Saturday, July 18, 2009

இதையெல்லாம் சொன்னா எனக்கு கிறுக்கு புடிச்சுருக்கும்பாங்க

நான் கூட ஒரு ஸ்லம்டாக் மில்லியனேர் தாங்க. உனக்கு எந்த போட்டியில ஒரு கோடி ரூபாய் கெடைச்சுதுன்னெல்லாம் கேக்கப்பிடாது. அந்த படத்துல கதாநாயகனைக் கேக்கற கேள்விகளுக்கும் அவன் வாழ்வில் நிகழ்ந்த ஏதோ ஒரு சம்பவத்துக்கும் தொடர்பிருப்பதாக இருக்கும். அதனால அக்கேள்விகளுக்கு அவன் சரியான பதில் சொல்வான். ஹாட் சீட்ல உக்கார வைச்சு யாரும் என்னை கேள்வி எல்லாம் கேக்கலைன்னாலும், எனக்கு நியாபகத்துல இருக்கற சில பல பிஸ்கோத்து விஷயங்களுக்கும், நான் என் வாழ்வில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்ட கேட்ட சில நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்கிறது. அப்படிப்பட்ட பிஸ்கோத்து விஷயங்கள் எனக்கு இன்னமும் நியாபகம் இருக்கக் காரணமாக இருந்த அந்நிகழ்வுகளை நினைவு கூறும் ஈக்வலி பிஸ்கோத்துத் தனமான பதிவு இது.

1. 2004ஆம் ஆண்டில் ஒரு நாள்னு நினைக்கிறேன். அப்போ நான் டெல்லியில இருந்தேன். ஞாயித்துக்கிழமை காலை டிபன் சாப்பிட்டுட்டு டிவி போட்டா சன் டிவில சப்தஸ்வரங்கள் ஓடிக்கிட்டிருக்கு. அந்த நிகழ்ச்சியில ஒரு பொண்ணு பாடிக்கிட்டு இருந்துச்சு. அதை பாத்ததும் எனக்கு ஆச்சரியம். அந்த பொண்ணோட முகம் ரொம்ப பரிச்சயமா இருந்துச்சு. சின்ன வயசுல எங்கேயோ பாத்துருக்கோமேன்னு நெனச்சிட்டு இருக்கும் போதே அந்த பொண்ணோட பேரும் சட்டுன்னு நியாபகம் வந்துடுச்சு. அப்படியே கொசுவத்தியை ஒரு பதினைஞ்சு வருஷம் பின்நோக்கி சுத்துனேன். அப்போ நாங்க சென்னையில் திருவல்லிக்கேணியில் வாழ்ந்துட்டு இருந்தோம். பள்ளிக்கூடம் முடிஞ்சதும் மாலை வேளைகளில் அக்பர் சாகிப் தெருவில் மசூதிக்கு எதிரில் இருந்த திருவல்லிக்கேணி ஹிந்தி வித்யாலயாவில் ஹிந்தி வகுப்புகளுக்குப் போயிக்கிட்டிருந்தேன். அந்த வகுப்புகள்ல தான் அந்த பொண்ணும் ஹிந்தி படிச்சுது. நான் அப்போ ஏழாவது படிச்சிட்டு இருந்தேன். அந்த பொண்ணு அப்போ அஞ்சாவது படிச்சிட்டுருக்கும்னு நெனக்கிறேன். ஆனா அந்த பொண்ணோட பேரும் முகமும் நியாபகம் இருந்ததுக்குக் காரணம் 'ராஷ்ட்ரபாஷா' வகுப்பில் ரெண்டு பேரும் ஒன்னா படிச்சோம்ங்கிறது இல்லை. அங்கே சுந்தர்ராஜன் சார் சுந்தர்ராஜன் சார்னு ஒரு மாஸ்டர் இருந்தார். அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டு மாலை வேளைகளில் ஹிந்தி வகுப்பு எடுக்கிறதுக்காகத் தினமும் கே.கே.நகர்லேருந்து திருவல்லிக்கேணி வருவார். அவரை மாதிரி ஒரு பர்ஃபெக்ஷனிஸ்டைப் பாக்க முடியாது. தான் எடுக்கிற வகுப்புகளுக்கான நோட்ஸை ரொம்ப சிரத்தை எடுத்து எழுதி வச்சிருப்பாரு. ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு நம்பர் கொடுத்து மாணவர்களுக்கு அந்த நோட்ஸை விநியோகம் பண்ணறதுக்குன்னு ஒரு சிஸ்டம் வச்சிருப்பாரு.

ஹிந்தி வகுப்புகளை மிஸ் பண்ணாம எல்லா நோட்ஸ்களையும் ஒழுங்கா எழுதி வச்சிருந்தேன். ஒரு நாள் நான் மேல சொன்ன அந்த பொண்ணு என்கிட்ட வந்து "போன ரெண்டு வாரமா எனக்கு ஃபீவர். அதனால நான் க்ளாஸுக்கு வரலை. உங்க நோட்ஸை வீட்டுக்குத் தந்தீங்கன்னா எழுதிட்டுத் தரேன்"னு சொல்லி வாங்கிக்கிட்டு போச்சு. நான் எழுதி வச்சிருந்த அந்த நோட்டு புத்தகத்தை வாங்கிட்டுப் போன அந்த பொண்ணு அதுக்கப்புறம் ஒரு ரெண்டு வாரத்துக்கு க்ளாஸுக்கு வரலை. மாஸ்டர் ஒவ்வொரு க்ளாஸ்லயும் கொடுக்கற நோட்ஸை என்னால எழுத முடியலை. சில பாடங்களை நான் வேற நோட்ல எழுதி வைக்க வேண்டியதாப் போச்சு. அதுக்கு மேல நான் கொடுத்த் என் நோட்புக்குக்கு என்னாச்சோங்கிற கவலை வந்துடுச்சு. சரின்னுட்டு மாஸ்டர் கிட்ட அந்த பொண்ணோட வீட்டு விலாசத்தை வாங்கிக்கிட்டு அவங்க வீட்டுக்கே போய் கேக்கலாம்னு முடிவு பண்ணேன். அவங்க வீடும் திருவல்லிக்கேணியில் பெரிய தெருவுல தான் இருந்துச்சு. பக்கத்துல தானே இருக்குன்னு க்ளாஸ் ஆரம்பிக்கிறதுக்கு ஒரு கால் மணி நேரத்துக்கு முன்னாடி அவங்க வீட்டுக்குப் போனேன். மணி ஒரு அஞ்சே முக்கால் இருக்கும். அவங்க வீட்டுல அவங்க அப்பா தான் இருந்தார். நான் அவங்க வீட்டுக்கு வந்த காரணத்தைச் சொன்னேன். "She is sleeping. You please wait. I will call her" அப்படின்னாரு. அப்புறம் "Come on my Child, some one has come to see you" அப்படின்னு தன் மகளைக் கூப்பிட்டாரு.

இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல இங்கிலீஷ் பேசச் சொன்னாலே நானெல்லாம் பேசுனதில்லை. வீட்டுல கூட இங்கிலீஷ் பேசறவங்க இருக்காங்கன்னு நான் கேள்வி பட்டுருக்கேன். ஆனா அப்போ தான் முதன்முறையா பார்த்தேன். அதோட அப்பல்லாம் மதியானம் தூங்கற பழக்கம் எனக்கு கிடையாது. தூங்கவும் எங்க வீட்டுல விட மாட்டாங்க. "விளக்கு வைக்கிற நேரத்துல கை கால் கழுவிட்டு சாமி கும்பிட்டுட்டு படிக்க ஒக்காந்துடணும்" இது எங்கம்மா தடிப்பசங்க எங்க ரெண்டு பேருக்கும் போட்ட ரூல். கிட்டத்தட்ட ஆறு மணி ஆகுது, ஹிந்தி க்ளாசுக்கு வேற நேரம் ஆகுது, தூங்கிட்டுருக்கற பொண்ணை அவங்க அப்பா இப்படி கொஞ்சி கொஞ்சி கூப்பிடறாரேன்னு எனக்கு ஒரே ஆச்சரியம். அவங்க அப்பா கூப்பிட்டதும் கண்ணைக் கசக்கிட்டே அந்த பொண்ணு ஷிம்மீஸோட கீழே இறங்கி வந்துச்சு. இங்கே ஒரு கிளை கதை சுத்திக்கறேன். இந்த ஷிம்மீஸ் பத்தியெல்லாம் உனக்கு எப்படி தெரியும்னு நீங்க கேக்கறது எனக்கு புரியுது. சின்ன வயசுல வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற பொண்ணுங்க யாராச்சும் வீட்டுக்கு வந்தா எங்கம்மா "போம்மா! போய் கவுன் மாட்டிக்கிட்டு வா. ஷிம்மீஸோடயா வெளியில வர்றது"ன்னு கேப்பாங்க. பனியனோட நாங்க வெளியில போனாலும் எங்க ரெண்டு பேருக்கும் திட்டு தான். ஸோ அப்போ தான் தெரியும் வெள்ளை கலர்ல இருக்கற அந்த கவுன் பேரு தான் ஷிம்மீஸ்னு. இங்கே இன்னொரு கிளை கதை சுத்திக்கிறேன். சமீபத்துல ஒரு நாள் எனக்கு ஒரு சந்தேகம். இந்த ஷிம்மீஸ்ங்கிற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் என்னன்னு. அது ஆங்கில வார்த்தையா தமிழ் வார்த்தையான்னு ஒரு சந்தேகம். எல்லாம் ஒரு பொது அறிவு சந்தேகம் தான் :)

Shimmy, Shimmies அப்படின்னு போட்டு கூகிள்ல தேடுனா ரிசல்டுகள் வந்தது. அப்போ முதலை படம் போட்ட நான் வச்சிருந்த லெக்காஸ்ட்(Lacoste) டி-ஷர்ட் பத்தியும் நினைவு வந்துச்சு. அந்த சட்டையில 'La Chemise Lacoste' அப்படின்னு எழுதிருக்கும். நான் அதை பல நாள் 'லா கெமிஸ் லெக்காஸ்ட்'னு தான் படிச்சிருக்கேன். ஆனா பிரெஞ்சு மொழியில 'Che' னு ஆரம்பிச்சா அதை 'ஷே'னு படிக்கனும்னு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் செவாலியே விருது வாங்கனப்போ தெரிஞ்சுக்கிட்டேன். Chemise அப்படிங்கறதை 'ஷெமிஸ்' னு படிக்கலாம்னு தோனுச்சு. ஷெமிஸ்னா என்னான்னு www.dictionary.comல தேடியதும் "A woman's loose fitting shirt like undergarment'னும் பழைய ஃபிரெஞ்சு மொழியில் "Shirt" அப்படின்னும் தெரிஞ்சது. அநேகமா Shimmy, Shimmies சொற்களுக்கு Chemise என்ற ஃபிரெஞ்சு சொல் மூலமா இருந்துருக்கலாம் போலிருக்கு. திரும்பவும் இப்போ மெயின் கதைக்கு வருவோம். அதுக்கப்புறம் என்னோட நோட் புத்தகத்தை வாங்கிக்கிட்டு நான் வந்துட்டேன். அப்புறம் இன்னொரு விஷயம் நான் IITல படிச்சிட்டு இருந்தப்போ என் பேரைப் போட்டு கூகிள்ல தேடுனா முதல் பத்து பக்கங்கள்ல ஐஐடி வலைதளத்தில் என் பேரு வரும். அதே நெனப்புல...சரி இந்த பொண்ணு சப்தஸ்வரங்கள்ல எல்லாம் பாடிருக்கே ஒரு வேளை பிரபலம் ஆகிடுச்சோன்னு ஒரு நாள் கூகிள்ல தேடுனேன். மறுபடியும் ஒரு பொது அறிவுக்காகத் தான்:) பாத்தா விஜய் ஆண்டனி இசையில் சுக்ரன் படத்தில் அந்த பொண்ணோட அதே பேரு அதே இனிஷியல் உள்ள ஒருத்தங்க "உச்சி முதல் பாதம் வரை" அப்படின்னு ஒரு பாட்டு பாடிருக்காங்க. அநேகமா ரெண்டு பேரும் ஒன்னாத் தான் இருப்பாங்கன்னு நெனக்கிறேன்.

http://www.thenisai.com/tamil/songs-music/sukran-tamil-songs.htm

2. காதலன் படத்துல 'ஊர்வசி ஊர்வசி' பாட்டுல பிரபு தேவா அண்ணா மேம்பாலத்துல ஒரு பஸ் மேலே ஏறி ஆடிக்கிட்டு வருவாரு பாத்துருக்கீங்களா? சென்னையில் ஓடற பேருந்துகள்ல ஒவ்வொரு பேருந்துக்கும் சைடுல அந்த பேருந்தோட டிப்போ எண் எழுதிருக்கும். பிரபு தேவா ஆடிக்கிட்டு வந்த அந்த பஸ்ஸோட டிப்போ எண் 'BF505'. அடுத்த வாட்டி ஊர்வசி ஊர்வசி பாட்டு பாத்தீங்கன்னா கவனிச்சு பாருங்க. அந்த பேருந்து அப்போல்லாம் பட்டிணப்பாக்கத்துலேருந்து சுங்கச்சாவடி போற 'C6' என்ற வழித்தடத்தில் ஓடிக்கிட்டு இருந்துச்சு. இப்போ அந்த வழித்தடமே இல்லை. பிற்காலத்துல A, B, Cஅப்படின்னு டிப்போ பேரைக் குறிக்கிறதுக்காகப் பயன்படுத்தப் பட்ட எழுத்துகள் ரெண்டெழுத்துகளா மாத்தப் பட்டது. அதன்படி அடையார் டிப்போவைச் சேர்ந்த அந்த பஸ் 'ADF505'ஆக மாற்றப்பட்டது. இது எல்லாம் நியாபகம் இருக்கறதுக்குக் காரணம் நான் ஒரு நாள் ஸ்கூல் முடிச்சிட்டு மயிலை இராதாகிருஷ்ணன் சாலையிலிருக்கும் எல்லோ பேஜஸ் பேருந்து நிறுத்ததில் இருந்து திருவல்லிக்கேணி பெரிய தெரு வர்றதுக்கு 45B வழித்தடம் கொண்ட பஸ்ஸில் நின்னுக்கிட்டு வந்துட்டு இருந்தேன். எங்க பஸ்ஸுக்கு முன்னாடி சைக்கிளில் ஒரு முஸ்லிம் பெரியவர் போய்க்கிட்டிருந்தார். அவரு ராணி மேரி கல்லூரி கிட்டே இடது பக்கம் கடற்கரை சாலையில் திரும்பினார். அப்போ கடற்கரை சாலையில் வானொலி நிலையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டு C6 வழித்தடத்தில் அந்த BF505 டிப்போ எண் கொண்ட பேருந்து வேகமாக வந்தது. சைக்கிளில் போய்க்கிட்டிருந்த அந்த பெரியவரைப் பின்னாளில் இருந்து அந்த பஸ் இடித்தது. இதை நான் 45B பஸ்ஸில் நின்னுக்கிட்டு பாத்துட்டு இருந்தேன். இதெல்லாம் ஏன் நியாபகம் இருக்கு? இதனால யாருக்கு என்ன பயன்னு தெரியலை. ஆனா இந்த மாதிரி டிரிவியா(trivia) விஷயங்கள் மனசுல நல்லா நிக்குது அது ஏன்னு தெரியலை.

3. இன்னொரு விநோதமான பழக்கம் ஒன்னு எனக்கு இருக்கு. யாரையாச்சும் ஒருத்தங்களைப் பாத்தா இவங்க இந்த பிரபலம் மாதிரி இருக்காங்களே, இல்லை ஏற்கனவே பாத்த இன்னொருத்தர் மாதிரி இருக்காங்களேன்னு தோனும். இது மாதிரி தான் நிஜ வாழ்க்கையில் கிழக்கே போகும் ரயில் ராதிகா, டிங்கிள் சிறுவர் புத்தகத்தில் வரும் சுப்பாண்டி, லிட்டில் மெர்மேய்டு இவங்களை எல்லாம் பாத்துருக்கேன்:) 2000 ஆண்டுல ஒரு நாள், அப்போ நான் சம்மர் ப்ராஜெக்ட் செஞ்சிக்கிட்டு இருந்தேன். தில்லி கரோல் பாக்ல இருக்கற ஒரு அலுவலகத்துக்குத் தான் தினமும் போவேன். அங்கே ஒரு சர்தார்ஜி ஒருத்தர் வந்திருந்தாரு. அவரு நான் அந்த ப்ராஜெக்ட் செய்திட்டு இருந்த அந்த கம்பெனியோட வாடிக்கையாளர். அவரைப் பாத்ததும் இவரை எங்கேயோ பாத்துருக்கேன்னு தோனுச்சு. ரொம்ப யோசிச்சிப் பாத்ததுல எங்களுக்கு "Structural Engineering" வகுப்பு எடுத்த எங்க பேராசிரியர்மாதிரியே இருந்தாரு அந்த கறுப்பு சர்தார்ஜி :) இதே மாதிரி நான் இந்தூர்ல இருக்கும் போது தனசேகர்னு ஒரு பையன் என் கூட ஆஃபிசுக்கு பஸ்ல வருவான். பஸ்ல வரும் போது தான் அவனோட பழக்கம். தமிழ் பையன். ஆனா எங்க கம்பெனிக்கு கன்சல்டண்டா சென்னையிலிருந்து வந்துருந்தாப்பல. 2006 வரைக்கும் டச்ல இருந்தோம். அதுக்கப்புறம் டச் விட்டுப் போச்சு. சமீபத்துல திடீர்னு ஒரு நாள் என் சென்னை நம்பருக்கு ஃபோன் பண்ணான். எனக்கு பயங்கர ஆச்சரியம். ஏன்னா நான் அந்த இடைப்பட்ட காலத்துல சித்தூர்கட், அகமதாபாத், பெங்களூர்னு பல இடங்களில் இருந்தேன். ஆனா அதை எல்லாம் மீறி சரியா என்னை என் சென்னை நம்பர்ல புடிச்சான். 'நான் தனசேகர் பேசறேன்'ன்னு சொன்னதும் எனக்கு சட்டுன்னு யாருன்னு புரியலை. மேலே முதல் வரியில இருக்கற டெக்னாலஜியை உபயோகிச்சப்புறம் தான் நினைவு வந்தது - அந்த பையன் யாருன்னு. அந்த பையனோட நான் தொடர்பு படுத்தி வச்சிருந்த முகம் பழைய நடிகை சுமித்ராவோடது. அச்சு அசலா சுமித்ராவுக்கு மீசை வச்ச மாதிரியே இருப்பான். சிரிச்சான்னா சுமித்ரா மாதிரியே கன்னத்துல குழி விழும். "ஏய்! சுமித்ரா எப்படிப்பா இருக்கறே"ன்னு நான் கேட்டதும் "அட கடவுளே! இன்னும் நீங்க அந்த பேரை மறக்கலியா"அப்படின்னான். உங்கள்ல யாருக்காச்சும் இந்த மாதிரி தோணியிருக்கா?

4. இது என்னோட இருநூறாவது பதிவு. நூறாவது பதிவு போட்டது 2006ல. முதல் நூறு போட ஆறு மாசம், அடுத்த நூறு போட மூனு வருஷம். இதையெல்லாம் சொன்னா எனக்கு கிறுக்கு புடிச்சுருக்கும்பாங்களோ?

42 comments:

ILA (a) இளா said...

200க்கு வாழ்த்துக்கள்! படிச்சுட்டு வறேன்

பாசகி said...

முடியலங்க :)

ரொம்பதான் ரிசர்ச் பண்ணறீங்க :)))

கைப்புள்ள said...

நன்றி இளா, பாசகி
:)

கதிரவன் said...

200க்கு வாழ்த்துக்கள்.

உங்க கொசுவத்தி பதிவுகள் எல்லாமே நல்லா இருக்குது. ஆனாலும், கிளைக்கதைகளோட கொசுவத்தி சுத்தறது உங்களோட தனித்திறமை :-)

Unknown said...

ஷிம்மிஸ் ஆராய்ச்சிக்காக: http://en.wikipedia.org/wiki/Chemise

சல்வார் "கம்மீஸ்" இல், கம்மீஸ் என்பது மேலாடை.

எல்லாம் "ஒண்ணுத்துக்குள்ள ஒண்ணு":-)))

இப்படிக்கு ஆராய்ச்சி செய்வோர் சங்கத்தலைவி,
குறுக்கில் நெடுக்குச்சந்து
அமெரிக்கா.

gulf-tamilan said...

200க்கு வாழ்த்துக்கள்!!!

சென்ஷி said...

வா(வ்)ழ்த்துக்கள் :))))))))))))

கைப்புள்ள said...

//200க்கு வாழ்த்துக்கள்.

உங்க கொசுவத்தி பதிவுகள் எல்லாமே நல்லா இருக்குது. ஆனாலும், கிளைக்கதைகளோட கொசுவத்தி சுத்தறது உங்களோட தனித்திறமை :-)//

வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிங்க கதிரவன்.
:)

கைப்புள்ள said...

//ஷிம்மிஸ் ஆராய்ச்சிக்காக: http://en.wikipedia.org/wiki/Chemise

சல்வார் "கம்மீஸ்" இல், கம்மீஸ் என்பது மேலாடை.

எல்லாம் "ஒண்ணுத்துக்குள்ள ஒண்ணு":-)))

இப்படிக்கு ஆராய்ச்சி செய்வோர் சங்கத்தலைவி,
குறுக்கில் நெடுக்குச்சந்து
அமெரிக்கா.//

வாங்க ஆராய்ச்சி அறிஞரே(Research Scholarனு பொருள்) :)
கமீஸ், ஷெமிஸ், ஷிம்மிஸ் எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னுன்னு புரிய வைச்சு என் அறிவு கண்ணைத் தெறந்துட்டீங்க. நெறம்ப நன்னி.
:)

கைப்புள்ள said...

//200க்கு வாழ்த்துக்கள்!!!//

வாழ்த்துகளுக்கு நன்றிங்க Gulf Tamilan

கைப்புள்ள said...

//வா(வ்)ழ்த்துக்கள் :))))))))))))//

வாவுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க சென்ஷி

சீமாச்சு.. said...

//இதனால யாருக்கு என்ன பயன்னு தெரியலை. ஆனா இந்த மாதிரி டிரிவியா(trivia) விஷயங்கள் மனசுல நல்லா நிக்குது அது ஏன்னு தெரியலை.//

எனக்கும் இது மாதிரி சில சில்லுண்டி விஷயங்களெல்லாம் நினைவில் இருக்கும். சமயத்துல அதெல்லாம் பத்திச் சொன்னா.. ‘இதெல்லாமாடா நெனப்பு வெச்சிருக்கே” அப்ப்டீன்னு செல்லமா ஒரு திட்டு கிடைக்கும்...

மூணரை வருஷத்துல 200 போஸ்ட் போட்டதுக்கு வாழ்த்துக்கள். நானும் தான் சமீபத்துல வலையுலகத்துல 5 வருஷம் நிறைவு செய்தேன்.. 82 இடுகை தான் எழுதியிருக்கேன்..

இந்த வருஷமாவது 100 முடிக்கணும்னு நெனச்சிட்டிருக்கேன்.. பார்ப்போம்...

நாமெல்லாம் slow cycling race -ல முதல் பரிசு வாங்கற ஆளுங்க.. விடாம களத்துல இருக்கோம்-ல.. அதச் சொல்லித்தான் தேத்திக்க வேண்டியிருக்கு..

வாழ்த்துக்கள் !!

வெட்டிப்பயல் said...

வாழ்த்துகள் அண்ணாச்சி :)

ALIF AHAMED said...

முதல் நூறு போட ஆறு மாசம்,
//


ம் அது ஒரு கனாக்காலம் !

Thiru said...

//அநேகமா ரெண்டு பேரும் ஒன்னாத் தான் இருப்பாங்கன்னு நெனக்கிறேன். //

யாரு ரெண்டு பேரும்?

Thiru said...

//முதல் நூறு போட ஆறு மாசம், அடுத்த நூறு போட மூனு வருஷம்.//
நீ என்ன சொல்ல வர்றே ? முன்னாடி ரொம்ப கிறுக்கு பிடிச்சிருந்ததா, இல்லை இப்ப அதிகமா இருக்கா?

Thiru said...

200- க்கு வாழ்த்துக்கள். இந்த மாதிரி சின்ன சின்ன சப்பை மேட்டர் விஷயங்கள் இல்லைன்னா வாழ்க்கைல ஒரு ஜீவன் இல்லாம போயிடுமோ?

இதைத்தான் சுஜாதா நினைவுகள் தான் உயிர்-னு கற்றதும் பெற்றதும்-ல எழுதி இருப்பாரு. இங்க இருக்கு அந்த கட்டுரை http://oxygen-sathish.blogspot.com/2008/02/blog-post_777.html

பித்தன் said...

டெஸ்ட் மேட்ச்தான் ரொம்ப பெஸ்ட், லேட்ஆனாலும்... ஒவ்வொரு தபாவும், லேட்டஸ்ட்ஆதான் வரீங்க.... வாழ்த்துக்கள்.....

sumathi said...

ஹாய் மோஹன்,
200ஐ வெற்றிகரமாக தொட்டதுக்கு என்னோட வாழ்த்துக்கள். மேலும் மேலும் பல சிகரங்களை தொடவும் ஆசிகள்.

//யாரையாச்சும் ஒருத்தங்களைப் பாத்தா இவங்க இந்த பிரபலம் மாதிரி இருக்காங்களே // ஆஹா... அப்போ முதன் முதலா லால்பாக் ல என்னைப் பாத்தப்பவும் ஏதாவது தோனியிருக்கனுமே?

ஆனாலும் உங்க கொசுவத்தி படிகக interestingஆ தான் இருக்கு, அதுவும் கிளைக் கதைகளோட.

//ரொம்பதான் ரிசர்ச் பண்ணறீங்க ளோ? அதானே எனக்கும் அப்படித் தான் தோண்றது.

//ஷிம்மிஸ் ஆராய்ச்சிக்காக: //
நல்ல ஆராய்ச்சி தான். தொடரட்டும் உங்கள் இது போன்ற ஆரய்ச்சிகளும் அதன் விளைவுகளும் (பதிவுகளும்)

சந்தனமுல்லை said...

200-க்கு வாழ்த்துகள்

//ஆனா இந்த மாதிரி டிரிவியா(trivia) விஷயங்கள் மனசுல நல்லா நிக்குது அது ஏன்னு தெரியலை.
//

அதென்னமோ உண்மைதான்! :-)

rapp said...

super super super:):):) congratulations:):):)

(me the peter jister)

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........நீங்கதான் எனக்கு சரியானப் போட்டியா இருப்பீங்கப் போல. ஒரு தடவ, எப்டில்லாம் திரைக்கதை எழுதக் கூடாதுன்னு ஒரு வொர்க்ஷாப் நடத்துனாருல்ல சுஜாதா, அதுக்கு சில உதாரணங்களைக் கொடுத்தாரே, அதாட்டமே நான்தான் கிளைக்கதை, குட்டி பிரான்ச் கதை, இலைக் கதை, போட்டோசிந்தசிஸ் கதைன்னு டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ ஆக்குவேன்னா நீங்களுமா:):):)

rapp said...

ஹா ஹா ஹா:):):) ஆனா, எனக்குத் தெரிஞ்சவரை ஷெமீஸ்னா சட்டை அப்புறம் பேப்பர்கள் ஸ்டாக் செய்ற அலமாரி மட்டும்தான் அர்த்தம்.

//இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல இங்கிலீஷ் பேசச் சொன்னாலே நானெல்லாம் பேசுனதில்லை//

நான் பேசுவேன், யாராவது திமிர் பண்ணாங்கன்னா, அவங்கக் கொட்டத்த அடக்க ஒன்னு பாட்டு பாடுறது இல்லன்னா இங்கிலீஸ்ல பேசுறதுன்னு, செலவில்லாம ஈயத்தக் காச்சி ஊத்திடறது. அப்புறம் வருவாங்க என் வழிக்கு?

//
ஹிந்தி வகுப்புகளை மிஸ் பண்ணாம எல்லா நோட்ஸ்களையும் ஒழுங்கா எழுதி வச்சிருந்தேன்//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........ராஷ்ட்ரபாஷாவுக்கேல்லாம் என்னத்த நோட்ஸ் எடுத்தீங்க? நாங்கெல்லாம் மௌக்கிக்குக்கே போய் ஷில்பா ஷெட்டிப் பாட்டை பாடி பயமுறுத்தி பாசானோமாக்கோம்:):):)

//இன்னொரு விநோதமான பழக்கம் ஒன்னு எனக்கு இருக்கு. யாரையாச்சும் ஒருத்தங்களைப் பாத்தா இவங்க இந்த பிரபலம் மாதிரி இருக்காங்களே, இல்லை ஏற்கனவே பாத்த இன்னொருத்தர் மாதிரி இருக்காங்களேன்னு தோனும்.//

சேம் பிளட். இது உங்களாட்டமே எக்கச்சக்கப் பேருக்கு இருக்கு. அதுவும் எனக்கு டூ மச்சா உண்டு. ஆனா, இம்சை என்னன்னா அப்பாலைக்கு இவங்க ஒரிஜினல் பேர் ஞாபகம் வராது. நேர்ல பாத்தாக் கூட அடையாளத்துக்கு வெச்ச ஆள் பேர் மட்டுமே மண்டைக்கு வந்து வாய் கோனிக்கிட்டு, வாட் டு டூன்னு இம்சிக்கும்:):):)

நாகை சிவா said...

//"இதையெல்லாம் சொன்னா எனக்கு கிறுக்கு புடிச்சுருக்கும்பாங்க"//

சொல்லாட்டி மட்டும் ;)

200 க்கு வாழ்த்துக்கள்!

என்னை முதலில் பார்த்தவுடன் என்ன & யாரை நினைச்சீங்க ;) சபையில் சொல்ல முடியாவிட்டால் சாட் டில் சொல்லலாம்

கோபிநாத் said...

200க்கு வாழ்த்துக்கள் தல ;))

☀நான் ஆதவன்☀ said...

ஆகா வாழ்த்துகள் அண்ணே. ரொம்ப பெரிய கொசுவத்தி சுத்தும்போதே நினைச்சேன் ஏதாவது ஸ்பெஷலா இருக்கும்ன்னு. சீக்கிரம் முந்நூறு அடிங்க.

கைப்புள்ள said...

//என்னை முதலில் பார்த்தவுடன் என்ன & யாரை நினைச்சீங்க ;) சபையில் சொல்ல முடியாவிட்டால் சாட் டில் சொல்லலாம்//

உன்னைப் பார்த்ததும் எந்த முகமும் மனசுல நினைவுக்கு வரலை. ஆனா ஒரு பார்த்திபன் படப் பாட்டு நியாபகத்துக்கு வந்துச்சு. அது என்னாங்கறியா?

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் தரம் தரம் இணைந்தவன்
இவன் தலை விநாயகன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்

:)

கைப்புள்ள said...

//எனக்கும் இது மாதிரி சில சில்லுண்டி விஷயங்களெல்லாம் நினைவில் இருக்கும். சமயத்துல அதெல்லாம் பத்திச் சொன்னா.. ‘இதெல்லாமாடா நெனப்பு வெச்சிருக்கே” அப்ப்டீன்னு செல்லமா ஒரு திட்டு கிடைக்கும்...//

கரெக்ட். என்னோட ஒரு ஃப்ரெண்டும் நீ ரொம்ப யோசிக்கிறேடான்னு சொல்லி கலாய்ப்பான். :)

//மூணரை வருஷத்துல 200 போஸ்ட் போட்டதுக்கு வாழ்த்துக்கள். நானும் தான் சமீபத்துல வலையுலகத்துல 5 வருஷம் நிறைவு செய்தேன்.. 82 இடுகை தான் எழுதியிருக்கேன்..

இந்த வருஷமாவது 100 முடிக்கணும்னு நெனச்சிட்டிருக்கேன்.. பார்ப்போம்...

நாமெல்லாம் slow cycling race -ல முதல் பரிசு வாங்கற ஆளுங்க.. விடாம களத்துல இருக்கோம்-ல.. அதச் சொல்லித்தான் தேத்திக்க வேண்டியிருக்கு..

வாழ்த்துக்கள் !!//

வாழ்த்துனதுக்கு நன்றி சார். நீங்களும் இந்த வருஷம் நூறு அடிக்க முயற்சி செய்யுங்க. நன்றி.
:)

துபாய் ராஜா said...

/இது என்னோட இருநூறாவது பதிவு./

முதல்ல டபுள் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்

//நூறாவது பதிவு போட்டது 2006ல. முதல் நூறு போட ஆறு மாசம், அடுத்த நூறு போட மூனு வருஷம்.//

நீங்களாவது பரவாயில்லை.2006ல பதிவெழுத ஆரம்பிச்ச நான் 25-வது பதிவே இப்போதான் எழுதினேன்.

// இதையெல்லாம் சொன்னா எனக்கு கிறுக்கு புடிச்சுருக்கும்பாங்களோ?//

படிக்கிறவங்களுக்கு பைத்தியம் பிடிக்காம இருந்தா சரி :))))).

கி(ழ)ளைக்தை பதிவுகள் தொடரட்டும்.

:))))))))))))))

அது ஒரு கனாக் காலம் said...

வாழ்த்துக்கள் .... பதிவு பெருசா இருந்தாலும் , விடாம படிச்சேன் ( விடாம படிக்க வச்ச்ருக்கீங்க )...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எனக்கு ஞாபகசக்தி கம்மின்னு ரொம்ப வருத்தப்பட்டுக்கிட்டிருந்தேன்.. நீங்க படும்பாட்டைப் பார்த்து எனக்கு இப்ப என் ஞாபசக்தி பத்தி நிம்மதியா இருக்கு..:)

கைப்புள்ள said...

//200- க்கு வாழ்த்துக்கள். இந்த மாதிரி சின்ன சின்ன சப்பை மேட்டர் விஷயங்கள் இல்லைன்னா வாழ்க்கைல ஒரு ஜீவன் இல்லாம போயிடுமோ? //

அதே அதே சபாபதே...நன்னிப்பா திரு
:))

ஊர்சுற்றி said...

//உங்கள்ல யாருக்காச்சும் இந்த மாதிரி தோணியிருக்கா?//கட்டாயமா தல.

எனக்கு இந்த மாதிரி நிறைய அனுபவம் இருக்கு.

Unknown said...

//சொல்லாட்டி மட்டும் ;)

200 க்கு வாழ்த்துக்கள்!//

ஐ ரிப்பீட் யுவர் ஆனர் :-)

Geetha Sambasivam said...

200-க்கு வாழ்த்துகள், அது சரி, அது என்ன இத்தனை ஆராய்ச்சி எல்லாம்>???? தேவையா இது??? :P:P:P:P

ஜொள்ளுப்பாண்டி said...

200 அடிச்சுபுட்டீய 'தல'... அப்படியே உருமியடிச்சு 'கெடா' வெட்டி பொங்கல் வைங்கப்பு.... கூட ஒரு 180 கொடுத்தா நாங்களும் ஓரமா அடிப்போம்ல..??.. ;)))

வாழ்த்துக்கள் கைப்பூ....!!

dondu(#11168674346665545885) said...

திருவல்லிக்கேணி அக்பர் சாஹேப் தெருவா? அங்கிருந்த அதெ தட்சிண ஹிந்தி பிரச்சார சபையிலேத்தான் நான் ராஷ்ட்ர பாஷா வகுப்பில் படித்தேன். எங்களுக்கு பாடம் எடுத்தவர் ராமசந்திரன்ஜீ.

இம்மாதிரி ட்ரிவியாவெல்லாம் எனக்கும் ஞாபகம் இருப்பதால்தான் நான் இப்போ கூட சமீபத்தில் 1952 என்றெல்லாம் எழுதறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Porkodi (பொற்கொடி) said...

//நான் கூட ஒரு ஸ்லம்டாக் மில்லியனேர் தாங்க. // uncle, idha padichadhuku apram mela epdi padikradhu sollunga? :D

Porkodi (பொற்கொடி) said...

chi yaaru solva kiruku nu? crack nu vena solalam :D 2nd matter thaan enaku puriyave illa! adhu epdi andha numbers ellam fancya kooda illa.. edhuku innum nenavu iruku ungluku??? :O

Porkodi (பொற்கொடி) said...

200a! kalakunga!! vaazhtha vayadhillai vanangugiren ;)

பாசகி said...

ஜி உங்களுக்கு ஒரு விருது தந்திருக்கேன், வந்து வாங்கிட்டு கண்டிப்பா தொடருங்க :)

பின்னோக்கி said...

//இந்த மாதிரி டிரிவியா(trivia) விஷயங்கள் மனசுல நல்லா நிக்குது

அது ஒன்னும் இல்லை. ராத்திரியில, நம்ம மூளை, எது வாண்டட், எது அன் வாண்டட் செய்திகள்னு, தபாலாபீஸ் மாதிரி பிரிக்கும். அந்த நேரம் தூங்காம, இந்த மாதிரி பதிவுகள் எழுதும் போது, மூளை ஓவர் ஒர்க் பண்ணும். அப்ப, சில சில்லுண்டி விஷயங்கள, முழுசா அழிக்கறத்துக்குள்ள, நீங்க அத அதாங்க மூளைய உபயோகிச்சீங்கன்னா, அந்த தகவல் அப்படியே தங்கிடும். சின்ன வயசுல நீங்க சீக்கிரம் தூங்குனது இல்ல போல.

நான் எல்லாம் அப்படி இல்லை. கரெக்ட்டா தூங்கிடுவேன். அதுனால எனக்கு இந்த மாதிரி சின்ன சின்ன விஷயம் நியாபகம் இருக்காது.

1988, மார்ச், 18 ஆம் தேதி, காலையில 12B பஸ்ல போகும் போது நான் டிரைவர்கிட்ட இருந்து மூணாவது சீட்டுல உட்கார்ந்திருந்தேன். அப்ப நான் வாங்குன டிக்கெட் கலர், வெளிர் பச்சை, டிக்கெட்ல AT2387656ன்னு எழுதியிருந்துச்சு, அப்ப 10 சீட் தள்ளி உட்கார்ந்திருந்த ஒரு பையன், சிவப்பு கலர் கோடு போட்ட ஷர்ட் போட்டுருந்தான்.... .... ...... .....