Sunday, March 09, 2008

531 பங்காரப்பேட் பாசெஞ்சர்

கடைசியா இதுக்கு முன்னாடி பயணிகள் தொடர்வண்டியில எப்போ பயணம் செய்தேன்னு ஞாபகம் இல்லை. அநேகமா பயணிச்சதே இல்லைன்னு தான்னு நெனக்கிறேன். ஆனா நேற்று எந்த வித முன்னேற்பாடோ, அவசியமோ இல்லாமல் பயணிகள் தொடர்வண்டியில் ஒரு பயணத்தை அமைத்துக் கொடுத்தான் 'அவன்'. மகனையும் மருமகளையும் பார்க்க வந்திருந்த அம்மாவை வழியனுப்பி வைப்பதற்காகப் பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் ரயில்நிலையத்திற்கு நேற்றுச் சென்றிருந்தேன். பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியாக இருந்த போதிலும் சனிக்கிழமை ஆதலால் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் ஒரு பெட்டியில எத்தனை பேர் முன்பதிவு செய்திருக்காங்களோ அதை விட இரண்டு மடங்கு பேர் முன்பதிவு பெட்டியில முன்பதிவு செய்யாமல் ஏறுகிறார்கள். பகலில் சென்று இரவில் திரும்பி விடும் பிருந்தாவன், லால்பாக் ஆகிய தொடர்வண்டிகளில் வர வர நிலைமை மோசம் ஆகிக் கொண்டே செல்கிறது. முன்பதிவு செய்யப்பட்டப் பெட்டிகளில் அத்துமீறி ஏறுபவர்களைத் தடுக்க யாருமே இல்லை என்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டுக்குள்ளேயே செல்லும் பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ்களில் நிலைமை எப்படி என்று தெரியவில்லை. முண்டியடிக்கும் கூட்டத்தில் அம்மா இரண்டு பைகளை எடுத்துக் கொண்டுத் தனியாக ஏறி அமர்வது கடினம் என்று எண்ணி நானும் ஏறினேன். ஆனால் ரயிலுக்குள் ஏறுவதற்கே போதும் போதும் என்றாகி விட்டது. அதற்கு பின் அம்மாவுக்காகப் பதிவு செய்யப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவரை எழுப்பி அம்மாவை அமர வைப்பதற்குள் ரயில் புறப்பட்டு விட்டது. நான் இறங்க முற்படும் போது யாருமே வழிவிடவில்லை. எடம் இல்லை, ஆவறதில்லை என்று சொல்லி என்னையும் ரயிலிலேயே பயணப் படுத்தினார்கள். சரி அடுத்த ஸ்டேஷனான வைட்ஃபீல்ட்டில் இறங்கிவிடலாம் என்று நினைக்க, அதிலும் விழுந்தது மண். பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் வைட்ஃபீல்டில் நிற்காது அடுத்தபடியாக பங்காரப்பேட்டில் தான் நிற்கும் என்று சொன்னார்கள். விதியை நொந்து கொண்டு பங்காரப்பேட் வரை டிக்கெட் இல்லாமல் நின்று கொண்டே பயணம் செய்தேன். ஏற்றிவிட வந்தவன் ரயிலில் பயணமான அனுபவமும் நமக்கு வாய்த்திருக்கிறதே என எண்ணி பின்னால் பெருமை பட்டுக் கொண்டேன். ஆக மொத்தம் இன்னும் நான் அனுபவிக்க நிறையவே இருக்கிறது :)

முக்கால் மணி நேரத்தில் அதிவேக விரைவு வண்டியில் கடந்தத் தூரத்தை பயணிகள் வண்டியில் கடப்பதற்கு எப்படியும் இரண்டு மணி நேரமாவது ஆகும் என்று தெரிந்திருந்த போதிலும் ரயில் நிலையத்திற்கு வெளியே சென்று பேருந்தைப் பிடிக்க ஏனோ தோன்றாததால் அங்கு நின்று கொண்டிருந்த 531 பங்காரப்பேட் பெங்களூர் பாசெஞ்சர் ரயிலில் ஏறிக் கொண்டேன். பாசெஞ்சர் ரயில் என்றதும் மரத்தினால் ஆன இருக்கைகளே இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு ஆச்சரியம். எல்லாப் பெட்டிகளிலும் குஷன் இருக்கைகளே பொருத்தப்பட்டிருந்தன. உட்கார இடம் தேடிக் கொண்டிருக்கும் போது உண்ட களைப்பில் இருக்கைகளில் காலை நீட்டி சில பேரிளம்பெண்களும் மற்றும் சில பேரிளஆண்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்களுடைய சயனத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் எப்படியோ ஒரு இடத்தைப் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். உட்கார்ந்த நிலையிலேயே வண்டி புறப்பாட்டிற்காக 45 நிமிடங்கள் காத்திருந்தேன், எழுந்து நடமாடினால் உள்ள இடமும் பறிபோய் விடுமோ என்ற எண்ணம் தான். இது வரையிலான என்னை வளர்த்து ஆளாக்கிய, என்னுள் இருக்கும் இண்ட்ரோவெர்ட் அமர இடம் கிடைத்ததும் உயிர்த்தெழுந்தான். அது முதல் வண்டியிலிருந்து இறங்கும் வரை பல விதமான எண்ணங்களுக்கும் மன ஓட்டங்களுக்கும் காரணம் ஆனான். கோர்வையற்ற அம்மனவோட்டங்களின் பிரதிபலிப்பே இப்பதிவு.

"இந்த அம்மா மட்டும் நான் சொன்ன பேச்சைக் கேட்டிருந்தா இப்படி காரணம் இல்லாம பாசெஞ்சர் டிரெயினில் பயணிக்கிற நெலமை நமக்கு வந்திருக்குமா" என்று நினைத்தது என் மனம். ஏசி சேர் காரில் முன்பதிவு செய்கிறேன் என்ற கூறியதற்கு "வேணாம் வேணாம் ஏசியில எல்லாம் பண்ணாதே...எனக்கு ஏசி ஒத்துக்காது. குளுருல நடுங்கிக்கிட்டே போவனும்"னு சொன்னாங்க. "குளுருல நடுங்கற மாதிரி எல்லாம் இருக்காது...24 டிகிரி தான் மெயிண்டெயின் பண்ணுவாங்க"ன்னும் சொல்லிப் பார்த்தேன். "வேணாம்ப்பா, செகண்ட் க்ளாஸ்லேயே பண்ணு அப்படியே ஜன்னலோரம் உக்காந்து வேடிக்கை பாத்துக்கிட்டே போய்டுவேன், ஏசி எல்லாம் எனக்கு பழக்கமில்ல"ன்னு வந்தது பதில். "பழக்கமில்லன்னா என்ன? எப்பவுமே செகண்ட் க்ளாஸ்லே தானே போறீங்க? ஏசியில போனா தானே பழக்கம் ஆகும்" அப்படின்னேன். அதுக்கு வந்த பதிலான "நீ என்னப்பா பெரிய கம்பெனியில பெரிய வேலையில இருக்கே? எங்க வீட்டுக்காரரு ரிட்டையர்டு வாத்தியார் தானே?" என்னை யோசிக்க வைத்தது. நான் கூட வாத்தியார் பிள்ளையாக மட்டும் இருந்த நேரத்தில், தில்லியிலிருந்து சென்னைக்கு அனல் கக்கும் மே மாத வெயிலில் அச்சம் மடம் நாணம் இதை எல்லாம் மறந்து சட்டையைக் கழட்டி வைத்து விட்டு வெறும் பனியனோடு கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸில் பயணம் செய்தவன் தானே நானும். இப்போது சென்னையிலிருந்து பெங்களூர் செல்வதற்குக் கூட யோசிக்காமல் ஐராவதத்தில் டிக்கெட் எடுக்கிறேன். கையில் பொருள் சேரும் போது மனிதனின் தேவைகளும் அவன் நாடும் வசதிகளும் அதிகரிக்கிறது.

தமிழ் துணைப்பாட நூலில் படித்த ஒரு கதை "கலையின் விலை". ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அகிலன் அவர்கள் எழுதியது. கதையில் ஒரு எழுத்தாளர். திறம்பட எழுதக் கூடியவர். ஆனால் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காமல் வறுமையில் உழல்பவர். அவர் மனைவியும் மக்களும் அவருடைய இவ்வறுமையின் காரணமாக பல இன்னல்களை அனுபவிப்பர். யாரோ ஒருவர் வேலை தருகிறேன் நேர்காணலுக்கு வாருங்கள் என்று ரயில் டிக்கெட்டும் அனுப்பி அழைப்பார். தான் மிகவும் காதலிக்கும் எழுத்தைத் தியாகம் செய்கிறோமே என்ற வருத்தம் இருந்தாலும் தன் குடும்பத்தின் நிலையைக் கண்டு வெளியூர் செல்லத் தயாராகி ரயிலில் பயணப்படுவார். ரயில் எங்கோ ஒரு ஸ்டேஷனில் நிற்கும் போது யாரோ ஒருவர் - இவருடைய நெடுநாளைய வாசகராம், இவரை அடையாளம் கண்டு கொண்டு இவர் கையைப் பிடித்துக் கொண்டு கண்ணில் ஒற்றிக் கொள்வார் "ஐயா! நான் உங்களுடைய பரம விசிறி..."இத்யாதி இத்யாதி என்று. வாசகர் சென்றதும் தன் கையைப் பார்ப்பார் எழுத்தாளர். அதில் அவர் காண்பது ஒரு துளி கண்ணீர். "ஆஹா! இதுவல்லவோ கலையின் விலை. இதற்கு எத்தனை ஆயிரங்கள் கொடுத்தாலும் ஈடாகுமா? பால்காரன் பாக்கியையும் மளிகைக் கடைகாரன் பாக்கியையும் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். மனைவியை எதாவது சொல்லி சமாதானப் படுத்திக் கொள்ளலாம். கலையை விடலாகாது"என்றெண்ணி அந்த ஸ்டேஷனில் இறங்கித் திரும்பிச் சென்று விடுவார். எட்டாம் வகுப்பில் படிக்கும் போதே இந்த கதை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. கலையின் மீது அவ்வளவு பற்றிருக்கும் போது எதற்காக ஐயா கல்யாணம் செஞ்சிக்கிட்டீங்க? உங்களை நம்பி இருக்கும் உங்க மனைவியும் மக்களும் வறுமையில் வாடுவது எந்த விதத்தில் நியாயம்? நீ நேசிக்கும் தொழிலின் மூலமாக மனைவி மக்களைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை எனும் போது வேறு வேலை தேடிக் குடும்பத்தைக் காப்பாற்றுவது தானே அழகு? அதையெல்லாம் வுட்டுட்டு கடனையெல்லாம் பாத்துக்கலாம் மனைவியை ஏமாத்திடலாம்னு இவரும் இறங்கிப் போய்டுவாராம். சுத்த ஹம்பக்கா இருந்தது படிக்கிறப்போ. ஒரு வேளை யாராச்சும் என்னை எங்கேயாச்சும் அடையாளம் கண்டுக்கிட்டு "ஐயா கைப்புள்ள! உங்க எழுத்துக்கு நான் அடிமை. நீங்க நல்லவரு...வல்லவரு"ன்னு சொல்லி என் கையில ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தினா ஒரு வேளை நான் பொட்டித் தட்டறதை எல்லாம் வுட்டுப் போட்டு முழு நேர ப்ளாக்கர் ஆயிடுவேனோ என்னவோ? ஏனோ நேத்து இந்த கதை ஞாபகத்துக்கு வந்துடுச்சு.

ரயிலில் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியே வெளியே மட்டும் வேடிக்கை பார்க்காமல் உள்ளே உட்கார்திருக்கும் மனிதர்களைக் கவனிப்பதும் ஒரு பொழுதுபோக்கு தான். ரயிலில் ஏறியதும் பசிக்கத் தொடங்கும் பலரைப் பார்த்திருக்கிறேன். எட்டு பழங்கள் பத்து ரூபாய்க்கு விற்கப் படும் சப்போட்டா பழங்களை அங்கேயே தின்று அதன் விதைகளை சீட்டுக்குக் கீழே போடுபவர்களையும், இரண்டு ரூபாய்க்கு வாங்கித் தின்ற அவித்த வேர்கடலை செவிக்கும் வயிற்றுக்கும் பற்றாமல் போகவே இன்னும் இரண்டு ரூபாய்க்கு வாங்கி அதன் குப்பைகளையும் பெட்டிக்குள்ளேயே போடுகிறவர்களையும் பார்த்துக் கொண்டே சென்றேன். எனக்கு எதிர் சீட்டில் ஒரு அப்பா, அம்மா, மகள் அடங்கிய மூவர் குழு வந்தமர்ந்தது. ரயில் பயணத்தில் வழி நெடுகத் தின்றுக் கொண்டே செல்பவர்கள் ஒரு ரகம் என்றால், ஏறி அமர்ந்ததும் தூங்கத் தொடங்குபவர்கள் இன்னொரு ரகம். நடுவில் உட்கார்ந்து நாளிதழ் படித்துக் கொண்டிருந்த தந்தையின் மடியில் தலை வைத்து மகள் படுக்க, கணவரின் தோளில் சாய்ந்து மனைவி கண்ணயர்ந்தார். அம்மனிதர் இதை ஒரு பெருமையான நிகழ்வாகக் கருதியிருக்க வேண்டும். ஏனெனில் இவ்வளவு அசவுகரியமான நிலையிலும் தன்னுடைய மூக்குக் கண்ணாடியை உயர்த்தி உயர்த்தி பேப்பர் படித்துக் கொண்டிருந்தாரே ஒழிய, மகளிடமும் மனைவியிடமும் தன் அசவுகரியத்தைக் குறித்து எதுவும் சொன்னதாகத் தெரியவில்லை. இன்னொன்னு கவனிச்சேன். மகளும் மனைவியும் சிறு சிறு இடைவெளிகளில் தூங்கிக் கொண்டு வந்தாலும் மனிதர் சிறிது நேரம் கூட கண் அயரவில்லை. பொறுப்புகளைச் சுமக்கும் போது தூக்கம் எல்லாம் வராது என்பது உண்மை தானோ?

எக்ஸ்பிரஸ் ரயில்களில் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து போகும் சிறு ஸ்டேஷன்களிலும் நேற்று ரயில் நின்று நின்று சென்றது. அத்தகைய சிறு ஸ்டேஷன்களை நம்பியும் கிராமங்கள் இருக்கின்றன என்பதும் அதை நம்பி மனிதர்களும் அவர்களுடைய வாழ்க்கைகளும் இருக்கின்றன என்பதும் புலனானது. ஒரு சனிக்கிழமை மதியம் பங்காரப்பேட்டை என்னும் ஊருக்கும் மாலூர் என்னும் ஊருக்கும் இடையே பாசெஞ்சர் ரயிலில் பயணிக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படிப் பட்டதாக இருக்கும் என்றும் அவனுடைய சிந்தனைகள் எத்தகையதாக இருக்கும் என்று ஒரு கணம் எண்ணிப் பார்த்தேன். வாரத்தில் சில நாட்கள் ஒரு ஏசி ஆஃபீசில் உட்கார்ந்து பெட்டி தட்டிப் பிழைப்பை நடத்தும் என்னைப் போன்றவனுக்கு அது மட்டும் தானே செய்ய முடியும்?

பயணம் தொடரும்...

42 comments:

siddhan said...

வழக்கம்போல சுவாரசியமான பதிவு!!!

அபி அப்பா said...

கைப்ஸ்! நான் வேண்டுமானா உங்க கையை பிடிச்சு 2 சொட்டு கண்ணீர் விடவா! பழைய படி நிறைய பதிவு எழுதி நிறைய ஆப்பு வாங்க வேண்டி:-))

அபி அப்பா said...

ஸ்ஸ்ஸ்..அப்பாடா, இப்பல்லாம் முன்ன மாதிரி ஸ்டைல்ல பின்னூட்டம் போடாம பதிவின் நடுவே 2 வரி படிச்சு டெக்னிக்கலா ஏமாத்த வேண்டியிருக்கு....கண்ணை கட்டுதே:-))

Doctor Bruno said...

//பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ்களில் நிலைமை எப்படி என்று தெரியவில்லை.//
பரவாயில்லை. அவ்வளவு மோசமில்லை.
//கையில் பொருள் சேரும் போது மனிதனின் தேவைகளும் அவன் நாடும் வசதிகளும் அதிகரிக்கிறது. //
சந்தேகம் இல்லை. கல்லூரி காலங்களில் 15 கி.மீ. தூரம் உள்ள நண்பனின் வீட்டிற்கு சனி, ஞாயிறுகளில் மிதிவண்டியில் சென்றது உண்டு.

இப்பலாம் மிதிவண்டி ஓட்டுவதேயில்லை :) :)

G.Ragavan said...

பயணம் தொடரட்டும்... நல்ல சிந்தனைகள். கே.ஆர் புரத்துல எப்பவுமே கூட்டம்தான். நல்ல அனுபவம்....

முதலில் சோற்றுக்குப் பாடு... பிறகு எழுத்துக்குப் பாடு... அதான் வாழ்க்கை. எழுத்தும் மொழியும் தேவைதான். வயிறைக் காயப் போட்டுட்டு... கூட இருக்குறவங்களைப் பட்டினி போட்டுட்டு என்ன எழுதுறது?

இலவசக்கொத்தனார் said...

//"ஐயா கைப்புள்ள! உங்க எழுத்துக்கு நான் அடிமை. நீங்க நல்லவரு...வல்லவரு"//

கண்ணீர்த் துளி பார்சலில் வருது!! :))

ஆனாலும் இந்த பெங்களூர் ரயில்களில் இந்த முன்பதிவு இல்லாம வரவங்க அட்டகாசம் ரொம்பவே அதிகம். நிற்கும் பொழுது நம்ம தோளில் சாஞ்சுக்கிறது, பாத்ரூம் போயிட்டு வரதுக்குள்ள நம்ம சீட்டில் உட்கார்ந்துக்கறது என ஒரே பிரச்சனைதான். இதுக்குப் பயந்தே இரவுப் பயணம் அல்லது சதாப்தி ரயிலிலோதான் போகறது.

இலவசக்கொத்தனார் said...

ஆனாலும் ரெண்டு மணி நேரப் பயணத்தில் தூக்கம் வராம யோசிச்சதுக்கெல்லாம் தொடரா? நல்லா இருங்கடே!!

அரை பிளேடு said...

அரக்கோணத்திற்கும் சென்னைக்கும் இடையே செல்லும் பாசெஞ்சரில் சென்றதுண்டா. அல்லது ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ். (பேருதான் எக்ஸ்பிரஸ்:)

பாசெஞ்சர் வண்டிகள் சுவாரசியமானவை.

கப்பி | Kappi said...

//வழக்கம்போல சுவாரசியமான பதிவு!!!//

ரிப்பீட்டே!!

//பயணம் தொடரும்...//

நாங்களும் கூட வருவோம்ல..வித்தவுட்ல :))

கைப்புள்ள said...

//வழக்கம்போல சுவாரசியமான பதிவு!!!//

வாங்க சித்தன்,
வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க.

கைப்புள்ள said...

//கைப்ஸ்! நான் வேண்டுமானா உங்க கையை பிடிச்சு 2 சொட்டு கண்ணீர் விடவா! பழைய படி நிறைய பதிவு எழுதி நிறைய ஆப்பு வாங்க வேண்டி:-))//

வாங்க தொல்ஸ்,
நமக்கு ரெண்டு சொட்டெல்லாம் பத்தாதுங்க. மீட்டருக்கு மேல எதனா பாத்துப் போட்டுக் குடுங்க..
:)

கைப்புள்ள said...

//ஸ்ஸ்ஸ்..அப்பாடா, இப்பல்லாம் முன்ன மாதிரி ஸ்டைல்ல பின்னூட்டம் போடாம பதிவின் நடுவே 2 வரி படிச்சு டெக்னிக்கலா ஏமாத்த வேண்டியிருக்கு....கண்ணை கட்டுதே:-))//

பரவால்லீங்களே! நான் கூட நீங்க முழு பதிவையும் படிச்சீங்கன்னே நம்பிட்டேன். ரெண்டு வரி மட்டும் படிச்சீங்கங்கிறது தெரியவே இல்லை...அவ்வளவு தத்ரூபமா இருந்தது உங்க பின்னூட்டம். அப்படியே மெயிண்டேண் பண்ணிக்கங்க.
:)

கைப்புள்ள said...

//பரவாயில்லை. அவ்வளவு மோசமில்லை//

வாங்க டாக்டர் ப்ரூனோ,
அப்பா...எங்கேயாச்சும் ஒரு இடத்துலயாவது ஒழுங்கா இருக்கே?

//
சந்தேகம் இல்லை. கல்லூரி காலங்களில் 15 கி.மீ. தூரம் உள்ள நண்பனின் வீட்டிற்கு சனி, ஞாயிறுகளில் மிதிவண்டியில் சென்றது உண்டு.

இப்பலாம் மிதிவண்டி ஓட்டுவதேயில்லை :) :)//

அதே தான். கககபோ. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

கைப்புள்ள said...

//பயணம் தொடரட்டும்... நல்ல சிந்தனைகள். கே.ஆர் புரத்துல எப்பவுமே கூட்டம்தான். நல்ல அனுபவம்....
//

வாங்க ஜி.ரா,
இந்த மாதிரி எதாச்சும் அனுபவத்துல தெரிஞ்சிக்கிறதை எங்க நைனா "புத்தி கொள்முதல்"னு சொல்லுவாரு. எனக்கும் நேத்து நல்ல புத்தி கொள்முதல் தான்.
:)

//
முதலில் சோற்றுக்குப் பாடு... பிறகு எழுத்துக்குப் பாடு... அதான் வாழ்க்கை. எழுத்தும் மொழியும் தேவைதான். வயிறைக் காயப் போட்டுட்டு... கூட இருக்குறவங்களைப் பட்டினி போட்டுட்டு என்ன எழுதுறது?//

ஆமாங்க. என்ன கொடுமைன்னா இந்தக் கதை அப்போ தமிழ் துணைப்பாட நூலில் இருந்தது. இந்த கதையைப் படிக்கிற சின்னப் பசங்க இதுலேருந்து என்ன புரிஞ்சுக்க்கனும்னு எதிர்பார்த்தாங்கன்னு இன்னும் கூட எனக்கு புலப்படலை.

கைப்புள்ள said...

//கண்ணீர்த் துளி பார்சலில் வருது!! :))//

என்ன எனக்கு அனுப்பனும்னு கண்ணீர்த் துளியைப் பாட்டில்ல புடிச்சீங்களா கொத்ஸ்?

//ஆனாலும் இந்த பெங்களூர் ரயில்களில் இந்த முன்பதிவு இல்லாம வரவங்க அட்டகாசம் ரொம்பவே அதிகம். நிற்கும் பொழுது நம்ம தோளில் சாஞ்சுக்கிறது, பாத்ரூம் போயிட்டு வரதுக்குள்ள நம்ம சீட்டில் உட்கார்ந்துக்கறது என ஒரே பிரச்சனைதான். இதுக்குப் பயந்தே இரவுப் பயணம் அல்லது சதாப்தி ரயிலிலோதான் போகறது//

ஆமாங்க இதுல என்ன கொடுமைன்னா...அந்த மாதிரி முன்பதிவு இல்லாம ஏறிக்கிற ஆண்கள், பெண்கள் எல்லாரும் ரொம்ப படிச்சவங்களா டீசெண்டா தான் இருக்காங்க பாக்குறதுக்கு. ஏத்தி விட வந்த நான் வித்தவுட்ல ஒரு 50 கி.மீ பயணம் செஞ்சதுக்கே எனக்கு திக்..திக்னு இருந்துச்சு. எங்கே வந்து எனக்கு டிக்கெட் இல்லா பயணம்னு ஃபைன் போட்டுருவாங்களோன்னு. ஆனா முன்பதிவு இல்லாம ஏறுறவங்க பண்ணற அடாவடித் தனம் இருக்குதே...அப்பப்பா. அத்துமீறி ஏறிக்கிட்டு கொஞ்சம் இடம் விடறதுக்கு நூறு பேச்சு பேசுறாங்க. என்னமோ போங்க. நெலமை எப்போ மாற போகுதோ தெரியலை.

கைப்புள்ள said...

//ஆனாலும் ரெண்டு மணி நேரப் பயணத்தில் தூக்கம் வராம யோசிச்சதுக்கெல்லாம் தொடரா? நல்லா இருங்கடே!!//

ஹி...ஹி...நம்ம பப்பும் கொஞ்சம் வேவணும் இல்ல கொத்ஸ்? இல்லன்னா போன வருஷம் மாதிரி வருஷத்துக்கு பத்து போஸ்டோட நம்ம கணக்கு முடிஞ்சிருமில்லா?
:)

கைப்புள்ள said...

//அரக்கோணத்திற்கும் சென்னைக்கும் இடையே செல்லும் பாசெஞ்சரில் சென்றதுண்டா. அல்லது ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ். (பேருதான் எக்ஸ்பிரஸ்:)

பாசெஞ்சர் வண்டிகள் சுவாரசியமானவை//

வாங்க அரைபிளேடு,
இல்லீங்கோ...நீங்க சொன்ன ரயிலில் போனதில்லீங்கோ. உண்மை தான். அப்படியே பாசெஞ்சர் டிரெயின்ல உக்காந்து நோட் பண்ணிக்கிட்டே வந்தீங்கன்னாக்கா, உங்களை மாதிரி வெட்டிப்பயல்மாதிரி கதாசிரியர்களுக்கு பல சிறுகதைகளும் ஏன் சில புதினங்களோ கூட மனதில் உதிக்கலாம்.
:)

கைப்புள்ள said...

//ரிப்பீட்டே!!//

//நாங்களும் கூட வருவோம்ல..வித்தவுட்ல :))//

வாய்யா கப்பி,
வித்தவுட்ல போறது என்னமோ அவ்வளவு ஈஸி மாதிரி பேசறே? அன்னிக்கு மட்டும் நான் பங்காரப்பேட் ஸ்டேஷன்ல செக்கிங்ல மாட்டிருந்தேன்னா...எப்படியெல்லாம் அவமானப் படுத்திருப்பாங்களோ? ஆமா நீ போயிருக்கியா வித்தவுட்ல?

வல்லிசிம்ஹன் said...

திக் திக் பயணமா.கைப்ஸ்.
நானும் என் மருமகள் கிட்ட சொல்லுவேன். '' உங்க வீட்டுக்காரர் சம்பாத்தியமும் எங்க வீட்டுக்காரர் சம்பாத்தியமும் வேறம்மா.:))''
அப்டீனு.
கேட்காமல் கிடைக்கும் பொழுதுகள் அருமையானவை.
உண்மையாவே நல்லா யோசிக்க வைக்கும். ஆனால் அதை அப்படியே பதியணும்னு நீங்க நினைச்சதுக்கு உங்களுக்குப் பாராட்டுகள்.

ஜன்னல் கதைகள்னே பதிவுகள் போடலாம்:) அத்தனை விவரம் நமக்கு ரயில் ஜன்னல் வழியாகக் கிடைக்கும்:)

ambi said...

அருமையான எழுத்து நடை கைப்பு. மால்குடி டேஸ் ரேஞ்சுக்கு எழுதி இருக்கீங்க. :))

வசதியும், வாய்ப்பும் இருந்தால் ஒரு மினி சீரியலா தயாரிச்சு அவார்டு எல்லாம் வாங்கி இருப்பேன். :p

திவாண்ணா said...

//அதுக்கு வந்த பதிலான "நீ என்னப்பா பெரிய கம்பெனியில பெரிய வேலையில இருக்கே? எங்க வீட்டுக்காரரு ரிட்டையர்டு வாத்தியார் தானே?" //

சரிதான். கேட்க கொஞ்சம் ஒரு மாதிரியாக இருந்தாலும் அவரவர் சூழ்நிலையிலேயே விடுவது நல்லது. ஏ.சி பழக்கப்பட்டா பின்னால் வேறு எங்காவது போகும் போது அடடா ஏ.சி இல்லையே என்று தோன்றும்.

Sathiya said...

ஐயா கைப்புள்ள! உங்க எழுத்துக்கு நான் அடிமை. நீங்க நல்லவரு...வல்லவரு;) ரொம்ப நல்லா சுவாரஸ்யமா எழுதி இருக்கீங்க!

கைப்புள்ள said...

//திக் திக் பயணமா.கைப்ஸ்.
நானும் என் மருமகள் கிட்ட சொல்லுவேன். '' உங்க வீட்டுக்காரர் சம்பாத்தியமும் எங்க வீட்டுக்காரர் சம்பாத்தியமும் வேறம்மா.:))''
அப்டீனு.
கேட்காமல் கிடைக்கும் பொழுதுகள் அருமையானவை.
உண்மையாவே நல்லா யோசிக்க வைக்கும். ஆனால் அதை அப்படியே பதியணும்னு நீங்க நினைச்சதுக்கு உங்களுக்குப் பாராட்டுகள்.//

வாங்க வல்லிம்மா, உங்க பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. என்ன தான் மகன் சம்பாதிச்சு அம்மா கையில கொடுத்தாலும் வீட்டுக்காரர் கையில் கொண்டு வந்து கொடுக்கறதுக்கு ஒரு தனி பிரியம் தானே? அனுபவத்துலயும் புரிஞ்சிக்கிட்டேன்.
:)

//ஜன்னல் கதைகள்னே பதிவுகள் போடலாம்:) அத்தனை விவரம் நமக்கு ரயில் ஜன்னல் வழியாகக் கிடைக்கும்:)//

ஆஹா...அருமையான பேரைச் சொல்லிருக்கீங்க :) அசத்தல்.

கைப்புள்ள said...

//அருமையான எழுத்து நடை கைப்பு. மால்குடி டேஸ் ரேஞ்சுக்கு எழுதி இருக்கீங்க. :))//

டேங்ஸுங்ணா...தரைக்கு மேல ஒரு நாலு அடில மிதக்கறாப்புல இருக்கு உங்க கமெண்டைப் படிச்சதும் :)

//வசதியும், வாய்ப்பும் இருந்தால் ஒரு மினி சீரியலா தயாரிச்சு அவார்டு எல்லாம் வாங்கி இருப்பேன். :p//

ஏய்! யாருப்பா அங்கே? தயாரிப்பாளர் சார் வந்துருக்காரு...வாங்க ஐயா! டீ சாப்பிடறீங்களா? கலர் சாப்பிடறீங்களா? கேசரி சாப்பிடறீங்களா?
:)

கைப்புள்ள said...

//சரிதான். கேட்க கொஞ்சம் ஒரு மாதிரியாக இருந்தாலும்//

அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க...ஏ.சில டிக்கட் புக் பண்ணறதைத் தடுக்கறதுக்கு இதெல்லாம் ஒரு சூட்சுமமா பயன்படுத்திருப்பாங்க எங்கம்மா. அவங்களைப் பத்தி எனக்கு தெரியாது?
:)

//அவரவர் சூழ்நிலையிலேயே விடுவது நல்லது. ஏ.சி பழக்கப்பட்டா பின்னால் வேறு எங்காவது போகும் போது அடடா ஏ.சி இல்லையே என்று தோன்றும்//

சரியாச் சொன்னீங்க. வருகைக்கு நன்றி.
:)

கைப்புள்ள said...

//ஐயா கைப்புள்ள! உங்க எழுத்துக்கு நான் அடிமை. நீங்க நல்லவரு...வல்லவரு;)//
ஒரு சொட்டுக் கண்ணீர் வந்தா தான் அதுவும் என் கை மேல வந்தா தான் கலையின் விலை எனக்கு புரியும். அதுனால முழு நேர ப்ளாக்கர் ஆவற உங்க அப்ளிகேசன்ஸ் "ரிஜிட்டட்".

//ரொம்ப நல்லா சுவாரஸ்யமா எழுதி இருக்கீங்க!//
தாங்க்ஸுங்கங்கோ.
:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எல்லாருக்குமே அந்த நல்லவரு வல்லவரு ன்னு சொல்லும் இடமும் இரண்டு சொட்டு கண்ணீரும் தான் மனசை கரைச்சிடுச்சுடும்ன்னு நினைக்கிரேன்....

மங்களூர் சிவா said...

//
அபி அப்பா said...
கைப்ஸ்! நான் வேண்டுமானா உங்க கையை பிடிச்சு 2 சொட்டு கண்ணீர் விடவா! பழைய படி நிறைய பதிவு எழுதி நிறைய ஆப்பு வாங்க வேண்டி:-))
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

மங்களூர் சிவா said...

//
இலவசக்கொத்தனார் said...
//"ஐயா கைப்புள்ள! உங்க எழுத்துக்கு நான் அடிமை. நீங்க நல்லவரு...வல்லவரு"//

கண்ணீர்த் துளி கூர்குல கிடைக்கும்!! :))

வர்றீங்கல்ல???

Geetha Sambasivam said...

//முன்பதிவு செய்யப்பட்டப் பெட்டிகளில் அத்துமீறி ஏறுபவர்களைத் தடுக்க யாருமே இல்லை என்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டுக்குள்ளேயே செல்லும் பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ்களில் நிலைமை எப்படி என்று தெரியவில்லை. //

வைகை, பல்லவனில் கொஞ்சம் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறாங்க, பொதுவாய் தென் மாவட்டங்களில் டிடிஆர் என்றொருவர் கண்காணிப்பு நல்லாவே இருக்கும், பயணிகள் அத்து மீற முடியாது. ஒரு முறை மும்பை செல்லும் ரயிலில் முன்பதிவு செய்துட்டே போங்களேன், பிரமாத அனுபவம் கிடைக்கும், பதிவு செய்தது, நீங்களா, இல்லை உங்கள் இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கும் நபரா என்று உங்களுக்கே சந்தேகம் வந்துடும்! நமக்கும் இம்மாதிரி நிறைய இருக்கு! ஆனால் ஏற்கெனவே எழுதிட்டதாலே எல்லாரும் போரடிக்குது சொல்லப் போறாங்களே நிறுத்தி வச்சுட்டேன். :P

இராம்/Raam said...

தல,

எப்போ நாமே மீட் பண்ணலாமின்னு சொல்லுங்க..

அன்னிக்கு நான் ஒங்க ரெண்டு கையையும் பிடிச்சி கண்ணிரோட உங்க எழுத்துக்கு நான் அடிமை. நீங்க நல்லவரு...வல்லவரு, நாலும் தெரிஞ்சவருன்னு சொல்லி அழனும்.... :)

enRenRum-anbudan.BALA said...

மறைந்த எழுத்தாளர் சுஜாதா "எழுத்தாளனுக்கு அப்சர்வேஷன், நடை ரெண்டும் முக்கியம்" என்று சொல்வது போல, இந்த ரயில் அனுபவத்தை மிக நேர்த்தியாக (start to end) எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே !

எனக்கும் 'மால்குடி டேஸ்' நினைவுக்கு வந்தது. நாஸ்டால்ஜியாவை தூண்டிய பதிவும் கூட !!!
எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

மோகன்,
இந்த எனது பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டம் என் ஞாபகத்தில் இன்னும் பசுமையாக உள்ளது :) (ஏன் என்று தெரியவில்லை ?)
http://balaji_ammu.blogspot.com/2006/01/blog-post.html
எ.அ.பாலா

கைப்புள்ள said...

//எல்லாருக்குமே அந்த நல்லவரு வல்லவரு ன்னு சொல்லும் இடமும் இரண்டு சொட்டு கண்ணீரும் தான் மனசை கரைச்சிடுச்சுடும்ன்னு நினைக்கிரேன்....//

மனசைக் கரைச்சிடுமா? என்னமோ போங்க...நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும். நன்றி.

கைப்புள்ள said...

//விடவா! பழைய படி நிறைய பதிவு எழுதி நிறைய ஆப்பு வாங்க வேண்டி:-))
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்//

மங்களூர் சிவா...ஆப்பு வாங்கும் வாழ்த்துகளுக்கு நன்றி.
:)

கைப்புள்ள said...

//வைகை, பல்லவனில் கொஞ்சம் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறாங்க, பொதுவாய் தென் மாவட்டங்களில் டிடிஆர் என்றொருவர் கண்காணிப்பு நல்லாவே இருக்கும், பயணிகள் அத்து மீற முடியாது. ஒரு முறை மும்பை செல்லும் ரயிலில் முன்பதிவு செய்துட்டே போங்களேன், பிரமாத அனுபவம் கிடைக்கும், பதிவு செய்தது, நீங்களா, இல்லை உங்கள் இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கும் நபரா என்று உங்களுக்கே சந்தேகம் வந்துடும்! நமக்கும் இம்மாதிரி நிறைய இருக்கு! ஆனால் ஏற்கெனவே எழுதிட்டதாலே எல்லாரும் போரடிக்குது சொல்லப் போறாங்களே நிறுத்தி வச்சுட்டேன். :P//

தலைவியாரே!
மிகத் தாமதமான பதிலுக்கு மன்னிக்கனும். நீங்களும் உங்க அனுபவங்களை எழுதுங்களேன். படிச்சிட்ட்டு பின்னூட்டம் போட என்னை மாதிரி சோம்பேறிகளுக்கு ஈஸ்ஸியா இருக்கும்ல?
:)

கைப்புள்ள said...

//அன்னிக்கு நான் ஒங்க ரெண்டு கையையும் பிடிச்சி கண்ணிரோட உங்க எழுத்துக்கு நான் அடிமை. நீங்க நல்லவரு...வல்லவரு, நாலும் தெரிஞ்சவருன்னு சொல்லி அழனும்.... :)//

மீட் பண்ணப்போ கோட்டை விட்டுட்டியே ராசா :)

கைப்புள்ள said...

//மறைந்த எழுத்தாளர் சுஜாதா "எழுத்தாளனுக்கு அப்சர்வேஷன், நடை ரெண்டும் முக்கியம்" என்று சொல்வது போல, இந்த ரயில் அனுபவத்தை மிக நேர்த்தியாக (start to end) எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே !

எனக்கும் 'மால்குடி டேஸ்' நினைவுக்கு வந்தது. நாஸ்டால்ஜியாவை தூண்டிய பதிவும் கூட !!!
எ.அ.பாலா//

சார்,
உங்கள் பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்தது. மிகத் தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கனும். மிக்க நன்றி.

கைப்புள்ள said...

//மோகன்,
இந்த எனது பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டம் என் ஞாபகத்தில் இன்னும் பசுமையாக உள்ளது :) (ஏன் என்று தெரியவில்லை ?)
http://balaji_ammu.blogspot.com/2006/01/blog-post.html
எ.அ.பாலா//

சார்,
சொன்னா நம்ப மாட்டீங்க. உங்க பேரைத் தமிழ்மணத்துல பாக்கும் போதெல்லாம் எனக்கும் சாரதி செஸ் கிளப் பத்திய இந்தப் பதிவு தான் ஞாபகத்துக்கு வரும். ஊர் பாசம் தான் காரணம்னு நெனக்கிறேன். நம்ம சக திருவல்லிக்கேணி காரரு...ரெட் பில்டிங்ல படிச்சவருங்கிறது தான் காரணமா இருக்குமோ?
:)

enRenRum-anbudan.BALA said...

மோகன்,

என்ன நம்ம பின்னூட்டத்திற்கு ரெஸ்பான்ஸ் வந்ததா என்று 2 நாட்கள் இங்கு வந்து பார்த்து விட்டுப் போய் விட்டேன் !!!

எனது பின்னூட்டம் தங்களுக்கு கொஞ்சமேனும் சந்தோஷத்தைக் கொடுத்தால், எனக்கும் மகிழ்ச்சியே ! என்ன இருந்தாலும், திருவல்லிக்கேணிக்காரர் ஆயிற்றே :)

எ.அ.பாலா

கைப்புள்ள said...

//என்ன நம்ம பின்னூட்டத்திற்கு ரெஸ்பான்ஸ் வந்ததா என்று 2 நாட்கள் இங்கு வந்து பார்த்து விட்டுப் போய் விட்டேன் !!!//

மறுபடியும் மன்னிப்பு வேண்டுகிறேன் :(

//எனது பின்னூட்டம் தங்களுக்கு கொஞ்சமேனும் சந்தோஷத்தைக் கொடுத்தால், எனக்கும் மகிழ்ச்சியே ! என்ன இருந்தாலும், திருவல்லிக்கேணிக்காரர் ஆயிற்றே :)//

கொஞ்சநஞ்ச மகிழ்ச்சியா? வானத்துல மெதந்துக்கிட்டு இருந்தேன். மிக்க நன்றி சார்.

சந்தனமுல்லை said...

JP என்று சொல்லப் படும் எங்க ஏலகிரி எக்ஸ்பிரஸை நினைவூட்டியது உங்க பதிவு! இதே மாதிரி தான் இருக்கும்..அது ஒரு இண்டஸ்ட்ரி மாதிரி..இல்லைன்னா ஒரு இன்ஸ்டிடூஷன் மாதிரி கூடன்னு சொல்லலாம்! விதவிதமான மனிதர்கள்..நாம அமைதியா உட்கார்ந்து கவனிச்சுக்கிட்டே போகலாம்..ஒரு ஆர்.கே.நாரயன் கதை படிச்ச எஃபெக்ட் கிடைக்கும்! :-) ட்ரெய்ன்லே படிக்கறதுக்காக புக் எடுத்துக்கிட்டு போவேன்..ஆனா ட்ரெயின்ல கண் முன்னாடி நடக்கும் பல சுவாரசியமான நிகழ்வுகளிலே படிக்க முடிஞ்சதேயில்ல! ஹ்ம்ம்..நல்ல பதிவு கைப்ஸ்!!