Saturday, December 22, 2007

'தலை'நகரம் - 3

சென்ற பதிவில் பயன்பாட்டு முறைகளினால் தபால்தலைகளின் வகைகளைப் பார்த்தோம். அவை Definitive மற்றும் Commemorative என இரு வகைப்படும். இதை தவிர தபால்தலை சேகரிப்பாளர்கள்(Stamp Collectors அல்லது Philatelists)தபால்தலைகளை இரு வகைபடுத்துகின்றனர். அவையாவன -
1. பயன்படுத்தப்பட்ட தபால்தலைகள்(Used Stamps)- அஞ்சல் சேவையில் பயன்படுத்தப்பட்ட பின் தபால்தலை சேகரிப்பாளர்களால் சேகரிக்கப்படும் தபால்தலைகளை 'Used Stamps' என்கின்றனர். இவ்வகை தபால்தலைகளில் அனுப்பப்பட்ட அஞ்சல் அலுவலகத்தின் அலுவலக முத்திரை இருக்கும். அத்துடன் பயன்படுத்தப்பட்டமையால் தபால்தலையின் பின்புறம் பசையின் அடையாளம் இருக்கலாம்.

2. பயன்படுத்தப்படாத புதிய தபால்தலைகள்(Unused or Mint Stamps)- அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டதும் உபயோகப் படுத்தப்படாமல் சேகரிக்கப்படும் தபால்தலைகளை 'Mint Stamps'என்கின்றனர். தபால்தலையின் மதிப்பைப் பொறுத்தவரை பயன்படுத்தப்படாத தபால்தலைகளுக்கு சேகரிப்பாளர்களிடம் அதிக மதிப்புள்ளது. எனினும் பிரபலங்கள் பயன்படுத்திய தபால்தலைகளுக்கு இன்றளவும் பெருமதிப்புள்ளது. உதாரணமாக மார்ட்டின் லூதர் கிங்கோ, மகாத்மா காந்தியோ எழுதிய பழைய கடிதத்தில் உள்ள பயன்படுத்தப்பட்ட தபால்தலைக்கோ அல்லது அஞ்சல் உறைக்கோ அதிக மதிப்புள்ளது.

கீழே இருப்பது சவுதி அரேபிய நாட்டு தபால்துறையால் மெக்காவில் உள்ள 'காபா'வைச் ((Kaaba)சித்தரிக்கும் தபால் தலை. புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் ஹாஜிக்கள் காபாவை ஏழு முறை சுற்றி வருவார்கள் எனத் தெரிந்து கொண்டேன். தபால்தலையைப் பார்த்த மாத்திரத்திலேயே இது ஒரு பயன்படுத்தப்பட்ட அஞ்சல் வில்லை எனப் புரிந்திருக்கும்.


ஃபின்லாந்து நாட்டின் நூல்கண்டு அஞ்சல் வில்லை.

தபால்தலைகளில் உள்ள தகவல்களைக் கவனமாகக் கவனிக்கத் தொடங்கி விட்டால் அதை விட சிறந்த பொழுதுபோக்கு வேறில்லை. தபால்தலைகள் சொல்லும் கதைகளும் ஏராளம். பல சமயங்களில் இவை ஒரு அங்குல அளவுள்ள அகராதிகளாகவும் விளங்கும். கதைகளை முழுமையாகச் சொல்ல முடியாவிட்டாலும் ஒரு விஷயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை இவை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி.

உதாரணமாக உருகுவே நாட்டுத் தபால்துறையினரால் 1999ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்தபால்தலையைப் பாருங்கள்.

'Los Ultimos Charruas'என்றால் ஸ்பேனிஷ் மொழியில் 'கடைசி சருவாக்கள்' எனப் பொருள். என்னவென்று தெரிந்து கொள்ள நேற்று விகிபீடியாவையும் கூகிளையும் தேடியதில் தெரிந்த விஷயங்கள் ஆச்சரியப்பட வைத்தன. உருகுவே நாட்டில் 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களான ஸ்பேனிஷ் நாட்டவர்கள் கால்பதிப்பதற்கு முன் வாழ்ந்த பழங்குடியின மக்கள் தான் சருவாக்கள்(Charruas). வேட்டையாடுவதும் மீன்பிடிப்பதும் இவர்களுடைய தொழில்களாக இருந்து வந்துள்ளன. இவர்களை உருகுவே இந்தியர்கள்(Uruguay Indians) என்றும் அழைக்கின்றனர். அம்மண்ணின் மைந்தர்களான சருவாக்கள் ஸ்பேனியர்கள் கால்பதிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னர் பல்லாண்டு காலம் ஸ்பேனியர்களுடன் போர் நடந்து வந்துள்ளது. அப்பகுதியில் மற்ற பழங்குடியினருடன் இவர்களுக்கு இருந்த பகையின் காரணத்தாலும், ஐரோப்பியர்களுடன் இருந்த விரோதத்தின் காரணத்தாலும், இவ்வின மக்கள் பல்லாயிரக் கணக்கில் மடியத் தொடங்கினர். அத்துடன் ஸ்பேனியர்கள் இவர்களைத் தேடிக் கண்டுபிடித்தும் அழித்து வந்துள்ளனர். 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெறும் 18 சருவாக்கள் மட்டுமே இருந்துள்ளனர். கேள்விப்படவே மிக விநோதமாக இருந்தது. மிருகங்களில் அழிவுநிலையில் உள்ள ஜீவராசிகள்(endangered species) எனச் சொல்வோமே அது போல இருந்தது. மண்ணாசையின் காரணமாக ஒரு இனத்தையே இன்னொரு இனம் அழித்த செய்தி நம்புவதற்குச் சற்று கடினமாகவும் வருத்தமளிக்க வைப்பதாகவும் இருந்தது.

1833 ஆம் ஆண்டு மொத்தம் நான்கு சருவாக்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். அவர்களையும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக பிரான்சு நாட்டின் தலைநகரான பாரிசிற்கு நாடு கடத்தியுள்ளனர். அங்கும் மிருகங்களை விட கீழ்தரமாக இவர்களை நடத்தியுள்ளனர். பாரிசில் இவர்களைக் காட்சி பொருட்களைப் போல கண்ட ஒரு ஓவியர் வரைந்த படம் தான் தபால்தலையாக வெளியிடப்பட்டுள்ளது. இதே காட்சியைச் சித்தரிக்கும் வண்ணம் உருகுவே நாட்டு தலைநகரான மாண்டிவீடியோவில் இதே போன்றொரு சிலையையும் நிறுவியிருக்கிறார்கள். மேலும் விபரம் தேவையானால் இத்தபால்தலை வெளியீட்டை ஒட்டி உருகுவே தபால்துறையின் வலைதளத்தில் வெளியான விபரங்களைப் பாருங்கள்.
தபால்தலையின் ஒரு மூலையில் "J.Cowles Prichard" என எழுதப்பட்டிருப்பதை கண்டு கூகிளில் தேடியதும் இவர் ஒரு Anthropologist(மனிதனின் பரிணாம வளர்ச்சியைக் குறித்து ஆய்வு செய்பவர்) எனத் தெரிந்தது. இவர் எழுதியுள்ள 'The Natural History of Man' எனும் புத்தகத்திலும் இவ்வினத்தினரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தகத்தின் 450ஆவது பக்கத்தில் இதே தபால்தலையை ஓவியமாகக் காணலாம்.

Text not available

மேலே உள்ளது அப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி.

உருகுவே என்றதும் உங்களுக்கெல்லாம் ஞாபகத்துக்கு வருவது யார்? தமிழ்கூறு இவ்வலைப்பூவுலகில் ஒரே ஒருத்தர் தான். ஆமாங்க, சருவாக்களின் கதையை அறிந்து கொள்ள காரணமாக இருந்த இந்த Mint stamp - காஞ்சித் தமிழ்மகன், தென்னமேரிக்க தென்றல், டெக்ஸால் ஷகீலா...சே...டகீலா, வருங்கால உருகுவே ஜனாதிபதி, ஸ்பேனிஷ் மொழிஞாயிறு, ஜாவா பாவலர் கவிஞ்சர் கப்பிநிலவர் அவர்களுடைய உபயம் என்று நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே இருக்கும் சானல் தீவுகளின்(Channel Islands) ஒரு பகுதியான அல்டெர்னி(Alderney) நாட்டின் வண்ணமிகு தபால்தலைகளைப் பாருங்கள். அல்டெர்னியில் உள்ள காட்சிகளையும் அத்தீவின் பெருமைகளையும் தெரியப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள தபால்தலை தொடர்(series) கீழே. இத்தபால்தலைகளில் இருந்து தெரிந்து கொண்டது - இங்கிலாந்து ராணியின் குடியாட்சியின் கீழ் இன்னும் சில பகுதிகள் உள்ளன - அல்டெர்னி, குவெர்ன்சி, சார்க் ஆகிய தீவுகள் சானல் தீவுகளில் அடக்கம், இதை தவிர பசிபிக் பெருங்கடலிலும் பல தீவுகள் உள்ளன. கவுண்டி(County), ஷெரீஃப்(Sheriff) போன்று பெய்லிவிக்(Bailiwick) என்றொரு administrative division(தமிழ்ல என்னங்க?) இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.




கீழே இருப்பது எகிப்து நாட்டின் பயன்படுத்தப்பட்ட தபால்தலை ஒன்று. புராதனச் சின்னம் என்று தெரிகிறது, என்னவென்று தெரியவில்லை...அரபிக் மொழியில்(?) ஏதோ எழுதியிருக்கிறது. அதை படிக்கத் தெரிந்தவர்கள், தெரிந்து சொன்னால் நன்றியுடையவனாவேன்.

பசிபிக் பெருங்கடலில் உள்ள துவாலு எனும் தீவின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான ஃபட்டேலேவைச்(Fatele) சித்தரிக்கும் மிண்ட் தபால்தலை கீழே. வாடிகனுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகச்சிறிய நாடு என்பது துவாலு தீவின் சிறப்பு.

அடுத்த பதிவு : வாழ்த்தும் தலைகள்

4 comments:

இலவசக்கொத்தனார் said...

கைப்ஸ்,

உங்கள் நுண்ணரசியலைக் கண்டு பிரமித்து நிற்கிறேன்!! ;-)

கைப்புள்ள said...

//கைப்ஸ்,

உங்கள் நுண்ணரசியலைக் கண்டு பிரமித்து நிற்கிறேன்!! ;-)//

ஐயா சாமி! உங்களுக்கு மட்டும் எங்கிருந்து நுண்ணுயிர் நுண்ணரசியல் எல்லாம் கண்ணுல பட்டுச்சோ? போதும் இத்தோட நிறுத்துக்கிடுவோம்.
:(

கப்பி | Kappi said...

எத்தன? :))

கலக்கறீங்க தல!!

ச்சருவா பத்தின தகவல்களுக்கு நன்றி!

ஆனா ஸ்டாம்ப் வாங்கிட்டு வந்த பாவத்துக்கு எனக்கு இத்தினி ஆப்பு அடிச்சிருக்க வேணாம் ;))

VIKNESHWARAN ADAKKALAM said...

மூன்று பதிவுகளையும் படித்தேன்... சிறப்பாக இருந்தது. 13/14 வயதில் தபால் சேகரிக்கும் பழக்கம் இருந்தது... இப்போது இல்லை
வேண்டுமானல் அப்புத்தகத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்