Saturday, February 16, 2008

வந்தானாம் வந்தானாம் ஊமைத்துரை...

சில சமயங்களில் வரலாற்றில் புகழ்பெற்ற மனிதர்களையும், வீரர்களையும் பற்றித் தெரிந்து கொள்ளும் எண்ணமில்லாமல் வரலாற்றைத் தோண்டும் தேவை ஏற்படலாம். அப்படி ஒரு தேவை/வாய்ப்பு எனக்கு 1995இல் ஏற்பட்டது. ஒரு ஆர்வத்தில் பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு படிக்கும் போது நண்பன் பிரான்சிஸ் சேவியர் துணையுடன் பாஞ்சாலங்குறிச்சியின் வரலாற்றைப் படிக்க ஆரம்பித்தேன். நான் தெரிந்து கொள்ள நினைத்தது ஒன்று, ஆனால் அதை தாண்டிப் பல புதிய செய்திகளைத் தெரிந்து கொண்டேன். அதைப் பற்றித் தான் இந்தப் பதிவு.

1995ஆம் ஆண்டு அண்ணாப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படிக்கும் போது "பொறியியல் - அறிமுகம்"(Introduction to Engineering) என்று ஒரு தாள் எங்கள் பாடத்தில் இருந்தது. கிட்டத்தட்ட வரலாறு பாடம் போலத் தான் இருக்கும் அது. பொறியியல் உருவாகக் காரணமாக இருந்த வரலாற்று நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிட்டிருப்பார்கள். உதாரணமாக கரிகாலன் கல்லணை கட்டியது, ஜார்ஜ் ஸ்டீவன்சன் நீராவி எஞ்சின் கண்டுபிடித்தது, சார்லஸ் பேப்பேஜ் கணிப்பொறியின் முன்னோடியான ஒரு கருவி கண்டுபிடித்தது, வில்லியம் ஆஸ்பிடின் என்பார் போர்ட்லாண்டு சிமெண்டு கண்டுபிடித்தது இப்படியாகப் பல வரலாற்றுச் செய்திகளும் இந்நிகழ்வுகள் பொறியியலின் வளர்ச்சியில் ஏற்படுத்திய தாக்கங்களைப் பற்றியும் அதில் சொல்லப்பட்டிருக்கும். இதில் கடைசியாகச் சொன்ன போர்ட்லாண்டு சிமெண்டு பற்றிப் படிக்கும் போது, இச்சிமெண்டினைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் கட்டிடங்களையும், அணைகளையும் எவ்வாறு கட்டியிருப்பார்கள் என்ற ஒரு கேள்வி பிறந்தது.

அக்கேள்விக்கு விடை தேடிக் கொண்டிருந்த போது, வீரபாண்டிய கட்டபொம்மனின் மறைவிற்குப் பின்னர் பாளையங்கோட்டை சிறையில் அடைபட்டிருந்த கட்டபொம்முவின் இளைய சகோதரர்களான ஊமைத்துரை, துரைசிங்கம் ஆகியோர் வீரர்களின் துணையோடு சிறையில் இருந்து தப்பி தங்கள் ஊரான பாஞ்சாலங்குறிச்சி வந்தடைந்து ஆறே நாட்களில் ஒரு கோட்டை கட்டியது, அக்கோட்டையின் வலிமை, அதை அழிக்க வெள்ளையர்களின் கும்பினிப் படை பட்டபாடு ஆகியவற்றை தமிழ் துணைப்பாட நூலில் படித்ததும் நினைவுக்கு வந்தது. அக்கோட்டை கட்டப்படுவதற்கு என்ன மாவுப் பொருளை(சிமெண்ட்) உபயோகித்திருப்பார்கள் என ஆராய்ச்சி செய்யலாம் என நானும், நண்பன் பிரான்சிசும் முடிவு செய்தோம். அப்போதெல்லாம் சுலபமாக ஒரு செய்தியைத் தேடுவதற்கு இப்போதிருப்பது போல இணையம் என்று ஒன்று இருக்கவே இல்லை. அதனால் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்த போதிலும், எங்கிருந்து தொடங்க வேண்டும், எந்தப் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என அறிவதில் சில சிக்கல்கள் இருந்தன. முதற்கட்ட நடவடிக்கையாக எட்டாம் வகுப்பு(அது தான் என நினைக்கிறேன்) தமிழ்த் துணைப்பாட நூலைத் தேடினோம். அதிலிருந்து அக்கோட்டையைக் களிமண்ணும், சுண்ணாம்பும், பதநீரும் கலந்து கட்டினர் என்றுத் தெரிந்து கொண்டோம்.

அதன் பின்னர் ஜேம்ஸ் வெல்சு எனும் ஆங்கிலத் தளபதி, இந்தியாவில் தன்னுடைய போர் நினைவுகளை ஒரு தொகுப்பாக எழுதி வைத்திருந்ததையும், அப்போர்க் குறிப்புகள் பல வரலாற்று ஆசிரியர்களுக்குச் சான்றாகப் பயன்படுவதையும் அறிந்து கொண்டோம். அதிலும் நாங்கள் தேடிக் கொண்டிருக்கும் "பழங்கால சிமெண்ட்" பற்றிய குறிப்பு இருக்குமா எனத் தெரியாது. இருந்தபோதிலும் வெல்ஷ் எழுதிய "போர் நினைவுகள்"(Military Reminiscences) என்ற புத்தகத்தைத் தேடினோம். ஆனால் அப்புத்தகம், அண்ணாப் பல்கலைக்கழக நூலகம், சென்னைப் பல்கலைக்கழக நூலகம் என்று எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அது கிடைக்காத பட்சத்தில் வேறு வரலாற்று புத்தகங்களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் தேடிப் படித்தோம். அப்போது ஒரு விஷயம் நன்றாகப் புரிந்தது. பள்ளிக்கூடத்தில் வரலாற்றுப் புத்தகத்தில் ஒன்றிரண்டு பக்கங்களைப் படித்து ஒரு வரலாற்று நிகழ்வினை அறிந்து கொள்வதும், அதனை மனப்பாடம் செய்து மதிப்பெண் பெறுவதும் சுலபமானது. அதே வரலாற்று நிகழ்வினை வெவ்வேறு வரலாற்றுச் சான்றுகளில் இருந்து தேடிக் கண்டுபிடித்து அதிலிருந்து நாமாகவே ஒரு முடிவுக்கு வருவது என்பது மிக மிகக் கடினமானது. சிமெண்டினைப் பற்றி நாங்கள் வரலாற்று நூல்களில் தேடும் போது கட்டபொம்மனைப் பற்றியும், ஊமைத்துரையைப் பற்றியும் கூட நிறைய படித்தோம். ஆனால் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இவர்களைப் பற்றியும் இவர்களுடைய விடுதலைப் போரினைப் பற்றியும் ஒவ்வொரு விதமான கண்ணோட்டம் இருந்தது. வரலாறு என்பது சுலபத்தில் திரிக்கப் படக்கூடிய தன்மை பெற்றது எனவும் அறிந்தோம்.

தேவநேயப் பாவாணர் நூலகத்தில் இருந்து கிடைத்தத் தமிழில் எழுதப்பட்ட வரலாற்றுப் புத்தகங்களில் ஒன்றில் பாளையங்கோட்டையில் இருந்து தப்பி வந்து ஊமைத்துரை கட்டிய அக்கோட்டை களிமண்ணும், பதநீர் பாகும், கரும்புச் சக்கையையும் கலந்து செய்யப்பட்ட "மாயக் கோட்டை" என்று ஒரு வரியில் எழுதியிருந்தது. அதற்கு மேல் கோட்டையைப் பற்றிய நாங்கள் தேடிய விரிவான குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அப்புத்தகங்களின் பெயர்களும், அதை எழுதிய வரலாற்று ஆசிரியர்களின் பெயர்களும் எதுவும் தற்போது நினைவில் இல்லை. (ம.பொ.சி அவர்கள் கட்டபொம்மன் வரலாறு குறித்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார் என்பதையும் சமீபகாலங்களில் தான் தெரிந்து கொண்டேன். அதை அப்போது நான் படித்திருக்கவில்லை). அச்சமயத்தில் தான், சென்னையில் உள்ள அரசு கன்னிமரா பொது நூலகத்தில் பழமையான நூல்கள் இருக்கும் என்றும் அங்குச் சென்று தேடலாம் என்றும் யாரோ சொன்னார்கள். அங்கு ஜேம்ஸ் வெல்சு எழுதிய "போர் நினைவுகள்" போன்ற புத்தகங்களைக் குறிப்பெடுப்பதற்காக பொதுமக்களுக்கும் தருகின்றனர். இதற்கெனவே அங்கு ஒரு தனிப் பகுதி உள்ளது. புத்தகத்தின் பெயரையும், நமது விவரங்களையும் சொல்லிப் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு அங்கேயே குறிப்பெடுத்துக் கொண்டு திருப்பித் தந்துவிட வேண்டும். 1830 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட ஒரு புத்தகத்தை கையில் வாங்கி நான் படித்தது அதுவே முதல்முறை. அதை நினைக்கும் போது மெய்சிலிர்த்தது.

அதை படித்த போது தெரிந்து கொண்டது - கட்டபொம்மனின் மறைவிற்குப் பின்னர், பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர்களால் பெரிதாகத் தொல்லை ஏதும் வரப் போவதில்லை என்ற நினைப்பிலேயே ஆங்கிலேயர் இருந்தனர். பாளை சிறையில் இருந்து தப்பிய ஊமைத்துரை மற்றும் ஏனைய வீரர்களையும் பின் தொடர்ந்து சென்ற கும்பினிப் படை, பாஞ்சாலங்குறிச்சி மண்ணில் ஒரு புல் பூண்டு கூட வளரக் கூடாது என்று எண்ணி ஆமணக்கு விதைகளை விதைத்து அழித்திருந்த கட்டபொம்மனின் கோட்டை ஆறே ஆறு நாட்களில் மாயமாய் எழுந்து நின்றது கண்டு வியந்தனர். ஆயினும் அதைப் பெரிதாக எண்ணாமல் போர்புரியத் தொடங்கியவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கும்பினிப் படையின்(இது 'கம்பெனி படை' என்பதின் திரிபாக இருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன்) ஒவ்வொரு வீரனும் கோட்டையை நெருங்கிய மாத்திரத்திலேயே வேலாலும், வாளாலும் வெட்டித் தூக்கி எறியப் பட்டனர். ஆனால் தங்கள் படைவீரர்களைக் கொன்று குவிக்கும் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் கோட்டையின் எப்பகுதியில் ஒளிந்து தாக்குகிறார்கள் எனக் கண்டுபிடிக்கமுடியவில்லை. பாளையங்கோட்டையிலிருந்து பின் தொடர்ந்து வந்து தாக்குதல் மேற்கொண்ட சிறு படையினால் கோட்டையை வீழ்த்த முடியாது என அறிந்த வெள்ளையர்கள் சென்னையிலிருந்தும், திருச்சியிலிருந்தும் கூடுதல் படைகளையும், தளவாடங்களையும் தருவித்தனர்...

(நாளை நிறைவு பெறும்)

37 comments:

இலவசக்கொத்தனார் said...

ம்.

கதை கேட்கும் போது உம் கொட்டினாதான் சொல்லுபவர்க்கு உற்சாகமா இருக்குமாமே. கொட்டியாச்சி. மேல சொல்லுங்க.

G.Ragavan said...

தூத்துக்குடியில இருந்து கோயில்பட்டி, மதுரை, ராமேசுரம், எங்குட்டுப் போனாலும் குறுக்குச்சால வழியாத்தான் போகனும். அங்கதான் பாஞ்சாலங்குறிச்சிக்குப் போற நுழைவுவாயில் இருக்கு. கருணாநிதி முதல்வரா இருந்தப்போ கெட்டுனது. அங்க கூட்டீட்டுப் போகச்சொல்லி வீட்டுல பலவாட்டிக் கேட்டிருக்கேன். ஆனா இதுவரைக்கும் கூட்டீட்டுப் போகலை.

அடுத்து என்ன சொல்லப்போறீங்கன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன்.

G.Ragavan said...

தூத்துக்குடியில இருந்து கோயில்பட்டி, மதுரை, ராமேசுரம், எங்குட்டுப் போனாலும் குறுக்குச்சால வழியாத்தான் போகனும். அங்கதான் பாஞ்சாலங்குறிச்சிக்குப் போற நுழைவுவாயில் இருக்கு. கருணாநிதி முதல்வரா இருந்தப்போ கெட்டுனது. அங்க கூட்டீட்டுப் போகச்சொல்லி வீட்டுல பலவாட்டிக் கேட்டிருக்கேன். ஆனா இதுவரைக்கும் கூட்டீட்டுப் போகலை.

அடுத்து என்ன சொல்லப்போறீங்கன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன்.

Anonymous said...

உங்கள் தேடல் சுவாரசியமாக உள்ளது. நல்ல முயற்சி. அதன் விளைவாக நாங்களும் வரலாற்று சிறப்பு மிக்க செய்திகளை தெரிந்து கொண்டோம்.

அன்புடன்
இராசகோபால்

Anonymous said...

நல்ல கட்டுரை. சின்ன வயசிலே வரலாறு தான் ரொம்ப கடுப்படிக்கிற பாடம் - ஆனால் எங்கள் பள்ளியில் ஒரு ட்ராயிங் மாஸ்டர் இருந்தாரு - ஆனா அவருக்கு பிடிச்ச சப்ஜெக்ட் இது. வகுப்புக்கு வந்தா ஹிஸ்டரி புக் எடுத்து பக்கத்தில வச்சுகிட்டு கதை சொல்ல ஆரம்பிச்சுடுவாரு. அவர் கிட்டத்தட்ட இந்தகால பட இயக்குனர்கள் சொல்ற மாதிரி ஏகப்பட்ட பில்டப் கொடுத்து, கதாபாத்திரங்களை நம் நினைவுகளில் ஒரு படம் போல ஓட வைப்பார். வந்தார்கள், வென்றார்கள் மதன் எல்லாம் அவருக்கு பின்னாடிதான்.

இந்த மாதிரி ஒரு கேள்வியை எடுத்துகிட்டு அதை ஆராய்ஞ்சு பாக்கிறதே ஒரு பிரமிப்பான விஷயம் தான். கமெண்ட் வரலைன்னு நிறுத்திடாத. அப்புறம் என்ன ஆச்சுன்னு சொல்லு.

Indian said...

திரு. மோகன்ராஜ் அவர்களுக்கு,

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பற்றி படித்தபோதெல்லாம் இப்படி ஒரு தொழில்நுட்பம் இருந்திருந்தால் தமிழன் ஏன் இன்னும் மேலைநாட்டு கட்டட வழிமுறையை பின்பற்றுகிறான். ஏன் இந்த நுட்பத்தைப் பற்றி யாரும் ஆராயவில்லை என்று பலமுறை எண்ணியதுண்டு. சிவில் என்ஜினியரான தாங்கள் இதில் ஆய்வு செய்தது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும் தொடர்ந்து சொல்லுங்கள். கும்பினி என்பது கம்பெனியின் திரிபாகத்த்தான் இருக்கவேண்டும். ஏனென்றால் பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியப் பகுதிகளை ஆண்டது கிழக்கிந்தியக் கம்பெனிதான், ஆங்கிலேய அரசு அல்ல!

Indian said...

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கல்லணையை எதனைக் கொண்டு கட்டினார்கள் என அறிய ஆவல்.

குசும்பன் said...

மேலே சொல்லுங்க!!! ம்ம்ம்ம்

(இலவச கொத்தனார் சொல்வது போல்) உம்ம்

வல்லிசிம்ஹன் said...

இத்தனை சுவாரசியமா எங்களுக்கு வரலாற்று ஆசிரியர் இல்லாமல் போனாங்களே.

சீக்கிரமே அப்புறம் என்ன நடந்ததுனு சொல்லுங்க.

தெளிவா எழுதறீங்க கைப்ஸ்.
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

சுவையா இருக்கு கைப்ஸ்.
சஸ்பென்சை முடிச்சுட்டுக் கதையை எழுதுங்க.
நன்றி.

Sanjai Gandhi said...

பள்ளியில் படித்த போது போர் அடித்தது. இப்போ ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு தல.

உண்மைத்தமிழன் said...

கைப்புள்ள,

'நட்சத்திரம்' போஸ்ட் கொடுத்தா மட்டும்தான் இப்படியெல்லாம் 'ஒழுங்கா' எழுதுவீங்களா..?

கொட்டுங்க சாமி..

என்னை மாதிரி படிச்சு தெரிஞ்சுக்க முடியாதவங்க.. வாசிச்சாவது தெரிஞ்சுக்குவோம்ல..

பாராட்டுக்கள்..

மங்கை said...

முதல் முறையா ஹ்ஸ்ட்ரி கூட எனக்கு ஸ்வாரஸ்யமா இருக்கு... நானும் 'ம்' கொட்டிட்டேன்..:-))

திவாண்ணா said...

ம்!
அப்புறம்?

எங்க பழைய வீட்டை இடிக்க மக்கள் பட்ட அவஸ்தையை அப்புறமா பின்னூட்டம் இடுகிறேன்

கப்பி | Kappi said...

அப்பாலிக்கா என்னாச்சு தல?

வவ்வால் said...

கைப்புள்ள,

பேராசிரியர் இளங்கோவன் எழுதிய introduction to engeering , மஞ்சகலர் அட்டைல A4 size ல இருக்க அந்த புத்தகம் படித்தா இப்படிலாம் உங்களுக்கு சிந்தனை ஓடியது , நீங்க அப்போ ரொம்ப பழம் போல இருக்கே :-))

வெல்லம் ,பனம் சாறுலாம் சும்மாங்க, அது வெறும் செம்மண் கோட்டை என்பது தான் உண்மை! அதில் மேசனரி வொர்க் எதுவும் இல்லை. அதனால் தான் அக்கோட்டையை தரைமட்டம் ஆக்கி அடையாளம் இல்லாமல் செய்துட்டாங்க.வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் கூட ஒரு வசனம் வரும் இந்த மண்க்கோட்டையை வைத்தா மனக்கோட்டை என!

நீங்கள் சொல்வது போல கும்பினி என்பது கம்பெனி என்பதன் திரிபே, 1857 விக்டோரியா பிரகடனம் வரைக்கும் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியே! (இதிலும் இங்கிலீஷ் கிழக்கிந்தியா, பிரென்ச், டச் எல்லாம் உண்டு)அதே போல பரங்கியர்கள் என்பது அவர்கள் வைத்திருந்த பீரங்கியை வைத்தே, சிலர் அவர்கள் தலையில் வைத்திருந்த தொப்பி வடிவம் என்று சொல்கிறார்கள்!

கைப்புள்ள said...

//ம்.

கதை கேட்கும் போது உம் கொட்டினாதான் சொல்லுபவர்க்கு உற்சாகமா இருக்குமாமே. கொட்டியாச்சி. மேல சொல்லுங்க//

இந்த ஒத்தை எழுத்து தான் சாமி நேத்தெல்லாம் ஒக்காந்து ரெண்டாம் பகுதி எழுத ஊக்கமா இருந்துச்சு...ரொம்ப நன்றி.
:))

கைப்புள்ள said...

//அடுத்து என்ன சொல்லப்போறீங்கன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன்//

வாங்க ஜி.ரா,
பல விஷயங்கள் தங்களுக்குத் தெரிஞ்சிருந்தாலும், இன்னமும் மற்றவர்களை ஊக்குவிக்கிறீர்களே...தங்களது அந்த பெருந்தன்மைக்குத் தலை வணங்குகிறேன்.

இப்பதிவினை எழுதும் போது 2005இல் முத்தமிழ் மன்றத்தில் தாங்களும் சிறுவர் கதை பரஞ்சோதியும் பங்குபெற்ற இத்திரியைக் காண நேரிட்டது.

http://www.muthamilmantram.com/viewtopic.php?f=176&t=11332

பல புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி.

கைப்புள்ள said...

//உங்கள் தேடல் சுவாரசியமாக உள்ளது. நல்ல முயற்சி. அதன் விளைவாக நாங்களும் வரலாற்று சிறப்பு மிக்க செய்திகளை தெரிந்து கொண்டோம்.

அன்புடன்
இராசகோபால்//

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி இராசகோபால் அவர்களே.

கைப்புள்ள said...

//இந்தகால பட இயக்குனர்கள் சொல்ற மாதிரி ஏகப்பட்ட பில்டப் கொடுத்து, கதாபாத்திரங்களை நம் நினைவுகளில் ஒரு படம் போல ஓட வைப்பார். வந்தார்கள், வென்றார்கள் மதன் எல்லாம் அவருக்கு பின்னாடிதான்//

என் பள்ளிக்கூட நண்பன் கார்த்திகேயனும் இந்த ரகத்தைச் சேர்ந்தவன் தான். கதை சொல்வதில் எக்ஸ்பெர்ட்.

//இந்த மாதிரி ஒரு கேள்வியை எடுத்துகிட்டு அதை ஆராய்ஞ்சு பாக்கிறதே ஒரு பிரமிப்பான விஷயம் தான். கமெண்ட் வரலைன்னு நிறுத்திடாத. அப்புறம் என்ன ஆச்சுன்னு சொல்லு//

ரொம்ப நன்றிப்பா.
:)

கைப்புள்ள said...

//wowwwwwwwwww!//

நன்றி டெல்பின் மேடம்.

கைப்புள்ள said...

//பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பற்றி படித்தபோதெல்லாம் இப்படி ஒரு தொழில்நுட்பம் இருந்திருந்தால் தமிழன் ஏன் இன்னும் மேலைநாட்டு கட்டட வழிமுறையை பின்பற்றுகிறான். ஏன் இந்த நுட்பத்தைப் பற்றி யாரும் ஆராயவில்லை என்று பலமுறை எண்ணியதுண்டு. சிவில் என்ஜினியரான தாங்கள் இதில் ஆய்வு செய்தது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும் தொடர்ந்து சொல்லுங்கள். கும்பினி என்பது கம்பெனியின் திரிபாகத்த்தான் இருக்கவேண்டும். ஏனென்றால் பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியப் பகுதிகளை ஆண்டது கிழக்கிந்தியக் கம்பெனிதான், ஆங்கிலேய அரசு அல்ல!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இந்தியன் அவர்களே.

கைப்புள்ள said...

//ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கல்லணையை எதனைக் கொண்டு கட்டினார்கள் என அறிய ஆவல்//

பாடத்தில் கல்லணை குறித்து படித்திருந்த போதிலும், கல்லணையை எப்படி கட்டினார்கள் என ஆராயாமல், பாஞ்சாலங்குறிச்சி குறித்து ஆராய்ந்தது எதனால் என்று இப்போது எனக்கு புரிய மறுக்கிறது. ஆனாலும் கல்லணை குறித்து ஆய்வு செய்திருந்தாலும் அது ஒரு சிறப்பான ஆய்வாகவே இருந்திருக்கும் என நம்புகிறேன்...ஏனெனில் காலத்தைக் கடந்து நிற்கும் ஒரு படைப்பு அது.

நீங்கள் சொன்ன பின்னால் கல்லணை குறித்து கூகிளில் தேடினேன். என்ன ஆச்சரியம்? நான் தேடியது அப்படியே வந்து விழுந்தது - "பழந்தமிழர்களின் காலடிச்சுவடுகள்" என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. இவ்வாறு சுலபமாகச் சான்று கிடைப்பது சற்று அதிர்ஷ்டம் தான். இதோ அதன் உரல்

http://www.yarl.com/forum/index.php?showtopic=3263

"மணல், கருப்பட்டி, வெள்ளைச் சுண்ணாம்பு, பதநீர் உள்ளிட்டவற்றை கலந்து அமைக்கப்படவுள்ள இச்சுவர் கான்கிரீட் சுவரை விட மிகவும் வலுவானதாகவும், உறுதியானதாகவும் அமையும்" - எனத் தெரிவிக்கிறது இக்கட்டுரை. ஆக கிட்டத்தட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைக் கட்ட பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களைக் கொண்டே கல்லணையையும் கட்டியிருக்கிறார்கள். ஆயினும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் கட்டுமானத்தில் இல்லாத எதோ ஒரு நுட்பம் கல்லணையில் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் பீரங்கி குண்டுகளின் சக்தியைக் காட்டிலும் ஆயிரம் அடி உயர அணையில் தேங்கி நிற்கும் சக்தியானது அதிகமானது.

புதியதொரு கேள்வியையும் அதற்கு பதில் தேடும் எண்ணத்தையும் விதைத்தத் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

கைப்புள்ள said...

//(இலவச கொத்தனார் சொல்வது போல்) உம்ம்//

ஒரு வார்த்தை கேட்க ஒரு பதிவாக் காத்திருந்தேன் :))

நன்றி குசும்பன்.

கைப்புள்ள said...

//இத்தனை சுவாரசியமா எங்களுக்கு வரலாற்று ஆசிரியர் இல்லாமல் போனாங்களே.

சீக்கிரமே அப்புறம் என்ன நடந்ததுனு சொல்லுங்க.

தெளிவா எழுதறீங்க கைப்ஸ்.
நன்றி//

வாங்க வல்லியம்மா,
ஊக்கத்துக்கு நன்றி. அடுத்த பதிவையும் போட்டாச்சு.

கைப்புள்ள said...

//பள்ளியில் படித்த போது போர் அடித்தது. இப்போ ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு தல//

வாங்க சஞ்ஜய்,
மிக்க நன்றி. நீங்க சொன்ன குழிபணியார சட்டி ஐடியாவை உபயோகப்படுத்தி ஃபோட்டோ எல்லாம் எடுத்து வைச்சேன். ஆனா ஸ்டார் பதிவுகள்ல பிசியா இருந்தா நேரமா பாத்து "வட்டத்துக்கு"ப் படம் குடுக்கற தேதி முடிஞ்சிடுச்சுன்னு சொல்லிட்டாங்க...என்னா பண்ணுவேன்...நான் என்னா பண்ணுவேன்?
:(

கைப்புள்ள said...

//'நட்சத்திரம்' போஸ்ட் கொடுத்தா மட்டும்தான் இப்படியெல்லாம் 'ஒழுங்கா' எழுதுவீங்களா..?//

வாங்க உண்மைத் தமிழன்,
கககபோ. நட்சத்திர வாரத்துல தமிழ்மணத்துல டாப்புலேயே நம்ம பதிவுங்க எல்லாம் நிக்குதா? பாக்கறவங்க துப்பிட்டுப் போயிடுவாங்கங்கிற பயத்துல கொஞ்சம் மெனக்கெட்டு எழுதிருக்கேன் போலிருக்கு :)))

தங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி நண்பரே.

கைப்புள்ள said...

//முதல் முறையா ஹ்ஸ்ட்ரி கூட எனக்கு ஸ்வாரஸ்யமா இருக்கு... நானும் 'ம்' கொட்டிட்டேன்..:-))//

மிக்க நன்றி மங்கை மேடம்.
:)

கைப்புள்ள said...

//ம்!
அப்புறம்?

எங்க பழைய வீட்டை இடிக்க மக்கள் பட்ட அவஸ்தையை அப்புறமா பின்னூட்டம் இடுகிறேன்//

வாங்க திவா,
என்ன பிர்லா சிமெண்ட் கொண்டு கட்டிட்டாங்களா? அந்த விளம்பரம் நினைவு இருக்கில்ல?
:)

கைப்புள்ள said...

//அப்பாலிக்கா என்னாச்சு தல?//

:))) பாட்டி வடை சுட்ட கதை போல கேக்குறியேப்பா? அதையும் அடுத்தப் பதிவில் சொல்லியாச்சு..

கைப்புள்ள said...

//
பேராசிரியர் இளங்கோவன் எழுதிய introduction to engeering , மஞ்சகலர் அட்டைல A4 size ல இருக்க அந்த புத்தகம் படித்தா இப்படிலாம் உங்களுக்கு சிந்தனை ஓடியது , நீங்க அப்போ ரொம்ப பழம் போல இருக்கே :-))//

வாங்க வவ்வால்,
கலக்கறீங்களே. நீங்களும் அண்ணா பல்கலைக்கழக மாணவரா? எந்த பிராஞ்ச்? எந்த பேட்ச்? முனைவர் அ.இளங்கோவன் எனக்குப் பின்னாளில் "Strength of Materials" எனும் தாளின் பேராசிரியராக இருந்தார். அப்போ மட்டும் இல்லீங்க...இப்பவும் அப்படித் தான் :)))

//வெல்லம் ,பனம் சாறுலாம் சும்மாங்க, அது வெறும் செம்மண் கோட்டை என்பது தான் உண்மை! அதில் மேசனரி வொர்க் எதுவும் இல்லை. அதனால் தான் அக்கோட்டையை தரைமட்டம் ஆக்கி அடையாளம் இல்லாமல் செய்துட்டாங்க.வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் கூட ஒரு வசனம் வரும் இந்த மண்க்கோட்டையை வைத்தா மனக்கோட்டை என!//

அக்கோட்டையில் மேசன்ரி வர்க் இல்லையென்பது சரி தான். ஆனால் களிமண்ணையும் பதநீரையும் கலந்து கட்டியது எனப் படித்திருக்கிறேன். துரதிருஷ்டவசமாகச் சான்றுகள் எதையும் இப்போது என்னால் கொடுக்க இயலவில்லை.

//நீங்கள் சொல்வது போல கும்பினி என்பது கம்பெனி என்பதன் திரிபே, 1857 விக்டோரியா பிரகடனம் வரைக்கும் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியே! (இதிலும் இங்கிலீஷ் கிழக்கிந்தியா, பிரென்ச், டச் எல்லாம் உண்டு)அதே போல பரங்கியர்கள் என்பது அவர்கள் வைத்திருந்த பீரங்கியை வைத்தே, சிலர் அவர்கள் தலையில் வைத்திருந்த தொப்பி வடிவம் என்று சொல்கிறார்கள்!//

பரங்கியர் என்பது வடநாட்டில் பயன்படுத்தப்பட்ட "Farangi" எனும் பெர்சியச் சொல்லின் திரிபு என நான் கருதுகிறேன். இச்சொல்லுக்கு "ஐரோப்பிய மூலத்தினைக் கொண்டவன்" எனும் பொருள். கேலிச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. Farangi தான் பரங்கியன் ஆனது என்பதற்கும் சான்று ஒன்றும் இல்லை. ஆனால் அது லாஜிக்கலாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

கைப்புள்ள said...

இந்த விக்கிபீடியா சுட்டியையும் பாருங்கள்.

http://en.wikipedia.org/wiki/Firang

நிஜமா நல்லவன் said...

தமிழர்கள் தன்னிகரற்றவர்கள்.

கைப்புள்ள said...

//தமிழர்கள் தன்னிகரற்றவர்கள்//

வாங்க நல்லவரே,
கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க.
:)

கதிர் said...

பரங்கிப்பழமும் வெள்ளைக்காரன் தலையும் ஒரே நிறத்திலும் வடிவிலும் இருக்கறதுனால அவனை பரங்கித்தலையர்கள் என்றும் பரங்கியர்கள் என்றும் அழைப்போம் என்று எங்க தாத்தா வையாபுரி சொல்ல கேட்டிருக்கிறேன்.

தல,
ஏன் வெள்ளைக்காரனுங்க பரங்கியர்கள்னு சொல்றாங்கன்னு எங்க தாத்தாகிட்ட ஒருநா கேட்டு வெச்சதுக்கு இப்படிதான் பதில் சொல்லிச்சு பெருசு, ஒருவேளை என் வாயை அடைக்கறதுக்குதான் பொய் சொல்லிருக்குமோ...

ரொம்ப நாளைக்கு அப்புறம் நிதானமா வாசிச்ச பதிவு இது ஒண்ணுதான்.

இதுவே வேறு எந்த நாட்டுல நடந்திருந்தாலும் அத படமா எடுத்து ஏகப்பட்ட வீர தீர அனிமேஷ இடைச்செருகல்கள் போட்டு ஆஸ்கார அள்ளிருப்பானுங்க. நம்ம நாட்டுலதான் புலிகேசியும் புல்லரசியுமா எடுத்துகிட்டு இருக்கானுங்க.

ஏன் இதை சொல்றேன்னா பதிவை படிக்கும்போது காட்சிகளா கண்முண்ணாடி பாக்குறா மாதிரி இருந்தது.

தல வேணும்னா நீங்களே ஹீரோவா நடிக்களேன்.

கைப்புள்ள said...

//ஏன் வெள்ளைக்காரனுங்க பரங்கியர்கள்னு சொல்றாங்கன்னு எங்க தாத்தாகிட்ட ஒருநா கேட்டு வெச்சதுக்கு இப்படிதான் பதில் சொல்லிச்சு பெருசு, ஒருவேளை என் வாயை அடைக்கறதுக்குதான் பொய் சொல்லிருக்குமோ...//

நான் கூட பரங்கிக்காய்க்கும் வெள்ளையர்களுக்கும் எதோ சம்மந்தம் இருக்குறதுனால தான் பரங்கியர்னு சொல்றாங்கன்னு நெனச்சிருக்கேன். சிதம்பரம் பக்கத்துல பரங்கிப்பேட்டைன்னு ஒரு ஊர் கூட இருக்கு(ஆங்கிலத்துல அந்த ஊருக்குப் பேரு Porto Novo). இந்தியில வெள்ளைக்காரங்களை "ஃப்ரங்க்"னு கூப்பிடறதைப் பாத்துருக்கேன். அதனால அந்த சொல்லிலிருந்து பரங்கியர்னு வந்திருக்குமோன்னு ஒரு சிறிய எண்ணம். மத்தபடி தெரிஞ்சே யாரும் பரங்கிப்பழத்துக்கும் வெள்ளைக்காரர்களுக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்லிருக்க மாட்டாங்கன்னு தான் நெனக்கிறேன். அதோட தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் எப்பவும் சொற்கள் விஷயத்துல ஒரு கொடுக்கல்-வாங்கல் இருந்துக்கிட்டுத் தான் இருக்கு.

உதாரணமா அனகொண்டா பாம்போட பேருக்கு தமிழ் மூலம் இருக்குன்னு படிச்சிருக்கேன். ஆனை + கொல்ற அப்படிங்கிறது தான் அனகொண்டா ஆனதாம். அதே மாதிரி ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் கிடைக்கற மல்லிகட்டானி சூப்புக்கு மூலம் மிளகு + தண்ணியாம்.
http://kaipullai.blogspot.com/2006/01/blog-post_27.html

இது எப்படி இருக்கு?

அது போல குசினி அறைன்னு சொல்றாங்களே கேள்வி பட்டிருக்கியா? இன்னும் கூட பாண்டிச்சேரி, கடலூர் பக்கம் எல்லாம் குசினின்னு சொல்றாங்க. அந்த சொல்லுக்கு மூலம் பிரெஞ்சு சொல்லான 'Cuisine'(க்விசீன்).

//ஏன் இதை சொல்றேன்னா பதிவை படிக்கும்போது காட்சிகளா கண்முண்ணாடி பாக்குறா மாதிரி இருந்தது.

தல வேணும்னா நீங்களே ஹீரோவா நடிக்களேன்//

தாராளமா. தம்பி தயாரிச்சா நான் நடிக்கிறேன்.
:)

Indian said...

கரிசல் பகுதியில் மண்சுவர் கட்டும்போது கம்மங்கதிரின் சக்கையை மண்ணில் போட்டுப் பிசைந்து கட்டுவர். இதனால் வீடு உறுதியாக இருக்கும் என்பது நம்பிக்கை. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை கம்மஞ் சக்கை இட்டுக் கட்டுப்பட்டதால் கிழக்கிந்தியக் கம்பெனியின் பீரங்கிக் குண்டுகளுக்கு உடனடியாக விழவில்லை என்னும் கருத்து மக்களிடையே உண்டு.