Tuesday, December 05, 2006

பஸ் பயணங்களில் #3

பஸ் பயணங்களில் #2
பஸ் பயணங்களில் #1

ஓட்டுநர், நடத்துனர், பணிமனை இதப் பத்தியெல்லாம் போன பதிவுகள்ல ஏதேதோ உளறிக் கொட்டியாச்சு. இருந்தாலும் பயணிகளைப் பத்தியும், பயண அனுபவங்களைப் பத்தியும் மாட்லாடலன்னா எப்படி? பேருந்துல பயணிகளையும், அவங்க நடவடிக்கைகளையும் கவனிச்சாலே நகைச்சுவை துணுக்குகளுக்கும், கொஞ்சம் வளமான கற்பனை கொண்ட எழுத்தாளர்களா இருந்தா எத்தனையோ சிறுகதைகளுக்கும் கதை களமா அமையக் கூடியது(ஏற்கனவே அமைந்தது) பேருந்து பயணம். மக்களைக் கவனிக்கறதுலயும் அவங்க செய்கைகளை ரசிக்கறதுலயும்(ரசிக்கக் கூடியவற்றிற்கு மட்டும்) ஒரு ஈடுபாடு வந்துடுச்சின்னா ரொம்ப மகிழ்ச்சியான அனுபவங்களாக அமையக் கூடியது இப்பயணங்கள்.

வெளியூர் செல்லும் பேருந்துகளில் இந்த மாதிரி பயணங்களின் போது தான் எங்காவது மோட்டலில் நின்று விட்டு பஸ் கெளம்புவதற்கு முன்னால், வெளியில் நின்று தம்மடித்துக் கொண்டிருக்கும் கணவர் வராததால், 'கொஞ்சம் நிறுத்துங்க இன்னும் அவர் வரலை' என்று யாராவது ஒரு பெண் பரிதாபமாகக் கெஞ்சுவதும், 'பத்து நிமிசத்துல வந்துடுங்கன்னு அப்பவே சொன்னேனேமா' என ஓட்டுநர் அலுத்துக் கொள்வதும் சம்பந்தப்பட்ட 'தம்-புரானின்' குடும்பத்தவர்களின் இதயத் துடிப்பை அதிகப் படுத்துவதற்காக ''ட்ர்ன்ன்ன் ட்ர்ன்ன்ன்ன்' என்று வண்டியை சவுண்டு அதிகமாகக் கொடுக்கச் செய்வதும், தம் அடித்துக் கொண்டிருந்தவர் எங்கிருந்தோ அவசரமாக அவசரமாக ஓடி வந்து ஏறுவதும் 'இப்ப அந்த சிகரெட் குடிக்கலைன்னா தான் என்னா?'னு வூட்டுக்கார அம்மாவிடம் பாட்டு வாங்கி அசடு வழிவதையும் காண முடியும். 'திண்டிவனத்துலேருந்து மூனு மணி நேரத்துல வண்டி தாம்பரத்துக்குப் போய்டும்ங்க' என வாக்கு கொடுத்துவிட்டு சீட் நிரம்பவில்லை என்பதால் புளியமரத்திற்குப் புளியமரம் தனியார் பேருந்து நின்று நின்று செல்வதையும், மூனு மணி நேரத்தில் செங்கல்பட்டைக் கூடத் தாண்டாத பேருந்தின் ஓட்டுநரையும், நடத்துனரையும் ஏகவசனத்தில் கரித்துக் கொட்டும் பயணிகளையும் காணலாம். ப்ராட்வே பேருந்து நிலையத்தில் ஒவ்வொரு வெளியூர் பேருந்தாக ஏறி இஞ்சி மரப்பாவும், டைம்பாஸ் கடலையும், பெப்சி ஐசும் விற்கும் சிறுவர்களால் ஒரு நாளைக்கு எவ்வளவு ஊதியம் ஈட்டிவிட முடியும் எனப் பலமுறை யோசித்ததுண்டு. இரயில் கடப்பதற்காகப் பேருந்து நிற்கும் அந்த சில மணித் துளிகளில் 'யக்கா பிஞ்சு நுங்குக்கா...வாங்கிக்கக்கா' என எட்டடி உயரத்தில் இருக்கும் எட்டாத ஜன்னல் வழியே நுங்கைப் பேரம் பேசி விற்க முயலும் சிறுமியின் ஏழ்மையைக் கண்டும் காணாமல் போகச் செய்யும் இயந்திர வாழ்க்கையினையே நாம் வாழ்கிறோம் என உணர்த்துவதும் பேருந்து பயணம்.

சென்னை நகரத்துப் பேருந்துகளில் 'ஒரு நந்தனம் ஹவுசிங் போர்ட் குட்ணா' என நடத்துனரைக் கேட்கும் லுங்கி கட்டிய கறுத்த இளைஞனின் சமூக நிலையை எடை போட பொருளாதார மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரம் பேருந்தின் 'இறங்கும் வழி' வாயிலாக ஏறும் கல்லூரி மாணவி 'ஒரு டூ ஃபிப்டி பாஸ் பண்ணுங்க' என அருகில் நிற்பவரிடம் பத்து ரூபாயைத் தருவதையும், ஸ்டேஜ் மாறுவதை உணர்ந்த நடத்துனர் 'எங்கம்மா போவனும்?' எனக் கேட்கும் கேள்விக்கு 'ஏத்ராஜ்' என நுனிநாக்கில் பதிலளிப்பதையும், கேட்கும் வழிப்போக்கனான நமக்கு, நம் வீட்டருகில் மாடு கட்டி பால் கறக்கும் எத்துராஜும், பகலிலேயே சரக்கடித்து விட்டு மல்லாந்து கிடக்கும் ரிக்ஷாகார எத்திராஜும் தங்கள் பெயர்களையும் இவ்வளவு அழகாக உச்சரிக்க முடியும் என்பதை அறிந்தால் மகிழ்வார்கள் என்றே தோன்றும். கையில் கொண்டு வந்திருக்கும் ஒத்தை நோட்டையும் பெண்கள் பகுதி சன்னலின் வழியாகப் பேருந்தினுள் வீசிவிட்டு வேகமாக ஓடும் பேருந்தில் படுலாவகமாக வித்தவுட்டும் ஃபுட்போர்டும் அடிக்கும் இளைஞன், அவன் பெற்றோரின் எதிர்பார்ப்புகளை எவ்வாறு நிரைவேற்றுவானோ எனத் தோன்றியதுண்டு. 'படிகட்டுப் பயணம் பரலோகப் பயணம்' என அறிந்தும் படியில் நிற்பவனை 'தம்பி மேலே வா மேலே வா' என அன்பாக அழைத்துப் பலனில்லை என உணரும் நடத்துனர் "டேய் சொல்றேன்ல மேல வாடா! காலங்காத்தால நம்ம தாலி அறுக்குறதுக்குன்னே வர்றானுங்க"என்று கடுமையாகப் பேசும் போது அப்பணியும் எளிமையானதல்ல என்றும் விளங்கும். மாறுவேடத்தில் பெண் போலீஸ் இருக்கக் கூடும் என்ற பயத்தினால், மாநகரப் பேருந்துகளில் உண்டான ஒழுங்கு தானாகவே உண்டாகியிருக்கும் பட்சத்தில் 'ஈவ் டீசிங்' இந்நேரம் இல்லாமல் போயிருக்கும் என்பதும் திண்ணம்.

இதெல்லாம் ஒருபுறம் என்றால் பேருந்தில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கழித்த நினைவுகளை மறக்கவும் முடியுமோ? ராயப்பேட்டையிலிருந்த பள்ளிக்கூடத்திலிருந்து திருவல்லிக்கேணியில் இருந்த வீட்டுக்குச் செல்ல தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் முயற்சியாக 'இராதாகிருஷ்ணன் சாலை எல்லோ பேஜஸ்' நிறுத்தத்தில் நண்பன் மன்னாரிடம்(பட்டப்பெயர் தாங்க) 45B பஸ்சுக்குக் காத்து நிற்கும் நேரத்தில் நீதிக் கட்சியும், தி.க.வும் தோன்றிய விதத்தினைப் பற்றியும், அவனைக் கவர்ந்த ஹிட்லர் எனும் 'பெருந்தலைவனை பற்றியும் கேட்ட கதைகள் இன்னும் பசுமையான நினைவுகளாக நிறைந்துள்ளன. தவறுதலாக ஒரு முறை, காலியாக இருந்த 'மகளிரும் சிறுவரும்' பேருந்தில் (நான் சிறுவனாக இல்லாத போது) ஏறிவிட்டு சட்டென்று உணர்ந்து கீழிறங்கியதையும், அருகில் இருக்கும் சில்ரன்ஸ் கார்டன் பெண்கள் பள்ளியைப் பற்றி 'ஈரமான ரோஜாவே மோகினி படிச்ச ஸ்கூல்டா இது' என நண்பனிடம் பகிர்ந்து கொண்ட வெட்டிப் பேச்சுகளையும் இன்று நினைத்தாலும் 'அந்த நாளும் வந்திடாதோ?' என ஏக்கம் பிறக்கும். வீட்டிலிருந்து கடற்கரை சாலையில் இருந்த எழிலகம் நிறுத்தம் வரை 'மினி டிராஃப்டரும்', 'இஞ்சினியரிங் டிராயிங் சார்ட்களும்' சுமந்துச் சென்று அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பேருந்து ஏறிய அந்த நான்கு ஆண்டு காலமும், வானொலி நிலையப் பேருந்து நிறுத்தத்தில் வழக்கமாக ஏறும் வேற்றுத் துறை மாணவியின் அழகினையும், அடக்கத்தினையும், சிரிப்பினையும், சின்ன அசைவுகளையும் ரசித்த நண்பன் சுரேஷினை வெறுப்பேற்ற 'டேய் மாம்ஸு, அந்த பொண்ணு இ.சி.ஈ.டா...பெரிய எடம். நாமெல்லாம் கட் ஆஃப்லியே அடிபட்டுப் போயிருவோம்டா. ஃபஸ்ஸி லாஜிக்கும்(Fuzzy Logic), இண்டக்ரேட்டடு சர்க்யுட்ஸும்(Integrated Circuits) எங்கே, நம்மளோட பீமும்(Beam), காலமும்(Column) எங்கே?' எனப் பேசியதும் 'டேய்! இ.சி.ஈ. என்னடா இ.சி.ஈ? எனக்கு கூட தான் ஐ.ஐ.டி. மெட்ராஸ்ல சீட் கெடச்சது...ஆனா நான் சிவில் படிக்கலை?' என அவன் பதிலிறுத்ததும் அதைக் கேட்டு வியப்பில் 'பின்னே ஏண்டா நீ ஐ.ஐ.டி.யில் சேரலை?' எனக் கேட்டதற்கு, 'ஹை கோர்ட்லேருந்து வர எல்.எஸ்.எஸ் பஸ் எதுவும் ஐ.ஐ.டி ஸ்டாப்புல நிக்காதுல்ல...அதனால தான்' என அவன் அந்த நிமிஷத்தில் செய்த 'நார்த் மெட்ராஸ் நெக்கலைக்' கேட்டுக் குலுங்கிச் சிரித்ததும் நினைவில் நிற்கின்றன.

இறுதியாக, பேருந்து பயணங்களைப் பற்றி எழுதப் போய் என்னென்னமோ பழைய நினைவலைகளுள் மூழ்கி, மைல் நீளப் பதிவுகள் மூன்று போட்டாயிற்று. இது வரை படித்தவர்கள் பலரும், தங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு இப்பதிவுகளுக்குச் சிறப்பு சேர்த்திருக்கிறீர்கள். பசுமை நிறைந்த நினைவுகளைத் துளிர்க்கச் செய்த தங்கள் அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்கிறேன்.

34 comments:

இலவசக்கொத்தனார் said...

எங்களையும் கொசுவர்த்தி சுத்த வைத்த உங்களுக்கும் நன்றி! :)

கப்பி | Kappi said...

//மூனு மணி நேரத்தில் செங்கல்பட்டைக் கூடத் தாண்டாத பேருந்தின் ஓட்டுநரையும், நடத்துனரையும் ஏகவசனத்தில் கரித்துக் கொட்டும் பயணிகளையும் காணலாம்.//

நிறுத்தத்தில் நிற்காமல் போகும் பேருந்தின் ஓட்டுனரையும் நடத்துனரையும் திட்டித் தீர்க்கும் பயணிகள் அவர்கள் பேருந்தில் ஏறியதும் அந்த பேருந்து எல்லா நிறுத்தத்திலும் நின்று நின்று செல்வதை திட்டுவதும் நடக்கும்! :)

துளசி கோபால் said...

அருமை. ச்சின்னதாக் கொசுவத்தி கொளுத்திக்கலாமுன்னா இப்ப டைம் டைட்டு(-:

அப்பாலிக்கா சொல்லிக்கறேன்.

ஆமா....... உங்கூட்டுப் பால்காரரு எத்திராஜா? நம்மூட்டுக்கு பாசாதி:-)

VSK said...

ஒவ்வொரு வரியும் ஒரு பதிவு பெறும்!
அற்புத நினைவுகளைத் தூண்டிவிடும் வண்ணம் எழுதும் உங்கள் அபாரத் திறமைக்கு ஒரு பெரிய ஓஓஓஓஓ!

மூன்று பதிவாய் முக்குளிக்க வைத்தமைக்கு முத்தான நன்றி!

Divya said...

\" 'யக்கா பிஞ்சு நுங்குக்கா...வாங்கிக்கக்கா' என எட்டடி உயரத்தில் இருக்கும் எட்டாத ஜன்னல் வழியே நுங்கைப் பேரம் பேசி விற்க முயலும் சிறுமியின் ஏழ்மையைக் கண்டும் காணாமல் போகச் செய்யும் இயந்திர வாழ்க்கையினையே நாம் வாழ்கிறோம் என உணர்த்துவதும் பேருந்து பயணம். \'

நெகிழ்ந்து போனேன் இந்த வரிகளால். எத்தனை யதார்த்தமான உண்மை.

Santhosh said...

தல நல்ல பதிவு கலக்கிட்டிங்க போங்க..

Srikanth said...

// பசுமை நிறைந்த நினைவுகளைத் துளிர்க்கச் செய்த தங்கள் அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்கிறேன்.//

நன்றி வணக்கம்.

கப்பி | Kappi said...

அருமையான பதிவு தல! மூன்று பாகங்களையும் வெகுவாக ரசித்தேன். என் பதிவில் சொல்லாமல் விட்ட, சொல்ல மறந்த பலவற்றை அருமையா
சொல்லியிருக்கீங்க. எங்களையும் நினைவலைகளில் மூழ்கச் செய்துட்டீங்க.
நன்றி கைப்ஸ்! :)

Anonymous said...

கைப்புள்ள. என்னங்க இது. இப்படி பஸ் ஓட்டுற.

ஒரே கலக்கல் தொடரா ஓட்டிட்டு இருக்கீங்க.

பஸ்ல பிக்பாக்கெட் கிட்ட பணப்பையை பறி கொடுத்து இருக்கீங்களா.

அப்புறம் நீங்க எழுதின மாதிரி தம் அடிக்க போய் பஸ் மிஸ் பன்னுன ஆட்களில் அடியெனும் ஒருவர்.

Srikanth said...

தல, சும்மா கும்தலக்கானு இருந்தது 3 பாகமும். அல்லாரும் சொன்னது போல எழுதும் ஸ்டைல் டக்கர். நீ வழக்கம் போல அடி வாங்கி ஐ மீன் அடிச்சி ஆடு தல.

சேதுக்கரசி said...

//தவறுதலாக ஒரு முறை, காலியாக இருந்த 'மகளிரும் சிறுவரும்' பேருந்தில் (நான் சிறுவனாக இல்லாத போது) ஏறிவிட்டு சட்டென்று உணர்ந்து கீழிறங்கியதையும்//

:-)

//கையில் கொண்டு வந்திருக்கும் ஒத்தை நோட்டையும் பெண்கள் பகுதி சன்னலின் வழியாகப் பேருந்தினுள் வீசிவிட்டு//

ஏதேது.. அனுபவிச்சு எழுதின மாதிரி இருக்கே ;-)

நல்லா இருந்தது கைப்ஸ். பஸ் பயணங்களில் ஆரம்பிச்சு, கல்லூரி நினைவுகளில் கொக்கி போட்டு நிறுத்தியிருக்கீங்க... சோ, அடுத்த தொடர், கல்லூரி நினைவுகள் தானே? :)

Unknown said...

மச்சான் கைப்பு பின்னிட்ட போ... ஒரு நல்ல பதிவினைப் படிக்க படைத்தளித்த உனக்கு என் நன்றி.. பஸ்ஸில் இனி பயணம் போகும் தருணங்களில் உன் பதிவும் என் மனத்தினில் பயணம் போகும் எனப்தில் எள்ளளவும் ஐயமில்லை...


One of the best posts u have written till date :)

Deekshanya said...

Am encouraged to write abt my bus travel experiences through your post.. thala - u are a leader :)

கதிர் said...

தல! என்னாதிது உணர்ச்சி வசப்படறது புதுசா இருக்கு.

கப்பி! உன்னைச் சொல்லி குத்தமில்லை தலய சொல்லியும் குத்தமில்லை. நாங்க செய்த பாவமடி கடவுள் செய்த குத்தமில்லை...

SP.VR. SUBBIAH said...

கைப்புள்ளை அண்ணே!

நான் நெடுந்தூரப் பயணமாகப் பேருந்துகளில் பயணிக்கும்போது, போக வேண்டிய ஊரை அடைந்து பேருந்தை விட்டு இறங்கியவுடன் செய்யும் முதல் வேலை,ஓட்டுனரின் ஜன்னலருகே சென்று, "அண்ணே, நல்லா ஓட்டிக்கிட்டு வந்தீங்க, அருமையான டிரைவிங் - நன்றி" என்று சொல்லி விட்டுவருவது வழக்கம்

அதே போல, அதிக வேகமாகவும், கட் அடித்தும், பல வண்டிகளை ஒரே மூச்சில் ஓவர்டேக் செய்தும், ஸ்பீடு பிரேக்கர்கள் வரும்போது கவனிக்காமல் அவற்றின் அருகில் வந்தவுடன் சடன் பிரேக் அடித்துப் பயணிகளை முன் சீட்டில் மோதிக் கொள்ளச் செய்தும், வண்டியை ஓட்டிக் கோண்டு வந்தவரென்றால் அருகில் சென்று சொல்வேன்.

"தம்பி, சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குங்க அப்பத்தான் வண்டியைப் பதவிசா ஓட்ட வரும்!"

இப்படிச் சொன்னபோது ஒரு முறை ஒரு ஓட்டுனர் சளைக்காமல் பதில் சொன்னார்?

"எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு சார்! - கல்யாணம் ஆனா மட்டும் நம்ம ஸ்டைல் எப்படி சார் மாறும் - அதை சொல்லுங்க?"

ஆகா, வில்லங்கமான ஆளா இருக்கிறாரே என்று நான் சொன்னேன்.

"ஆக்ஸிடெண்ட்ல அடிபட்டு ஆஸ்பத்திரியில படுத்திருக்கிற ஓட்டுனர் இரண்டு மூணு பேரப் பார்த்துட்டு வாங்க அப்புறம் தன்னால மாறும்!"

SP.VR.SUBBIAH

Anonymous said...

aaha! neenga namma CEG aala? appo "Guindy salute " ellam niyabagam irukkanume?
Hi!Hi!

Geetha Sambasivam said...

மூன்று பதிவுகளையும் இன்னிக்குத் தான் படிச்சேன். சில இடங்கள் ரொம்பவே நெகிழ்ச்சியாக இருக்கும் அதே சமயத்தில், அவை உங்களுக்கு வயது ஆகி விட்டது!!!!!!!:D என்பதையும் தெரியப் படுத்துகிறது. மற்றபடி உங்களுக்கு வந்த அதே மாதிரியான எண்ணங்கள் எனக்கும் வந்தது உண்டு. அதுவும் காசு சரியாக வாங்காமல் அந்த வெள்ளரி விற்கும் பெண்ணோ, நுங்கு விற்கும் பையனோ, சார், சார், அம்மா, அம்மா, என்று கூவிக் கொண்டே பஸ்ஸுடன் சற்றுத் தூரம் ஓடி வரும்போது நெஞ்சைப் பிசையும்.

ரவி said...

நுனுக்கமாக கவனித்து நிறைவாக எழுதி இருக்கும் கைப்புள்ளைக்கு ஒரு ஓ ஓ ஓ

Sumathi. said...

ஹாய் கப்பி,

இது இன்னாது, பஸ்ல ஏறினமா பிகருங்கல பாத்தமா, ஸ்டாண்டுக்கு ஸ்டாண்டு சைட்டு அடிச்சமா னு இல்லாம அத்த வுட்டுட்டு, எனாவொ மொதல்ல பஸ்ஸ பத்தி சொன்ன, அப்பால டிரைவரு, கண்டிராக்டரு,நம்பரு, ஐ.ஐ.டி,இ.சி.ஈ,ன்றெ, அப்பாலிக பால்காரன், ரிக்சா காரன் இன்னாது ஒன்னியும் பிரியல. இப்ப நீ பஸ்ல போங்கிறியா இல்ல வானாங்கிறியா?

அரை பிளேடு said...

தல
அண்ணா யுனிவர்சிட்டி சிவில் இஞ்சினியரா நீங்க..

நான் கூட ரண்டு மூணு தபா மழைக்கு அங்க ஒதுங்கி கீறம்பா...

புட்போர்டுல போறத எல்லாம் தப்பா சொல்ல கூடாது தல..
பயம்னா சொல்லுங்க உட்டுடறோம்.. அத வுட்டுப்போட்டு...

சரி நம்ப ஊரு மாடி பஸ்ல 18ஏ மாடியில போயி கீறீங்களா...

மூணாவது பார்ட்டுலயாவது ஏதாவது ஃபிகராயணம் இருக்கும்னு பாத்தா ஏமாத்தி பூட்டிங்களே தல.....
கண்டக்டரர கவனிச்ச அளவுக்கு பிகர கவனிக்காத உங்கள மாதிரி உத்தமங்க இருக்கவாச்சிதான் நாட்ல மழயே பெய்யுது....

நாமக்கல் சிபி said...

தல! பழசையெல்லாம் ஞாபகப்படுத்திட்டீங்க!!!

//இரயில் கடப்பதற்காகப் பேருந்து நிற்கும் அந்த சில மணித் துளிகளில் 'யக்கா பிஞ்சு நுங்குக்கா...வாங்கிக்கக்கா' என எட்டடி உயரத்தில் இருக்கும் எட்டாத ஜன்னல் வழியே நுங்கைப் பேரம் பேசி விற்க முயலும் சிறுமியின் ஏழ்மையைக் கண்டும் காணாமல் போகச் செய்யும் இயந்திர வாழ்க்கையினையே நாம் வாழ்கிறோம் என உணர்த்துவதும் பேருந்து பயணம்.//
இது நம் எல்லோராலும் உணரப்படிகின்ற ஒன்று!!!

Anonymous said...

வணக்கம் கைப்பு,
//நம்ம தாலி அறுக்குறதுக்குன்னே வர்றானுங்க"என்று கடுமையாகப் பேசும் போது அப்பணியும் எளிமையானதல்ல என்றும் விளங்கும்//

இது மட்டுமா, இடம் பிடிக்க அவிங்க பண்ற அழிச்சாட்டியம் இருக்கே....துண்ட போடுவாங்கெ, பைய வப்பாங்கெ. இப்பிடித்தேன் ஒரு நாளு ஒரு குட்டி பையன ஒக்கார வச்சிட்டு அப்பன் எங்கயோ போயிட்டான். பஸ்ஸ எடுக்கப்போறாங்கெ, அப்பன கானோம், புள்ள அழ ஆரம்பிச்சுட்டான்.
கண்டக்டரு: "தம்பி, எங்க போகனும்"
பையன்: "ம்..ம்ம்ம்.ம்ம்ம்ம்ம்...."
கண்டக்டரு: "கண்ணா, யார் கூட வந்த?"
பையன்: "ஆ..ம்ம்ம்.ம்ம்ம்ம்"
கண்டக்டரு: "ஸ்ஸ்..அப்பா, சரி எங்க போகனும்?"
பையன்: "ம்ம்..ம்ம்ம்..ஊருக்கு..ம்ம்"
கண்டக்டரு: "அப்பாடா... எந்த ஊருக்கு?"
பையன்: "ம்..ம்ம்ம்.தாத்தா ஊருக்கு...."
கண்டக்டரு: "டேய்..........."

கண்டக்டருக நெலமையும் பாவந்தேன். ஆனாலும் செல பேரு கெட்ட அலப்பறய குடுப்பாங்கெ.

அனுசுயா said...

//நம்மளோட பீமும்(Beam), காலமும்(Column) எங்கே?' எனப் பேசியதும் 'டேய்! இ.சி.ஈ. என்னடா இ.சி.ஈ? எனக்கு கூட தான் ஐ.ஐ.டி. மெட்ராஸ்ல சீட் கெடச்சது...ஆனா நான் சிவில் படிக்கலை?' ///

என்ன இருந்தாலும் கைப்பு சிவில் என்ஜினீரிங்க மட்டமா எழுத கூடாது.
இத நான் வன்மையா கண்டிக்கிறேன். :(

கைப்புள்ள said...

//என்ன இருந்தாலும் கைப்பு சிவில் என்ஜினீரிங்க மட்டமா எழுத கூடாது.
இத நான் வன்மையா கண்டிக்கிறேன். :(//

மட்டமால்லாம் எழுதலீங்க. என் நண்பனை வெறுப்பேத்தறதுக்காக அப்படி சொன்னது. அதுக்கு அவன் குடுத்த பதிலும் நக்கல் தொனியில தான் இருக்கு. இப்ப IT தான் நமக்கு சோறு போடுதுன்னாலும், சிவில் படிக்கும் போது "உடல் மண்ணுக்கு உயிர் சிவிலுக்கு"ன்னு தான் படிச்சோம். அதெல்லாம் கூட பின்னாள்ல எழுதலாம்னு கூட ஐடியா இருக்கு. எங்க க்ளாஸ் பொண்ணுங்க லவ்பேர்ட்ஸ் படத்துல வர பாட்டை உல்டா பண்ணி "பொங்கியதே சிவில் வெள்ளம்"னு பாடுனது கூட ஞாபகம் வருது. உங்க மனம் புண்படற மாதிரி எதாச்சும் எழுதிருந்தா வருந்தறேன். மன்னிச்சுக்கங்க. எந்த கமெண்டுக்கும் பதில் போட முடியாத படி இங்கே வேலை...இருந்தாலும் நீங்க ஃபீல் பண்ணி எழுதிருக்கறதால ரணகளமானாலும் உடனே பதில் போடனும்னு தோணுச்சு. ஆமா நீங்களும் ஜி.சி.டி.ல சிவிலுங்களா?

அனுசுயா said...

பதில் போட்டதுக்கு நன்றிங்க கைப்பு. நானும் சிவில் தான்க.சிவில்னாலே டீயில விழுந்த ஈய பாக்கிற மாதிரி பாக்கிறாங்க. ஆனா இப்ப சிவிலுக்கு இருக்கற வேலை வாய்ப்பு ரொம்ப அதிகம்னு உள்ள வந்ததாதானே தெரியுது. மனசு புண்படறதுக்கு ஒன்னும் இல்லீங்க. நானும் சிவில் பிடிக்காமதான் இருந்தேன் எங்க வீட்ல அப்பா அம்மா தொல்ல தாங்காமதான் சிவில் படிக்க ஆரம்பிச்சேன். ஆனா இப்ப அதுலே ஈடுபாடு வந்திடுச்சு.

Anonymous said...

அன்புத் தோழா... !

வணக்கம்.

சமீபத்திய பதிவு கண்டேன்.

அருமை.

பேருந்துப் பயணம் என்பது நம்முடைய வாழ்க்கையோடு கலந்துவிட்ட ஒரு விஷயம்.

இன்று எப்படியோ ? ஆனால் நாம் அனைவருமே ஒரு காலகட்டத்தில் பேருந்துப் பயணத்தின் இன்பத்தையும், இம்சையையும் அனுபவித்தவிர்கள்தாம்.

அந்த வகையில் இந்தப் பதிவு ஒரு மறு… நினைவு…

Thanks a lot…

Anonymous said...

Kaipullai uncle,
Ungaloda 3 pathipayum padichi, onnae onnu thaan vilanguthu... neenga poranthae 40 varusham achu thaanae??

Anonymous said...

enna kaipullai....this is not your style. The style u had when u wrote thadi pasanga is missingmaa. Etharthamum, nagaisuvaiyum eluthiya kaipullai than venum.

Nan neenga nalla eluthum pothu padichitu, srichutu, rasichitu comment podama vituduven ana lighta track mathura mathiri eruntha vudane kurai solluven...athanale ennoda comments perusa kandukathe...

ana adutha posta sirichu sirichu vayaru valikira mathiri podu machi

varata

Paavai said...

Traveling by Bus nos 13 and 13b were a unique experience. Our driver bought broom sticks in triplicane one day and asked a passenger to hold it for sometime. New college boys dumping their books !!!!! on our laps without permission and the conductor's plight - unforgettable. GN Chetty road used to be a stage those days and in bus no 11 a passenger begged the conductor - whistle kudunga conductor and the conductor said - un kitta whistle kudutthutu naa enna panradhu - the sense of humor of chennai drivers and conductors was amazing. ]

Presidency college boys used to torture some of the conductors - munnala yaruppanu ketta - i am murali B SC I year, I am selvam Corporate second year nu badil .. they also used to celebrate bus day and buy presents for the drivers and conductors - not sure if that practice still continues

Thanks for the post (s).

Anonymous said...

Hi Mohan,

For a moment the light house ECE character came in front of me and we were all in 21L bus.

Good one.. keep it up..

-Suresh

Anonymous said...

kelambitaanyaaa kelambitaanyaa... namma kaipulla bus la kelambitanyaa... inime ennalam aha poguthoooooooo teriyalayeee..... :)))))) ammu.

Srikanth said...

இன்னா தல, கெட்டப்பு சேன்ஞா, படம் காட்டு நீ....

Syam said...

தல என்னமா எழுதி இருக்கற...சூப்பரா கீதுபா...எனக்கும் கொசுவத்தி சுத்தி 27D ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..பொக்கிஷமாக பிகருகள் எல்லாம் ஞாபகம் வருதே :-)

Arunkumar said...

தல.. சூப்பரா எழுதீர்க்கீங்க...
உனர்வுப்பூர்வமாவும் இருக்கு...
north madras nekkal டாப்பு :)