Tuesday, June 30, 2009

ஜீஜாபாய் கதைகள் : இந்த காலத்துப் பொண்ணுங்க!

ஜீஜாபாய் யாருன்னு எல்லாருக்கும் தெரியும் தானே? மராட்டிய மாமன்னர் சிவாஜியின் அம்மா தான் ஜீஜாபாய். சிறுவயது முதலே தன் மகனுக்குக் கதைகள் சொல்லி அவரை ஒரு அறிவாளியாகவும், நீதிமானாகவும், வீரனாகவும் வளர்த்தார். கதை கேட்டா அறிவாளி ஆவறோமா, நீதிமான் ஆகறோமா இல்லை வீரனாகறோமான்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா கதை கேக்கறது எனக்கு ரொம்ப புடிக்கும், அதுல இருக்கற ஃபேண்டஸி எலிமெண்ட்டுக்காக. அதுவும் எங்க வீட்டு ஜீஜாபாய் சொன்னா ரொம்ப சுவாரசியமா இருக்கும். ஆ...ன்னு வாயைப் பிளந்துக்கிட்டு கேப்பேன். நான் மாவீரன் சிவாஜின்னா எங்கம்மா ஜீஜாபாய் தானே...ஹி...ஹி... எங்கம்மா அதுவும் கதையைச் சொன்னா சும்மா சொல்ல மாட்டாங்க, திரைக்கதையோட வசனத்தோட ஏற்ற இறக்கத்தோட கிட்டத்தட்ட நடிச்சே காட்டுவாங்க. அப்படி எங்கம்மா கிட்ட கேட்ட ஒரு கதை/நிகழ்வு/உரையாடல் தான் இது.

என் மகள் பிறந்திருந்த நேரம் அது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியையும் மகளையும் பார்ப்பதற்காக நானும் என் அம்மாவும் அப்பாவும் அம்பத்தூர் சென்று விட்டு ஒரு மாலை வேளையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். திருவான்மியூர் செல்லும் 47D பேருந்தில் மூவரும் ஏறினோம். மூவருக்கும் வெவ்வேறு இடங்களில் உட்கார இடம் கிடைத்தது. அம்மாவுக்கு ஒரு பழக்கம். வீட்டில் இருக்கும் போது பொதுவாகத் தூங்க மாட்டாங்க. ஆனா எங்கேயாச்சும் வெளியே பேருந்துலேயே ரயிலிலேயோ போறதுன்னா போதும் ஏறி உக்காந்ததுமே தூக்கம் வந்துடும். ஆனா பக்கத்துல யாராச்சும் உக்காந்து பேச்சு குடுத்துக்கிட்டே வந்தாங்கன்னா தூங்க மாட்டாங்க. அப்படி ஒரு விநோதமான பழக்கம். எங்கம்மா மகளிர் இருக்கைகள் இருக்கற இட புறத்துலயும் நானும் எங்கப்பாவும் வலது புறத்துலயும் உக்கார்ந்துருந்தோம். அன்னிக்கு எங்கம்மா பக்கத்துல ஒரு 20 வயசு மதிக்கத் தக்க பொண்ணு உக்கார்ந்துருந்துச்சு. ஏறி உக்காந்ததும் தூங்குவாங்களே என்ன பண்ணறாங்கன்னு திரும்பி பார்த்தேன். அந்த பொண்ணு கிட்டே பேசிட்டு வந்துட்டு இருந்தாங்க. இன்னும் கொஞ்ச தூரம் போனதும் மறுபடியும் பார்த்தேன். இப்போ முன்னைவிட சுவாரசியமா சிரிச்சி சிரிச்சி ரெண்டு பேரும் பேசிக்கிட்டே வந்தாங்க. அட! என்னடா இவ்வளோ ஆழமா பேசிக்கிட்டு வராங்களேன்னு நானும் கவனிச்சிக்கிட்டே வரேன். ஆனா அவங்க சிரிச்சி பேசிக்கிறது மட்டும் குறையவே இல்லை. என் பக்கத்துல உக்காந்துருந்தவன் என்னை மாதிரியே காதுல (ஐ-பாட்) மாட்டிக்கிட்டு இருந்ததுனால என் கிட்ட யாரும் பேச வேற இல்லை. அதனால எனக்கு வேற ஒரே பொறாமை. கடைசியா அந்த பொண்ணு தி.நகர் பேருந்து நிலையத்து கிட்ட இறங்கி எங்கம்மாவுக்கு கை காட்டிட்டு போற வரைக்கும் அவங்க பேசிக்கிட்டே தான் வந்தாங்க. அந்த பொண்ணு இறங்கிப் போனதும் தூங்க ஆரம்பிச்சிட்டாங்க.

வீட்டுக்குப் போனதும் முதல் வேலையா அப்படி என்ன அவ்வளவு இண்டெரெஸ்டிங்கா சிரிச்சி சிரிச்சி பேசிக்கிட்டே வந்தாங்கன்னு தெரிஞ்சிக்க எனக்கு ஒரே ஆர்வம். எங்கம்மா எனக்கு மிமிக்ரியோட ஏற்ற இறக்கத்தோட சொன்ன கதையோட உரையாடல் வடிவம் தான் கீழே.

"டைம் என்னங்க ஆச்சு"

"ஆறு நாப்பதுமா"

"நீங்க எது வரைக்கும் போறீங்க ஆண்ட்டி?"

"திருவான்மியூர் வரைக்கும்மா"

என்னை காட்டி "அந்த அங்கிள் கூடத் தான் வந்தீங்களா?" :(

"அங்கிள் முன்னாடி உக்கார்ந்துருக்காரு பாரு அவரு தான். அது என் பையன்". இதை சொல்லிட்டு எங்கம்மா என் கிட்ட சொன்னது "இருபது வயசு பொண்ணே உன்னை அங்கிள்ங்கிறா. முதல்ல தொப்பையைக் குறைச்சிக்க" அதுக்கு நான் சொன்னேன்"இனிமே தொப்பை இருந்தா என்ன இல்லாட்டி என்ன, அதான் கல்யாணம் ஆகி குழந்தை கூட பொறந்துடுச்சே"ன்னு. நறுக்குன்னு மண்டையில ஒரு கொட்டு விழுந்துச்சு.

"சாரி ஆண்ட்டி"

"அம்பத்தூர்ல தான் உங்க வீடா?"

"இல்லம்மா, மருமகளுக்குக் குழந்தை பொறந்துருக்கு. அதை பாத்துட்டு வீட்டுக்குப் போயிக்கிட்டிருக்கோம்"

"எங்க வீடு எங்கேருக்கு சொல்லுங்க பாப்போம்"

"தெரியலையேம்மா"

"நீங்க போற வழில தான்"

"நாங்க போற வழில நெறைய இடம் இருக்கு. நான் எதைன்னு சொல்லறது?"

"சும்மா ஒரு கெஸ் பண்ணுங்களேன்"

"சைதாப்பேட்டையா?"

"அதான் இல்லை. டி.நகர்ல தான் எங்க வீடு. டி.நகர் பஸ் ஸ்டாண்டுக்குப் பின்னாடி ஒரு ரோடு போகுதில்லை. அதுல செக்கண்ட் லெஃப்ட் திரும்புனா ஒரு அபார்ட்மெண்ட் வரும். அதுல ஃபிஃப்த் ஃப்ளோர்ல தான் எங்க வீடு"

"ஓஹோ"

"அம்பத்தூர்ல என் ஃப்ரெண்டு வீடு இருக்கு. அங்கே தான் போயிட்டு வரேன்"

"அப்படியா? என்னம்மா பண்ணறே நீ"

"நான் கரெஸ்ல B.C.A.படிக்கிறேன் ஆண்ட்டி"

"கரெஸ்னா என்னம்மா?"

"என்னது உங்களுக்கு கரெஸ்னா என்னன்னு தெரியாதா?"

"தெரியாதும்மா"

"கரெஸ்பாண்டென்ஸ்ல போஸ்டல்ல படிக்கிறதை தான் ஷார்ட்டா கரெஸ்னு சொல்லுவாங்க"

"அப்படியாம்மா"

"ஆண்ட்டி! நான் ரொம்ப குண்டா இருக்கேனா ஆண்ட்டி?"

"ஏம்மா! உனக்கு என்ன? நல்லா ஸ்லிம்மா அழகாத் தானே இருக்கே?"

"போங்க ஆண்ட்டி. நீங்க பொய் சொல்றீங்க. நான் குண்டா இருக்கேன்னு எனக்கே தெரியும். இப்போ என்னோட வெயிட் எவ்வளோ தெரியுமா 46 கேஜி. நான் 40 கேஜி யைத் தாண்டுனதேயில்லை".

"இதெல்லாம் போய் ஒரு வெயிட்டுன்னு சொல்லறியேம்மா. இந்த வயசுல நல்லா சாப்பிட்டு உடம்பைப் பாத்துக்க வேணாமா?"

"என் வெயிட் அதிகமாயிடுச்சுன்னு நான் அஞ்சு மாடி படிக்கட்டுல தான் ஏறிப் போறேன். லிஃப்ட் எல்லாம் கூட யூஸ் பண்ணறதில்லை. டி.நகர் பஸ் ஸ்டாண்டுலேருந்து எங்க வீட்டுக்குப் போக 15 நிமிஷம் ஆகும். அது கூட நான் ஆட்டோல போகாம நடந்தே தான் போறேன்"

"ஹ்ம்ம்ம்"

"என் பேரு என்னன்னு சொல்லுங்க பாப்போம்?"

"...."

"என்னை பாத்து நான் க்றிஸ்டியன்னு நீங்க நெனச்சிருப்பீங்க. அதான் இல்லை. நான் ஹிண்டு தான். ஃப்ரெண்டு வீட்டுலேருந்து வரும் போது என் பொட்டு கீழே விழுந்துடுச்சு. என் பேரு பத்மப்ரியா"

"இல்லைம்மா. அப்படியெதுவும் நான் நெனக்கலை"

"எங்க வீட்டுலேயே நானும் எங்கப்பாவும் தான் கறுப்பு. எங்கப்பாவுக்கும் அம்மாவுக்கும் லவ் மேரேஜ். எங்கம்மா மலையாளி. என் தம்பி எங்கம்மா மாதிரி நல்லா சிவப்பா இருப்பான். எங்கப்பா கறுப்பா இருந்தாலும் தங்கம் தெரியுமா?"

"தம்பி என்னம்மா பண்ணறான்"

"இப்போ தான் லெவெந்த் படிக்கிறான் ஆண்ட்டி"

"திருவான்மியூர்ல இறங்கப் போறதாச் சொன்னீங்களே? உங்க வீடு அங்கே தானா?"

"இல்லம்மா. இன்னும் கொஞ்சம் தூரம் போகனும் ECRல இருக்கு"

"ஹை! ECRஆ. அங்கே தான் விஜய் வீடு கூட இருக்கு இல்லை"

"ஆமாம்மா. உனக்கு விஜய்ன்னா ரொம்ப பிடிக்குமா?"

"ஆமாம் ஆண்ட்டி! விஜய் படம்ன்னா ஒன்னு விடாமப் பாத்துடுவேன்"

"அப்போ ஒரு நாள் எங்க வீட்டுக்கு வாயேன். அப்படியே விஜயையும் பாத்துட்டுப் போ"

"அதெல்லாம் வேணாம் ஆண்ட்டி. இப்படியே தூரத்துலேருந்து விஜயைப் பாக்கறது தான் எனக்கு புடிச்சிருக்கு."

"ஆனா கல்யாணம்னு ஒன்னு பண்ணிக்கிட்டா விஜய் மாதிரி நல்லா ஹைட்டா அழகா இருக்கற பையனைத் தான் பண்ணிப்பேன் ஆண்ட்டி. அதுக்கு தான் என் வெயிட்டைக் கூட குறைச்சிக்கிட்டு இருக்கேன். எங்க சித்தி பொண்ணு ஒருத்தி இருக்கா. அவ தோனின்னா உயிரையே விடுவா. தோனி மாதிரி மாப்பிள்ள தான் வேணும்னு இப்பவே சொல்லிக்கிட்டு இருக்கா."

"ஆண்ட்டி! நீங்க ஃப்ரீ டைம்ல என்ன ஆண்ட்டி பண்ணுவீங்க?"

"வீட்டு வேலையே சரியாயிருக்கும்மா. அப்படி கொஞ்சம் டைம் கெடைச்சதுன்னா டிவி பார்ப்பேன்"

"மதியானம் தூங்க மாட்டீங்களா?"

"இல்லம்மா"

"நானும் தூங்க மாட்டேன். ஆனா எங்கம்மாவுக்கு மத்தியானம் தூங்கல்லைன்னா சாயந்திரம் எல்லாம் ரொம்ப கஷ்டப் படுவாங்க"

"நீ என்னம்மா பண்ணுவே ஃப்ரீ டைம்ல"

"டிவி பாப்பேன், பாட்டு கேப்பேன். ஃப்ரெண்ட்சுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவேன்".

"ஹ்ம்ம்ம்"

"ஆண்ட்டி உங்க மொபைல் நம்பர் குடுங்க. நான் உங்களுக்கும் இனிமே எஸ்எம்எஸ் அனுப்பறேன்"

"என் கிட்ட மொபைல் இல்லையேம்மா"

"அங்கிள் கிட்ட சொல்லி ஒரு மொபைல் வாங்கிக்கங்க ஆண்ட்டி. மொபைல் ரொம்ப யூஸ்ஃபுல்"

"சரிம்மா"

"நான் எறங்க வேண்டிய எடம் வந்துடுச்சு ஆண்ட்டி. அப்புறம் பாக்கலாம். டாட்டா"

"சரிம்மா"

இந்த முழு கதையையும் கேட்டுட்டு, எனக்கும் என் தம்பிக்கும் நல்ல டைம்பாஸ் ஆச்சு. கதையைச் சொல்லிட்டு எங்கம்மா சொன்னது "இந்த காலத்து பொண்ணுங்களும் அவங்க நெனப்புங்களும்"

Thursday, June 25, 2009

ஸ்பெஷல் எஃபெக்ட்ஸோடு கிரிக்கெட் வெளையாடுதல்

"வெயிட்ஸ் ஃபார் தி க்ரீஸ். இருடா கூச் போட்டுக்கிட்டு வந்துடறேன். கூச் இல்லாம சரியா ரன் வர மாட்டேங்குது". எங்க வீட்டு மொட்டை மாடில நானும் என் தம்பியும் அண்டர் ஆர்ம்ஸ் கிரிக்கெட் ஆடும் போது பேசப்படற வசனம் தான் மேல பாத்தது. அது என்னா கூச்? முன்னாள் இங்கிலாந்து கேப்டன் க்ரஹாம் கூச்சைப்(Graham Gooch) பத்தி தான் என் தம்பி சொல்றது. அது சரி? அது என்ன கூச் போட்டுக்கிட்டு விளையாடறது? 1980-கள்ல டிவில கிரிக்கெட் உன்னிப்பா நீங்க கவனிச்சிருந்தீங்கன்னா - பேட்ஸ்மேன் க்ளவ்ஸ்(Gloves) போட்டுக்கிட்டு வெளையாடும் போது சில வகை க்ளவ்ஸ்ககளில் ஆட்காட்டி விரலும் நடு விரலும் சேர்ந்தாப் போல ஒரே விரலா இருக்கற மாதிரி இருக்கும். இந்த மாதிரி க்ளவ்ஸை நாங்க முதன் முதல்ல பார்த்தது க்ரஹாம் கூச் போட்டுக்கிட்டு வெளையாடும் போது தான். அதனால அதுக்கு கூச்னே பேரு வச்சிட்டோம். நானும் என் தம்பியும் கிரிக்கெட்டைக் கவனிக்கிறோமோ இல்லையோ, கிரிக்கெட் வீரர்கள் உபயோகிக்கிற உபகரணங்களையும் அவங்க செய்யற சேஷ்டைகளையும் ரொம்ப உன்னிப்பா கவனிப்போம். குறிப்பா எந்தெந்த பேட்ஸ்மேன் எந்தெந்த பேட் உபயோகிக்கிறாங்கன்னு கவனிக்கிறது எங்க ரெண்டு பேருக்குமே ரொம்ப புடிக்கும். ஏன்னா அதை எல்லாம் நாங்க மொட்டை மாடியில கிரிக்கெட் விளையாடும் போது பண்ணலாமில்ல அதுக்குத் தான். அப்போல்லாம் அப்படி ஒரு அல்ப சந்தோஷம். இந்த மாதிரி கிரிக்கெட்டில் நாங்க நோட் பண்ண கடைபிடிச்ச எட்செட்ரா சமாச்சாரங்களைப் பத்தினது தான் இந்தப் பதிவு. கிரிக்கெட் நுணுக்கங்கள் பத்தி இதுல எதுவும் இருக்காது. ஏன்னா அத பத்தி எனக்கு எதுவும் தெரியாது :)

கூச் னு சொன்னேன் இல்லை? அது எப்படி இருக்கும்? கீழே கூச்சோட படத்துல அவரோட க்ளவ்ஸை உன்னிப்பா பாருங்க.


இதுல சரியாத் தெரியலைன்னா அதுக்குக் கீழே இருக்கற அலன் பார்டர் படத்தைப் பாருங்க.



இந்தப் படத்துல நான் சொல்ற 'கூச்' தெளிவாத் தெரியும். எந்த பேட்ஸ்மேன் போட்டிருந்தாலும் இந்த மாதிரி க்ளவ்ஸ் போட்டிருந்தாங்கன்னா அது எங்களை பொறுத்த வரை 'கூச் வச்ச க்ளவ்ஸ்' தான். "சரி நான் கூச் போட்டுக்கிட்டு வரேன்"னு மேல என் தம்பி சொன்னாருல்ல? அதுக்கு என்ன அர்த்தம்னு தானே கேக்கறீங்க. பந்தை உருட்டிப் போட்டு மொட்டை மாடில நாங்க கிரிக்கெட் விளையாடுனாலும், கிரிக்கெட் வீரர்கள் கடை பிடிக்கிற அத்தனை ஸ்டைலையும் பந்தாவையும் நாங்களும் கடைபிடிப்போம். எங்க தாத்தா ஏர் ஃபோர்ஸ்ல பஞ்சாப்ல இருந்த போது அவருக்குக் கிடைச்ச ஒரு நீல கலர் கம்பளி க்ளவ்ஸ் ஒன்னு தான் எங்க கிரிக்கெட் க்ளவ்ஸ். மெட்ராஸ்ல அடிக்கிற வெயிலுக்கு கம்பளி க்ளவ்ஸ் எல்லாம் போட்டா உள்ளங்கைல வேர்த்துக் கொட்டும். ஆனாலும் நாங்க க்ளவ்ஸ் இல்லாம கிரிக்கெட் ஆடுனதே கெடையாது. க்ளவ்ஸ் ஏற்பாடு பண்ணியாச்சு. க்ளவ்ஸ்ல கூச் இல்லாம வெளையாடுனா ரன் சரியா அடிக்க முடியாதே? அதுக்கு என்ன பண்ணறது? சைக்கிள் பிராண்ட் த்ரீ இன் ஒன் ஊதுபத்தி அட்டை பெட்டி இருக்கில்ல. அது நீளமா இருக்கும். அதை சரிசமமா மூனு துண்டுகளா அகல வாக்குல கத்திரிகோலால வெட்டிப்போம். அதுல ஒரு துண்டு எங்களுக்கு கூச் செய்யப் போதும். அந்த அட்டைப் பெட்டி துண்டை எடுத்து அது மேல ஒரு வெள்ளை பேப்பரைச் சுத்தி "Power" லோகோ வரைஞ்சுக்கிட்டா கூச் தயார்.

அதை அப்படியே எடுத்து வலது கையில க்ளவுஸை மாட்டிக்கிட்டு முதல் ரெண்டு வெரல்ல எடுத்து சொருகிக்க வேண்டியது தான். இது தான் கூச்.

இப்பவே கண்ணைக் கட்டுதா? அட...இன்னும் இருக்குங்க. கூச் வச்ச க்ளவ்ஸ் போட்டுக்கிட்டா மட்டும் போதாதுன்னு என்னோட தம்பி பேட்(Pad) எல்லாம் கால்ல கட்டுவாரு. அது எப்படின்னு கேக்கறீங்களே? முன்னெல்லாம் க்ரீம் பிஸ்கெட் டப்பாக்குள்ள பிஸ்கெட் நமத்து போகாம இருக்க வெள்ளை கலர்ல வரி வரியா ஒரு காகிதம் வெப்பாங்க தெரியுமா? அது தான் என் தம்பியோட கிரிக்கெட் பேட். கால்ல வச்சா அந்த பேப்பர் முட்டிக்குக் கீழே ஒரு நாலு இன்ச் தான் வரும். இருந்தாலும் அதை மறக்காம ரப்பர் பேண்ட் போட்டு கட்டிக்கிட்டுத் தான் வெளையாடுவாரு. இதுக்கே மொட்டை மாடி கிரிக்கெட்ல LBW எல்லாம் கெடையாது, வெளையாடறதும் எழுபத்தியஞ்சு பைசா சின்ன ரப்பர் பந்தை வச்சு தான். இந்த கிரிக்கெட் மேட்ச்ல எல்லாம் 50 ரன்னோ 100 ரன்னோ அடிச்சா பேட்ஸ்மேன் பேட்டை உயரத் தூக்கி காட்டுவாரு பாத்துருக்கீங்களா? அதே மாதிரி நானும் என் தம்பியும் மட்டும் ஆடற மேட்ச்ல 50-ஓ, 100-ஓ அடிச்சா மொட்டை மாடில பேட்டை எல்லாம் தூக்கிக் காப்போம். யாரும் பாக்கலைன்னாலும் கை தட்டுலன்னாலும் பேட்டைத் தூக்கி தான் காமிப்போம். அப்போ பிரபலமா இருந்த அசாருதீன் ஒவ்வொரு முறை பந்தை அடிக்கறதுக்கு முன்னாடியும் தன்னோட கழுத்துல இருக்கற ஒரு கறுப்பு கலர் தாயத்தை வெளியில இழுத்துத் தொட்டுப்பாரு. அது மாதிரி எங்களுக்கும் செய்யனும்னு ஆசை. தாயத்து வேணும்னு வீட்டுல கேட்டா எங்களை மந்திரிச்சு விட்டுடுவாங்க இல்லை. அதுக்காக பழைய கயிறு ஒன்னை எடுத்து அதுல அம்மன் டாலரையோ முருகன் டாலரையோ கோத்துக்கிட்டு அதை கழுத்துல மாட்டிக்கிறது. ஒவ்வொரு பந்தையும் அடிக்கிறதுக்கும் முன்னாடி சட்டைக்குள்ளிருந்து டாலரை இழுத்து இழுத்து தொட்டுப் பாத்துப்போம். இதுவாச்சும் பரவால்லை. சில சமயம் பேட்ஸ்மென் பிட்சை சமப் படுத்தறதுக்காக பேட்டை வச்சி தரையில குத்துவாங்க பாத்துருக்கீங்களா? அதை கூட நாங்க மொட்டை மாடில செஞ்சிருக்கோம். "யாருடா மொட்டை மாடில லொட்டு லொட்டுன்னு தட்டுறது"ன்னு கீழே இருந்து அம்மாவோ அப்பாவோ வந்து திட்டுன்னாலும் அந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எல்லாம் குடுக்காம கிரிக்கெட் வெளையாடலன்னா வெளையாடுன மாதிரியே இருக்காது.

(ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் தொடரும்...)

பி.கு: 'க்ளவ்ஸ்'னு இருக்கற இடத்துல எல்லாம் 'க்'-க்குப் பதிலா 'ப்' போட்டு படிச்சிட்டு கமெண்ட் போட்டால் மிக மிகக் கொடூரமான முறையில் தயவு தாட்சண்யமின்றி மட்டுறுத்தப் படும் என எச்சரிக்கப்படுகிறது.

Wednesday, June 24, 2009

கவியரசரின் இரத்தத் திலகம் படப்பாடல் ஒன்று

ஜூன் 24 - இன்று கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாள். அலுவலகம் வரும் வழியில் அபூர்வ ராகங்கள் படப் பாடலான ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் கேட்டுக் கொண்டு வந்தேன். இங்கு வந்ததும் கவியரசரைப் பற்றிய ஒரு அருமையானப் பகிர்வைத் தந்திருந்தார் ஆயில்யன். அதன் பின்னர் ரத்தத் திலகம் திரைப்படத்தில், நான் மிகவும் ரசிக்கும் ஒரு பாடலை இணையத்தில் தேடத் துவங்கினேன். இப்படத்தில் உள்ள பசுமை நிறைந்த நினைவுகளே பாடலும், ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு பாடலும் மிகப் பிரபலமானவை. ஆனால் அப்பாடல்களைப் போல அத்தனை பிரபலம் ஆகாத ஒரு பாடலைத் தான் நான் தேடினேன். வெகு பிரபலம் என்று சொல்லமுடியா விட்டாலும் பாடலின் வரிகள் அப்படத்தில் உள்ள மற்றப் பாடல்களுக்குச் சற்றும் குறையாததாக இருக்கும். அந்த பாடல் இன்று ராகா இணையத் தளத்தில் கிடைத்தது. நீங்களும் கேட்டுப் பாருங்க.



படம் : இரத்தத் திலகம்(1963)
பாடல் : கவியரசு கண்ணதாசன்
இசை : K.V.மகாதேவன்
பாடியது : T.M.சௌந்தரராஜன்


புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
தர்மத் தாயின் மடியிலே போர்
போர்...போர்...போர்....
(புத்தன் வந்த திசையிலே...)

பரத நாட்டுத் திருமகனே வா
பச்சை ரத்தத் திலகமிட்டு வா
பொருது வெண்தளத்தை நோக்கி வா
பொன்னளந்த மண்ணளக்க வா
வா...வா...வா...வா...வா...

புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
தர்மத் தாயின் மடியிலே போர்
போர்...போர்...போர்....

மக்களுக்கு புத்தி சொல்லி வா
மனைவி கண்ணில் முத்தமிட்டு வா
பெற்றவர்க்குத் தாள் வணங்கி வா
பேர் எடுக்க போர் முடிக்க வா வா வா
வா...வா...வா...வா...வா...

புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
தர்மத் தாயின் மடியிலே போர்
போர்...போர்...போர்....

மறுபடிக்கும் வீழ்வதில்லை வா
மரணமேனும் பெறுவதென்று வா
பருவ நெஞ்சை முன்நிமிர்த்து வா
பகைவனுக்கும் ஓருயிர் தான் வா வா வா
வா...வா...வா...வா...வா...

புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
தர்மத் தாயின் மடியிலே போர்
போர்...போர்...போர்....



1962ஆம் ஆண்டு சீனப் போர்தொடுப்பின் போது தேசிய உணர்வைத் தூண்டுவதற்காக தயாரிக்கப்ப்ட்டு வெளிவந்த படம் "இரத்த திலகம்(1963)". பாடல் வரிகளுக்காகவும் கற்பனை நயத்திற்காகவும் பலமுறை கேட்கத் தூண்டும் பாடல்கள் உண்டு. இது அவ்வகையில் வந்த ஒரு மிகச் சிறந்த பாடல்.

எனக்கு இப்பாடலில் மிகவும் பிடித்த வரி, பாடலுக்கு முத்தாய்ப்பாக அமைந்திருக்கும் "பகைவனுக்கும் ஓர் உயிர் தான் வா" என்பது. இதை பாடலில் கேட்கும் போதெல்லாம் எனக்கு மெய் சிலிர்க்கும். "போரில் உயிரிழப்பதை குறித்து அஞ்ச வேண்டாம், உன்னைத் தாக்க வரும் பகைவனும் அப்போரில் உயிரிழக்கலாம்" என்று ஐந்து சொற்களில் பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார்.

இசைஞானி இளையராஜா கவியரசர் கண்ணதாசன் குறித்த தன்னுடைய நினைவுகளைப் பகிர்கிறார் கீழே உள்ள இந்த ஒலிக்கோப்பில். தான் முதன்முதலில் கவியரசரைக் கண்ட போது அவரை வெறுத்தது, "தேன் சிந்துதே வானம்" பாடல் பதிவின் போது கவிஞரைக் கண்டு வியந்தது, தன் மனதில் கவியரசருக்கு எவ்வளவு உயர்ந்த இடம் உள்ளது என்றெல்லாம் மனம் திறந்திருக்கிறார். இதையும் கேட்டு ரசியுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, June 23, 2009

குழந்தைகளுக்கான கிராமியப் பாடல்கள்

தலைப்பைப் பாத்துட்டு பெரிசா திறனாய்வுக் கட்டுரை மாதிரி எதையும் எதிர்பாக்காதீங்க. ஏதோ எனக்கு தெரிஞ்ச சில விஷயங்களைச் சொல்றேன். குழந்தைகளுக்குப் பாடற பாட்டுன்னா நமக்கு எந்த பாட்டு நியாபகத்துக்கு வரும்? "நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா மலை மீதேறிவா" இல்லன்னா "சாஞ்சாடம்மா சாஞ்சாடு சாயக்கிளியே சாஞ்சாடு" இந்த பாடல்கள் தான். ஏன்னா இந்தப் பாடல்கள் மிகப் பிரபலமான பாடல்கள். நம்மில் பலரும் இதை பத்தி கேள்வி பட்டிருப்போம்.

நான் சின்ன வயசுலே எங்க அம்மா பாடி கேட்ட ரெண்டு பாடல்களைப் பத்தி இங்கே சொல்றேன். பாடல்னு சொல்ல முடியாது. இதப் பாடற பெரியவங்க குழந்தையோட குழந்தையா ஒன்றிப் போகற மாதிரியான ஒரு உரையாடல்னு சொல்லலாம். அஞ்சாறு வரிகள் கொண்ட சின்னப் பாடல்கள் தான். இது ஏன் இவ்வளோ நாள் கழிச்சு இப்போ எனக்கு நியாபகம் வருதுன்னா எனக்காகவும் என் தம்பிக்காகவும் எங்க அம்மா பாடுனதை இப்போ என் பொண்ணுக்காக அதாவது அவங்க பேத்திக்காகப் பாடறாங்க. இதெல்லாம் எங்கம்மாவுக்கு எப்படி தெரியும்னு கேட்டேன், அவங்களுக்கும் சரியா நியாபகம் இல்லை. இதுக்கே எங்கம்மா முழுசும் கிராமத்துலேயே வளர்ந்தவங்க கிடையாது. ஏர் ஃபோர்ஸில் வேலை செஞ்ச எங்க தாத்தா கூட கல்கத்தா, நாக்பூர், பஞ்சாப், பெங்களூர் இப்படின்னு இந்தியாவிலேயே பல இடம் போனவங்க தான். எங்க தாத்தாவோட(அம்மாவைப் பெத்த அப்பா) ஊரு தென்னாற்காடு மாவட்டம் திட்டக்குடி தாலுகாவில் இருக்கற ஒரு சின்ன கிராமம். எங்க ஆயாவோட(அம்மாவைப் பெத்த அம்மா) ஊரு சிதம்பரம். அநேகமா இந்த ரெண்டு பகுதிகள்ல எங்கேயோ குழந்தைகளுக்குக் கிராமத்துப் பெண்கள் பாடற பாட்டாத் தான் இருந்திருக்கும். ஏன் இவ்வளவு உறுதியாச் சொல்றேன்னா கண்டிப்பா எங்கம்மா இதையெல்லாம் பஞ்சாப்ல கத்துக்கிட்டிருக்க முடியாது :)

பாடல் 1:
நிலாவ நிலாவ எங்கெங்க போன?
வண்ணாங்கொளத்துக்கு மண்ணள்ளப் போனேன்
மண்ணு யான்?
வீடு கட்ட
வீடு யான்?
புள்ள பெற
புள்ள யான்?
கோரைப் பாய்ல குதிச்சு வெளையாட
தாழம் பாய்ல தவழ்ந்து வெளையாட

அதோ பாரு
உங்க அம்மாவும் அப்பாவும்
கட்டுச்சோறு கட்டிக்கிட்டு
கருவாடு சுட்டுக்கிட்டு
நாயை முன்னால வுட்டு
பூனையைப் பின்னால வுட்டு
அதோ பாரு
அங்க வர்றாங்க...

இதை பாடறவங்க தரையில மல்லாக்கப் படுத்துக்கிட்டு, கால் ரெண்டையும் கோபுரம் மாதிரி(ஆங்கில எழுத்து A மாதிரி) வச்சிக்கிட்டு குழந்தையை கால் மேல சாய்ச்சிக்கிட்டு முன்னேயும் பின்னேயும் ஆட்டிப் பாடற பாட்டு. மேல பாத்தீங்கன்னா "மண்ணு யான்"னு தான் எழுதிருக்கேன். "மண்ணு ஏன்"னு எழுதுனாலோ பாடுனாலோ அந்த ஃபீல் வராது. நாயை முன்னால வுட்டு பூனையைப் பின்னால வுட்டு
அதோ பாரு அங்க வர்றாங்க...ன்னு சொல்லிட்டு மேலே பாக்கனும். அப்போ குழந்தையும் மேல பாக்கும், அப்போ குழந்தைக்கு கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைப்பாங்க.

பாடல் 2:
ஈச்சங்காட்டுக்குப் போயி வாரேன்
வீட்டைப் பாத்துக்க சின்னாயி
பந்த மேல பனங்கா(பலகை) கெடக்குது
அதையும் பாத்துக்க சின்னாயி
ரத்தம் எல்லாம் இங்கே போ
சக்தி எல்லாம் இங்கே வா
கோழி முட்டை பொரிச்சு தரேன்
கோழி கிட்ட சொல்லாதே
வாத்து முட்டை பொரிச்சு தரேன்
வாத்து கிட்ட சொல்லாதே
காக்கா முட்டை பொரிச்சு தரேன்
காக்கா கிட்ட சொல்லாதே...

இந்த பாட்டுக்குன்னு ஒரு தனி ரிதம் இருக்கு. கொஞ்சம் வேகமாப் பாடனும், எதுகை மோனையோட நல்லாருக்கும். குழந்தையை உட்கார வச்சி கால் ரெண்டையும் நீட்டி ரத்தம் "எல்லாம் இங்கே போ சக்தி எல்லாம் இங்கே வா"ன்னு சொல்லும் போது ரெண்டு காலையும் நல்லா நீவி விடுவாங்க. என் பொண்ணுக்கு எங்கம்மா இந்த மாதிரி பண்ணும் போது ரொம்பப் பிடிக்கும். "கோழி முட்டை பொரிச்சு தரேன்
கோழி கிட்ட சொல்லாதே"ன்னு சொல்லிக்கிட்டே கால் விரல்கள்ல நெட்டி முறிப்பாங்க. ரெண்டு கால்லயும் இருக்கற பத்து விரல்களுக்கும் ஒவ்வொரு பறவை பேர் சொல்லுவாங்க. சில சமயம் பத்து பறவை பேர் நியாபகம் வரலைன்னா ஆட்டு முட்டை, யானை முட்டை எல்லாம் கூட பாட்டுல வந்துடும் :)

இன்னொரு விஷயம். வீட்டுல ஒரு சின்ன குழந்தை வந்துடுச்சுன்னு வையுங்களேன். நீங்க இத்தனை நாள் இத்தனை வருஷம் வளர்ந்து பெரியவனானப்போவெல்லாம் உங்களுக்குப் பாக்க கெடைக்காத உங்க அம்மா அப்பாவோட இன்னொரு முகம் உங்களுக்குப் பாக்க கெடைக்கும். உதாரணத்துக்குக் கல்லூரி பேராசிரியரா இருந்து ஓய்வு பெற்ற எங்க அப்பான்னா எனக்கு எப்பவும் ஒரு மரியாதை கலந்த பயம் இருந்துக்கிட்டே இருக்கும். என்னோடயும், என் தம்பியோடயும் சிரிச்சிப் பேசி ஜோக் எல்லாம் அடிப்பாருன்னாலும், தன்னோட பேத்தியைத் தூக்கிக்கிட்டு வாசல்ல நின்னுக்கிட்டு "கா...கா..."ன்னு கத்தி காக்காவைக் காட்டறப்போ அவரு குழந்தையோட குழந்தை ஆகறதைப் பாத்தா எனக்கே கொஞ்சம் ஆச்சரியமா இருக்கு. அதோட தாத்தாக்களுக்கும் பேத்திகளுக்கும் நடுவில் எப்போவும் இந்த விளையாட்டுத் தனங்கள் இருக்கும் போலிருக்கு. எங்கம்மாவோட சின்ன வயசுல அவங்க தாத்தா(அம்மாவைப் பெத்த அப்பா) எங்கம்மாவைப் பாத்து பாட்டு பாடுவாராம்.
"பஞ்சாப் லேடி கொஞ்சம் கஞ்சு இருந்தா தாடி"ன்னு :)

அதே மாதிரி நாம நம்ம பெத்தவங்க கிட்ட பேச முடியாததை பேரக்குழந்தைகள் தாத்தா/பாட்டி வயசுள்ளவங்க கிட்ட சுலபமாப் பேசிடுதுங்க. அதுங்களுக்கு அந்த வயசு வித்தியாசம் எல்லாம் புரியறதில்லை. அவங்க வித்தியாசமா எதாச்சும் பேசுனாலும் பெரியவங்க கண்டுக்கறதில்லை. இதை நானே கண்கூடாப் பாத்துருக்கேன். என்னோட தாத்தா(அம்மாவோட அப்பா) ஏர்ஃபோர்ஸ்லேருந்து ஓய்வு பெற்றதும் பெங்களூர்ல துணிக்கடை வச்சிருந்தாரு. டொம்லூர் பகுதியில் ஒரு சின்னக் கடை தான். அந்த கடைக்குப் பக்கத்துல இருக்கற வீடுகள்லேருந்து சில சின்னக் குழந்தைகள் சாயந்திர வேளைகள்ல எங்க தாத்தா கடைக்கு வந்து வெளையாடும்ங்க. அப்போ நான் காலேஜ் முடிச்சிட்டு வேலைக்குச் சேந்துருந்த சமயம். ஒரு நாள் நானும் தாத்தா கூட கடைக்குப் போயிருந்தேன். ராஷ்மின்னு ஒரு சின்னப் பொண்ணு அடிக்கடி எங்க தாத்தா கடைக்கு வரும். அந்த பொண்ணு கன்னடப் பொண்ணு, பெங்களூர்ல இருக்கறதுனால தமிழ் புரியும்னாலும் தமிழ் பேச வராது. எங்க தாத்தா பல வருஷமா பெங்களூர்ல இருந்தாலும் அவருக்குக் கன்னடம் பேச வராது. இவரு தமிழ்ல கேக்கற கேள்விகளுக்கு அந்தப் பொண்ணு புரிஞ்சிக்கிட்டு கன்னடத்துல பதில் சொல்றதை பாக்கறதுக்கே சுவாரசியமா இருக்கும். ஸ்கூலுக்குப் போனது, போயிட்டு வந்து டிபன் சாப்பிட்டது இதை பத்தி எல்லாம் கேள்வி கேட்டுட்டு எங்க தாத்தா அந்த பொண்ணு ராஷ்மி கிட்ட கேட்ட கேள்வி - "என்னை கட்டிக்கிறியாடி?". அந்த ஆறு வயசு பொண்ணுக்கு அது என்னா புரிஞ்சுதோ தெரியாது. ஆனா அது சொன்ன பதில் "ஐ...நிம் தலே" :)

Thursday, June 18, 2009

கிண்டி டைம்ஸ் : GCT நினைவுகள் - Reloaded

"ஹலோ! நான் ஒண்டிபுதூர், கோயமுத்தூர்லேருந்து சாரதா பேசுறேன். நல்லாருக்கீங்களா"னு தொடங்கி படபடனு ஒரு அம்மா நேத்து பெப்சி உமாவோடயும் நடிகர் ஜீவாவோடவும் சன் டிவி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சில பேச ஆரம்பிச்சதும், அட ஒண்டிபுதூர்ங்கிற ஊர் பேர நாம எங்கேயோ கேள்வி பட்டிருக்கோமேணு தோணிச்சு. 'கட்' பண்ணா சில வருசத்துக்கு முன்னாடி பால்மணம் மாறாத பையனா இருக்கும் போது(கவனிக்கணும் சில வருசம் தான்) கோயமுத்தூருக்கும் போயி ஒரு வாரம் நம்ம ஆட்டையைப் போட்டது திடீர்னு ஞாபகம் வந்துச்சு. காலேஜ் கொசுவர்த்தி சுருள் சுத்தலாம்னு நெனச்சு கல் தோன்றி மண் தோன்றா காலத்துல 'கிண்டி டைம்ஸ்'னு ஒரு பதிவைத் தொடங்குனதும் ஞாபகத்துக்கு வந்துச்சு. எல்லாரும் உசுப்பேத்தி வுடறாங்களே நாம தான் பெரிய இவுரு('வெண்ரு'னு படிங்க)ஆயிட்டமே, இனிமே கதை எழுதுனா சேப்டர் சேப்டராக் கோர்வையாத் தான் எழுதணும்னு நெனச்சு கிண்டி டைம்ஸைக் கெடப்புல போட்டதும் ஞாபகம் வந்துச்சு. சரிங்க மிஸ்டர் வெண்ரு, கிண்டி டைம்ஸுக்கும் ஒண்டிபுதூருக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கிறீங்க...அதானே? சம்பந்தம் இருக்குங்களே? கோயம்புத்தூர் இல்லாம நம்ம வாழ்க்கையில அண்ணா யுனிவர்சிடியே இருந்திருக்காது.

ப்ளஸ்2 முடிச்சதும் மொத மொதல்ல நம்ம 'தெறம'ய புரிஞ்சிக்கிட்டு சீட் குடுத்தது கோயமுத்தூர் GCT(Government College of Technology) தான். கொளுத்துற ஜூன் மாச வெயில்ல மெட்ராஸ்லேருந்து கோயமுத்தூர் போனா, ராத்திரி நீலகிரி எக்ஸ்பிரஸ்ல குளுரு பின்னு பின்னுன்னு பின்னுது. 1-C ஒண்டிபுதூர் டு வடவள்ளி போற சேரன் பஸ் தான் அந்த ஊர்ல நம்ம ஆஸ்தான வாகனம். கோயமுத்தூர் ஜங்சன்ல 1-Cயைப் புடிச்சா நேரா லாலி ரோடுங்கிற எடத்துல எறக்கி வுட்டுருவாங். அங்கண எறங்கி கொஞ்சம் முன்ன நடந்தா ஜிசிடி வந்துரும். ஆர்.கே.நாராயணனோட 'மால்குடி டேஸ்' புக்லயும் லாலி ரோடுன்னு ஒரு ரோடு வரும்... ஆனா இந்த சமாச்சாரம் அப்பால தான் தெரிஞ்சுது நமக்கு. ஒரு வேளை ஆர்.கே.நாராயணனுக்குப் பேர் வைக்க ஐடியா கொடுத்த எடமோ? எது எப்படியோ...அந்த எடம் பார்க்க நல்லா அழகாத் தான் இருந்துச்சு. ஜிசிடிக்கு இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளி தடாகம் ரோட்டுல(அதான்னு நெனக்கிறேன்)தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம். நீ கிழிச்ச கிழிக்கு எங்கே ஒனக்கு இஞ்சினியரிங் சீட் கெடக்கப் போவுதுன்னு எங்க அப்புச்சி பயங்காட்டுனதுல B.Sc(Agri)க்கும் அப்ளை பண்ணி வச்சிருந்தேன். புல் பூண்டுக்கெல்லாம் பாடனிகல் பேரை தெரிஞ்சு வச்சிருந்த ஒரு விவசாய மேதை இஞ்சினியரிங் சீட் கெடச்சதால இப்ப கம்பூயட்டரைக் கட்டி மாரடிக்கிற கூலி வேலை பாத்துக்குனு இருக்காரு.

'சின்னப் பையனாச்சே!' தனியா வூட்டை வுட்டு மொத மொறையா போறானேனு அப்புச்சியும் என்னைய காலேஜ்ல சேத்து வுட அடம்புடிச்சு வர்றாரு(!). நம்மள செண்ட்ரல் ஸ்டேசன்ல வழி அனுப்புறதுக்கு ஒரு பெரிய கூட்டம் வேற. இதுக்கே இப்பிடின்னா நாலு வருசம் படிச்சி முடிச்சிட்டு வந்துருந்தா ஒரு வேளை 'பாட்டி சொல்லைத் தட்டாதே' படம் ரேஞ்சுக்குத் மாலை மரியாதை எல்லாம் செஞ்சு வரவேத்துருப்பாங்களோ என்னவோ? காலேஜ்ல சேர போகும் போது ஒழுங்கு மரியாதையா மூட்டை முடிச்சி எல்லாம் கட்டிக்கிட்டு ஒரேயடியா போயிருக்கலாம். ஆனா காலேஜ் எப்படியிருக்கு, நம்ம பயலுக்கு அங்க வசதியெல்லாம் எப்படி இருக்கும்னு மொதல்ல ஒரு reconaissance survey உட்டுக்கலாம்(நான் சிவில் இஞ்சினியரிங் படிச்சவன்னு நீங்க நம்பணும் இல்லியா...அதுக்குத் தான் இந்த பீட்டரு), அப்புறமா வந்து மூட்டை முடிச்சி கட்டிக்கலாம்னு ஒரு அரிதி பெரும்பான்மை முடிவை அம்ஸும் அப்ஸும் சேந்து எடுத்துட்டாங்க.

அங்கே சுத்து வட்டாரப் பதினெட்டு பட்டியிலயும் நல்ல பேருள்ள காலேஜ் நம்ம ஜிசிடி. கிட்டத்தட்ட அம்பது பர்செண்ட் 'புள்ளங்க' இருந்ததுனால 'கேர்ள்ஸ் காலேஜ் ஆப் டெக்னாலஜி'னு ஒரு பட்டப் பேரு வேற. சரினு அங்கப் போனா சேந்த மூணு நாள்லேயே காலேஜ் ஆரம்பிக்குதுங்கறாங்க. ஆஸ்டல் ரூமை மட்டும் வாங்கிக்கிட்டு ஒடனே திரும்பவும் வண்டியை வுடு மெட்ராஸுக்கு. பையன் கஷ்டப் படக்கூடாதுன்னு நம்மளைப் பெத்தவங்க மூட்டை கட்டுனாங்க பாருங்க நமக்காக...அடடடா இன்னிக்கெல்லாம் சொல்லிக்கிட்டே இருக்கலாம் அதப் பத்தி. நான் கொண்டு போன சாமாஞ் செட்டப் பாத்து பயலுவ எல்லாம் நம்மள ஒரு மார்க்கமாத் தான் பாத்தானுவ. க்ளோசப் டூத்பேஸ்ட் - ஆறு, சிந்தால் சோப் - 4, ரின் சோப் - 6, சன்சில்க் ஷாம்பூ - 3, இது போக தின்றதுக்கு முறுக்கு சீடை, மிச்சரு இத்தியாதி...இப்படின்னு மளிகை கடை லிஸ்ட் தோத்துச்சு போங்க.எதோ அங்க கடைபோடுற லெவலுக்குத் தான் போனேன்.

சீனியர் பயலுங்க ராகிங் எல்லாம் பண்ணுவானுங்கன்னு கேள்வி பட்டிருந்தாலும், ஆஸ்டல்ல போய் சேந்த அன்னிக்கு ஒன்னும் பெருசா நடக்கலை. ஆனா பொழுது விடிஞ்சதும் குலை நடுங்க வச்ச ஒரு சேதி என்னன்னா அதுக்கு முத நாள் ராத்திரி ரெண்டு எமகாதக சீனியருங்க ஃபர்ஸ்ட் இயர் ஆஸ்டல் டிரெய்னேஜ் பைப்பைப் புடிச்சு ரெண்டு மாறி மாங்கு மான்குன்னு ஏறி ஜன்னல் கம்பியைப் புடிச்சு வெளியில் தொங்கிட்டு பச்ச புள்ளங்களை ராகிங் பண்ணிருக்கானுவங்கிறது. அதோட அந்நியன் மாதிரி இதே கதி தான் எல்லாருக்கும்னு வார்னிங் வேற குடுத்துட்டுப் போயிருந்தானுவ. சீனியர் பசங்கக் கிட்டேருந்து காப்பாத்தறதுக்காகப் பட்டியில அடைச்ச ஆடுங்களைத் தெறந்து வுடற மாதிரி காலைல எட்டு மணிக்கு ஆஸ்டல் வாச்மேன் பிகில் அடிச்சி கூப்பிடுவாரு...அதுக்கு முன்னாடி யாரும் வெளியே போவ முடியாது. ஃபர்ஸ்ட் இயருங்கிறதால நாங்களும் சொன்ன பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டு வாச்மேன் பிகிலே கதின்னு கெடந்தோம்.

மொத நாள் க்ளாஸ்லே எல்லாரும் அவுங்க அவுங்க ஊரு பேரையெல்லாம் சொல்றாங்க. ஒரு பய சத்தியமங்கலம்ங்கிறான், ஒரு புள்ள சிறுமுகைங்குது இன்னொரு பய பண்ணாரி கேம்ப்ங்கிறான்...அப்ப தான் வீரப்பன் சிறுமுகைல ரெண்டே ரெண்டு எளநி சீவிருந்தாரு...என்னடா படிக்கிற பயலுகளும் வீரப்பனுக்கு மாமன் மச்சான் மொறயா இருப்பானுங்க போலிருக்கேனு நெனச்சிக்கிட்டு ஒக்காந்திருக்கும் போதே வாத்தியார் ஒரு பையனை எழுப்பறாரு...'தம்பி நீ மெட்ராசா' அப்டீங்கறாரு. அவனும் ஆமாங்கையாங்கிறான். எப்பிடிரா சரியா சொல்றாருன்னு யோசிக்கும் போதே 'காலேஜ் மொத நாளே டீ சர்ட்டும் ஸ்போர்ட்ஸ் ஷூ மாட்டிட்டு வந்துருக்கியே! அத வச்சு சொன்னேன். தம்பி நீங்கல்லாம் ப்ரொபஷனல் கோர்ஸ் படிக்கிற பசங்க...இந்த படிப்புக்குன்னு ஒரு மதிப்பு மரியாதை இருக்கு. அதை புரிஞ்சு நடந்துக்குங்க' அப்பிடீங்கறாரு. ஆஹா! இந்த ஊர்ல ஆட்டம் ஆடுனா நம்மளைக் குத்தி உக்கார வச்சுடுவாங்க போலிருக்கே...நம்ம அப்புச்சி தீர்க்கதரிசி தான்...ஒரு வாத்தியார் எப்பிடி யோசிப்பாருன்னு தெரிஞ்சு தான் நமக்கு எப்பிடி உடுத்தணும் எப்பிடி நடக்கணும்னு சொல்லி அனுப்பிச்சிருக்காரு. இதெல்லாம் காலேஜ் வாத்தியார் புள்ளயா இருக்கறதோட பலன்னு நெனச்சிக்கிட்டேன்.

என்னிக்குடா நம்ம கைல மாட்டுவானுங்கன்னு ரெண்டு நாள் பொறத்துப் பொறுத்து பாத்த பைப் ஏற முடியாத சீனியர் பசங்க கிளாஸ் ரூமுக்கு வாச்மேன் பின்னாடி வரிசையா போறதப் பாத்துட்டு 'போங்கடி போங்க...இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பிகில் வேலையெல்லாம் நடக்குதுன்னு நாங்களும் பாக்கறோம்'னு நாங்க போகும் போது சவுண்டு வுட ஆரம்பிச்சிட்டானுங்க. என்னத்தப் பண்றது...நாம ஃபர்ஸ்ட் இயரா பொறந்த பாவத்துக்கு இந்தப் பேச்செல்லாம் கேட்க வேண்டியிருக்கு, ராகிங்ல நாம மாட்டாத வரைக்கும் எல்லாம் சரி தான்னு நம்பி... கொஞ்சூண்டு சந்தோஷப் பட்டதுக்கு வேட்டு வச்சாரு ஒரு சாமியாரு...

(டிஸ்கி : இது மார்ச் 24, 2006 அன்னிக்கு ஏற்கனவே பதிப்பிச்ச பதிவு தான். நினைவுகளைத் தொடரலாம்னு திரும்பவும் இன்னிக்கு பப்ளிஷ் செஞ்சிருக்கேன்)

Wednesday, June 17, 2009

அபி அப்பா ஒரு நிஷ்கலங்கன்

இது இரு நபர்கள் கூகிள் டாக்கில் தனியாக பேசிக் கொண்டதை பொதுவில் வைத்து அம்பலப்படுத்தும் ஒரு Scoop பதிவு. அந்த இரு நபர்கள் - நான் கைப்புள்ள மற்றும் நீங்கள் எல்லாரும் அறிந்த மாயவரம் ஷேக் அபி அல்-அப்பா. நாங்கள் இருவரும் தனிமையில் பேசிக் கொண்டதைப் படித்து விட்டு உங்களை நீதி சொல்லுமாறு அழைக்கிறேன். யார் பக்கம் தவறு இருக்கிறது, யார் தவறிழைத்தது, யாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

அபி அப்பாவுடன் எனக்கு ஆயிரம் மோதல்களும், வருத்தங்களும் இருந்தாலும், இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருடைய இளைய மகன் நடராஜுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். "நட்டு கண்ணா, வளர்ந்து படிச்சி பெரியவனாய் எல்லா விஷயத்துக்கும் அப்பாவை ஃபாலோ பண்ணு, ஆனா சாட் பண்ணற விஷயத்துல மட்டும் அவரை ஃபாலோ பண்ணாதே, அவரு கிட்ட சாட் செய்யவும் கத்துக்காதே."

எல்லாத்துக்கும் முன்னாடி ஒரு விஷயம். கீழே இருக்கற படங்களைப் பாருங்க. இந்த படங்களைப் பாத்து தெளிவடையறது Scoop புரியறதுக்கு மிக அவசியம்.


மேலே உள்ள படத்தில் இருப்பவர் தான் பிரபல கடம் வித்வான் திரு.விக்கு வினாயக்ராம் அவர்கள். இவரிடம் தான் என் தம்பி மிருதங்கம் கற்றுக் கொண்டான். விநாயக்ராம் அவர்கள் தான் என் தம்பியோட 'குரு'ன்னும் சொல்லலாம்:)


இவர் திரு.V.செல்வகணேஷ் - திரு.வினாயக்ராம் அவர்களின் மூத்த மகன். இவர் கஞ்சீரா வித்வான். ஏ.ஆர்.ரகுமான் உடன் சில திரைப்படங்களில் பணிபுரிந்து இருக்கிறார். "வெண்ணிலா கபடிகுழு" திரைப்படத்தின் இசையமைப்பாளர் இவர்.


இவர் திரைப்படப் பின்னனி பாடகர் - திரு.மாணிக்க விநாயகம். பல பிரபல திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.

எனக்கும் அபி அப்பாவுக்கும் நடந்த சாட் உரையாடலை அப்படியே காப்பி-பேஸ்ட் செஞ்சி போட்டிருக்கேன். இந்த மாதிரி Scoop நடத்த வேண்டி வரும் என்று நான் நினைக்கலை. தெரிஞ்சிருந்தால் நானும் கொஞ்சம் தெளிவா தமிழ்லேயே தட்டச்சியிருப்பேன். கீழே இருக்கற சாட் உரையாடல்ல அபிஅப்பா தமிழ்லயும் நான் தங்கிலிஷ்லயும் தட்டச்சியிருக்கோம். நல்லா கவனமாப் படிச்சி ஒரு நியாயமான தீர்ப்பைச் சொல்லுங்க.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அபிஅப்பா நட்டுமுட்டுஅப்படின்னு ஒரு பதிவு போட்டாரு. அதுல அவரு கல்யாணத்துக்கு சாக்ஸபோன் இசை கலைஞர் கதிரி கோபால்நாத் வந்திருந்ததாக எழுதியிருந்தார். அதுக்கப்புறம் நான் அவரைச் சாட்ல புடிச்சேன். இனி மேல படிங்க.

me: unga kalyanathukku Kadri vandhaaraa
?

அபி அப்பா: அது 3 நாள் கல்யாணம்

me: ok

அபி அப்பா: முதல் நாள் திருவிழா ஜெய்சங்கர் வலையபட்டி கச்சேரி

me: hmm

அபி அப்பா: இரண்டாவது நாள் சிவமணி ஏ கே பி கச்சேரி

me:Drums Sivamaniyaa?

அபி அப்பா: என் ரிஷப்ஷனுக்கு தான் கத்ரி சாக்ஸ். கன்யாகுமரி வயலிம். வினாயக்ராம் கடம், பெங்ககூர் ராசசேகர் மோர்சிங், தவில் ஏ கே பி
ஆமாம் டிரம்ஸ் சிவமணி அப்ப இப்ப போல பேமஸ் இல்லை

me:Vinayakram dhaan en Thambiyoda Guru

அபி அப்பா: அட

me: aamaa

அபி அப்பா: என் கல்யாணத்துக்காகவே ஜெர்மன்ல இருந்து அவரும் பழனிவேலும் அவரும் கன்யாகுமரியும் வந்தாங்க

me: enna romba neramaa typing???
oho
unga kudumbam isai kudumbamaa?

அபி அப்பா: ஒரு கையால டைப்பிங்

me: oh
ennachu innoru kaile?

அபி அப்பா: தூங்கிட்டு இருக்கேன்

me: innoru kaiyaale thoongareengalaa? :-o

அபி அப்பா: ஒருக்களிச்சு படுத்து கிட்டு ஒரு பக்கமா டைப்புரேன்

me: hmmm
Vennila Kabadi Kuzhunnu oru padam vandhuchu theriyumaa?

அபி அப்பா: நான் வேலைக்கு போயே 10 நநள் ஆச்சே

me: hmmm
Vennila Kabadi Kuzhunnu oru padam vandhuchu theriyumaa?

அபி அப்பா: வெண்ணிலா கபடி குழு நான் ரசித்து பார்த்த படம்

me: andha padathoda music director...
V.Selvaganesh Vinayakram Siroda paiyan

அபி அப்பா: விஜை ஆண்டணியா

me: illai
V.Selvaganesh

அபி அப்பா:

me: aamaa

அபி அப்பா: சரி
அவருக்கு என்ன ஆச்சு

me: aiyo
avaru Vinayakramoda paiyan
ippo puriyudhaa?

அபி அப்பா: என் மனைவிய தான் கேட்கனும்

me: aiyoooooooooooooo
saami kolreengale ippadi

அபி அப்பா: என் கல்யானத்து அப்ப கனேசன்னு ஒருத்தன் இருந்தான்

me: V.Selvaganesh Vinayakramoda paiyannu ungalukku naan sollaren
ungalai kekkalai

அபி அப்பா: சின்ன பய

me: Ganesan yaaru Vinayakram troupelayaa?

அபி அப்பா: இருங்க கேக்குறேன்
2 நிமிஷம்

அபி அப்பா: கனேசன் தான் செல்வகனேஷாம்

me: illeenga
naan ungaloda chatle pesi mandai kaainjadhai blogle podanum pola
appo dhaan neenga sari paduveenga
:(

அபி அப்பா: என்னாது
வழுவூர் ராமையா பிள்ளைக்கு 4 பையன்

me: aiyoooooo
vitrunga
naan thappu pannitten

அபி அப்பா: இதிலே கடைசி பையன் வழுவூர் மாணிக்க வினாயகம்

me: sari
avarkkum Vinayakramukkum enna sambandham?

அபி அப்பா: முதல் பையன் பேர் வழுவூர் சாம்ராஜ்
இரண்டாவது பையன் பேர் குரு
மாணிக்க வினாயகம் 4 வது பையன்

me: neenga sonnadhai ellam blogle podalaamaa?

அபி அப்பா: வேண்டாம்

me: sooda vyaparam aavum unga perai solli copy paste pannaa
en venaam?

அபி அப்பா: குரு IOBல மேனேஜர்
செத்து போயாச்சு
சாம்ராஜ்ம் செத்து போயாச்சு

me: hmm

அபி அப்பா:இப்ப இருப்பது மாணிக்க வினாயகம் மட்டும் தான்

me: neenga aarambathule Vinayakram pathi sonneenga

அபி அப்பா:வழுவூர் ராமையா பிள்ளை பிரபல பரத நாட்டிய கலைஞர்

me: aamaa Padminiyoda Guru
Nattiya Peroli

அபி அப்பா:ஆமாம் ஆமாம்
வைஜெயந்திமாலாவுக்கும் கூட

me: naan Vinayakram pathi sonnadhai padicheengalaa illaiyaa?

அபி அப்பா:அந்த கணேசனா இருக்கலாம்ன்னு என் வீட்டிலே கிருஷ்ணா சொன்னது
மத்தபடி எனக்கு டேடெய்ல் தரியலைன்னு தான் சொன்னேனே

me: //மத்தபடி எனக்கு டேடெய்ல் தரியலைன்னு தான் சொன்னேனே// idhu varai sollalai :(
nalla mandai kaaya vechitteenga
naan sonnadhai neenga note panneengalaa illaiyaane enakku idhu varaikkum theriyalai

அபி அப்பா:அய்யோ எழுந்துட்டேன்
இப்ப சொல்லுங்க

me: sari vidunga freeyaa
:(
naan idhai postaa podaren
appo paathu purinjikkanga
sariyaa?

me: எனக்கு மண்டை காய்ஞ்சிடுச்சு :)

அபி அப்பா: இப்ப ஆரம்பம் முதல் கேளுங்க

me: naan onnum kekkalai

அபி அப்பா: இல்லை நான் முழிச்சாச்சு
கேளுங்க

me: naan kekka varalai
naan unga kitte solla vandhen
unga Kalyanathukku Vinayakram vandharunnu sonneenga illai?

அபி அப்பா: அவரு தான் மாசம் ஒரு தடவை வருவாரே

me: hmmm :(

படிச்சீங்களா? இப்போ நீங்களே சொல்லுங்க. வினாயக்ராம்னு முதல் வரில இவர் சொல்லிட்டு, அவரைப் பத்தி நான் பேசும் போது இவரு மாணிக்கவிநாயகத்தைப் பத்திப் பேசியிருக்காரு. அதோட நான் பேசுனதுக்கு எதுக்குமே பதில் இல்லை. இதுலேருந்து என்னா தெரியுதுன்னா அபி அப்பாவுக்குத் தூக்கத்துல சாட் செய்யற வியாதி இருக்குன்னு. இவரை என்ன பண்ணலாம்னு சொல்லுங்க. ஒரு விஷயம் சொல்லப் போய நான் மண்டை காய்ஞ்ச அனுபவத்தைப் படிச்சா உங்களுக்கே பாவமா இல்லியா? ஒரு நேர்மையான நியாயமான தீர்ப்பாச் சொல்லுங்க. Scoopனு போட்டாலும் பல்பு வாங்குனது என்னமோ நான் தான்.

(டிஸ்கி: பதிவுக்கும் தலைப்புக்கும் என்ன தொடர்புன்னா கேக்கறீங்க? யாருக்குத் தெரியும்? அபி அப்பாவை இணைச்சு புதுசா வந்த மலையாளப் படப் பேருல தலைப்பு வச்சாலும் சூடா வியாபாரம் ஆகும்னு ஒரு நம்பிக்கை தான்)

Tuesday, June 16, 2009

32 கேள்விகளும் 32 பதில்களும்

பாலாஜி கோர்த்து விட்ட 32 கேள்விகளும்-பதில்களும் சங்கிலித் தொடரில் நானும் சேர்ந்துட்டேன்.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
என்னோட பேரு அசரீரி வச்ச பேராம். எனக்கு நாகராஜன்னு தான் பேரு வைக்கிறதா இருந்தாங்களாம். எங்க தாத்தா பெங்களூர் சிட்டி இரயில்வே நிலையம் கிட்ட நடந்து போய்க்கிட்டிருக்கறப்போ யாரோ பின்னாலிலிருந்து மோகன்ராஜ் மோகன்ராஜ்னு கூப்பிட்ட குரல் கேட்டுச்சாம். 'மோ' என்கிற எழுத்து என் நட்சத்திர படியும் சரியாக அமைஞ்சதாலயும் அந்த பேரையே வச்சிட்டாங்கங்கிறது வரலாறு. என் பேர் எனக்குப் பிடிக்கும்.

2. உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
பிடிக்கும். ஆனால் இப்போ இருக்கும் கையெழுத்து முன்பு போல தெளிவா திருத்தமா இருக்கறதில்லை.

3. கடைசியாக அழுதது எப்போது?
ஆண்கள்னா இப்படித் தான் இருக்கனும்னு இந்த பாழும் சமூகம் போட்டிருக்கற கட்டுப்பாடுகள்ல முக்கியமானதொரு முள்வேலி - ஆண்களின் அழுகை மறுப்பு. ஆணாப் பொறந்தா எந்த விஷயத்துக்கும் கலங்காம இருக்கனும்னு ஒரு stereotype பல காலமா நிலவிக்கிட்டிருக்கு. ஒரு ஆண் அழுதா "எப்படி பொம்பள புள்ள மாதிரி அழறான் பாரு"ன்னு கேலி பண்ணற நிலை தான் இன்னும் இருக்கு. பெண்களுக்கு நிகரா ஆண்கள் Facial, bleaching, manicure, pedicure எல்லாம் பண்ணிக்க அனுமதிக்கிற சமூகத்துல பெண்களைப் போல ஆண்களுக்கும் சங்கோஜமில்லாம அழ சம உரிமை வேணும். எல்லா நேரத்துலயும் "எதுக்கும் கண்கலங்காத ஆம்பளை சிங்கம்" இமேஜை மெயிண்டேன் பண்ணறது ரொம்ப கஷ்டம். ஆணா இருந்தாலும், பெண்ணா இருந்தாலும் மனசுல ஈரம் உள்ளவங்களுக்கு அழுகை வரும், அதை கட்டுப்படுத்தப் படாது. கட்டுப்படுத்த தடையும் விதிக்கப் படாது.

இப்பெல்லாம் உறவுகள், உணர்ச்சிகள் இந்த மாதிரி விஷயங்கள் பத்தி புரியறதுனால டக் டக்குன்னு கண்ணு கலங்கிடுது. குறிப்பா சினிமாவுல எதாவது ஒரு காட்சி ஒன்றிப் போய் பார்க்கும் போது என்னையும் அறியாம அழுகை வந்துடும். நிஜ வாழ்க்கையில அக்கம பக்கம் மக்கள் இருக்கறாங்கங்கிற ப்ரக்ஞை இருக்கறதுனால பொதுல அழறது கொஞ்சம் கம்மி தான். "சக் தே இந்தியா" படம் பார்க்கும் போது இந்திய டீம் ஹாக்கி மேட்ச் ஜெயிக்கிற மாதிரி காட்சி வரும் போது சந்தோஷத்துல அழுதேன். "தாரே ஜமீன் பர்" படம் பாக்கும் போது அந்த சின்னப் பையனை ஹாஸ்டல்ல அவங்க அம்மா-அப்பா விட்டுட்டுப் போகும் போது வரும் அம்மா பாட்டு பாத்து அழுதிருக்கேன். அந்த மாதிரி சமயங்கள்ல எல்லாம் தங்கமணி என் பக்கம் திரும்பி பாப்பாங்க நான் அழறேனா இல்லையான்னு, நானும் சட்னு கைக்குட்டையை எடுத்து கண்ணைத் தொடைச்சிக்குவேன். இதை விளக்குறதுக்காகத் தான் மேல ஒரு பேராக்ராஃப் "சமூகத்தை" சாடிருக்கோம்:) கடைசியா அழுதது பசங்க படம் பார்க்கும் போது. அடிபட்ட ஜீவாவை அவங்க ஆசிரியர் தூக்கிட்டு ஓடி வர்ற மாதிரி இருக்கற காட்சியைப் பார்த்து அழுதேன். 32 கேள்விகள்லேயே எனக்கு பிடிச்ச கேள்வி இது தான் :)

4. பிடித்த மதிய உணவு?
கீரை சாம்பாரும், உருளைக்கிழங்கு வறுவலும்.

5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
வச்சுக்குவேன். துஷ்டனைக் கண்டாத் தாங்க தூர விலகனும் :)

6. கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
ரெண்டுத்துலயும் இது வரை குளிச்சதில்லை. அதனால இதுக்குப் பதில் சரியாத் தெரியாது. ஷவர்ல குளிக்க ரொம்பப் பிடிக்கும், அருவி ஒரு பெரிய சைஸ் ஷவர்ங்கிறதால அருவில குளிச்சாலும் அது பிடிக்கும்னு தான் நெனைக்கிறேன். சென்னையில கடல்ல குளிக்கிறதைப் பத்தி நெனச்சி கூட பாக்க முடியல. காலை ஏழு மணிக்கு முன்னாடி என்னிக்காச்சும் கடற்கரைக்குப் போய் பாத்தா அதுக்கான காரணம் என்னன்னு புரியும். கங்கையில் ஹரித்வாரில் ரெண்டு வாட்டி குளிச்சிருக்கேன். சுட்டெரிக்கும் வெயிலிலும் சில்லிடும் ஐஸ் தண்ணியில் குளிச்சிட்டு எழுந்தால் கிடைக்கும் புத்துணர்ச்சியை வார்த்தைகளில் சொல்றது கடினம்.

7. ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
ஒருவரைப் பார்க்கும் போது எதையும் கவனிப்பதில்லை. ஒருவரிடம் பழகும் போது அவர் பேச்சிலுள்ள நேர்மையைக் கவனிப்பேன்.

8. உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
எந்தச் செய்லையும் கவனமாகப் பார்த்து பார்த்து திட்டமிட்டு செய்யும் குணம். அப்படிச் செய்தும் அதற்குண்டான பலன் கிடைக்காது போகும் போது ஏற்படும் ஏமாற்றத்தை எளிதில் தாங்க முடியாது இருத்தல் பிடிக்காத விஷயம்.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
மனதில் ஏற்படும் கோபத்தை ஓரிரு நாட்களுக்கு மேல் நீட்டிக்காதது. மனைவி கிட்ட பிடிக்காததுன்னு எதாவது இருக்க முடியுமா? இந்த கேள்வியே தப்பாச்சே:) மனைவி கிட்ட எல்லா விஷயங்களுமே பிடிச்சது தான். கொஞ்சம் கம்மியா பிடிச்ச விஷயம்னு சொல்லனும்னா வேணா அவங்க விஜய் ரசிகையா இருக்கறதைச் சொல்லலாம் :)

10. இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
அப்படி எதுவும் இல்லை

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
இளநீல கலர் சட்டையும், கருநீல கலர் கால்சட்டையும் - quarter pant இல்லை full pant தான் :)

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
வெட்டிப்பயல் எழுதிருக்கற 32 கேள்விகளுக்கான பதில்களை. மெட்டி படத்துலேருந்து "மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட" பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கேன்.

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
மஞ்சள். எனக்கு பிடிச்ச வண்ணம்.

14. பிடித்த மணம்?
அர்ச்சனாவைக் குளிப்பாட்டி முடிக்கும் போது கடைசியில் "Johnsons Baby Cologne" கலந்து தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டுவார்கள். அதற்குப் பின் உடை உடுத்தி, நெத்திக்குப் பொட்டு வைத்த பின்னர் அவளைத் தூக்கி உச்சி முகரும் போது பேபி பவுடரும் கலோனும் கலந்து வரும் அந்த நறுமணம்.

15. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
ஒரு பதிவுன்னு சொல்றது கஷ்டம். பாலாஜியோட பல பதிவுகள் பிடிக்கும். அவருடைய சிறுகதைகளில் நம்மை நாமே தொடர்பு படுத்திப் பார்த்துக் கொள்ளக் கூடிய மாதிரி சில விஷயங்களைச் சொல்லியிருப்பார். அது தான் கதையோட முடிவு சந்தோஷமா இருந்தாலும், சோகமா இருந்தாலும் படிக்கிறவங்களுக்கு மனசுக்கு நெருக்கமாப் பட வைக்குதுங்கிறது என்னோட எண்ணம். உதாரணத்துக்குச் சொல்லனும்னா அவர் சமீபத்தில் எழுதிய குட்டிப் பாப்பா சிறுகதையில் கீழ்கண்ட இவ்வரிகள்.

"அவசரத்திற்கு நண்பர்களிடமிருந்து கடன் வாங்கலாம். வேலை தேடும் போது நண்பர்களுக்கு நான் கணக்குப் பார்க்காமல் செலவு செய்திருக்கிறேன். ஒருத்தராவது உதவாமலா போய்விடுவார்கள். என் மனதில் உள்ள பயம் தீபாவிற்கு தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். "

16. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
கப்பி
ராயல்
நான் ஆதவன்
- ரொம்ப நாளா மூனு பேரும் எதுவும் எழுதலை, அது தான் காரணம். முதல் ரெண்டு பேரை ஏற்கனவே வெட்டிப்பயல் கூப்பிட்டுட்டதுன்னால என்னைத் தனியா திட்ட மாட்டாங்கன்னு ஒரு நம்பிக்கை.

நான் ஆதவன் - நீங்க மட்டும் வேணும்னா திட்டறதுன்னா திட்டிக்குங்க :)

17. பிடித்த விளையாட்டு?
நான் விளையாடுவதென்றால் - Scrabble. பிறர் விளையாடுவதென்றால் - கிரிக்கெட், ஹாக்கி :)

18. கண்ணாடி அணிபவரா?
ஆமாம்

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
காமெடி, அதிக பில்டப் இல்லாத படங்கள்

20. கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க.

21. பிடித்த பருவ காலம் எது?
வசந்த காலம். சென்னையில் பார்த்தது இல்லை. புதுதில்லியில் பார்த்திருக்கேன். குளிர்காலம் முடிந்து பிப்ரவரி-மார்ச் மாதங்கள் நல்ல தட்பவெப்ப நிலையோடு மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்.

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இப்போதைக்கு எதுவும் இல்லை. உண்மையைச் சொல்லனும்னா பலகாலமாக எதுவும் இல்லை. நேரம் கெடைக்கும் போது, ப்ளாக் மட்டும் தான் படிக்கிறது.

23. உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அப்படி எல்லாம் எதுவும் வரைமுறை இல்லை. தோன்றும் போது மாற்றுவேன்.

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
சமீபகாலமாகப் பிடித்த சத்தம் என் பத்து மாத மகள் "ஏய் ஏய்" என்று பேச முயலும் சத்தம். பிடிக்காதது குழந்தையின் தூக்கத்தைக் கலைக்கும் அனைத்து சத்தங்களும்.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
புசான் - Busan(தென் கொரியா)

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்கிறதுலயே ரொம்ப சில்லறைத் தனமான, சப்பைத் தனமான சில விஷயங்களைக் கூட மிகவும் கூர்ந்து கவனிப்பது, அதை பல காலம் வரை நினைவில் நிறுத்திக் கொள்வது. அதனால இதுவரை எந்த பயனும் இது வரை விளைந்ததில்லை என்று தெரிந்துள்ள போதும்.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
எனக்கு நல்லது நடக்கும் போது "எனக்கு மட்டும் இதெல்லாம் ஏன் நடக்குது" என்று கேளாத மனது, தீயது நடக்கும் போது மட்டும் "எனக்கு மட்டும் இதெல்லாம் ஏன் நடக்குது" என்று கேட்கத் துணிவது.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
மனம்

மனது ஒன்று இருக்கிறதே எனது என்று தவிக்கிறதே
எனது மனம் அழிந்திடவே அருள் புரிவாய் அருள் புரிவாய்


29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தலம்?
மலை சார்ந்த சுற்றுலா தலங்கள் பிடிக்கும் - ஊட்டி மட்டும் தான் போயிருக்கேன். அதனால அது பிடிக்கும்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
இது வரை இருந்தது rat raceஇல் ஓடும் billions of ratsஇல் நானும் ஒரு rat ஆக. அதனால போறதுக்குள்ள சமூகத்துக்கு எந்த வகையிலாவது பயனுள்ளவனா இருந்துட்டுப் போகனும்னு ஒரு எண்ணம் இருக்கு.

31. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?
மனைவிக்குத் தெரியாமல், கடைசி நேரம் வரை ரகசியங்களைக் காப்பாற்றி சர்ப்ரைஸ்கள் கொடுப்பது, ஆச்சரியப்படுத்துவது.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
And in the end, it's not the years in your life that count. It's the life in your years. இது நான் சொல்லலை, ஆபிரகாம் லிங்கன் சொன்னது. இந்த கேள்விக்கு நெஞ்சை நக்குற மாதிரி எதாவது பதில் சொல்லனும்ங்கிறதுக்காக கூகிளில் தேடிக் கண்டுபிடிச்சேன். இந்த கேள்வி பதில் மூலமா புதுசா தெரிஞ்சிக்கிட்ட ஒரு விஷயம் இது. அதுக்காக பாலாஜிக்கு நன்றி சொல்லிக்கிறேன்.

Friday, June 12, 2009

I love Life

"எங்களை எல்லாம் ஃபோட்டோ புடிக்க மாட்டீங்களா"ன்னு கேட்டுக்கிட்டே ஒரு பெரியவர் என்கிட்டே வந்தாரு. ஜூலை மாசம் 2008ல வெண்பா வாத்தியார் ஒளி ஓவியர் ஜீவ்ஸ் அண்ணாச்சியின் ஆசிர்வாதத்தோட வாங்கிய என்னுடைய புது Panasonic கேமராவை எடுத்துக்கிட்டு நீலாங்கரை கடற்கரைக்குப் போயிருந்தேன். அப்போ கடல், கடலலைகள், நண்டுகள் இவைகளை எல்லாம் புகைப்படம் எடுத்துட்டு அலுத்துப் போய், பக்கத்துல இருந்த மீனவர் குப்பம் வழியா அப்படியே நடந்து போய்க்கிட்டிருந்தேன். கையில கேமரா இருந்ததை பாத்ததும் சின்னப் பசங்க எல்லாம் என்னை சுத்திக்கிட்டு "அண்ணா ஃபோட்டோ எடுணா"ன்னு கேட்டாங்க. நானும் அவங்களை ஃபோட்டோ எடுத்துட்டு கேமராவோட LCD திரையில நான் அவங்களை எடுத்த புகைப்படங்களைக் காட்டுனேன், அவங்களுக்கு ஒரு சந்தோஷம். எனக்கும் ஒரு சந்தோஷம். அப்போ தான் அந்த பெரியவர் என்னைப் பாத்து மேல சொல்லிருக்கற மாதிரி கேட்டாரு. ரோட்டுல போற வர்றவங்களை "உங்களை ஒரு ஃபோட்டோ எடுத்துக்கட்டுமா"ன்னு கேட்கற தைரியம் எனக்கு எப்போவும் இருந்ததில்லை. கேக்கறவங்க என்ன சொல்லுவாங்களோன்னு கூச்சமாவே இருக்கும். ஆனா ஒரு பெரியவர் சின்னப்பசங்களுக்கு நிகரா, தானாவே வந்து தன்னை படம் எடுக்கச் சொல்லிக் கேட்டதும் எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாத் தான் இருந்துச்சு.

அந்த பெரியவரைச் சில படங்கள் எடுத்து, அந்த படங்களை அவருக்கும் LCD திரையில் காண்பிச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். அப்படங்களைக் கணினியில் தரவிறக்கம் செய்து பாத்த போது, அவர் மெல்லிதாகச் சிரிப்பது போல எனக்கு பட்டது. ஒரு வித நம்பிக்கையை வெளிப்படுத்தும் புன்னகையைப் போல எனக்கு பட்டது. அந்த படம் உங்கள் பார்வைக்கு.


ஒரு இந்திப் பாடலும் நினைவுக்கு வந்துச்சு. ஆழமான வரிகளைக் கொண்ட இதமான மெட்டினைக் கொண்ட அந்த பாடல் கீழே. என்னால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்குத் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். ஆங்கில மொழிபெயர்ப்பு, இணையத்தில் இருந்து எடுக்கப் பட்டது.

படம் : ஹர்ஜாயி(1982)
பாடல் : நிடா ஃபஸ்லி
இசை : R.D.பர்மன்
பாடியது : கிஷோர் குமார்

Kabhi palkon pe aansoo hain
Kabhi lab pe shikaayat hai
Magar aye zindagi phir bhi
Mujhe tujhse mohabbat hai

விழியோரங்களில் சில நேரங்களில் கண்ணீர் துளிகள்
உதட்டோரங்களில் சில நேரங்களில் வருத்தப் பேச்சுகள்
இவையெல்லாம் நீ எனக்கு தந்தாலும் வாழ்க்கையே
நான் உன்னை மனதாற விரும்புகிறேன்

There are times when my eyelashes are moistened by tears
There are times when my lips utter a word of complaint
But oh my dear life
I still love you from the bottom of my heart


(Kabhii palkon pe aansoo hain...)

Jo aataa hai vo jaataa hai
Yeh duniya aani jaani hai
Yahaan har shay musafir hai
Safar mein zindagaani hai
Ujaalon ki zaroorat hai
Andhera meri kismat hai

வருபவர் எல்லாம் போவோரே
இவ்வுலகத்தில் போவதும் வருவதும் வாடிக்கை
வாழ்க்கை என்னும் பயணத்தில்
இங்குள்ளோர் அனைவரும் பயணிகளே
வெளிச்சத்தின் தேவை எனக்கிருந்தாலும்
எனக்கு விதிக்கப் பட்டிருப்பது என்னவோ இருட்டு தான்

Whoever comes has to go
This world is full of comings and goings
Here every pawn is a traveller
In the journey of life
There is a need for light
Darkness is in my fate

Kabhii palkon pe aansoo hain
Kabhi lab pe shikaayat hai
Magar aye zindagi phir bhi mujhe tujhse mohabbat hai

விழியோரங்களில் சில நேரங்களில் கண்ணீர் துளிகள்
உதட்டோரங்களில் சில நேரங்களில் வருத்தப் பேச்சுகள்
இவையெல்லாம் நீ எனக்கு தந்தாலும் வாழ்க்கையே
நான் உன்னை மனதாற விரும்புகிறேன்

There are times when my eyelashes are moistened by tears
There are times when my lips utter a word of complaint
But oh my dear life
I still love you from the bottom of my heart

Zaraa aye zindagi tham le
Tera deedaar to kar loon
Kabhii dekha nahin jisko
Use main pyaar to kar loon
Abhi se chhod ke mat jaa
Abhi teri zaroorat hai

வாழ்க்கையே சற்று ஓய்வெடுத்துக் கொள்
உன் திருமுகம் பார்க்கும் வாய்ப்பை எனக்கு கொடுப்பதற்காக
யாரை நான் பார்த்ததே இல்லையோ
அவளைக் காதலித்துக் கொள்வதற்காக
என்னை இப்போதே விட்டு விட்டுச் சென்று விடாதே
உன்னுடைய அருகாமை எனக்கு மிக தேவை

Oh life stop and take a breath
Give me a chance to see you
Let me love the one
I have never seen before
Don't leave me and go
I need you now

Kabhi palkon pe aansoo hain
Kabhi lab pe shikaayat hai
Magar aye zindagi phir bhi mujhe tujhse mohabbat hai

விழியோரங்களில் சில நேரங்களில் கண்ணீர் துளிகள்
உதட்டோரங்களில் சில நேரங்களில் வருத்தப் பேச்சுகள்
இவையெல்லாம் நீ எனக்கு தந்தாலும் வாழ்க்கையே
நான் உன்னை மனதாற விரும்புகிறேன்

There are times when my eyelashes are moistened by tears
There are times when my lips utter a word of complaint
But oh my dear life
I still love you from the bottom of my heart

Koi anjaan sa chehraa
Ubharta hai phizaon mein
Ye kiski aahatein jaagi
Meri khamosh raahon mein
Abhi aye mauta mat aanaa
Mera veeraan jannat hai

என் கீழ்வானத்தில் நான் அறிந்திராத
முகம் ஒன்று எனக்கு தெரிகிறதே
இது யாருடைய காலடித் தடங்கள்
என் மயானமான பாதையில் கேட்கிறது?
மரணமே என்னை வந்து தொடாதே
என்னுடைய சொர்க்கம் இன்னும் துணையின்றியே இருக்கிறது

Some unknown face is rising in the horizon
Whose footsteps can be heard in my silent path
Death don't come just yet, my heaven is still empty

Kabhi palkon pe aansoo hain
Kabhi lab pe shikaayat hai
Magar aye zindagi phir bhi mujhe tujhse mohabbat hai

விழியோரங்களில் சில நேரங்களில் கண்ணீர் துளிகள்
உதட்டோரங்களில் சில நேரங்களில் வருத்தப் பேச்சுகள்
இவையெல்லாம் நீ எனக்கு தந்தாலும் வாழ்க்கையே
நான் உன்னை மனதாற விரும்புகிறேன்

There are times when my eyelashes are moistened by tears
There are times when my lips utter a word of complaint
But oh my dear life
I still love you from the bottom of my heart



Get this widget | Track details | eSnips Social DNA


என்னுடைய போன பதிவில் அறிமுகமான நண்பர் பாசகியின் இந்தப் பதிவையும் படிச்சிப் பாருங்க. அருமையா எழுதிருக்காரு.
வாழ்ந்து பாருங்க பாஸ்...

மேலே உள்ள படம் ஜூன் மாதம் PiT புகைப்படப் போட்டிக்கும்.

நான் பாட்டுக்குச் செவனேன்னு தானேயா போயிக்கிட்டிருந்தேன்?

2009 வருஷத்துலேருந்து மாசத்துக்கு ஒரு பதிவாச்சும்(படமில்லாத பதிவா) எழுதனும்னு நெனச்சி வச்சிருந்தேன். ஏன்னா 2008ல எழுதுன நெறைய பதிவுகள் புகைப்படப் போட்டிக்குப் படத்தைச் சேர்க்கறதுக்குன்னு எழுதுன பதிவுகள். ஏப்ரல் மாசம் வரைக்கும் மாசத்துக்கு ஒரு பதிவாச்சும் எப்படியோ எழுதியாச்சு. மே மாசம் தான் அது முடியாமப் போச்சு. காரணம்...மே மாசம் ஒன்னாம் தேதி நடந்த ஒரு சின்ன சாலை விபத்து. அதனால ஏற்பட்ட ஒரு சின்ன எலும்பு முறிவு அதன் காரணமா நடந்த ஒரு சின்ன அறுவை சிகிச்சை அதன் காரணமா எடுக்க வேண்டி இருந்த ஒரு சின்ன விடுப்பு இதெல்லாம்.

மே 1 ஆம் தேதி மதியம் சாப்பிட்டுட்டு நம்ம கேமராவுக்கு சில accessories(polariser, filter) வாங்கலாமேன்னு வீட்டிலிருந்து ஸ்பென்சர்ஸ் ப்ளாசா நோக்கி என்னுடைய பைக்கில் பயணப்பட்டேன். கோட்டூர்புரம், நந்தனம் இதையெல்லாம் தாண்டி தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் சிக்னலை நோக்கிப் போயிக்கிட்டு இருந்தேன். நந்தனத்தில் குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்புகள் காணாமல் போயிருந்த மாதிரி இருந்தது. இன்னும் இருக்கா இல்லை போயிட்டதான்னு தெரிஞ்சவங்க யாராச்சும் சொல்லுங்க. அதன் பிறகு வந்த ஒரு சிக்னல், மஞ்சளிலிருந்து சிகப்பாவதற்கும் அங்கே பணியில் இருந்த போக்குவரத்து காவலர் நிறுத்துமாறு கை காட்டவும், நான் நாலாவது, மூனாவது, இரெண்டாவது, ஒன்னாவது என நியூட்ரலுக்குக் கொண்டு வந்து பைக்கை நிறுத்தவும், சிக்னலில் நிக்காமல் போயிடலாம்னு நெனச்சி என் பின்னாலில் வந்துட்டிருந்த டாட்டா இண்டிகா கார் என் பைக்கின் பின்புறம் வந்து மோதவும் சரியா இருந்துச்சு. என்னுடைய சில பதிவுகளில் நுண்ணரசியல் பேசும் கொத்தனார் அண்ட் கோவுக்கு அவர் கேட்கும் முன்னே நானே ஒன்னு சொல்லிக்க ஆசை படறேன். சென்னையில எத்தனையோ இடங்கள் இருக்க, எத்தனையோ சாலைகள் இருக்க, எத்தனையோ சிக்னல்கள் இருக்க அதையெல்லாம் விட்டு விட்டு அண்ணா அறிவாலயம் சிக்னலில் வந்து அடிப்பட்டதின் பின்னாலில் இருக்கும் நுண்ணரசியல் என்னன்னு எனக்கு புரியலிங்கோ. உங்களுக்குப் புரியுதா :)

பைக்கோட கீழ விழுந்து கொஞ்ச நேரம் ஒன்னும் புரியலை. ஆனா நினைவெல்லாம் தப்பலை. அப்புறமா தான் தெரிஞ்சது கார் வந்து இடிச்சி கீழே விழுந்தது. ரோடு காலியாத் தான் இருந்துச்சு, கார் என் பைக்குக்கு வலது புறமாவோ இடது புறமாவோ போயிருக்கலாம். வர்க் ஷாப்புக்கு சர்வீசுக்கு வந்த காரை எடுத்துக்கிட்டு ஒரு மெக்கானிக்கும் அவனோட சொந்தக்கார பசங்களும் ஊரைச் சுத்தலாம்னு கோயம்புத்தூர்ல பதிவான வண்டியை எடுத்துக்கிட்டு வந்திருக்காங்க. யார் வம்புக்கும் போகாம செவனேன்னு போயிக்கிட்டிருந்த என் மேல தான் மோதுவேன்னு அடம் புடிச்சி வந்து மோதிட்டாங்க. அதுக்கப்புறம் விபத்து நடந்ததை பதிவு பண்ணறதுக்காக வாழ்க்கையில முதல்முறையா ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் போனேன். என் கையில ஒரு எக்ஸ்ரே எடுத்தாங்க. எக்ஸ்ரே எடுத்த இடம் ஒரு வர்க் ஷாப் மாதிரி இருந்தது. அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பைப் பார்த்து மிக வருத்தமாக இருந்தது. தனியார் மருத்துவமனையில் பணம் செலவழிக்க முடியாத ஏழை மக்களுக்குக் கிடைக்கும் சிகிச்சையின் தரம் குறித்த கவலை வந்தது. இதுல வேற எக்ஸ்ரே டெக்னீஷியனுக்கும் டியூட்டி டாக்டருக்கும் நடுவுல பாலிடிக்ஸ் போல. எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்று டாக்டர் பரிந்துரைத்து எழுதி கொடுத்த சீட்டு முறைப்படி எழுதப்படவில்லை என்று டாக்டரிடம் திருப்பி அனுப்பிவிட்டார் டெக்னீஷியன். என் கூட என் தம்பி உதவிக்கு இருந்ததாலும், அவன் ஒரு இயற்முறை மருத்துவர்(Physiotherapist) என்பதால் எனக்கு முதல் உதவி செய்திருந்ததாலும், எனக்கு சிரமம் தெரியவில்லை, ஆனால் கை உடைந்து கால் உடைந்து வலியுடன் வருபவர்களை இந்த மாதிரி பந்தாடினால் அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்? அதன் பிறகு நான் ஒரு தனியார் மருத்துவமனை சென்றதும், அங்கு என் வலது கை தோள்பட்டையில் மே 2ஆம் தேதி அறுவை சிகிச்சை நடந்து ஸ்க்ரூ பொருத்தப் பட்டதும், கேமராவுக்கு Circular Polariser வாங்கப் போய் வலது கை மடக்கப் பட்டு Elbow immobiliser அணிந்து மூன்று வார விடுப்பில் இருக்க நேர்ந்ததும் தனிக் கதை.

விடுப்பில் இருந்த மூன்று வாரங்களில், வரலாற்றுப் பக்கங்களில் எழுதப் படக் கூடிய சில சம்பவங்களை வீட்டில் இருந்தவாறே டிவியில் பார்க்க நேர்ந்தது. ஒரு சில திரைப்படங்களைப் பார்த்தேன் - ஆங்கிலத்தில் Lawrence of Arabia, Omar Mukhtar குறிப்பிடத் தக்கவை. தமிழில் மைக்கேல் மதன காமராஜன், ஆண் பாவம், அவ்வை சண்முகி இதெல்லாம் பார்த்து கொஞ்சம் வலியை மறக்க முடிந்தது. மூன்று வாரங்களில் குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச முடியவில்லை என்ற கவலை இருந்தது. ஆனால் இப்போது பரவாயில்லை. நான் அடிபட்ட அன்று என் தந்தையார் கண்கலங்கியதையும், இரு நாட்களுக்கு அர்ச்சனா காரணமே இல்லாமல் அழுததையும், சாப்பிட மறுத்ததையும் நினைக்கும் போது என்ன சொல்வதென்று தெரியவில்லை. அம்மூன்று வார நினைவுகளில் பசுமையாக நிற்பது தங்கமணி எனக்கு செய்த பணிவிடைகள். கண்டிப்பாக அதை மறக்க முடியாது. குறிப்பாகச் சொல்ல விரும்புவது பல வருடங்கள் கழித்து எனக்கு சோறு ஊட்டி விடப்பட்டது. சும்மா சொல்லக் கூடாதுங்க, பொண்டாட்டி கையால சோறு ஊட்டிக்கிட்டாலும் நல்லா ருசியாத் தான் இருக்குது :)

ஒரு நாள் மதியம் எனக்கு தங்க்ஸ் சாதம் ஊட்டிக்கிட்டு இருந்தாங்க. திடீர்னு எனக்கு சிரிப்பு வந்தது. "ஏன் சிரிக்கிறீங்க"னு கேட்டாங்க. "நீ சோறு ஊட்டிக்கிட்டே பாடற மாதிரி ஒரு சிச்சுவேசன் சாங் நியாபகம் வந்துடுச்சு...அதான் சந்தோஷப் புன்னகை"ன்னு சொன்னேன். "என்ன பாட்டு"ன்னு கேட்டாங்க.

"தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ"ங்கிற பாகப் பிரிவினை படப் பாட்டைச் சொன்னேன்.
இதை கேட்டுட்டு தங்கமணியும் சிரிச்சிட்டாங்க. "நாம நெனச்ச அளவுக்கு நம்ம புருஷன் மக்கு இல்லை, அறிவாளியாத் தான் இருக்காருன்னு"னு முதல் முறையா உணர்ந்து சிரிச்சிருப்பாங்கன்னு நான் நெனைக்கிறேன்.

"சிங்கத்தின் கை(கால்)கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ" அப்படிங்கிற அடுத்த வரிகள் நினைவுக்கு வந்தப்போ எனக்கு சிரிப்பும் வந்தது, கொஞ்சம் ஓவராத் தான் போறோமோன்னும் இருந்துச்சு :)