Saturday, May 27, 2006

நல்ல கருத்துள்ள பதிவு

"ஏன்டா கோமுட்டித் தலையா கால நொண்டறே?"

"வயித்தை வலிக்குதுண்ணே"

"வயித்து வலிக்கு ஏன் கால் நொண்டறே?"

"எதாச்சும் மருந்து இருந்தா சொல்லுங்கண்ணே"

"வயித்து வலிக்கு மருந்தா? ...ரெண்டு இட்லி கெட்டிச் சட்னி வச்சி சாப்பிடு... வலி நின்னு போயிடும்"

"வெளயாடாதீங்கண்ணே"

"ஒன் கிட்ட என்னடா வெளயாட்டு வேண்டி கெடக்குது?"

"நான் என்ன டாக்டர்.ஆல் இன் ஆல் அழகுராஜா எம்.பி.பி.எஸ்னு போர்டாடா மாட்டி வச்சிருக்கேன்?"

"சைக்கிள் கடையில வந்து வயித்து வலிக்கு மருந்து கேக்கிறியே? மண்டையில எதாச்சும் இருக்கா?"

"...."

"போங்கடா...அடுத்த ஜென்மத்துலயாச்சும் மனுஷனாப் பொறங்கடா"

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

"ஏண்டா எப்பவும் எருமை சாணியை மூஞ்சுல அப்புன மாதிரியே திரியறே?"

"வாழ்க்கையிலே நிம்மதியே இல்லண்ணே"

"ஹாஹாஹா...ஒனக்கும் வாழ்க்கையில நிம்மதியில்லையா?"

"அப்படி நடுத்தண்ணியில போய் நில்லு...நிம்மதியான எடத்துக்குப் போய் சேந்திரலாம்"

"சந்தோஷம் வர்றதுக்கு வழி எதாவது இருந்தா சொல்லுங்கண்ணே?"

"ஆங்...அப்படி வா? இதுக்குத் தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணுங்கிறது"

"ஒக்காருடா"

"அட சீ...நல்லா ஒக்காருடா"

"அடேய்! எனக்கு சந்தோஷம் வரனும்னா என்ன பண்ணுவேன் தெரியுமா?"

"உம்"

"நேரா கடைக்குப் போவேன்..."

"அங்.."

"காலே கால் கிலோ அல்வா வாங்குவேன்..."

"அங்..."

"ரெண்டு மொழம் மல்லிகைப்பூ வாங்குவேன்.."

"அங்..."

"அத எடுத்துக்கிட்டு நேரா வீட்டுக்குப் போயி... எம் பொண்டாட்டி கிட்ட குடுப்பேன்"

"அங்..."

"அவ என்ன வேலை செஞ்சிட்டிருக்காளோ அத அப்படியே போட்டுட்டு என் கூட ஆத்தங்கரைக்கு வந்துருவா"

"அங்..அங்.."

"அப்புறம் அவ மடியில நான் படுக்க... என் மடியில அவ படுக்கன்னு... இப்படியே பொழுது போற வரைக்கும் ஒரே கிளுகிளுப்பா இருக்கும்"

"கி...கி....கி...கி..."

"வேணா நீயும் செஞ்சு பாரு"

"ஆன்...செஞ்சிர்றேன்"

"டேய்! அந்த பக்கம் போனா சந்தோஷம் வராது... சாவு தான் வரும்...இப்பிடி போடா"

"கேப்பியா...கேப்பியா..."

"கேப்பியா..கேப்பியா...?"

"அடியேய் ஏண்டி இந்த கறுப்பனைப் போட்டு இந்த அடி அடிக்கிறீங்க?"

"இவனோட சவகாசம் வச்சதுக்கு ஒங்களைத் தான் மொதல்ல நாலு சாத்து சாத்தோனும்"

"அடே...நான் இவனோட சவகாசம் வச்சேனா? அப்படின்னு இந்த நாய் சொல்லுச்சா?"

"எந்திரிடா மேலே...ஏண்டா கோமுட்டித் தலையா என்னடா நடந்துச்சு?"

"அண்ணே! உங்க சம்சாரம் உங்களவுக்கு இல்ல"

"ஆமா! அவ ஒயரம் கொஞ்சம் கம்மி இப்ப அதுக்கு என்ன?"

"நீங்க எவ்வளவு நல்லவரு?"

".....மேலே"

"நீங்க என்ன சொன்னீங்க... உங்க சம்சாரத்துக்கு பூவும் அல்வாவும் வாங்கிக் குடுத்தா ஆத்தங்கரைக்கு வருவாங்கன்னு சொன்னீங்க"

"ஹ்ம்!!!!"

"அதே மாதிரி வாங்கிக் குடுத்தா வர மாட்டேங்கறாங்க"

"ஹ்ம்!!!!"

"இதுக்கு நீங்களே ஒரு பைசல் பண்ணுங்க...எவ்வளவு செலவழிஞ்சாலும் நான் பாத்துக்கறேன்"

"டேய் சைக்கிள எடுறா"

"அண்ணே! இவுங்க வரலை?"

"என்ன மாட்டி வுடவா பாக்கறே?"

".........."

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
"தண்ணீர் வருவதென்ன...சரம் சரமாய் பாய்வதென்ன?"

"சரம் சரமா பாயுதா?"

"பொம்பளைங்க குளிக்கிறாங்கல்லோ...இந்த பக்கம் நீ வரலாமா?"

"யாரு இந்த சொரூபராணிங்க...இவளுங்கல்லாம் பொம்பளைங்க இவளுங்க குளிக்கிறத பாக்க நாங்க சைக்கிளை எடுத்து அமுத்திட்டு வரோமாக்கும்"

"எங்கே நீ இந்த பக்கம் வந்ததுக்கு ஒரு காரணம் சொல்லு பாப்போம்"

"ஏன் எங்களால காரணம் சொல்ல முடியாதாக்கும்? ஆத்துல தண்ணி நெறைய வரதா சொன்னாங்க...அதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன்"

"......."

"ஏன் மாரக்கா...இந்த தண்ணி ஏன் இம்புட்டு ருசியா இருக்குன்னு தெரியுமா?"

"இது எங்க ஊரு ஆனைப்பட்டி மேலே வர்றதுன்னால தான் இம்புட்டு ருசியா இருக்குது"

"ஊஹும்...இன்னிக்குக் காரணம் சொல்லறேன் தெரிஞ்சிக்க...இது என்ற ஊரு மாரப்பட்டி மேலே வர்றதுன்னால தான் இம்புட்டு ருசியா இருக்குது"

"ஆமாண்டி... நீங்க பொறந்தது ஒரு ஊரு அதுக்கு ஒரு பேரு அது மேலே வருதாம் இந்த ஆறு...அதனால இந்த தண்ணி ருசியா இருக்குதாம்"

"அடியே...நீ சொல்றதெல்லாம் காரணம் கெடயாது...இந்த தண்ணி இம்புட்டு ருசியா இருக்கறதுக்குக் காரணம் என்னன்னு தெரியுமா?"

"அந்தா பாரு... அஞ்சு ஆர்ஸ்பவர் மோட்டரு தொறந்து வுட்ட மாதிரி சல்லுன்னு வுடறானுங்க"

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

அதொன்னுமில்லீங்க...கொஞ்சம் பொடலங்கா பொறியலு...மூணு ரொட்டி...உளுத்தம்பருப்புல செஞ்ச தாலு, கொஞ்சம் நெல்லு சோறு...இது எல்லாத்தியும் போட்டு தின்னுட்டு...நம்மாளுங்க வெஸ்ட் இண்டீஸோட நாப்பத்தி ரெண்டாவது ஓவருலயும் தடவு தடவுன்னு தடவறதை கொஞ்ச நேரம் பாத்துட்டு... சித்த தூரம் தனியா நடக்கையிலே நம்ம செரிபெல்லத்துல நிழல் படமா ஓடுன வாழ்வியல் கோட்பாடுகள்(என்னன்னு யாருக்குத் தெரியும்) தான் மேலே.

இதெல்லாம் இப்ப எதுக்கு? இதன் மூலம் நாட்டு மக்களுக்கு நாம சொல்ல விரும்பும் கருத்து ஒன்னு இருக்கே? அதாவதுங்க...பொடலங்காயில எம்புட்டு ஃபவரு இருந்தா... தின்ன பத்து நிமிசத்துல, இம்புட்டும் எனக்கு சீன் சீனா நெனப்பு வந்திருக்கும்? அட பொடலங்காயை வுடுங்கைய்யா...இந்த உளுத்தம்பருப்பு குடுத்த ஊட்டச் சத்துல பாருங்க...கிறிஸ் கெய்ல் இர்பான் படானைப் பொளந்து கட்டறதைக் கடுப்போட பாத்துக்கிட்டே, கடமையே கண்ணா ராவோட ராவா என்னையும் அறியாம இதையெல்லாம் தட்டச்சி முடிச்சியிருக்கேன். ஆகவே மக்களே...என்னைய மாதிரியே நீங்களும் Be Vegetarian...Eat Healthy...Think Healthy...னு மிகத் தாழ்மையுடன் உங்களை மன்றாடி கேட்டுக்கறேன். சைவ உணவு சாப்பிட்டீங்கனா ஒடம்பும், மூளையும் சுறுசுறுப்பா இருக்கும். முப்பால் புலவர் ஐயன் வள்ளுவனும் இதுனால தானே புலால் மறுத்தல்னு தனியா ஒரு அதிகாரமே எழுதியிருக்காரு? சரி! அப்போ இதையெல்லாம் படிச்சிட்டு என்னை மாதிரியே நீங்களும் சாப்பாட்டு விஷயத்துல நீங்களும் 100% ப்யூர் வெஜிட்டேரியனா மாறிடுவீங்க தானே...

...சிக்கனும், மட்டனும், மீனும், முட்டையும் கண்ணுல அம்புடற வரைக்கும் :)

(கண்ணா! ராஜா! உளுத்தம்பருப்பை சோத்துல போட்டு பெசஞ்சுத் திங்கும் போதே ஒனக்கு இவ்ளோ கொயிப்பு...சாம்பார்,ரசம்,கூட்டு,பொறியல்னு வக்கணையா தின்னின்னா எவ்ளோ இருக்கும்னு... யார்மா அங்கேருந்து சவுண்டு?)

Thursday, May 25, 2006

மதுமிதா அவர்களின் ஆய்விற்காக...

ஆராய்ச்சின்னு சொன்னதும் ஒரு கொஸ்டியனேரை(Questionnaire) எங்கிருந்தோ சுட்டு, ஆபீசு பக்கத்துல இருக்கற டீக்கடையில நண்பர்(நண்பி)ஒருத்தரின் உதவியோட நீலம், கறுப்பு, செவப்பு, பச்சைன்னு கலர் கலரா பேனா வச்சிக்கிட்டு வலது கையாலயும், எடது கையாலயும்(கையெழுத்தை வித விதமா காட்ட தான்) ஒரு எடத்துல் 1ன்னும்,ஒரு எடத்துல 2ன்னும் இல்ல ரேண்டமா ஒரு டிக்குன்னும் எல்லா கேள்விக்கும் "Strongly agree"னு பதில் குடுத்தும்(ஓபன் எண்டட் கேள்விகளை சாய்ஸில் விட்டுவிட்டும்) கப்பு கப்புன்னு தீஸீசை முடிக்கிறத விட்டுட்டு நேர்மையா ஒரு ஆராய்ச்சி (அதுவும் வலைப்பூக்களைப் பத்தி) பண்ணனும்னு நெனக்கிற மதுமிதா மேடம் அவர்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்தி என்னுடைய முடிந்த வரை(!) நேர்மையானதொரு பதிலை அளிக்கிறேன்)

வலைப்பதிவர் பெயர்: சி. மோகன் ராசு(S.மோகன் ராஜ்) அட - உண்மையான பேரு இது தாங்க

வலைப்பூ பெயர் : Kaipullai Calling

சுட்டி(url) : http://kaipullai.blogspot.com
http://smohanraj.blogspot.com(ஆங்கில கைப்புள்ள - தூங்கிக்கிட்டிருக்காரு)

ஊர்: தற்போதைக்கு சித்தூர்கட், ராஜஸ்தான். (நிரந்தரமாக : சென்னை)

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: திருமுருகன்(http://thirumurugan.blogspot.com)
தமிழில் முதலில் காணக் கிடைத்தது நிலவு நண்பனுடைய பதிவு(http://nilavunanban.blogspot.com)

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம்: 29.12.2005

இது எத்தனையாவது பதிவு: 87 (மூன்று மாதமாக ப்ளாக்கரில் கிடக்கும் 4 டிராஃப்ட்கள் இல்லாமல்)

இப்பதிவின் சுட்டி(url): http://kaipullai.blogspot.com/2006/05/blog-post_25.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: வட இந்தியாவில் நான் 7 ஆண்டு காலமாக வசித்து வருவதால், தமிழில் பேசுவது வெகுவாகக் குறைந்து விட்டது.தமிழில் சிந்தித்து இந்தியில் மொழிபெயர்த்து பேசுவது குறைந்து, இந்தி மொழியிலேயே சுலபமாகச் சிந்தித்து பேசவும் தொடங்கி விட்டேன்.
அவ்வப்போது தமிழில் எழுதிக் கொண்டும், படித்துக் கொண்டும் இருந்தால், தமிழில் சிந்திப்பது குறைந்துவிடாது என்ற நம்பிக்கையிலும், தனிமையைப் போக்கும் ஒரு கருவியாகவும் இருக்கும் என்ற எண்ணத்திலும், என்னை பற்றியும் நான் "பட்டு பட்டு" தெரிந்து கொண்ட சில
விஷயங்களை மறந்து விடாமல் எழுதி வைத்துக் கொள்ளக் கூடிய ஒரு புத்தகமாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் தொடங்கினேன்.

சந்தித்த அனுபவங்கள்: பலவிதம். இது-இது என்று இத்தருணத்தில் கூறுவது கடினம். நம்மைப் போலவே(!) சிந்திப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் என எண்ணுகையில் மகிழ்ச்சி.

பெற்ற நண்பர்கள்: "Brand Kaipullai"யை நான் எவ்விதமான முயற்சியும் செய்யாமல் பட்டி தொட்டி எங்கும் தெரியச் செய்த அனைவரும், குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் அனைத்து அங்கத்தினர்களும்.

கற்றவை:
//என்னை பற்றியும் நான் "பட்டு பட்டு" தெரிந்து கொண்ட சில விஷயங்களை மறந்து விடாமல் எழுதி வைத்துக் கொள்ள கூடிய ஒரு புத்தகமாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் தொடங்கினேன். //
Kaipullai Calling என்று பெயர் வைத்து விட்டாலும்...நக்கல், நையாண்டி பதிவுகள் மட்டும் அல்லாமல் சற்று சீரியசான(பாருங்க... இதுக்கு கூட தமிழ்ல என்னன்னு சட்டுன்னு நெனப்பு வரலை) விஷயங்களையும் நற்றமிழில் எழுத வேண்டும் என்பதே முதல் எண்ணம். "நற்றமிழில்" என்பது எண்ணத்தில் மட்டுமே உள்ளது...அதை செயலில் கொண்டு வரும் அளவுக்கு நம் தமிழ் அறிவு இல்லை...அது வெகுவாக மழுங்கி விட்டது என்ற ஞானோதயம். அவ்வப்போது பெருமுயற்சி செய்து பயனுள்ள பதிவுகளைக்(!) கொண்டு வந்து விடலாம் என்ற புரிதலும்(இதுவும் தமிழ் வலைப்பூக்களில் கற்றுக் கொண்டது தான் :)- ).

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: கைப்புள்ள என்கிற பெயர் இருப்பதால் ஆங்கில கலப்பையும், தமிழ் கொலையையும் என் பதிவுகளைப் படிப்பவர்கள் மன்னிக்கிறார்கள் என்பதே பெரிய சுதந்திரம் தான்.

இனி செய்ய நினைப்பவை: வலைப்பதிவுலகில் நகைச்சுவைக்குக் குறைவே இல்லை. மொழியே இல்லாமல் படங்களின் மூலம் சொல்லும் நகைச்சுவை ஆகட்டும், இலைமறை காய் மறைவான மெலிதான நகைச்சுவை ஆகட்டும்(subtle humour), வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்யும் சினிமா
தொடர்புடைய காமெடி ஆகட்டும் - வலைப்பதிவாளர்களின் ஆற்றல் அளப்பற்கரியது. என்னால் எழுதவே முடியாவிட்டாலும், என் கற்பனைக்கு(டூப்படிப்பதற்கு என்று படிக்கவும்) வறட்சி ஏற்பட்டாலும், வலைப்பூக்களில் நகைச்சுவையான விஷயங்களையும், அவ்வப்போது
பொருள் பொதிந்த பதிவுகளையும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். செய்ய நினைப்பவை என்று எதுவும் இல்லை...கைப்புள்ள(அட ஒரிஜினலுங்க!) சினிமால செய்யறதை எழுத்துல காப்பி அடிச்சிட்டே இருப்போம்ல?

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க வேண்டும் என்று நான் நினைப்பது உண்மை. நம்மால் யாரும் எவ்விதத்திலும் புண்படக் கூடாது, மனம் நோகக் கூடாது என்ற எண்ணம் எனது ஒவ்வொரு நடவடிக்கையிலும், செயலிலும் இருக்கிறது என்று பெரிதும் நம்புபவன். நான் பிறந்ததின் பயனைத் தேடிக் கொண்டே இருக்கிறேன். இன்னும் அதற்கு விடை கிடைத்த பாடில்லை. வேறொன்றும் பெரிதாகச் சொல்லிக் கொள்வதற்கில்லை.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: சொன்னா திட்டப் படாது. இப்பல்லாம் கிறுக்குத் தனமாத் தான் இந்த மூளை யோசிக்குது. இப்படி ஒரு பதிவை எழுத வேண்டும் என்று நினைத்ததும் முதன்முதலில் எனக்குத் தோன்றிய தலைப்பு : ஹாய் ரே ஹாய் ரே ஹாய் ரப்பா (மதுமிதா மேடம் அவங்களோட வலைப்பூவுல எப்பவாச்சும் ரெண்டு தரம் எட்டிப் பாத்துருப்போம் அதுவும் பின்னூட்டம் எதுவும் போடாமல்...மத்தபடி நாம யாருன்னு அவங்களுக்குத் தெரியாது, அவங்களைப் பத்தி நமக்கும் அவ்வளவாத் தெரியாது...இப்படி இருக்க திடீர்னு இந்த மாதிரி ஒரு தலைப்பு வச்சா தப்பா எடுத்துக்குவாங்கன்னு ரொம்பவே யோசிச்சு தலைப்பை மாத்திட்டேன்)

இப்பதிவின் முன்னுரைக்கும் எனக்கும் எவ்விதத்திலும் தொடர்பு இல்லை என்று காட் ப்ராமிஸ்(!) செஞ்சு இத்தோட உத்தரவு வாங்கிக்கிறேன் :))-

Tuesday, May 23, 2006

3டி திருவிழா - 9

3டி பாத்து ரொம்ப நாள் ஆச்சுங்களா? அதான் இன்னிக்கு நாமும் பாத்து நம்ம ப்ளாக்லயும் ஒன்ன போடலாமின்னு ஆஸ் பட்டு இந்த பதிவு.

க்ளூ கண்டிப்பா வேணுமாங்க? சரி இந்தாங்க..."ஒத்தையா புடிச்சா மூணு ரெட்டையா புடிச்சா ஆறு".

3டி எப்படி பாக்குறதுன்னு மறந்து போயிந்தியா? டோண்ட் வொரி பாவா? அதி கோசம் ரீவிஷன் இக்கட உந்தி

Sunday, May 21, 2006

மஹாகாலேஷ்வர்

இந்தூரில் இருந்த போது இவ்வருடம் ஜனவரி மாதம் 26ஆம் தேதி, உஜ்ஜைன் நகரில் உள்ள மஹாகாலேஷ்வர் என்னும் சிவத் தலத்தைத் தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதனைப் பற்றிய விவரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தில் இப்பதிவினை இடுகின்றேன்.

மஹாகாலேஷ்வர் என்பது இந்தியாவில் உள்ள பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று. ஒளிவடிவாக வழிபடப்படும் சிவலிங்கங்களை ஜோதிர்லிங்கம் என்கின்றனர். இப்பன்னிரெண்டு சிவலிங்கங்களின் மாதிரியையும் பெங்களூரில் ஏர்போர்ட் ரோடில் உள்ள கெம்ப் ஃபோர்ட் எனும் இடத்தில் சில வருடங்களுக்கு முன்னர் கண்டிருக்கிறேன். ஆனால் பன்னிரெண்டில் இரண்டினை நேரில் காணும் வாய்ப்பு, பணி நிமித்தம் இந்தூர் நகரத்தில் இரண்டாண்டு காலம் வசிக்க நேரிட்டதால் கிடைத்தது. பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள இங்குச் சுட்டுக. ஜோதிர்லிங்கமும் தானாக அவதரிப்பதாகச் சொல்லப்படும் சுயம்பு லிங்கங்களுக்கும் வேறுபாடு உள்ளதா? அல்லது இரண்டுமே ஒன்று தானா? யாரேனும் தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.

உஜ்ஜைன் எனப்படும் இடம் இந்தூரிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது. சாலை வழியாகச் சென்றால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்தில் இவ்விடத்தை அடையலாம். சென்னையிலிருந்து ஜெய்பூர் செல்லும் சென்னை ஜெய்பூர் எக்ஸ்பிரஸ் உஜ்ஜைன் வழியாகச் செல்லுகிறது. இவ்வூர் பல விதங்களிலும் வரலாற்றுச் சிறப்பு பெற்ற ஒரு ஊர். தேவர்களும் அசுரர்களும் பார்க்கடலைக் கடைந்து கிடைக்கப் பெற்ற அமுதத்தைத் தாங்கிய கலசத்தில் இருந்து ஒரு சில துளிகள் பூவுலகில், பிரயாக்(அலகாபாத்),ஹரித்வார்,நாசிக் மற்றும் உஜ்ஜைன் ஆகிய இவ்விடங்களில் விழுந்ததாக ஒரு நம்பிக்கை உள்ளது. இவ்வமுதத் துளிகள் விழுந்த இடங்களில் "கும்ப மேளா" என்னும் திருவிழாக்கள் ஒவ்வொரு 12 ஆண்டும் நடக்கின்றது. உஜ்ஜைனில் நடைபெறும் கும்ப மேளாவினை "சிம்ஹஸ்த" என்று அழைக்கின்றனர். குரு பகவான் சிம்ம ராசியில் வந்து அமரும் போது உஜ்ஜைனில் கும்ப மேளா நடை பெறுவதால் இதனை "சிம்ஹஸ்த" என்கின்றனர். 2002ஆம் ஆண்டு நடைபெற்ற "சிம்ஹஸ்த" திருவிழாவிற்கான ஏற்பாட்டின் போது அரசுப் பேருந்துகளின் மீது "சிம்ஹஸ்த பர்வ" என எழுதி வைத்திருந்தனர். நான் இதை அங்கு இருக்கும் போது கண்டிருந்தாலும், அதற்கு என்ன பொருள் என்று இப்பதிவினை எழுதுவதற்காக இங்குச் சுட்டிய போது அறிந்து கொண்டேன். ஒரு பூகோளச் சிறப்பும் உஜ்ஜைன் நகருக்கு உள்ளது. பூமியின் மீது செல்லும் ரேகையான டிராபிக் ஆப் கேன்சர்(Tropic of Cancer), இந்நகரின் வழியாகச் செல்லுகின்றது. விக்ரமாதித்தன் என்ற அரசன் ஆண்ட பழம்பெரும் நாடு இந்த உஜ்ஜைன். விக்ரமாதித்தனும் வேதாளமும் என்னும் கதையின் கதை களமும் இஃதே.

நண்பர் ஒருவர் குஜராத் மாநிலத்தில் உள்ள வெராவல் என்னும் ஊருக்குச் செல்ல ரயிலைப் பிடிப்பதற்காக உஜ்ஜைன் செல்ல வேண்டியிருந்ததால் இத்தலத்தைத் தரிசித்து விட்டு அவரையும் வழியனுப்பி விட்டு மறுபடியும் இரவு இந்தூர் திரும்புவதைத் திட்டமாகக் கொண்டு நாங்கள் ஆறு பேர் குவாலிசில் சென்றோம். நாங்கள் சென்ற நேரத்தில் மஹாகாலேஷ்வர் கோயிலில் புணரமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரக் காத்திருப்பிற்குப் பின் கோயிலின் உள்ளே நுழைந்தோம். இச்சிவலிங்கத்தைத் தரிசிக்க கோயிலுக்குள் நுழைந்து கீழிறங்கிச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் போது இத்தலத்தின் புனிதத் தீர்த்தத்தையும் இன்னும் சில கடவுளரையும் தரிசித்தோம்.

மஹாகாலேஷ்வர் ஆலயத்தின் புனித தீர்த்தம்.

கடைசியில் மஹாகாலேஷ்வர் என்னும் இச்சிவலிங்கத்தைத் தரிசித்தோம். கற்பகிருகத்திற்கு அருகாமையில் கேமராக்களை உபயோகிப்பது பல ஆலயங்களிலும் தடை செய்யப் பட்டிருந்தாலும், இங்கு பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். கோயிலில் இருந்தவர்களும் அதை தடுக்கவில்லை. மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்கத்தின் புகைப்படம் கீழே.


அங்கிருந்து ஷிப்ரா எனும் புனித நதிக்கரையின் அருகாமையில் அமைந்துள்ள சாந்தீபணி ஆசிரமத்திற்குச் சென்றோம். பகவான் கிருஷ்ணர் இவ்வாசிரமத்தில் தங்கி சாந்தீபணி என்னும் முனிவரிடத்தில் கல்வி கற்றதாக அறிந்து கொண்டேன். இதெல்லாம் முன்னரே கேள்வி படாத செய்திகள் ஆக இருந்ததால் அதை காணும் போதும் அதை பற்றி அறியும் போதும் மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சாந்தீபணி முனிவர் கிருஷ்ணருக்குக் குருவாக இருந்ததை அன்று தான் அறிந்து கொண்டேன். சாந்தீபணி ஆசிரமத்தில் எடுத்த புகைபடங்கள் கீழே.



அங்கிருந்து உஜ்ஜைன் ரெயில் நிலையம் செல்லும் வழியில் "காலபைரவ்" என்னும் ஆலயத்திற்குச் சென்றோம். உஜ்ஜைனைச் சுற்றிலும் பல கோயில்கள் இருந்தாலும் நேரத்தினைக் கருதி சிலவற்றை மட்டுமே காண முடிந்தது. காலபைரவ் கோயிலின் சிறப்பு, தேங்காய பழம் வைத்து படைப்பது போல ஒரு சிறிய பாட்டிலில் சாராயத்தைப் படைக்கின்றனர்(ஆனால் படைத்தே ஆக வேண்டும் எனக் கட்டாயமில்லை). குடியரசு தினத்தன்று ஒரு புத்துணர்ச்சி ஊட்டிய சுற்றுலாவாகவும், பழைய நண்பர்கள்(புது இடத்திற்கு வந்ததும், அவர்கள் பழைய நண்பர்கள் தானே :))- ) பற்றிய நினைவு வர ஏதுவான ஒரு பயணமாகவும், இறைவனைத் தொழுத போது கிடைத்த மன அமைதிக்காகவும் அப்பயணம் மனதில் நிற்கும். நண்பர் அவரை உஜ்ஜைன் ரெயில் நிலையத்தில் விட்டு விட்டு இரவு இந்தூர் திரும்பினோம்.

உஜ்ஜைன் ரெயில் நிலையத்திற்கு வெளியே

(மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்களைத் தரிசிக்க விரும்பினால் இந்தூரில் தங்கிக் கொண்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலையும், இந்தூரிலிருந்து கண்ட்வா என்னும் ஊருக்குச் செல்லும் வழியில் 75 கி.மீ தொலைவில் உள்ள ஓங்காரேஷ்வர் என்னும் தலத்தையும் தரிசிக்கலாம். ஓங்காரேஷ்வருக்குச் சென்ற வருடமே செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இத்தலம் நர்மதை நதியினால் சூழப்பட்ட ஒரு தீவில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குச் செல்லும் போது, நர்மதை நதிக்கரை வரை சாலை வழியாகச் சென்று, நதியினைப் படகு மூலமாகக் கடக்க வேண்டும். நர்மதை நதி, இத்திருத்தலத்தை "ஓம்" என்னும் வடமொழி எழுத்தின் வடிவில் சூழ்ந்திருப்பதால் இத்தலத்திற்கு ஓங்காரேஷ்வர் என்று பெயர். உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ள ஹரித்வாருக்குச் சென்றுள்ளீர்கள் ஆனால் பல விதங்களில் இவ்விரண்டு தலங்களுக்கும் ஒற்றுமை இருப்பதாகத் தோன்றும். இந்தூரிலிருந்து 14 மணி நேரப் பயணம் செய்தீர்கள் ஆனால் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகருக்கு அருகில் த்ரியம்பகேஷ்வரர் என்னும் மற்றுமொரு ஜோதிர்லிங்கத்தையும், அங்கிருந்து சற்றுத் தொலைவில் ஷீரடியில் சாய்பாபாவின் கோயிலையும் கண்டு வரலாம்.

Thursday, May 18, 2006

முட்டாய் எடுத்துக்கங்க

இண்டர்நெட்டை உபயோகிச்சு, யார் யாரோ என்னென்னமோ பண்ணறாங்க. நம்ம லெவலுக்கு நம்மால என்ன பண்ண முடியும்...வழக்கமா நாம போடற ப்ளடைத் தவிர?... ரொம்ப யோசிச்சதுல முட்டாய் கொடுக்கலாம்னு தோணுச்சு.

எதுக்கா? அதொன்னுமில்லீங்ணா...நம்ம "தம்ஃப்ரீ" (தடிப்பசங்கள்ல சின்னவரு)இப்ப முதுகலை சுளுக்கு டாக்டர் பட்டம் வாங்கறதுக்குத் தகுதியாயிட்டாரு...அதாவது Master of Physiotherapy பாஸ் பண்ணிட்டாரு. நெஜ முட்டாய் குடுக்கற அளவுக்குப் பக்கத்துல இல்லாததுனால இப்போதைக்கு டிஜிட்டல் முட்டாய் எடுத்துக்கங்க.

Monday, May 15, 2006

ஒரு நாள் ஒரு கனவு

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு கனவு...கொஞ்ச நாள் என்ன கொஞ்ச நாள்? முந்தா நேத்து... சனிக்கிழமை தான். கடந்த இரண்டாண்டு காலமா தூக்கத்துல கனவு எதுவும் வந்ததா ஞாபகம் இல்லை. ஆனா இதே போலொரு சம்பவம் நமக்கு ஏற்கனவே நடந்திருக்கே...எதிர்ல இருக்குறவரு கேட்ட கேள்விக்கு இதே மாதிரியான பதிலை நாம ஏற்கனவே எதோ ஒரு சந்தர்ப்பத்தில் சொன்ன ஞாபகம் இருக்குதே என்று சொல்லக் கூடிய மாதிரியான "தே ஜா வூ"(De ja vu feeling ) பலமுறை வந்திருக்கு. நம்மள்ல பல பேருக்கும் இந்த தே ஜா வூ வந்திருக்கும். ஆனா நம்ம கனவு கொஞ்சம் வித்தியாசமானது. என்னாங்குறீங்களா?

நான் வீட்டுல உக்காந்திருக்கேன். திடீர்னு வீட்டுக்குள்ள ஒரு குரங்கு புகுந்துடுது. மேலேயும் கீழேயும் தாவிக் குதிச்சு ரொம்ப அட்டகாசம் பண்ணுது. வீட்டுலே வேற யாரும் இருக்குற மாதிரி தெரியலை. குரங்கை நான் தான் தனியா சமாளிக்கணும் போல இருக்கு. அப்ப கையில கிடைச்ச ஒரு துடைப்பத்தை எடுத்துக் காட்டி சூ...சூ...போ...போன்னு அதை விரட்டறேன். அதுவும் நான் என்ன பண்ணறேனோ அதே மாதிரி பண்ணுது. அது கையில மாட்டுன ஒரு பொருளைக் காட்டி என்னை அது விரட்டுது. நம்ம மேலே, அந்தப் பொருளை எடுத்து வீசிடுச்சுன்னா என்ன பண்ணறதுன்னு நெனச்சு கையில இருக்குற துடைப்பத்தைக் கீழே போட்டுட்டு சின்னப் பசங்க சொல்ற மாதிரி தலையைச் சாய்ச்சு "சீ...போ"னு சொல்றேன். அதுவும் என்னை மாதிரியே தலையைச் சாய்ச்சு சீ...போன்னு சொல்ல முயற்சி பண்ணுது. ஆனா பாவம் அந்த குரங்குக்கு தமிழ் தெரியாது போலிருக்கு... அதனால தலையை மட்டும் அதே ஸ்டைல்ல சாய்ச்சுக்குது. அப்புறம் குரங்கு ஓட அது பின்னாடி நான் ஓட இப்படின்னு கொஞ்ச நேரம் வீட்டுல ஒரே களேபரமா இருக்கு. எப்படியோ கஷ்டப்பட்டு அதுக்கு வாசக் கதவு வழியைக் காட்டிட்டு சோபாவுல வந்து உக்காருறேன். ஆனா பாருங்க அவசரத்துல கதவைச் சாத்த மறந்துட்டேன். திரும்பவும் குரங்கு உள்ள வருது. அதோட கால்ல எதோ கட்டியிருக்கு. சந்திரமுகி ஜோதிகா கணக்கா அது காலை ஆட்டிக் காட்டனதை யோசிச்சா, அது கால்ல சலங்கை தான் கட்டியிருக்கணும். கொஞ்ச நேரம் பழிச்சுக் காட்டிட்டு குரங்கு வாசக் கதவு வழியா ஓடிப் போயிடுது.

இப்ப நான் கதவு ஜன்னல் எல்லாத்தையும் சாத்திட்டு வந்து உக்காருறேன். அப்பாடான்னு உக்காருறதுக்குள்ள எங்கிருதோ ஒரு வெண்டிலேட்டர் வழியா இப்ப ஒரு குட்டிக் குரங்கு உள்ள வந்துடுது. முன்ன வந்த சந்திரமுகி குரங்கை விட இது ரொம்ப விஷமம் பண்ணுது. திடீர்னு பாத்தா என் தலைமுடியைப் பிடிச்சு இழுக்குது. தலைமுடியை விடுன்னு கத்தலாம்னு நெனக்கிறதுக்குள்ள தூக்கம் கலைஞ்சிடுது. அட சே! என்ன ஒரு விசித்திரமான கனவு. அதுவும் மால்கேட்டை விட்டுப் போகப் போகும் கடைசி நாளில். யாருக்காச்சும் அந்த "ஜோதிகா"வைப் பத்திச் சொல்லணும்னு தோணுனதுனால அதிகாலையில அம்மா வீட்டுக்குப்(ஏன் இந்த வார்த்தையைப் பொண்ணுங்க மட்டும் தான் சொல்லணுமா...நாங்களும் சொல்லுவோம்) போன் பண்ணறேன். அவங்க அவசரமா அப்ப கோயிலுக்குக் கிளம்பிட்டிருக்குறதுனால அப்புறம் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்.

அதுக்கப்புறம் மால்கேட்டை (Malkhed) விட்டுக் கிளம்பி வந்துட்டேன். நம்ம க்ளையண்ட் மால்கேட் மாதிரி சித்தூர்கட்(Chittorgarh) என்ற இன்னுமொரு குளிர் பிரதேசத்திலும்(!) சிமெண்ட் ப்ளாண்ட்டைக் கட்டி வைத்திருப்பதால், தம்பி உன் சேவை அங்கே ஆகஸ்ட் வரை தேவை அப்படின்னு எங்க ப்ராஜெக்ட் மானேஜர் என்னை அங்கே அனுப்பி வச்சிட்டாரு. சித்தூர்கட்னா சென்னையிலிருந்து பாரதிவேலு பஸ் சர்வீஸ்னு ஒரு பஸ் போகுதே அந்த ஊரான்னு கேக்கப் பிடாது. அது சித்தூர்...இது சித்தூர்கட். அது ஆந்திரா...இது ராஜஸ்தான். மால்கேட்டிலிருந்து சித்தூர்கட் போகும் வழியில் மும்பையில் ஓட்டல் ரூமில் உக்காந்து கொண்டு லேப்டாப்பில் ப்ளேடு போட்டுக் கொண்டிருக்கிறேன். இண்டர்நெட் கிடைச்சதும் நம்ம பிளேடு உங்களுக்காக ப்ளாக்கரில் அரங்கேறும்.

சரி! யாராச்சும் சிக்மண்ட் ஃப்ராய்டின் இண்டர்பிரெடேஷன் ஆஃப் ட்ரீம்ஸ்(Interpretation of Dreams) படிச்சிருக்கீங்களா? படிச்சிருந்தீங்கனா என் சந்தேகத்தைக் கொஞ்சம் தீத்து வையுங்கண்ணே! இது தான் சாக்குன்னு போடா கோமுட்டித் தலையானு திட்டப் படாது. ஏன்னா இந்த குரங்கு மேட்டர்ல எனக்கு எதோ ஒரு விட்டக்குறை தொட்டக்குறை இருக்கறதா ஒரு நம்பிக்கை. உடனே என்னை வேட்டைய மகாராஜாவாக்கி ஒரு கதை எழுதிடாதீங்கப்பா(யப்பா பார்த்தீ...கட்டதுரை உங்களுக்குத் தான் இது). ஏன்னா ப்ளாக்கரே வாழ்க்கை என்று இந்தூரில் உக்காந்திருந்த அடியேன், இப்போ ஒரு பின்னூட்டம் போடுவதற்குக் கூட கஷ்டப் பட வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியிருக்கிறேன். செங்கல் வச்சு வீடு கட்ட வேண்டிய கொத்ஸு புரோட்டா மாஸ்டர் ஆனதையும், தமக்கையாருக்காகத் தன் ஜொள்ளு விரதத்தைத் துறந்த ஜொள்ளுப் பாண்டியின் தியாக உள்ளத்தையும், புது வெண்பா வாத்தியாரம்மாவான தங்கச்சி பொன்ஸ் 100 அடிச்சதையும், நமக்கு சோறு போடும் பர்சேஸ் ஆர்டரையும், குட்ஸ் ரெசிப்டையும் ஓரங்கட்டிவிட்டு மாட்யூல் லீடருக்கும் கல்தா கொடுத்துவிட்டு திருட்டுத் தனமா நுனிப்புல் மேஞ்சாலும் பின்னூட்டம் போடுவது என்பது இருக்குற டென்சனுக்கு இடையே புது வேலைக்கே உலை வைக்கும் விசயமாகி விடக் கூடும் என்பதால் கையைக் கஷ்டப் பட்டு கட்டி வைத்துக் கொண்டு உக்காந்திருக்கிறேன். ஏன்னா பின்னூட்டம் போடுவது நமக்கு மிகவும் பிடித்தமான விசயம்...உயிரைக் குடுத்து ஒருத்தர் எழுதியிருக்குற எடத்துல எதாச்சும் ஒளறி வச்சிட்டு ஓடியாந்துடலாம். அதுக்கு அவரும் நம்மளை மதிச்சு எதாச்சும் பதில் குடுத்தாருன்னா மறுபடியும் ஒரு ஒளறல்...இதை இப்படியே i=1 to infinityன்னு லூப்ல போட்டு ஓட விட்டோம்னா பொழுது போற வரைக்கும் ஆபீஸ்ல ஒரே கிளு கிளுப்பா இருக்கும்(வேணா நீங்களும் செஞ்சு பாருங்க). ஆனா பதிவு எழுதுறது அப்படியில்லை...கொஞ்சூண்டு இருக்குற மூளையையும் கசக்கிப் பிழிஞ்சாத் தான் நம்ம தகுதிக்கு நாலு வரியாச்சும் தேத்த முடியும். ராத்திரி ஒரு மணிக்கு ஆபிசுலேருந்துத் திரும்ப வந்து எதாச்சும் இளையராஜா பாட்டு வரும்னு சன் டிவியை வச்சா அந்த நேரத்துலேயும் மூக்களகியும் ஆனந்தமும் வந்து இம்சை குடுக்கறாங்க. அந்த ஆனந்தத்துலேயே ஆபிசுலேருந்து வீட்டுக்குத் திரும்பனதும் பதிவெழுதறது எல்லாத்தையும் மறந்துட்டுத் தூங்கிடுவேன்.

விட்டக்குறை தொட்டக்குறை என்னன்னு கூர்ந்து கவனித்து கேட்க நினைக்கும் ஷார்ப்பான பார்ட்டிங்களுக்காக - இந்தூரில் நான் என் முந்தைய கம்பெனியில் இருந்த கடைசி சில நாட்களில் ஒரு நாள், ஒரு குரங்கு ஆபிசுக்குள்ள புகுந்துடுச்சு. குரங்கா...அதுவும் ஆபிசுக்குள்ளேயா? இது கதையல்ல...கனவுமல்ல...நிஜம். உற்பத்தி நடக்கும் தொழிற்சாலைகள் யாவும் குரங்குகளும், பாம்புகளும் கந்த சஷ்டிக் கவசத்தில் வரும் ஏனைய பிற உயிரினங்களும் புழங்கும் இடங்கள் என அறிவாய் டைடல் பார்க்கிலும், நாவலூரிலும், சோழிங்கநல்லூரிலும் ஜாவா கோட் எழுதும் மானிடனே! மனுசனே ஸ்வைப் கார்ட் இல்லாம உள்ளே நுழைய கூடிய இடங்களில் குரங்குக்கு என்ன தடை? அதான் அது கிட்ட ஸ்வைப் கார்ட் இல்லாம போனாலும் சுலபமா உள்ளே நுழைஞ்சிடுச்சு, குரங்குன்னா இராம.நாராயணன் படத்துல வர்ற சிகப்பு முகம் கொண்ட "ஆடு ராமா ஆடு " குரங்கு கிடையாது. கிண்டி சிறுவர் பூங்காவில் சிங்கவால் குரங்குன்னு ஒரு குரங்கோட படம் இருக்கு(போய் பாருங்க)...அந்த மாதிரியான கிட்டத்தட்ட நான்கடி உயரம் கொண்ட கொஞ்சம் கூட பஞ்சத்தில அடிபடாத திடகாத்திரமான கறுப்பான முகம் கொண்ட ஒரு குரங்கு தான் உள்ளே புகுந்துச்சு. உள்ளே வந்த குரங்கு எனக்கு நேர் எதிரில் இருக்குற ஃபைல் அடுக்கி வைக்கிற ஒரு கேபினெட்டின் மேலே ஏறி உக்காந்துக்கிச்சு.

அந்த கம்பெனியில் என்னோட கடைசி சில நாட்கள் என்பதால் நண்பர்களோடு புகைப்படம் எடுப்பதற்காக எடுத்து வந்திருந்த என் கேமரா என் பையிலேயே இருந்தது. அந்த நேரத்திலும் "கேபினெட் மேல் குரங்கு" என்ற தலைப்பில் ஒரு போட்டோ பதிவு போடலாம் என்ற ஒரு பிரகாசமான ஐடியாவை நம்ம மூளை நமக்குக் கொடுத்தது. எனக்கு முன்னாடி இருந்த க்யூபிக்கிள் காலியாக இருந்துச்சு...பாஸ்ஸுங்க தான் எப்பவும் மாட்டிவிட்டுட்டு எஸ்கேப் ஆகிடுவாங்களே. இந்த விஷயத்திலும் அது உண்மையாயிடுச்சு. நம்மளை மாதிரி இன்னும் ரெண்டு பேரு நம்ம பின்னாடி க்யூபிக்கிள்ல உக்காந்து இருக்கானுங்க. சரின்னு கேமராவை எடுக்க பையைக் கூட தொறந்திட்டேன். திடீர்னு குரங்கு நற நறன்னு பல்லைக் கடிக்குது. அது பல்லைக் கடிக்கிற சத்தம் நல்லாத் தெளிவாக் கேக்குது. அப்பத் தான் குரங்கை யாரும் ரொம்ப நாளா நகம் வெட்டச் சொல்லிக் கட்டாயப் படுத்தலைங்கறதையும் கவனிச்சேன். குரங்கைப் படம் எடுக்கப் போய் புது கம்பெனியில் சேர்றதுக்கு முன்னாடி நம்ம படத்துக்கு மாலை போடற மாதிரி ஆகிடக் கூடாது என்பதற்காக குரங்கைக் கண்டும் காணாமல், அப்போது என் கம்ப்யூட்டரில் திறந்திருந்த தமிழ்மணத்தையும், யாஹூ மெசஞ்சரையும் மாற்றி மாற்றி க்ளிக்கி கொண்டு உக்காந்திருக்கிறேன். வேலை செய்பவர்களைக் குரங்கு தொந்தரவு செய்யாது என்ற ஒரு எண்ணத்தில். அப்போது என்னை கவனிச்ச, (குரங்கிலிருந்து பாதுகாப்பான தொலைவில்) இருந்த ரெண்டு மூனு பேரு நான் குரங்கைக் கவனிக்கலைன்னு நினைச்சு அங்கே பாரு குரங்கு குரங்குன்னு என்ன பார்த்து கையை காட்டுறானுங்க. அடப் பாவிங்களா! நீங்க கையைக் காட்டுறதைப் பாத்து குரங்கு இறுக்கி அணைச்சு உம்மா கிம்மா கொடுத்துடுச்சுன்னா என்ன பண்றதுன்னு நெனச்சதும் குருதிப்புனல் படத்துல ஆதி "பயம்னா வீரம் இல்லாத மாதிரி நடிக்கிறதுன்னு" சொன்னது ஞாபகத்துக்கு வந்துச்சு. அப்படியே கொஞ்சம் நேரம் வீரம் இல்லாத மாதிரி நடிச்சிக்கிட்டும் கிளிக்கிக் கொண்டும் உக்காந்திருக்கோம் நாங்க மூணு பேரும்.

"கைப்புள்ள ஒன்னோட கண்ணுல பயம் தெரியுது. அதை நான் பார்த்துட்டேன்"னு சொல்லற மாதிரி இன்னும் கொஞ்சூண்டு குலை நடுங்க வைக்க குரங்கு கேபினெட் மேலிருந்து நல்ல காலமாக No- man's landஇல் குதிக்குது. இப்ப குரங்குக்கு மிக நெருக்கத்தில் இருந்த டார்கெட் நான் தான். அந்த ஒரு நொடி அட்ரினலின், பெனாஃப்தலீன், அனாசின், க்ரோசின், மெடாசின் எல்லாம் நம்ம உடம்புல லிட்டர் கணக்குல சுரந்துச்சுப் பாருங்க. அதை வார்த்தையா எழுத முடியாது. ஆனா பாஸ்ஸோட க்யூபிக்கிள் பக்கத்துல இருக்குற கதவை தெறந்துட்டு குரங்கு நாங்க உக்காந்திருந்த முதல் மாடியிலிருந்து கீழே குதிச்சு ஓடிப் போயிடுச்சு. அது குதிக்கும் போது உண்டான சத்தத்தில் குரங்குடைய வெயிட் தெரிய வந்தது. கண்டிப்பா மூணு வேளையும் மூக்கு முட்ட சாப்பிடற பார்ட்டியாத் தான் இருக்கும் போலிருக்கு. அப்பாடா...குரங்கு போயிடுச்சின்னு நெனச்சி பின்னாடி க்யூபிக்கிளுக்குப் போய் அங்கிருந்த கமாண்டோக்களிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருக்கும் போது குரங்கு திரும்ப வந்துடுச்சுன்னு கீழேருந்து ரெண்டு பேர் ஓடியாறானுங்க. ஒருத்தனைப் பாத்ததும் குரங்குக்கு மடிப்பு அம்சா ஞாபகம் வந்துடுச்சு போலிருக்கு ...அவனுக்கு இடுப்புல ஒரு பொறாண்டு. இன்னொருத்தனுக்குத் தலையைப் படிய சீவாம ஆபீசுக்கு வருவியானு பொறுப்பா வகிடு எடுக்க ஒரு முயற்சி பண்ணுச்சாம் அந்த தாயுள்ளம் கொண்ட குரங்கு. அப்ப தான் குரங்கு வியாபார நிமித்தமாத் தான் வந்துருக்குன்னு புரிஞ்சிச்சு.(அதாவது "the monkey means business"). திரும்பவும் குரங்கு மேலே ஏறி வந்து அதே கேபினெட் மேலே உக்காந்து சுத்துமுத்தும் பாக்குது...இப்ப வேலை செய்யிற மாதிரி நடிக்க நம்ம கிட்ட தமிழ்மணமும் இல்லை யாஹூ மெசஞ்சரும் இல்ல. நானும் கமாண்டோ தனுஷும் நின்னுக்கிட்டு இருக்கறோம். கதவைத் தெறந்து ஓடிடலாம்னு நெனச்சு கதவு பக்கம் போன அதே நேரத்துல குரங்கு திரும்பவும் ஒரு ஜம்ப். இப்ப சிங்க வால் பத்ரிக்கு எதிரில் ஆதி, தனுஷ் ரெண்டு பேரும் ஒரு மூலையில் மாட்டிக்கிட்டோம். அந்த நேரம் தோன்றிய இன்னுமொரு யோசனை கதவைத் திறந்து ஓடுவதுக்குப் பதிலா க்யூபிக்கிள் தடுப்பை எகிறிக் குதிச்சு ஓடிடலாம்னு. ஆனா பாருங்க..."ரகசியமானது காதலு"ங்கிற பாட்டுல வர்ற புள்ளையோட கன்னத்துல விழற குழியை "சோ க்யூட் நோ"னு சன் டிவியிலப் பாத்து கொஞ்ச நேரம் ரசிச்சதுக்கு அப்புறம், உதயா டிவி, ஜெமினி டிவி, ஈநாடு மராட்டி, ஆல்ஃபா டிவி குஜராத்தி சேனல்களை எல்லாம் பாத்ததுக்கப்புறமும் போர் அடிச்சதனால கலைச் சேவை செய்யலாம்னு நெனைச்சு நான் கிறுக்குனதை இவ்வளவு நேரம் படிக்கணும்னு உங்க தலையில எழுதியிருக்குப் போலிருக்கு. அதனால கதவைத் தெறக்கற உரிமை எனக்கு மட்டுமே இருக்குன்னு குரங்கு திரும்பவும் கதவைத் திறந்து ஓடிப்போச்சு.

ஆகையால் மகாஜனங்களே! இப்ப சொல்லுங்க விட்டக்குறை தொட்டக்குறை இருக்கா இல்லியான்னு? அந்த சந்திரமுகி ஜோதிகாவுக்கும், குருதிப்புனல் பத்ரிக்கும் நமக்கும் என்ன தொடர்புன்னு? Interpretation of dreams படிக்கல்லன்னாலும் பரவாயில்ல...உங்களுக்குத் தோணுனதைச் சொல்லுங்க. பின்னூட்டத்துக்குப் பதிலும், மத்தவங்க பதிவுக்குப் பின்னூட்டமும் போடாத நீயெல்லாம் எந்த தைரியத்துலடா பின்னூட்டத்தை எதிர்பாக்குறேன்னு உங்களில் சிலர் கேட்கலாம். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்று தான்னு எழுத மிக வீரமா ஆரம்பிச்சிட்டாலும் "நீங்க சொல்றது எல்லாம் சரி தானுங்க. அதை மனப்பூர்வமா ஒத்துக்கறேன்"னு கால்ல விழுந்துக்கறேன். ஹூம்...இப்படியே போனா ஒரு நாள், ஸ்டார் ஆகற கனவை மறந்துடனும் போலிருக்கே? மவனே! ஒனக்கு இப்படியெல்லாம் வேற ஆசையா? ஆமா...ஆகஸ்ட் மாசம் சித்தூர்கட்லேருந்து ரிலீஸ் ஆனதுக்கப்புறம் பதிவு எழுதுறதுக்கும் படிக்கிறதுக்கும் துட்டுக் குடுக்கற மாதிரி ஒரு ப்ராஜெக்ட் கெடைக்காமலா போயிடும். அது வரைக்கும்...ஒரு நாள் ஒரு கனவு தான்.

தடிப்பசங்க #4

காட்சி # 4 : கலர் கலராம் காரணமாம்
"Diamonds are a girl’s best friend"னு எங்க நடு அத்தை பாடுன பாட்டு ஒன்னு "Gentlemen prefer blondes" அப்படிங்கற படத்துல இருக்குது. சரி...கேர்ள்ஸ்க்கு டயமண்டு பெஸ்ட் ஃப்ரெண்ட்... ஒத்துக்கறோம். மேரீட் லேடீஸுக்கு?? என்னை கேட்டீங்கனா "Her grown up sons (or daughters) are a married woman's best friend(or worst enemy for that matter)" அப்படின்னு சொல்லுவேன். இருந்தாப்புல இருந்து இப்ப எதுக்கு பீட்டருன்னு தானே கேக்கறீங்க? என்னங்க பண்ணுறது...என்ன தான் உங்களுக்கெல்லாருக்கும் புரியறதுக்காக, நான் டேமில்ல ரைட் பண்ணாலும், எங்க நைனா டங்கை என்னால மறக்க முடியுமா? அதுக்குத் தான் அப்பப்ப, இப்பிடி பீட்டர் தெளிச்சு கோலம் போடறது. என்னது?... 'அடி செருப்பால'யா?....நோ...நோ...மீ பாவம்யா.

சரி! பெஸ்ட் ஃப்ரெண்ட் காட்சியெல்லாம் இப்ப எடுத்து வுட்டா நெஞ்சை நக்கீஸ் மேட்டர் ஆகிப் போவும்ங்கிறதுனால இப்போதைக்கு ஒரு வர்ஸ்ட் எனிமி காட்சி.

"டேய்! முரளி...இதை கொஞ்சம் அயர்ன் பண்ணி வாங்கிட்டு வா...சீக்கிரம்"

"த..து..என்னது இது?" சாட்சாத் பூர்ணம் விசுவநாதனே தான் (!)

"புடவை"

"அது தெரியுது...என்ன புடவை?"

"பட்டு புடவை"

"வெளையாடாதீங்கம்மா...என்ன கலர்?"

"மாம்பழக் கலர்...டபுள் கலர் புடவை. காலையில ஒரு கல்யாணத்துக்குப் போகணும்னு நேத்தே தான் சொன்னேனே?"

"இந்த புடவையை எல்லாம் கட்டிக்கிட்டு எங்க கூட வராதீங்க. இத கட்டிக்கிட்டு நீங்க எங்க கூட வந்தா எங்களுக்கு ஒரே அவமானமா இருக்கும். "

"ஏன் இந்த புடவைக்கு என்னா?. "

"இந்த புடவை ஒரே பளபளனு இருக்கு. இதை கட்டுனீங்கனா அலங்கார பூஷணியா ஒரே பகட்டா இருக்கும். பாரு இந்தம்மா எப்பிடி பந்தாவா புடவை கட்டிக்கிட்டு போறாங்கன்னு எல்லாரும் பேசுவாங்க"

"எது இது அலங்கார பூஷணியா? இந்தப் புடவையில ஜரிகை கூட முந்தியில மட்டும் தான் இருக்கு. ஊர் உலகத்துல போய் பாருங்க. அவங்கவங்க எப்படி உடம்பு முழுசும் ஜரிகையோட புடவை கட்டுறாங்கன்னு...கல்யாணத்துக்குப் பட்டுப் புடவை கட்டாம வேற என்ன கட்டுவாங்க? உனக்கு அவமானமா இருந்தா நீ என் கூட வராதே"

"நாளைக்குக் கல்யாணத்துக்குப் போவணும்னு தெரியுமில்ல. கடைசி நேரம் வரைக்கும் புடவையை அயர்ன் பண்ணாம என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க? " - தம்பியோட வசனத்தை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குல்ல? "சனி,ஞாயிறு ரெண்டு நாளா லீவுல தானே இருந்தீங்க. திங்கக் கிழமை காலையிலே ஸ்கூலுக்குக் கிளம்பும் போது தான் சட்டை அயர்ன் பண்ணல, பேண்ட் அயர்ன் பண்ணலைன்னு ஞாபகம் வருமா? சாகப் போற நேரத்துல தான் சங்கரா சங்கராம்பீங்களா"னு அம்மா எடுத்து விடற நீளமான டயலாக்கோட உல்டா தான் மேலே பார்த்தது. An eye for an eye, a tooth for a tooth. பீட்டர் இல்லாம பரயணுமெங்கில் பழிக்குப் பழி ரத்தத்துக்கு ரத்தம்.

"அடிக்கிற வெயில்ல எதுக்குப் பட்டு புடவை?" - இது 'நானே தான்' தம்பிக்கு ஆதரவாக.

"என்னடா நீயும் அவன் கூட சேந்துக்கிட்டு... கல்யாணத்துக்குப் பட்டுப் புடவை கட்டாம வேற எத கட்டுறது?"

"சிம்பிளா க்ரிஸ்பா ஒரு காட்டன் சாரி" - தி ஹிண்டு சண்டே மேகசின்ல யாரோ ஒரு சமூக சேவகியை விவரிக்கும் போது வந்த "க்ரிஸ்ப் காட்டன் சாரி" என்ற பதத்தைச் சரியான எடத்துல சரியான நேரத்துல சரியாகப் பிரயோகித்துத் தங்கள் பாராட்டுகளுக்குப் பாத்திரம் ஆகுபவர் உங்கள் கைப்புள்ள.

" 'மறுபடியும்' படம் பாத்தீங்கல்ல?"

"நான் பாக்கலை"

"நேத்து கூட ஒலியும் ஒளியும்ல அந்த படத்து பாட்டு போட்டானே. அதுல ரேவதி கட்டிக்கிட்டு வர மாதிரி சிம்பிளா லைட் கலர்ல் அழகா ஒரு காட்டன் சாரி கட்டிக்கிட்டு வாங்க"

"அது சரி! அதுக்கெல்லாம் உங்க ரெண்டு பேரோட பொண்டாட்டிங்க வருவாளுங்க. கல்யாணத்துக்கு காட்டன் புடவை கட்டி கூட்டிக்கிட்டு போய் அழகு பாருங்க. எங்க வீட்டுக்காரரு எனக்கு வாங்கிக் குடுத்துருக்காரு...நான் இதை தான் கட்டிக்கிட்டு வருவேன்" ஷேவ் பண்ணிக் கொண்டு இருக்கும் அப்ஸின் ஆதரவுக்காக அவரை நோக்கி ஒரு ஏக்கப் பார்வை.

"நீயாச்சு...உன் மவனுங்களாச்சு. நம்மளை வுட்டுராயா. உங்க பேச்சுக்கே நான் வரலை" இத இத இத தானே நாங்க எதிர்பார்த்தோம்.

"உங்க கிட்ட போய் சொன்னேன் பாருங்க..."அப்ஸ் எதையும் கண்டுக்காத மாதிரி நைஸா எல்லாத்தையும் ரசிச்சிக்கிட்டுத் தான் இருக்காரு. ரெண்டு எருமைங்களுக்கு நடுவுலே தனியா கிளேடியேட்டரா அம்மா எவ்வளவு தான் சமாளிப்பாங்க?

"எங்க பொண்டாட்டிங்க வந்தாங்கன்னா இந்த மாதிரி பந்தாவெல்லாம் கூடாது, சிம்பிளா இருக்கணும்னு முன்னாடியே கண்டிஷனா சொல்லிடுவோம்...என்னடா?"

"ஆமாம்" - தம்பியின் ஏகோபித்த ஆதரவும் நமக்கிருக்கு.

"இந்த மாதிரி லூசுத் தனமானக் கண்டிஷன் எல்லாம் போட்டா நாளைக்கு வர்றவ கொமட்டுலயே குத்துவா"

"கொமட்டுல குத்துற ராட்சசிங்க தான் பொண்டாட்டியா கெடப்பாங்கனா நாங்க கல்யாணமே பண்ணிக்க மாட்டோம். சிம்பிளா டிரெஸ் பண்ணறது என்ன தப்பா?"

"சரியான ஜோக்கு. ஆமாண்டா...எல்லாரும் இப்ப இப்பிடி தான் சொல்லுவீங்க. நாளைக்குப் பொண்டாட்டிங்க வந்ததும் அவளுங்களுக்கு அவனவனும் கூஜா தூக்குவீங்க. அப்ப அலங்கார பூஷணியா அவளுங்க வெளியில கெளம்பும் போது என்ன பண்றீங்கன்னு நானும் பாக்கத் தானே போறேன். சிம்பிளா டிரெஸ் பண்ணறது தப்பில்லை...ஆனா அது அதுக்குன்னு ஒரு நேரங்காலம் இருக்கு. கறிகாய் வாங்கப் போகும் போது பட்டுப் புடவை கட்டுனா நீ சொல்லுறது சரி. கல்யாணத்துல கூட காட்டன் சாரியைக் கட்ட சொன்னா பிற்காலத்துல பஹுத் முஷ்கில் ஹை பேட்டா"

"டேய் லேட்டாவுது...சீக்கிரம் அயர்ன் பண்ணி வாங்கிட்டு வா?"

"நான் குளிக்கப் போறேன்...எனக்கும் லேட்டாவுது" - இன்னும் கொஞ்சம் வெறுப்பேத்தறதுக்காகத் தம்பி பாத்ரூமுக்குள்ள நுழையற மாதிரி ஒரு ஆக்டிங் குடுக்கறாரு.

"டேய்! அம்மா கேக்குறாங்கல்ல. அயர்ன் பண்ணி வாங்கிக் குடுத்துட்டு குளிக்கப் போயேன்" முதன்முறையா அம்ஸுக்கு சப்போர்ட்டாகத் தோப்பனார்.

"சரி குடுங்க" இளவல் இறங்கி வருகிறார்.

"ஒன்னும் வேணாம். ஏற்கனவே அயர்ன் பண்ணியிருக்குற வேற புடவையையே கட்டிக்கிட்டு வர்றேன். மவனே! இந்தம்மா கிட்ட கல்யாணத்துல கட்டிக்க ஒரு நல்ல பட்டுப் புடவை கூட இல்லன்னு எல்லாரும் சொல்லணும். நீங்களும் உங்க டாடியும் அதை கேட்டு அவமானப் படணும்" இப்ப முருங்கை மரம் ஏறுறதுக்கு அம்மாவோட சான்ஸ்.

"என்னை உங்க சண்டையில இழுக்காதே" - அப்புச்சி ஐ ஆம் தி எஸ்கேப்

"இதுக்குத் தான் வீட்டுல ஒரு பொம்பளைப் புள்ள வேணுங்கிறது. பொம்பளைப் புள்ள இருந்துச்சுன்னா அம்மாவுக்குக் கொஞ்சமாச்சும் ஆதரவாப் பேசும்" அப்பப்போ தடிப்பசங்க ரெண்டு பேரையும் வெறுப்பேத்த அம்மா உபயோகிக்கும் சுலபமான ஆனா பலன் தருகிற ஒரு டெக்னிக் இது.

"ஆ...ஊன்னா பொம்பளைப் புள்ள பொம்பளைப் புள்ளம்பீங்களே? எவ்வளவு செஞ்சாலும் உங்களுக்கு நன்றியே இருக்காதும்மா. பொம்பளைப் புள்ள இருந்தா மட்டும் என்ன பண்ணுமாம்?" இது நாங்க ரெண்டு பேரும் கோரஸ்.

"ஆமாம் இப்ப நீங்க மட்டும் என்ன பண்றீங்களாம். காலங்காத்தால உயிரை எடுக்குறீங்களே? எனக்கு மாமியாரே வேணாண்டா நீங்க ரெண்டு பேருமே போதும். எங்க மாமியார் கூட இப்படியெல்லாம் என்னை கேள்வி கேட்டது கிடையாது"

"சினிமால காட்டுற மாதிரி உங்க மாமியார் உங்களைக் கொடுமை படுத்தி இருந்தாங்கன்னா இப்ப இந்த மாதிரியெல்லாம் அட்டகாசம் பண்ணுவீங்களா?"

"உங்களால ஒரு பைசா பிரயோஜனம் இல்லன்னாலும் வெட்டிப் பேச்சுக்கு ஒன்னும் குறைச்சலில்லை"

இதுக்கு மேலே வெறுப்பேத்துனா அப்ஸ் கிட்ட நல்லா பாட்டு விழும்னு தெரிஞ்சிக்கிட்டு தம்முடு விறுவிறுன்னு புடவையை எடுத்துக்கிட்டு லாண்டிரிக்கு ஓடறாரு. புடவை அயர்ன் பண்ணி வந்தாலும் அம்மா பிடிவாதமா பளபளப்பு குறைச்சலான வேறொரு பச்சை கலர் பட்டுப் புடவையைத் கட்டிக்கிட்டுத் தான் கல்யாணத்துக்கு வர்றாங்க.

தி.நகர்ல இருக்குற கல்யாண மண்டபத்துக்கு திருவல்லிக்கேணி ஆராதனா ஓட்டல் கிட்டருந்து 13 இல்ல 13பி பஸ்ஸைப் பிடிச்சா அழகா அரை மணி நேரத்துல போயிடலாம். இப்படி இருக்கையிலே இருபத்தி அஞ்சு ரூபா(அப்பல்லாம் அவ்வளவு தான்) குடுத்து அப்ஸை ஆட்டோ பிடிக்க வைக்க கொஞ்சம் மெனக்கெடனும். அப்ஸ் ஆட்டோல போக ஒத்துக்கிட்டாலும் அம்மாவை ஒத்துக்க வைக்க பகீரத பிரயத்தனம் பண்ணனும். ஆனா ஆட்டோல நாலு பேரையும் ஏத்தறதுல இளவல் ஏழு எட்டு வயசுலேயே போஸ்ட் டாக்டரல் ஃபெல்லோ பட்டம் வாங்கனவரு. அத்தோட தி.நகர்லேருந்து திரும்பி வரும் போது சரவண பவன்ல சாப்பாட்டுக்கும் சில பல டெக்னிக்குகளைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்து விடுவார். கல்யாணத்துல புவ்வா உண்டு என்பதால் சரவண பவன் மட்டும் கட்.

வீட்டுலேருந்து நடந்து அக்பர் சாகிப் தெரு முனை வந்ததும் "டாடி! கல்யாணத்துக்கு நேரமாகலை? ஏற்கனவே நாம ரொம்ப லேட்டுன்னு நெனக்கிறேன். ஒன்பது மணி பஸ்ஸும் போயிருக்கும்" பல்லவன் பஸ்ஸுல பார்ட்-டைம் வேலை பாக்குற மாதிரி ஒரு பீலா.

"அதெல்லாம் ஒண்ணும் நேரமாகலை. பஸ்ஸூலேயே போகலாம். ஆட்டோவுக்கு வேற இருபது ரூபா குடுக்கணும்" அம்மா இப்பவும் 1970களின் விலைவாசியிலேயே இருக்காங்களே.

"சரி! அங்கே நிக்குதே ஆட்டோ...அவரைப் போய் தி.நகர் பனகல் பார்க் வருவாரான்னு கேளு" - இது அப்ஸ்.

எள்ளுன்னா எண்ணெய்யா நிக்கிற பழக்கம் தானே பிரதர்ஸ் ரெண்டு பேருக்கும் (நமக்கு ஆதாயமான விஷயத்துல மட்டும்). அப்ஸ் சொல்லி முடிக்கிறதுக்குள்ள இளவல் ஆட்டோ டிரைவரோட பேச்சு குடுத்துட்டு இருக்காரு. பேசி முடிச்சிட்டு, நின்னுக்கிட்டிருக்குற எங்களை நோக்கி வர்றாரு. பின்னாடியே ஆட்டோவும் வருது.

"டாடி! அவரு முப்பத்தைஞ்சு ரூபா கேட்டாரு. நான் முப்பது ரூபாய்க்குப் பேசி முடிச்சிட்டேன்" ஆஹா இதுவல்லவோ பேச்சுத் திறமை.

"முப்பது ரூபாயா? இருபது ரூபாயே அதிகம்னு சொல்றேன். முப்பது ரூபாய்க்குப் பேசிட்டு வந்துருக்கே?" அம்மா முகத்துல கடுகு வெடிக்குது.

"இருபது ரூபாய்க்கு ராயப்பேட்டைக்குத் தான் போக முடியும்" தன்னுடைய பேரத்தின் மீது தம்பிக்கு அப்படி ஒரு அபார நம்பிக்கை.

"முப்பது ரூபான்னா வேண்டாம்னு சொல்லிடுங்க" இது யாருன்னு அநாவசியமா கேக்கப் பிடாது.

"முப்பது ரூபா அதிகம்டா" - அப்ஸ்

அப்ஸ் ஆட்டோ டிரைவர் கிட்ட "தி.நகர் தானே? இருபது ரூபா தான் ஆவும். பரவால்ல இருபத்தியஞ்சு ரூபா வாங்கிக்குங்க"

சென்னை ஆட்டோ டிரைவர்களின் அக்மார்க் பதில் ஆன"இருபத்தியஞ்சு ரூபா கட்டாது சார். சர்ச் பார்க் ஸ்கூல் வரைக்குமே இருபது ரூபா மீட்டர் போட்டாலே வந்துடும். அப்புறம் அங்கிருந்து பனகல் பார்க் எவ்வளவு தூரம்னு நீங்களே யோசிச்சுப் பாருங்க" வைக் கொடுக்கிறார் ஆட்டோ டிரைவர்.

ஆட்டோவைப் பேசிக் கூப்பிட்டு விட்டதால் "சரி ஏறுங்க"ஒன்று வருகிறது.

ஜன்னலோர சீட்டைத் தம்பி உஷாராக முதலிலேயே பிடித்துக் கொள்கிறார். நாலு பேர் ஆட்டோவில் உக்காருவது கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு. இருபத்து மூன்று அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் அடங்கிய காம்ப்ளானைக் காலையும் மாலையும் இரண்டு "வளரும் பையன் இவன்"களும் குடிச்சா ஆட்டோவுல எங்க எடம் இருக்கும்?.

"அழகா பஸ்ஸுலே நாலு பேரும் உக்காந்துட்டு போயிருக்கலாம். ஒன்னே கால் ரூபா தான் டிக்கெட். முப்பது ரூபா குடுத்து இறுக்கத்துல போக வேண்டியதாயிருக்கு" முப்பது ரூபா அநாவசிய செலவு என்பது அம்மாவின் அசைக்க முடியாத நம்பிக்கை.

"இந்த நேரத்துல உங்களுக்கு பதிமூணாம் நம்பர் பஸ்ஸுலே உக்காந்துட்டு போக எடம் கெடைக்குதா? நீங்க கட்டிக்கிட்டு வந்துருக்குற பட்டுப் புடவையால தான் இறுக்கமே" - இது எப்படி இருக்கு?

முப்பது ரூபாயும் ஒன்னே கால் ரூபாயும் அமீர் மகால் வரும் வரை அம்மாவின் உதட்டை விட்டுப் பிரிய மறுக்கிறது.

"அதான் ஆட்டோவுல ஏறியாச்சுல்ல. அப்புறம் என்ன சும்மா அதேயே பிடிச்சுக்கிட்டு" ஆட்டோ பயணத்தின் ஆனந்தத்திற்கு பங்கம் ஏற்படாத படி தம்பி பார்த்துக் கொள்கிறார்.

சிறிது நேரம் அமைதிக்குப் பிறகு "டேய் மோகன்ராஜ்! சூப்பர் ஹிட் முகாப்லாவுல ஞாயித்துக் கிழமை ஏதோ பரிசு போட்டின்னு சொன்னானே? உனக்குக் கூட அதுக்குப் பதில் தெரிஞ்சிருந்துதே? ஒரு நாலணா காம்பெடிஷன் போஸ்ட் கார்ட் வாங்கி எழுதி போடலாமில்ல?"

"எனக்கு அதுலெல்லாம் இண்டரெஸ்ட் இல்லை"

"உனக்கு எதுல தான் இண்டரெஸ்ட்?"

"ஏன்மா எப்பவும் அடுத்தவன் பொருளுக்கு ஆசை படறீங்க?"

"சீ! கழுதை...ஒரு கார்ட் எழுதி போட சொன்னா அது அடுத்தவன் பொருளுக்கு ஆசை படறதா?"

"அவன் கொடுக்குற பரிசுப் பொருள் டிவி, பிரிஜ் இதெல்லாம் உங்க வீட்டுல இல்ல? உங்க வீட்டுக்காரர் உங்களுக்கு அதெல்லாம் கஷ்டப் பட்டு வாங்கித் தரலை. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. எதுவா இருந்தாலும் நாமளே உழைச்சு சம்பாதிக்கணும். வீணா ஓசியிலே கெடக்கறதுக்கு ஆசை படக் கூடாது"

"சோம்பேறி நாய்ங்களா! சும்மா எருமை மாட்டு மேலே மழை பேஞ்ச மாதிரி உக்காந்து இருந்தாலும் இருப்பீங்க...ஒரு வேலை சொன்னா செய்ய மாட்டீங்க. டிவி, பிரிஜ் எல்லாம் இருக்கு தான்... ஆனா பம்பர் பரிசா மாருதி கார் குடுக்கறானாமே. அது உங்க கிட்ட இருக்கா? அது இருந்தா இப்பிடி ஆட்டோவுல நெருக்கிக்கிட்டு உக்கார வேணாமில்ல?" மடக்கிட்டதா ஒரு அநாவசியமானத் தப்புக்கணக்கு.

"மாருதி கார் நெஜமாலேயே குடுக்கறான்னு உங்களுக்குத் தெரியுமா? அவன் கம்பெனியிலேயே வேலை செய்யிற ஆளு எவனையாச்சும் செட்டப் பண்ணி சும்மா குடுக்கற மாதிரி குடுத்து ஊரை ஏமாத்தறானுங்க. எல்லாம் கேமரா ட்ரிக்" இந்தளவு யோசிச்சு கதை சொல்லுவோமே ஒழிய, ஒரு நாளும் ஒரு கார்டு எழுதி போட மாட்டோமே!

"முயற்சியே பண்ணாத சோம்பேறி பயலுங்களை என்ன சொல்லித் திருத்த முடியும்?" - பனகல் பார்க் தரிசனம் தந்து சூப்பர் ஹிட் முகாப்லாவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது.

கல்யாணத்துக்குப் போனா "அலங்கார பூஷணி" என்ற சொல்லுக்கு (அது முதன்முறையா எப்படி எங்க அகராதில வந்ததுன்னு சரியா ஞாபகமில்ல) உண்மையான அர்த்தம் தெரிகிறது. பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தையும் கதையாக வடித்த புடவைகளையும் காதுலயும் கழுத்துலயும் இடுப்புலயும்(!) "வளர்ப்பு மகன்" திருமணத்துக்கு வந்தவர்கள் தோற்கிற அளவுக்கு அணிந்திருக்கிற ஆண்டீஸ்களை எல்லாம் பார்க்கும் போது அம்மா மாம்பழக் கலர் புடவையையே கட்டி வந்திருந்தால் கூட ஒன்னும் பெருசாக வித்தியாசம் தெரிந்திருக்காது என்று தோன்றுகிறது. அந்த மாம்பழக் கலர் புடவையை முதன்முதலில் அம்மா கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு ஆண்ட்டி கையில் இருந்து பிடுங்காத குறை தான். இந்த விஷயத்தில் அப்பாவிடமிருந்து ஒரு உதவியும் கிடைக்காது அம்மாவுக்கு. "லேடீஸ் புடவை எடுக்கிற எடத்துல நாம நின்னுக்கிட்டு என்ன பண்றது"ன்னு புடவை கடையில் நடுவில் போட்டிருக்கும் ஸ்டூலே கதின்னு அப்பாவும் அப்பாவுக்குத் துணையாக நாங்களும் உக்காந்துக்குவோம்.

அம்மா எடுக்கிற கலர் அவ்வளவாக "அடிக்கிற" கலரா இல்லாவிட்டாலும் அதைப் பத்திக் குத்தம் சொல்லி 'மாமியார்' கொடுமை படுத்துவது தடிப்பசங்க எங்க ரெண்டு பேரோட வழக்கம். நான் புது தில்லியில் இருந்த வரைக்கும், தீபாவளிக்குச் சென்னை வரும் போது புது தில்லி சவுத் எக்ஸ்டென்ஷன் பார்ட் ஒன்னில் இருக்கிற 'நல்லி'யில் புடவை எடுத்து வருவது வழக்கம். பெண்களின் கண்களுக்குக் மட்டுமே தெரியும் ஆஸ்தான கலர்களான ராமர் கலர், கண்ணன் கலர், வாடாமல்லி கலர், கத்திரிப்பூ கலர், அரக்கு கலர், பொடி கலர்(இது வரைக்கும் அது என்ன கலர்ன்னு எவ்வளவு முயற்சி பண்ணியும் கண்டு பிடிக்க முடியலை) ...அப்புறம் இந்த யானை கலர், மயில் கழுத்துக் கலர் இந்த எல்லா கலருக்கும் நம்ம இரண்டு கண்ணும் "வண்ணக் குருடு"(அதாங்க ...Colour Blind). அம்பது ஆயிரம் கலரே இருந்தாக் கூட நாம புடவை எடுக்கிற கலர் எல்லாம், நமக்கு சட்டை எடுக்கிற இங்கிலீஷ் கலரான Cream, Mauve, Lilac, Biege... இப்படித் தான்...சுருக்கமாச் சொன்னா எல்லாம் டல்லான சோப்ளாங்கி கலர். இருந்தாலும் இது வரைக்கும் நம்ம தேர்வு நல்லாயிருக்குன்னு தான் வீட்டுல சான்றிதழ். சென்னை நல்லியில் கிடைக்காத புடவையா? இருந்தாலும் பையன் டெல்லியிலே இருந்து வாங்கிட்டு வரானேன்னு ஒரு பெருமிதம் தான் காரணம்னு நெனக்கிறேன்.

இப்ப இதையெல்லாம் நெனச்சா இந்த கலர் விஷயத்தில் அம்மாவின் சாய்ஸைப் பெருமளவுக்குக் குறைத்ததில் நம்ம பங்கு அளப்பிடற்கரியதுன்னு தோணும். சில சமயம் "தவறிழைத்தான் பாண்டிய மன்னன்"னு கூடத் தோணும். ஆனா தவறிழைத்தால் தானே அவன் பாண்டிய மன்னன்? அப்பத் தானே தவறிழைத்தான் பாண்டிய மன்னன் என்ற டயலாக்குக்கும் மரியாதை, அப்பத் தானே மும்பையில் ஓட்டல் ரூமில் உக்காந்து கொண்டு அன்னையர் தினத்தன்னிக்கு லேப்டாப்பில் "தடிப்பசங்க#4"னு கதை எழுத முடியும்?
:)-