Showing posts with label பட்டாம்பூச்சி விருது. Show all posts
Showing posts with label பட்டாம்பூச்சி விருது. Show all posts

Wednesday, March 18, 2009

பட்டர்ஃப்ளை வைத்த ஆப்பு

ஆப்புகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம். டேமேஜர் ஆப்பு வைக்கிறதை பத்தி கேள்வி பட்டுருப்பீங்க, ஸ்கூல்ல டீச்சர் ஆப்பு வைக்கிறதை பத்தி கேள்வி பட்டிருப்பீங்க. பட்டர்ஃப்ளையினால் ஆப்பு வைக்கப் பட்டவனைப் பத்தி கேள்வி பட்டிருக்கீங்களா? இன்னிக்கு கேள்வி படுங்க.

என் வாழ்க்கையில் முதன் முதலா நான் நேர்காணல் எடுத்த நாள் நேத்திக்கு. அப்பா...இதையும் பதிவு பண்ணி வச்சாச்சு. நான் இப்போ இருக்கற ப்ராஜெக்டுல சில புதிய தேவைகள் இருப்பதால், ஒரு CVயைக் கொடுத்து தொலைபேசி நேர்காணல் எடுக்கச் சொன்னார் எங்க ப்ராஜெக்ட் மேனேஜர். உண்மையைச் சொல்லப் போனா நேர்காணல் எடுக்கனும்னு சொன்னதுமே ஒரு படபடப்பு. வழக்கம் போல "இது முதன்முறையாச்சே" அப்படீங்கற ஸ்டார்ட்டிங் டிரபிள் தான். நேத்திக்குத் தான் முதன்முதலா நேர்காணல் எடுத்தேன்னாலும் எப்படி எடுக்கனும்னு கேட்டுத் தெரிஞ்சும் ஓரளவு படிச்சும் வச்சிருந்தேன். நேர்காணல் எடுக்கும் போது எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு கேள்வி கேப்பவரை எப்படி நாம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். கேள்விகளைக் கேட்டு எப்படி மடக்கலாம் என நினைத்து நேர்காணல் எடுப்பவரிடம் நம்முடைய புத்திசாலித் தனத்தை எல்லாம் காட்ட வேண்டும் என்று நினைத்தால் இழப்பு நம்முடையது தான்னு எங்கேயோ படிச்சிருக்கேன். இதையெல்லாம் நினைவு படுத்திக் கொண்டு CVயில் கொடுக்கப் பட்டிருந்த செல்பேசி எண்ணை அழைத்தேன். அந்த நபர் ஏற்கனவே எங்கள் நிறுவன ஊழியர் என்பதால், எங்கள் ப்ராஜெக்டுக்கு அவர் தகுதியானவர் தானா என்பதை முடிவு செய்யும் பொறுப்பு மட்டுமே எனது. ஆகையால் எல்லோரும் வழக்கமாகக் கேட்கும் "Tell me about yourself" என்ற கேள்வி கேட்க வேண்டிய தேவை இருக்கவில்லை. முந்தைய பணியிடங்களில் அவருடைய அனுபவத்தைப் பற்றிக் கேட்டுக் கொண்டு SAP பற்றிய எனக்கு தெரிந்த கேள்விகளைக் கேட்கத் தொடங்கினேன்.

ஓரிரு கேள்விகளுக்குச் சரியான பதில் சொன்னார் என்றாலும், பெரும்பாலான கேள்விகளுக்கு அவருக்கு விடை தெரிந்திருக்க வில்லை. ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும், அவரை எங்கள் ப்ராஜெக்டில் அமர்த்தினால் விரைவாகக் கற்றுக் கொண்டு செயல்படுவார் என்ற நம்பிக்கையை அவர் எனக்கு நேர்காணலின் போது ஊட்டவில்லை. அதற்குண்டான ஆர்வமும் அவரிடம் இருந்ததாகத் தெரியவில்லை. "தொன்னூறு நாட்களாக பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறேன். புதிதாக எங்களுக்குக் குழந்தை பிறந்திருப்பதால் என்னுடைய நிலை க்ரிடிகலாக இருக்கிறது, அதனால் உங்கள் ப்ராஜெக்டில் சேர நான் ஆர்வம் உள்ளவனாக இருக்கிறேன்" என்று மட்டும் தெரிவித்தார். அவர் கூறியதைக் கேட்டு பரிதாபப்பட முடிந்தது என்றாலும் அவர் எங்கள் ப்ராஜெக்டுக்குத் தகுதியானவர் இல்லை என்பது மட்டும் நேர்காணல் எடுத்து முடிக்கும் போது தெரிந்தது. "இந்நேர்காணலைப் பற்றி உங்களுடைய ஃபீட்பேக் என்ன?" என்று என்னை கேட்டார். முதல்முறை என்பதால் என்ன சொல்வது என எனக்கு தெரியவில்லை. "We will let you know" என்று முடித்து விட்டேன். "உங்களை நீங்களே இன்னும் நன்றாக நேர்காணலுக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று உபயோகமான ஒரு ஃபீட்பேக் கொடுத்திருக்கலாமோ என்று பின்னர் தான் எனக்கு உரைத்தது. நேர்காணல் எடுப்பது எனக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்தது. அதன் மூலமாக நேர்காணல் எடுப்பவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று ஓரளவு தெரிந்து கொள்ளவும் முடிந்தது. உங்களுடைய நேர்காணல் அனுபவங்களையும் டிப்ஸ்களையும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

வழக்கமாக பைக் ஓட்டும் போது மனதில் எந்த விதமான சிந்தனைகளும் இருக்காது. ஆனால் ஓரிரு நாட்களாக வண்டி ஓட்டும் போது வேறு சில சிந்தனைகள் மனதில் ஓடுகின்றன. நேற்று மாலை அலுவலகத்தில் இருந்து திரும்பும் போது மேலே நேர்காணல் எடுத்த அனுபவத்தை மனதில் அசைபோட்டுக் கொண்டே வண்டி ஓட்டி வந்தேன். வருத்தப்பட்டாத வாலிபர் சங்கத்தில் நேற்று காலையிட்ட 501வது பதிவு, அப்பதிவு ஐம்பது அடிக்குமா அடிக்காதா, எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்துள்ள நாகை சிவா, ஜி.ரா அவர்கள் அன்புக்கிணங்க என்ன பதிவு போடுவது இப்படியாகப் பலவாறு யோசித்துக் கொண்டே ராமாபுரத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து கிண்டியைத் தாண்டி அடையாறு மத்திய கைலாஷ் சிக்னல் வரை வந்துவிட்டேன். சிக்னலிலிருந்து நான் வலது புறம் திரும்ப வேண்டும். எனக்கு முன்னாடியுள்ள வண்டிகள் திரும்பிக் கொண்டிருக்க நானும் திரும்பினேன். அப்போது தான் கவனித்தேன் எதிர்புறத்திலிருந்து வாகனங்கள் புறப்பட்டு வருவதை. எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரை ஒரு போக்குவரத்து காவலர் நிறுத்தினார். காருக்குப் பின்னாடி வந்து கொண்டிருந்த என்னை சார்ஜெண்ட் ஒருவர் கைகாட்டி நிறுத்தினார். தன்னருகே வருமாறு அழைத்தார். நான் அருகில் சென்றதும் என் பைக்கில் இருந்து சாவியை உருவி கையில் எடுத்துக் கொண்டார். "ஏன் சிக்னல் ஜம்ப் பண்ணீங்க? வந்து ஃபைன் கட்டுங்க" என்றார். "சாரி சார்" என்றேன். "லைசன்ஸ் எடுங்க" என்றார். கொடுத்தேன். "எங்கே வேலை செய்யறீங்க" என்றார். கம்பெனி என்ன என்றும் என் வேலை என்றும் சொல்லாமல் "ராமாபுரத்தில் சார்" என்றேன். என் போதாத நேரம் கழுத்தில் ஐடி கார்டு தொங்கிக் கொண்டிருந்தது. அவர் அதை பார்த்து விட்டார். "சிக்னல் ஜம்ப் பண்ணதுக்கு ஃபைன் ஆயிரத்து ஐம்பது ரூபாய்" என்றார். மறுபடியும் "சாரி சார்" இது நான். "ஃபைன் இங்கே கட்டறீங்களா? இல்லை கோர்ட்டுல கட்டறீங்களா?" என்றார். "சார் ஃபர்ஸ்ட் டைம் சார், கவனிக்காம வந்துட்டேன்" என்றேன். "கவனிக்காம வந்ததுக்கு தாங்க சார் ஃபைன்" என்றார். மறுபடியும் "ஃபர்ஸ்ட் டைம் சார், சாரி சார்" என்றேன். "ஃபைவ் ஃபிப்டி குடுத்துட்டு எடுத்துட்டு போங்க" என்றார். ஐநூறைக் கொடுத்து விட்டு ஐம்பதை தேடிக் கொண்டிருந்தேன். "பரவால்லை எடுத்துட்டு போங்க" என்று ரிசெஷனை முன்னிட்டு பத்து சதவீதம் சிறப்புத் தள்ளுபடி கொடுத்தார்.

வீட்டுக்கு வந்ததும் என் தம்பி நல்லா திட்டுனான். "மாங்கா மாதிரி ஐடி கார்டை மாட்டிக்கிட்டு வண்டி ஓட்டுவியா? நீ சாஃப்ட்வேர் ஆளுன்னு தெரிஞ்சிக்கிட்டு ஐநூறு ரூவா தாளிச்சிட்டாங்க. மத்தவங்கன்னா மேக்சிமமே முன்னூறு ரூவா தான்"அப்படின்னான். என்ன இருந்தாலும் தப்பு செஞ்சதுனால தான் தண்டம் கட்டுனேன்ற திருப்தி எனக்கிருக்கு:) அப்படி "தூ"ன்னு டீசெண்டா துப்பிட்டு போற வழியைப் பாருங்க. இப்ப எனக்கே துப்பனும் போல தான் இருக்கு. ப்ளாக்ல உக்காந்துக்கிட்டு "உத்தம புத்திரன்" மாதிரி பேசுறதுங்கிறது வேற. ஆனா நமக்குன்னு வரும் போது நாம நடந்துக்கற விதம்ங்கிறது வேற. தசாவதாரம் படம் மாதிரி... பட்டாம்பூச்சி விருதை ப்ளாக்ல போடறதுக்காக போலீஸ் கிட்ட கப்பம் கட்டி "பட்டர்ப்ஃளை எஃபெக்ட்"னா என்னன்னு ஒரு பாடமும் கத்துக்கிட்டேன். உன் முட்டாள் தனத்துக்கு ஏண்டா பட்டாம்பூச்சி விருதைக் காரணம் சொல்லறேன்னு விருது கொடுத்த புலியும், ஜி.ரா வும் கண்டிப்பா கேப்பாங்க. அவங்க கிட்ட மாப்பு கேட்டுக்கிட்டு அவங்க அன்புக்குத் தலை வணங்கி அவங்க குடுத்த விருதை சந்தோஷமா போட்டுக்கிடறேன். ஆனா எனக்கு ஒரு சந்தேகமும் இருக்கு...சங்கத்து 501வது பதிவைப் பாத்த கையோட ஒருத்தரு காலங்காத்தால பல்லு கூட வெளக்காம யாரோ ஒரு மலையாள மாந்த்ரீகரை வச்சி எதாச்சும் சாத்தானை ஏவி விட்டுருக்காங்களோன்னும் அந்த சாத்தான் தான் சார்ஜெண்டா வந்திருச்சோன்னும் எனக்கு கொஞ்சம் சந்தேகமாவே இருக்கு.


நான் பட்டாம்பூச்சி விருது கொடுக்க விரும்பும் மூவர்.

1. வெட்டிப்பயல்
2. கப்பி பய
3. நீங்க ஆதவன்


1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)