத மாண்பு. இருப்பினும் தேவை ஏற்படும் போது தன்னுடைய மறுபாதிக்காகத் தன்னுடைய எல்லாவற்றையும் இழக்கத் தயாராயிருக்கும் பக்குவம் இதெல்லாம் தான். அவங்க Mrs.& Mr.Gandhi...




2006-2007இல் அகமதாபாத்தில் இருந்த போது சபர்மதி ஆஷ்ரமத்திற்கு இருமுறை சென்றிருக்கிறேன். அங்கு காந்தி அருங்காட்சியகத்தில் கண்டவற்றை எல்லாம் புகைப்படமாகச் சுட்டுத் தள்ளினேன். அவற்றில் இருந்து இந்நாளுக்கும் இப்பதிவிற்கும் பொருத்தமானது என நான் எண்ணும் சிலவற்றை மட்டும் இங்கே பதிகிறேன்.

சபர்மதி ஆஷ்ரமத்தில் காந்தியடிகளும் கஸ்தூர்பாவும் வாழ்ந்த வீடான "ஹ்ருதய் குஞ்ச்"இன் முகப்பில் உள்ள அறிவிப்பு பலகை.


அளவில் பெரிதான படங்களை ப்ளாக்கர் நேற்று முழுவதும், இன்றும் ஏற்க மறுத்ததால், சிறிய படங்களாக ஏற்றி ஆங்கிலத்தில் எழுதியிருந்ததை அப்படியே இங்கு தட்டச்சுகின்றேன். பாருங்க, படிங்க ஆனா கண்டிப்பா ஆராய்ஞ்சிப் பாருங்க :)

அங்கே படிச்சதிலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சது இது. கஸ்தூர்பாவிடமிருந்து காந்தி கற்றது என்ன என்று விளக்கும் படம்.

Was Kasturba even Gandhiji's teacher?
"It was from my wife that I learned the lesson of ahimsa...I had always tried to make her bend to my wishes. On the one hand she would firmly refuse to do so and, on the other, patiently bear with all the hardships that I would inflict her on in my obstinacy. It was her peaceful opposition that opened my eyes. I felt ashamed of myself and was rid of the foolish notion that it is my birthright to rule over her"

காந்தியடிகள் தன் மனைவியின் தனித்துவத்தை ஏற்றுக் கொண்டாரா?

Did Gandhiji ever accept Kasturba's individuality?

"We have quarelled many times but always the result has been good. With her wonderful capacity to suffer, Ba would always win any quarrel between us...What I like best in Ba is her bravery and courage. She has been angry, envious or bitter but looking back on all the years since my return from South Africa, I find that only her bravery has endured".

கணவன் மனைவியைப் பற்றியும், மனைவி கணவனைப் பற்றியும் சொன்னது.

என்னோடு இரண்டறக் கலந்தவள்...
"Ba was very stubborn. Even if I pressurised her she would do what she thought was best. Because of this there would be bitterness between us now and then. But as my public life became brighter...she entered my work with greater maturity. As time passed, it was as if there was no difference between me and my work, and Ba began becoming one with it."

என் போலே யார்க்கும் கணவன் வாய்க்காது...
"No one has a husband like mine. He is worshipped all over the world for his truth...He has never found fault with me without cause. If I did not have foresight and was short-sighted about things he would rebuke me. That happens all over the World."

தேசத்தின் விடுதலை என்னும் கணவனின் முனைப்புக்குத் தோள் கொடுத்த தோழியாக...
Did Kasturba prepare women for Satyagraha?
"Our men are fighting the government for the sake of truth. We must encourage them in this fight. We must bear bravely, whatever harassment the government may subject us to...The boycott of alcohol and foreign clothes is a task women have to do. Men are not blessed with the kind of common sense we have, for we understand the language of sorrow better than men"

கணவனுக்கும் மனைவிக்குமிடையே உண்டான அன்பினையும் ஒருவருக்காக இன்னொருவர் தாங்கள் மிகவும் நேசித்ததை விட்டுக் கொடுப்பதையும் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டும் ஒரு ஆங்கிலக் கதை - "The Gifts of Magi". ஓ ஹென்றி எனும் புகழ்பெற்ற அமெரிக்கக் கதாசிரியர் எழுதியது. Magi - மஜாய் என்பவர்கள், குழந்தை ஏசுவைக் காண வெகு தொலைவிலிருந்து மிகவும் விலைமதிப்புள்ள பரிசுகளைக் கொண்டு வந்த மன்னர்கள். ஆனால் அவர்களுக்கிருந்த அன்பின் மிகுதியில் தாங்கள் கொண்டு வந்த பரிசுகள், அப்போது பிறந்த பிஞ்சு குழந்தைக்குப் பயன்படுமா என சிந்திக்கத் தவறியவர்கள். அது போல கணவன் மேல் தனக்கு இருக்கும் அன்பின் மிகுதியால் கணவனின் கைக்கடிகாரத்திற்கு ப்ளாட்டினம் செயின் வாங்க தான் மிகவும் நேசித்தத் தன் நீண்ட கூந்தலை வெட்டி விற்று விடுகிறாள் டெல்லா என்னும் அம்மனைவி. அதே போல மனைவி நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட விலைஉயர்ந்த சீப்புகளை வாங்க தன் கைக்கடிகாரத்தை விற்று விடுகிறான் ஜிம் எனும் அக்கணவன். அவர்கள் இருவருக்குமிடைய இருக்கும் அவ்வன்பை மிக எதார்த்தமாக அழகாகச் சொல்லியிருப்பார். அக்கதையிலிருந்து ஒரு சிறிய பகுதி கீழே.

"You needn't look for it," said Della. "It's sold, I tell you--sold and gone, too. It's Christmas Eve, boy. Be good to me, for it went for you. Maybe the hairs of my head were numbered," she went on with a sudden serious sweetness, "but nobody could ever count my love for you. Shall I put the chops on, Jim?"

Out of his trance Jim seemed quickly to wake. He enfolded his Della. For ten seconds let us regard with discreet scrutiny some inconsequential object in the other direction. Eight dollars a week or a million a year--what is the difference? A mathematician or a wit would give you the wrong answer. The magi brought valuable gifts, but that was not among them. I his dark assertion will be illuminated later on.

Jim drew a package from his overcoat pocket and threw it upon the table.

"Don't make any mistake, Dell," he said, "about me. I don't think there's anything in the way of a haircut or a shave or a shampoo that could make me like my girl any less. But if you'll unwrap that package you may see why you had me going a while at first."

White fingers and nimble tore at the string and paper. And then an ecstatic scream of joy; and then, alas! a quick feminine change to hysterical tears and wails, necessitating the immediate employment of all the comforting powers of the lord of the flat.

For there lay The Combs--the set of combs, side and back, that Della had worshipped for long in a Broadway window. Beautiful combs, pure tortoise-shell, with jewelled rims--just the shade to wear in the beautiful vanished hair. They were expensive combs, she knew, and her heart had simply craved and yearned over them without the least hope of possession. And now, they were hers, but the tresses that should have adorned the coveted adornments were gone.

But she hugged them to her bosom, and at length she was able to look up with dim eyes and a smile and say: "My hair grows so fast, Jim!"

And then Della leaped up like a little singed cat and cried, "Oh, oh!"

Jim had not yet seen his beautiful present. She held it out to him eagerly upon her open palm. The dull precious metal seemed to flash with a reflection of her bright and ardent spirit.

"Isn't it a dandy, Jim? I hunted all over town to find it. You'll have to look at the time a hundred times a day now. Give me your watch. I want to see how it looks on it."

Instead of obeying, Jim tumbled down on the couch and put his hands under the back of his head and smiled.

"Dell," said he, "let's put our Christmas presents away and keep 'em a while. They're too nice to use just at present. I sold the watch to get the money to buy Your combs. And now suppose you put the chops on."

The magi, as you know, were wise men--wonderfully wise men-who brought gifts to the Babe in the manger. They invented the art of giving Christmas presents. Being wise, their gifts were no doubt wise ones, possibly bearing the privilege of exchange in case of duplication. And here I have lamely related to you the uneventful chronicle of two foolish children in a flat who most unwisely sacrificed for each other the greatest treasures of their house. But in a last word to the wise of these days let it be said that of all who give gifts these two were the wisest. Of all who give and receive gifts, such as they are wisest. Everywhere they are wisest. They are the magi."

கதையை முடித்திருக்கும் விதம் வெகு அருமையாக இருக்கும். முழு கதையையும் படிக்க இங்கு சுட்டுங்கள்.

பி.கு 1: என் வாழ்நாளில் பல வேலண்டைன் தினங்கள் என்னை கடந்துச் சென்றிருக்கின்றன. ஆனால் இது தான் என்னுடைய முதல் வேலண்டைன் தினம் :)

பி.கு 2 : இப்பதிவில் ஐந்து வேலண்டைன் ஜோடிகள் இருக்கின்றார்கள். ஜோடி நம்பர் ஒன்னு தங்கத் தலைவியும் - அங்கிளும், ஜோடி நம்பர் ரெண்டு கஸ்தூர்பாவும் - மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியும், ஜோடி நம்பர் மூனு மஜாய் கதையில் வரும் ஜிம்மும்-டெல்லாவும். ஜோடி நம்பர் நாலு - இந்தப் பதிவைப் படிச்சிட்டு, பாதிக்கு மேல ஆங்கிலத்தில் இருந்தாலும் நெஞ்சை நக்கிட்டாண்டா கைப்புன்னு நெனக்கிற நீங்களும் உங்களுடைய மறுபாதி(யும்)/(யா) வரப் போகிறவங்களும்:). ஜோடி நம்பர் அஞ்சு - பி.கு 1ஐ ஏன் தான் தேடறீங்களோ தெரியலை :).

...ஆதலினால் காதல் செய்வீர்:)))

'தலை' நகரம் - 5 : ஷ்ரீ லங்கா?!

தபால் தலைகள் குறித்த பதிவான 'தலை' நகரம் - 4இல் கீழே உள்ள நத்தார் தின(கிறிஸ்துமஸ் நாள்) தபால் தலையில் ஒரு சிறப்பு உள்ளது என்றும் அது என்னவென்றும் கேட்டிருந்தேன். அதை பற்றித் தான் இந்தப் பதிவு.

ஒரு நாட்டின் தபால் தலையை எடுத்துக்கிட்டோம்னா, அதை வேறு ஒரு நாட்டுத் தபால் தலையோடு ஒப்பிடும் போது வேறுபடுத்திக் காட்டுவது - அத்தலையில் அச்சிடப்பட்டிருக்கும் அந்நாட்டின் பெயர். சில நாடுகள் தங்கள் நாட்டின் பெயரை ஆங்கிலத்திலும், அதிகாரப்பூர்வப் பெயரை தங்கள் சொந்த மொழியிலும் அச்சிடுவர். உதாரணத்திற்கு இந்தியா. INDIA என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தாலும் தேசிய மொழியான இந்தியில் எழுதப்பட்டிருப்பது "பாரத்" என்று தான். சில நாடுகள் தங்கள் சொந்த மொழியில் மட்டுமே நாட்டின் பெயரை அச்சிடுவர். உதாரணமாக ஸ்வீடன் நாட்டுத் தபால் தலைகளைக் கண்டோம் ஆனால் SVERIGE என்று தான் அச்சிடப்பட்டிருக்கும், அதே போல நார்வே(NORGE), சுவிட்சர்லாந்து(HELVETIA). வேறு சில நாடுகள் ஆங்கில எழுத்தையும் தவிர்த்து தங்கள் சொந்த மொழி எழுத்திலேயே நாட்டின் பெயரை அச்சிடுவர். உதாரணமாக கொரியா, க்ரோஏஷியா ஆகியவை. இவற்றிலும் சில நாடுகள் சில சமயங்களில் ஆங்கிலத்திலும் தங்கள் நாட்டின் பெயரை அச்சிடுவது உண்டு.

மேலே உள்ள இலங்கை தபால்தலையைப் பாருங்கள். நாட்டின் பெயரைக் கவனித்தீர்களா? ஆங்கிலத்தில் SHRI LANKA என்றும் தமிழில் இலங்கை என்றும் அச்சிடப்பட்டிருக்கிறது. இலங்கையை SRI LANKA என்ற பெயரிலும் CEYLON என்ற பெயரிலும் அறிந்திருக்கிறோம். இவ்விரு பெயர்களையும் தவிர இலங்கைக்கும் இன்னும் பல பெயர்களும் இருக்கின்றன. அதற்காகவே விக்கிபீடியாவில் தனியாக ஒரு பக்கமும் உள்ளது.

இலங்கையின் மற்ற பெயர்கள் :
இலக்திவா - Lakdiva
சிலோன் - Ceylon
சிஹலம் - Sihalam
சீலா கே - Siela Keh
செரண்டிப் - Serendip
ஹெலாதிவா - Heladiva
தாமிரபரணி - Tamraparni

மேலே உள்ள பெயர்கள் ஒவ்வொன்றுக்குப் பின்னும் ஒவ்வொரு காரணம் உள்ளது. முழுவிபரமும் வேண்டுமென்றால் மேலே கொடுக்கப்பட்டுள்ள விக்கிபீடியா சுட்டியைச் சுட்டுங்கள். முக்கியமான சிலவற்றைப் பற்றி மற்றும் இங்கே கூறுகிறேன். Serendip என்ற பெயர் அரேபிய மூலத்தைக் கொண்டது. இப்பெயரைக் கொண்டு எழுதப்பட்ட 'The Three Princes of Serendip' என்கின்ற கதையின் வழியாக, ஆங்கில மொழிக்கு 'Serendipity' என்ற சொல் கிடைத்தது. த்ரீ ப்ரின்சஸ் கதையில் மூன்று இளவரசர்களும் தற்செயலாகப் பல புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பார்கள். அது போல தற்செயலாகக் கண்டுபிடிக்கப்படும் அல்லது கண்டறியப்படும் செயலை ஆங்கிலத்தில் 'Serendipity' என்கின்றனர்.

அசோக மன்னரின் வழி வந்தவரான 'விஜயன்' என்ற அரசர், இலங்கையை தாமிரபரணி என்று அழைத்தாராம். அதற்கு தாமிர(Copper) நிறம் கொண்ட இலை என்று பொருளாம். தென் தமிழ்நாட்டில் ஓடும் நதிக்கு இப்பெயர் இருப்பதை அறிந்திருப்போம், ஆனால் இலங்கைக்கும் இப்பெயர் முன்பு இருந்திருக்கிறது என்று அறியும் போது ஆச்சரியம் மேலிடுகிறது. தாமிரபரணி என்ற பெயர் கிரேக்கர்களால் 'Taprobane' என்று அழைக்கப்பட்டது. உலகின் முதல் வரைபடம் இயற்றிய ப்டாலமி(Ptolemy) என்ற கிரேக்க அறிவியலாளரும் அவ்வரைபடத்தில் இலங்கையை 'Taprobane' என்றே அழைக்கிறார்.

சரி...இத்தனை பெயர்கள் இந்த நாட்டுக்கு இருக்கு. ஆனால் அத்தபால் தலையில் உள்ளது போல 'SHRI LANKA' என்ற பெயரில் இலங்கை அறியப்பெற்றதில்லை என வினவுகிறீர்களா? ஆம்...இலங்கையின் தபால் தலைகள் அனைத்திலும் 'SRI LANKA' என்றும் பழைய தபால் தலைகளில் 'CEYLON' என்று மட்டுமே அச்சடிக்கப் பட்டிருக்கும். ஆனால் 'SHRI LANKA' - ஷ்ரீ லங்கா என்று அச்சிடப்பட்டிருப்பது இத்தபால் தலையின் சிறப்பு. அப்படியென்றால் இது போலி தபால் தலையா என்றால் அதுவுமில்லை. இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தபால் தலை தான்.

இலங்கையின் முன்னாள் அதிபரான ரணசிங்கே பிரேமதாசா ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் பெயர் SRI LANKA என்று இருந்தால் நாட்டின் தலைவரின் உயிருக்கு ஆபத்து வரலாம் என ஒரு ஜோசியர் சொன்னாராம். அதை கேட்ட பிரேமதாசா அரசியல் சாசன மாற்றம் எதையும் செய்யாமல் தபால் தலைகளிலும், அரசாங்கக் கடிதத் தாள்களிலும்(Letterheads) SRI LANKA என்பதை SHRI LANKA என்று மாற்றிவிட்டாராம். SHRI LANKA என்ற பெயர் தாங்கிய இன்னொரு தபால் தலை கீழே.



ஆனால் இப்பெயர் 1992ஆம் ஆண்டிற்கும் 1993ஆம் ஆண்டிற்கும் இடையில் தான் நடைமுறையில் இருந்திருக்கின்றது. மே 1, 1993 ஆம் ஆண்டு தற்கொலைப்படைத் தாக்குதலினால் அதிபர் பிரேமதாசா கொல்லப்பட்ட பிறகு மறுபடியும் நாட்டின் பெயரை SHRI LANKAவில் இருந்து SRI LANKA ஆக்கிவிட்டார்கள். SRI என்பது SHRI ஆனதையும், அது 1993க்குப் பிறகு மறுபடியும் SRI ஆனதையும் யாரும் கண்டுகொள்ளவுமில்லை :)

Tuesday, February 12, 2008

தமிழ் ப்ளஸ் டூ

நான் ப்ளஸ் டூ வரைக்கும் தாங்க தமிழ் படிச்சிருக்கேன். தமிழ் பாடப்புத்தகத்துல இருக்குற செய்யுள், உரைநடை அது தவிர துணைப்பாடப் புத்தகத்துல இருக்கற ஒரு சில கதைகளைத் தவிரத் தமிழில் இலக்கியம் சார்ந்தது சாராததுன்னு வேறு எதையும் படிச்சது கிடையாது. ஜெயமோகன், நாஞ்சில்நாடன், தபூ சங்கர் போன்ற இலக்கியவாதிகளின் பேர்களை எல்லாம் கூடத் தமிழ் வலைப்பூக்கள் படிக்க ஆரம்பிச்சப்புறம் தான் கேள்வியே படறேன். ப்ளஸ் டூ முடிச்சதுக்கப்புறம் நுழைவுத் தேர்வு, கட் ஆஃப் மார்க், எஞ்சினியரிங் காலேஜ் சீட், கேட்கற ப்ராஞ்ச் கெடைக்குதாங்கிற கவலை...பொறியியல் படிப்பு முடிச்சதும் மறுபடியும் நுழைவுத் தேர்வு, கலந்துரையாடல், பேட்டி(அதாங்க இண்டர்வியூ:) இப்படின்னே போயிடுச்சு நம்ம வாழ்க்கை. அப்பாடா படிச்சி முடிச்சாச்சுன்னு நெனைக்கிறதுக்குள்ள வேலை, சம்பளம் இப்படியாகப் பல சிந்தனைகள் மனதில் வந்து உக்காந்துக்கிச்சு.

என்ன தான் இருந்தாலும் இன்னைய வரைக்கும் நான் நெனச்சி பெருமை படற விஷயம் ஒன்னு இருக்குன்னா ப்ளஸ் டூ வரைக்குமாச்சும் தமிழ் படிச்சோமேங்கிறது தான். நான் தமிழ்ல தான் வீக், எனக்குத் தமிழ் தான் வராதுன்னு யாராச்சும் சொன்னா அப்பல்லாம் ரொம்ப கோவம் வரும். இப்ப கொஞ்சம் வயசானதுக்கு அப்புறம் அந்த கோவம் கொஞ்சம் தணிஞ்சுருக்கு. ஆனாலும் இப்பவும் அந்த மாதிரி எதாச்சும் கேட்டா வருத்தமா இருக்கும். பத்தாம் வகுப்பு முடிச்சதும் பதினொன்னாம் வகுப்புல பிரெஞ்சு, ஜெர்மன்(எங்க பள்ளிக்கூடத்துல ஜெர்மன் கூட இருந்துச்சு) இதெல்லாம் எடுத்து படிக்கிற பசங்களைப் பாத்தா சிரிப்பாத் தான் வரும். உன் சொந்த மொழித் தமிழை ஒழுங்காத் தெரிஞ்சிக்காம பிரெஞ்சு படிச்சி என்னடா பண்ணப் போறேன்னு கேட்டா அப்பத் தான் ப்ளஸ் டூல நெறைய மார்க் வாங்க முடியும்னு ஒரு நொண்டி சாக்கு சொல்லுவானுங்க. கட் ஆஃபுக்குக் கூட உதவாத ஒரு மொழியைப் படிக்கிறதுக்கு நம்ம மொழியை விட்டுத் தரனுமான்னு பல முறை தோணியிருக்கு.

சரி இதையெல்லாம் விட்டுத் தள்ளுங்க. வாசிப்பனுபவம் இல்லாது போனாலும், ப்ளஸ் டூ வரைக்கும் நான் கற்ற தமிழ் இலக்கியங்கள் திடீர் திடீர் என ஞாபகத்துக்கு வரும். சில சமயம் அதுக்கு எதாவது ஒரு காரணி இருக்கும்...பல சமயங்கள் எந்த காரணமும் இல்லாம இந்த மாதிரி-இந்த மாதிரி எதோ படிச்சோமேன்னு ஞாபகத்துக்கு வரும். அதுக்கப்புறம் அது என்ன ஏதுன்னு கூகிளில் தேடிப் படிக்கிற வரைக்கும் பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆகிடும். அந்த மாதிரி பைத்தியம் பிடிக்கிற அளவுக்குப் போய் நெட்ல தேடிக் கண்டுபிடிச்ச ப்ளஸ் டூ தமிழ் பாட செய்யுள்களைப் பற்றித் தான் இந்தப் பதிவு.

சமீபத்துல கல்லூரி திரைப்படம் பார்த்தேன். அதுல சலீமான்னு ஒரு பொண்ணு இருக்கும். ஒரு காட்சியில சொல்லும் "எங்க அத்தாவுக்கு இதயத்துல ஓட்டை இருக்குதாம். அதனால கவிச்சி சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு"ன்னு சொல்லும். இந்த வசனத்தைக் கேட்டதும் சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான அப்பர் பெருமான் சிவனைத் தன் தந்தையெனக் கருதி இயற்றிய ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. இதோ அந்தப் பாடல் :

"அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்
எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனன் அத்தனையும் பொறுத்தாயன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே"


இந்தப் பாடலுக்குண்டானப் பொருள் விளக்கம் கொடுக்கும் போது எங்க தமிழ் மிஸ் சேதுராணி அவர்கள் சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு. "நாயன்மார்கள் ஒவ்வொருவரும் இறைவனுடன் உண்டானத் தங்கள் பிணைப்பை ஒவ்வொரு வடிவத்தில் கண்டனர். வேடுவ குலத்தில் பிறந்த கண்ணப்பர் இறைவன்பால் வைத்திருந்த அன்பு நண்பர்கள் இருவருக்கு மத்தியிலான அன்பு போன்றது. ஆனால் சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான அப்பர் இறைவனைத் தன் தந்தையாகக் கண்டார். (சைவ சமயக் குரவர்கள் நால்வர். அவர்கள் - திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் எனும் அப்பர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர்) அத்தா என்னும் சொல்லுக்கு அப்பா என்று பொருள். நல்லவொரு தமிழ்ச் சொல்லான இதை தங்கள் தந்தையை விளிப்பதற்கு இசுலாமியர்கள் இன்றும் பயன்படுத்துகிறார்கள்" என்று சொன்னது ஞாபகம் வந்தது. இது கல்லூரி படத்தில் சலீமா பேசும் வசனத்தைக் கேட்டதும் நினைவுக்கு வந்தது.

இறைவனின் அளவிலாக் கருணையை வியந்து போற்றி கண்ணீர் மல்க அப்பர் பெருமான் பாடிய இப்பாடலின் பொருள் - "எந்தவொரு உணர்வுமில்லாத தூயபரமாக இருப்பதுபோக்கி, என் அத்தனாக அன்பின் பேருருவாகத் தோன்றி அடியேனை அன்பினாலே ஆர்த்து, நிறைத்து ஆட்கொண்டாய். மேலும் அருள் நோக்குத் தேற்றி என் அகம் படிந்துள்ள குற்றங்களை எல்லாம் கழுவி சுத்தம் செய்யும் பொருட்டு கங்கை நீர் கொண்டு குளிப்பாட்டினாய். எத்தனையோ தவங்கள் செய்தாலும் காண்பதற்கும் அனுபவிப்பதற்கும் அரியையாகிய நீ, என் மேல் பரிவு கொண்டு எனக்கு எளியை ஆனாய் என்பதொடு என்னைத் தானாக்கி ஆண்டுகொண்டு என்னையும் உன் அடியார்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டாய். நான் கொள்கை உறுதியில்லா பித்தன், சிவஞானம் யாதென்று அறியாத பேதை, பல தீய சக்திகள் உள்ளத்தில் நடமாடத் தரும் பேயேன், இதுவேண்டும் அதுவேண்டும் என்று நிலைகொள்ளாது தெருவெல்லாம் தேடித் திரியும் நாயேன். ஆயினும் இவ்வாறு ஒவ்வாத பல செய்து பிழைவழி சென்றாலும் அத்தனையுயும் பொறுத்து எனக்கு அருள்பாலித்ததை நினைத்து நினைத்து, ஐயகோ உன் அளப்பரும் பெருங்கருணை செயல்படுமாற்றைக் கண்டு கண்டு வியக்கின்றேன் காண்"

கணவனுடைய வீட்டில் மகள் எவ்வாறு வாழ்கிறாள் எனக் காண வரும் ஒரு தந்தையின் வாய்மொழியாக அமைந்த ஒரு குறுந்தொகை பாடல் ஒன்னு. தன் வீட்டில் செல்வச் செழிப்பில் அளவிலா பாசத்தில் வளர்ந்த தன் பெண், கணவன் வீட்டில் பொறுப்புடன் நடந்து கொள்வதை கண்டு பெருமிதப்படும் தந்தையார் என்ன சொல்லிருக்காருன்னா

"முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅ துடாஇத்
குவளையுண் கண் குய்ப்புகை கமழத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்
றெண்ணுதன் முகனே"


இப்பாடலுக்கு வரிக்கு வரி பொருள் எனக்கும் தெரியவில்லை. இணையத்தில் தேடியும் கிடைக்கவில்லை. எனக்கு தெரிந்த வரை "மென்மையான காந்தள் மலர்களைப் போன்ற விரல்களைக் கொண்ட என் மகள், சமையலறையில் தயிர் தோய்ந்த கைகளுடன் எதோ வேலையில் ஈடுபட்டிருக்கிறாள். குவளை மலர்களைப் போன்ற அவள் கண்களில் சமையலறையின் புகை எரிச்சலை ஏற்படுத்துகிறது. அதை பொருட்படுத்தாமல் தயிர் தோய்ந்த கைகளுடனேயே கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். என் வீட்டில் செல்வச் செழிப்புடன் வளர்ந்த என் மகள், கணவன் வீட்டில் இவ்வளவு பொறுப்புடன் நடந்து கொள்கிறாளே என மகிழ்ந்தேன் யான்" என அத்தந்தை பாடுவது போல அமைந்துள்ளது இப்பாடல். நான் இப்பாடலுக்குக் கூறிய பொருளில் தவறிருந்தால் தெரியப்படுத்துங்கள்.

"படைப்புபல படைத்து பலரோடு உண்ணும்
உடைப்பெரும் செல்வராயினுமிடைபட
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டும் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குரை யில்லைத் தாம் வாழுநாளே"


மேலே உள்ள பாடலைப் பாருங்கள். பெருஞ்செல்வனாக இருந்தாலும், மெல்ல நடந்து சோறைக் கையில் வாங்கி பாதி உண்டும் மீதி கீழே இறைத்தும் காண்பவர்களை மயக்கும் குழந்தைகள் இல்லாதவர்கள் செல்வமில்லாதவர்களுக்கு ஒப்பானவர்கள் தான் எனக் கூறுகிறது இப்பாடல். இந்தப் பாடலிலிருந்து சில கருத்துகளைக் காப்பியடிச்சி நான் எழுதுனது இங்கே :)

உண்மையிலேயே தமிழ்ப் புலவர்களின் கற்பனை திறமையைக் கண்டு மலைத்துப் போயிருக்கிறேன். அகமாகட்டும், புறமாகட்டும் - பாடலை வளமாக்கும் இக்கற்பனை நயம் தான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் இத்தகையப் பாடல்களை இன்னும் மனதில் இருத்தியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. உதாரணத்துக்கு கலிங்கத்துப்பரணி பாடல் ஒன்று. போர்க்களத்தில் காயமடைந்து உயிரை விடப் போகும் தருவாயில் இருக்கும் தன் கணவனின் உடல் கூட பூமி என்னும் பெண்ணைத் தழுவக் கூடாது என்ற எண்ணத்தில் கணவனின் உடலை தன் இருகைகளால் தாங்கிப் பிடித்துத் முதலில் தன்னுயிரை விடுகிறாள் அந்த மனைவி. அதன்பின் கணவன் இறந்து அவன் உடல் கீழே விழும் போது கூடத் தன் மனைவியின் உடல் மேலே விழுகிறது. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா? அதே மாதிரி சிலப்பதிகாரத்துல ஒரு பாடல் கோவலனும் கண்ணகியும் பாண்டிய நாட்டுக்கு வரும் பொழுது, அங்கிருந்த கோட்டையின் மீதிருந்த கொடிகள் "வாரல் வாரல்" என அசைந்தாடினவாம். அதாவது உங்களுக்கு இங்கே ஆபத்து இருக்கு அதனால் நீங்க இங்கே வராதீங்க என்று வருந்திச் சொல்வது போல கொடிகள் அசைந்தனவாம். இது போக நோயினால் இறக்கும் குழந்தை கூட வீர மரணம் அடைந்தது போல இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக நென்சைக் கீறிய பின்னரே புதைப்பர் எனக் கூறுகிறது புறநானூறு. தான் விரும்பிய பெண் கிடைக்கவில்லை என்றால் கழுமரம் ஏறும் ஆண்கள்(யப்பா...சாகறதுக்கு வேற வழியே இல்லையா?), தலைவனைப் பிரிந்து பசலை நோய் காணும் தலைவி இப்படியாகப் ப்ளஸ் டூ வரைக்கும் படிச்ச தமிழ்லேயே பழந்தமிழர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்க்கை முறைமைகளைப் பற்றியும் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

இதுலேயே அகம் சம்பந்தப்பட்ட பாடல்கள் படிப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் இனிமையாகவும்...கிளுகிளுப்பாகவும் இருக்கும்:). அதுவும் என்னன்னு ஒன்னும் புரியாம பூஜ்யத்துலேருந்து இன்ஃபினிட்டி வரைக்கும் சைன் தீட்டாவையும் காஸ் தீட்டாவையும் இண்டக்ரேட் பண்ணி அதுக்கு ப்ரூபையும் எழுதற கணித க்ளாஸுக்கு அப்புறம் தமிழ் வகுப்பு வந்துச்சின்னா அது ஒரு பெரிய ரிலாக்சேஷனா இருக்கும். நான் படிச்சது வேற பாய்ஸ் ஸ்கூலா? கேக்கவே வேணாம். ப்ளஸ் டூல தமிழ் எடுத்தது வேற ஒரு தமிழ் ஐயா. தலைவன் தலைவின்னு வந்துட்டாலே ரோமான்சு தானே? அந்த ரோமான்சையே பாடமா படிக்கிற பாக்கியம் யாருக்கு கெடைக்கும். தலைவன் தலைவி பாடல் எதுவும் இப்போ எனக்கு ஞாபகத்துக்கு வரலை. திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய குற்றாலக் குறவஞ்சியில் வசந்தவல்லி என்னும் பெண் பந்தாடும் அழகை விவரிக்கிறாரு பாருங்க -


"செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயஞ்சொல் என்றாட - இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து குழைந்தாட
மலர்ப்பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே!"

ஒன்னும் வேணாம்... "வசந்தவல்லி பந்தாடினாள்" அப்படின்னு தமிழ் ஐயா சொன்னாலே போதும், பசங்க காரணமே இல்லாம கெக்கேபிக்கேன்னு சிரிப்பானுங்க. எதோ பீச் வாலிபால் ஆடற ஒரு பொண்ணை ஸ்க்ரீன்ல பாத்த மாதிரி. ஐயாவும் "டேய் பாடத்துல மட்டும் கவனம் செலுத்துங்கடா"ன்னு சொல்லிட்டு சிரிப்பாரு. எங்கே ஸ்கூல்ல மட்டும் தான் இப்படின்னு நினைச்சேன். ஆனா அப்படியில்லை ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்கற சில கிறித்தவ மேனிலைப் பள்ளிகளிலும் தமிழ் வகுப்புல பசங்க நல்லா எஞ்சாய் பண்ணியிருக்காங்கன்னு காலேஜ் படிக்கும் போது தெரிஞ்சிக்கிட்டேன். இதை எல்லாம் தெரிஞ்சிக்கிறதை விட்டுட்டு ப்ளஸ் டூ வந்தும் "அ-அம்மா, ஆ-ஆடு", "பசு பால் குடிக்கும்"னு ப்ரெஞ்சுலேயும் ஜெர்மன்லயும் படிச்ச சில பசங்களை நெனச்சா இன்னும் கூட சிப்பு சிப்பா வருது :)

Monday, February 11, 2008

உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு

அந்த இரவு - நம்ம ஜாவா பாவலர் கவிஞர் கப்பி எழுதுன ஒரு கதை. "நீங்கள் என்றாவது ஒரு இரவு காவல் நிலையத்தில் கழித்திருக்கிறீர்களா?? காவல் நிலையத்தில் நான் கழித்த அந்த இரவு இத்தனை வருடங்களுக்குப் பிறகும் சில தூக்கமில்லா நாட்களில் என்னை அலைகழித்துக் கொண்டிருக்கிறது"ன்னு ஆரம்பிக்கிற முதல் வரி தொடங்கி கதையின் நடுவில் நடுவில் இருக்கிற பல வரிகளுக்கும் 'ஆமாம்','ஆமாம்'னு சொல்லற மாதிரியான ஒரு கதை. அந்த கதைக்கு பாஸ்டன் பாலா போட்டிருக்குற ஒரு கமெண்ட் "Too close to be true" - அதுக்கும் நம்ம தரப்புலேருந்து ஒரு ரிப்பீட்டேய் தான். கற்பனையில் கதை எழுதுன ஒருத்தர் இவ்வளவு எதார்த்தமா அந்த சம்பவத்தை விவரிச்சிருக்காருன்னு நினைக்கும் போது மலைப்பாவும் ஆச்சரியமாவும் இருக்கு.

ஆகஸ்ட் 12, 2001 - என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒரு நாள். முதன் முதலாக என் வாழ்வில் காவல் நிலையத்தைக் கண்ட ஒரு நாள். போலீஸ்காரர்கள் துருவித் துருவி விசாரிப்பது எப்படி இருக்கும் என முதன் முதலாக என் வாழ்க்கையில் நான் கண்டறிந்து கொண்ட நாள். நிற்க. இது கற்பனை கதை இல்லை. கைப்புள்ள என்ற பெயரில் எழுதும் மோகன் ராஜ் ஆகிய என்னுடைய வாழ்வில் நடைபெற்ற ஓர் உண்மை சம்பவம். அப்போது நான் புது தில்லியில் வேலைக்குச் சேர்ந்த புதிது(ஜூன் 1, 2001 அன்று வேலைக்குச் சேர்ந்தேன்). உற்பத்தி சார்ந்த ஒரு நிறுவனத்தில், வரைபடங்கள்(GIS Mapping) துறையில் துணை மேலாளர்(Asst.Manager) ஆகச் சேர்ந்திருந்தேன். Manufacturingக்கும் GIS Mappingக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எங்களுடைய இப்பிரிவு அப்பெரிய நிறுவனத்துக்குள்ளேயே ஒரு startup company போல செயல் பட்டுக் கொண்டிருந்தது. கல்லூரியில் இருந்து தேர்வு செய்து வேலைக்கு அமர்த்தும் போதே ஒரு 'startup atmosphere'இல் வேலை செய்ய வேண்டியிருக்கும் எனக் கூறியே வேலைக்குச் சேர்த்தார்கள். Startup என்னும் சொல் கேட்பதற்கும் புத்தகத்தில் படிப்பதற்கும் வேண்டுமானால் ஃபேன்சியாக இருக்கலாம். ஆனால் ஒரு startup companyக்குக் கூடவே வருபவையாவன - குறைவான வசதிகள், தொட்டுக்கோ-தொடைச்சிக்கோ எனும் அளவில் நிதி, வெளியில் இருந்து வருமானத்தை ஈட்டினால் நீங்கள் சொல்வது மேலதிகாரிகளால் செவி மடுத்து கேட்கப்படும்.

ஆகஸ்ட் 2001 துவக்கத்தில் மலேசிய நிறுவனம் ஒன்றினால் நாங்கள் அணுகப் பட்டோம். புது தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன்(NDMC) அவர்களுடைய கழிவுநீர் கால்வாய்கள் சம்பந்தப்பட்ட டெண்டர் ஒன்று வெளியே வரவிருக்கிறது. நாங்கள் சமர்ப்பிக்கப் போகும் டெண்டர் ஆவணத்தில் எவ்வாறு எங்கள் பணியை மேற்கொள்வோம் என்ற அணுகுமுறை ஆவணம்(Approach Paper) ஒன்றையும் தரவுள்ளோம். அதற்கு இன்ன இன்ன பகுதிகளின் சாலையின் இருமடங்கிலும் என்னென்ன இருக்கின்றது எனும் விரிவான ஒரு வரைபடம் தேவை என்று ஒரு ஆர்டர் கொடுத்தார்கள். எங்கள் துறையின் முதல் ஆர்டர் என்பதால் எங்களுடைய பாஸும் அந்த ஆர்டரை எடுத்துக் கொண்டார். அவருக்கும் GIS Mapping, Survey பற்றி எல்லாம் ஒன்று தெரியாது. உற்பத்தி சார்ந்த தொழிற்சாலையில் 'Production Line' மேற்பார்வை செய்துக் கொண்டிருந்தவர் அவர். பெரும்பாலான Old Economy தொழில்களில் வழிமுறைகள்(Process) இல்லாமலேயே தான் பல பணிகளையும் மேற்கொண்டிருக்கின்றனர். இது நான் என் அனுபவத்தில் பலவிடங்களிலும் கண்ட ஒரு உண்மை. ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் ஒருவர் அவ்வேலையை விட்டு நிற்கும் போது அவர் செய்து கொண்டிருந்த வேலைக்குண்டான Documentation முதலியவை எதுவும் இருக்காது. அவ்விடத்திற்கு புதிதாக வரும் ஒருவருக்குக் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் தான் இருக்கும். நீஙகள் ஆரம்பம் முதலே ஒரு IT Companyஇல் வேலை செய்துக் கொண்டிருப்பவர் என்றால் இதை புரிந்துக் கொள்வது சற்று கடினமாகத் தான் இருக்கும். Programmer, Analyst, Project Lead, Project Manager என்று ஒரு ப்ராஜெக்டைச் செய்து முடிக்க ஒரு டீம் எல்லாம் இருக்காது. உற்பத்தி சார்ந்த நிறுவனத்தில் IT துறையில் வேலை பார்க்கிறீர்கள் என்றால் அ முதல் ஃ வரை எல்லாம் நீங்கள் தான். பாஸினுடைய சிந்தனை எல்லாம் ஆர்டர் பெறுவது, வருமானம் ஈட்டுவது என்பதிலேயே இருக்கும். அவருக்குக் கீழே எனக்கு ஒருபடி மேலே இன்னொருவர் இருந்தார். அவர் GIS துறையில் வேலை செய்து அனுபவம் பெற்றிருந்தவர். அவருக்கு இதன் கஷ்ட-நஷ்டங்கள் புரிந்திருக்க வேண்டும். அதனாலேயே அவர் இந்தப் ப்ராஜெக்டில் ஆர்வம் காட்டவில்லை.

ஆகஸ்ட் 11, 2001 - இதுவும் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நாள். முதன் முதலாக(கடைசி முறையாகவும் கூட என நினைக்கிறேன்!) என் வாழ்வில் நான் பட்டமளிப்பு விழாவைக் கண்ட நாள். இன்ஃபோசிஸ் தலைவர் திரு.நாராயண மூர்த்தி சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். IIT-Dயின் முன்னாள் மாணவரும் ஹிந்துஸ்தான் லீவரின் அப்போதைய தலைவருமான விண்டி பங்கா, மெக்கின்சி கன்சல்டிங்கின் அப்போதைய தலைவர் ரஜத் குப்தா ஆகியோரும் வந்திருந்தனர். சனிக்கிழமை காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அப்போதைய IIT Delhi இயக்குநர் திரு.ஆர்.எஸ்.சிரோஹி அவர்கள் கையால் பட்டம் வாங்குவதை படம் பிடித்திருந்த போட்டோகிராஃபரைத் தேடிக் கண்டுபிடித்து ஆர்டர் கொடுத்துவிட்டு ரொம்ப நல்ல பையனா சனிக்கிழமை மதியத்தைக் கூட லூஸ்ல விடாம ஆஃபீஸ் போய்ச் சேர்ந்தேன். அங்கே போனால் பாஸ் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார் - மலேசியா மன்னார் அண்ட் கம்பெனியின் ஆர்டர் என்னாச்சுன்னு? புதுசா வேலைக்குச் சேர்ந்த கம்பெனியில initiative, passion, leadership இதெல்லாம் காட்டனும்னு எங்கேயோ படிச்சது ஞாபகத்துக்கு வரவே நான் நாளைக்குப் போய் அந்த ஏரியாவோட ஸ்கெச் போட்டுக் கொண்டாறேன் சார்னு சொன்னேன்.

நாம படிச்சது என்ன, செய்யப் போற வேலை என்ன, இந்த வேலையை நம்மால செய்ய முடியுமா? செய்யறதுக்குத் தேவையான திறமை, உபகரணங்கள், உதவிகள் இதெல்லாம் நம்ம கிட்ட இருக்குதா எதை பத்தியும் யோசிக்கலை. அந்த வேலையை நல்ல படியா முடிச்சித் தரனும். நாங்க ஒத்துக்கிட்ட வேலையை முடிச்சித் தரனும் அப்படிங்கிற "உடோப்பிய" எண்ணங்கள் மட்டுமே என் மனதில் மேலோங்கி நின்றது. சரி ஆஃபிஸ் பாய்ஸ் ரெண்டு பேரைக் கூப்பிட்டுட்டுப் போன்னு சொன்னாங்க. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நான் என் வீட்டுலேருந்தும் அந்த ஆஃபிஸ் பாய்ஸ் அவங்க அவங்க வீட்டுலேருந்தும் நேரா 'சைட்டுக்கு' வந்துட்டாங்க. சர்வே லெவல், தியோடோலைட், ப்ளேன் டேபிள், ஜிபிஎஸ் இதை எல்லாம் வச்சி பண்ண வேண்டிய வேலையைச் செய்யறதுக்கு ஒரு முப்பது மீட்டர் டேப்பும், ஒரு பேட்டும், சில பேப்பர்களும், பென்சிலும் மட்டும் எடுத்துக்கிட்டுப் போயிருந்தோம். பெரிய முட்டாள்தனம்னு இப்ப புரியுது...அப்போ புரியலை. சாதிக்கனும் நல்ல பேரு வாங்கனும் என்கிற ஒரு முரட்டுத்தனமானக் குருட்டு தைரியம் மட்டும் தான் இருந்துச்சு. நாங்க எங்க வேலையைச்(Survey) செஞ்சிட்டு இருந்த ஏரியா குடியரசுத் தலைவர் மாளிகையிலேருந்து ஒரு 2-3 கி.மீ தொலைவு தான். அரசாங்க அதிகாரிகளும், எம்.பிக்களும், மந்திரிகளும் குடியிருக்கும் பங்களாக்கள் அமைந்துள்ள ஒரு இடம். காலேஜ் படிக்கும் போது எப்பவும் தியோடலைட்டை வச்சோமா ஒரு மணி நேரம் வெயில்ல நின்னோமா...அசிமத்ல(Azimuth) சூரியனைப் பாத்தோமா ஒரு நாலு ரீடிங் எடுத்தோமா, கேல்குலேஷன் எடுத்தோமா...ரிசல்ட் சரியா வரலைன்னா அப்படி இப்படி மாத்தி போட்டோமா...முடிச்சோமான்னு இருக்கும். ஆனா நிஜ வாழ்க்கையில் ஒரு நூறு மீட்டர் தூரத்தை சர்வே எடுத்து முடிக்கிறதுக்குள்ள நாக்கு தள்ளிடுச்சு.

அப்படியே சர்வே பண்ணிட்டு, பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம் இருக்கும் 'ரக்ஷா பவன்' இருக்கும் டாக்டர்.ராஜேந்திர ப்ரசாத் சாலை(அதான்னு நினைக்கிறேன்) அருகே நின்னுக்கிட்டு இருந்தோம். அப்போ சைக்கிள்ல வந்த ஆர்மி காரர் ஒருத்தர் "என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க?" அப்படின்னு கேட்டார். "சர்வே பண்ணிக்கிட்டிருக்கோம்" அப்படின்னோம். சரின்னுட்டு போயிட்டார். ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சி எங்களை நோக்கி ஒரு ஜீப் வந்தது. அதுல இருந்து ரெண்டு போலீஸ்காரங்க எறங்கினாங்க. "என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க"ன்னாங்க? சர்வே பண்ணிக்கிட்டிருக்கோம் அப்படின்னு சொன்னோம். "இது ஹை-செக்யூரிட்டி ஏரியா, இங்கே சர்வே எல்லாம் பண்ண பர்மிஷன் வாங்கனும். பர்மிஷன் இருக்கா?" அப்படின்னாரு. "இல்லீங்க" அப்படின்னேன். "உன் ஐ-கார்டை காட்டு" அப்படின்னாங்க. அப்போ என் கையில ஐ-கார்ட் இல்லை, ஏன்னா ஐ-கார்டே யாருக்கும் எங்க கம்பெனியோட கார்பரேட் ஆஃபிஸ்ல கொடுக்கலை. எங்களால தான் எல்லாருக்கும் அப்புறமா ஐ-கார்ட் கெடச்சுது.என் விசிட்டிங் கார்டை எடுத்துக் காட்டுனேன். "இந்த மாதிரி விசிட்டிங் கார்ட் என்னால ஆயிரம் அடிக்க முடியும்"ன்னார் கொஞ்சம் கறாரா. "சரி ஜீப்ல ஏறுங்க, உங்களை விசாரிக்கனும் ஒரு 10-20 நிமிஷம் வேலை" அப்படின்னாரு. முதன் முறையா போலீஸ் ஜீப்ல பின்பக்கம் ஏறுனேன். பத்து இருபது நிமிஷம்னு சொல்லி எங்களைக் கூப்பிட்டுட்டுப் போன இடம் சவுத் அவென்யூ போலீஸ் ஸ்டேஷன். ராஷ்டிரபதி பவன் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டுக்கு கீழே இருந்த ஒரு அவுட் போஸ்ட் அது.

ரக்ஷா பவன் கிட்ட எங்க கிட்டே பேசுன போலிஸ்காரர் பேசுனது முதல்ல கறாரா பட்டது. ஆனா சவுத் அவென்யூ போலிஸ் ஸ்டேஷன்ல இருந்தவங்க விசாரிக்கும் போது தான் தெரிஞ்சிச்சி...அவர் போலீஸ்காரர்கள்ல அன்பானவரு அப்படின்னு. அங்கே இருந்த போலீஸ்காரங்க விசாரிக்கிறதும் பேசற தொனியும் வித்தியாசமா இருந்துச்சு..,அதாவது மெரட்டற மாதிரி. என் கையில ஒரு பேஸ் மேப் இருந்தது அதுல சர்வே பண்ண வேண்டிய இடங்களைக் குறிச்சி வச்சிருந்தேன். "இந்த எடங்கள்ல எல்லாம் பாம் வக்க போறீங்களா. ஆகஸ்ட் 15 ஆம் தேதி வேற வருது" அப்படின்னு கேட்டதுமே பயந்துட்டேன். என்னமோ நெனச்சி வந்தோம் இப்படி தேசத் துரோக கேஸ், தடா, பொடான்னு எதாச்சுலயும் போட்டு உள்ளே தள்ளிடுவாங்களோன்னு அப்போ தான் நிலைமையின் தீவிரம் புரிஞ்சுச்சு. "அதெல்லாம் இல்லீங்க, நான் நல்ல கம்பெனியில கவுரவமான ஒரு பதவியில இருக்கேன். உண்மையிலே சர்வே பண்ணறதுக்குத் தான் வந்தோம், இங்கெல்லாம் வரக் கூடாதுன்னு எங்களுக்குத் தெரியாதுங்க"அப்படின்னு சொல்லி பாத்தேன். அங்க இருந்தவங்கள்லேயே குறிப்பா ஒரு சப்-இன்ஸ்பெக்டர் கொஞ்சம் பயங்கரமா இருந்தாரு. சினிமால காட்டுவாங்களே அந்த மாதிரி...உதட்டுக்குக் கீழே குட்காவை அடக்கி நாக்கைச் சுழட்டற டைப். "அதெல்லாம் விசாரணையில் தெரிய வரும்" அப்படின்னு பீதியைக் கெளப்புற மாதிரியே பேசினாரு.

அப்போ அங்கே இருந்த நவபாரத் டைம்ஸ் ஹிந்தி பேப்பர்ல வெளிவந்திருந்த ஐஐடி தில்லியின் பட்டமளிப்பு விழா போடோவைக் காட்டி..."சார்! நேத்து ஹவுஸ் காஸ்ல நடந்த இந்த ஃபங்சன்ல தான் சார் நான் டிகிரி வாங்கினேன்". "எல்லாம் சரி...உன் கிட்ட என்ன ஆதாரம் இருக்கு? ஐ-கார்டும் இல்லை, பெர்மிஷனும் இல்லை...எப்படி நாங்க நம்பறது? இன்னிக்கு ஜென்மாஷ்டமி ஒரு நாள் ராத்திரி இங்கே தங்கிட்டுப் போங்க" அப்படின்னு நக்கலாச் சொன்னாரு. அதுக்கப்புறம் எங்க ஆஃபீசுக்கும் என் பாஸுக்கும், என் பாஸோட பாஸுக்கும் போன் பண்ணி விஷயத்தைச் சொன்னேன். "சரி, கவலைபடாதே சீக்கிரமே வந்து உங்களைக் கூட்டிட்டுப் போறோம்"னு சொன்னாங்க. அதுக்கப்புறம் அந்நேரத்துல என் மனசுல ஓடுனதை வார்த்தைகளா வடிக்கிறது ரொம்ப கஷ்டம்னு நெனக்கிறேன். வலிய போய் விவகாரத்துல மாட்டிக்கிட்டோமோன்னு ஒரு பயம், இந்த விஷயம் வெளியில தெரிஞ்சா நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்கன்னு ஒரு கவலை, பையன் படிச்சி பெரிய கம்பெனியில வேலை செய்யறான்னு நினைச்சிட்டிருக்க பெத்தவங்க, தேசத்துரோக கேஸ்ல மாட்டிருக்கான்னு தெரிஞ்சா என்ன நெனப்பாங்க, அதுக்கப்புறம் வழக்கமா எல்லாரும் நெனக்கிற "நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?". ஒரு படி மேலே போய் கரகாட்டக்காரன் படத்துல காந்திமதி கிட்ட சண்முகசுந்தரம் சொல்லுவாரே "பூட்ஸ் காலால போலீஸ் காரங்க என் வயித்துல எட்டி எட்டி உதைச்சாங்கக்கா" அப்படின்னு சொல்ற மாதிரி விட்டுருவாங்களோன்னு ஒரு பயம் வேற.

இதுக்கு நடுவுல யார் யாரோ வந்தாங்க, என்னென்னமோ கேட்டாங்க...எல்லாத்தையும் எழுதிக்கிட்டாங்க. என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியலை. சினிமால பாத்தீங்கன்னா "யாரு பெத்த புள்ளயோ? இப்படி வந்து கஷ்டப்படுதே"ன்னு வசனம் பேச யாராச்சும் ஒருத்தங்க இருப்பாங்க...அதே மாதிரி அங்கேயும் ஒரு கான்ஸ்டபிள் இருந்தாரு. தேன்கூடு சிறுகதை போட்டியில பரிசு வாங்குனாருல்ல வாத்தியார் இளவஞ்சி? அதுல கதை நாயகனுக்கு அட்வைஸ் பண்ணற ஒரு ஹெட் கான்ஸ்டபிள் வருவாரே நியாபகம் இருக்கா? கிட்டத்தட்ட அவரை மாதிரி. "பாத்தா படிச்ச புள்ள மாதிரி இருக்குறே? ஏம்ப்பா இப்படி வந்து மாட்டிக்கிட்டீங்க? ஒன்னும் கவலை படாதீங்க...விசாரணை முடிஞ்சிட்டு விட்டுருவாங்க" அப்படின்னாரு. அவரு பேச்சைக் கேட்டதும் கொஞ்ச ஆறுதலா இருந்தது. அதுக்குள்ள அந்த சப் இன்ஸ்பெக்டர் வந்தாரு - "போட்டோவும் கைரேகையும் எடுத்திட்டியாய்யா"ன்னாரு? "அவசியமா எடுக்கனுமா"ன்னாரு நம்ம ஏட்டு. "ஆமா கட்டாயமா" அப்படின்னாரு சப் இன்ஸ்பெக்டர். அப்போ தான் அது நடந்தது. ஒரு ஸ்லேட்டுல இந்தியில என் பெயரை எழுதி கையில கொடுத்திட்டாங்க. அந்த பக்கமும் இந்த பக்கமும் திரும்பச் சொன்னாங்க...போட்டோ எடுத்தாங்க. உண்மையிலேயே அழற நெலைமைக்கு வந்துட்டேன். மகாநதி படத்துல கமல் அந்த மாதிரி எடுத்த ஸ்டில்லை எல்லாம் பாக்கும் போது என்னமோ ஸ்டைலிஷா இருக்குற மாதிரி இருந்துச்சு...ஆனா உண்மையிலேயே அது ரொம்பவே கலங்கச் செய்கிற அனுபவம்.

இதை எழுதும் போது பல எடங்கள்லயும் திரைப்படங்களை மேற்கோள் காட்டியிருக்கிறேன். ஏனென்றால் அது வரை சினிமாவில் மட்டுமே கண்டதை என் வாழ்வில் நேரடியாக அனுபவித்தேன். அதுக்கப்புறம் எல்லா விசாரணையும் முடிஞ்சி மாலை ஆறு மணியளவில் அனுப்பி வச்சிட்டாங்க. சிபிசிஐடி, சிபிஐ, ரா இப்படின்னு பல ஆளுங்க வந்து விசாரிச்சதா வெளியில வந்ததும் எங்க பாஸ் சொன்னாரு. அதுக்கப்புறம் ஆஃபீஸ் வந்ததுக்கப்புறம் பல விதமான விசாரிப்புகள். சிலர் உண்மையிலேயே வருத்தப்பட்டு விசாரிச்சாங்க. சிலர் நெஞ்சுக்கு நேரா ஸ்லேட்டைப் பிடிச்சிட்டு நின்னதைப் பத்தி நக்கலா விசாரிச்சாங்க...கூட வந்த பசங்க இதைப் பத்தி எல்லார் கிட்டேயும் உளறிட்டானுங்க போலிருக்கு. இதை கேள்வி பட்ட சிலர் உண்மையிலேயே நீ MBA படிச்சி பாஸ் பண்ணியா? இல்லை பிட் அடிச்சி பாஸ் பண்ணியான்னு கூட கேட்டிருக்காங்க..."ஏன்னா இந்த விஷயத்துல சாமர்த்தியமா நடந்துக்கத் தெரியாம வலிய போய் வம்புல மாட்டிருக்கியே" அப்படீங்கற அர்த்தத்துல. சில வருடங்களுக்கு அப்புறம் இதைப் பத்தி நெனச்சிப் பாக்கும் போது எனக்கே கூட சிரிப்பா இருந்திருக்கு...ஆனா அந்த அனுபவம் நடைபெற்ற ஒரு சில மாதங்கள் மனதை அழுத்துவதாகவும் வேதனையாகவும் இருந்தது என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

என் முட்டாள் தனத்தின் பிரதிபலிப்பான இச்சம்பவத்தை எழுதி வைக்க வேண்டுமா? எல்லாருக்கும் காட்ட வேண்டுமா என்று கூட பலமுறை நினைத்தேன். ஆனால் இது மாதிரியான நிகழ்வுகளும் வாழ்க்கையின் ஒரு பகுதின்னு பல வருடங்களுக்குப் பிறகு புரிஞ்சது. இதெல்லாம் நமக்கு மட்டும் ஏன் நடக்கதுன்னு நாம நெனக்கிறது கூட நாம மட்டும் நெனைக்கலை, நம்மள மாதிரியே பல பேரும் நெனைக்கிறாங்கன்னும் புரிஞ்சுது. இதுக்கும் மேலயும் எவ்வளவோ பாத்துட்டோம் இதெல்லாம் எழுதி வச்சிக்கிட்டா நம்ம அருமை பெருமை எல்லாம் வருங்கால சந்ததியினர் படிச்சித் தெரிஞ்சிக்குவாங்கல்ல

அண்ணன் நல்லவரு...வல்லவரு

கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு முன்னாடி ஒவ்வொரு நாள் காலையும் பள்ளிக்கூடம் கிளம்பறதுக்கு முன்னாடி 'கவுண்டமணி காமெடி' எனும் ஒலிப்பேழையைக் கேட்காமல் தொடங்கியதே இல்லை. கவுண்டமணியும் செந்திலும் தங்கள் புகழின் உச்சியில் இருந்த போது வெளிவந்த படங்களான உதயகீதம், வைதேகி காத்திருந்தாள், உன்னை நான் சந்தித்தேன், மலையூர் மம்பட்டியான் இப்படியாகப் பல படங்களின் புகழ்பெற்ற நகைச்சுவைக் காட்சிகளின் ஒலிவடிவம் தான் கவுண்டமணி காமெடி.

அதுல வர்ற ஒரு நகைச்சுவை காட்சி - வைதேகி காத்திருந்தாள் படத்தில் இருந்து.

"வீலா இது வில்லு மாதிரி இருக்கு"

"டேய்! கோமுட்டித் தலையா...என்னோட அறிவுக்கு நான் அமெரிக்காவுல இருக்க வேண்டியவண்டா...எதோ என் கஷ்ட காலம் இப்படி பழனியப்பன் சைக்கிள் வீலுக்குப் பெண்டு எடுத்துட்டிருக்கேன்"

"இதையெல்லாம் நீ போய் சொல்லோணும்டா...அழகுராஜ் அண்ணன் ஒரு நல்லவரு...அவர் ஒரு வல்லவரு...பெண்டு நிமித்திறதுல...இப்படியெல்லாம் போய் சொல்லோணும்டா"

"ஆம்பளைங்க கிட்ட சொல்லோணும்னு முக்கியம் இல்லை...குறிப்பா நம்மூரு பொம்பளைங்க கிட்ட போய் சொல்லோனும்"

"இந்த ஊருல உன்னை எவனும் கிட்ட சேக்க மாட்டான்...ஏன்னா கிட்ட வந்தா நீ கடிச்சி வச்சிடுவே. இருந்தாலும் உன்னை ஏன் நான் வச்சிருக்கேன்...இதை எல்லாம் போய் சொல்லுவேனு தான்"

பிப்ரவரி 11 முதல் 17 வரை தமிழ்மணத்தின் நட்சத்திர பதிவராக இருக்க தமிழ்மண நிர்வாகியிடமிருந்து மின்னஞ்சல் வந்ததும், வரிக்கு வரி மனப்பாடமான இந்த காமெடி தான் என் நினைவுக்கு வந்தது. ஆல் இன் ஆல் அழகுராஜா அளவுக்குத் திறமை எல்லாம் எனக்கு இருக்கா இல்லையான்னு தெரியாது. ஆனா அண்ணன் நல்லவரு...வல்லவருன்னு போய் சொல்றதுக்குக் கோமுட்டித் தலையன் யாரும் இல்லாத பட்சத்துல நம்மளைப் பத்தி நாமளே பெருமையா நல்லவரு வல்லவருன்னு எழுதிக்கிறதை ஒரு வாரத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டற வாய்ப்பா இந்த நட்சத்திர பதிவர்ங்கிற வாய்ப்பைப் பார்க்குறேன். இதை எனக்கு அளித்தத் தமிழ்மணம் நிர்வாகத்திற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அப்பாடா...தலைப்புக்கும் பதிவுக்கும் எப்படியோ முட்டி மோதி ஒரு தொடர்பை ஏற்படுத்தி விட்டாச்சு. ஒவ்வொரு முறையும் இதுக்குத் தான் அதிகமா மண்டை காயுது :)

"தமிழ் பதிவாம்...தமிழ் டைப்பிங்காம்...எல்லாம் வெட்டி வேலை...அதை செய்யற நேரத்துல வேற வேலை இருந்தாப் போய் பாக்கலாம்" அப்படின்னு என் நண்பன் திருமுருகன் கிட்ட சாட்ல பேசுன அன்னிக்கு சாயங்காலமே என் தமிழ் வலைப்பூவை ஆரம்பிச்சேன். பார்வர்டட் மெசேஜ்களையெல்லாம் காப்பியடிச்சி ஒட்டிக்கிட்டிருந்த என் ஆங்கில வலைப்பூ கமெண்ட் இல்லாமல் ஈயோட்டற கடுப்புல அப்படிச் சொன்னேன். ஆனா என்ன தான் இருக்குன்னு பாப்போமே அப்படின்னு பாக்க ஆரம்பிச்சப்போ வலைப்பூக்களில் தமிழ் எனக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டியது. சிலரைப் போல நெடுங்காலம் அடுத்தவரின் பதிவுகளைப் படித்திருந்து விட்டு என் வலைப்பூவைத் தொடங்கவில்லை...அப்போ தான் பாத்தேன்...அப்போவே ஆரம்பிச்சிட்டேன். தமிழ் வலைப்பூன்னு சொன்னாலும் என்னோட முதல் சில பதிவுகள் தங்கிலிஷ்ல தான் இருக்கும்...அதுக்குக் காரணம் மூனு பதிவு இருந்தா தான் தமிழ்மணத்துல இணைப்பாங்க அப்படீங்கறதுனால தான்.

நான் முதன் முதலில் பார்த்தது கவிஞர் நிலவு நண்பன் அவர்களுடைய வலைப்பூ...அதுக்கப்புறம் அங்கே பின்னூட்டம்(ஆரம்பிச்ச புதுசுல பின்னூட்டம்னா கமெண்ட்னு எனக்கு புரியலை) போட்டிருந்த ஜி.ராகவனோட வலைப்பூவைப் பார்த்தேன் "ஃப்ளைட்டில் வந்த பூர்ணிமா"??(னு நெனக்கிறேன்) அப்படின்னு ஒரு கதை எழுதிருந்தாரு...அங்கே இலவசக்கொத்தனார்ங்கிற பேரைப் பாத்தேன்...வித்தியாசமா இருக்கே...அப்படின்னு அங்கே போனா டுபுக்கு இண்டீப்ளாக்கர்ஸ் அவார்டு வாங்கி ஜெயிக்கிறதுக்கு வோட்டு போட்டா சோப்பு டப்பா ஸ்பூன் எல்லாம் கொடுக்கறதா விளம்பரம் பண்ணிருந்தாரு. இப்படியே நாளாக நாளாகத் தமிழ்ல எழுதறதுக்கும் குறிப்பா படிக்கிறதுக்கும் அடிமை ஆகிட்டேன். நாளடைவில் நண்பர்கள் வட்டம் அதிகம் ஆச்சு...காதலுக்கு மரியாதை படத்துல வர்ற "ஹே பேபி பேபி" பாட்டு பாத்திருக்கீங்களா? அதுல சார்லி, தாமு, விஜய் எல்லாம் கைகுடுத்து நண்பர்கள் ஆகற ஒரு காட்சி இருக்கும்...அதுல குறிப்பா சார்லியோட முகபாவம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்...அது மாதிரி பதிவுகள்ல கைகுலுக்கி(கமெண்ட் போட்டு) பல நண்பர்கள் அறிமுகம் ஆனாங்க. நான் எழுத வந்த ஆரம்ப காலத்தில் எனக்கு பெருமளவு ஊக்கம் கொடுத்தது தேவ், இளா, நம்ம தங்கத்தலைவி கீதா மேடம், இன்னொரு கீதா மேடம், தளபதியார் சிபி, இலவசக்கொத்தனார், எஸ்கே(இப்போ விஎஸ்கே), சிவஞானம்ஜி ஐயா, நிலவுநண்பன், இயக்குனர் இமயம் ஜி.ரா, பாலராஜன் கீதா சார் இவங்கல்லாம். அதோட கமெண்டு மட்டுமில்லாம கூடுதல் தகவல்களைச் சேர்த்து பதிவுக்கு வளம் சேர்த்த பல பதிவர்களும் இருக்குறாங்க. மிகத்திறம்பட நற்றமிழில் எழுதும் பல பதிவர்கள் இருக்கும் இத்தளத்தில் எனக்கும் இந்தளவு ஆதரவு கொடுத்த அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிவைப் போட்டுட்டு அதுக்கு கமெண்ட் வராதான்னு F5 அழுத்தி அழுத்தி பாக்கறது...நாம அடுத்தவங்கப் பதிவுல போட்ட கமெண்டுக்குப் பதிலு வந்துருக்கான்னு பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை எட்டிப் பார்த்துட்டே இருக்கறதுன்னு இல்லாத வேலை எல்லாம் பண்ணிருக்கேன். அப்போதெல்லாம் இந்தூரில் நானே தனியாகச் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். பதிவெழுதும் ஆர்வத்தில் சமைக்க மறந்து இரவு 11.30 மணிக்கு ஃப்ரூட்டி குடித்து தூங்கிய அனுபவமும் உண்டு. முதன் முதலில் 'நியூ படத்தில் பிடித்தது' என்ற என் பதிவு கில்லி பரிந்துரையிலும், தேன்கூடு அதிகம் பார்வையிடப்பட்ட பதிவுகளிலும் இடம்பெற்ற போது கிடைத்த மகிழ்ச்சி அளப்பிடற்கரியது. ஒரு பதிவுக்கு 4-5 கமெண்டு வந்துச்சுன்னா அன்னிக்கு சாப்பிட்ட சாப்பாட்டோட கூடுதலா இன்னொரு அன்லிமிட்டெட் மீல்ஸ் சாப்பிட்ட மாதிரி ஒரு நிறைவு வரும் :) அதுக்கப்புறம் 20-30ன்னு வந்துட்டிருந்த கமெண்டு இந்தப் பதிவுல:) முதன் முறையா 100ஐத் தாண்டுச்சு. நாம எழுதறதுக்குப் பின்னூட்டம் மூலமா கெடைக்கற ஃபீட்பேக் தரும் மகிழ்ச்சியும் போதையும் இருக்கே...அதை அனுபவிச்சாத் தான் புரியும். நகைச்சுவையா எழுதறேன்னு பல பேரும் சொல்லிருக்காங்க...மத்த விஷயங்களை விட என்னை முன்னிலை படுத்தி காமெடி பண்ணிக்கிறது எனக்கு சுலபமா வருதுன்னு நினைக்கிறேன். ஆனா நிஜ வாழ்க்கையில் நான் பயங்கர கடியன். எல்லா விஷயமும் பர்ஃபெக்டா ப்ளான் பண்ணி நடக்கனும்னு எதிர்பார்ப்பேன். பயங்கரமா அலைபாயற மனசு எனக்கு...ஒரு விஷயத்தைப் பத்தி யோசிச்சிட்டு இருக்கும் போது சம்பந்தமே இல்லாம இன்னொரு விஷயத்துல மனசு அலைபாயும். ஒரு சாம்பிள் கேக்கறீங்களா? கேட்டுட்டு அடிக்க வரப்படாது இப்பவே சொல்லிட்டேன். என்னைத் தாலாட்ட வருவாளா பாட்டுல மஞ்சள் நிற சுடிதார் போட்டுக்கிட்டு ஷாலினி ஓடற மாதிரி ஒரு காட்சி வரும், அதைப் பாத்துட்டு இருக்கும் போது ஃப்ரேம்ல டாப் ரைட் கார்னர்ல தெரியற மஞ்சள் நிற பூவோட தாவரவியல் பேரு(Botanical name) "சீஸால்பினியா பல்செரிமா"(Caesalpinia pulcherrima) தானேன்னு திடீர்னு சந்தேகம் வந்துரும். அப்படியே +2ல படிச்ச ஃபைலம், ஜீனஸ் இதெல்லாம் ஞாபகத்துக்கு வந்துரும்...அதுக்கப்புறம் காதலுக்கு மரியாதை செஞ்ச மாதிரி தான்:)

தமிழில் பெரிதாக வாசிப்பனுபவம் எதுவும் இல்லாத எனக்கு தமிழ் வலைப்பூக்கள் கற்றுக் கொடுத்தது ஏராளம். வலைப்பூக்களுக்கே உரிய தனித்தமிழ் சொற்களாகட்டும்(பின்னிப் பெடலெடுக்கறது, சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறது, ஆணி புடுங்கறது, பொட்டித் தட்டறது...), கதை/கவிதை/புகைப்படம் எனப் பல துறைகளிலும் மிளிரும் விற்பன்னர்களின் திறமையைக் கண்டு அவர்களைப் போலவே நாமும் பலவற்றையும் செய்ய வேண்டும் எனும் ஊக்கம் ஆகட்டும்..நான் கற்றதும் பெற்றதும் பல என்பதில் ஐயம் ஏதும் எனக்கில்லை. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டிய முக்கியமான ஒரு புரிதல் எனக்கு வாய்த்திருக்கிறது. அது வலைப்பூ என்பது என் கருத்துகளை நான் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு தளம். எனக்கு பிடித்தமான கருத்துகளை எவ்வாறு அடுத்தவர்கள் கேட்க வேண்டும் என நினைக்கிறேனோ...அதே போல அடுத்தவர்கள் சொல்வதையும் கேட்க நான் தயாராக இருக்க வேண்டும் என்பதே அது. அதே போல உன் கருத்து முட்டாள்தனமானது என்று அடுத்தவரை பார்த்து இடித்துரைப்பதை விடுத்து சொல்ல வேண்டிய விதத்தில் பக்குவமாக எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்ளும் திறமை அனைவரிடமும் இருக்கவே செய்கிறது என முதலில் நாம் நம்ப வேண்டும் என்ற ஒரு பக்குவம். ஜொள்ளுப்பாண்டி என்ற பெயரை வைத்துக் கொண்டு எழுதும் நம்ம பாண்டியின் பதிவுகளைப் பெண் பதிவர்களும் படித்து கமெண்ட் போடுகிறார்கள் என்பதிலேயே அதற்கு ஆதாரம் இருக்குதில்லையா? சுருக்கமாச் சொல்லனும்னா மொக்கை பதிவாகட்டும், இலக்கியமாகட்டும், நமக்கு ஆணித்தரமான நம்பிக்கை உள்ள ஒரு கருத்தாகட்டும், நம்முடைய கருத்தை ஒருத்தர் ஏத்துக்கறதாகட்டும், நாம சொல்ல வர்றதை சரியா புரிஞ்சிக்கறதாகட்டும் - எல்லாம் நாம சொல்ற விதத்தில் தான் இருக்கு :)