Friday, September 26, 2008

செம்மறி ஆடும் மறந்துபோனவைகள் சிலவும்

ரெண்டு வாரங்களுக்கு முன்னாடி மகளைப் பார்க்கறதுக்குச் சென்னைக்குப் போயிருந்தப்போ, எங்க வீட்டு கிட்ட ஒரு கூட்டமா செம்மறி ஆடுங்க மேஞ்சிக்கிட்டு இருந்ததை பாத்தேன். செவப்பு ரோமம் கொண்ட அந்த செம்மறி ஆட்டுக் கூட்டத்தோடவே கூடவே ரெண்டு கறுப்பு ஆடுங்களும் மேஞ்ச்சிக்கிட்டு இருந்துச்சு. சின்ன வயசுல வெள்ளையா இருக்கற ஆடுங்களை மட்டும் தான் வெள்ளாடுன்னு சொல்லுவாங்கன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா பெரும்பாலான வெள்ளாடுங்க கறுப்பாத் தான் இருக்கும்னு அப்புறமாத் தான் தெரிஞ்சிச்சு. வெள்ளையா இருக்கற ஆடுங்க தான் வெள்ளாடுன்னு நெனச்சிட்டு இருந்தத் தப்பான அந்த எண்ணத்தைப் போலவே, சின்ன வயசுல (கிட்டத்தட்ட ஒரு இருபது வருஷத்துக்கு முந்தி) கேட்ட சில பாடல்களைப்(சினிமா பாடல்கள் தான்) பத்தியும் தப்பான எண்ணம் இருந்துச்சு. சுத்தமாக வெறுத்தப் பாடல்களா இல்லாது போனாலும், இந்த சில பாடல்களை விரும்பி ரசிச்சு எல்லாம் கேட்டதில்லை. கண்டிப்பா விருப்பப் பாடல்களா இருந்தது கெடையாது.

சரி, இப்ப நேரா விஷயத்துக்கு வரேன். வீட்டு கிட்ட அந்த செம்மறி ஆட்டுக் கூட்டத்தைப் பாத்ததும் ஒரு பாட்டு நியாபகத்துக்கு வந்துச்சு. சரின்னுட்டு இணையத்துல அந்த பாட்டைத் தேடிக் கண்டுபிடிச்சி கேட்டேன். சின்ன வயசுல கேட்டப்போ பெருசா மனசைக் கவராத அந்தப் பாட்டு இப்போ ஏனோ கேக்கறதுக்கு நல்லாருக்கற மாதிரி இருந்துச்சு. இது மாதிரி வேற என்னென்ன பாட்டுங்க மனசுக்கு வருதுன்னு யோசிச்சப்போ, ஒரு சில பாட்டுங்க தேறுச்சு. அந்த பாட்டுங்களை நீங்களும் கேட்கறதுக்காகத் தேடிப் பிடிச்சு கொண்டாந்திருக்கேன். இதெல்லாம் ரொம்ப இனிமையான பாடல்கள்னோ, படம் ரிலீஸான காலக்கட்டத்துல ரொம்ப ஹிட்டான பாடல்கள்னோ சொல்லமாட்டேன். எங்கேயோ எப்பவோ கேட்ட மாதிரி இருக்கலாம். பிடிச்சாலும் பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம்.

முதல் பாட்டு, செம்மறி ஆட்டுக் கூட்டத்தைப் பாத்ததும் ஞாபகம் வந்த அந்த பாட்டு. உழவன் மகன் படத்துல விஜயகாந்தும், ராதிகாவும் பாடற மாதிரி வர்ற ஒரு பாட்டு. ஆட்டைக் கருப்பொருளா வச்சி தலைவனும், தலைவியும் தங்கள் காதலைப் பகிர்ந்துக்கற ஒரு பாட்டு. "ஆடு விடு தூது"ன்னு கூட சொல்லலாம்:) பாடலுக்கு இடையில சின்னப் பையன் குரல்ல ரெண்டு வரி வரும் "இய்யா இய்யா இய்யாவோ எல்லாம் தெரிஞ்ச ஐயாவோ" அப்படின்னு. அந்த போர்ஷன் ரொம்ப வித்தியாசமா இருக்கும். பாடலில் வரும் பெண்குரலைக் கேட்டுட்டு அது B.S.சசிரேகாவோன்னு நெனச்சேன். அப்புறம் தான் தெரிஞ்சது பாடுனவங்க பேரு விஜயான்னு. இவங்க வேற எதாச்சும் பாட்டு பாடிருக்காங்களான்னு தெரியலை. "செவத்த பொண்ணு இவத்த நின்னு தவிக்கலாமோ சொல்" அப்படின்னு ஒரு வரி வரும். "இவத்த" அப்படீங்கற வார்த்தை பிரயோகத்தை அப்பல்லாம் நான் எங்கேயும் கேட்டதேயில்லை. மதுரை பக்கம் உபயோகிப்பாங்க போலிருக்கு. ரொம்ப நாளைக்கப்புறம் விருமாண்டி படத்துல இளையராஜா எழுதுன "சண்டியரே சண்டியரே" பாட்டுல "அங்கிட்டு போனீன்னா ஒன் றெக்கையா பிப்பாங்கிய, இவத்த ஓடியா இவத்த ஓடியா" அப்படின்னு வரும். இதே உழவன் மகன் படத்துல டி.எம்.எஸ் குரலில் வர்ற "பூந்தோட்டம் தாங்காதம்மா பூப்பறிக்க நாளாகுமா?"ங்கிற பாட்டும் நல்லாருக்கும். அந்த பாட்டுல முதல் பகுதியில டி.எம்.எஸ் பாடற முதல் சில வரிகள் ரொம்ப நல்லாருக்கும். "தோல்வி என்ன கால்களுக்கு" அப்படின்னு முடியும். மத்த வரிகள் சரியா நினைவில்லை. மனோஜ் பட்நாகர் - கியான் வர்மா அப்படீங்கற ரெண்டு வடக்கத்தி இசையமைப்பாளர்கள் இசையமைச்சிருந்தாலும் சர்ப்ரைசிங்கா நம்மூரு நேட்டிவிட்டியைப் பாடல்கள்ல மெயிண்டேன் செய்து இருக்கற மாதிரி இருக்கும். "பொன்நெல் ஏரிக்கரையோரம் பொழுது சாயுது நதியோரம்" அப்படீங்கற பாட்டும் ஜல்ஜல்னு மாட்டு வண்டி ஓடற சந்தத்துக்குக் கேக்க நல்லாவே இருக்கும்.

படம் : உழவன் மகன் (1987)
இசை : மனோஜ்-கியான்
பாடியது : S.P.பாலசுப்பிரமணியம், விஜயா

Get Your Own Hindi Songs Player at Music Plugin

அடுத்த பாட்டும் மனோஜ்-கியான் இசையமைப்புல வெளியான ஒரு படத்தோட பாட்டு தான். படத்தோட பேரு தாய்நாடு. சத்தியராஜோட கரியர்ல ரொம்ப முக்கியமானதொரு படம்னு நெனக்கிறேன். ஏன்னா இந்தப் படத்துக்கப்புறம் தான் அவரு கதாநாயகனா நடிக்க ஆரம்பிச்சாருன்னு நெனக்கிறேன். மனோஜ்-கியானுக்கு டி.எம்.எஸ் ரொம்ப ஃபேவரிட் போல. இந்தப் பாட்டையும் இந்தப் படத்துல வர்ற இன்னொரு பாட்டையும் டி.எம்.எஸ் தான் பாடியிருப்பாரு. அதே மாதிரி அவங்க இசையில வெளியான செந்தூரப்பூவே படத்துலயும் சில பாடல்களை டி.எம்.எஸ் தான் பாடிருப்பாரு. "ஒரு முல்லை பூவனம்"அப்படின்னு தொடங்கும் இந்த பாட்டும் துள்ளல் இசையோட அந்த காலத்து இந்தி இசையமைப்பாளரான ஓ.பி.நய்யர் அவர்களின் இசையில் வந்த பாடல்களை நினைவு படுத்தற மாதிரி இருக்கும். இதே படத்துல இருக்கற இன்னொரு பாட்டான "தாய்மாமன் கைகள் பட்டு"ங்கிற பாட்டைத் திருவல்லிக்கேணில எங்க பக்கத்து வீட்டுல குடியிருந்த சிலோன் கார ஆண்ட்டியோட தம்பிகள் ரெண்டு பேரும் அடிக்கடி கேசட்ல போடுவாங்க. அதனால அதை கேட்ட நியாபகம் நல்லா நெனைவிருக்கு,

படம் : தாய்நாடு (1987)
இசை : மனோஜ்-கியான்
பாடியது : T.M.சௌந்தர்ராஜன், P.சுசீலா


Get Your Own Hindi Songs Player at Music Plugin


Get Your Own Hindi Songs Player at Music Plugin

மனோஜ் கியான் இசையில செந்தூரப்பூவே படத்துல ஒரு பாட்டு ஒன்னு இருக்கு. "கானக்கரிசலிலே களை எடுக்கும் பூங்குயிலே, நீலக் கருங்குயிலே நிக்கட்டுமா போகட்டுமா" அப்படின்னு வரும். இந்தப் பாட்டை இணையத்துல எங்கே தேடியும் கெடைக்கலை. ஆனா பாடல் வரிகள் திண்ணை இணையதளத்துல எதோ ஒரு கட்டுரையில கையாளப் பட்டிருக்கறதை பாத்தேன். அநேகமா இந்தப் பாடலின் வரிகள், எதோ ஒரு உண்மையான நாட்டுப்புறப் பாட்டுலேருந்து எடுத்துருப்பாங்க போலிருக்கு. இந்தப் பாட்டு நடுவுல ஒரு ஃபீமேல் கோரஸ் ஒன்னு வரும். "வாராங்க வாராங்க பன்னாடி வாராங்க! பச்சை குடை பிடிச்சு பயிர் பாக்க வாராங்க"அப்படின்னு வரும். "பன்னாடி" அப்படீங்கற வார்த்தைக்கு அர்த்தம் என்னான்னு அப்போ எங்க நைனாவைக் கேட்டதும் நியாபகத்துக்கு வருது. கோயம்புத்தூர் பக்கம் பண்ணையாரைத் தான் அப்படி சொல்லுவாங்கன்னு சொன்னாரு. யாராச்சும் இந்தப் பாட்டைக் கேட்டிருக்கீங்களா? இந்தப் பாடலைக் கேக்கறதுக்கான சுட்டி எங்கேயாச்சும் இணையத்துல கெடைச்சதுன்னா தெரியப்படுத்துங்க. இந்தப் பாட்டைக் கண்டுபிடிக்க தேன்கிண்ணம் வலைப்பூ அமைப்பாளர்களுக்கும், கானா பிரபா அண்ணாச்சிக்கும் ஒரு ஸ்பெசல் ரிக்வெஸ்ட்.

அடுத்து வர்ற பாட்டு, அது வெளியான காலத்துலே உண்மையாவே நான் வெறுத்த ஒரு பாட்டு. இந்தப் பாட்டின் முதல் வரிகளைக் கேட்டாலே, பாட்டை நிறுத்திடுவேன் இல்ல அப்படி நிறுத்த முடியலைன்னா வேற எங்கேயாச்சும் போயிடுவேன். உண்மையிலேயே எரிச்சலைக் கெளப்புற பாட்டா இருந்துச்சு அப்போ எனக்கு. ஈரமான ரோஜாவே படத்துல ஹீரோவா நடிச்ச சிவா பெரிய மீசை, கையில தடி எல்லாம் வச்சிக்கிட்டு பாடற ஒரு சோகப்பாட்டு இது. இந்தப் பாட்டு புடிக்காமப் போனதுக்குக் காரணம்னு சொல்லனும்னா இதன் முதல் வரிகள் - "எட்டு மடிப்பு சேலை இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோலை" இது தான். எங்கேயாச்சும் இடுப்புல சோலையைச் சுத்த முடியுமா, சுத்தக் கிறுக்குத் தனமா பாட்டு எழுதிருக்கான்னு அப்போ நெனச்சேன். உண்மையிலேயே அந்த வித்தியாசமான கற்பனை தான் அந்தப் பாட்டை இன்னும் நியாபகத்துல நிறுத்தி இருக்கு. எனக்கு தான் இந்தப் பாட்டு அப்போ புடிக்காதே ஒழிய, தென்னாற்காடு மாவட்டத்துல இருக்கற எங்க கிராமத்துல இருக்கற சின்னப்பசங்களுக்கு எல்லாம் அப்பவே ரொம்ப புடிச்ச பாட்டா இது இருந்துச்சு. எவனைப் பாத்தாலும் "எட்டு மடிப்பு சேலை எட்டு மடிப்பு சேலை"ன்னு பாடிக்கிட்டு சுத்திட்டு இருப்பானுங்க. சௌந்தர்யன் இசையில ஒரு சிம்பிளான நல்ல பாட்டு இது. இப்போ புரியுது நல்ல பாட்டுன்னு. எஸ்.பி.பி. இந்தப் பாட்டுக்குத் தன் குரலால உயிர் கொடுத்துருப்பாரு கேட்டுப் பாருங்க. இதே மாதிரி கரகாட்டக்காரன் படத்துல வர்ற "பாட்டாலே புத்தி சொன்னார்" பாட்டும் அப்போ எனக்கு புடிக்கவே புடிக்காது. "பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார்" அப்படின்னு பாட்டு வரும் போதே "பாட்டாலே பருப்பு கடைஞ்சாரு"அப்படின்னு பக்கத்து வீட்டு அண்ணன்(அதே ஆண்ட்டியோட தம்பி தான்) தானாவே ஒரு லைனை சொருகினதைக் கேட்டதால வந்த வெறுப்பு தான் அது. ஆனா உண்மையிலேயே சூப்பர் பாட்டு அது. "எனக்கு தான் தலைவர்கள் என் ரசிகர்கள் அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்" அப்படீங்கற வரிகளில் இவங்க இத பாடச் சொன்னாங்க, அவங்க அதை பாடச் சொன்னாங்கன்னு எல்லாம் சொல்லிட்டு கடைசியில முத்தாய்ப்பா முடிக்கிறது ரொம்ப நல்லாருக்கும். அந்த கடைசி வரிகளைக் கேக்கும் போது எனக்கு என்னமோ வானத்தில் பல இடங்களில் ஒரு விமானம் வானளாவ பறந்து விட்டு அருமையா லேண்ட் ஆன மாதிரி இருக்கும்.


படம் : முதல் சீதனம் (1992)
இசை : சௌந்தர்யன்
பாடியது : S.P.பாலசுப்பிரமணியம்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

மேலே இருக்கற பாட்டுங்க எல்லாம் அவ்வளவு பிரபலம் ஆகாத பாடல்கள். ஹிட்டுன்னு சொல்ல முடியாது. ஆனா வி.எஸ்.நரசிம்மன் அவர்கள் இசையில் வெளிவந்த பாட்டு ஒன்னு இருக்குதுங்க. இந்தப் பாடலை அதிகமா வானொலிகள்லயோ, டி.விக்கள்லயோ கேட்டுருக்க முடியாது. ஆனா இது ஒரு டாப் க்வாலிட்டி மெலடி பாட்டு அப்படிங்கறதை யாராலயும் மறக்க முடியாது. ஒரு தடவை கேட்டீங்கன்னா மனசுல் நின்னுடும். திரும்பத் திரும்ப கேக்கத் தூண்டும். கே.பாலச்சந்தர் இயக்கத்துல வெளிவந்த கல்யாண அகதிகள் அப்படீங்கற படத்துல வர்ற "மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய் என் மவுனத்தை இசையாக மொழிப்பெயர்த்தாய்"ங்கிற பாட்டு தான். திடீர்னு இந்தப் பாட்டு நியாபகத்துக்கு வந்து பாடாப் படுத்துது. பாடாப் படுத்துதுன்னு ஏன் சொல்றேன்னா இந்தப் பாட்டோட டியூனும், இண்டர்லியூட்ஸ் நியாபகத்துக்கு வந்து கேக்கனும்னு ஒரு வெறியை ஏற்படுத்திடுச்சு. ஆனா இணையத்துல எங்கேயும் கெடைக்கலை. கானா பிரபா அண்ணாச்சி தன்னோட ரேடியோஸ்பதி வலைப்பூவுல இந்தப் பாட்டைப் போட்டிருக்காரு. ஆனாலும் எனக்கு அந்த பாட்டு கேக்கலை. உங்களுக்குக் கேக்குதான்னு பாருங்க.

கானா அண்ணாச்சியின் ரேடியோஸ்பதியில் மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய் கேட்க...

இந்தப் படம் வெளிவந்த காலத்துல என் கூட படிச்ச பசங்கல்லாம் பாடும் வானம்பாடி, தங்கமகன், காக்கிச் சட்டை, அடுத்த வாரிசு அப்படின்னு மசாலா படங்களை எல்லாம் பாத்துட்டு கிளாசுல வந்து கதை சொல்லும் போது, நான் மட்டும் "கல்யாண அகதிகள்", "அவள் ஒரு தமிழச்சி" அப்படின்னு பாலச்சந்தர் இயக்குன சரிதா நடிச்ச பாடாவதி(அப்போ எனக்கு அப்படித் தான் இருக்கும்) படங்களைப் பாக்கப் போய் பாதியிலேயே தியேட்டர்ல தூங்கிருக்கேன். கூட வேலை செய்யறவங்க "நல்ல படம் பிரஃபஸர் இது"ன்னு சர்டிபிகேட் குடுத்தா தான் எங்க நைனா எங்களைப் படத்துக்கே கூட்டிட்டுப் போவாரு. "அடியே அம்முலு"அப்படின்னு ஆரம்பிக்கும் கவிஞர் வைரமுத்து எழுதுன இந்தப் பாட்டு. எண்பதுகளில் தூர்தர்ஷனில் செய்திகள் வாசித்த ஒருவரே அந்தப் படத்துல ஹீரோவா நடிச்சிருப்பாருன்னு நெனக்கிறேன். அதோட இது நாசரோட முதல் படம். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளான கண்மணி பூங்கா, காண்போம் கற்போம், வயலும் வாழ்வோம், முன்னோட்டம், எதிரொலி இதெல்லாம் இந்தப் பாடலோட வரிகளிலேயே வர்றது சிறப்பு. மத்த எந்த பாட்டு புடிக்கலைன்னாலும் இந்தப் பாட்டு உங்களுக்குப் புடிக்கும்.

ரொம்ப நாளா போட்டோ படத்தைத் தவிர வேற எதுவும் நம்ம ப்ளாக்ல போடறதுல்லைங்கற களங்கத்தைத் துடைக்கும் விதமா இந்தப் பதிவு அமையும்னு நம்பறேன்.

Monday, September 15, 2008

அடாலஜ் படிகிணறு - PIT கட்டமைப்பு போட்டிக்காக

மக்களே! பில்டப் எல்லாம் பலமா குடுத்து ஒரு மறுநுழைவு பதிவு போடணும்னு தான் எண்ணம். ஆனா ரொம்ப நாளா எதுவும் எழுதாம் டச்சு விட்டதுனால "தேவர் மகன்" ரேவதி சொல்ற மாதிரி "வெறும் காத்து தாங்க வருது". இது தமிழில் புகைப்படக்கலை குழுமம் அறிவிச்சிருக்குற கட்டமைப்பு புகைப்படப் போட்டிக்கான ஒரு பதிவு, கூடவே 2007 ஆம் ஆண்டின் துவக்கத்தில் குஜராத் மாநிலத்தில் சுற்றி பார்த்த அடாலஜ் எனும் இடத்தைப் பற்றிய ஒரு சிறு பயணக் குறிப்பு.

அடாலஜ் என்னும் இடம் குஜராத் மாநிலத்தில் வணிகத் தலைநகரமான அகமதாபாத்துக்கும், தலைநகரமான காந்திநகருக்கும் இடையே சார்கேஜ்-காந்திநகர் சாலையில் அமைந்துள்ளது. அகமதாபாத் நகரின் எந்த ஒரு பயணக் கையேட்டை(Tourist Guide)எடுத்தாலும் இவ்விடம் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அகமதாபாத்திலிருந்து இவ்விடத்திற்கு அரசு பேருந்துகளில் செல்லலாம், அல்லது நம்மூர் ஷேர் ஆட்டோ போல அகமதாபாத்தில் ஷேர் ஜீப் இயக்குகிறார்கள், அதிலும் செல்லலாம். என்ன ஒன்று ஒரு சீட்டில் ஐந்து பேரைத் திணித்து விடுவார்கள்.

அடாலஜில் நமக்கு காணக் கிடைப்பது ஒரு படிகிணறு. ஆங்கிலத்தில் இதை Stepwell என்று சொல்கிறார்கள். குஜராத்தி மொழியில் வாவ்(Vav) என்றும் இந்தியில் பாவ்டி(Bhaoli) என்றும் சொல்கிறார்கள். சாதாரண ஒரு கிணற்றை இப்படியெல்லாம் கலைநயத்துடன் அழகாகக் கட்ட முடியும் என்பதைக் கண்டு வியந்து போனேன். இக்கிணறை அரசக் குடும்பத்தினர் நீராடப் பயன்படுத்தினர் என்று அங்கு சென்று தெரிந்து கொண்டேன். ஆனால் விவசாயத்துக்கு நீர்பாசனத்துக்காகவும் இவ்வகை கிணறுகள் பயன்படுத்தப்பட்டதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது.

அடாலஜ் படிகிணறு - அறிவிப்பு பலகை

சாதாரண ஒரு கிணற்றில் எப்பேர்ப்பட்ட வேலைபாடுகள் பாருங்கள். அந்த காலத்துல ஆணிபுடுங்கறது எல்லாம் வேறுவிதமா இருந்துருக்கு :(

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் Sandstone என்னும் கல்லில் வேலைபாடுகள் செய்யப்பட்ட பல புராதன சின்னங்கள் உள்ளன. தற்கால கட்டுமானங்களான ஸ்வாமிநாராயண் கோயில்(துப்பாக்கிச் சூடு புகழ்) மற்றும் பல இந்து, சமண கோவில்களிலும் இத்தகைய அதிசயத்தக்க வேலைபாடுகளைக் காணலாம்.

படிகிணறுச் சுவற்றில் ஜோடிகிளிகள்.

மேலே இருக்கற படம் தான் போட்டிக்கு. படிகிணறு செல்வதற்கு அழகிய வேலைபாடுகள் நிறைந்த ஒரு மாளிகையின்(மாளிகைன்னு சொன்னா மிகையாகாது)வழியாகச் செல்ல வேண்டும். அதன் முகப்புத் தோற்றம் தான் இது. Horizontal(தமிழ்ல என்னங்க)ஆகவும் பல அடுக்குகளைக் கொண்டது இம்மாளிகை. பாத்தா தெரியுதுல்ல...நிழல்கள் படத்துல பூங்கதவே தாழ்திறவாய் பாட்டுல வர்ற மாதிரி நுழைவாயிலுக்குள்ள நுழைவாயில். இந்த பல்லடுக்கு Horizontal Layerகளின் கடைசி லேயரில் தான் படிகிணறு இருக்கின்றது. Horizontalஆக மட்டுமில்லாம Verticalஆகவும் ஐந்தடுக்கு கொண்டது இந்த அடாலஜ் படிகிணறு.

மேலே குறிப்பிட்டுள்ள மாளிகை வழியாக படிகிணறுக்குச் செல்லும் வழி.

படி கிணறு போகும் வழியை மேலிருந்து ஃபோகஸ் செய்து எடுத்த படம்.

ஐந்தடுக்கு கொண்ட படிகிணறின் பிரமாண்டத்தை மேலே உள்ள படத்தில் காணலாம். எட்டு கோணங்களைக் கொண்ட இக்கிணறின் சுற்றளவை வான் நோக்கி எடுக்கப் பட்ட இப்படத்தின் மூலமாக அரிதியிடலாம். உண்மையிலேயே மிகப் பெரிய ஒரு கட்டிடம் இந்த படிகிணறு. இந்தப் படத்தை கிணற்றின் நீர் துவாரம்(Water Hole) அருகே நின்று கொண்டு எடுத்தேன். சுற்றிலும் சுவர்களில் கண்கவரும் அழகிய வேலைபாடுகளும், இப்படிகிணறின் பிரம்மாணடமும் உங்கள் மனதைக் கண்டிப்பாகக் கவரும். அகமதாபாத் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் அடாலஜ் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு இடம். ரொம்ப நாளைக்கு அப்புறமா இந்த பதிவு எழுதியிருக்கேன். பதிவைப் பத்தியும் படங்களைப் பத்தியும் உங்க மேலான கருத்துகளைச் சொல்லிட்டு போங்க. அப்புறம்...படங்கள் மேலே க்ளிக்கி பாத்தா இன்னும் கொஞ்சம் பெருசாத் தெரியும்.