போன பிராஜெக்ட் அப்போ ராஜஸ்தான்ல பாத்த சில விஷயங்களை அதிகமாகப் பேசாம(வளவளனு எழுதாம) சுமாரான, படுசுமாரான சில படங்களை வச்சு விஷுவலாச்(!) சொல்லற ஒரு முயற்சி தான் இந்தப் பதிவு. 
நாத் த்வாரா(Nathdwara) என்னும் இடத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநாத்ஜி எனும் இறைவனின் படம். ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரிலிருந்து 50 கி.மீ.தொலைவில் உள்ளது இத்தலம். படத்தின் கீழே குஜராத்தி மொழியில் எழுதியிருப்பது "ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா", ஆகஸ்ட் 9,2006
ஸ்ரீநாத்ஜியின் இன்னுமொரு திரு உருவம், , ஆகஸ்ட் 9,2006
ஜிலேபி சுடறாங்க. நாத்த்வாரா, ஆகஸ்ட் 9,2006
சலவைக்கல்(மார்பிள்) தொழிற்சாலை, நாத் த்வாரா - உதய்பூர் சாலை, ஆகஸ்ட் 9,2006
உங்களுக்கு எத்தனை கன அடி வேணும்?, நாத் த்வாரா - உதய்பூர் சாலை, ஆகஸ்ட் 9,2006
"அழகான சரி சோடி, ஆனை மேல அம்பாரி...", உதய்பூர் பேலஸ் செல்லும் வழியில், ஆகஸ்ட் 9,2006
மகாராணா பிரதாப் சிங் தன்னுடைய தாத்தாவின் நினைவாக உருவாக்கிய உதய்பூர் நகரிலுள்ள, உதய்பூர் மாளிகையின்(சிட்டி பேலஸின்) முகப்பு, ஆகஸ்ட் 9,2006
அருங்காட்சியகத்தைத் தன்னகத்தே கொண்ட சிட்டி பேலஸின் இன்னுமொரு படம், ஆகஸ்ட் 9,2006
சூரியவம்சத்தினரின் முதற் கடவுளான சூரியனார் மீசையோடு, ஆகஸ்ட் 9,2006
முகலாயர்களுடன் நடைபெற்ற ஹல்திகாட்டி யுத்தத்தில் (Battle of Haldighati), காலில் பலத்த காயங்கள் ஏற்பட்ட போதும் தன் தலைவனான மகாராணா பிரதாப்சிங்கைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுச் சேர்த்து விட்டப் பின்னரே தன் உயிரை விட்ட சேத்தக்(Chetak) குதிரையின் உருவ பொம்மை. யானைப்படைகளையும் கொண்டு போரிட்ட முகலாய ராணுவத்தைப் போலல்லாமல், ராஜபுத் வீரர்கள் குதிரைகளை மட்டுமே கொண்டு போரிட்டனர். குட்டி யானை போலத் தோன்றி தாக்க வரும் முகலாய யானைகளை ஏமாற்றுவதற்காகத் தும்பிக்கை போன்ற முகமூடி அணிந்திருக்கும் சேத்தக். உதய்பூர் சிட்டி பேலஸ் அருங்காட்சியகம், அகஸ்ட் 9,2006
தாஜ் லேக் பேலஸ் ஐந்து நட்சத்திர தங்கும் விடுதி. உதய்பூர் அருங்காட்சியகத்திலிருந்து காணக் கிடைக்கும் கோணம், ஆகஸ்ட் 9,2006
தார் பாலைவனத்தில் வெள்ளம் ஏற்படக் காரணமாயிருந்த அபரிமிதமான மழையினால் தளும்பி நிற்கும் உதய்பூர் ஏரி, ஆகஸ்ட் 9,2006
தங்களுடைய நாட்டுப்புறப் பாடலான "நிம்பூடா நிம்பூடா" பாடும் பார்மேர் மாவட்ட இசை கலைஞர்கள். "ஹம் தில் தே சுகே சனம்" படத்தில் வரும் பாடல் இவர்களுடைய இசையிலிருந்து தான் திருடப்பட்டது என வருத்தத்துடன் தெரிவித்தார்கள்(ஏனெனில் காலம் காலமாக அவ்விசையைப் பாதுகாத்து வரும் இவர்களுக்கு ஒரு கிரெடிட்டும் கிடைக்கவில்லையாம்). திரைப்படத்தில் வரும் பாடலைப் போலவே இப்பாடலும், துள்ளல் இசையோடே அமைந்திருந்தது, சித்தூர்கட், ஆகஸ்ட் 8,2006
ஸ்பிக் மேகே நடத்திய இக்கலாச்சார நிகழ்ச்சியில் 'கல்பேலியா'(Kalbeliya) நடனம் ஆடும் பெண், சித்தூர்கட், ஆகஸ்ட் 8,2006 
'கல்பேலியா' பாரம்பரிய நடனம் - இன்னொரு படம். பளிச்சிடும் பரோட்டாவையும், செங்கண் குறைப்பையும்(Red Eye Reduction) கவனிக்காம விட்டதுக்கு அடிக்க வந்துடாதீங்கப்பா:), சித்தூர்கட், ஆகஸ்ட் 8,2006
Thursday, December 28, 2006
ராஜஸ்தான் - ஒரு போட்டோ பயணம்
Sunday, October 29, 2006
நாகா சாதுக்களும் ஒரு அறிவாளியும்
எனது சித்தூர்கட் செலவு
தொண்டையில் தண்ணி பாக்கலாம்
தீபாவளிக்குச் சென்னைக்குப் போயிட்டு அகமதாபாத் திரும்ப வந்து ரெண்டு நாளாவுது. எப்பவுமே லீவுக்கு வூட்டுக்குப் போயிட்டுத் திரும்பி வர்ற மொத சில நாளு கொஞ்சம் ஃபீலிங்ஸ் ஆஃப் பாகிஸ்தானா(எல்லாம் ஒரு சேஞ்சுக்குத் தான்...ஹி...ஹி...) இருக்கும். ஆனா கொஞ்ச நாள்லேயே, இங்க நமக்குன்னு வைக்கிற ஆப்புலயும், அடிக்கிற ரிவெட்லயும் இந்த ஃபீலிங்ஸ் எல்லாம் பஞ்சா பறந்துடும். புது பிராஜெக்ட் இப்போ தானே ஆரம்பிச்சிருக்கு...அதுனால ரெண்டு நாளா ஒரே மீட்டிங்ஸ் ஆஃப் குஜராத் தான். மீட்டிங்ஸையும் நாங்கல்லாம் ரொம்ப எஞ்சாய் மாடறோம்னு நெனச்சிக்கிட்டாங்களோ என்னவோ...பசங்க வேலை செய்யிறாங்களா இல்லையான்னு பாக்க வந்த எங்க கம்பெனியோட பெரிய தலை ஒருத்தரு(ப்ராஜெக்ட் மேனேஜருக்கும் மேல) நேத்து ஒரு மணி நேரம் ஒக்கார வச்சி ஒரே அட்வைஸ் மழை பொழிஞ்சிட்டாரு. நீங்கல்லாம் நெறய படிக்கணும், நெறைய தெரிஞ்சிக்கனும் அப்படின்னவரு திடீர்னு உங்கள்ல யாராச்சும் "தி கோல்" புஸ்தகம் படிச்சிருக்கீங்களான்னு கேட்டாரு. எல்லாரும் திரு திருன்னு முழிச்சோம். "I want, all my Client facing Consultants(அலைகடலென திரண்டு வரும் ஆப்புகளை வோல்சேலாக வாங்கிய பின்னும் வலிக்குதான்னு கேட்டா 'லைட்டா'ன்னு சொல்ற வீராதி வீர பரம்பரை) to go to Crossword, pick up a copy of 'The Goal' and start reading it. Its a very good book, you guys should know what has been written in it"அப்படின்னாரு. "சும்மா சொல்லிட்டு விட்டுட்டேன்னு நெனக்காதீங்க, அடுத்த வாரம் அதுலேருந்து கேள்வி கேப்பேன்"னு வேற பயமுறுத்திட்டு போயிருக்காரு. அத எழுதுனவரு பேரு கூட எதோ "தங்க எலி"யாம்(Goldrat). புக்கோட வெலை 350 ரூவா தானாம். நான் கேக்குறேன்...இல்ல தெரியாமத் தான் கேக்கறேன்...350 ரூவா காசு போட்டு புஸ்தகம் வாங்கி படிக்கிற வயசாய்யா இது? எதோ ப்ளாக்கைப் படிங்க, பின்னூட்டம் போடுங்கன்னு சொன்னா பெருந்தன்மையா பண்ணிட்டுப் போறோம்? அத விட்டுப் போட்டு கோலைப் படிங்க, கோலியைப் படிங்கன்னு என்னப் பேச்சு இது சின்னப்பில்லத் தனமா? கொஞ்சம் யோசிக்க வேணாம்? இருந்தாலும் இதெல்லாம் வயித்துப் பொழப்பு மேட்டரு...யாருன்னா அந்த பொஸ்தகத்தைப் படிச்சிருந்தா தங்கஎலி சொல்லிருக்குற கதையைக் கொஞ்சம் சொல்லுங்கய்யா...ஒங்களுக்குப் புண்ணியமா போவும்.
'முகத்தில் முகம் பாக்கலாம்'ங்கிற மாதிரி 'தொண்டையில் தண்ணி பாக்கலாம்'னு கிண்டலா போனப் பதிவுக்குப் பேரை வச்சிட்டாலும் ராணி பத்மினியோட வரலாறை எழுதுனதுனால ரொம்ப சீரியஸாப் போயிடுச்சு. மே மாசம் மொத மொதலா சித்தூர்கட் போனதுலேருந்து கோட்டைக்கு நாலு வாட்டி போயிருக்குறேங்க. அப்பவும் சில இடங்களை இன்னும் பாக்கலை(ஜெயின் தீர்த்தங்கரர்களின் கோயில்கள்). ஒவ்வொரு வாட்டியும் கோட்டையைப் பத்தி எதாச்சும் புதுசா ஒன்னு தெரிஞ்சிக்க முடிஞ்சுது. குறிப்பா ராணி பத்மினியைப் பத்தி ஒவ்வொரு தடவையும் எதாச்சும் ஒரு புது தகவல் கெடைக்கும். அதான் கெடச்சது எல்லாத்தையும் போன பதிவுல கொண்டாந்து கொட்டியாச்சு. கீழே இருக்குறது சித்தூர்கட் அரசு அருங்காட்சியகம். 1950கள்ல அரச பரம்பரையைச் சேர்ந்த யாரோ ஒருத்தரு இந்த மாளிகையைக் கட்டுனாராம்...ஆனா அதுல யாரும் வசிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அருங்காட்சியகம் ஆகிடுச்சாம். ஏழடி உயரம் உள்ள துப்பாக்கி, ஆளையே கூறு போடும் வல்லமை கொண்ட பல பயங்கரமான கத்திகள், கவசங்கள், கேடயங்கள், அலாவுதீன் கில்ஜி அழித்த சிலைகளின் மிச்சங்கள் ஆகியவை அங்கிருந்தன. சாஃப்ட்வேர் கம்பெனியெல்லாம் வர்றதுக்கு முன்னாடி ஆ ஊன்னா ஆன்சைட்டுக்குக் கத்தி தூக்கிட்டு கெளம்பிடுவாங்க போலிருக்கு.

ராணி பத்மினியின் மாளிகைக்கு அருகாமையில், ஒட்டக சவாரி செய்றதுக்கு வசதி இருக்கு. பாரம்பரிய ராஜஸ்தானி டிரெஸ் போட்டுக்கிட்டு ஒட்டகத்து மேல ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம். கீழே இருக்குற படத்துல இருப்பது ஒட்டகமும் நானும். இப்பவே சொல்லிட்டேன் லெஃப்ட் சைடுல இருக்குறது தான் ஒட்டகம்:). இந்த படம், கடைசி தரம் கோட்டைக்குப் போன போது ஃபிரெண்டு ஒருத்தன் எடுத்தது. படம் எடுத்துட்டு இருக்கும் போதே படம் எடுத்தவன் கூட நின்னுட்டிருந்த இன்னொருத்தன் "டேய் டேய் பின்னாடி திரும்பி பாருடா பாருடா"னு ஒரு பேய் கத்து கத்துனான். எனக்கா ஒரு பக்கம் பயம்... எப்படியோ பயப்படாத மாதிரி நடிச்சி படத்துக்குப் போஸ் குடுத்துட்டு வந்து படத்தைப் பாத்தா...ஐயோ சாமி! ஒட்டகத்துக்கு மம்புட்டி மம்புட்டியா பல்லு! நல்லா காலம்...நான் திரும்பி கிரும்பி பாக்கலை. அந்த ஒட்டகம் இந்தியன் படத்துல வர்ற சீலோ மாதிரி எங்கயாச்சும் கடிச்சி கிடிச்சி வச்சிருதுச்சுன்னா என்னாகியிருக்கும் என் நெலமை?

முதல் முறை மே மாசம் கோட்டைக்குப் போன போது, வெயிலுக்குப் பயந்துக்கிட்டு, சாயந்திரம் 6.30 மணிக்குக் கிளம்பி கீழே படத்துல இருக்குற கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்தோம். இந்த கோயிலோட பேரு 'காலிகா மந்திர்'. இந்த கோயிலைக் கட்டிருக்குறதைப் பாத்தா நம்ம ஊரு பக்கத்து வேலைபாடு மாதிரி இருந்தது. பொதுவா வட இந்தியாவுல கோயில்களைப் பாத்தா கல் வேலைபாடு எல்லாம் அவ்வளவா இருக்காது. ஆனா இந்த கோயிலைப் பாத்ததும் தமிழ்நாட்டு கோயில்கள் தான் நியாபகம் வந்துச்சு. இந்த கோயில் உள்ள படம் எடுக்க அனுமதி இல்லை. அதனால கோயில் வெளியே இருந்து எடுத்த ஒரு படம்.

இந்த கோயிலை நிர்வாகம் பண்ணறவங்க நாகா சாதுக்கள்னு எங்க கைடு சொன்னாரு. வாயை வச்சிக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம். எதோ நாகா சாதுக்களைப் பத்தி எல்லாம் தெரிஞ்சி கரை கண்டுட்டா மாதிரி "நாகா சாதுன்னு சொல்லறீங்க? இங்க இருக்குறவங்க டிரெஸ் எல்லாம் போட்டுருக்காங்க?"னு கேட்டுத் தொலைச்சிட்டேன். எங்க கைடு என்ன படுகேவலமா ஒரு லுக் விட்டுட்டு "அரே பாய்! ஹமாரி மா பெஹ்னோன் கோ இதர் நஹி ஆனா ஹை கியா?(நம்ம வீட்டு பெண்கள்(அம்மா, தங்கச்சி) அவுங்கல்லாம் வர்ற எடத்துல எப்படி டிரெஸ் இல்லாம இருப்பாங்க)ன்னு கேட்டுட்டாரு. இதை கேட்டுட்டு கூட இருந்தவனுங்க எல்லாம் சிரிச்சிட்டானுங்க. அவனுங்க சிரிச்சதும் எனக்கு ஒரே வெக்க வெக்கமாப் போச்சு. இதை எழுதும் போது, எங்க கூட வந்த தோஸ்த் ஒருத்தன் இந்த மாதிரி கைடு கிட்ட நாகா சாதுவைப் பத்தி கேள்வி கேட்டான், அத கேட்டு நாங்கல்லாம் வுழுந்து வுழுந்து சிரிச்சோம்னு எழுதலாமான்னு கூட ஒரு நிமிஷம் நெனச்சேன். நாம இம்புட்டு யோசிச்சி, இல்லாத மூளையெல்லாம் செலவழிச்சி ஒரு புத்திசாலித்தனமானக் கேள்வி கேட்டுருக்கோம், நாம கேட்ட கேள்விக்காக யாரு பெத்த புள்ளையோ...வேற ஒருத்தன் பேரை ஏன் ரிப்பேர் ஆக்கனும்னு நெனச்சி அந்த ஐடியாவைக் கைவிட்டுட்டேன்.
கோயில் வாசல்லயும் கோட்டை மேல பல எடங்கள்லயும் இந்த நீளமான வால் உள்ள கறுப்பு முகம் கொண்ட குரங்குகளைப் பெரும் எண்ணிக்கையில பாக்கலாம். இந்தூர்ல இருக்கும் போது எங்க ஆபிஸ்ல புகுந்ததுன்னு சொன்னேனே...அதுவும் இதே மாதிரியான குரங்கு தான்...ஆனா கொஞ்சம் பெரிய சைஸு.

ராணா கும்பாங்கிற மகாராஜா(மீரா பாயோட வீட்டுக்காரரு) குஜராத் சுல்தான் மேல படை எடுத்து ஜெயிச்ச வெற்றியைக் கொண்டாடுறதுக்காகக் கட்டப்பட்ட ஒரு நினைவுச் சின்னம், கீழே இருக்குற "விஜய் ஸ்தம்ப்". இது அக்காலத்துல ஒரு காவல் கோபுரமாவும் பயன் பட்டுருக்கு. ஏழு மாடி கொண்ட இந்த 53மீ உயரமுள்ள கோபுரத்தின் உச்சிக்கு படிக்கட்டுகளின் மூலமாகச் செல்லலாம். இக்கோபுரத்தின் ஏழாவது தளத்திலிருந்து பாத்தால் சித்தூர்கட் கோட்டையின் நால் புறங்களும் வெகு அழகாகத் தெரியும்.

விஜய் ஸ்தம்ப் எதுக்கு கட்டுனாங்கன்னு கீழே படிச்சிக்கோங்க.

11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட "சம்வித்தேஷ்வரா கோயில்" சித்தூர்கட் கோட்டையில் காண வேண்டிய ஒரு முக்கியமான பாயிண்ட்(கைடு பாஷையில). முதல் இரு முறைகள் கோட்டைக்கு கைடு இல்லாமல் சென்றதால் போது சம்வித்தேஷ்வரா கோயில், மீரா கோயில் போன்ற முக்கியமான இடங்களைக் காணாமல் வந்து விட்டோம், மூன்றாம் முறை கைடுடன் சென்ற போது அவ்விடங்களின் வரலாற்றுச் சிறப்பைத் தெரிந்து கொண்டதோடு இவ்விடங்களைக் காண்பதும் நன்றாக இருந்தது. ஆனா நாலாவது முறை புதிதாக வந்த நண்பருடன் சென்ற போது அதான் நீ இருக்கியே அப்புறம் எதுக்கு கைடுன்னு சொல்லி, கைடுக்குக் கொடுக்க வேண்டிய அந்த காசை மிச்சம் புடிச்சிட்டாங்க :(

சம்வித்தேஷ்வரா கோயிலின் வாசலில் உள்ள ஒரு கல்வெட்டு.

பிரம்மா, சிவன், விஷ்ணு - சம்வித்தேஷ்வரா கோவிலின் உள்ளே

கோயிலின் சுவற்றில் யானை, குதிரை, ஒட்டகம் மூன்றுடனும் போருக்குச் செல்லும் வீரர்கள். இது எதோ "குட்லக் சைன்" அப்படின்னு கைடு சொன்னாரு. க்ளிக் பண்ணிப் பாத்தீங்கன்னா பெருசாத் தெரியும்.

மாலையில், இருட்டும் நேரத்தில் எடுத்த படம் இது. இந்த குளத்தின் பெயர் "கோமுக்"(Gaumukh). கோ என்றால் பசு, முக் என்றால் முகம். இதை ஒரு புனித தீர்த்தமாகக் கருதுகிறார்கள். நாங்கள் இருந்ததே மலை உச்சி தான். மலை உச்சியின் மீது அவ்வளவு வேகமாகக் கொட்டுகிற நீர் எங்கிருந்து வருகிறது என்று யாருக்கும் தெரியாதாம்.

கும்மிருட்டில் எதை எடுக்கிறோம் என்றே தெரியாமல், கேமரா ஃப்ளாஷினை மட்டுமே நம்பி எடுத்த ஒரு படம். கோமுக் தீர்த்தத்தில் மிக வேகமாகத் தண்ணீர் கொட்டுகிறது. மழை காலத்தில் நீர் வரத்து அதிகமாக இருந்ததால் தீர்த்தத்தின் அருகில் இருந்த சிவலிங்கம் நீரில் மூழ்கி விட்டது.
கோமுக் என்ற பெயரைக் கேட்டதும் பள்ளியில் படித்த ஆபுத்திரன்(மணிமேகலையின் மகன்) கதை நினைவுக்கு வந்தது. சாவகம்(அக்காலத்து ஜாவா) செல்லும் வழியில் மணிபல்லவம் என்ற தீவில் தவறுதலாக இறங்கி விடும் ஆபுத்திரன், "கோமுகி" என்னும் ஆற்றில் அமுதசுரபி பாத்திரத்தை எறிந்து விட்டு உண்ணா நோன்பு இருந்து உயிர் துறந்ததாகப் படித்த நினைவு.

கோமுக் தீர்த்தத்தில் தான் ராணியர் நீராடுவார்களாம். நீராடிவிட்டு மேலே சொன்ன சிவலிங்கத்தை வழிபடுவார்களாம். அதை வழிபட்டு முடித்ததும் சதி தேவியின் கோவிலில் பூஜிப்பார்களாம். கீழே சதி தேவியின் கோயிலுக்குள்ளே தற்போது இருக்கும் "ராணி பத்மினியின் கற்பனை உருவம்"(Imaginary Statue). "என்னுடைய இந்த அழகினால் தானே என் நாடு அழிந்தது, என்னுடைய மக்கள் மாண்டார்கள்" என ராணி பத்மினி தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்து வருந்துவது போல அமைக்கப் பட்டுள்ளதாம் இச்சிலை.

சித்தூர்கட்டின் முழு வரலாற்றையும் இப்பலகையில் எழுதியிருக்கிறார்கள். படித்துப் பாருங்கள்.

ஜோதிகா புடவை, நயந்தாரா புடவைன்னு நம்ம ஊருல புடவைளுக்குப் பெயர் வைப்பது போல இங்கிருக்கும் கைவினைப் பொருட்கள் கடையில் "ராணி பத்மினி புடவை" என்ற ஒன்றை விற்கிறார்கள். அப்புடவையில் லேசாகத் தண்ணியைத் தெளித்து முகர்ந்து பார்த்தால் நறுமணம் வீசும் என்கிறார்கள். அப்போதைக்கு அவர்கள் செய்து காட்டும் போது நறுமணம் வீசத் தான் செய்கிறது. இது உண்மையாகவே நீடிக்குமா இல்லை ஏமாற்று வேலையா எனத் தெரியவில்லை. ஆனால் கிடைக்கும் கலர்கள் என்னமோ அடிக்கும் கலர்களான ரத்த சிவப்பு, கரும்பச்சை ஆகியவை. அதோடு ஹிந்துஸ்தான் ஜின்க் நிறுவனம் வெகு அருகில் இருப்பதால் ஜிங்க்கினால்(துத்தநாகம்) ஆன வளையல்கள், துத்தநாகத் தூள் தூவி புனையப்பட்ட சேலைகள் ஆகியவற்றை இங்கு வாங்கிக் கொள்ளலாம். ஆண்களுக்குன்னு குறிப்பா வாங்குற மாதிரி ஒன்னும் இந்த கடைகளில் இல்ல...அதுனால எதுவும் சொல்லலை. ஒடனே என்கூட சண்டைக்கு வந்துடாதீங்கப்பா. மொத்தத்தில்...சித்தூர்கட்டுக்குப் பணி நிமித்தம் சென்றாலும், அங்கு சென்று கண்டவை, கேட்டவை யாவும் மிக மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது. அதைத் தங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டதில் கூடுதல் மகிழ்ச்சியே.
-------------------சுபம்------------------------
Tuesday, October 24, 2006
தொண்டையில் தண்ணி பார்க்கலாம்
இப்பதிவு எனது சித்தூர்கட் செலவு பதிவின் தொடர்ச்சி. உலகில் இது வரை நடந்துள்ள ரத்தம் தோய்ந்த யுத்தங்களுக்குக் காரணங்களாக அமைந்தவை மூன்று - மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை. இதில் கடைசியாகச் சொல்லப்பட்ட பெண்ணாசை என்பது மனிதனை எந்த அளவுக்கு மிருகமாக்கும் என்பதற்கும், பெண்ணாசை காரணமாக, பெரும் போர்கள் மூளும் போது, அந்நிலையை நமது "இந்திய பெண்மை" எவ்வாறு எதிர் கொண்டிருக்கிறது என்று அறிந்து கொள்வதற்கும் ஒரு மிகச் சிறந்த வரலாற்றுச் சான்று சித்தூர்கட் கோட்டை.
சித்தூர்கட் என்று சொன்னதும் சில வரலாற்றுப் பெயர்கள் நினைவிற்கு வரும் எனச் சென்ற பதிவில் கூறியிருந்தேன். மீரா பாயைப் பற்றிச் சென்ற பதிவிலேயே பார்த்தோம். சித்தூர்கட்டுடன் தொடர்புடைய இன்னுமொரு முக்கியமான வரலாற்று பாத்திரம் ராணி பத்மினி. 14ஆம் நூற்றாண்டில் சித்தூர்கட்டை ஆட்சி புரிந்த ராஜா ரதன்சேனின் (Ratansen) மனைவி தான் ராணி பத்மினி. சித்தூர்கட்டின் வரலாற்றில் நடைபெற்ற மிகக் கொடூரமான போர்களில் ஒன்று ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தவர் ராணி பத்மினி. அதன் பின்னணியில் இருந்தது ராணி பத்மினியின் 'அழகு'. எப்படிப்பட்ட அழகு என்று கூற வேண்டுமானால், நீர் எடுத்து ராணி பருகினால், தொண்டை வழியாக நீர் செல்லுவது தெளிவாகத் தெரியும் அளவிற்கு அழகு என்று கைடு கூறினார். இப்பேர்ப்பட்ட அழகிகள்(legendary beauties) என்று சொல்லத் தக்கவர்கள் மூன்று பேர் இந்திய வரலாற்றில் இருந்திருக்கிறார்கள் என்றும் கூறினார். அவர்கள் -
1. ராணி பத்மினி - இப்பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது மேவார் ராஜியத்தின் வரலாற்றைக் கூறும் இத்தளத்தைக் கண்டேன். அதில் ராணி பத்மினியின் பூர்வீகம் சின்ஹல் த்ரீபம் (Sinhal Dripa எனப்படும் அக்கால இலங்கை என ஒரு தியரி குறிப்பிடப் பட்டுள்ளது). சிங்கள நாட்டு இளவரசி எவ்வாறு ராஜஸ்தான் மாநில மருமகள் ஆனாள்? இது எனக்கும் ஒரு புதிய செய்தி. எங்களுடைய கைடு இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. நீங்கள் யாராவது இதைப் பற்றி ஏதாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
2. ராணி ரூப்மதி - ராணி ரூப்மதியைப் பற்றி நான் ஏற்கனவே கேள்வி பட்டிருந்தேன். மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரிலிருந்து 120 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மாண்டு அல்லது மாண்டவ்கட்(Mandavgarh) என்ற சிற்றரசை ஆண்ட பாஸ் பகதூர்(Baz Bahadur) என்ற அரசனின் மனைவி ராணி ரூப்மதி. இயல், இசை, நாடகத்தில் ஈடுபாடு கொண்ட பாஸ் பகதூர் ஆடு மேய்த்து கொண்டிருந்த இந்து பெண்ணான ரூப்மதியை காதலித்துத் திருமணம் செய்து கொள்ள காரணமாக இருந்தது அவளின் அழகும், குரல் வளமும் தான். பின்னாளில் அக்பரின் படைத் தளபதியான ஆதம் கான் என்பவன் மாண்டுவின் மீது படை தொடுத்து பாஸ் பகதூரினைத் தோற்கடித்தான். ராணி ரூப்மதியை அபகரிக்கும் திட்டத்தினை நிரைவேற்றுவதற்கு முன்னரே மாற்றான் கையில் சிக்கக் கூடாது என்று விஷம் அருந்தி உயிர் நீத்தாள் ராணி ரூப்மதி. இந்தூரில் வேலை செய்து கொண்டி கொண்டிருக்கும் போது, இரு வருடங்களுக்கு முன் இவ்விடத்தைக் கண்டிருக்கிறேன். ஆனால் ரூப்மதி இப்பேர்ப்பட்ட பேரழகி என்று எங்கள் சித்தூர்கட் கைடு சொல்லித் தான் தெரியும்.
3. பாஜிராவ் மஸ்தானி - இப்பெயரை எங்கள் கைடு சொல்லக் கேட்டதும் 'என்னடா கதை விடுறாரே' என்று தான் நினைத்தேன். காரணம் "பாஜிராவ் மஸ்தானி" என்ற பெயரில் Black திரைப்படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். "சரி எதோ நம்மளை இளிச்சவாயன் என்று நினைத்து சினிமா பேரெல்லாம் சொல்லறார்" என்று அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு பிற்பாடு விகிபீடியாவில் பார்த்ததும் ஆச்சரியம். மஸ்தானி என்ற பெயரில் உண்மையில் ஒரு வீராங்கனை, ஒரு அழகி இருந்திருக்கிறாள். மராட்டிய அரசர்களின் அரசவையில் மிக முக்கியமான அமைச்சராகக் கருதப் பெற்ற பேஷ்வா பாஜிராவ் என்பவரின் இஸ்லாமிய மனைவி தான் மஸ்தானி. பாஜிராவ் மரணம் அடைந்து அவருடைய உடல் தகனம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பாரா வண்ணம், கணவரின் சிதையில் உடன்கட்டை ஏறியவள் மஸ்தானி. மேலே கொடுக்கப் பட்டுள்ள விகிபீடியா லிங்கைப் படித்துப் பாருங்கள், மஸ்தானியின் கதை படிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது.
சரி இப்போது ராணி பத்மினியுடைய வரலாற்றைப் பார்க்கலாம். கைடு சொன்ன கதையை ஒரு சில விழுக்காடு சேதாரங்களுடனும்(transit loss), ஆங்கில விகிபீடியா உதவியுடனும், சித்தூர்கட்டைச் சேர்ந்த நண்பர் கூறிய விபரங்களின் உதவியுடனும் நான் இங்கு எழுதியிருக்கிறேன். தன்னுடைய குடிகள் போற்றும் ஒரு சிறந்த அரசனாகத் திகழ்ந்தவர் ராஜா ரதன்சேன். அறநெறி வழுவாமல் ஆட்சி புரிந்த அத்தகைய அரசனின் அவையில் ராகவ் சேத்தன் என்றொரு மந்திரவாதி இருந்தான். குடிமக்களுக்குத் தீங்கு ஏற்படும் சில செயல்களில் அவன் ஈடுபட்டதால் கடுங்கோபம் கொண்ட ராஜா, அவனை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அவமானப் படுத்தி கழுதை மீதேற்றி நாட்டை விட்டே துரத்தி விட்டார். நாடு கடத்தப்பட்ட ராகவ், ராஜா ரதன்சேனைப் பழிவாங்கும் நோக்கோடு நேராக தில்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜியிடம் சென்று ராணி பத்மினி என்ற ஒரு அழகி, மேவார் ராஜியமான சித்தூர்கட்டில் இருக்கிறாள் என்றும் அப்பேர்ப்பட்ட அழகுகளை எல்லாம் உன் வசம் இல்லாத நீ எல்லாம் என்ன சுல்தான் என்று அலாவுதீன் கில்ஜியைத் தூண்டி விட்டான். உடனே ராணி பத்மினியை அடையும் எண்ணத்தோடு சுல்தான் சித்தூர்கட் மீது போர் தொடுத்தான். ஆயினும் சித்தூர்கட்டை நெருங்கியதும் வலுவான அரணினைக் கொண்ட கோட்டையைக் கண்டு சுல்தான் மலைத்துப் போனான்.
ராணியின் மாளிகையினுள் அமைந்த ரோஜா தோட்டத்தில் எடுத்த படம் கீழே. நல்லாருக்கா?
சித்தூர்கட் கோட்டை ஏழு அடுக்கு(seven layer security cordon) பாதுகாப்பு அரணை உடைத்த மிக வலுவான கோட்டை. ஆசியாவின் மிகப் பெரிய கோட்டை எனக் கருதப் பெறும் பாந்தவ்கட் கோட்டைக்கு அடுத்தபடி மிக வலுவான கோட்டை இதுவென்று எங்கள் கைடு கூறினார். உடனே ராஜா ரதன்சேனுக்கு அலாவுதீன் கில்ஜி ஒரு தூது அனுப்பினான். ராணி பத்மினியைத் தன் சகோதரியாகத் தான் பாவிப்பதாகவும் அவரை ஒரு முறை கண்ணால் கண்டு விட்டுத் திரும்பிச் சென்று விடுவதாகவும் செய்தி அனுப்பினான். நல்ல மனம் கொண்ட ராஜாவும் இதை உண்மை என நம்பி பத்மினியைத் தன் "சகோதரனை" ஒரு முறை காணுமாறு வேண்டினார். ஆனால் சுல்தானின் உள்நோக்கில் சந்தேகம் கொண்ட ராணி, நேரடியாக அவனைக் காண மறுத்துவிட்டார். பல வற்புறுத்தல்களுக்குப் பிறகு, நீரில் தன்னுடைய பிரதிபிம்பத்தை வேண்டுமானால் சுல்தான் பார்த்துக் கொள்ளட்டும் என ராணி அனுமதி அளித்தாள். நீரில் ராணியினுடைய பிரதிபிம்பத்தையும் நேரடியாக சுல்தானுக்குக் காட்டாமல், நீரில் விழுந்த பிரதிபிம்பத்தையும் கண்ணாடியின் வழியாகத் தான் அலாவுதீன் கில்ஜிக்குக் காட்டினார்களாம். கீழே உள்ளது ஜல்மஹலின் படம்(Jal Mahal), ராணியின் அரண்மனைக்கு அருகில் இருக்கும் ஏரியின் நடுவில் அமைந்துள்ள ஒரு மாளிகை இது. இம்மாளிகையின் கடைசி படிக்கட்டில் ராணி நின்று கொண்டு தன் பிரதிபிம்பத்தை நீரில் காட்டினாராம். 
அந்த பிரதிபிம்பத்தை கிட்டத்தட்ட நூறு மீட்டர் தூரமுள்ள ஒரு மண்டபத்தில் நிற்க வைத்து கண்ணாடி பிரதிபலிப்பின் மூலமாக சுல்தானுக்குக் காட்டினார்களாம். இந்த மண்டபத்தின் நான்கு சுவற்றிலும் நான்கு கண்ணாடிகள் இருந்தன. அதில் ஒன்றைத் தான் நீங்கள் கீழே காண்கிறீர்கள். 
இதில் ஏரியோ, கண்ணாடிகள் அமைந்துள்ள மண்டபத்தின் வெளிசுவர்களைப் பார்த்தவாறு இருந்தது. கண்ணாடியோ மண்டபத்தின் உள்சுவர்களில் இருந்தது.
நூறு மீட்டர் தூரத்தில் உள்ள மண்டபத்தில் உள்சுவற்றில் இருக்கும் கண்ணாடியில் எப்படியப்பா பிரதிபலிப்பு தெரியும் என்று கேட்டதற்கு இந்த ஆங்கிள், அந்த ஆங்கிள் என்று ஏதேதோ ஆங்கிள் எல்லாம் எங்கள் கைடு சொன்னார்...ஆனால் எங்களுக்குத் தான் பிரதிபலிப்பு அவ்வளவு தூரம் எப்படி வந்திருக்கும் என விளங்கவில்லை. இத்தளத்தில் எவ்வாறு கண்ணாடிகளை அமைத்திருந்தார்கள் என்றும் விவரித்துள்ளார்கள்.
ராணியின் நிழலுருவத்தைப் பார்த்தே(!) இப்படியொரு அழகா என்று வியந்த சுல்தான், அவளை அடையாமல் விடுவதில்லை என்று தீர்மானித்தான். சுல்தானை வழியனுப்ப ராஜா ரதன்சேன் வாயில் வரை வந்த போது ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த தன்னுடைய வீரர்கள் உதவியுடன் அவரைக் கடத்திச் சென்றான். ராஜா உயிருடன் திரும்ப வேண்டுமென்றால், ராணி தில்லிக்கு வர வேண்டும் என்று சித்தூர்கட்டுக்குச் செய்தி அனுப்பினான். இதனைக் கேள்வி பட்டு வெகுண்டெழுந்த ராஜபுத் வீரர்கள், சுல்தானுக்கு அவனது பாணியிலேயே பாடம் கற்பிக்க முடிவு செய்தார்கள். ராணி சுல்தானைச் சந்திக்க வருகிறாள் என்று செய்தி அனுப்பி விட்டு பல்லாக்குகளில் பெண் வேடம் தரித்த ராணுவ வீரர்கள் தில்லி சென்றனர். கடுமையாகப் போரிட்டு ராஜா ரதன்சேனை மீட்டு வந்தனர். ராஜாவை மீட்டு வருவதில் பெரும்பங்கு வகித்தவர்கள் ராணி பத்மினியின் மாமா கோராவும்(Gora) பன்னிரெண்டு வயதே நிரம்பிய மாமாவின் மகன் பாதலும்(Badal). இவ்விடத்தில் நானறிந்து கொண்ட இன்னொரு பொதுவான விஷயத்தைச் சொல்லிக் கொள்ள நினைக்கிறேன். நாம் மாமா மகன்களை முறை மாப்பிளைகளாகவும், மாமா மகள்களை முறைப்பெண்களாகவும் கருதுவது போல வட இந்தியர்கள் கருதுவதில்லை. மாமா மகள்களையும் சகோதரிகளாகத் தான் கருதுகிறார்கள். ரக்ஷா பந்தன் தினத்தன்று மாமன் மகள்களிடத்தும் ராக்கி கட்டிக் கொள்வார்கள். முதன் முறையில் இதை கேள்விபட்டதும் ஆச்சரியமாக இருந்தது.
பெண்ணாசை கண்ணை மறைக்க, பிறன்மனை நோக்குகிறோம் என்ற எண்ணமும் இன்றி மறுபடியும் தன்னுடைய பெரும்படையைத் திரட்டிக் கொண்டு வந்து சித்தூர்கட்டின் மீது போர் தொடுத்தான் சுல்தான் அலாவுதீன் கில்ஜி. இருப்பினும் சித்தூர்கட் கோட்டையானது மலை மேலே அமைந்துள்ள ஒரு ஊருக்குச் சமமானது. மலையின் மீதே விளைச்சல் எல்லாம் நடைபெற்று கொண்டிருந்தது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள் கோட்டை மேலிருந்து எடுத்த படம். இது கோட்டையின் ஒரு சிறிய பகுதி தான். இதன் மூலம் கோட்டையின் பரப்பளவை அரிதியிட்டுக் கொள்ளலாம். 
இம்முறை மலை அடிவாரத்தில் ஆறு மாதங்களுக்கும் மேலாக தன் படைகளுடன் காத்திருந்து கோட்டைக்குச் செல்லும் அனைத்து supply routesகளையும்(தமிழ்ல என்னங்க?) தடுத்து நிறுத்தினான். கடுமையான போருக்கு இடையே இன்றியமையா பொருட்களின் வரத்து நிற்கத் தொடங்கியதும், தாங்கள் போரில் தோற்கப் போகிறோம் என்று உணர்ந்த ராணி பத்மினி ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்தார்.
அதாவது மாற்றான் கையில் சிக்கி மானத்தை இழப்பதைக் காட்டிலும், ஜோஹர் புரிந்து உயிரை இழப்பது என்பது தான் அது. சரி! ஜோஹர்(Jauhar) என்பது என்ன? ஒரு மிகப் பெரிய சிதையில் தீ வளர்த்து நகரத்துப் பெண்கள் எல்லாம் அதில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளுதலே ஜோஹர் ஆகும். சதி(Sati) எனப்படும் உடன்கட்டை ஏறுதலுக்கும் இதற்கும் ஒரு வேற்றுமை உண்டு. சதி என்பது கணவன் மரணமடைந்ததும் அவனுடைய சிதையில் மனைவியும் இறங்கி தன் உயிர் நீப்பது ஆகும். ஜோஹர் என்பது சமுராய் வீரர்கள் செய்து கொள்ளும் ஹரா-கிரி போன்றது...இது ஒரு மதிப்பிற்குரிய தற்கொலை முயற்சி. கணவனின் இறப்பு ஜோஹார் புரிதலுக்குக் காரணமாகாது. அதன்படி ராணி பத்மினியும் சித்தூர்கட்டில் உள்ள 16000 பெண்களும்(ஆம் பதினாறாயிரம் தான்!!!) ஒரு மிகப் பெரிய தீ வளர்த்து அதில் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். தங்கள் வீட்டுப் பெண்கள் அனைவரும் உயிர் துறந்ததும் இனிமேல் எங்களுக்கு என்ன இருக்கு என என்ணி ஆண்கள் அனைவரும் சுல்தானின் படைகளோடு மிக ஆக்ரோஷமாகப் பொருதினர். மிகப் பயங்கரமான போர் மூண்டது. அங்கு ஓடிய ரத்த ஆற்றில் கன்றுக்குட்டிகள் அடித்துச் செல்லப் பட்டதாகக் கூறும் நாட்டுப் புறப் பாடல்கள் ராஜஸ்தானி மொழியில் இருப்பதாகச் சித்தூர்கட்டைச் சேர்ந்த நண்பர் தெரிவித்தார். ராணி பத்மினியின் மாமன் மகனான பாதல் என்ற சிறுவன் கடைசி வரை பகைவர்களுடன் போராடினானாம். அவனுடைய கால்களை வெட்டிய போதிலும் தரையில் வீழ்ந்த நிலையிலேயே தன் கைகளின் உதவியால் பகைவர் பலரை வெட்டிச் சாய்த்திருக்கிறான். (இதை கேட்டதும் வெள்ளையர்களுடன் போரிட்ட சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த பெரிய மருதுவின்(மருது சகோதரர்கள்) கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையிலும் மண்டியிடாமல் பகைவர்களைக் காரி உமிழ்ந்ததும் இறுதியில் வீரமரணம் அடைந்ததை பள்ளியில் படித்ததும் நினைவுக்கு வந்தது.) இறுதியில் ராஜபுட் வீரர்களைத் தோற்கடித்து கோட்டையைக் கைப்பற்றி உள்ளே நுழைந்ததும் அவர்களுக்குக் கிடைத்தது எரிந்த நிலையில் இருந்த பெண்களின் உடல்களும் எலும்புகளும் தான். இதை கைடு சொல்ல கேட்டதும் என்னுடைய முதல் ரியாக்ஷன் 'அட பாவிகளா!' என்பது தான். ஜோஹர் புரிந்து உயிர் நீத்த ராணி பத்மினியையும் மற்ற பெண்களையும் ராஜஸ்தானில் உள்ளவர்கள் கடவுளுக்குச் சமமாக நினைக்கின்றனர். ராணி பத்மினியின் கதையை, அவ்வரலாற்றை அறிந்த ராஜஸ்தானைச் சேர்ந்த யாரிடமாவது கேட்டுப் பாருங்கள், மிகவும் உணர்ச்சி ததும்ப விவரிப்பார்கள்(நம்மூர் நல்லத்தங்காள் கதை போல)
ராணி பத்மினியின் மாளிகையின் வாயிலில் அமைந்துள்ள tombstone. 
சித்தூர்கட் பயணக்குறிப்பை இப்பதிவுடன் முடித்துவிட வேண்டும் என்று தான் எண்ணியிருந்தேன். நான் கேட்ட, படித்த ராணி பத்மினியின் வரலாற்றை எழுத எழுத நீண்டுக் கொண்டே சென்றது. பதிவின் நீளம் குறித்து இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். வேறென்ன...சித்தூர்கட் செலவு தொடரும் :)
Saturday, October 07, 2006
எனது சித்தூர்கட் செலவு
வேலை விஷயமா சித்தூர்கட்(Chittorgarh) வந்து அஞ்சு மாசம் ஆச்சுங்க. இந்த அஞ்சு மாசங்களும் இனிமையாப் போனதுன்னு தான் சொல்லனும். பல தரப்பட்ட அனுபவங்கள், பல தரப்பட்ட மனிதர்களோடு பழகற வாய்ப்பு, புது வகையான வாழ்க்கைமுறை(ஒரு சிறிய ஊரில் டவுன் ஷிப்புக்குள்ள இருக்குற அனுபவம்), புது வகையான உணவுமுறை இதெல்லாம் கெடச்சது. குறிப்பா ராஜஸ்தான்ங்கிற மாநிலத்தைப் பத்தி இருந்த தப்பான அபிப்பிராயங்கள்(பாலைவனம், ஒட்டகம் மேயற இடம் போன்றவை) எல்லாம் தவிடு பொடியானது. இதுலேருந்து என்ன தெரியுதுன்னா ஒரு இடத்தைப் பற்றியோ, அல்லது ஒரு பொருளைப் பற்றியோ தீர விசாரிச்சி தெரிஞ்சிக்காம, அதப் பத்தி நாமாவே ஒரு அபிப்பிராயம் அமைச்சிக்கிறது தப்புன்னு(மெய்ப்பொருள் காண்பதறிவு).
இந்தியாவில் இருக்குற மாநிலங்கள்லேயே, எங்க மாநிலத்தில் காணக் கிடைக்கிற மாதிரி விருந்தோம்பல் எங்கேயும் கெடக்காதுன்னு இங்கிருக்குற மக்கள் பெருமையாச் சொல்லிக்கிறாங்க. இந்தியாவுலேயே சிறப்பானதா இல்லியான்னு என்னால சொல்ல முடியாது. ஏனா நான் பாத்தது ஒரு சில மாநிலங்கள் தான். ஆனா கண்டிப்பா இங்கிருக்குற மக்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள். வாய்ப்பு கெடச்சதுன்னா என்னிக்காச்சும் ஒரு ராஜஸ்தானி உணவகத்துக்குப் போய் பாருங்களேன். பரிமாறுற விதமே வித்தியாசமா இருக்கும். "இன்னும் கொஞ்சம் நீங்க சாப்புட்டே ஆகனும்"னு பச்சப்புள்ள கணக்கா அடம்புடிப்பாங்க. கிட்டத் தட்ட எல்லா உணவுலயும் நெய் இருக்கும்ங்கிறதுனால "இன்னும் கொஞ்சம்"ங்கிறதுல முழி பிதுங்கிடும். நீங்க வெஜிட்டேரியனா இருந்தா நார்த் இண்டியன் உணவுல பனீரைத் தவிர வேறெதுவும் பொதுவாப் பாக்க முடியாது...ஆனா ராஜஸ்தான்ல சைவத்துலேயே பல வெரைட்டி காட்டுவாங்க. முன்னாடியே சொன்ன மாதிரி நீங்க அசைவமா இருந்தா கொஞ்சம் கஷ்டம் தான்...ஏன்னா பெரும்பாலான மக்கள் இங்கே வெஜிட்டேரியன் தான்.
அதோட விருந்து வைக்கிறவங்களுக்கு நீங்க கொஞ்சம் தெரிஞ்சவங்களா இருந்தா வரிஞ்சு கட்டிக்கிட்டு ஊட்டி விட ஆரம்பிச்சிடுவாங்க. இப்படி தான் தனேஷ்வர் தேவ் என்கிற எடத்துக்கு ஒரு குடும்ப பிக்னிக்(அட...குடும்பம் இருக்குறவங்களுக்குக் குடும்ப பிக்னிக்கப்பா) போயிருக்கும் போது "மால்புவா"ங்கிற இனிப்பை இன்னும் கொஞ்சம் சாப்பிடனும் இன்னும் கொஞ்சம் சாப்பிடனும்னு ஊட்டி விட ஆரம்பிச்சிட்டாங்க. மால்புவாங்கிறது ஒரு சின்ன ஆப்பம் மாதிரி கோதுமையில செஞ்சி அதை நெய்யுல வறுத்து, சக்கரை பாகுல ஊறப் போட்டு சாப்புடற ஒரு டேஞ்சரான ஐட்டம். ஒன்னு சாப்பிட்டால பாதி வயிறு ரொம்பிடும். ஆனா அன்னிக்கு மூனு மால்புவா( அதுவும் ஃபுல் மீல்சுக்கு அப்புறம்) சாப்பிட்டது எல்லாம் ஒரு அன்புக்குக் கட்டுப்பட்டு தான். அதே மாதிரி அவுங்க(அவுங்கன்னு சொல்லறது கிளையண்ட் கம்பெனியைச் சேர்ந்தவங்க) சாப்பிடும் போது நாங்களும் தமிழ்நாட்டு அன்புக்குக் கட்டுப்பட வச்சிட்டோம்ல? இதெல்லாம் பிற்காலத்துல சித்தூர்கட்டின் ஸ்வீட் மெமரீஸ் ஆகிடும்:) சண்டை போட்டுக் கொண்டோ ஏன் சத்தமாகப் பேசிக் கொண்டிருப்பவர்களையே நான் மிகக் குறைவாத் தான் கடந்த அஞ்சு மாசங்கள்ல பாத்துருக்கேன். நம்ம தலைவி கீதா சாம்பசிவம் மேடம் கூட ராஜஸ்தான் மாநிலத்தைப் பத்தி சொல்லும் போது 'எங்க ஊரு எங்க ஊரு'ன்னு புகுந்த வீடு லெவலுக்குப் பெருமையா பேசுவாங்கன்னா பாத்துக்கங்களேன்.
சித்தூர்கட்டில் இருக்கும் கோட்டை வரலாற்று புகழ்பெற்றது. உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பல சுற்றுலா பயணிகள் இதை பாக்க வர்றாங்க. 560அடி உயரமுள்ள ஒரு மலையின் மீது இந்த கோட்டை அமைஞ்சிருக்கு. கோட்டையைத் தவிர்த்து ஒரு ஊரே அந்த மலை மேலே காலகாலமா குடியிருக்கு. மலை என்று சொன்னாலும், உண்மையில் இது ஒரு 'plateau'.(தமிழ்ல என்னங்க?). மலையின் மேல் பகுதி சமத்தளமாக இருக்கும். நாங்க இருக்குற எடத்துலேருந்து இக்கோட்டை கிட்டத்தட்ட இருபது கி.மீ தொலைவில், சித்தூர்கட் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. இது வரைக்கும் நான் இருக்குற எடம் சித்தூர்கட்னு சொல்லி வந்தாலும் நாங்க இருந்த எடத்தோட பேரு ஷம்பூபுரா...அங்க எங்க சிமெண்ட் கம்பெனி மற்றும் சில சுண்ணாம்புக் கல் மைன்ஸ்களைத்(Limestone Mines)தவிர வேறொன்னுமில்லை. சில பேரை நீ எந்த ஊருடான்னு கேட்டா மெட்ராஸ்னு சொல்லுவாங்க, மெட்ராஸ்ல எங்கேடான்னு கேட்டா அச்சிறுப்பாக்கம்னு சொல்லி அச்சிறுப்பாக்கம் பஞ்சாயத்து யூனியனையும் மெட்ராஸோடு இணைச்சிடுறதில்லையா? அது மாதிரி தான் இதுவும்:). சித்தூர்கட்டிலிருந்து ராஜஸ்தானின் பல சுற்றுலா தளங்கள் 3-4 மணி நேர தூரத்தில் அமைந்திருக்கிறது. சித்தூர்கட்டிலிருந்து உதய்பூர் 120 கி.மீ, அஜ்மேர் 160 கி.மீ(உலகப் புகழ் பெற்ற தர்கா இங்குள்ளது, புஷ்கர் ஒட்டக சந்தையும் அஜ்மேருக்கு அருகாமையில் உள்ளது), பீல்வாடா(Bhilwara) 60 கி.மீ, மவுண்ட் ஆபு 250 கி.மீ.
சித்தூர்கட்டோட வரலாற்றைப் பாத்தா, இது மவுரிய அரசர்களின் வசம் இருந்ததாகச் சொல்கிறார்கள். சித்தூர்கட்ங்கிற ஊரோட பேரே சித்திராங்கத மவுரியா என்கிற அரசனின் பேரிலிருந்து தான் வந்ததுன்னு சொல்றாங்க. பழங்காலத்தில் இவ்வூரை சித்திரகூட் (Chitrakoot) என்ற பேரில் அழைத்திருக்கிறார்கள், அது நாளடைவில் சித்தூர்கட் அகி விட்டது. தமிழில் எழுதும் போது சித்தூர்கட் என்றும் ஆங்கிலத்தில் எழுதும் போது Chittorgarh என்றும் எழுதினாலும் "கட்"(Garh) என்ற சொல் கோட்டையைக் குறிப்பதால் ஊரைப் பத்தி மட்டும் பேசும் போது இங்கிருக்கும் லோக்கல் மக்கள் இவ்வூரை "சித்தோட்" என்றே குறிப்பிடுகிறார்கள். சித்தூர்கட் என்பது மேவாட்(Mewar) எனும் பழைய ராஜியத்தின் கீழ் வருகிறது. இம்மேவாட் ராஜியத்தின் சிறப்பு இது கடைசிவரை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாமலிருந்தது என்பதே. ராஜஸ்தானின் பல ராஜியத்தவர்களும் முதலில் முகலாயர்களுக்கும் பின்னர் ஆங்கிலேயர்களுக்கும் கட்டுப்பட்ட போதிலும் மேவாடைச் சேர்ந்தவர்கள் மட்டும் வணங்காமுடியாகவே இருதிருக்கிறார்கள். இக்கோட்டையோடு தொடர்புடைய சில வரலாற்று முக்கியம் பெற்ற பெயர்கள் - ராணா உதய்சிங், மஹாராணா பிரதாப் சிங், ராஜா ரதன் சிங், ராணி பத்மினி மற்றும் பக்த மீரா.
கீழே நீங்கள் காண்பது சித்தூர்கட் கோட்டை மேல் ஏறுவதற்கு முன்னால் வரும் ஆறு. பேரு கம்பீரி(Gambheeri) நதி. 
சாலையிலிருந்து லாங் ஷாட்ல பாக்கும் போது கோட்டை இப்படித் தான் தெரியுது. படத்தை ஒரு முறை கிளிக் பண்ணி பாத்தீங்கன்னா இன்னும் கொஞ்சம் பெருசா தெளிவாத் தெரியும். இந்த படத்துக்கு மட்டுமில்லை...எல்லா படத்துக்குமே தான்.
மலை மேல் ஏறும் போது 'போல்'(Pole) என்ற இது போன்ற முகப்புகளைக் காணலாம். வழிநெடுக பல போல்கள் உள்ளன. ராம் போல், லட்சுமண் போல், ஹாத்தி (யானை போல்), ஹனுமான் போல் போன்றவை. 
கோட்டையின் மதில் சுவர்கள்(Ramparts). லைம்ஸ்டோனுக்கும், மார்பிளுக்கும் பஞ்சமில்லை என்பதால் இவ்வகை கற்களைக் கொண்டே இங்கு கோயில்கள், பெரிய கட்டிடங்கள் ஆகியவற்றை நிர்மானிக்கிறார்கள். கோட்டை மதிற் சுவர்களும் சுண்ணாம்பு கற்களால் ஆனது. 
ராணா பிரதாப் சிங், உதய்சிங் போன்ற புகழ் பெற்ற வழித்தோன்றல்களை வரலாற்றில் கேள்வி பட்டிருப்போம். அவர்களுடைய மூதாதையர் ராணா கும்பா என்ற அரசரின் மாளிகையின் நுழைவாயிலில் இருக்கும் 'tombstone'. Archaeological Survey of Indiaவின் பாதுகாப்பின் கீழ் இந்த கோட்டை இருந்தாலும் இங்கிருக்கும் மாளிகைகள் பாழடைந்தே காணப்படுகின்றன. கோயில்களை நன்றாகப் பராமரித்து வைத்து உள்ளார்கள். அதனுடன் மலை மேலேயே ஒரு அருங்காட்சியகமும் இருக்கிறது. அலாவுத்தீன் கில்ஜியின் படையெடுப்பின் போது பல சிலைகளும், கலை பொக்கிஷங்களும் சேதப் படுத்தப் பட்டதாகச் சொல்கிறார்கள். 
மலை மேலிருந்து கோட்டையின் ஒரு காட்சி. இம்மாதிரியான வரலாற்றுச் சின்னங்களுக்குச் செல்லும் போது நமக்கு அவ்விடத்தைப் பற்றி எதுவும் தெரியாத போது ஒரு கைடு(Guide) வைத்துக் கொள்வது உத்தமம். அவ்வப்போது சில புருடாக்களை இவர்கள் விட்டாலும், பல புது விஷயங்களையும்(புருடாக்களையும்) தெரிந்து கொள்ளலாம். கீழே தெரியும் பசேலேன்ற இந்த இடத்தில் தான் "தி கைடு" இந்தி திரைப்படத்தில் தேவ் ஆனந்தும், வஹிதா ரெஹ்மானும் ஆடிப் பாடும் "ஆஜ் முஜே ஜீனே கி தமன்னா ஹை" பாடல் படமாக்கப்பட்டதாக நம்ம கைடு சொன்னார்.
கீழே படத்தில் தெரிவது - உயரமாக இருக்கும் கோயில் கோபுரம் பலராமர், கிருஷ்ணர், ராதை இவர்களுக்காக அமைக்கப் பட்டிருக்கும் கோயில். அதனருகே இருக்கும் சிறிய கோபுரம் "மீரா பாய்" கோயிலின் கோபுரம்.
பழைய அரண்மனையைக் காட்டும் படம். முகலாயர்கள் படையெடுப்பின் போது தன்னுடைய இளவரசர் உதய்சிங்கைக்(அப்போது குழந்தை) காப்பாறுவதற்காக பன்னா தாய்(Panna Dhai) என்ற பணிப்பெண், இளவரசருக்குப் பதிலாகத் தன் குழந்தையைப் பலி கொடுத்த கதையைக் கேட்க முடிந்தது. பகைவர்கள் இளவரசரைத் தேடிக் கொண்டு அரண்மனைக்குள் நுழைந்து "எங்கே குழந்தை" என்று கேட்டதும், இளவரசருக்குப் பதிலாகத் தன் சொந்தக் குழந்தையை மாற்றியிருந்த பன்னா "இதோ" என தூங்கிக் கொண்டிருக்கும் தன் குழந்தையைக் காட்ட, தன் கண் முன்னரே தன் குழந்தை வெட்டிக் கொல்லப் பட்டதைப் பார்த்தவள். இதை விவரிக்கும் ஒரு ஓவியமும் அங்கு அருங்காட்சியகத்தில் இருந்தது. பன்னாவின் தியாகத்தைப் போற்றும் வகையில் 'ராஜஸ்தானி'யில்(இது ஒரு வட்டார வழக்கு) பல நாட்டுப்புறப் பாடல்கள் இருப்பதாக அறிந்து கொண்டேன்.
மீரா கோயிலின் படம்
நான் கேள்வி பட்ட/தெரிந்து கொண்ட இன்னொரு விஷயம் கிருஷ்ணரைத் துதித்த மீரா பாய் இந்த வம்சத்தின் மருமகள் என்பது(சித்தூர்கட் கோட்டையை ஆண்டவர்கள் சூரியவம்சத்தினர் என்று கேள்வி பட்டேன்). மீரா பாயின் கணவர் சித்தூர்கட் கோட்டையை ஆண்ட அரசர்களில் ஒருவர். தன் மனைவி எப்போதும் கடவுளின் நினைவாகவே இருப்பதை அறிந்து கொண்ட அரசர்(பெயர் மறந்து போச்சு) தன் மனைவி வழிபட கோயில் ஒன்றை கட்டிக் கொடுத்தாராம். அதுவே இந்த கோயில். இதுலேருந்து என்ன தெரியுதுன்னா "Behind every 'devoted' wife, there is an equally 'devoted' husband".(Pun intended!)
ஆனால் மீரா பாயின் கணவரின் மறைவுக்குப் பின்னால் அரியணை ஏறிய அவரது தம்பி, தனது அண்ணி எப்போதும் சாதுக்களுடன் ஆடிப் பாடிக் கொண்டிருக்கிறாளே அதனால் குடும்பத்துக்குக் கெட்டப் பெயர் வருகிறதே என எண்ணி அவளைக் கொல்ல விஷம் கொடுத்து பருகச் சொன்னானாம். ஆனால் பக்தியில் சிறந்தவளான மீரா பாய் அதை பருகியதும், விஷமும் அமிர்தமானதாம். அதன் பின் இனி இவ்விடத்தில் நான் இருக்க மாட்டேன் என்று மனம் வெதும்பி மீரா பாய் துவாரகாவிற்குச் சென்று விட்டாளாம்.
உதய்பூரிலிருந்து இவ்வம்சத்தினவர்களின் ஆட்சி சிறப்பாக நடைபெற்றது போல சித்தூர்கட்டிலிருந்து என்றுமே நடைபெற்றதில்லையாம். எப்போதும் சச்சரவுகளுக்குட்பட்ட கோட்டையாகவே இருந்திருக்கிறதாம். அதற்கு காரணம் பக்த மீரா பாயின் சாபம் என எங்கள் வழிகாட்டி(கைடு) சொன்னார். பெண் பாவம் பொல்லாதுன்னு சும்மாவாச் சொன்னாங்க. அவர் சொன்ன இன்னொரு விஷயம் பெண்களுக்கு ராஜபுத்(Rajput) குடும்பங்களில் மிக்க மதிப்பும் மரியாதையும் இருந்த போதிலும், அவர்கள் நாலு சுவருக்குள்ளேயே அடைந்து இருந்து தான் வாழ்நாள் முழுவதையும் கழிக்க வேண்டுமாம். அரசவை நடைபெறுவதை பார்க்க வேண்டும் என்றால் கூட உப்பரிகையில் ஜன்னலின் சிறு துவாரங்கள் வழியாகத் தான் பார்க்க முடியுமாம். இதனை எங்கள் கைடு "சோனே கே பிஞ்ச்டே மே பந்த் சிடியா" எனக் குறிப்பிட்டார். அதாவது 'தங்கக் கூண்டில் அடைக்கப்பட்ட பறவை'.
கிருஷ்ணரும், பக்த மீரா பாயும் கோயிலுக்குள்ளே
[பி.கு : தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்(திரு.வி.க) எழுதிய ஒரு பயணக் கட்டுரையின் பெயர் 'எனது இலங்கை செலவு'. எட்டாம் வகுப்பு(என நினைக்கிறேன்) தமிழ் பாடப் புத்தகத்தில் அமைந்திருந்தது இக்கட்டுரை. இத்தலைப்பில் 'செலவு' என்ற சொல் இலங்கைக்குச் சென்று வர ஆன பொருட் செலவைக் குறிக்கவில்லை, இலங்கைக்குச் சுற்றுலா சென்று வந்ததனைச் 'செலவு' என்ற சொல்லின் மூலம் குறிக்கிறார் திரு.வி.க. (இச்சொல்லுக்கான பொருளையும், திரு.வி.க. அவர்களே அக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்). இத்தலைப்பினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் My Journey to Sri Lanka. காப்பியடிக்கிறது தான் நமக்கு கைவந்த கலையாச்சே? :)
இன்னிக்கு எனக்கு சித்தூர்கட்ல கடைசி நாள். இன்னியோட இங்கே பிராஜெக்ட் முடியுது. பல மகிழ்ச்சியான நினைவுகளையும், பல அனுபவங்களையும் ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜையும்(என்னன்னு கண்டுபிடிங்க பாப்போம்:) ?) சுமந்துக்கிட்டு சித்தூர்கட்டிலிருந்து அடுத்த பிராஜெக்ட் சைட்டான குஜராத் மாநிலம் அஹமதாபாத்துக்கு இன்றிரவு செல்லவிருக்கிறேன். அஹமதாபாத்தில் புது பிராஜெக்ட், புது டீம்- அதுனால போன கொஞ்ச நாளைக்கு ப்ளாக், இண்டர்நெட் இதெல்லாம் கொறச்சிக்கிட்டு அடக்க ஒடுக்கமா வாலாட்டாம இருப்போம். ஆனா கொஞ்சம் குளிர் விட்டதும் ஆட்டத்தை ஸ்டார்ட் பண்ணிடுவோம். அதோட சித்தூர்கட் பத்திய இந்த பதிவு பாதி தான் செலவாகியிருக்கு. மீதி செலவை இன்னும் கொஞ்ச நாள்ல வாய்ப்பு கெடச்சதும் சொல்லறேன்.]
Thursday, October 05, 2006
கர்பா நடனம்
நவராத்திரி அப்போ போன பதிவுல போட்டிருக்கற படங்களோட ஒரு சின்ன வீடியோவும் எடுத்தேன். அங்கே வேலை செய்யறவங்களோட குழந்தைகள் ஆடி காட்டிய கர்பா(Garba) நடனம். ஒரு வாரத்துல இந்த கர்பா நடனத்துலேயே பல வகைகளைப் பார்த்தேன். பெண்கள் வட்டமா சுத்தி வந்து கும்மி அடிக்கிற மாதிரி இருக்கற நடனத்தையும் கர்பா நடனம்னு தான் சொல்றாங்க. இத மாதிரி சின்ன குழந்தைகள் வேகமா ஆடற நடனத்தையும் கர்பான்னு தான் சொல்றாங்க. பின்னாடி ஒலிக்கிற பாடல் குஜராத்தி மொழியில அமைஞ்சது. பள்ளிக் கூடத்து டான்ஸ் மாஸ்டரோட பயிற்சியில பசங்க நல்லாவே ஆடுனாங்க. பாரம்பரிய உடை அணிஞ்சு சந்தோஷமா ஆடற பாத்ததும் நமக்கும் ஒரு குத்து குத்தனும் போல தான் இருந்தது. ஆனா நம்ம கூட இருந்த பசங்க எவனும் கம்பெனி குடுக்காததுனால ஒரு நல்ல கலைஞனின் நடனத் திறமைகளை மக்களால கண்டுகளிக்க முடியலை :)
வீடியோவைப் பகிர்ந்துக்கனும்னு நேத்து தான் Photobucketல அக்கவுண்ட் தெறந்தேன். படம் ஒழுங்காத் தெரியுதா இல்லியான்னு பாத்துட்டுச் சொல்லுங்க.
Wednesday, October 04, 2006
தசரா
கடந்த பத்து நாளாவே இங்கே நான் இருக்குற இடத்துல(சித்தூர்கட்) ஒரே திருவிழாக் கோலம் தாங்க. காரணம் தசரா பண்டிகை. வட இந்தியாவில்(வட இந்தியா என்று சொன்னாலும் மேற்கு, கிழக்கு பகுதிகளும் இதில் அடங்கும்) மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. நம்ம ஊருல நவராத்திரின்னு சொல்றதை இங்கே 'நவராத்திரா'ன்னு சொல்றாங்க. நவராத்திரா நடக்கற ஒன்பது நாட்களும் பகல் முழுக்க எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பவர்களும் இருக்கிறார்கள், காலையில் சிற்றுண்டி சாப்பிடாமல் மதிய உணவில் வெங்காயம், பூண்டு போன்றவற்றைச் சேர்க்காமல் ஜவ்வரிசி கிச்சடி, தயிர், வாழைப்பழம் என்று மட்டும் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்.
நாம் நவராத்திரி கொண்டாடுவதற்கும் இங்கு கொண்டாடுவதற்கும் கண்கூடான வித்தியாசம் என நான் கருதுவது 'நவராத்திரி கொலு' வட இந்தியாவில் வைப்பதாக நான் கேள்விபட்டதில்லை. கொலு என்று சொன்னாலே "மிக்சட் மெமரிஸ்" தான். சிறு வயதில் கொலு வைத்திருக்கும் வீட்டில் அழகழகான பொம்மைகளைக் காண்பது மிக மகிழ்ச்சியான ஒரு விஷயமாக இருந்திருக்கிறது. ரயில், கோயில், தெப்பக்குளம், யானை, குதிரை என்று அனைத்தையும் மினியேச்சராகக் காண்பதில் அந்த வயதுக்கே உரிய ஒரு சின்ன சந்தோஷம். பல வீடுகளில் வீட்டிற்கு வரும் பெண்களுக்கு ப்ளவுஸ் பீஸ், தாலி கயிறு, குங்குமம், மஞ்சள் டப்பா இத்யாதிகளைத் தருவார்கள். எது எப்படியோ கூடப் போகும் நமக்கும் எதாவது ஒரு சீப்போ, ஒரு சிறு கண்ணாடியோ இல்லை வேறு எதாவது ஒரு சிறு சொப்பு சாமான் பரிசாகக் கிடைத்தால் வந்ததுக்கு ஒரு லாபம். ஆனால் அதே சமயம், கொலு மண்டபத்தில் இருக்கும் எதாவது ஒரு 'பெருசு' சின்னப்பசங்க எதாச்சும் ஒரு பாட்டு பாடுங்க என்று கிளப்பி விடுவதைக் கேட்கும் போதே அங்கிருந்து ஓடி வந்து விட வேண்டும் போல இருக்கும். அப்படியே எதாச்சும் பாட்டு பாடினாலும் மிக உஷாராகப் பாட வேண்டும். அந்த வயதில் எதாச்சும் எசகுப்பிசகா காதல்-கத்திரிக்கா பாட்டைத் தெரியாத் தனமாப் பாடி விட்டால் 'கொலுவுல இந்தப் பாட்டைத் தான் பாடுவாங்களா?'ன்னு வீட்டுக்குப் போனதும் செமத்தியா திட்டு கிடைக்கும். அதற்கு பயந்து கொண்டே கொலு வைக்கும் வீட்டில் பாடச் சொன்னால் வாயை மூடிக் கொண்டு இருந்து விடுவது. ஒரு சோதனையாக அந்த மாதிரி நேரங்களில் 'சாமி பாட்டு' எதுவும் நினைவுக்கு வராது 'நிலா அது வானத்து மேலே' தான் நினைவுக்கு வரும் :)
நாம் இங்கு விஜயதசமிக்கு முதல் நாள் ஆயுத பூஜை என்று நவராத்திரி நாட்களில் கொண்டாடுவதை இங்கு இவர்கள் 'விஷ்வகர்மா தினம்' என்ற பெயரில் நவராத்திரி தினங்களுக்கு முன்னரே கொண்டாடி விடுகின்றனர். இவ்வர்டம் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று நான் இருக்கும் இடத்தில் விஷ்வகர்மா பூஜை செய்யப்பட்டது. வர்க் ஷாப்பில் இயந்திரங்களுக்கும் உபகரணங்களுக்கும் பூஜை செய்து எல்லோருக்கும் பிரசாதம் வழங்கினார்கள். தமிழ்நாட்டில் ஆயுத பூஜை அன்று பேக்டரிகளில் தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடுவது போலவே இங்கு விஷ்வகர்மா தினத்தன்று வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்(நான் இந்தூரில் இருந்த போதும், அங்கும் இதே போல இத்தினத்தன்று பூஜை செய்து கொண்டாடினார்கள்). கீழே உள்ளது விஷ்வகர்மா பூஜை நடந்த இடத்தில் இருந்த பொம்மைகளின் படம். நரைத்த தாடியுடன் கொக்கு மேல் அமர்ந்திருப்பவர் தான் விஷ்வகர்மா கடவுளாம். இந்த பொம்மைகள் அனைத்திலும் மோட்டர் பொருத்தப்பட்டு அழகாக அசைந்தாடி கொண்டிருந்தது. குறிப்பாக நிற்கும் அந்த பெண்களின் பொம்மைகள் இடுப்பை அசைத்து ராஜஸ்தானி முறையில் நடனமாடியதைக் காண அழகாக இருந்தது.
நாங்கள் இருக்கும் இடத்தில் வெறும் சிமெண்ட் தொழிற்சாலை மட்டும் அல்லாமல், அதை ஒட்டியே அங்கு பணிபுரியும் ஊழியர்கள் வசிக்கும் காலனியும்(நாங்கள் தங்கி இருந்ததும் இக்காலனியில் உள்ள விருந்தினர் விடுதியில் தான்), அழகிய கோயிலும், ஸ்கூலும் கொண்ட ஒரு பெரிய வளாகம் உள்ளது(சுருக்கமாகச் சொன்னால் ஒரு மினி டவுன்ஷிப்). வேலை முடித்து இரவு கெஸ்ட் அவுஸ் திரும்பியதும் கோயிலை ஒட்டிய இடத்தில் ஒவ்வொரு நாள் இரவும் டாண்டியா(Dandia) மற்றும் கர்பா(Garba) நடனங்கள் நடைபெறும். டாண்டியா என்பது நம்மூர் கோலாட்டம் போல குச்சிகளைக் கொண்டு ஆடப்படும் நடனம். கர்பா என்பது கைகளைத் தட்டி ஒரு வட்டமாக சுற்றி வந்து ஆடும் நடனம்(கிட்டத்தட்ட நம்மூர் கும்மி மாதிரி தான்). ஆண்கள் பெண்கள் இருவரும் இந்நடனங்களில் பங்கு பெறுவார்கள். இந்நடனங்களுக்கான போட்டிகளும் அங்கு நடைபெற்றது. டாண்டியா கர்பா இரண்டுமே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நடனங்கள் என்பதால் இதற்கான பாடல்களும் குஜராத்தி மொழியில் அமைந்திருந்தன. ஆனால் தற்போது இந்தி திரைப்பட பாடல்களும் அதே பாரம்பரிய மெட்டில் அமைத்து ரீமிக்ஸ் நவராத்திரி பாடல்களையும் புகுத்திவிட்டார்களாம்.
கீழே காண்பது ஆண்கள் பங்கு பெற்ற டாண்டியா நடனம்.
பள்ளிக் குழந்தைகள் பங்கு பெற்ற கர்பா நடனம்.
இந்நடனங்கள் முடிவடைந்ததும் ஒவ்வொரு நாளும் இரவு கீழே உள்ள துர்கா தேவிக்குப் பூஜை நடைபெறும். இப்பூஜையை 'ஆரத்தி' என்றழைக்கிறார்கள். இந்த அம்மனையும் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரில் அழைக்கிறார்கள். 'அம்பே தேவி, 'ஷேரோ வாலி' என பல பெயர்கள். ஜம்மு மாநிலத்தில் உள்ள "வைஷ்ணோதேவி" ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கும் வைஷ்ணோ தேவி சிம்மவாஹினியாகக் காட்சி தருகிறாள். நமக்கு திருப்பதி போல அங்கு வடக்கில் 'வைஷ்ணோ தேவி'. பிராப்தம் இருந்தால் தான் அங்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது. 
அஷ்டமி, நவமி என்று நவராத்திரா நடைபெற்ற ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். கிட்டத் தட்ட ஒவ்வொரு ஊரிலும் ஒன்பது நாள் நவராத்திரா முடிவடைந்து பத்தாவது நாளான தசரா அல்லது விஜயதசமிக்கு முன்னர் ஒரு திருவிழா நடத்துகின்றனர். இதை 'மேளா'(Mela) என்கிறார்கள். பல நகரங்களில் இது போன்ற மேளாக்களை நடத்துவதற்கென்றே 'தசரா மைதான்'களும் இருக்கின்றன. இங்கு பெருமளவில் மக்கள் குழுமுகிறார்கள். அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று தசராவிற்கு முதல் நாள் சித்தூர்கட் தசரா மேளாவிற்குச் சென்றோம். சென்னை சுற்றுலா பொருட்காட்சி போல(எனக்கு அது தான் நினைவுக்கு வந்தது) பல விதமான கடைகளும், சிற்றுண்டி சாலைகளும், வகை வகையான ராட்டினங்களும், குழந்தைகளை மகிழ்விக்கப் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்திருந்தன. கீழே காணும் படம் 'மும்பை எக்ஸ்பிரஸ்' திரைப்படத்தில் வருவது போன்ற ஒரு 'மரணக் கிணறு' ஆகும். காரும், மோட்டார் சைக்கிளும் மரணக் கிணற்றுக்குள் ஓட்டுவதை பார்க்க மக்களை அவர்கள் அழைத்த விதம் வேடிக்கையாக இருந்தது. 
தசரா அன்று நடக்கும் முக்கியமான ஒரு நிகழ்ச்சி 'ராவண் தஹண்' என்பது. அதாவது ராவணன் பொம்மையை எரித்தல். தீமையை நன்மை வெற்றி கொண்டதை குறிக்கும் வகையில் இந்த எரியூட்டு விழா நடக்கிறது. தில்லியில் நானிருந்த போதே இதை பலமுறை கண்டிருக்கிறேன்.
அக்டோபர் இரண்டாம் தேதி தசரா அன்று ராம லட்சுமணர், வானர வேடம் அணிந்த குழந்தைகள் ராவணன் எரியூட்டலுக்கு முன் ஊர்வலமாகச் சென்று கொண்டிருக்கும் போது எடுத்த படம். ஊர்வலமாக வந்தவர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட்டுக்கொண்டே வந்தனர்.
கீழே இருப்பது பள்ளி விளையாட்டு மைதானத்தில் எரிப்பதற்கு தயாராக ராவணன் பொம்மை. தில்லியில் தசரா நிகழ்ச்சிகளில் ராவணனுடன், கும்பகர்ணன், ராவணனின் புதல்வன் இந்திரஜித்(வடக்கில் மேக்நாத் என்றும் அழைக்கிறார்கள் - புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் வரும் சேயோன்) ஆகிய மூன்று பொம்மைகளையும் எரியூட்டக் கண்டிருக்கிறேன். ஆனால் இங்கு ஒரே ஒரு ராவணன் பொம்மை மட்டுமே இருந்தது. பெரிய நகரங்களில் இடம் நிறைய இருப்பதால் அவ்வாறு செய்கிறார்கள் என்றும் உண்மையில் சூரியன் மறையும் வேளையில் ராவணன் மட்டும் தான் ராமனின் அம்பால் கொல்லப்பட்டான் என்றும் கும்பகர்ணனும், சேயோனும் அதற்கு முன்னரே கொல்லப்பட்டு விட்டிருப்பார்கள் என்றும் இம்முறை தெரிந்து கொண்டேன். 
வேடம் அணிந்து வந்த குழந்தைகள் நடத்திக் காட்டிய 'இராவண வதம்'. இராமனின் அம்பினால் கொல்லப்பட்டு வீழ்ந்து கிடக்கும் இராவணன்.
இராவணன் பொம்மை எரிகிறது
ராவணனை எரியூட்டற சிச்சுவேஷனுக்குச் பொருந்துற பாட்டு ஒன்னு ஞாபகத்துக்கு வருதுங்க. 'ஹே ராம்' படத்துல ராஜா இசையில 'அஜய் சக்கரவர்த்தி'ங்கிற பாடகர் பாடுன பாட்டு. இந்துஸ்தானி இசை முறையில் அமைந்த மிக அருமையான பாடல். அஜய் சக்கரவர்த்தி இந்துஸ்தானி சங்கீத உலகில் மிகப் புகழ் பெற்றவர், பெங்காலி மொழியிலும் இவர் குரலில் பல ஆல்பங்கள் வெளி வந்துள்ளன.
இந்த சுட்டியைக் க்ளிக் செய்து "இசையில் தொடங்குதம்மா" பாடலைக் கேட்டு பாருங்கள்
பாட்டோட மூன்றரையாவது நிமிடத்துல "டும்டாக் டும்டாக் டும்டாக்"னு மேளச் சத்தம் போயிக்கிட்டு இருக்கும் போது திடீர்னு சாரங்கி இசை வந்து குழையும் பாருங்க...என்னன்னு சொல்றது...pure listening pleasure.
இராவணனை எரித்து விட்டு பள்ளி மைதானத்தில் இருந்து அனைவரும் ஊர்வலமாக 'ராம் தர்பார்' கோயிலுக்குச் சென்று வழிபட்டு விட்டு பிரசாதம் வாங்கி கொண்டு கிளம்பினோம். கோயிலைச் சுற்றி உள்ள இடத்தில் இராமபிரானின் வாழ்க்கையை விவரிக்கும் பல படங்களை வைத்திருந்தார்கள். கீழே காண்பது விஸ்வாமித்திர முனிவரிடம் இராம லட்சுமணர்கள் வில்வித்தை பயில்வது. 
ராஜஸ்தான் மாநிலத்தில் நான் கொண்டாடிய முதல் நவராத்திரா(அல்லது நவராத்திரி) என்பதாலும், நவராத்திரியின் ஒவ்வொரு கட்டத்திலும் புகைப்படம் எடுத்ததாலும், அதை பற்றி என் வலைப்பூவில் விரிவாக எழுதி பதிவிட்டதாலும் 2006ஆம் ஆண்டின் இந்த தசரா பண்டிகை பல காலம் என் நினைவில் நிற்கும் என்பதில் ஐயம் இல்லை.
