Monday, March 29, 2010

பொண்டாட்டியைப் பிரசவத்துக்கு அனுப்பிட்டு...

"பிரசவம்ங்கிறது ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒரு மறு ஜென்மம் மாதிரி" அப்படிங்கற உண்மை தமிழ்ப் படங்களைப் பார்க்கும் எந்தவொரு சராசரி ரசிகனுக்கும் தெரியும். ஒரு ஆணுக்குப் பிரசவம் குறித்த மெய்யும் பொய்யுமான பல விஷயங்களைப் போதிப்பது திரைப்படங்கள் தான் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். தமிழ்த் திரைப்படங்களில் பிரசவம் குறித்த காட்சிகள் பல விஷயங்களுக்காகப் பல விதங்களில் பயன்படுகிறது. உதாரணமாக கர்ப்பமாக இருக்கும் தங்கையின் வளைகாப்பில் அண்ணன் பாட்டு பாடுவதற்காகவும், தனக்கு பிறக்கப் போகும் குழந்தையை நினைத்து கதாநாயகன் பாடுவது போலவும், ஒரு காட்சியில் "மூன்று மாதம் முழுகாமல்" இருக்கும் கதாநாயகி அல்லது ஹீரோவுக்கு மிகவும் வேண்டப்பட்ட பெண்மணி அதற்கடுத்த காட்சியிலேயே "நிறைமாத கர்ப்பிணியாக மாறி" பிரசவ வேதனையில் துடிக்கும் போது, வில்லன்களின் தாக்குதலைத் துவம்சம் செய்து க்ளைமாக்ஸ் காட்சியில் அழகான குழந்தை பிறந்து "சுபம்" போடவும் உதவும். இவ்வளவு ஏன்...ஏதாவது ஒரு நடிகை கால்ஷீட் ப்ராப்ளம் செய்கிறார் என்றார் அவருடைய கதாபாத்திரத்தின் கதையை முடித்துக் கொள்ளவும் இந்த "பிரசவ மேட்டர்" உதவும். பிரசவம் குறித்த சில கலைச் சொற்களைக் கற்றுக் கொள்ளவும் சினிமா மிகவும் உதவுகிறது. உதாரணமாக மசக்கை, பச்சை உடம்புகாரி, வாயும் வயிறுமா இருக்கா, முழுகாம இருக்கா, மாசமா இருக்கா, இரட்டை நாடி, வவுத்து புள்ளைக்காரி போன்ற technical termsஐ எல்லாம் கற்றுக் கொள்ள சினிமாவை விட்டால் வேறு வழி ஏது? :)

சினிமா பிரசவங்கள் நகைப்புக்குரியதாய்த் தோன்றினாலும், நம் சொந்த வாழ்க்கையில் நமக்கு தெரிந்த/அல்லது வேண்டப்பட்ட ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறக்கப் போகிறது எனத் தெரியும் போது அவளுக்கு நல்ல படியாகக் குழந்தை பிறக்க வேண்டுமே என்ற ஒரு எதிர்பார்ப்பு நம்மை அறியாமலேயே வந்து ஒட்டிக் கொள்கிறது. மருத்துவத் துறையில் நிறைய வளர்ச்சிகள் ஏற்பட்டு குழந்தை பிறப்பு என்பது ஒரு சாதாரண நிகழ்வு என்ற நிலை வந்தாலும் கூட நமது சொந்தங்கள் அல்லது நமக்கு வேண்டப்பட்டவர்களுடைய குழந்தை பிறப்பு எனும் போது ஒரு விதப் பதற்றம் நம் மனதில் குடி கொள்வது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. இதுவே பிரசவம் தன்னுடைய மனைவிக்கு எனும் போதும் பிறக்கப் போவது தன்னுடைய வாரிசு எனும் போதும் ஒருவனுடைய மனதில் இருக்கும் உணர்வுகளை வார்த்தைகளால் வடிப்பது கடினம் என்றே எண்ணுகிறேன். மகிழ்ச்சி, அச்சம், எதிர்பார்ப்பு, கவலை போன்ற பலவித உணர்வுகளும் சேர்ந்த ஒரு வித விசித்திர கலவை அந்த உணர்வு. அதை அனுபவித்தவர்களுக்கே அது எவ்வாறு இருக்கும் எனத் தெரியும். பிரசவத்தின் போது வலியும் வேதனையும் ஒரு பெண்ணுக்குத் தான் என்பதும் அவள் மனதாலும், உடலாலும் தாங்கிக் கொள்ள வேண்டிய கணம் அதிகம் என்பதை பலவிடங்களில் படித்துத் தெரிந்து கொண்டாலும் பலர் சொல்லக் கேட்டிருந்தாலும் அதை எந்நாளும் உணரும் சக்தியற்றவன் ஆண் என்னும் நினைக்கும் போது ஒரு வித குற்றவுணர்ச்சி தோன்றி மறைகிறது. பாலைவன ரோஜாக்கள் படத்தின் பாடல் வரிகளான "காதல் என்பது பொதுவுடைமை கஷ்டம் மட்டும் தானே தனி உடைமை" என்னும் வரிகள் நான் என் குழந்தையின் பிறப்பை எதிர்நோக்கியிருந்த காலங்களில் பல முறை என் நினைவுக்கு வந்து சென்றதுண்டு.

பொதுவாகவே நம் சமூகத்தில் கருவுற்றிருக்கும் ஒரு பெண்ணின் மீது அவளை சுற்றியிருப்பவர்கள் கூடுதல் அக்கறை எடுத்து கவனிப்பதுண்டு. பேறு காலத்தில் செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை, உண்ணக் கூடியவை, உண்ணக் கூடாதவை என்பது பற்றிய பலவிதமான அறிவுரைகள் பலரிடமிருந்தும் கிடைக்கும். அவ்வறிவுரைகளை அப்பெண் செயல்படுத்துகிறாளா இல்லையா என்று பார்த்துக் கொள்ளக் கூடிய கடமை அவளுடய கணவனுடையதானது. அவள் அதை செயல்படுத்த வில்லை என அறிவுரை சொன்னவருக்குத் தெரிய வரும் போது "மாசமாருக்கற பொண்ணுப்பா கொஞ்சம் கவனமா பாத்துக்கக் கூடாதா? நீ தான் இதெல்லாம் பாத்து செய்யனும்" என்ற அறிவுரை அவளுடைய கணவனுக்குக் கிடைக்கும். பேருந்துகளிலோ பொது இடங்களிலோ கர்ப்பிணி பெண் உட்கார இடமில்லாமல நின்று கொண்டிருந்தால் எழுந்து இடம் தர வேண்டும் என்று பெற்றோர்கள் மூலமாக சிறுவர்களாக இருக்கும் போதே அறிவுறுத்தப் படுகிறது நம் சமூகத்தில். டெல்லியில் என்னுடன் பணிபுரிந்த ஒரு நண்பன் பின்னாளில் பெங்களூரில் பணிபுரிந்தான். அவனுடைய மனைவி கருவுற்றிருந்த போது அவன் குடியிருந்த வீட்டு ஓனரே வளைகாப்பு விழா நடத்தினாராம். கன்னடப் பெண்மணியான அவர் வட இந்தியாவைச் சேர்ந்த நண்பனின் மனைவிக்கு தென்னிந்திய முறைப்படி நடத்திய வளைகாப்பு விழாவின் படங்களை நண்பன் எனக்கு அனுப்பி வைத்தான். மற்ற நேரங்களில் எப்படியோ, பெரும்பாலான குடும்பங்களில் ஒரு பெண் இன்னொரு உயிரைத் தன்னுள் தாங்கிக் கொண்டிருக்கும் போது அவளுக்குண்டான மரியாதையும், அவள் மீது மற்றவர்கள் காண்பிக்கும் அக்கறையும் அதிகரிக்கத் தான் செய்கிறது.

"Exceptions are always a rule" என்று ஆங்கிலத்தில் ஒரு கூற்று இருக்கிறது. ஒரு விஷயம் இவ்வாறு இருக்கும் அல்லது இவ்வாறு நடக்கும் என்ற தீர்மானத்திற்கு வருவதற்கு முன் அவ்வாறு இல்லாது போதலுக்கான சாத்தியக்கூறுகளும் இருக்கத் தான் செய்கின்றன என்பதை ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். துரதிருஷ்ட வசமாக நான் அவ்வாறான 'exception' ஒன்றைத் தான் முதலில் தெரிந்து கொண்டேன். முன்ஷி பிரேம்சந்த் என்பவர் இந்தி மொழி இலக்கிய உலகின் தூண்களில் ஒருவராகக் கருதப் படுகிறார். ஒரு பத்து-பதினைந்து வருடங்களுக்கு முன் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது மாலை வேளைகளில் இந்தி வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தேன். நான் எட்டாம் வகுப்போ ஒன்பதாம் வகுப்போ படித்துக் கொண்டிருக்கும் போது இந்தி வகுப்புகளில் பிரவேஷிகாவோ(Praveshika) விஷாரத்தோ (Visharadh Poorvardh) படித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு தாளில் பிரபல எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் அடங்கிய புத்தகம் ஒன்று உண்டு. அதில் பிரேம்சந்த் அவர்கள் எழுதிய 'மதுவா'(Madhua) என்ற ஒரு கதை படித்திருக்கிறேன். கதையின் பெயர் அது தான் என்று நினைக்கிறேன்...சரியாக நினைவில்லை. வட இந்திய கிராமம் ஒன்றில் இரவு வேளையில் நடக்கும் நிகழ்வு ஒன்றினை கதைகளமாக ஆக்கியிருப்பார் ஆசிரியர். ஒரு குடிகார கணவன், அவனுக்கு ஒரு குடிகார தகப்பன். மனைவி கருவுற்றிருப்பாள். நிறைமாத கர்ப்பிணி. ஆள் அரவமற்ற ஒரு அத்துவான சூழ்நிலையில் அவர்கள் குடிசை அமைந்திருக்கும். தந்தையும், மகனும் குடிசையின் வெளியில் ஒரு லேண்டர்ன் விளக்கின் ஒளியில் அமர்ந்து கொண்டு குடித்துக் கொண்டிருப்பார்கள். குடித்துக் கொண்டிருக்கும் கணவன் தன் மனைவியை மதுவுடன் சேர்த்து சாப்பிடுவதற்காக உருளைக் கிழங்குகளை அவித்துத் தரச் சொல்வான். அவளால் இயலாத நிலைமையிலும் அவள் உருளைக்கிழங்குகளை வேக வைத்து தருவாள். சூடான உருளைக்கிழங்கின் தோலினை உரித்து வாயில் போட்டு இருவரும் தின்பார்கள். வாய் சுடுவதையும் பொருட்படுத்தாது மது அருந்துவதுமாகவும் கிழங்கு தின்பதுமாகவும் இருப்பார்கள்.

இந்நிலையில் அப்பெண்ணுக்குப் பிரசவ வலி எடுத்துக் கொள்ளும். வலி தாங்க முடியாது அவள் கதறுவாள். அதை பொருட்படுத்தாது அப்பனும் மகனும் குடித்துக் கொண்டிருப்பார்கள். பிரசவத்தின் போது கூட இருந்து உதவுவதற்கு யாருமில்லாது அப்பெண் இறந்து போவாள். கதையில் குழந்தை பிறந்து அத்தாய் இறப்பாளா, அல்லது சிசுவோடு சேர்ந்து அவள் மரித்தாளா என்பது இப்போது சரியாக நினைவில் இல்லை. ஆனால் நான் மேலே சொன்னவற்றை 'graphic detail'இல் எழுதியிருப்பார் ஆசிரியர். அக்கதை என்னை ஆழமாகப் பாதித்தது மட்டும் உண்மை. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்ற எண்ணம் அப்போது என் மனதில் எழுந்தது. இவ்வளவு வருடமாகியும் இக்கதை நினைவில் இருப்பதற்கு அது ஏற்படுத்திய பாதிப்பு தான் காரணம். காலம் செல்ல செல்ல கதையில் சொல்லப் பட்டது போன்றதும் இதை விட அவலமானதுமான சம்பவங்களைப் பற்றிப் படிக்கும் போது இலக்கியம் என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு தான் என்பது உறுதியானது. "பூந்தோட்டக் காவல்காரன்" என்றொரு படம். விஜயகாந்த், ராதிகா நடித்திருப்பார்கள். அதில் ஒரு காட்சியில் வில்லன்களுடன் விஜயகாந்துக்கு மோதல் ஏற்படும். சண்டையின் போது விஜயகாந்தை அடியாள் ஒருவன் பலமான உருட்டுக் கட்டை கொண்டு ஓங்கி அடிப்பான். அதை தடுக்க வரும் ராதிகாவின் வயிற்றில் உருட்டுக் கட்டையின் அடி விழும். இக்காட்சியை சிறு வயதில் சில முறை பார்த்திருக்கிறேன். சமீபத்தில் ஒரு நாள் அப்படத்தின் பாடல் ஒன்றைப் பார்க்க நேரிட்டது. மேலே சொன்ன அக்காட்சி நினைவுக்கு வந்தது. ஆனால் இம்முறை ஏனோ அக்காட்சியை நினைத்த மாத்திரத்தில் உடம்பு நடுங்கியது, ஒரு வித வேதனை மனதில் உருவானது, . அக்காட்சியை நினைக்காமல் மறக்க வேண்டும் என்று மனம் கட்டளையிட்டுக் கொண்டே இருந்தது. ஒரு வேளை அச்சமயம் ஒரு குழந்தைக்குத் தந்தையாகியிருந்ததால் அத்தகைய ஒரு காட்சியை நினைத்துப் பார்க்கக் கூட கஷ்டமாக இருந்ததோ என்னவோ?

பொதுவாகவே ஒரு ஆணின் மனதில் கருவுற்றிருக்கும் பெண்ணைப் பார்க்கும் போது அவள் ஒரு vulnerable நிலையில் இருக்கிறாள் என்ற ஒரு 'ஐயோ பாவம்' உணர்வு தான் மேலிடும். சமூகத்தால் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் 'டிரெய்னிங்' அத்தகையது. ஆறாவது மாதம் வரை நீச்சல் பயிற்சி மேற்கொள்ளலாம், ஏரோபிக்ஸ் செய்யலாம், கார் ஓட்டலாம் என்றெல்லாம் 'What to expect when you are expecting' புத்தகத்தில் எழுதப் பட்டிருந்ததைப் படித்த போது ஆச்சரியமே மேலிட்டது. பிரசவ வலி எடுத்து மருத்துவமனைக்குச் சென்ற போது "இது 'false pain' தான் சிறிது நேரம் கழித்து வாருங்கள்" என்று சொல்லித் திருப்பி அனுப்பப் பட்டதையும், "வலி அதிகமாக இருக்கிறது ஸ்ட்ரெச்சர் கொண்டு வாருங்கள்" என்று கதறும் பெண்ணிடம் "அதெல்லாம் முடியாது பிரசவ அறை வரை நடந்தே தான் வர வேண்டும்" என்று கூறியதையும் எனக்குத் தெரிந்த சில பெண்களின் மூலமாகக் கேள்வி பட்ட போது ஆச்சரியமாக இருந்த போதிலும் அத்தகைய சூழ்நிலையில் மருத்துவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ள முடிந்தது.

நிற்க. இந்த பதிவின் தலைப்பில் நான் எழுத நினைத்தது ஒரு வரி கூட இன்னும் எழுதவில்லை. அப்பதிவிற்கு ஒரு முன்னோட்டம் கொடுக்க ஆரம்பித்து அதுவே ஒரு பதிவின் அளவிற்கு நீண்டு விட்டதால், சொல்ல வந்த மேட்டர் வேறொரு பதிவில்...

Monday, March 15, 2010

திரைப்படம் எடுக்கும் எண்ணம் - 2

திரைப்படம் எடுக்கும் எண்ணம் - 1-ன் தொடர்ச்சி

தப்பிச் சென்ற சிறை கைதியான ஊமைத்துரையைப் பின் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர்கள், மாயமாக ஒரு கோட்டை நிற்பதை கண்டு மலைக்கிறார்கள். இதன் பின்னர் உக்கிரமாக நடைபெறும் போரினை விரிவாகத் திரையில் சொல்கிறோம். ஆறு நாட்களில் உருவாக்கப் பட்ட கோட்டை ஆங்கிலேயர்களின் பீரங்கிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்ததையும், போரின் போது ஆங்கிலேய படையினர் எவ்வளவு கொடூரமாகத் தாக்கி அழிக்கப்பட்டனர் என்பதனையும் காட்டுகிறோம். பல நாட்கள் பீரங்கி தாக்குதலுக்குப் பின் வீழ்ந்த கோட்டைக்குள் உட்புகுந்த படையினர், கோட்டையைப் பாதுகாக்க பாஞ்சாலங்குறிச்சி மக்கள் எந்தளவு ஆக்ரோஷமாகப் போராடியிருக்கிறார்கள் என்பதனை வீழ்ந்து கிடக்கும் சடலங்களைக் கண்டு தெரிந்து கொள்வதை சொல்கிறோம்.

பின்னர் எட்டையபுர பாளையக்காரரின் படைகளின் உதவியைக் கொண்டு கோட்டை விழுந்ததும் தப்பித்துச் சென்ற ஊமைத்துரையைப் பின் தொடர்ந்து செல்வதையும், போரில் படுகாயமடைந்த ஊமைத்துரையைச் சுந்தரலிங்கம் என்ற தளபதி தன் தாயிடம் சொல்லி காப்பாற்றச் சொல்வதையும், எட்டையபுர வீரர்கள் ஊமைத்துரையை அடையாளம் காணாமல் இருக்க தன் மகன் அம்மை நோய் கண்டு இறந்து விட்டதாகப் பொய் சொல்லி காப்பாற்றுவதையும், அவர் உடல்நலன் தேறும் வரை பணிவிடை செய்வதையும் காட்டுகிறோம். பாளையங்கோட்டை சிறையில் இருந்து ஊமைத்துரையை மீட்டவர்களில் முதன்மையானவர் தான் இந்த சுந்தரலிங்கம் என்பதனையும் நிறுவுகிறோம்.

கோட்டையின் வீழ்ச்சிக்குப் பின் தப்பிச் செல்லும் ஊமைத்துரையும், அவருடைய வீரர்களும் சிவகங்கை பாளையக்காரர் மருதுபாண்டியரின் உதவி கோருவதையும், சின்ன மருதுவின் ஜம்பு தீபகர்ப்ப பிரகடனம், மற்றும் மருதிருவரின் உதவியோடு ஊமைத்துரை மறுபடியும் வெள்ளையரை எதிர்ப்பதையும், கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கடும் சண்டைக்குப் பின் ஊமைத்துரையை விருப்பாட்சி எனும் இடத்தில் சிறை பிடித்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் பீரங்கி மேட்டில் வைத்து ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டதையும் காட்டுகிறோம். இப்பதிவில் முதல் சில பத்திகளில் காட்சிகளை விரிவாகச் சொல்லியது போல பின்வரும் பத்திகளில் சொல்லாது போனதை நானறிவேன். அதற்கு காரணம் அக்காட்சிகளை இன்னும் விரிவாக வரலாற்று ஆய்வு செய்து வலுவாக்க வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அக்காட்சிகளைப் பற்றி இன்னும் யோசிக்கவில்லை. மேலே சொன்ன வரலாற்று கதையினை ஆவணப்படம் போல் எடுப்பதா, குறும்படமாக எடுப்பதா இல்லை முழுநீள திரைப்படமாக எடுப்பதா என்றெல்லாம் எதுவுமே யோசிக்கவில்லை. திரைப்படத்துக்கு தேவையான கதைக்கும், திரைக்கதைக்குமான வேறுபாடு எனக்கு தெரியாது. இவை இரண்டையும் எழுதுவது என்றால் எப்படி என்றும் எனக்கு தெரியாது. சரி, அந்த விவாதத்திற்குள் இப்போது செல்ல வேண்டாம். மேலே சொல்லியிருப்பது ஒரு அவுட்லைன் தான்.

இந்தப் படத்துக்கான வரலாற்றுச் சான்றுகளாக இப்போரில் ஆங்கிலேயர்கள் தரப்பில் பங்கு கொண்ட கர்னல் வெல்சு அவர்கள் எழுதிய "Military Reminiscences" என்ற புத்தகமும், தமிழிலும் ஆங்கிலத்திலும் பல்வேறு வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்ட கட்டபொம்மன், ஊமைத்துரை பற்றிய வரலாற்று நூல்களும், மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களான கதை பாடல்களுமாக இருக்கும். வரலாற்று கதையை வேறொரு கலை வடிவமாக மாற்ற முற்படும் போது படைப்பாளிகள் எடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளாமல் ஒரு படம் எடுக்க முடியுமா என ஒரு எண்ணமும் இருக்கிறது. உதாரணமாக ஊமைத்துரை மணமானவரா இல்லையா என்பது போன்ற அவருடைய தனிப்பட்ட வாழ்வினைப் பற்றிய குறிப்புகள் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. கதையின் நீளத்தைக் கூட்டுவதற்காகவும், காண்பவர்களுக்கு ஆர்வத்தைக் கூட்டுவதற்காகவும் அவருக்கு ஒரு காதலி இருப்பது போலவும் ஓரிரு டூயட் பாடல்கள் வைப்பது போன்ற சுதந்திரங்கள் எதனையும் எடுத்துக் கொள்ளாமல், ஊமைத்துரை வாழ்ந்த வாழ்க்கைக்கு உண்மையாக ஒரு படம் எடுக்க முடியுமா? தெரியவில்லை.

வரலாற்றை பிற்சேர்க்கைகள் இல்லாமல் உள்ளது உள்ளது உள்ள படி சொல்ல முடியுமா என்ற சந்தேகமும் உள்ளது. உதாரணமாக கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுடன் போரிடும் போது அண்டை பாளையங்களைச் சேர்ந்தவர்களின் உதவிகள் அவருக்குக் கிட்ட வில்லை. ஏன்? கட்டபொம்மன் அண்டை பாளையங்களில் புகுந்து கொள்ளையடித்தார் என்று பல வரலாற்று ஆசிரியர்களும் சொல்கிறார்கள். ஆனால் பாளையக்காரர்களின் வரலாற்றை ஓளிவடிவமாக ஆவணப்படுத்திய முக்கிய சாட்சியங்களில் ஒன்றான வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் அவ்வாறு எதுவும் சொல்லப்பட்டதாக நினைவில்லை. ஆனால் கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுக்கு அடி பணியாமல் போரிட்டு வீரமரணம் எய்தினார் என்பது உண்மை. இதை ஆங்கிலேயர்களும் ஒத்துக் கொள்கின்றனார். நம் திரைப்படத்தில் கதை நாயகனை ஒரு சாதாரண மனிதனாக அவனுடைய நிறைகளை நிரம்பச் சொல்லும் போது குறைகளையும் மறைக்காமல் சொல்லி சித்தரிக்க முடியுமா என்ற ஒரு எண்ணம் இருக்கிறது. சமீப காலங்களில் கதை நாயகனின் குறைகளைச் சொல்லியும் அவனை நாயகனாக நிறுவிய படம் பருத்தி வீரன்.

ஊமைத்துரையை நேரில் கண்ட கர்னல் வெல்சு ஊமைத்துரையின் தோற்றத்தை இவ்வாறு விவரிக்கிறார். "He was a tall, slender lad, of a very sickly appearance, yet possessing that energy of mind which in troubled times always gains pre-eminence". ஆகவே ஊமைத்துரை வேடத்திற்கு மெலிதான, உயரமான ஒரு நடிகர் யார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஊமைத்துரை வாய் பேச முடியாதவர் என்பதால் கண்களால் உணர்வுகளைச் சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். ஊமைத்துரை இறக்கும் போதே அவருக்கு வயது முப்பத்தைந்தாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். தினமும் ஜிம்முக்குப் போய் முறுக்கேறிய நரம்புகளுடன் சிக்ஸ் பேக் அல்லது எய்ட் பேக் கொண்ட நடிகராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் எடுக்கும் படம் ஒரு 'metrosexual male'ஐப் பற்றியதல்ல. ஆகவே அத்தகைய நடிகர் நம்முடைய கதைக்கு சரிவர மாட்டார் என்று நினைக்கிறேன். ஊமைத்துரையாக நடிப்பவர் நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்களில் ஒருவரைப் போன்று இருக்கலாம். ஆனால் வெல்ஷ் அவர்கள் சொல்லும் எனர்ஜியைக் காட்டக் கூடிய நடிகராக இருக்க வேண்டும். ஒரு படி மேலே போய் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் கட்டபொம்மன் சந்ததியினரைச் சந்தித்து அவர்களில் ஒரு இளைஞருக்கு DNA பரிசோதனையின் மூலமாக அவருடைய முன்னோர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் ஒன்று உள்ளது.

கர்னல் வெல்சின் ஊமைத்துரையைப் பற்றி மேலும் இவ்வாறு எழுதியிருக்கிறார்.
"and he was generally the foremost in executing those plans, for our annihilation. Whatever undisciplined valour could effect, was sure to be achieved wherever he appeared ; though poor Oomee was at last doomed to grace a gallows, in reward for the most disinterested and purest patriotism. He had escaped, as it were, by miracle, in every previous engagement, although every soldier in our camp was most anxious to destroy so notorious and celebrated a chieftain." ஆங்கிலேயர்களை அழிக்க திட்டம் பெரும்பங்கு திட்டம் தீட்டியது ஊமைத்துரை என்று வெல்ஷ் குறிப்பிட்டுள்ளதையும் "celebrated chieftain" என்று அவர் சொல்லியிருப்பதையும் காட்சிகளாக வடிக்க மிகவும் சிரமப் பட வேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் தமிழ் வரலாற்று ஆசிரியர்களும், கதை சொல்லிகளும் ஊமைத்துரையைப் பற்றி இந்தளவுக்கு உயரிய வார்த்தைகளில் விவரித்திருப்பதாகத் தெரியவில்லை.

இசைக்கு ஒரே ஒரு சாய்ஸ் தான் - அது இளையராஜா என்று ஏற்கனவே சொல்லியாயிற்று. ஒளிப்பதிவாளர் - தாரே ஜமீன் பர் இந்தி படத்துக்கு ஒளிப்பதிவு செய்த திரு, நீரவ் ஷா, ரவி.கே.சந்திரன் இவர்களில் யார் என்று முடிவு செய்யவில்லை. ஊமைத்துரை பற்றிய வரலாற்று சான்றுகளுக்காக இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தென் தமிழ்நாட்டு பாளையக்காரர்கள் பற்றி ஏற்கனவே ஆய்வு செய்திருப்பதை தெரிந்து கொண்டேன். அவரை வசனம் எழுதச் சொல்லலாம் என்று எண்ணம். பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்களின் மூதாதையர்கள் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட கம்பளத்தவர்கள் என்ற காரணத்தினால் படத்தில் பேசப்படும் தமிழ் - நெல்லை சுற்றுவட்டாரத்தில் பேசப்படும் தமிழாக இருந்தாலும், அவர்களுடைய பேசுமொழியில் தெலுங்கு கலப்பு இருந்திருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும். அது இல்லாமலும் இருந்திருக்கலாம். ஆயினும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் கட்டபொம்மன்/ஊமைத்துரை வம்சத்தினரைச் சந்தித்துப் பேசினால் ஓரளவு யூகிக்க முடியும் என நினைக்கிறேன்.

இப்போதுள்ள படங்களில் காட்டப்படும் நெல்லைத்தமிழைப் போல வெறும் வாலே, போலே என வார்த்தைக்கு வார்த்தை லே போடும் exaggerationsகளை எல்லாம் மீறி உண்மையில் அழகாக இருக்கும் என்பது என் எண்ணம். அந்த அழகினையும் நம் படத்தில் ஆவனப் படுத்த முயல்வோம். நம்முடைய படம் ஆரம்பிப்பது கட்டபொம்மனின் மறைவுக்குப் பின்னர். ஆகவே கட்டபொம்மனைப் பற்றிய காட்சிகளை ஃப்ளாஷ்பேக்காகக் காட்ட வேண்டுமா கூடாதா என்ற கேள்வியும் இருக்கிறது. தமிழில் உள்ள வரலாற்றுச் சான்றுகளில் கட்டபொம்மனைப் பற்றிய செய்திகள் இருக்கும் அளவிற்கு, ஊமைத்துரையைப் பற்றிய செய்திகள் அவ்வளவாக இல்லை. ஊமைத்துரையைப் பற்றி ஏன் படம் எடுக்க வேண்டும் என என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்?

கட்டபொம்மனைப் பற்றி மாற்று கருத்துள்ள வரலாற்று ஆசிரியர்கள் கூட ஊமைத்துரையைப் பற்றி எதுவும் தவறாக எழுதி நான் பார்க்கவில்லை. மேலும் வெல்ஷ் அவர்களின் கூற்றுபடி ஊமைத்துரையை மக்கள் பெரிதும் விரும்பினர். அவர் நினைத்ததை சிரமேற் கொண்டு செயல்படுத்த ஆயத்தமாக இருந்தனர். எந்தவொரு சுதந்திரப் போராட்டமும் வெற்றி பெற அது ஒரு மக்கள் புரட்சியாய் இருப்பது இன்றியமையாததாகும். அந்த வகையில் அனைத்து சாதி மக்களையும் புரட்சியில் பங்குபெற செய்த ஊமைத்துரை என்ற தலைவன் தன்னிகரற்றவனாகத் திகழ்ந்திருப்பதற்கான குறிப்புகள் உள்ளன. அத்தோடு ஆங்கிலேயர்களின் ஏகாபத்தியத்திற்கு எதிராகத் தமிழகத்தில் தோன்றிய முதல் கிளர்ச்சி இது என்ற வகையில் ஊமைத்துரை பங்குபெற்று சண்டையிட்டு மடிந்த பாளையக்காரர் போர் முக்கியமானதாகும். அந்த நிகழ்வை மிகையில்லாமல் சொல்வது என்ற எண்ணம் தான் ஊமைத்துரை பற்றிய படம் எடுப்பதற்குண்டான காரணம்.

பி.கு: பல நாட்களாக மனதில் இருந்த ஒரு எண்ணத்தை எழுத்து வடிவமாக வலையேற்றி இருக்கிறேன். சினிமா தான் என் கனவு, என் வாழ்க்கை என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அது உண்மையுமில்லை. ஒரு வரலாற்று நிகழ்வை சினிமாவாக எடுத்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை தான் இந்த பதிவு. அவ்வளவு தான் :)

Sunday, March 14, 2010

திரைப்படம் எடுக்கும் எண்ணம் - 1

ஒரு பாதை. விலங்குகளும் மனிதர்களும் நடந்து சென்ற காலடித் தடங்களால் உருவான ஒரு மண் பாதை. அந்தப் பாதையில், தன்னுடைய இரண்டு ஆடுகளைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு மனிதர் நடந்து செல்கிறார். அவருடைய நடையில் ஒரு வேகம் தெரிகிறது. முகத்தில் ஒரு வெறுமை தெரிகிறது. அப்பாதை, சில ஓலை குடிசைகள் அமைந்துள்ள மேடான ஒரு இடத்திற்கு இட்டுச் செல்கிறது. அம்மனிதர் தன் நடையை ஒரு குடிசையை நோக்கிச் செலுத்துகிறார். ஆடுகள் இரண்டையும் குடிசைக்கு வெளியே கட்டிப் போட்டு விட்டு , குடிசையின் உள்ளே செல்கிறார். அவருடைய மனைவி குடிசையில் உள்ள ஒரு சில பொருட்களை மூட்டை கட்டுவதில் மும்முரமாக இருக்கிறார். வெகுநேரமாக அழுது களைத்த கண்களில் சோகம் தெரிகிறது. "நேரமாச்சு, வா கெளம்பலாம்" என்கிறார் தெலுங்கு மொழியில். "பெறந்து வளர்ந்த பூமியை விட்டு போகணும்ங்கிறீங்களே" என்கிறார் அவருடைய மனைவி. "என்ன பண்ணறது, இந்த மண்ணுல நாம உயிர் வாழ இனிமே ஒன்னும் இல்லை, போய் தான் ஆகனும்" என்று சொல்லி மனைவியை ஆதரவாகப் பிடித்துக் கொள்கிறார்.

பின்னர் தங்கள் உடைமைகளையும், தாங்கள் வைத்து வணங்கும் பெண் தெய்வத்தின் மண் சிலையையும் எடுத்துக் கொண்டு, வாசலில் கட்டியிருக்கும் ஆடுகளை அவிழ்த்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்புகிறார்கள். அவ்விடத்தில் வாழும் அம்மனிதரைப் போன்ற ஏனையோர்களும் தத்தம் மனைவி, மக்கள், விலங்குகள் ஆகியவற்றை கூட்டிக் கொண்டு அங்கிருந்து செல்கிறார்கள். ஆண்கள் அனைவரும் கம்பளங்களைத் தங்கள் தோள் மேல் போர்த்தியிருக்கிறார்கள். இந்த இடத்துல மெலிந்து போன சில பசு மாடுகளும், சோக முகம் கொண்ட மனிதர்களும் நடந்து போறதை லோ-ஆங்கிளில் காட்டறோம். "வடக்கு ஆந்திர பிரதேசம், கி.பி.12 ஆம் நூற்றாண்டு" என சப்-டைட்டிலில் காட்டறோம். அம்மக்கள் பல துயரங்களை அனுபவித்து தென் தமிழ்நாட்டை அடைகிறார்கள். முதல் காட்சியில் காட்டப்பட்ட அம்மனிதர், அங்குள்ள மன்னன் ஒருவனிடத்தில் சேவகனாக சேர்கிறார். அம்மன்னனின் நன்மதிப்பை பெறுகிறார். நாட்டின் ஒரு சிறிய பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பும் அவருக்குக் கிடைக்கிறது. இதை எல்லாம் ஒன்னரை-ரெண்டு நிமிஷத்துக்குள்ள, கோர்வையான சில காட்சிகளின் மூலமாக மிகைப் படுத்தாமல் சொல்கிறோம்.

அடுத்த காட்சி ஆரம்பிப்பதற்கு முன்னர் நாய்கள் ஆக்ரோஷமாகக் குரைக்கும் ஒலி கேட்கிறது. காட்சி திரையில் ஆரம்பிக்கும் போது நாய்கள் ஒரு புதருக்குள்ளிலிருந்து வேகமாக வெளிப்பட்டு முன்னோக்கி வேகமாக ஓடுவது காண்பிக்கப் படுகிறது. நாய்களுக்குப் பின்னால் அம்மனிதர் ஒரு குதிரையில் வந்து கொண்டிருக்கிறார். நாய்களுக்கு முன்னால் காட்டு முயல் ஒன்று வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வேட்டை நாய்கள் வேகமாக ஓடுவது காட்டு முயலைப் பிடிக்க என்பது காட்சியிலிருந்து தெரிவிக்கப் படுகிறது. நாய்கள் காட்டு முயலைப் பிடித்தாக வேண்டும் என்ற ஆர்வம், நாய்களின் எஜமானரான அம்மனிதரின் முகத்தில் தெரிகிறது. அடர்ந்த காட்டுக்குள் நாய்கள் முயலைத் துரத்துவதும், மனிதர் குதிரையில் பின் தொடர்ந்து வருவதும் ஆக்சன் ஷாட்டாகக் காண்பிக்கப் படுகிறது. தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்த முயல் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், தன் இது வரை ஓடி வந்த திசையை நோக்கித் திரும்புகிறது, வேட்டை நாய்களை நேருக்கு நேராகப் பார்க்கின்றது. அதுவரை பயந்து ஓடிக் கொண்டிருந்த முயல், வேட்டை நாய்களைத் துரத்த ஆரம்பிக்கிறது. நாய்களை ஒரு முயல் துரத்துவதையும், தன்னை கடந்து அவைகள் ஓடுவதையும் அத்திசையை நோக்கி அம்மனிதர் பார்க்கிறார்.

முயல் எந்த இடத்தில் திரும்பி நாய்களைத் துரத்த ஆரம்பித்ததோ அந்த இடத்திற்கு தன் குதிரையில் இருந்து இறங்கி நடநதுச் செல்கிறார். அவருடைய கண்களில் தெரியும் வியப்பைப் பார்வையாளருக்குக் காட்டுகிறோம். அவருடைய கருவிழிகளுக்குள்ளே, அவ்விடம் வளர்ச்சி பெறுவதையும் ஒரு கோட்டை உருவாவதையும் காட்டுகின்றோம். இப்போது கேமரா அம்மனிதரின் தலைக்கு மேல் செல்கிறது, மேலே எழும்பிக் கொண்டே இருக்கிறது, அவருடைய தலை ஒரு சிறு புள்ளியாகத் தெரியும் வரை. இவ்விடத்தில் அப்புள்ளி சேட்டிலைட் இமேஜரியாக(Satellite Imagery) மாறுகிறது. புள்ளி தெரிந்த அதே இடத்தில் சேட்டிலைட் இமேஜரியின் மீது ஒரு புள்ளி வைத்து "பாஞ்சாலங்குறிச்சி, கி.பி.12ஆம் நூற்றாண்டு" எனக் காட்டுகிறோம். அந்த புள்ளியிலிருந்து வலப் பக்கமாக சிறிது தூரம்(ஒரு சில மில்லிமீட்டர்கள்) சேட்டிலைட் இமேஜரியின் மீது கேமரா பயணிக்கிறது. அங்கு இன்னுமொரு புள்ளி தெரிகிறது. அப்புள்ளியின் அருகே "கயத்தாறு, அக்டோபர் 17, கி.பி.1799" எனக் காட்டுகிறோம். அந்த புள்ளியிலிருந்து கேமரா உள்நோக்கி கீழிறங்க ஆரம்பிக்கிறது. இறங்கிக் கொண்டே இருக்கிறது. ஆகாய விமானத்தில் இருந்து கீழே பார்த்தால் எவ்வாறு பூமி தெரியுமோ அவ்வாறு நிலம் தெரியத் துவங்குகிறது.

மேலும் கேமரா கீழே இறங்குகிறது. பச்சையான மேற்பரப்பு தெரிகிறது. கேமரா இன்னும் கீழிறங்குகிறது. கேமரா கீழிறங்குவது ஒரு மரத்தினூடாக என்பது பார்ப்பவருக்குத் தெளிவாகிறது. அம்மரம் ஒரு புளியமரம் என்று கேமரா கீழிறங்கும் போது தெரியும், புளிய மர இலைகள் மூலமாகவும், மரத்தில் தொங்கும் புளியம்பழங்களின் மூலமாகவும் பார்ப்பவர் தெரிந்து கொள்கிறார். கீழிறங்கிக் கொண்டிருக்கும் கேமராவுக்கு ஒரு பெரிய மரக்கிளை தெரிகிறது. அம்மரக் கிளையில் தடிமனான ஒரு கயிறு கட்டப் பட்டிருப்பது தெரிகிறது. கேமரா இன்னும் கீழிறங்குகிறது. கீழே தொங்கிக் கொண்டிருக்கும் கயிறைக் காட்டிக் கொண்டே கேமரா கீழிறங்குகிறது. இடுப்பு வரை வெற்றுடம்பாக இருக்கும் ஒரு சடலம் கயிறில் தொங்கிக் கொண்டிருப்பதை காட்டுகிறோம். கேமரா காட்டுவது அச்சடலத்தின் முதுகு பகுதியை தான். கறுத்த உடல் நிறம் கொண்ட அம்மனிதனின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருக்கிறது. கால்களில் வசதி படைத்தவர்கள் அணியும் காப்புகள் அணிந்திருப்பது தெரிகிறது. பின்னணியில் மக்கள் அழுது புலம்புவதையும், கயிற்றில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் மனிதனைப் போல உடையணிந்த இன்னும் சிலர் விலங்கிடப்பட்டு துப்பாக்கி ஏந்திய வீரர்களால் இழுத்துச் செல்லப் படுவதையும் காட்டுகின்றோம். இக்காட்சி முழுவதும் சூரியன் மறைந்த மாலை நேரத்தில்(ஆனால் இருள் சூழாத) படமாக்கப் படுகிறது.

அடுத்த காட்சி விளக்கு வைத்த மாலை வேளையில் தொடங்குகிறது. விபூதி பட்டை அணிந்த பக்தர்கள் கூட்டம் ஒன்று காவடி தூக்கிக் கொண்டு, காவடி சிந்து பாடிக் கொண்டு துப்பாக்கி ஏந்திய வீரர்கள் காவல் காக்கும் ஒரு வாயிலை நோக்கி வருகிறது. அவர்களிடம் விபரம் கேட்டுக் கொண்ட காவலாளிகள் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். காவடி எடுத்து வந்தவர்கள், காவலாளிகளின் கண்களிலிருந்து மறைந்ததும் வெவ்வேறு திசைகளில் பிரிகிறார்கள். காவடிக்குள்ளிலிருந்து அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து தங்கள் உடைகளுக்குள் மறைத்து கொள்கிறார்கள். இருள் கவியத் தொடங்கியதும் வெவ்வேறு திசைகளிலிருந்து மறைந்து மெல்ல மெல்ல ஒரு கோட்டையை நோக்கி வருகின்றனர். அங்கு காவலாளிகளை மறைந்திருந்து தாக்கிக் கொன்று கோட்டைக்குள் புகுகின்றனர்.

கோட்டைக்குள் அவர்கள் எதையோ தேடிக் கொண்டே இருக்கின்றனர். அப்போது அங்கு ஒரு சிறை கதவு தெரிகிறது. அதை தாக்கி உடைத்து, சிறைக்குள்ளிருக்கும் நபரின் கைவிலங்குகளை உடைக்கின்றனர். அவருடைய கைகளை முத்தமிடுகின்றனர். கோட்டையின் ஒரு பகுதியை உடைத்துக் கொண்டு வீரர்களும், அந்நபரும் வெளியேறுகின்றனர். அப்போது படத்தின் பெயர் போடுகின்றோம் - "ஊமைத்துரை". பாளையங்கோட்டை சிறையிலிருந்து ஊமைத்துரையை மீட்டு கொண்டு வரும் போது ஆங்கிலேய தளபதிகளும், அவர்களுடைய படைவீரர்கள் அனைவரும் அவர்கள் தப்பிச் சென்ற பாதையில் இருந்து சற்றே விலகி ஒரு இடத்தில் விருந்தில் கலந்து கொண்டிருந்ததையும், வீரர்கள் அந்நேரத்தில் ஆங்கிலேயர்களைத் தாக்கியிருந்தால் வரலாறு மாறியிருக்க வாய்ப்பிருந்ததையும் காட்டுகிறோம்.

சில நாட்கள் காலாட் பயணத்திற்குப் பிறகு தங்கள் சொந்த மண்ணான பாஞ்சாலங்குறிச்சியை அடைகின்றனர். தமது அண்ணன் கட்டபொம்மனின் மறைவிற்குப் பின் ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை அனைத்து சாதி மக்களின் உதவியையும் கொண்டு ஆறே நாட்களில் மறுபடியும் கட்டி முடிக்கின்றான். இந்த சிச்சுவேஷனில் ஒரு பாட்டு வருகிறது. படத்திற்கு இசை - இசைஞானி இளையராஜா. அதாவது இரவு பகலாக மக்கள் மண்சுமந்து அந்த கோட்டையைக் கட்டும் போது களைப்பு தெரியாமல் இருக்க அவர்கள் பாடுவது போல ஒரு பாட்டு வருகிறது. களிமண்ணும் சுண்ணாம்பும் பதநீரும் கரும்புச் சக்கையும் சேர்த்த கலவையை வைத்து கட்டும் போது எழுப்பப் படும் ஒலியோடு பாடல் தொடங்குகிறது.

வேட்டை நாயை விரட்டிய முயலின் கதையோடு ஆரம்பிக்கிறது பாடல். அத்தகைய பெருமைகளைக் கொண்ட பாஞ்சாலங்குறிச்சி என்பது வீரம் விளைந்த மண் என்பது நிறுவப் பெறுகிறது. அடுத்து கட்டபொம்மனின் பெருமைகளைச் சொல்கிறது, வணிகம் செய்ய வந்த வெளிநாட்டவர்க்கு வரி கொடுக்க மறுத்தது, அவர்களுடன் போரிட்டு வீர மரணம் அடைந்தது இவை எல்லாவற்றையும் இயல்பான மொழியில் ஒரு கதை பாடல் போல ஒலிக்கிறது இந்தப் பாடல். பாடலில் பல்வேறு உணர்ச்சிகள் காட்டப் படுகிறது. பாஞ்சாலங்குறிச்சி மண்ணின் பெருமை சொல்லும் இடத்திலும், கட்டபொம்மனின் வீரதீர பெருமைகளைச் சொல்லும் இடத்திலும் ஒருவித மகிழ்ச்சி உணர்வும், கட்டபொம்மன் மறைந்தது பற்றிப் பாடும் போது சோகமும் கலந்த கலவையாக இப்பாடல் வரும். கடைசியாக நீங்களா? நாங்களா? மோதி பார்த்துடுவோம் வாங்கடா வெள்ளையர்களா என்று சவால் விடும் தொனியில் பாடல் முடிவடையும்.

(தொடரும்...)
திரைப்படம் எடுக்கும் எண்ணம் - 2

Thursday, March 11, 2010

பள்ளிக்கூட நினைவுகள் - Back to School - குவிஸ் பதிவு

வணக்கம் நண்பர்களே. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடக்கும் நேரமிது. இது போக பள்ளியில் படிக்கும் பிற வகுப்புகளில் உள்ள மாணவர்களும் தத்தம் ஆண்டுத் தேர்வுகளுக்காகத் தம்மை தாமே தயார்படுத்திக் கொண்டிருப்பார்கள். இந்த நேரத்தில், பள்ளிப் படிப்பை பல ஆண்டுகளுக்கு முன்னால் முடித்த நாம், அப்போது நாம் படித்ததை நினைவு கூர்ந்து ஒரு தேர்வு எழுதினால் எப்படி இருக்கும் எனத் தோன்றியது. தேர்வு என்ற சொல் உங்களுக்கு ஒவ்வாது போனால் குவிஸ் போட்டி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் :)

நாம் பள்ளிக் கூடத்தில் படித்த தமிழ் செய்யுள், துணைப்பாட நூலிலிருந்தும் ஆங்கில செய்யுள்(Poetry) மற்றும் உரைநடை(Prose) நூலிலிருந்தும் சில வரிகளை எடுத்து இங்கே கொடுத்திருக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் - செய்யுள் அல்லது கதையின் பெயர், ஆசிரியர் பெயர் இவற்றைக் குறிப்பிட வேண்டும்.

தமிழ்

1. "ஆற்று வெள்ளம் நாளை வரத்தோற்று தேகுறி - மலை
யாளமின்னல் ஈழ மின்னல் சூழமின்னுதே
நேற்று இன்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே - கேணி
நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே"

2. "இதுபொறுப்ப தில்லை - தம்பி
எரிதழல் கொண்டுவா
கதிரை வைத்திழந்தான் - அண்ணன்
கையை எரித்திடுவோம்"

3. "உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க்கேசர ணாங்களே"

4. "பலசான் றீரே பல்சான் றீரே
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ"

5. "மாட்டையவிழ்த்தாய்விட்டது.

மனைவி 'மாடு' எழுபது ரூபாயிற்றே. 'குழந்தைகளுக்குப் பாலாயிற்றே' என்று தடுத்தாள். மே வரும்படி வேறு வருகிறதாம்.

"என் புள்ளெகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக்கிடும்" என்று விட்டார்.


ஆங்கிலம்

1. But he fancied his English, finished and refined at no less a place than the University of Oxford. He was fond of conversation, and like a cultured Englishman, he could talk on almost any subject—books, politics, people. How frequently had he heart English people say that he spoke like an Englishman!

2. He ran his hand along the trunk of the tree and put his finger to the tip of a leaf. ‘I wonder,’ he whispered. ‘Is this what it feels to be God?’

3. "His state Is kingly: thousands at his bidding speed,
And post o'er land and ocean without rest;
They also serve who only stand and wait."

4. "I was angry with my friend:
I told my wrath, my wrath did end.
I was angry with my foe;
I told it not, my wrath did grow"

5. Another bus, the last on the road, sailed by indifferent to the shouts of the passengers to stop. “They stick by each other—the villains” was the comment.

உங்கள் பதில்கள் உடனடியாக வெளியிடப் படாது. சரியா? தவறா? என்று மட்டும் சொல்கிறேன். கூடுதலாகப் பாடலின் பொருள், கதையின் கரு கொடுத்தாலும் நலம். இவ்வரிகளைப் படிக்கும் போது தங்கள் மனதில் தோன்றும் நினைவுகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். சரியான பதில்களோடு இன்னுமொரு பதிவோடு வருகிறேன். நன்றி.