Saturday, October 07, 2006

எனது சித்தூர்கட் செலவு

வேலை விஷயமா சித்தூர்கட்(Chittorgarh) வந்து அஞ்சு மாசம் ஆச்சுங்க. இந்த அஞ்சு மாசங்களும் இனிமையாப் போனதுன்னு தான் சொல்லனும். பல தரப்பட்ட அனுபவங்கள், பல தரப்பட்ட மனிதர்களோடு பழகற வாய்ப்பு, புது வகையான வாழ்க்கைமுறை(ஒரு சிறிய ஊரில் டவுன் ஷிப்புக்குள்ள இருக்குற அனுபவம்), புது வகையான உணவுமுறை இதெல்லாம் கெடச்சது. குறிப்பா ராஜஸ்தான்ங்கிற மாநிலத்தைப் பத்தி இருந்த தப்பான அபிப்பிராயங்கள்(பாலைவனம், ஒட்டகம் மேயற இடம் போன்றவை) எல்லாம் தவிடு பொடியானது. இதுலேருந்து என்ன தெரியுதுன்னா ஒரு இடத்தைப் பற்றியோ, அல்லது ஒரு பொருளைப் பற்றியோ தீர விசாரிச்சி தெரிஞ்சிக்காம, அதப் பத்தி நாமாவே ஒரு அபிப்பிராயம் அமைச்சிக்கிறது தப்புன்னு(மெய்ப்பொருள் காண்பதறிவு).

இந்தியாவில் இருக்குற மாநிலங்கள்லேயே, எங்க மாநிலத்தில் காணக் கிடைக்கிற மாதிரி விருந்தோம்பல் எங்கேயும் கெடக்காதுன்னு இங்கிருக்குற மக்கள் பெருமையாச் சொல்லிக்கிறாங்க. இந்தியாவுலேயே சிறப்பானதா இல்லியான்னு என்னால சொல்ல முடியாது. ஏனா நான் பாத்தது ஒரு சில மாநிலங்கள் தான். ஆனா கண்டிப்பா இங்கிருக்குற மக்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள். வாய்ப்பு கெடச்சதுன்னா என்னிக்காச்சும் ஒரு ராஜஸ்தானி உணவகத்துக்குப் போய் பாருங்களேன். பரிமாறுற விதமே வித்தியாசமா இருக்கும். "இன்னும் கொஞ்சம் நீங்க சாப்புட்டே ஆகனும்"னு பச்சப்புள்ள கணக்கா அடம்புடிப்பாங்க. கிட்டத் தட்ட எல்லா உணவுலயும் நெய் இருக்கும்ங்கிறதுனால "இன்னும் கொஞ்சம்"ங்கிறதுல முழி பிதுங்கிடும். நீங்க வெஜிட்டேரியனா இருந்தா நார்த் இண்டியன் உணவுல பனீரைத் தவிர வேறெதுவும் பொதுவாப் பாக்க முடியாது...ஆனா ராஜஸ்தான்ல சைவத்துலேயே பல வெரைட்டி காட்டுவாங்க. முன்னாடியே சொன்ன மாதிரி நீங்க அசைவமா இருந்தா கொஞ்சம் கஷ்டம் தான்...ஏன்னா பெரும்பாலான மக்கள் இங்கே வெஜிட்டேரியன் தான்.

அதோட விருந்து வைக்கிறவங்களுக்கு நீங்க கொஞ்சம் தெரிஞ்சவங்களா இருந்தா வரிஞ்சு கட்டிக்கிட்டு ஊட்டி விட ஆரம்பிச்சிடுவாங்க. இப்படி தான் தனேஷ்வர் தேவ் என்கிற எடத்துக்கு ஒரு குடும்ப பிக்னிக்(அட...குடும்பம் இருக்குறவங்களுக்குக் குடும்ப பிக்னிக்கப்பா) போயிருக்கும் போது "மால்புவா"ங்கிற இனிப்பை இன்னும் கொஞ்சம் சாப்பிடனும் இன்னும் கொஞ்சம் சாப்பிடனும்னு ஊட்டி விட ஆரம்பிச்சிட்டாங்க. மால்புவாங்கிறது ஒரு சின்ன ஆப்பம் மாதிரி கோதுமையில செஞ்சி அதை நெய்யுல வறுத்து, சக்கரை பாகுல ஊறப் போட்டு சாப்புடற ஒரு டேஞ்சரான ஐட்டம். ஒன்னு சாப்பிட்டால பாதி வயிறு ரொம்பிடும். ஆனா அன்னிக்கு மூனு மால்புவா( அதுவும் ஃபுல் மீல்சுக்கு அப்புறம்) சாப்பிட்டது எல்லாம் ஒரு அன்புக்குக் கட்டுப்பட்டு தான். அதே மாதிரி அவுங்க(அவுங்கன்னு சொல்லறது கிளையண்ட் கம்பெனியைச் சேர்ந்தவங்க) சாப்பிடும் போது நாங்களும் தமிழ்நாட்டு அன்புக்குக் கட்டுப்பட வச்சிட்டோம்ல? இதெல்லாம் பிற்காலத்துல சித்தூர்கட்டின் ஸ்வீட் மெமரீஸ் ஆகிடும்:) சண்டை போட்டுக் கொண்டோ ஏன் சத்தமாகப் பேசிக் கொண்டிருப்பவர்களையே நான் மிகக் குறைவாத் தான் கடந்த அஞ்சு மாசங்கள்ல பாத்துருக்கேன். நம்ம தலைவி கீதா சாம்பசிவம் மேடம் கூட ராஜஸ்தான் மாநிலத்தைப் பத்தி சொல்லும் போது 'எங்க ஊரு எங்க ஊரு'ன்னு புகுந்த வீடு லெவலுக்குப் பெருமையா பேசுவாங்கன்னா பாத்துக்கங்களேன்.

சித்தூர்கட்டில் இருக்கும் கோட்டை வரலாற்று புகழ்பெற்றது. உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பல சுற்றுலா பயணிகள் இதை பாக்க வர்றாங்க. 560அடி உயரமுள்ள ஒரு மலையின் மீது இந்த கோட்டை அமைஞ்சிருக்கு. கோட்டையைத் தவிர்த்து ஒரு ஊரே அந்த மலை மேலே காலகாலமா குடியிருக்கு. மலை என்று சொன்னாலும், உண்மையில் இது ஒரு 'plateau'.(தமிழ்ல என்னங்க?). மலையின் மேல் பகுதி சமத்தளமாக இருக்கும். நாங்க இருக்குற எடத்துலேருந்து இக்கோட்டை கிட்டத்தட்ட இருபது கி.மீ தொலைவில், சித்தூர்கட் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. இது வரைக்கும் நான் இருக்குற எடம் சித்தூர்கட்னு சொல்லி வந்தாலும் நாங்க இருந்த எடத்தோட பேரு ஷம்பூபுரா...அங்க எங்க சிமெண்ட் கம்பெனி மற்றும் சில சுண்ணாம்புக் கல் மைன்ஸ்களைத்(Limestone Mines)தவிர வேறொன்னுமில்லை. சில பேரை நீ எந்த ஊருடான்னு கேட்டா மெட்ராஸ்னு சொல்லுவாங்க, மெட்ராஸ்ல எங்கேடான்னு கேட்டா அச்சிறுப்பாக்கம்னு சொல்லி அச்சிறுப்பாக்கம் பஞ்சாயத்து யூனியனையும் மெட்ராஸோடு இணைச்சிடுறதில்லையா? அது மாதிரி தான் இதுவும்:). சித்தூர்கட்டிலிருந்து ராஜஸ்தானின் பல சுற்றுலா தளங்கள் 3-4 மணி நேர தூரத்தில் அமைந்திருக்கிறது. சித்தூர்கட்டிலிருந்து உதய்பூர் 120 கி.மீ, அஜ்மேர் 160 கி.மீ(உலகப் புகழ் பெற்ற தர்கா இங்குள்ளது, புஷ்கர் ஒட்டக சந்தையும் அஜ்மேருக்கு அருகாமையில் உள்ளது), பீல்வாடா(Bhilwara) 60 கி.மீ, மவுண்ட் ஆபு 250 கி.மீ.

சித்தூர்கட்டோட வரலாற்றைப் பாத்தா, இது மவுரிய அரசர்களின் வசம் இருந்ததாகச் சொல்கிறார்கள். சித்தூர்கட்ங்கிற ஊரோட பேரே சித்திராங்கத மவுரியா என்கிற அரசனின் பேரிலிருந்து தான் வந்ததுன்னு சொல்றாங்க. பழங்காலத்தில் இவ்வூரை சித்திரகூட் (Chitrakoot) என்ற பேரில் அழைத்திருக்கிறார்கள், அது நாளடைவில் சித்தூர்கட் அகி விட்டது. தமிழில் எழுதும் போது சித்தூர்கட் என்றும் ஆங்கிலத்தில் எழுதும் போது Chittorgarh என்றும் எழுதினாலும் "கட்"(Garh) என்ற சொல் கோட்டையைக் குறிப்பதால் ஊரைப் பத்தி மட்டும் பேசும் போது இங்கிருக்கும் லோக்கல் மக்கள் இவ்வூரை "சித்தோட்" என்றே குறிப்பிடுகிறார்கள். சித்தூர்கட் என்பது மேவாட்(Mewar) எனும் பழைய ராஜியத்தின் கீழ் வருகிறது. இம்மேவாட் ராஜியத்தின் சிறப்பு இது கடைசிவரை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாமலிருந்தது என்பதே. ராஜஸ்தானின் பல ராஜியத்தவர்களும் முதலில் முகலாயர்களுக்கும் பின்னர் ஆங்கிலேயர்களுக்கும் கட்டுப்பட்ட போதிலும் மேவாடைச் சேர்ந்தவர்கள் மட்டும் வணங்காமுடியாகவே இருதிருக்கிறார்கள். இக்கோட்டையோடு தொடர்புடைய சில வரலாற்று முக்கியம் பெற்ற பெயர்கள் - ராணா உதய்சிங், மஹாராணா பிரதாப் சிங், ராஜா ரதன் சிங், ராணி பத்மினி மற்றும் பக்த மீரா.

கீழே நீங்கள் காண்பது சித்தூர்கட் கோட்டை மேல் ஏறுவதற்கு முன்னால் வரும் ஆறு. பேரு கம்பீரி(Gambheeri) நதி.

சாலையிலிருந்து லாங் ஷாட்ல பாக்கும் போது கோட்டை இப்படித் தான் தெரியுது. படத்தை ஒரு முறை கிளிக் பண்ணி பாத்தீங்கன்னா இன்னும் கொஞ்சம் பெருசா தெளிவாத் தெரியும். இந்த படத்துக்கு மட்டுமில்லை...எல்லா படத்துக்குமே தான்.

மலை மேல் ஏறும் போது 'போல்'(Pole) என்ற இது போன்ற முகப்புகளைக் காணலாம். வழிநெடுக பல போல்கள் உள்ளன. ராம் போல், லட்சுமண் போல், ஹாத்தி (யானை போல்), ஹனுமான் போல் போன்றவை.

கோட்டையின் மதில் சுவர்கள்(Ramparts). லைம்ஸ்டோனுக்கும், மார்பிளுக்கும் பஞ்சமில்லை என்பதால் இவ்வகை கற்களைக் கொண்டே இங்கு கோயில்கள், பெரிய கட்டிடங்கள் ஆகியவற்றை நிர்மானிக்கிறார்கள். கோட்டை மதிற் சுவர்களும் சுண்ணாம்பு கற்களால் ஆனது.

ராணா பிரதாப் சிங், உதய்சிங் போன்ற புகழ் பெற்ற வழித்தோன்றல்களை வரலாற்றில் கேள்வி பட்டிருப்போம். அவர்களுடைய மூதாதையர் ராணா கும்பா என்ற அரசரின் மாளிகையின் நுழைவாயிலில் இருக்கும் 'tombstone'. Archaeological Survey of Indiaவின் பாதுகாப்பின் கீழ் இந்த கோட்டை இருந்தாலும் இங்கிருக்கும் மாளிகைகள் பாழடைந்தே காணப்படுகின்றன. கோயில்களை நன்றாகப் பராமரித்து வைத்து உள்ளார்கள். அதனுடன் மலை மேலேயே ஒரு அருங்காட்சியகமும் இருக்கிறது. அலாவுத்தீன் கில்ஜியின் படையெடுப்பின் போது பல சிலைகளும், கலை பொக்கிஷங்களும் சேதப் படுத்தப் பட்டதாகச் சொல்கிறார்கள்.

மலை மேலிருந்து கோட்டையின் ஒரு காட்சி. இம்மாதிரியான வரலாற்றுச் சின்னங்களுக்குச் செல்லும் போது நமக்கு அவ்விடத்தைப் பற்றி எதுவும் தெரியாத போது ஒரு கைடு(Guide) வைத்துக் கொள்வது உத்தமம். அவ்வப்போது சில புருடாக்களை இவர்கள் விட்டாலும், பல புது விஷயங்களையும்(புருடாக்களையும்) தெரிந்து கொள்ளலாம். கீழே தெரியும் பசேலேன்ற இந்த இடத்தில் தான் "தி கைடு" இந்தி திரைப்படத்தில் தேவ் ஆனந்தும், வஹிதா ரெஹ்மானும் ஆடிப் பாடும் "ஆஜ் முஜே ஜீனே கி தமன்னா ஹை" பாடல் படமாக்கப்பட்டதாக நம்ம கைடு சொன்னார்.

கீழே படத்தில் தெரிவது - உயரமாக இருக்கும் கோயில் கோபுரம் பலராமர், கிருஷ்ணர், ராதை இவர்களுக்காக அமைக்கப் பட்டிருக்கும் கோயில். அதனருகே இருக்கும் சிறிய கோபுரம் "மீரா பாய்" கோயிலின் கோபுரம்.

பழைய அரண்மனையைக் காட்டும் படம். முகலாயர்கள் படையெடுப்பின் போது தன்னுடைய இளவரசர் உதய்சிங்கைக்(அப்போது குழந்தை) காப்பாறுவதற்காக பன்னா தாய்(Panna Dhai) என்ற பணிப்பெண், இளவரசருக்குப் பதிலாகத் தன் குழந்தையைப் பலி கொடுத்த கதையைக் கேட்க முடிந்தது. பகைவர்கள் இளவரசரைத் தேடிக் கொண்டு அரண்மனைக்குள் நுழைந்து "எங்கே குழந்தை" என்று கேட்டதும், இளவரசருக்குப் பதிலாகத் தன் சொந்தக் குழந்தையை மாற்றியிருந்த பன்னா "இதோ" என தூங்கிக் கொண்டிருக்கும் தன் குழந்தையைக் காட்ட, தன் கண் முன்னரே தன் குழந்தை வெட்டிக் கொல்லப் பட்டதைப் பார்த்தவள். இதை விவரிக்கும் ஒரு ஓவியமும் அங்கு அருங்காட்சியகத்தில் இருந்தது. பன்னாவின் தியாகத்தைப் போற்றும் வகையில் 'ராஜஸ்தானி'யில்(இது ஒரு வட்டார வழக்கு) பல நாட்டுப்புறப் பாடல்கள் இருப்பதாக அறிந்து கொண்டேன்.

மீரா கோயிலின் படம்

நான் கேள்வி பட்ட/தெரிந்து கொண்ட இன்னொரு விஷயம் கிருஷ்ணரைத் துதித்த மீரா பாய் இந்த வம்சத்தின் மருமகள் என்பது(சித்தூர்கட் கோட்டையை ஆண்டவர்கள் சூரியவம்சத்தினர் என்று கேள்வி பட்டேன்). மீரா பாயின் கணவர் சித்தூர்கட் கோட்டையை ஆண்ட அரசர்களில் ஒருவர். தன் மனைவி எப்போதும் கடவுளின் நினைவாகவே இருப்பதை அறிந்து கொண்ட அரசர்(பெயர் மறந்து போச்சு) தன் மனைவி வழிபட கோயில் ஒன்றை கட்டிக் கொடுத்தாராம். அதுவே இந்த கோயில். இதுலேருந்து என்ன தெரியுதுன்னா "Behind every 'devoted' wife, there is an equally 'devoted' husband".(Pun intended!)

ஆனால் மீரா பாயின் கணவரின் மறைவுக்குப் பின்னால் அரியணை ஏறிய அவரது தம்பி, தனது அண்ணி எப்போதும் சாதுக்களுடன் ஆடிப் பாடிக் கொண்டிருக்கிறாளே அதனால் குடும்பத்துக்குக் கெட்டப் பெயர் வருகிறதே என எண்ணி அவளைக் கொல்ல விஷம் கொடுத்து பருகச் சொன்னானாம். ஆனால் பக்தியில் சிறந்தவளான மீரா பாய் அதை பருகியதும், விஷமும் அமிர்தமானதாம். அதன் பின் இனி இவ்விடத்தில் நான் இருக்க மாட்டேன் என்று மனம் வெதும்பி மீரா பாய் துவாரகாவிற்குச் சென்று விட்டாளாம்.

உதய்பூரிலிருந்து இவ்வம்சத்தினவர்களின் ஆட்சி சிறப்பாக நடைபெற்றது போல சித்தூர்கட்டிலிருந்து என்றுமே நடைபெற்றதில்லையாம். எப்போதும் சச்சரவுகளுக்குட்பட்ட கோட்டையாகவே இருந்திருக்கிறதாம். அதற்கு காரணம் பக்த மீரா பாயின் சாபம் என எங்கள் வழிகாட்டி(கைடு) சொன்னார். பெண் பாவம் பொல்லாதுன்னு சும்மாவாச் சொன்னாங்க. அவர் சொன்ன இன்னொரு விஷயம் பெண்களுக்கு ராஜபுத்(Rajput) குடும்பங்களில் மிக்க மதிப்பும் மரியாதையும் இருந்த போதிலும், அவர்கள் நாலு சுவருக்குள்ளேயே அடைந்து இருந்து தான் வாழ்நாள் முழுவதையும் கழிக்க வேண்டுமாம். அரசவை நடைபெறுவதை பார்க்க வேண்டும் என்றால் கூட உப்பரிகையில் ஜன்னலின் சிறு துவாரங்கள் வழியாகத் தான் பார்க்க முடியுமாம். இதனை எங்கள் கைடு "சோனே கே பிஞ்ச்டே மே பந்த் சிடியா" எனக் குறிப்பிட்டார். அதாவது 'தங்கக் கூண்டில் அடைக்கப்பட்ட பறவை'.

கிருஷ்ணரும், பக்த மீரா பாயும் கோயிலுக்குள்ளே


[பி.கு : தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்(திரு.வி.க) எழுதிய ஒரு பயணக் கட்டுரையின் பெயர் 'எனது இலங்கை செலவு'. எட்டாம் வகுப்பு(என நினைக்கிறேன்) தமிழ் பாடப் புத்தகத்தில் அமைந்திருந்தது இக்கட்டுரை. இத்தலைப்பில் 'செலவு' என்ற சொல் இலங்கைக்குச் சென்று வர ஆன பொருட் செலவைக் குறிக்கவில்லை, இலங்கைக்குச் சுற்றுலா சென்று வந்ததனைச் 'செலவு' என்ற சொல்லின் மூலம் குறிக்கிறார் திரு.வி.க. (இச்சொல்லுக்கான பொருளையும், திரு.வி.க. அவர்களே அக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்). இத்தலைப்பினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் My Journey to Sri Lanka. காப்பியடிக்கிறது தான் நமக்கு கைவந்த கலையாச்சே? :)

இன்னிக்கு எனக்கு சித்தூர்கட்ல கடைசி நாள். இன்னியோட இங்கே பிராஜெக்ட் முடியுது. பல மகிழ்ச்சியான நினைவுகளையும், பல அனுபவங்களையும் ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜையும்(என்னன்னு கண்டுபிடிங்க பாப்போம்:) ?) சுமந்துக்கிட்டு சித்தூர்கட்டிலிருந்து அடுத்த பிராஜெக்ட் சைட்டான குஜராத் மாநிலம் அஹமதாபாத்துக்கு இன்றிரவு செல்லவிருக்கிறேன். அஹமதாபாத்தில் புது பிராஜெக்ட், புது டீம்- அதுனால போன கொஞ்ச நாளைக்கு ப்ளாக், இண்டர்நெட் இதெல்லாம் கொறச்சிக்கிட்டு அடக்க ஒடுக்கமா வாலாட்டாம இருப்போம். ஆனா கொஞ்சம் குளிர் விட்டதும் ஆட்டத்தை ஸ்டார்ட் பண்ணிடுவோம். அதோட சித்தூர்கட் பத்திய இந்த பதிவு பாதி தான் செலவாகியிருக்கு. மீதி செலவை இன்னும் கொஞ்ச நாள்ல வாய்ப்பு கெடச்சதும் சொல்லறேன்.]

67 comments:

முத்தமிழ் said...

அற்புதமான பயணக்கட்டுரைகள் எழுதுவதில் இதயம் பேசுகிரது மணியன் கெட்டிக்காரர். அதை எல்லாம் படிக்கும் உணர்வு உங்கள் பயணக்கட்டுரைகளை படிக்கும்போது வருகிறது

மீரா கோயிலை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டிவிடீர்கள். நன்றி கைப்பு

Unknown said...

மிகவும் நல்ல பதிவு தலைவா. மிகவும் ரசித்து படித்தேன். பாராட்டுக்கள்

Anonymous said...

"Plateau" na pedaboomi

VSK said...

என்னவோ சொல்ற மாதிரி ஆரம்பித்து, ஒரு அருமையான பயணத்துக்கு என்னை இட்டுச் சென்று விட்டிர்கள் கைப்புள்ள!

முழு ஊரையும் சுற்றிப் பார்த்த திருப்தி.

விஜய் டீவியில் யாத்திரை என்று ஒரு நிகழ்ச்சி வரும்.

அதை விடச் சிறப்பாக படங்களாலும், வர்ணனையாலும் மனதை நிரப்பி விட்டீர்கள்.
மிக்க நன்றி.
போகத்தான் முடியவில்லை.

நம் பாரதத்தின் பெருமையை இப்படி எடுத்துக் காட்டும் உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்ட திருப்தியாவது வருகிறதே!

ஆயிரம் கோடி நன்றிகள்!

துளசி கோபால் said...

கைப்புள்ளெ,

அடடா........... இப்படிப் பதிவுகளிலே கலக்குறீரே.

வரலாற்றையும் அருமையாச் சொல்லி இருக்கீங்க. படங்களும் அற்புதமா வந்துருக்கு.
'செலவு' நல்லாதான் செஞ்சிருக்கீர்:-)))))

அகமதாபாத் கதைகளையும் சொல்லுவீர்தானே?

அந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ்.....?

நான் நினைக்கறதா:-))))))

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நல்லா எழுதி இருக்கீங்க படங்களும் அருமை. மொத்தத்தில ராஜஸ்தானைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை உண்டு பண்ணீட்டீங்க.

siva gnanamji(#18100882083107547329) said...

plateau=பீடபூமி

Anonymous said...

//அந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ்.....?

நான் நினைக்கறதா:-))))))

//

மால்புவா தானே?

கைப்புள்ள said...

//அற்புதமான பயணக்கட்டுரைகள் எழுதுவதில் இதயம் பேசுகிரது மணியன் கெட்டிக்காரர். அதை எல்லாம் படிக்கும் உணர்வு உங்கள் பயணக்கட்டுரைகளை படிக்கும்போது வருகிறது//
வாங்க முத்தமிழ்,
தங்களுடைய பாராட்டு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. மிக்க நன்றி.

//மீரா கோயிலை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டிவிடீர்கள். நன்றி கைப்பு//
வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகப் போய் பாருங்கள். அருமையான இடம்.

கைப்புள்ள said...

//மிகவும் நல்ல பதிவு தலைவா. மிகவும் ரசித்து படித்தேன். பாராட்டுக்கள் //

வாங்க செல்வன்,
தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சியாக உள்ளது.

கைப்புள்ள said...

//"Plateau" na pedaboomi //

//plateau=பீடபூமி //

வாங்க அனானி, சிவஞானம்ஜி,
Plateauவைத் தமிழ் படுத்தியதற்கு மிக்க நன்றி. ஒரு புதிய சொல்லைத் தெரிந்து கொண்டேன்.

ambi said...

kalakitteenga kaippu! chance illa! enna oru narration, flow, chance illa! yeeh i too felt like nyagana boomi manian touch! :)

//ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜையும்(என்னன்னு கண்டுபிடிங்க பாப்போம்:) //
*ahem* thallikittu vanthuttengalaaa?

so VV-sangathuku oru rajasthaani anni vanthaachaa? :)
(koluthi pottachu! ok, shart meejic)

கைப்புள்ள said...

//என்னவோ சொல்ற மாதிரி ஆரம்பித்து, ஒரு அருமையான பயணத்துக்கு என்னை இட்டுச் சென்று விட்டிர்கள் கைப்புள்ள!

முழு ஊரையும் சுற்றிப் பார்த்த திருப்தி.//

வாருங்கள் எஸ்கே ஐயா,
அந்த ஊரில் சந்தித்த சில அனுபவங்களையும் எழுத எத்தனித்ததின் விளைவே சுற்றுலாவுக்குச் சம்பந்தமில்லாத சில தகவல்கள்.

//விஜய் டீவியில் யாத்திரை என்று ஒரு நிகழ்ச்சி வரும்.

அதை விடச் சிறப்பாக படங்களாலும், வர்ணனையாலும் மனதை நிரப்பி விட்டீர்கள்.
மிக்க நன்றி.
போகத்தான் முடியவில்லை.

நம் பாரதத்தின் பெருமையை இப்படி எடுத்துக் காட்டும் உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்ட திருப்தியாவது வருகிறதே!

ஆயிரம் கோடி நன்றிகள்! //

ஐயா, இதற்கு முன்னரும் பல முறை தங்கள் பின்னூட்டங்களால் என்னை ஊக்கப் படுத்தியிருக்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் தங்களுக்கு எப்படி நன்றி உரைப்பது என அறியாமல் திக்கு முக்காடியது உண்டு. இன்றும் அதே நிலையில் தான் நிற்கிறேன். தங்கள் பின்னூட்டத்தைக் கண்டதும் மிகவும் மகிழ்ந்தேன். மிக்க நன்றி.

கைப்புள்ள said...

//கைப்புள்ளெ,

அடடா........... இப்படிப் பதிவுகளிலே கலக்குறீரே.//

வாங்க துளசியக்கா,
எல்லாம் வந்து படிக்கிறவங்க தர ஊக்கம் தான்க்கா.

//வரலாற்றையும் அருமையாச் சொல்லி இருக்கீங்க. படங்களும் அற்புதமா வந்துருக்கு.
'செலவு' நல்லாதான் செஞ்சிருக்கீர்:-)))))//
எதோ காப்பியடிச்சு ஒரு தலைப்பை ஒப்பேத்தியாச்சு.

//அகமதாபாத் கதைகளையும் சொல்லுவீர்தானே?//
அதுக்கு முன்னாடி 'செலவு'ல இன்னும் கொஞ்சம் மீதமிருக்கு. அத கூடிய சீக்கிரம் சொல்றேன். அகமதாபாத் போனதும் மொதல்ல வேலை செய்யச் சொல்லுவாங்க..புது ப்ராஜெக்ட் இல்லியா? அதுக்கப்புறமாத் தான் சுத்திப் பாக்க முடியும். ஆனா பாத்த பின்னாடி அதை எல்லாம் ப்ளாக்ல போடாம இருப்போமா? :)

//அந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ்.....?

நான் நினைக்கறதா:-)))))) //

நான் நினைக்கிறதையே நீங்களும் நினைச்சா...சஹி ஜவாப். ஆனா சத்தம் போட்டு சொல்லிடாதீங்க
:)))

கைப்புள்ள said...

//நல்லா எழுதி இருக்கீங்க படங்களும் அருமை. மொத்தத்தில ராஜஸ்தானைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை உண்டு பண்ணீட்டீங்க//

வாங்க குமரன்,
நன்றிங்க. தில்லிக்கு வந்து தங்கினாலும் கூட, அதை மையமாக வைத்து ராஜஸ்தானில் பல இடங்களைப் பார்க்க முடியும். கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும் போது போய் பாருங்க.

கைப்புள்ள said...

////அந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ்.....?

நான் நினைக்கறதா:-))))))

//

மால்புவா தானே? //

வருகைக்கு நன்றி அனானிமஸ், ஆனா மால்புவா இல்லீங்க
:)

இராம்/Raam said...

தல,

அருமையா இருக்குங்க உங்களோட இந்த செலவு கட்டுரை. நேராவந்து பார்க்கமின்னு ஆசையே வேறே தூண்டி விட்டிருச்சு....

கைப்புள்ள said...

//kalakitteenga kaippu! chance illa! enna oru narration, flow, chance illa! yeeh i too felt like nyagana boomi manian touch! :)//
அம்பி,
அய்யோ ரொம்ப டச் பண்ணறீங்களே! நன்றிங்க.

//ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜையும்(என்னன்னு கண்டுபிடிங்க பாப்போம்:) //
*ahem* thallikittu vanthuttengalaaa?

so VV-sangathuku oru rajasthaani anni vanthaachaa? :)
(koluthi pottachu! ok, shart meejic) //
அட பாவி சப்பாணி,
என்னைய பத்த வச்சிட்டியே பரட்டைன்னு சொல்லி சொல்லி இப்ப பெருசா ஒரு அடாம் பாம்பையே திரி கிள்ளி போட்டுட்டியேய்யா. யாரும் அம்பி சொல்றதை நம்பாதீங்க. அது டூப்பு.

Geetha Sambasivam said...

கைப்புள்ள
மீராபாயின் கணவர் பெயர் "கும்ப ராணா". தமிழில் திருமதி எம்.எஸ். அம்மாவும், திரு ஜி.என்.பி. அவர்களும் நடித்துப் படமாக "பக்த மீரா" என்ற பெயரில் வந்தது.
அப்புறம் ராஜஸ்தானியரின் விருந்தோம்பல் பற்றி நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நான் கிட்டத் தட்ட 6,7 வருடங்கள் இருந்திருக்கிறேன். "மால்புவா" புஷ்கரில் ஒருமுறை சாப்பிட்டால் அப்புறம் மற்ற இடங்களில் சாப்பிடவே பிடிக்காது. அது மாதிரிதான் எங்க நசீராபாத்தின் "கச்சோடா'வும் மைதாவினால் செய்யப்பட்ட "ஜிலேபி"யும். பாதிப் பேருக்கு இங்கே காலை உணவே அதுதான். ஒரு 20, 30 ஜிலேபியும், குறைந்த பட்சம் 1/4 கிலோ கச்சோடாவும் சாப்பிட்டு விட்டு 250 மி.லி. டீயும் குடிப்பார்கள். நாம் சின்னக் கப்பில் சாப்பிடுவதற்கும் கோபிப்பார்கள், உரிமையுடன் தான். அப்புறம் "தால் பாட்டி" "சூர்மா" இரண்டையும் விட்டு விட்டீர்களே?
அஹமதாபாத் போனால் அங்கிருந்து ஜாம் நகர், ராஜ்கோட், துவாரகா, சோம்நாத், போர்பந்தர், ஜுனாகட், அங்கிருக்கும் தத்தாத்ரேய மலை போய் வாருங்கள். எனக்கு நினைவு உள்ள மட்டும் தத்தாத்ரேய கோயில் ஆண்கள் மட்டும்தான் போகலாம் என நினைக்கிறேன். என்னோட மலரும் நினைவுகளைக் கிளப்பி விட்டீர்கள். ரொம்பவே நன்றி. என்ன இருந்தாலும் இந்தியாவிலேயே எனக்குப் பிடித்த மாநிலம் ராஜஸ்தான் தான்.
குஜராத்திலும் 5,6 வருடங்கள் இருந்திருக்கிறோம்.

இராம்/Raam said...

//*ahem* thallikittu vanthuttengalaaa?

so VV-sangathuku oru rajasthaani anni vanthaachaa? :)
(koluthi pottachu! ok, shart meejic) //


தல,

ஆகா அப்பிடியா சங்கதி.... உனக்கு கல்யாணம் ஆன செய்தியே சொல்லவே இல்லே பார்த்தேலே.... ஆக உனக்குதான் கல்யாணகளை வந்திருக்கு.

சரி வீட்டுக்கு வந்தா எங்களுக்கெல்லாம் மால்புவா கிடைக்கும்... :-)))

எனிவே லீட் கொடுத்த அம்பி வாழ்க!! வாழ்க!!!

கைப்புள்ள said...

//தல,

அருமையா இருக்குங்க உங்களோட இந்த செலவு கட்டுரை. நேராவந்து பார்க்கமின்னு ஆசையே வேறே தூண்டி விட்டிருச்சு....//

வாப்பா ராயல் ராம்சாமி,
வந்து வாழ்த்து சொன்னதுக்கு ரொம்ப நன்றிப்பா.

கைப்புள்ள said...

//கைப்புள்ள
மீராபாயின் கணவர் பெயர் "கும்ப ராணா". தமிழில் திருமதி எம்.எஸ். அம்மாவும், திரு ஜி.என்.பி. அவர்களும் நடித்துப் படமாக "பக்த மீரா" என்ற பெயரில் வந்தது.//

வாங்க கீதா மேடம்,
இதுக்குத் தான் ஊருக்குள்ள உங்களை மாதிரி ஒரு 'ஆல்-இன்-ஆல்' அழகுராணி வேணுங்கிறது. பாத்தீங்களா...மேலே ராணா கும்பா பத்தி சொன்னேன்...ஆனா அவரு தான் மீரா பாய் ஆத்துக்காரருங்கிறதை மறந்துட்டேன் பாத்தீங்களா?

//அப்புறம் ராஜஸ்தானியரின் விருந்தோம்பல் பற்றி நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நான் கிட்டத் தட்ட 6,7 வருடங்கள் இருந்திருக்கிறேன். "மால்புவா" புஷ்கரில் ஒருமுறை சாப்பிட்டால் அப்புறம் மற்ற இடங்களில் சாப்பிடவே பிடிக்காது. அது மாதிரிதான் எங்க நசீராபாத்தின் "கச்சோடா'வும் மைதாவினால் செய்யப்பட்ட "ஜிலேபி"யும். பாதிப் பேருக்கு இங்கே காலை உணவே அதுதான். ஒரு 20, 30 ஜிலேபியும், குறைந்த பட்சம் 1/4 கிலோ கச்சோடாவும் சாப்பிட்டு விட்டு 250 மி.லி. டீயும் குடிப்பார்கள். நாம் சின்னக் கப்பில் சாப்பிடுவதற்கும் கோபிப்பார்கள், உரிமையுடன் தான். அப்புறம் "தால் பாட்டி" "சூர்மா" இரண்டையும் விட்டு விட்டீர்களே?//

அப்புறம் நீங்க "முன் ஜாக்கிரதை முத்தம்மா"னு முன்னமயே தெரியும் "புள்ளிவிவர புஷ்பம்மா"வா வேற இருக்கீங்க. எம்புட்டு விவரம் சொல்லிருக்கீங்க? ரொம்ப நன்றி மேடம்.

//அஹமதாபாத் போனால் அங்கிருந்து ஜாம் நகர், ராஜ்கோட், துவாரகா, சோம்நாத், போர்பந்தர், ஜுனாகட், அங்கிருக்கும் தத்தாத்ரேய மலை போய் வாருங்கள். எனக்கு நினைவு உள்ள மட்டும் தத்தாத்ரேய கோயில் ஆண்கள் மட்டும்தான் போகலாம் என நினைக்கிறேன். என்னோட மலரும் நினைவுகளைக் கிளப்பி விட்டீர்கள். ரொம்பவே நன்றி. என்ன இருந்தாலும் இந்தியாவிலேயே எனக்குப் பிடித்த மாநிலம் ராஜஸ்தான் தான்.
குஜராத்திலும் 5,6 வருடங்கள் இருந்திருக்கிறோம். //

ஹலோ யாருப்பா அங்கே! இனிமே யாருக்குன்னா குஜராத், ராஜஸ்தான் பத்தி எதனா டவுட் வந்தா தலைவி கையில் கேட்டுக்கங்கய்யா. அஹமதாபாத் போய் சேர்ந்ததும் உங்க கிட்ட நான் இன்னும் தகவல் தெரிஞ்சிக்கிறேன்.

அப்பப்போ இந்த ஏழை வீட்டுக்கும் வந்து ஒரு குரல் குடுங்க ப்ளீஸ்.

மா சிவகுமார் said...

கைப்புள்ளை,

இனிமேல் சித்தூர்கட் போகிறவர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கையேட்டை உங்கள் பாணியில் சுவைபட எழுதி விட்டீர்கள். Lonely Planet பயண வழிகாட்டி போல அமைந்து விட்டது. நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

ALIF AHAMED said...

அந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ்.....?

L..T..?

D...T..?

C....N ?

::)))

கைப்புள்ள said...

//தல,

ஆகா அப்பிடியா சங்கதி.... உனக்கு கல்யாணம் ஆன செய்தியே சொல்லவே இல்லே பார்த்தேலே.... ஆக உனக்குதான் கல்யாணகளை வந்திருக்கு.//

ரீ ராயல் ராம்சாமி,
நோரு மூஸ் கொண்டு ஹோகு ரீ. சொல்பா கோடு போட்டா ரோடு போடுறியே ரீ. உன் பதிவுல நான் போட்ட கமெண்டுக்கு ரிவெஞ்ச் மாட்தானு? கொன்னு பேக்கோ.
:)

//சரி வீட்டுக்கு வந்தா எங்களுக்கெல்லாம் மால்புவா கிடைக்கும்... :-)))//
அரே பாய் மால்புவா கெடக்கறானில்ல. சேட் வூட்டு மேல வர்றான் புரளி கெளப்பறதுக்கு உன் கழுத்து மேலே போடறான் :)

//எனிவே லீட் கொடுத்த அம்பி வாழ்க!! வாழ்க!!! //
அம்பி டவுன் டவுன்

கைப்புள்ள said...

//இனிமேல் சித்தூர்கட் போகிறவர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கையேட்டை உங்கள் பாணியில் சுவைபட எழுதி விட்டீர்கள். Lonely Planet பயண வழிகாட்டி போல அமைந்து விட்டது. நன்றி//

வாங்க சிவகுமார்,
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

கைப்புள்ள said...

//அந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ்.....?

L..T..?

D...T..?

C....N ?

::))) //

வாய்யா மின்னலு,
ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கே. வந்ததும் வராததும் எதோ விவகாரமா கொளுத்திப் போட்டுருக்கறது மட்டும் புரியுது. அப்படியே என்னன்னு சொன்னா தேவலை.
:)

ALIF AHAMED said...

/./
வாய்யா மின்னலு,
ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கே. வந்ததும் வராததும் எதோ விவகாரமா கொளுத்திப் போட்டுருக்கறது மட்டும் புரியுது. அப்படியே என்னன்னு சொன்னா தேவலை.
:)
/../


குயி...குயி...குயிஜு...:)

கைப்புள்ள said...

//குயி...குயி...குயிஜு...:)//

ஆஹா...மின்னலு பேக் டு ஃபார்ம் டோய் :)

//L..T..? - LETTER

D...T..? - DRAFTER

C....N ? - CANON
//

வேற ஒன்னியும் தோணலை மின்னலு. படுத்தாம என்னன்னு சொல்லு. ஆனா நான் சொன்னது இதெல்லாம் இல்லை.

ALIF AHAMED said...

3. மட்டும் சரி

ALIF AHAMED said...

leptop..??

கைப்புள்ள said...

அட போப்பா,
நான் சொன்ன லக்கேஜ் இதெல்லாம் இல்லை. நானே ஒரு க்ளூ குடுக்கறேன். இல்லன்னா ராயல், அம்பி மாதிரி ஆளுங்க எதனா கதை கட்டிடுவாங்க.

நல்லா மூணு வேளையும் நெய்யைப் போட்டு தின்னுட்டு கொஞ்சூண்டு வேலை செஞ்சா வர்ற லக்கேஜ் இது.
:)

ALIF AHAMED said...

i got it


::))

நான் கல்யாணமாயிடுச்சோனு பயந்துட்டேன்..:)

ALIF AHAMED said...

/./
நல்லா மூணு வேளையும் நெய்யைப் போட்டு தின்னுட்டு கொஞ்சூண்டு வேலை செஞ்சா வர்ற லக்கேஜ் இது.
:)
/./

இதுக்கு பேரு உங்க ஊருல க்ளு நாங்க நம்பிட்டோம்யா... நம்பிட்டோம்...:)

இராம்/Raam said...

//நல்லா மூணு வேளையும் நெய்யைப் போட்டு தின்னுட்டு கொஞ்சூண்டு வேலை செஞ்சா வர்ற லக்கேஜ் இது.//

தொந்தி வச்சதுக்கு இம்பூட்டு பில்டப்பா... தெனமும் பத்து கிலோமீட்டரு ஓடு தல....

கைப்புள்ள said...

//i got it


::))

நான் கல்யாணமாயிடுச்சோனு பயந்துட்டேன்..:)//

அதுக்கு நான் என்னய்யா பண்றதி?
:)

இராம்/Raam said...

மின்னலு என்னாய்யா அடிச்சு தாக்குறே... அநியாத்துக்கு பாசக்கார பயலா இருப்பே போலே...!!!!

:-)))

சிறில் அலெக்ஸ் said...

கைப்புள்ள,
சித்தூர்கட் செலவுன்னதும் எங்கயோ அடிபட்டு சித்தூர்ல கட்டுபோட்டதத்தான் இப்டி ஸ்டைலா சொல்றீங்களோன்னு நெனச்சேன். (அப்டி வாங்குனாத்தானே கைப்புள்ள)

அருமையான பயணக்கட்டுரை.

கைப்புள்ள said...

//இதுக்கு பேரு உங்க ஊருல க்ளு நாங்க நம்பிட்டோம்யா... நம்பிட்டோம்...:)//

ஆமா இல்லியா பின்ன?

கைப்புள்ள said...

//தொந்தி வச்சதுக்கு இம்பூட்டு பில்டப்பா... தெனமும் பத்து கிலோமீட்டரு ஓடு தல.... //

இதெல்லாம் கொஞ்சம் ஓவரு. நான் வேணா ஒரு வாரத்துக்கு ஒரு தரம் 100 மீ பைய நடந்துட்டு வரவா?

கைப்புள்ள said...

//மின்னலு என்னாய்யா அடிச்சு தாக்குறே... அநியாத்துக்கு பாசக்கார பயலா இருப்பே போலே...!!!!

:-))) //

மின்னலோட பாசம் நாடறிஞ்ச விஷயமாச்சேப்பா
:)

கைப்புள்ள said...

//சித்தூர்கட் செலவுன்னதும் எங்கயோ அடிபட்டு சித்தூர்ல கட்டுபோட்டதத்தான் இப்டி ஸ்டைலா சொல்றீங்களோன்னு நெனச்சேன். (அப்டி வாங்குனாத்தானே கைப்புள்ள)//

வாங்க சிறில்,
புத்தூர் கட்டு மாதிரி சித்தூர் கட்டுன்னு நெனச்சிட்டீங்க போலிருக்கு. எதோ அப்படியெல்லாம் இல்லாம சிங்கிள் பீஸா வெளியே போறேன்.
:)

//அருமையான பயணக்கட்டுரை.//
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சிறில்

கப்பி | Kappi said...

thala...
kalakkal..as usual...

thoppaikellaam feel panra parambaraya naama?? ;)

ahmedabad kelambireengala??

hey...dandanakka danakku nakka
traffic arrangements ellaam panniaacha??
vazhila ethana edathula makkal kooda pesareenga??
engayavathu medaiyla yeri pesareeengala??
vareverpu valaivugal ellaam readyaa?

இலவசக்கொத்தனார் said...

அட என்னப்பா இது,

பீடபூமின்னு சொல்ல வந்த பெரியவங்க எல்லாம் வந்து சொல்லியாச்சு.

சரி, மால்புவா இல்லையா அதோட எபெஃக்ட்டுதான்னு சொல்லாமுன்னு பார்த்தா அதையும் சொல்லிப்புட்டாங்க.

நான் ரொம்பத்தான் லேட்டு போல இருக்கு. ஹூம் இருக்கட்டும். சரி, இவ்வளவு நீளமான்னு யோசிச்சுக்கிட்டு இருந்தா இது மொத பாகமாமே. அடப்பாவி மனுசா, இந்த மாதிரி ஒரு நாள் சுத்திட்டு வந்ததுக்கு இப்படி பாகம் பாகமா போஸ்ட் போடறத எங்கய்யா கத்துக்கிட்ட? :)

(என்னாது என் கால்கரி பதிவுகள் நினைப்பா, ஆனாலும் கொழுப்பைய்யா உமக்கு.ஆனா பாரும், என்னைத் திட்டினவங்க எல்லாம் உம்மைப் பாராட்டுவாங்க. அதுதான்யா உலகம்!)

G.Ragavan said...

நல்லதொரு கட்டுரை. சற்றுப் பெரிதானாலும் படங்களோடு அழகாய் இருக்கிறது.

சத்யஜித்ரேயின் ஷோனோர் கெல்லா பார்த்திருக்கிறீர்களா? அதில் ராஜஸ்தானை சுற்றி வளைத்துக் காட்டியிருப்பார். எனக்கும் போகும் ஆசை உண்டாக்கியது அந்தப் படம். ஆனால் இன்னும் நிறைவேறவில்லை.

மால்புவா எனக்கும் தெரியும். கோதுமை மாவைத் தண்ணியாகக் கரைத்து நெய்யிலோ எண்ணெய்யிலோ ஊற்றி அப்படியே பொரிப்பார்கள். மாவு தண்ணியாக இருப்பதால் அது எண்ணெய்யில் பரவி வட்டமாக வரும். அந்த வட்டத்தை ஜிராவில் (நானல்ல) ஊற வைப்பார்கள். பெங்காலிகள் செய்யும் பொழுது அத்தனை இனிப்பாக இருக்காது. ஆனா மற்றவர்கள் செய்கையில் தித்தித்தித்திக்கும்.

அடுத்தது குஜராத்தா...நல்லது நல்லது. காத்திருக்கிறோம். குஜராத்துலயும் கறிகிறி கெடைக்காதம்யா! எறாவச் சொறாவத் தேடிப் போய் மாட்டிக்கிறாதீரும்.

மு.கார்த்திகேயன் said...

//விருந்தோம்பல் எங்கேயும் கெடக்காதுன்னு இங்கிருக்குற மக்கள் பெருமையாச் சொல்லிக்கிறாங்க//

appO namma thamizhnaadum ithukku famous thaanE kaipulla

Porkodi (பொற்கொடி) said...

கைப்பு அங்குள், உள்ளேன்!

அம்பி, அங்குள் உங்கள மாதிரி ஒண்ணும் இல்ல பஞ்சாப் கிஞ்சாப்னு :)

dondu(#11168674346665545885) said...

கீதா சாம்பசிவம் அவர்களே,

எம்.எஸ்ஸுடன் கும்ப ராணாவாக நடித்தது நாகையா அவர்கள். ஜி.என்.பி. அல்ல. எம்.எஸ். அவர்கள், ஜி.என்.பி. சகுந்தலை படத்தில் துஷ்யந்தனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சகுந்தலையாக நடித்தார்.

அதே மீரா படம் பிற்காலத்தில் ஹிந்தியில் எடுக்கப்பட்டப் போது வினோத் கன்னா மற்றும் ஹேமமாலினி நடித்தனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Mani said...

சன் டிவியில் நீங்கள் கேட்ட பாடல் பார்த்த உணர்வு. விஜயசாரதியை மிஞ்சிவிட்டீர்கள்.

சபாஷ் கைப்புள்ள

ambi said...

//நல்லா மூணு வேளையும் நெய்யைப் போட்டு தின்னுட்டு கொஞ்சூண்டு வேலை செஞ்சா வர்ற லக்கேஜ் இது//

*ahem* கல்யாணம் ஆன கூட தொந்தி வைக்கும்!னு சொல்வாங்க.
இதுக்கும் கைபுள்ள வரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்கோ!

நான் பொதுவா சொன்னேன் பா!
(innum soodu pidikaliyee?) ithuku thaan namba puli venum!nu solrathu. :)

Anonymous said...

mine - surangam

Boston Bala said...

நல்ல பதிவு. மிகவும் ரசித்து படித்தேன்.

Harish said...

yappa..periya travelogue ezhudirukeenga....

Anonymous said...

Classic..excellent work..good luck to your work in Ahmedabad...

Anonymous said...

arpudhamana
padaippu,
vazhthukkal.
appadiye
MS in katriniley varum geetham,
giridhar gopala
and
Lata mangeshkar in mEEra bhajans kettu paarkavum( this is available in Cd as chala vahi des)
those songs are honey.
Raghs

ரவி said...

யப்பா, இம்மாம் பெரிய பதிவா...

கைப்புள்ள said...

பதிலளிக்கக் கொஞ்சம் லேட்டாயிடுச்சு. மன்னிச்சுக்கங்க.

கைப்புள்ள said...

//thoppaikellaam feel panra parambaraya naama?? ;)//

வாங்க கவிஞ்சர் ஜாவா கப்பிநிலவன் அவர்களே!
ஹி...ஹி...போங்கண்ணா எனக்கு வெக்க வெக்கமா வருது.
:)

கைப்புள்ள said...

//(என்னாது என் கால்கரி பதிவுகள் நினைப்பா, ஆனாலும் கொழுப்பைய்யா உமக்கு.ஆனா பாரும், என்னைத் திட்டினவங்க எல்லாம் உம்மைப் பாராட்டுவாங்க. அதுதான்யா உலகம்!)//

ஐயயோ! இந்நேரம்னு பாத்து ஒங்களோட ஸ்டாண்டர்டு இலக்கிய ரிப்ளை மறந்து போச்சே...சரி ஞாபகம் இருக்குற வரைக்கும் சொல்லி சமாளிக்கிறேன்..."அன்னவர்க்கு நாங்களே சரண்". எல்லாம் தலைவர் காட்டுன வழி தான்.
:)

கைப்புள்ள said...

//நல்லதொரு கட்டுரை. சற்றுப் பெரிதானாலும் படங்களோடு அழகாய் இருக்கிறது.//
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ராகவன்.

//சத்யஜித்ரேயின் ஷோனோர் கெல்லா பார்த்திருக்கிறீர்களா? அதில் ராஜஸ்தானை சுற்றி வளைத்துக் காட்டியிருப்பார். எனக்கும் போகும் ஆசை உண்டாக்கியது அந்தப் படம். ஆனால் இன்னும் நிறைவேறவில்லை.
//
அடடா அவ்வளவு நல்ல படமா அது? நான் கேள்விபட்டதில்லை ஜிரா. வாய்ப்பு கெடைச்சா பாக்கனும்.

//மால்புவா எனக்கும் தெரியும். கோதுமை மாவைத் தண்ணியாகக் கரைத்து நெய்யிலோ எண்ணெய்யிலோ ஊற்றி அப்படியே பொரிப்பார்கள். மாவு தண்ணியாக இருப்பதால் அது எண்ணெய்யில் பரவி வட்டமாக வரும். அந்த வட்டத்தை ஜிராவில் (நானல்ல) ஊற வைப்பார்கள். பெங்காலிகள் செய்யும் பொழுது அத்தனை இனிப்பாக இருக்காது. ஆனா மற்றவர்கள் செய்கையில் தித்தித்தித்திக்கும்.//
ஆமாங்க ரொம்பவே தித்திப்பு. ஒன்னு சாப்பிட்டாலே தெகட்டிடும். அன்னிக்கு வலுக்கட்டாயமா மூனு சாப்பிட வச்சிட்டாங்க. நைட்டு ஒன்னும் சாப்பிடாமலேயே தூங்கிட்டோம்.

//அடுத்தது குஜராத்தா...நல்லது நல்லது. காத்திருக்கிறோம். குஜராத்துலயும் கறிகிறி கெடைக்காதம்யா! எறாவச் சொறாவத் தேடிப் போய் மாட்டிக்கிறாதீரும். //
கரெக்ட் தான் நீங்க சொல்லறது. ஒரு சில எடத்துல அசைவம் கெடைக்கும்னு கேள்வி பட்டேன். அப்படியிருந்தாலும் எறாவும் சுறாவும் நோ சான்ஸ்.

கைப்புள்ள said...

//appO namma thamizhnaadum ithukku famous thaanE kaipulla//

ஆமா இல்லையா பின்ன? வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடுன்னு சும்மாவா சொல்றாங்க? ஆனா ராஜஸ்தான் காரங்க அவங்க ஊரைப் பத்தி அப்படி பெருமையாச் சொல்லிக்கிறாங்க.

கைப்புள்ள said...

//கைப்பு அங்குள், உள்ளேன்!

அம்பி, அங்குள் உங்கள மாதிரி ஒண்ணும் இல்ல பஞ்சாப் கிஞ்சாப்னு :)//

டேங்ஸ் பாப்பா!
:)

கைப்புள்ள said...

//அதே மீரா படம் பிற்காலத்தில் ஹிந்தியில் எடுக்கப்பட்டப் போது வினோத் கன்னா மற்றும் ஹேமமாலினி நடித்தனர்.//

வாங்க டோண்டு சார்,
வந்து புதிய தகவல்களைத் தெரியப் படுத்துனதுக்கு ரொம்ப நன்றி சார்.

கைப்புள்ள said...

//சன் டிவியில் நீங்கள் கேட்ட பாடல் பார்த்த உணர்வு. விஜயசாரதியை மிஞ்சிவிட்டீர்கள்.

சபாஷ் கைப்புள்ள//

பாராட்டுக்கு மிக்க நன்றி மணி.

கைப்புள்ள said...

//*ahem* கல்யாணம் ஆன கூட தொந்தி வைக்கும்!னு சொல்வாங்க.
இதுக்கும் கைபுள்ள வரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்கோ!

நான் பொதுவா சொன்னேன் பா!
(innum soodu pidikaliyee?) ithuku thaan namba puli venum!nu solrathu. :) //

நம்பிட்டோம்யா
:)

கைப்புள்ள said...

ரமேஷ், அனானி, பாஸ்டன் பாலா, ஜனா, ஹரிஷ், செந்தழல் ரவி,ராக்ஸ்,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Anonymous said...

Nice post and this post helped me alot in my college assignement. Thank you seeking your information.