மொதல்லயே ஒரு டிஸ்கி போட்டுக்கறேங்க. இது இந்தப் படத்தைப் பத்திய விமர்சனப் பதிவு இல்லீங்க. எக்கச்சக்கமா எல்லாரும் இதப் பத்தி எழுதிட்டாங்க, நான் புதுசா எழுத அப்படி ஒன்னியுமே இல்லீங்கோ. பட்டிக் காட்டான் முட்டாய் கடையைப் பாத்தா மாதிரி ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு தமிழ் படம்...அதுவும் கொட்டாய்ல போய் ஒக்காந்து...அதுவும் மும்பையில...அதுவும் தனியாப் பாத்தது(தமிழ்ல சொல்லனும்னா "என்ன கொடுமை சார் இது?" கொஞ்சம் பீட்டரா சொல்லனும்னா "How unromantic? :)" ) - அப்படி பட்ட ஒரு படத்தைப் பத்தி எப்ப பாத்தோம், எங்கே பாத்தோம்னு எழுதி வச்சுக்கறதுக்காக ஈ செறியதொரு சிபிஐ டைரி குறிப்பு. கேட்டோ?
"கணபதி பப்பா மோரியா" - விநாயகர் சதுர்த்தி அன்னிக்குத் தான் வே.வி. பாத்தோம்னு இனிமே மறக்குமா என்ன?
டேய்! இதெல்லாம் ஒனக்கே ரொம்ப ஓவராத் தெரியலியாடானு கேக்கறவங்களுக்காக...கடைசியா நான் கொட்டாயில பாத்த படம் அமிதாப் பச்சனோட "ப்ளாக்"னு(Blog லேது... Black) நெனக்கிறேன். ரொம்ப யோசிச்சு பாத்ததுல கடைசியா கொட்டாய்ல பாத்த தமிழ் படம் சென்னை மாயாஜால்ல பாத்த "பிதாமகன்"னு ஞாபகம்.
டிஜிட்டல் தானே? காசா? பணமா? அதான் சும்மா மைக் டெஸ்டிங்...
ஒடனே இவன் விசிடி பார்ட்டி தான்னு முடிவு கட்டிடாதீங்க சாமி! நான் இருக்குற காட்டுல புதுசா ரிலீஸ் ஆன இந்தி படம் வர்றதுக்கே ஒரு மாசம் ஆகும். முன்ன இருந்த இந்தூர்லயும் தமிழ் படம் எதுவும் வராது. சித்தூர்கட்ல ஒரு தியேட்டர்ல 80களில் வெளியான ஒரு மிதுன் சக்ரவர்த்தி படம் இன்னும் ஓடிட்டு இருக்கு :) இதுல எங்கேருந்து தமிழ் படம் எல்லாம்? அப்பப்போ லீவுல மெட்ராஸுக்கு வரும் போதும், ஒரு வாரம் லீவுல வரோம் அதுலயும் இந்த பாடாவதி படத்தை எல்லாம் போய் அவசியம் பாக்கனுமான்னு நெனச்சிட்டே உருப்படியா எதாவது பண்ணலாம்னு வீட்டுலயே இருந்துடுவேன்.(சே! சே! நமக்கும் சோம்பேறித் தனத்துக்கும் ரொம்ப தூரமுங்க.)
பிதாமகன் படம் பாக்கப் போனது தீபாவளிக்கு மறுநாள்...எந்த வருசம்னு சரியா ஞாபகம் இல்ல. மாயாஜாலுக்குப் போனா அப்பச் சென்னையில கிரிக்கெட் வெளாட வந்த நியூசிலாந்து டீம் மொத்தமும் அங்கே நிக்குது. கிறிஸ் கெயிர்ன்ஸ் டிவியில பாக்க அப்படி ஒன்னும் வித்தியாசமாத் தெரியலன்னாலும் நெசத்துல பாக்க பார்ட்டி பூதாகரமா இருந்தான்(கொஞ்சம் லோக்கலாச் சொல்லனும்னா 'டெல்லி எருமை' மாதிரி). ஸ்டீபன் ஃப்ளெமிங் கிட்ட ஆட்டோகிராப் வாங்கிட்டு வர்றேன்னு என் தம்பி என்கிட்டச் சொன்னதும், சும்மா அவனை ஓட்டறதுக்காக "பிளடி இண்டியன்ஸ்! ஒங்களுக்கு எல்லாம் நான் ஆட்டோகிராப் போடற்தில்ல மேன்"னு அவன் சொல்லிட்டான்னா என்னடா பண்ணுவன்னு என் தம்பியைக் கேட்டதுக்கு அவன் சொன்ன பதில் தான் இன்னும் அந்த படம் பாத்ததை ஞாபகத்துல இருக்க வச்சிருக்கு. "அப்படி சொல்லிட்டு அவனால ஈஞ்சம்பாக்கம் கூட தாண்ட முடியாது. அவன் மூஞ்சை ஒடச்சிட மாட்டோம்" அப்படின்னான். என்னமோ நமக்கு படம் பாக்கப் போகும் போது நடக்கற சின்ன விஷயங்கன்னாலயும் படம் பாத்த சூழல்னாலயும் தான் படம் மனசுல நிக்குது.
சரிங்க இப்ப "வே.வி." பத்தி சில பல மேட்டர்ஸ்.
காமெடிக்குன்னு தனியாப் படத்துல யாரும் இல்ல. ஆனா அது இல்லாத குறையை(நக்கலுக்கு இல்ல) சில வசனங்கள் (and certain witty conversations) தீர்த்து வைக்குது. உதாரணத்துக்குச் சில
1. "I hate violence against women, even if its not my jurisdiction"
(இது போன்ற ரசிக்கத்தக்க, இன்னும் சில பீட்டர் வசனங்கள் படத்துல இருக்குதுங்க)
2. "ஸாஃப்ட்வேரா நானா?... இல்லீங்க நான் ஹார்ட்வேருங்க"
3. "உங்க கூட பேசுனதும் என்னோட கஷ்டங்கள் எல்லாம் கொறஞ்சா மாதிரி இருக்கு"
"என் கூட பேசுனதும் எல்லாரும் இத தான் சொல்றாங்க"
(இந்த டயலாக்குக்கு முன்னாடி தான், ஜோதிகா அவங்க வாழ்க்கையில் நடந்த சோகங்களைப் பத்தியும், கமல் அவருடைய சோகங்களைப் பத்தியும் பேசிப்பாங்க)
4. "நல்லதாப் போச்சு...நீங்க தமிழா போயிட்டீங்க"
"இல்லை...தெலுங்கா இருந்தாலும் காப்பாத்தியிருப்பேன்"

ஆகஸ்டு திங்கள் 27ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை...12 மணி ஆட்டம். அப்பா! வரலாற்றுல பதிவாயிடுச்சு.
படத்தோட ஒளிப்பதிவு கண்ணுலயே நிக்குது. குறிப்பா தெள்ளத்தெளிவான நீல வானம் வரும் ஒரு சில காட்சிகள், அமெரிக்காவில் படமாக்கப் பட்ட இன்னும் நெறைய காட்சிகள் visual treatனு சொன்னாத் தப்பாகாது. இசையும் நல்லாருக்கு. பாடல்களை முதல் முறையா நான் நேத்து படத்துல தான் பாத்ததுங்கிறதுனால பாடல் வரிகள் எதுவும் நினைவு இல்ல. ஆனா "வெண்ணிலவே"ன்னு(இல்ல வெள்ளி நிலவேவா) வர்ற பாட்டு ரொம்ப நல்லாருக்கு, படமாக்கிய விதமும் அருமை.
முக்கியமான ஒரு மேட்டரை விட்டுப் போட்டேனுங்க. அமைதியானவரு, நல்லவருன்னு நம்பியிருந்த விவசாயி "இளா", இந்த படத்துல செய்யற அழிசாட்டியத்தை எல்லாம் சொல்லி மாளாதுங்க. நீங்களே அவரை என்னான்னு கேளுங்க :)
நம்ம சிற்றறிவுக்கு எட்டுன, மிகவும் கவனம் எடுத்து சொல்லிருக்குற சில விஷயங்கள்.
1. ப்ளாஷ்பேக்குல கமல் ஓட்டுற புல்லட்டோட நம்பர் ப்ளேட் சரியா கறுப்பு பலகை மேலே வெள்ளை நிற பெயிண்டுல எழுதிருக்கு(8-10 வருசத்துக்கு முன்னாடிங்கிறதுனால). ஆனா ஒன்னு கவனிக்காம விட்டுட்டாங்க...அந்த மாடல் புல்லட் 2004ல தான் வந்தது.
2. கொலையில உபயோகப் படுத்தப் பட்ட துப்பாக்கி பேரு கூடச் சொல்லிருக்காங்க - அது வால்தர் பிபிகே(Walther PPK). ஹிட்லர் தற்கொலை பண்ணிக்க உபயோகப் படுத்துன அதே துப்பாக்கியோட பேரு. ஆராய்ச்சி எல்லாம் நல்லாத் தான் பண்ணிருக்காங்க.
3. ஜோ தமிழ் பொண்ணுங்கிறதை மேசை மேல இருக்குற திருவாசகம் சிடியை வச்சு கமல் கண்டுபிடிச்சுடறாரு(ஒரு வார்த்தை கூட பேசாம...ஆனா அதுனால தான் கண்டுபிடிச்சாருங்கிற மாதிரி படத்துல வலியுறுத்தி சொல்லலை)
4. டைம்ஸ் ஸ்குவேர்ல மும்பை மாதிரி எப்பவும் கூட்டம் இருந்துட்டே இருக்கும்னு ஜோ சொல்ற டயலாக்கைக் கேட்டதும் மும்பை மக்கள் சந்தோசம் ஆகி உய் உய்னு விசில் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
படத்தைப் பத்தி இன்னும் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேனுங்க. நம்ம ஜோ சொல்ற மாதிரி(ஜோதிகா இல்லீங்க...கடற்புறத்தான் ஜோ:) ) "இது நிராகரிக்கப் பட வேண்டிய படம் இல்லீங்க". அம்புட்டு தான்.
படம் பாத்தது மும்பை, மாதுங்காவுல இருக்குற ஆரோரா(Aurora) தியேட்டர்ல. படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இந்த தியேட்டர்ல தேசிய கீதத்தை இசைச்சாங்க. தேசிய கீதத்தை இசைக்கும் போது எந்திரிச்சு நிக்கனும்னும் மறக்காம எழுதி வச்சிருந்தாங்க. படத்தைப் பாத்து முடிச்சிட்டு வரும் போது மைசூர் கேப்ங்கிற ஓட்டல்ல ஃபுல் மீல்ஸ்(கர்நாடகா ஸ்டைல்ல). சாம்பார்ல் மட்டும் வெல்லம் போட்டு விட்டுருவாங்கங்குறதுனால வித்தியாசமா இருந்துச்சு. மத்தபடி ஆந்திரா ஸ்டைல் சாப்பாடு (காரம் மட்டும் சரியா இருந்துச்சுன்னா) தமிழ் நாட்டு சாப்பாட்டுக்கு ரொம்ப நெருக்கம். எதோ கெடச்ச வரைக்கும் லாபம்னு நல்லா கொட்டிக்கிட்டு வெளியே வந்தா ஒரு பேப்பர் கடைல தமிழ் பேப்பர், புக் எல்லாம் விக்குறாங்க.
குமுதம், விகடன், குங்குமம் மூனும் வாங்குனேன். இந்தியாவுக்கு சுதந்திரம் கெடச்சுடுச்சுன்னு தெரிஞ்சிக்கிற மாதிரி நான் தெரிஞ்சிக்கிட்ட ஒரு அதி முக்கியமான சமாச்சாரம் லைலாவுக்குக் கல்யாணம் ஆகிடுச்சுங்கிறது தான். விகடன்ல ஜோ-சூர்யா, சோனியா-செல்வராகவன் ஜோடிகளுக்கு அறிவுரை எல்லாம் சொல்லிருக்காங்க. பெரிய இவனாட்டம் பொது அறிவு பதிவெல்லாம் போடுறோம், நமக்கு இது கூட தெரியாமப் போச்சே...நம்ம பசங்களும் யாரும் சொல்லாம போயிட்டாங்களேன்னு கொஞ்சூண்டு "ஃபீலிங்ஸா" இருந்துச்சு :(
பெஸ்ட் கண்ணா பெஸ்ட்டு(மும்பை ஞாபகார்த்தமா)
(பி.கு: சனிக்கிழமை சாயந்திரம் ஆரோரா தியேட்டருக்குப் போன் பண்ணி "எந்த தமிழ் படங்க ஓடுது"ன்னு இந்தியில கேட்டதுக்குக் கெடச்ச பதில் தான் "வெட்டேயாடூ விலயாடூ" :))
Monday, August 28, 2006
வெட்டேயாடூ விலயாடூ
Friday, August 25, 2006
குயி...குயி...குயிஜு பதில்கள்
குயி...குயி..குயி...குயிஜு பதிவின் பதில்கள் கீழே.
1. ஐக்கிய நாடுகளின்(United Nations) பொதுச் செயலாளராக இருந்த ஒரே ஆசியக் கண்டத்தவர் யார்?
பர்மாவைச் சேர்ந்த திரு.மஹா த்ராய் சித்து யூ.தாண்ட்(Maha Thray Sithu U Thant). ஐ.நா.பொதுச் செயலாளர்களாக இது வரை இருந்தவர்களில், ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர் இவர் ஒருவர் தான். பஹ்ரைன், யெமன் நாடுகளுக்குள் உள்நாட்டுப் போர் மூளாமல் தடுக்க சமாதான முயற்சிகளையும், அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்த ஆறு நாள் போரை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் தனது பணிக் காலத்தின் போது தாண்ட் பணியாற்றினார்.
http://en.wikipedia.org/wiki/Thant
2. கேர்ளி ஆண்டோ(Girly Anto) என்ற இயற்பெயர் கொண்ட திரைப்பட நடிகையின் திரைப்பெயர் என்ன?
'லஜ்ஜாவதி' கோபிகா தானுங்கோ...
நண்பர் பவன் தரும் கூடுதல் தகவல் : 'கேர்ளி ஆண்டோ' என்ற கோபிகாவின் இயற்பெயரை மாற்றி 'கோபிகா' என வைத்தவர் மலையாள திரைப்பட இயக்குநர் துளசிதாஸ்.
http://www.hinduonnet.com/thehindu/mp/2005/08/20/
stories/2005082003450100.htm
3. 'பாட்சா' திரைப்படத்தை நம்மில் பலரும் பார்த்திருப்போம். எனக்கு பிடித்த ரஜினி படங்களில் இதுவும் ஒன்று. சரி! இப்ப கேள்வி...இப்படத்தில் 'பாட்சா' ரஜினி அணியும் இவ்வகை கண்ணாடிகளுக்கு பெயர் என்ன?
Pince-nez - பே நே என்று உச்சரித்தல் வேண்டும். இவ்வகை கண்ணாடிகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரபலமாக இருந்தன. காதின் மீது அமராமல் அணிபவரின் மூக்கின் மீது ஒரு சிறிய முட்டுக் கொடுத்து அமருவதால் இக்கண்ணாடிகளுக்கு ஆங்கிலத்தில் "Pinch nose" என்ற பொருள்படும் பிரெஞ்சு மொழிச் சொல்லான "Pince-nez" கொண்டு அறியப் பெறுகிறது.(காது மேலே உக்காறது, மூக்கு மேல முட்டு அப்படி இப்படின்னு எழுதும் போது எனக்கே காமெடியாத் தான் இருக்கு...ஆனாலும் எப்படி எழுதுறதுன்னு தெரியாததுனால அப்படியே மெயிண்டெயின் பண்ணிக்கிறேன்) 
பாட்சா படத்தில் ரஜினி அணியும் இக்கண்ணாடியை, நிஜ வாழ்வில் முன்னாள் அமெரிக்க அதிபர் தியோடோர் ரூஸ்வெல்ட்டும்(Theodore Roosevelt), திரையில் மேட்ரிக்ஸ் ஆங்கிலத் திரைபடத்தில் மொட்டைபாஸ் மார்ஃபியஸ் ஆக வரும் லாரென்ஸ் ஃபிஷ்பர்னும்(Laurence Fishburne) அணிந்து பிரபலப் படுத்தியிருக்கிறார்கள்.
http://en.wikipedia.org/wiki/Pince-nez
4. நண்பர் ஒருவர் தங்களுக்கு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறார். அழைப்பிதழின் கடைசியில் RSVP என்று எழுதியிருக்கிறது. தங்களிடமிருந்து எதிர்பார்க்கப் படுவது என்ன?
வருவேன் அல்லது வரமாட்டேன் என்று பதில் அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. Respondevu Sil vou plait என்ற பிரெஞ்சு மொழி சொற்றொடரின் சுருக்கம் தான் RSVP. வரவேற்பைத் தங்களுக்கு அனுப்பியவர், எத்தனை விருந்தினர்கள் வருவார்கள் எத்தனை பேர் வரமாட்டார்கள் என்று முன் கூட்டியே அறிந்து கொள்வதற்கும் அதன் அடிப்படையில் திட்டமிடுதலுக்காகவும் தங்களை பதில் அளிக்கக் கோருகிறார்.
http://dictionary.reference.com/search?q=RSVP
5. 1922இல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது ஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் விலக்கிக் கொள்ளச் செய்த நிகழ்வு எது?
சௌரி சௌரா சம்பவம். 1919ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தியர்களுக்கெதிரான அடக்குமுறை சட்டமான ரௌலத் சட்டத்தையும், மற்றும் சில உரிமை மீறல் சட்டங்களையும் எதிர்ப்பதற்காகவே காந்தியடிகள் பொது ஒத்துழையாமை இயக்கத்திற்கு அரைகூவல் விடுத்தார். இவ்வியக்கம் உச்சத்தில் இருந்த போது, பிப்ரவரித் திங்கள் 1922 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூருக்கு அருகில் உள்ள சிறிய ஊரான சௌரி சௌராவில், ஒரு காவல் சாவடியைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீ வைத்துக் கொளுத்தியதில் 22 போலிசார் பலியாயினர். அஹிம்சை வழியைத் தம்முடைய ஆதரவாளர்கள் இன்னும் சரி வரப் புரிந்து கொள்ளாததை உணர்ந்த காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கினார். அதன் விளைவாக அவருடைய ஆதரவாளர்கள் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டனர். அதன் பிறகு காந்தியடிகள், வெள்ளையர்களால் ஆறாண்டு காலம் சிறை வைக்கப் பட்டார்.
http://en.wikipedia.org/wiki/Chauri_Chaura
6. "நீயும்நின் மனையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர்
---------- ---------- தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி..."
---------- = "சத்தி முத்த வாவியுள்"
நாரைவிடு தூது - முழுபாடலும் கீழே.
நாராய்! நாராய்! செங்கால் நாராய்!
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!
நீயும்நின் மனையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர்
சத்தி முத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடுபார்த் திருக்குமென் மனைவியைக் கண்டு
எம்கோ மாறன் வழுதிக் கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே!
மன்னருக்குக் குறிப்பால் தம்முடைய வறுமை நிலையை உணர்த்த புலவர், நாரையைத் தூதாக விடுவதாக அமைந்த ஒரு பாடல். எழுதியவர் பெயர் 'சத்திமுத்தப் புலவர்' என நினைவு. இது புறநானூற்றுப் பாடலா என நினைவில்லை. நம்ம தளபதி சிபி புறம் தான்னு சொல்றாரு...சரியாத் தான் இருக்கும். இப்பாடலின் சுட்டியை மேற்கோள் காட்டிய ப்ரியன் மற்றும் கொத்ஸ் இருவருக்கும் நன்றி. இக்கேள்வியை எழுதுவதற்கு முன் இப்பாடல் வரிகளை நானும் திரு.சங்கர் அவர்களின் பதிவில் தான் சரி பார்த்தேன்.
நன்றி : திரு.சங்கர் - சுவடு
7. இயேசுநாதரின் இச்சிலையை எந்த உலக நகரத்தில் காணலாம்?
ரியோ டி ஜெனிரோ(Rio de Janeiro) நகரம், பிரேசில் நாடு. 2330 அடி உயரம் கொண்ட கார்கோவாடோ(Corcovado) மலையின் மீது இச்சிலை 1931 ஆம் ஆண்டு நிர்மானிக்கப் பட்டது. சிலையின் பெயர் 'Christ the Redeemer' (மீட்பர் இயேசு - சரி தானுங்ளே?). கிறித்தவ சமய சின்னமாக காணப் படுவதுடன் ரியோ நகரத்திற்கு அடையாளம் வழங்கும் ஒரு சின்னமாகவும், இயேசுவின் விரிந்த கைகள் பிரேசில் மக்களின் நேசத்தைக் குறிப்பதாகவும் திகழ்கிறது.
கொசுறு : இந்தச் சிலையை நான் முதன்முதலில் பார்க்க நேர்ந்தது ஜீ-எம்ஜிஎம் சேனலில் கண்ட 'Blame it on Rio' என்ற ஆங்கிலப் படத்தில் தான். டெமி மூரின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்று. டெமி மூர் போன்ற புகழ் பெற்ற நடிகைக்கே இந்தப் படத்தில் ஒரு சின்ன சைடு ரோல் தான்னா பாத்துக்கங்களேன். படம் அங்கங்கே மெதுவா நகர்ந்தாலும் "ஜில்" டைப்பு தான் :)
http://en.wikipedia.org/wiki/Christ_the_Redeemer_(statue)
8. இந்திய பாரம்பரிய சங்கீதத்தில், குதிரையின் கனைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள ஸ்வரம் எது?
'தா' அல்லது தைவதம். இசையின் அடிப்படையான ஸ்வரங்கள் ஏழு. "ஸ ரி க ம ப த நி". ஒவ்வொரு ஸ்வரமும் ஒவ்வொரு இயற்கையில் ஒரு மிருகத்தாலோ அல்லது ஒரு பறவையாலோ எழுப்பப் படும் ஒலியை ஆதாரமாகக் கொண்டது. இதில் 'த' என்னும் ஸ்வரம்குதிரையின் கணைப்பை அடிப்படையாகக் கொண்டது. மற்ற ஸ்வரங்கள் எந்த ஒலியை அடிப்படையாகக் கொண்டது என்று அறிந்து கொள்ள ப்ரியன் கொடுத்த கீழே உள்ள சுட்டியைப் பாருங்கள்.
நன்றி : http://janhaag.com/NP23thats.html
9. அணுகுண்டு பரிசோதனையோடு தொடர்பு படுத்தப் படும் பெண்கள் நீச்சல் உடையின் பெயர் என்ன?
பிகினி. 1940களில் ஆணுஆயுத பரிசோதனைகளை பசிபிக் பெருங்கடலில் ஹவாய் தீவுகளுக்கு மேற்கே உள்ள தீவுக் கூட்டங்களில் அமெரிக்கா மேற்கொண்டது. அவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப் பட்ட ஒரு தீவுக் கூட்டத்தின் பெயர் தான் பிகினி(Atoll of Bikini). 1946இல் லூயி ரியாட்(Louis Reard) என்ற பிரெஞ்சு நாட்டு கார் பொறியாளர்(பாருங்கைய்யா பாருங்க!!) இரத்தினச் சுருக்கமான(!?) ஒரு பெண்கள் நீச்சலுடையை வடிவமைத்தார். அதே சமயத்தில் அமெரிக்கா தன்னுடைய அணுஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டிருந்ததால் அதை போன்றே ஒரு பெரிய பரபரப்பை இவ்வுடை ஏற்படுத்தும் என்று எண்ணி அதற்கு 'பிகினி' என்று பெயர் சூட்டினார்.
ஆமா...இதுக்கு சுட்டி கொடுத்து தான் நீங்க வெவரம் தெரிஞ்சிக்கனுமாக்கும்? :)
10. நடிகர் நாகேஷ் தன்னுடைய வழிகாட்டியாக(role model) கருதிய ஹாலிவுட் நடிகரின் பெயர் என்ன?
ஜெர்ரி லூயிஸ். இவர் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற காமெடி நடிகர். நாகேஷ் இவரைத் தன் ரோல் மாடலாகக் கருதினாலும், மனோரமா ஆச்சி என்ன சொல்லிருக்காங்கன்னு கொஞ்சம் படிச்சுப் பாருங்க.
http://www.hindu.com/2005/08/01/stories/2005080113040200.htm
கேள்விகளுக்குப் பதில் அளித்து இப்பதிவைக் கலகலப்பாகக் கொண்டுச் சென்ற நண்பர்கள் மகேந்திரன், மின்னல், பவன், பொன்ஸ், ப்ரியன், சின்னத்தம்பி, வணக்கத்துடன், தேவ், தளபதி சிபி, கோவி.கண்ணன், தம்பி, கப்பி, இலவசக் கொத்தனார், ராம் மற்றும் ஹிட்களை எகிறச் செய்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய பாராட்டுதல்களும் நன்றிகளும்.
Wednesday, August 23, 2006
குயி...குயி...குயி...குயிஜு
பத்து கேள்விகளைக் கொண்ட ஒரு பொது அறிவு கேள்வி-பதில் பதிவுங்க. முயற்சி செஞ்சு பாருங்க.
1. ஐக்கிய நாடுகளின்(United Nations) பொதுச் செயலாளராக இருந்த ஒரே ஆசியக்
கண்டத்தவர் யார்?
2. கேர்ளி ஆண்டோ(Girly Anto) என்ற இயற்பெயர் கொண்ட திரைப்பட நடிகையின்
திரைப்பெயர் என்ன?
3. 'பாட்சா' திரைப்படத்தை நம்மில் பலரும் பார்த்திருப்போம். இப்படத்தில் 'பாட்சா' ரஜினி
அணியும் இவ்வகை கண்ணாடிகளுக்கு பெயர் என்ன?
4. நண்பர் ஒருவர் தங்களுக்கு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறார். அழைப்பிதழின் கடைசியில் RSVP என்று எழுதியிருக்கிறது. தங்களிடமிருந்து
எதிர்பார்க்கப் படுவது என்ன?
5. 1922இல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது ஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் விலக்கிக் கொள்ளச் செய்த நிகழ்வு எது?
6. "நீயும்நின் மனையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர்
---------- ---------- தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி..."
---------- = ???
7. புகழ்பெற்ற இயேசுநாதரின் இச்சிலையை எந்த உலக நகரத்தில் காணலாம்? 
8. இந்திய பாரம்பரிய சங்கீதத்தில், குதிரையின் கனைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள ஸ்வரம் எது?
9. அணுகுண்டு பரிசோதனையோடு தொடர்பு படுத்தப் படும் பெண்கள் நீச்சல் உடையின் பெயர் என்ன?
10. நடிகர் நாகேஷ் தன்னுடைய வழிகாட்டியாக(role model) கருதிய ஹாலிவுட் நடிகரின் பெயர் என்ன?
பதிவு தலைப்பு உபயம் : கெக்கேபிக்குணி அக்கா
Saturday, August 19, 2006
தடிப்பசங்க #5
காட்சி #5 : இலங்கை குறும்பு
எல்லாரும் நெல்லை குறும்பு. கோயமுத்தூர் குறும்பு அப்படின்னு அவங்கவங்க ஊரு குறும்பைப் பத்தி எழுதியிருக்காங்க. நான் ஒரு மாறுதலுக்காக 'இலங்கை குறும்பை' பத்தி சொல்றேங்க. இதுல பியூட்டி என்னன்னா கடைசி வரைக்கும் அது குறும்பா இல்லியான்னு தெரியாமலே போச்சு...அப்படிப்பட்ட ஒரு ஜகஜால குறும்பு. சொல்ல வர்ற மேட்டரு ரொம்ப சிறுசுங்கிறதால வழக்கம் போல நடு நடுவால செவண்ட்டி எம்எம் படமெல்லாம் ஓட்டுவோம்...அதையெல்லாம் கண்டுக்கப்பிடாது சரியா?
நாம ஒருத்தரு கிட்ட போய் பல்பு வாங்கிறதுக்கும் இன்னொருத்தர் பல்பு வாங்கிட்டு வர்றதைப் பாக்கறதுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்னு நெனக்கிறீங்க? பெருசா ஒன்னும் வித்தியாசம்
இல்ல...அடுத்தவன் பல்பு வாங்குனா அதப் பாத்து ரசிக்கிறதுல ஒரு சந்தோஷம்...நாலு பேரு கிட்ட பெருமையாச் சொல்லலாம் இன்னாரு இன்னாரு கிட்ட இன்ன தேதிக்கு இன்ன பல்பு வாங்குனாருப்பான்னு...ஏன் அப்படி பட்ட சமாச்சாரங்களை இந்த மாதிரி ப்ளாக்ல எழுதி கூட உலகம் முழுக்க சந்தோஷமாச் சொல்லலாம். அதுவே நாம வாங்குன பல்பா இருந்தா கொஞ்சம் அடக்கி வாசிப்போம்...அம்புட்டுத் தான் வித்தியாசம். சரி...அதான் நீ பல்பு வாங்கலையே...சந்தோஷமாச் சொல்லு அப்படீங்கறீங்களா? அதுவும் சரி தான். யப்பா! பல்பு வாங்குனவனே! பாத்துக்கப்பா ஜனங்க எல்லாம் கேக்கறதுனால தான் சொல்றேன். இப்பவே சொல்லிட்டேன்.
சென்னை மாநகரிலே...அல்லி மலர்கள் பூத்துக் குலுங்கும் தடாகங்களையும், அர்ச்சுனனுக்கு டிரைவர் வேலை பாத்த சாமிக்கு என்று ஒரு பழம்பெரும் வைணவத் திருத்தலத்தையும், காலத்தின் கோலத்தால் கலர் கலரான டோக்கன்களைக் கையில் கொண்டு புவ்வாவிற்காகக் காத்து நிற்கும் பேச்சிலர்களையும், மகாகவி பாரதி தன் கடைசி நாட்களைக் கழித்த இடத்தையும், தில்லையம்பலனின் பெயர் கொண்ட கிரிக்கெட் விளையாட்டுத் திடலையும், சென்னையின் வற்றாத ஜீவநதியான 'கூவம் அன்னையின்' இளைய சகோதரி 'பக்கிங்காம் சித்தியையும்' தன்னகத்தே கொண்ட, மதிப்பிற்குரிய மாண்புமிகு திருவாளர் ஐயா திரு கைப்புள்ள அவர்கள் தன்னுடைய சில கழுதை வயது(எத்தனைன்னு சொல்ல மாட்டோம்ல) வரை ஆட்சி செய்த அந்த புண்ணிய தலத்தின் பெயர் 'திருவல்லிக்கேணி'. சான்றோர் இத்திருத்தலத்தை 'தில்லக்கேணி'
என்றும் 'டிரிப்ளிகேன்' என்றும் வழங்குவார்கள்.
அங்கே எங்க பக்கத்து வீட்டுல இருந்த ஆண்ட்டியின் பொறந்த வீடு கொழும்பு, இலங்கை, அவுங்க ஆத்துக்காரருக்கு நம்ம தளபதியாருடைய ஊரான நாமக்கல் பக்கம். ஆண்ட்டிக்கும் அங்கிளுக்கும் தூரத்துச் சொந்தமாம். அவங்களோட குட்டிப் பொண்ணு பிருந்தா, தடிப்பசங்களுக்குத் தங்கச்சி இல்லாத குறையையும் எங்கம்மாவுக்கு பொண்ணு இல்லாத
குறையையும் தீர்த்து வச்சது. எங்க வீட்டுல வணிலா க்ரீம் வேஃபர்ஸும், "கேண்டோஸ்" சாக்லேட்டும், "தில்மா" டீயும், தொத்தலும், மாசி கருவாடும் இருந்ததுன்னா பக்கத்து வீட்டுல சிலோன்லேருந்து யாரோ வந்துருக்காங்கன்னு அர்த்தம். நமக்கு குறிப்பா இந்த தொத்தல்னா ரொம்ப புடிக்குமுங்க. "தொத்தல்"னா என்னன்னு கேக்கறவங்க திருவான்மியூர்ல இலங்கை தமிழர் ஒருத்தர் நடத்தற 'தமிழினி இனிப்பகம்'னு ஒரு கடை இருக்குதுங்க அங்கே "யாழ்ப்பாணம் தொத்தல்"ங்கிற பேருல இந்த இனிப்பு பலகாரம் சென்னையிலேயே கெடைக்குது. வாங்கி சாப்புட்டு பாருங்க. டேஸ்ட் சூப்பரா இருக்கும். அல்வாவுக்கும் ஆப்பத்துக்கும் ஒரு ஹைப்ரிட் குழந்தை பொறந்துச்சுன்னா எப்படியிருக்கும்? கிட்டத்தட்ட அப்படித் தான் இருக்கும் 'தொத்தல்'.
அதோட அவங்க வீட்டுல பேசற தமிழை நானும் என் தம்பியும் ரொம்ப உன்னிப்பா கவனிப்போம். அப்போ, அது அந்த வயசுக்கு உரிய ஒரு amusement(வியப்புன்னு) வையுங்களேன். உதாரணத்துக்கு 'சின்னப் பசங்க'ன்னு சொல்றதுக்குப் பதிலா 'பொடியன்மார்'னு சொல்லுவாங்க, 'முடியாது'ன்னு சொல்றதுக்குப் பதிலா 'இயலாது'ன்னு சொல்லுவாங்க, அதே மாதிரி லுங்கிக்குப் பதிலா 'சாரம்', ஜட்டிக்குப் பதிலா 'ஜங்கி', காசுக்குப் பதிலா 'சல்லி'. அதோட பேச்சுல எப்பவும் யார் கிட்டயும் ஒரு மரியாதை இருக்கும். அவங்க வீட்டுல இருக்குற தம்மாத்தூண்டு பசங்களைக் கூட வாங்க, போங்கன்னு மரியாதையாத் தான் பேசுவாங்க. அப்ஸையே சில சமயம் "இன்னா நைனா எப்பிடிக்கீறே?"ன்னு கேக்கற நமக்கு இதை எல்லாம் பாத்தா பயங்கர ஆச்சரியமா இருக்கும். ஆனா நம்ம சென்னை மட்டும் லேசுப் பட்டதுங்களா? செம்பரம்பாக்கம் தண்ணி குடிக்க ஆரம்பிச்ச கொஞ்ச நாளிலேயே அந்த ஆண்ட்டியோட பேச்சு கிட்டத் தட்ட "மெட்ராஸிஃபைட்
சிலோன் தமிழ்" லெவலுக்கு வந்துடுச்சு. ஆனாலும் அவங்களோட அப்பா கொழும்புலேயே இருக்கறவரு, அவரு எப்பவாவாது அவங்க மகளைப் பாக்க சென்னைக்கு வருவாரு. அவரு பேசறதைக் கேக்கும் போது இங்கிலீஸைக் கலக்காம தமிழை இப்படியும் பேச முடியுமான்னு மலைப்பா இருக்கும்.
தாத்தா - அதான் ஆண்ட்டி அவங்க அப்பா, நல்லா ஆறு அடி ஒயரம், படபடன்னு பேசற டைப். ஆண்ட்டி அவுங்க தோப்பனாரைப் பத்தி சொன்ன வரைக்கும் அவங்க வீட்டுல எல்லாரும் அவருக்கு ரொம்ப பயப்படுவாங்கன்னு தெரிஞ்சது. ஆனாலும் நம்ம இளவல், அதாங்க தடிப்பசங்கள்ல சின்னவரு வீட்டுல இருக்குற "ரெண்டாம் நம்பர்" பசங்களுக்கே உரிய 'இளங் கன்று பயமறியாது'ங்கிற குணம் உடையவரு. எப்பவும் எங்க வீட்டுக்கு வரும் போது 'ஜெம்ஸ்' வாங்கிட்டு வர்ற அப்பாவின் நண்பர் ஒருத்தர் அவசரத்துல ஜெம்ஸ் வாங்காம வந்ததும் "என்ன அங்கிள்!
இன்னிக்கு ஜெம்ஸ் வாங்கிட்டு வரலையா?"ன்னு அவரைக் கேட்டு கதிகலங்க வச்சு, அதுக்கப்புறமா வீட்டுல டின்னு வாங்கிக் கட்டிக் கொண்டவர். அதோட ஸ்கூல்ல பசங்க கிட்ட கேக்கற கடி ஜோக்குகளை எல்லாம் கேட்டுட்டு வந்து பட்டித் தொட்டி எங்கும் பரப்புவாரு.
ஒரு கடி மன்னனுக்கே உரிய வீரத்தோட படை எடுத்துப் போய் அடுத்தவங்களைக் கடிச்சிட்டு வர்றவரு. வயசு வித்தியாசம் இல்லாம, தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு பாகுபாடு இல்லாம யாரு கண்ணுல பட்டாலும் அவங்களைக் கடியா ஒரு கேள்வி கேட்டு வப்பாரு. அவங்க பதில் தெரியாம "ஆளை வுடு சாமி"ன்னு சரெண்டர் ஆகும் போது கடியா பதில் சொல்றது நம்மாளோட வழக்கம். உதாரணத்துக்கு அவருடைய அப்போதைய டேட்டாபேஸிலிருந்து சில கடிகள்.
1. கொக்கு ஏன் ஒத்தைக் காலுல நிக்குது?.
இன்னொரு காலையும் எடுத்தா கீழே விழுந்துடும்
2. பஸ்ஸைப் பின்னால தள்ளுனா என்ன ஆகும்?
பின்(Pin) வளைஞ்சுடும்
3. கல்யாணத்துல வாழை மரத்தை ஏன் கட்டி வைக்கிறாங்க?
கட்டி வைக்கலன்னா விழுந்துடும்.
இந்த மாதிரி ஆனவை. கேக்கறவங்களும் சில சமயம் பதில் தெரியாம நீயே பதில சொல்லுப்பான்னு சொல்றதுண்டு, சில பேர் இந்த சின்ன வயசிலேயே ஒனக்கு இம்புட்டு அறிவா(!)ன்னு பாராட்டிட்டு போனதும் உண்டு. அந்த மாதிரி பாராட்டிட்டு போற பார்ட்டிகளால அண்ணாத்தைக்கு ரொம்ப தான் துளிர் விட்டுப் போச்சு. போற வர்றவங்களை எல்லாம் கடிச்சி ரணகளம் ஆக்குறதைப் பொழுதுபோக்கா வச்சிருந்தான்.
ஒரு தரம் இப்படித் தான் ஆண்ட்டியோட அப்பா கொழும்புலேருந்து வந்துருந்தார். என் தம்பி "அம்மா அம்மா ஸ்கூல் லீவு விட்டு எனக்கு ரொம்ப போர் அடிக்குது. பக்கத்து வீட்டுல தாத்தா வந்துருக்காரு அவரைப் போய் கொஞ்சம் கடிச்சிட்டு வர்றேன்" அப்படின்னான்.
அம்மா "அதெல்லாம் ஒன்னும் வேணாம். அவருக்கு சட்டுன்னு கோவம் வருமாம். அந்த ஆண்ட்டி சொல்லிருக்காங்க. நீ பாட்டுக்கு எதாச்சும் லூசுத்தனமா ஒளறி வச்சு அவரு தப்பா எடுத்துக்க போறாரு"ன்னு சொன்னாங்க.
இதுக்கெல்லாம் அசருறவரா நம்மாளு? "அவரு கோவக்காரருன்னா அது அவங்க ஊருல. இது மெட்ராஸு, எங்க ஊரு. இங்கே வந்தா நாங்க கடிக்கத்
தான் செய்வோம். அதெல்லாம் தாக்குப் புடிக்க முடியலைன்னா அவரு அவங்க ஊருக்கே போவட்டும்" அப்படி இப்படின்னு வீராப்பு பேச ஆரம்பிச்சிட்டான். அந்த நேரம் எனக்கு எதோ வேலை இருந்ததுனால நான் வெளியே கெளம்பி போயிட்டேன்.
கொஞ்ச நேரம் கழிச்சு நான் திரும்பி வந்து பாக்குறேன். என்னோட தம்பி வீட்டுல அமைதியா ஒக்காந்துருக்கான். "என்னாடா பக்கத்து வீட்டுத் தாத்தாவைக் கடிக்கப் போறேன்னு சொன்னே இப்ப இங்க ஒக்கார்ந்து இருக்கே" அப்படின்னு அவனைக் கேட்டேன்.
அதுக்கு அவன் "அட போடா! மனுசனாடா அவரு! நானும் எத்தனையோ பேரைக் கடிச்சிருக்கேன். கடிக்க வந்தவனையே கதற கதற கடிச்சு
கொதறுனவங்களை இது வரைக்கும் நான் பாத்ததில்லை. சின்ன பையன்னு கூட பாக்காம அவரு என்னை போட்டு கடிச்சிட்டாரு"ன்னான்.
அதை கேட்டதும் எனக்கு ஒரே சிரிப்பு. ஆனா சிரிச்சிட்டா என்ன நடந்துச்சுன்னு கதை சொல்ல மாட்டானேனு மனசுக்குள்ளயே சிரிச்சிக்கிட்டு
ரொம்ப கரிசனமா "அவரு என்ன உன்னை விட பெரிய ப்ளேடா?"ன்னு கேட்டேன்.
அதுக்கு அவன் "நான்லாம் அவரு முன்னாடி ஜுஜுபி"அப்படின்னான்.
"சரி என்ன தாண்டா நடந்துச்சு. சொல்லு" அப்படின்னேன்.
"அவங்க வீட்டுக்குப் போனேன்னா? தாத்தா நான் ஒங்களுக்கு ஒரு ஜோக் சொல்லவா? அப்படின்னேன்".
அவரும் "சொல்லுங்களேன்" அப்படின்னாரு.
நானும் "ஒரு ஊர்ல ஒரு கொசுவும் ஒரு யானையும் ருந்துச்சாம்"அப்படின்னு ஆரம்பிச்சேன்.
அவரு அதுக்கு "ஒரு ஊரிலே ஒரு கொசுவும் ஒரு யானையும் தானா
இருக்கும்?" அப்படின்னாரு.
நான் அதுக்கு "இல்லீங்க தாத்தா...இப்ப நம்ம ஜோக்ல ஒரு யானையும் ஒரு
கொசுவும் தான் இருக்குது" அப்படின்னேன்.
அதுக்கு அவரும்"சரி சொல்லுங்க" அப்படின்னாரு.
"ஒரு கொசுவும் ஒரு யானையும் மோட்டார் பைக்ல ரேஸ் போய்க்கிட்டு இருக்குதுங்க. அப்போ திடீர்னு ஒரு லாரி அதுங்க மோட்டார் பைக் மேலே வந்து மோதிடுது"
"அவரும் ஒரு ரியாக்ஷனும் காட்டாம அதற்குப் பிறகு அப்படின்னாரு. நானும் சரி இன்னிக்கு நமக்கு நல்ல வேட்டை தான் அப்படின்னு நெனச்சி மேலே சொல்ல ஆரம்பிச்சேன்"
"லாரி இடிச்சதுல யானை செத்துப் போச்சு ஆனா கொசு சாகலை. எப்படின்னு சொல்லுங்க பாக்கலாம்"னு அவரைப் பாத்து கேட்டேன்.
தாத்தா என்ன சொல்லிருப்பாருன்னு தெரிஞ்சிக்க எனக்கா பயங்கர ஆர்வம். "அதுக்கு அவரு என்ன சொன்னாரு"ன்னு நான் கேட்டேன்.
"தெரியலியே நீங்களே சொல்லுங்களேன்" அப்படின்னாருன்னு என் தம்பி சொன்னான்.
"இதான் சாக்குன்னு நீ அவரை வுழுந்து கடிச்சிருப்பியே" அப்படின்னேன்.
"அட போடா! நான் அவரு கிட்ட எல்லார் கிட்டயும் சொல்ற மாதிரி கொசு ஹெல்மெட் போட்டுருந்துச்சு, யானை ஹெல்மெட் போடலை அதான் செத்துப் போச்சு அப்படின்னேன். அதுக்கு அவரு சொன்னதைக் கேட்டுத் தான் ஆடிப் போயிட்டேன்" அப்படின்னான்.
"அப்படி என்ன தான்டா சொன்னாரு" அப்படின்னு ஆர்வத்தை அடக்க முடியாம கேட்டேன்.
"இந்த கேள்வியை நான் கேட்டா அதுக்கு முக்காவாசி பேரு கொசு பறந்து போயிருக்கும்னு தான் சொல்லுவாங்க. ஆனா இவரு பதில் தெரியலைன்னு சொல்லிட்டு நான் பதிலைச் சொன்னதும் முகத்தைப் படு சீரியசா வச்சிக்கிட்டு - அது எப்படிங்க முரளி! கொசு ஒரு சின்ன உருவம் தானே? அதனால் எப்படி ஹெல்மட் அணிய எயலும்" அப்படின்னு கேட்டு என்னையே போட்டு கலாய்ச்சிட்டாரு.
எனக்கா இதை கேட்டதும் பயங்கர சிரிப்பு "நீ அவரு கிட்ட சொல்லி புரிய வக்கலியா?" அப்படின்னேன்.
"போடா! நானும் அவரு கிட்ட எவ்வளவோ சொல்லிப் பாத்தேன் அது தாங்க தாத்தா ஜோக்கேன்னு கூட சொல்லிப் பாத்தேன். கடியிலயே பெரிய கடி நம்ம ஜோக்கை ஒருத்தரு புரிஞ்சுக்காம கேள்வி கேக்குறாங்க பாரு அது தான். அவரு அதுக்கு கூட இருக்கட்டும் முரளி! ஆனாலும் கொசு போன்ற ஒரு சின்ன உருவத்தால எப்படி அவ்வளவு பெரிய ஹெல்மட்டை அணிய எயலும். இதை நீங்க எனக்கு வெளக்குங்கோ" அப்படின்னு என்னையே திரும்ப கேள்வி கேக்கறாரு.
"மோட்டார் பைக்ல கொசு எப்படி ஏறும்னு கேக்காம, கொசுவால எப்படி ஹெல்மட் அணிய எயலும்னு மட்டும் கேக்கறாரு. உண்மையிலேயே அவருக்கு ஜோக் புரியலியா, இல்ல புரிஞ்சிக்கிட்டு நம்மளைக் கலாய்ச்சி வுட்டுட்டாரான்னே புரியலைடா"அப்படின்னான்.
"சே! இது சென்னைக்கே பெருத்த அவமானம். ஊரு பேரே கெடுத்து வச்சிருக்கே! சிலோன்லேருந்து ஒருத்தரு வந்து உலக மகா கடியன் உன்னையே கடிச்சி வுட்டுட்டாரே! அவமானம் அவமானம்" னு நான் என் பங்குக்கு கொஞ்சம் எண்ணை ஊத்துனேன்.
"இவ்ளோ பேசறியே? அப்போ! நீ அவரு கிட்ட ஒரு ஜோக் சொல்லி அவரைச் சிரிக்க வையேன் பாத்துடுவோம்" அப்படின்னான்.
எங்க அண்ணனும் அவரு கிட்ட கடிபட்டுட்டான்னு சொல்லிக்கறதுக்கு என் தம்பி பண்ண திட்டம் கூடவா எனக்குப் புரியாது? அதுக்கப்புறம் அவரு கிட்ட கடி பட நான் என்ன மாங்கா மடையனா? "ஒரு ஜோக் சொல்லி கூட புரிய வைக்க முடியல பெருசா வந்துட்டான் மெட்ராஸ் காரன்னு சொல்லிக்க"ன்னு சொல்லி அந்நேரத்துக்கு நான் எஸ்கேப் ஆயிட்டேன்.
அதுக்கு அப்புறம் இந்த மாதிரி கடி ஜோக் சொல்லி அது எதிர்ல இருக்குற ஆளுங்களுக்கு புரியலைன்னா "கொசு ஒரு சின்ன உருவம் தானே"ன்னு ஒருத்தரை ஒருத்தரு கலாய்ச்சிக்குவோம்.
Monday, August 14, 2006
யப்பா...ஷெர்லாக் ஹோம்ஸுங்ளா...
நானும் களுதை இந்தப் படம் போடப் பிடாது...போடப் பிடாதுன்னு தான் பாக்குறேன், ஹூ...ம் ஒன்னும் முடியலை. படமாப் போட்டுத் தள்ளுனா 'படம் எடுக்கற பய'ன்னு நம்மளை கட்டம் கட்டி ஓரமா ஒக்கார வச்சிடுவாங்கன்னு படத்தைக் கையிலே வச்சிக்கிட்டு வேற எதாச்சும் எழுதறதுக்கு ரெண்டு நாளா முயற்சி பண்ணேன். எதுவும் வர்க் அவுட் ஆகலை. அதுனால இதுவும் 'படம் பார்த்து கதை சொல்' தான்.
சித்தூர்கட்லேருந்து மும்பைக்கு வர்ற வழியில உதய்பூரைச் சுத்திப் பாக்கப் போனோம். காலையில உதய்பூரைச் சுத்திப் பாத்துப் போட்டு சாயங்காலமா வண்டி ஏறி மும்பைக்கு வந்துட்டேன்(அப்பா...தனி டிராக் ஓட்டாம மும்பைக்கு என்னை கொஞ்ச நாள் தொரத்தி வுட்டத வெற்றிகரமாச் சொல்லியாச்சு). உதய்பூர்ங்கிறது ராஜஸ்தான் மாநிலத்துல இருக்கு. அங்கே எடுத்த படங்களை எல்லாம் போட்டா இது ராஜஸ்தானான்னு ஆச்சரியமா இருக்கும். அந்தளவுக்கு ராஜஸ்தான் பத்தி இருந்த தப்பான நம்பிக்கைகளை எல்லாம் தகர்த்து எறிய வச்ச ஒரு ஊரு உதய்பூர். அக்பரை எதிர்த்து போரிட்ட மஹாராணா பிரதாப்பின் தலைநகர் உதய்பூர். ரக்ஷா பந்தன் அன்னிக்கு நான் உதய்பூர்ல இருந்தேன். அங்கே ஊர் சுத்திப் பாத்து, புடிச்சப் படங்களை அப்புறமாப் போடறேன்(பதிவு கணக்கை பின்னே எப்பிடி ஏத்துறதாம்?)
இப்பல்லாம் எந்தப் பக்கம் திரும்பனாலும் ஃப்ரேம் ஃப்ரேமாவே தெரியுதா...அதுனால கார்ல போவும் போது கேமராவைத் தயாரா வச்சிக்கறது. ஆனா நம்ம கலை தாகத்தைப் புரிஞ்சுக்க(!) முடியாத நம்ம கூட இருந்த பயலுக பைக்ல பாய் ஃப்ரெண்டோட போற புள்ளையையும், "டைட்டீஸ்" போட்டுக்கிட்டு உதய்பூர் பேலஸ்ல சுத்திப் பாத்துட்டு இருந்த ஒரு வெள்ளைக்காரப் புள்ளையையும் படம் புடிக்கச் சொல்லிப் படுத்தியெடுத்துட்டானுவ. "யய்யா...நான் ஒரு கலைஞன்யா...இந்த மாதிரி அடுத்தவங்க பிரைவேசியில தலையிடற பாவமெல்லாம் ஒரு கலைஞன் பண்ணப்பிடாது"ன்னு சொல்லிப் புரிய வக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு.
சரி...கீழே இருக்குற இந்தப் படத்தைப் பாருங்க. நான் எடுத்தப் படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தப் படங்களில் ஒன்றுன்னு இதை பத்திச் சொல்லலாம். கார்ல போய்க்கிட்டு இருக்கும் போது விண்ட்ஸ்க்ரீன் வழியாப் பாத்தா நமக்கு முன்னாடி ஒரு தாத்தாவும் பேத்தியும் ஸ்கூட்டர்ல போய்க்கிட்டு இருக்காங்க. ஸ்கூட்டர்ல பெரும்பாலும் சின்னக் குழந்தைகளை முன்னாடி நிக்க வச்சு கூட்டிட்டுப் போறதை தான் பாத்துருக்கேன். ஆனா தாத்தா பின்னாடி சமத்தா ஒக்காந்துட்டு போற அந்த குழந்தையைப் பாத்ததும் படம் எடுக்கனும்னு கை துறுதுறுன்னுச்சு. அந்த காட்சியைப் பாக்கறதுக்கே ரொம்ப க்யூட்டா இருந்துச்சு. என்னென்னமோ எண்ணங்கள்...சுருக்கமா சொல்லனும்னா ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி அவ்வளவு தான் இப்போதைக்குச் சொல்ல முடியுது. கார்ல டிரைவர் சீட்டுக்குப் பின் சீட்டுல ஒக்காந்திருந்தேன். பயலுக ஓட்டு ஓட்டுன்னு ஓட்டுறானுங்க இனிமே படம் எடுக்கக் கூடாதுன்னு பொட்டலம் கட்டி ஜோபியில வச்சிருந்த கேமராவை அவசர அவசரமா வெளியில எடுத்து விண்ட்ஸ்க்ரீன் வழியாவே புடிச்சது இந்தப் படம். அப்புறம் இன்னுமொன்னு...இந்தப் படத்தைப் பாத்துட்டு "உறவுகள்"ங்கிற தலைப்புல கவிதை எழுதனும்னும் முயற்சி பண்ணேனுங்க. அதுவும் வேலைக்காவலை. நீங்க யாராச்சும் ஒரு ட்ரை வுடுங்களேன்.
பெரிய சைஸ்ல எடுக்கப்பட்ட இந்தப் படத்தைத் தாத்தாவையும் பேத்தியை மட்டும் ஜூம் பண்ணி தனியா கீழே போட்டுருக்கேன். படத்தை அப்புறமா பாக்கும் போது ஒரு ஆச்சரியம். எடுக்கும் போது தெரியாத ஒரு சேதி...இந்தப் படத்தைக் கம்ப்யூட்டர் திரையில பாக்கும் போது தெரிஞ்சது. ஒரு (ஒரு சின்ன க்ளூ: படத்திலுள்ள தாத்தாவுக்கும் பேத்திக்கும் தொடர்புள்ள ஒரு விசயம் தான்) உங்களுக்குத் தெரியுதுங்ளா ஷெர்லாக் ஹோம்ஸுங்ளா?
Thursday, August 03, 2006
கயவன் பதில்கள் (அ) ஹாய் கயவன்!
ஹலோ! நான் தாங்க கயவன் பேசறேன். கேள்வி எல்லாம் பெருசா கேட்டுப் புட்டு பதிலும் சொல்லாம, ரிசால்டும் சொல்லாம பசிக்குதுன்னு நைட்டு எட்டரை மணிக்கே ஓடிப் போன அதே கயவன் தானுங்க. இப்ப நேத்து கேட்ட கேள்விக்கு பதில் சொல்றதா சொல்லி ஒரேடியா ஒரு பதிவு கயமைத்தனமும் பண்ணிக்கிறேனுங்க.
1. 'ஆக்னெஸ் கான்சே பொஜாசியூ' (Agnes Gonxhe Bojaxhiu) - இப்பெண்மணியை நாம் எவ்வாறு பிரபலமாக அறிகிறோம்?
பதில் : அன்னை தெரசா(Mother Teresa). இவர் அல்பேனியா(Albania) நாட்டைச் சேர்ந்தவர். பலர் சரியான பதிலைக் கூறியிருந்தார்கள்.
2. தன்னுடைய இறப்பிற்காகத் தானே இசைகோர்வை எழுதியதாக அறியப் பெறும் மேற்கத்திய இசை மேதை யார்? அவர் எழுதிய அந்த கடைசி இசைக் கோர்வையின் பெயர் என்ன?
பதில் : முதல் மாஸ்டர் கம்போசர்களில் ஒருவர் என அழைக்கப்படும் மோசார்ட்(Wolfgang Amadeus Mozart). இசை கோர்வையின் பெயர் 'தி ரிகொய்ம்'(The Requiem'). தன்னுடைய இறப்பிற்கு சில தினங்களுக்கு முன்னர் வேறு ஒருவருடைய மனைவியின் நினைவு நாள் அன்று இசைக்க தேவை என்று ஒரு தூதுவர் வந்து கேட்க, The Requiem முயற்சியில் ஈடுபட்டார் மோசார்ட். ஆனால் முழுதும் எழுதி முடிப்பதற்கு முன்னர் மோசார்ட் மர்மமான ஒரு காய்ச்சல் கண்டு காலம் ஆனார். மோசார்ட்டின் சிறந்த படைப்புகளில்(Master piece) ஒன்றாகக் கருதப்படுவது 'The Requiem'. இசையமைப்பாளரின் பெயரைச் சிலர் கூறியிருந்தாலும், இசை கோர்வையின் பெயரை யாரும் சொல்லவில்லை.
3. புலிட்சர் பரிசு பெற்ற இப்புகைப்படத்தின் தொடர்பு, எந்த வரலாற்று சம்பவத்தோடு உள்ளது? மேலதிக விபரங்கள் (புகைப்படம் எடுத்தவர், உடையின்றி ஓடி வரும் அப்பெண் குழந்தையின் பெயர் இவற்றையும் தெரிந்தவர்கள் கூறலாம்)
பதில் : வியட்நாம் போரின் போது விமானப்படையின் நபாம்(Napalm) என்ற ரசாயனத் தாக்குதலின் போது தன் உடம்பு பாதி எரிந்த நிலையில் ஓடி வரும் சிறுமியின் படம் அது. இப்போரின் அவலங்களையும், கொடுமைகளையும் உலகத்தினவர்களைத் திரும்பி பார்க்கச் செய்த படம். சிறுமியின் பெயர் ஃபான் தி கிம் ஃபுக்(Phan Thi Kim Phuc), படம் எடுக்கப்பட்ட நாள் ஜூன் 8, 1972. புகைப்படம் எடுத்தவர் Associated Pressஐச் சேர்ந்த நிக் உட்(Nick Ut). ஒடம்பு எரிஞ்ச நெலையில ஒடியாற புள்ளையைப் படம் எடுத்துருக்கானே பாவி, காப்பாத்தக் கூடாதுன்னு என்னைப் போலவே நெனக்கிறவங்களுக்கு அந்தச் சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து அவள் உயிரைக் காப்பாற்றியதும் நிக் தான்.
4. செவ்விந்தியர்களுடன்(American Indians) தொடர்பு படுத்தப் பெறும் தோலிலான கூடாரங்களின்(tents) பெயர் என்ன?
பதில் : டீபீ(Teepee). Red Indians என்று அழைக்கப் பட்டுக் கொண்டிருந்த இவர்களைத் தற்போது American Indians என்றோ Apache Indians என்றோ அழைக்கிறார்கள்.
5. '"Now we are all sons of bitches"' என்று கூறியவர் யார்? இவ்வாறு கூறுவதற்குப் பின்னணியாக அமைந்த வரலாற்று நிகழ்வு எது?
பதில் : கென்னத் பெயின்பிரிஜ்(Kenneth Bainbridge). மென்ஹட்டன் பிராஜக்ட்(Manhattan Project) என்று பெயர் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த அணுகுண்டு சோதனைகளின் முடிவுகளைப் பார்த்து பிராஜெக்டின் இயக்குநர் ஓபன்ஹெய்மரிடம்(J.Robert Oppenheimer) கூறியது. பலரும் ஓபன்ஹெய்மர் என்று பதிலளித்திருந்தனர். ஓபன்ஹெய்மர் கூறியது வேறு ஒரு மிகப் பிரபலமான வாக்கியம், பகவத் கீதையிலிருந்து எடுத்தாண்டது "I am become Death, the destroyer of worlds".
6. ஒரு ஜப்பானிய சமுராய் வீரனுக்கு 'மரியாதைக்குரிய மரணம்' எனக் கருதப் பெறும் தற்கொலைக்குப் பெயர் என்ன?
பதில் : செப்புகு(Sepukku) அல்லது ஹராகிரி(Hara Kiri). எதிரியிடம் மாட்டிக் கொள்வதை விட மரணிப்பதே ஒரு சமுராய் வீரனுக்கு அழகு என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்தது. எப்படி தற்கொலை செஞ்சிப்பாங்கன்னா கேக்கறீங்க? ரொம்ப சுலபம் ஜெண்டில்மென், உங்க வயித்தை நீங்களே கிழிச்சிக்கிட்டா நீங்களும் ஹரா கிரி செஞ்சிக்கிட்ட ஒரு சமுராய் வீரர் தான்.
7. பெங்கால் பிரிவினைக்குக் காரணமாகக் கருதப் பெறும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநரின் பெயர் என்ன?
பதில் : கர்சன் துரை(Lord Curzon). கிழக்கு வங்காளம் என்றும் மேற்கு வங்காளம் என்றும் பிரிவினை நடந்த ஆண்டு 1905. கிழக்கு வங்காளத்தின் தற்போதைய பெயர் பங்கிளாதேஷ்.
8. காலணி வாங்கச் செல்லும் போது 7,8 என்று காலின் அளவை எடுக்கப் பயன்படும் அந்தப் பலகையின்(instrumentனு சொல்லலாமா?) பெயர் என்ன?
பதில் : பிரேணாக்(Brannock). ரொம்ப கடினமானதுன்னு நான் நெனச்ச கேள்வி. இதுக்கும் பல பேர் சரியான பதில் சொல்லிட்டாங்க. முதலில் விடை தந்தவர் ஒரு அனானிமஸ். அப்பா அனானிமஸுங்களா! உங்க பேரையும் கூட போட்டுக்கக் கூடாதா? தாவு தீந்துடுச்சு.
9. 'I have nothing to offer but blood, toil, tears and sweat' - இது எந்த உலகத் தலைவரின் பேச்சின்(speech) புகழ்பெற்ற வரிகள்.
பதில் : இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்(Winston Leonard Spencer Churchill). உலகத் தலைவர்களின் பேச்சுகளிலேயே மிகவும் தாக்கத்தை(inspirational) ஏற்படுத்திய ஒரு உரை.
http://www.winstonchurchill.org/i4a/pages/index.cfm?pageid=391
10. BMW என்பதன் ஆங்கில விரிவாக்கம் என்ன?
பதில் : பவேரியா மோட்டர் வர்க்ஸ்(Bavaria Motor Works). ஜெர்மன் மொழியில் 'Bayerische Motoren Werke AG'
11. வஸ்திரபூர், அகமதாபாத் - இவ்விடத்தில் எந்த நிறுவனத்தைக் காணலாம்?
பதில் : இந்திய மேலாண்மை கழகம்(Indian Institute of Management, Ahmedabad).
12. 1940களில் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்க அக்காலத்தில் பெருந்தொகையாகக் கருதப்படும் ரூ.1 லட்சம் ஊதியமாகப் பெற்ற தமிழ் திரைப்பட நடிகை யார்? படத்தின் பேர் என்ன?
பதில் : கே.பி.சுந்தராம்பாள். படத்தின் பெயர் 'நந்தனார்'. ஒளவையார் என்று பலரும் கூறியிருந்தார்கள். பெண் வேடமிட்டு ஆண்கள் நடித்த அக்காலத்தில் ஆண் வேடமிட்டு கதாநாயகனாக(!) ஒரு பெண் நடித்தப் படம். இப்படத்தில் நடிப்பதைத் தவிர்க்க ஒரு லட்சம் ரூபாய் வேண்டுமென்று கே.பி.சு கேட்க, தயாரிப்பாளரும் ஒத்துக் கொண்டதால் இப்படத்தில் இவர் நடித்தார் என்று எப்போதோ கேள்வி பட்டது.
13. ஏழு எழுத்துகளைக் கொண்டு ஆங்கில வார்த்தைகளை உருவாக்கும் வார்த்தை விளையாட்டின்(board game) பேர் என்ன?
பதில் : ஸ்கிராபிள்(Scrabble). சிலர் விளையாட்டின் பெயர் ஏழு எழுத்துகளைக் கொண்டு உருவாக்கப் படுகிறது என்று எண்ணிவிட்டனர் என நினைக்கிறேன்.
14. ஃப்ரீ போட் வில்லி(Free Boat Willy) - இது எந்த ஹாலிவுட் கதாபாத்திரத்தின் அறிமுகப் படம்?
பதில் : மொதல்ல என்னை மன்னிக்கனும். படத்தோட பேரு "Steam Boat Willie". நான் தவறுதலா 'Free Boat Willy'னு கொடுத்துட்டேன். இப்படத்தில் தோன்றிய அந்த ஹாலிவுட் கதாபாத்திரம் 'மிக்கி மவுஸ்'(Mickey Mouse)
15. ஆபரேசன் டெசர்ட் ஸ்டார்ம்(Gulf war)இன் போது அமெரிக்கா தலைமையிலான allied forcesஇன் கமாண்டராக இருந்த ஜெனரலின் பெயர் என்ன?
பதில் : ஜெனரல் நார்மன் ஸ்வார்ஸ்காஃப்(Gen.Norman Schwarzkopf)
16. நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி(Tranquebar) முதன்முதலில் எந்த வணிகக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது? (ஒரு சின்ன க்ளூ: இதுவும் ஒரு கிழக்கிந்திய கம்பெனி தான்)
பதில் : டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி(Danish East India Company). எங்கோ இருக்கும் ஸ்கேண்டினேவிய நாடான டென்மார்க்கிலிருந்தும் தமிழ்நாட்டில் வந்து வணிகம் செய்திருக்கிறார்கள் என நினைக்கும் போது ஆச்சரியமாக உள்ளது. ஆயினும் ஆங்கில மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனிகளைப் போல டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியாவில் பலநாள் நிலைக்க இயலவில்லை. பலரும் டச்சு கிழக்கிந்திய கம்பெனி என்று கூறியிருந்தனர்.
17. டிரோமடரி(Dromedary) என்பது என்ன?
பதில் : ஒட்டகம். ஹி..ஹி...
18. முகமது யுசுப் கான் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல இந்தி திரைப்பட நடிகரின் திரை பெயர் என்ன?
பதில் : திலிப் குமார். கொத்ஸ் சொன்னது போல 'மருதநாயகம்'(வரலாற்று நாயகன்) இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டதும் அவர் பெயர் முகமது யுசுப் கான் என்றானது.
19. 'The Day of the Jackal' என்ற ஆங்கிலத் திரைப்படம் எந்த வரலாற்றுச் சம்பவத்தினைத் தழுவி எடுக்கப் பட்டது?
பதில் : ஃபிரெஞ்சு அதிபரான சார்ல்ஸ் டி கால்(Charles de Gaulle)இன் மீது ஏற்பட்ட கொலை முயற்சியைத் தழுவி எடுக்கப் பட்டது.
20. 'சமஸ்கிருதத்தில் காயிதம் எழுது' என்று அறிவுறுத்தி தன் இளைய சகோதரருக்கு கடிதம் எழுதியவர் யார்? யார் வேண்டுமானாலும் இவ்வாறு கடிதம் எழுதலாம், அதில் என்ன சிறப்பு? இவ்வாறு எழுதியவர் ஒரு தமிழர். மிக மிகப் புகழ்பெற்றவர். யார் அவர்?
பதில் : சுப்பிரமணிய பாரதி. மிகச் சிலரே முயன்றிருந்தனர். சரியான பதில் அளித்தவர் ஒருவரே- அவர் நண்பர் முத்துகுமரன். சூப்பருங்க. இது எங்கோ எப்போதோ படித்தது. எனக்கும் மேற்கோள் எதுவும் நினைவில்லை. பாரதியாருக்கு அவருடைய இளைய சகோதரர் ஆங்கிலத்தில் கடிதம் எழுதியதும் அதை கண்டு 'நம் நாட்டில் எத்தனையோ மொழிகள் இருக்க அயலானின் மொழியான ஆங்கிலத்தில் ஏன் கடிதம் எழுதினாய். வேண்டுமானால் சம்ஸ்கிருதத்தில் காயிதம் எழுது' என்று தன் சகோதரருக்கு அறிவுறுத்தி பதில் மடல் இட்டார்.
கேள்வியைப் படித்ததும் தமிழை இகழ்ந்து சமஸ்கிருதத்தில் காயிதம் எழுது என்று பாரதியார் கூறியது போல தோன்றினாலும், இங்கு பாரதியார் அவ்வாறு எழுதியதின் காரணத்தை(context) ஆராய்வது நலம். பதினான்கு மொழிகளை அறிந்த ஒரு தமிழ் கவிஞன், 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று நவின்றவன் சமஸ்கிருதத்தில் காயிதம் எழுதச் சொல்வதன் காரணம் என எனக்குப் படுவது - நம்மை அடிமை படுத்தி வைத்திருக்கும் மாற்றானின் மொழியான ஆங்கிலத்தைப் பேசுவதிலும் வளர்ப்பதையும் காட்டிலும் நம்மவர்களின் மொழியினை அறிந்து கொள்வதும் வளர்ப்பதும் தேசப் பற்றையும் வளர்க்கும் என்ற சிந்தனை இருந்திருக்க வேண்டும். I also feel that Bharathiar tries to strike a right balance between மொழிப் பற்று(Linguistic fervour) and தேசப் பற்று(Patriotism). ரெண்டு வரி தாங்க சொல்லிருக்கேன். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.
என்னடா நேத்து க்யூஸ் ப்ரோக்ராம், இன்னிக்கு திடீர்னு அறிவுரை - என்னாச்சு இவனுக்கு? எதனால இப்படி பிளேடு போடுறான்னு தானே நெனக்கிறீங்க? ப்ளாக்கர் சொல்லுது இது என்னோட நூறாவது பதிவாம். சந்தோஷ் தன்னோட நூறாவது பதிவுல கார்கில் வீரர்களை நினைவு கூர்ந்து ஒரு நல்ல பதிவு போட்டது போல நாமும் எதாச்சும் உருப்படியா செய்யனும்னு ஒரு ரோசனை இருந்துச்சுங்க...அதுக்குத் தான் கொஞ்சம் பீட்டரைக் கலந்து வுட்டு ஒரு கருத்து சொல்லிருக்கொம்ங்க. நீங்கல்லாம் நெனக்கிற மாதிரி இன்னும் முழுசா முத்தலீங்கோ.
அப்புறம் குவிஸ்ஸில் யார் ஜெயிச்சாங்கனு ஒரு கேள்வி வரும். நூறாவது பதிவைச் சாக்கா வெச்சு இன்னுமொரு கயமைத் தனம் பண்ணிக்கிறேன். நம்பர் ஒன்னு, ரெண்டுன்னு யாரும் இல்லீங்கோ. க்யூஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை நாம புதுசா என்ன தெரிஞ்சிக்கிட்டோம்ங்கிறதை மட்டும் தான் கணக்குல எடுத்துக்கனும்...நான் அப்படி தான் எடுத்துக்கிருவேன். படுவா! நீ வெளியே வாடா எங்களை எல்லாம் மாங்கு மாங்குன்னு ஒக்காந்து பதில் போட வச்சிட்டு பெலசாஃபியா பேசுறே...ஒனக்குன்னு ஆட்டோ வருதுடின்னு மக்கள்ஸ் சவுண்டு வுடறது கேக்குதுங்க. அப்படியெல்லாம் எதுவும் செஞ்சிடாதீங்க. எனக்கு இன்னும் புள்ளக்குட்டி கூட இல்லீங்க. அதுனால பாவம் பாத்து வுட்டுடுங்க. அப்பிடியே தலை மேல துண்டைப் போட்டுக்கிட்டு குதிச்சு ஓடிப் போயிடுறேன்.
க்யூஸ்(குவிஸ் தான்) நடத்தறது எம்புட்டு கஷ்டம்னு புரிஞ்சிடுச்சுங்க. அமோக ஆதரவு தந்த நண்பர்கள் மகேந்திரன், மோகன் தாஸ், வியாபாரி, இளா, தேவ், கொத்தனார், உங்கள் நண்பன் சரவணன், மா.சிவகுமார், கோவி.கண்ணன், மின்னல், குமரன் எண்ணம், நியூஸ் ஃப்ரம் ப்ரசன்னா, லப்டப், மங்கை, ராசா, சிபி, நன்மனம், கப்பி பய, முத்துகுமரன், பிரபு ராஜா, ராம், ஹரிஹரன் மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத நாலு அப்ரெண்டிசுங்க...சே அனானிமஸ்கள் அனைவருக்கும் எனது நன்றி. வின்னர், ரன்னர் தான் சொல்லலை எங்க பேரைக் கூட ஏன் சொல்லலைனு கேட்கற மாதிரி யாரு பேராவது வுட்டுப் போயிருந்தா உங்க பேரையும் சேத்துக்கங்க. நூறு பதிவுகள் வரை என்னை வளர வைத்து அழகு பார்த்த அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் இத்தருணத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள கடமை பட்டிருக்கிறேன்.
Wednesday, August 02, 2006
ஜிகே குவிஸ்(சிரிப்புக்காக இல்லீங்கோ...)
பாஸ்டன் பாலாவும், நம்ம வெங்கட்ரமணியும் கண்ணைக் காட்டி புதிர் எல்லாம் போட்டாங்க...அதப் பாத்து நமக்கும் ஒரு ஆசை. யாரையாச்சும் கேள்வி கேக்கனுமின்னு. ஆசை யாரை விட்டுச்சு சொல்லுங்க? சரி! இங்கே ஒரு 20 கேள்வி கேட்டிருக்கேன். இங்கண இருக்குற மண்டைங்க எல்லாம் அத நிமிசத்துல ஊதித் தள்ளிடுவாங்கன்னு தெரியும். அதுனால எல்லோரும் பங்கு பெறனும் என்ற நல்ல எண்ணத்தில்(குறிப்பா இந்திய குடிமகன்கள்) ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பின்னூட்டக் கயமைத் தனம் பண்ணிட்டு விடைகளை வெளியிடலாம்னு ஒரு எண்ணம்.
சரி இப்ப கேள்விகள்.
1. 'ஆக்னெஸ் கான்சே பொஜாசியூ' (Agnes Gonxhe Bojaxhiu) - இப்பெண்மணியை நாம் எவ்வாறு பிரபலமாக அறிகிறோம்?
2. தன்னுடைய இறப்பிற்காகத் தானே இசைகோர்வை எழுதியதாக அறியப் பெறும் மேற்கத்திய இசை மேதை யார்? அவர் எழுதிய அந்த கடைசி இசைக் கோர்வையின் பெயர் என்ன?
3. புலிட்சர் பரிசு பெற்ற இப்புகைப்படத்தின் தொடர்பு, எந்த வரலாற்று சம்பவத்தோடு உள்ளது? மேலதிக விபரங்கள் (புகைப்படம் எடுத்தவர், உடையின்றி ஓடி வரும் அப்பெண் குழந்தையின் பெயர் இவற்றையும் தெரிந்தவர்கள் கூறலாம்)
4. செவ்விந்தியர்களுடன்(American Indians) தொடர்பு படுத்தப் பெறும் தோலிலான கூடாரங்களின்(tents) பெயர் என்ன?
5. '"Now we are all sons of bitches"' என்று கூறியவர் யார்? இவ்வாறு கூறுவதற்குப் பின்னணியாக அமைந்த வரலாற்று நிகழ்வு எது?
6. ஒரு ஜப்பானிய சமுராய் வீரனுக்கு 'மரியாதைக்குரிய மரணம்' எனக் கருதப் பெறும் தற்கொலைக்குப் பெயர் என்ன?
7. பெங்கால் பிரிவினைக்குக் காரணமாகக் கருதப் பெறும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநரின் பெயர் என்ன?
8. காலணி வாங்கச் செல்லும் போது 7,8 என்று காலின் அளவை எடுக்கப் பயன்படும் அந்தப் பலகையின்(instrumentனு சொல்லலாமா?) பெயர் என்ன?
9. 'I have nothing to offer but blood, toil, tears and sweat' - இது எந்த உலகத் தலைவரின் பேச்சின்(speech) புகழ்பெற்ற வரிகள்.
10. BMW என்பதன் ஆங்கில விரிவாக்கம் என்ன?
11. வஸ்திரபூர், அகமதாபாத் - இவ்விடத்தில் எந்த நிறுவனத்தைக் காணலாம்?
12. 1940களில் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்க அக்காலத்தில் பெருந்தொகையாகக் கருதப்படும் ரூ.1 லட்சம் ஊதியமாகப் பெற்ற தமிழ் திரைப்பட நடிகை யார்? படத்தின் பேர் என்ன?
13. ஏழு எழுத்துகளைக் கொண்டு ஆங்கில வார்த்தைகளை உருவாக்கும் வார்த்தை விளையாட்டின்(board game) பேர் என்ன?
14. ஃப்ரீ போட் வில்லி(Free Boat Willy) - இது எந்த ஹாலிவுட் கதாபாத்திரத்தின் அறிமுகப் படம்?
15. ஆபரேசன் டெசர்ட் ஸ்டார்ம்(Gulf war)இன் போது அமெரிக்கா தலைமையிலான allied forcesஇன் கமாண்டராக இருந்த ஜெனரலின் பெயர் என்ன?
16. நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி(Tranquebar) முதன்முதலில் எந்த வணிகக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது? (ஒரு சின்ன க்ளூ: இதுவும் ஒரு கிழக்கிந்திய கம்பெனி தான்)
17. டிரோமடரி(Dromedary) என்பது என்ன?
18. முகமது யுசுப் கான் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல இந்தி திரைப்பட நடிகரின் திரை பெயர் என்ன?
19. 'The Day of the Jackal' என்ற ஆங்கிலத் திரைப்படம் எந்த பிரபலத்தின் மீது நடைபெற்ற கொலை முயற்சியைத் தழுவி எடுக்கப் பட்டது?
20. 'சமஸ்கிருதத்தில் காயிதம் எழுது' என்று அறிவுறுத்தி தன் இளைய சகோதரருக்கு கடிதம் எழுதியவர் யார்? யார் வேண்டுமானாலும் இவ்வாறு கடிதம் எழுதலாம், அதில் என்ன சிறப்பு? இவ்வாறு எழுதியவர் ஒரு தமிழர். மிக மிகப் புகழ்பெற்றவர். யார் அவர்?
தொப்பி தந்திரம்
"போனா போவுதுன்னு ஒரு மரியாதைக்கு எதோ நல்லாருக்குன்னு சொன்னா ஒரே படமாவாப் போட்டு ரவுசு பண்ணறேன்னு கேட்டு நீங்கல்லாம் என்னைய நாலு சாத்து சாத்துன்னா தான் நான் அடங்குவேன் போலிருக்கு. சாத்துறதுக்கு முன்னாடி கீழே இருக்குற படத்தை எல்லாம் பாத்துடுங்க. இல்லன்னா எடுத்ததெல்லாம் வீணாப் போயிடும்..."
1. ஞாயித்துக் கெழமை சாங்காலம் அப்பிடியே காலாற ரோட்டோரமா நடந்து வந்தேனா...பாத்தா கரெண்டு கம்பியில ஒரு காக்காவோ, குருவியோ...இல்ல எதோ ஒரு பறக்கற அனிமல்ஸ் ஒக்காந்துருக்கு. உடுவமா...லபக்குன்னு புடி ஒரு படம்
2. பறவை தான்னு மக்கள்ஸை நம்ப வைக்க ஒரு க்ளோசப் ஷாட்டு...
3. போன பதிவுல சீபியா டோன்ல போட்ட சட்டி இப்ப சாதாரண கலருல வேற ஒரு கோணத்துல...
4. சித்தூர்கட்டில் ஒரு மழைக்கால மாலையில்...
5. என் இனிய தமிழ் மக்களே...பூக்கள் விரியும் ஓசையையும், வண்டுகள் தேன் அருந்துவதையும் அந்த பூக்களுக்கே தெரியாமல் படம் பிடித்தது வழக்கம் போல என் கேமராமேன் கண்ணன் அப்பிடின்னு பாரதிராஜா நாடோடித் தென்றல் படம் துவக்கத்துல சொல்லுவாருல்ல? அதே மாதிரி பூக்களிலிருந்து வண்டு தேன் அருந்துவதை பூக்களுக்கே தெரியாமல் ஒரு படம் எடுக்கனும்னு பாக்குறேன்...வண்டையும் காணலை...தேனியையும் காணலை. அட அத வுடுங்கப்பா அட்லீஸ்ட் ஒரு ஹம்மிங் பர்டாவது வந்துருக்கலாமில்ல. அதுவும் வரலை. நம்ம ஹேப்பி ஹவர்ஸூ...நமக்கு பூவாண்ட கெடச்சது ஒரு கட்டெறும்பு தான். கட்டெறும்போ, கழுதையோ அப்படியே அதையும் ஒரு கோழி அமுக்கு. சூப்பரா இருக்கில்ல? தேங்க்யூ...தேங்க்யூ.
6. மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் போட்டா புடிச்சேன் தோழீ...
7. காடு மேடெல்லாம் திரிஞ்சு படம் புடிக்கற வேலை வெக்காம அழகா கட்டை செவுத்து மேல வந்து ஒக்காந்துச்சு ஒரு ஓணான். தோள்பட்டையில ஆர்மோனியம், கையில மொபைல் இதெல்லாம் வச்சிக்கிட்டே புடிச்ச படம் இது. 
8. கீழே இருக்குற படத்தைப் பத்தி கண்டிப்பா சொல்லியே தீரனும். நம்ம இளைய தளபதி விஜய் அவரே பாடுற பாட்டுங்க வரும் போது 'இப்பாடலைப் பாடிக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய்'னு திரையில போட்டு பாத்துருப்பீங்க, அது மாதிரி இந்தப் படத்தைப் பத்தி சொல்லனும்னா 'இப்படத்தைக் கெடுத்தவர் உங்கள் வேளாண் தமிழர் விவசாயி இளா'ன்னு கண்டிப்பாச் சொல்லியே தீரணும். சீதேவியை மூதேவி ஆக்குன பெருமை அவரையே சேரும். அது என்ன சீதேவி, மூதேவிங்கிறீங்களா? இதுக்குப் பின்னாடி ஒரு கதை இருக்கு. கேக்கறீங்களா?
ஒரு ஊர்ல ஒரு வெவசாயி இருந்தாராம். நம்ம வேளாண் தமிழரை மாதிரி இல்ல...இவரு ரொம்ப நல்லவரு. சிறந்த இறையாளர். ஒரு முறை என்னாவுதாம்... திடீர்னு அவரு முன்னாடி மகாலட்சுமியும்(சீதேவியும்) அவங்களோட மூத்த சகோதரியான பெரியம்மை(மூதேவியும்) வந்து நிக்கிறாங்களாம். ரெண்டு பேரும் "எங்க ரெண்டு பேத்துல யாரு ரொம்ப அழகுன்னு சொன்னாத் தான் ஆச்சுன்னு" நம்ம 'நல்ல வெவசாயி' இருக்காரில்ல அவரை அழகிப் போட்டி ஜட்ஜ் ஆக்கிட்டாங்களாம். "ஐயயோ என்னடா இது வம்பாப் போச்சு...சீதேவி அழகுன்னு சொன்னா மூதேவி கோச்சிக்கிட்டு நம்ம வீட்டுல வந்து ஒக்காந்துக்குவா...மூதேவி அழகுன்னு சொன்னா சீதேவி கோச்சிக்கிட்டு போயிடுவா...அப்புறம் நாம வெளங்குனா மாதிரி தான்"னு நெனச்சிக்கிட்டாராம். எப்படி சமாளிக்கலாம்னு யோசிச்சுப் பாத்துட்டு "யம்மா சீதேவி! முன்னழகுல நீ ரொம்ப அழகு, பின்னழகுல உங்கக்கா ரொம்ப டாப்புன்னு சொல்லி சமாளிச்சாராம்". அதாவது சீதேவி வீட்டுக்குள்ள வரும் போதும் மூதேவி வீட்டை விட்டு போகும் போதும் அழகுன்னு ஒரு politically correct answerஐச் சொல்லி எஸ்கேப் ஆனாராம்.
இந்த கதைக்கும் நம்ம 'ஒரு மார்க்கமான வெவசாயிக்கும்' என்ன சம்பந்தம்னு கேக்கிறீங்களா? மேல இருக்கிற மொத ஓணான் படம் புடிக்கும் போது தான் இளா என்னோட மொபைலுக்கு ஃபோன் பண்ணாரு. "ஓணானைப் படம் புடிச்சிட்டு இருக்கேன் சாமி"ன்னு சொன்னாலும் வுட மாட்டேங்கிறாரு. அவரு டப்பாஸ் வெடிச்சி முட்டாய் குடுத்த ஒரு விடயத்தைச் சொல்லியே தீருவேன்னு பச்சப்புள்ளயாட்டம் அடம் புடிக்கிறாரு. "சரி ஃபோன் பண்ணிட்டீங்க...சொல்லுங்க"ன்னு சொல்லிட்டு கழுத்தைச் சாய்ச்சு பொபைல்ல அவரு பேசறதைக் கேட்டுக்கிடே மொதப் படத்தை எப்படியோ புடிச்சிட்டேன். ஆனா இது போதாது, அடுத்ததா க்ளோசப்ல ஓணானோட முட்டை கண்ணு மட்டும் தெரியற மாதிரி ஒரு சரித்திரப் புகழ் பெற்ற படம் புடிக்கணும்னு ஒணானுக்கு ரொம்ப கிட்ட போயிட்டேன். ஓணானும் ஆடாம அசையாம ஒக்காந்து இருந்துச்சு. வெவசாயி பேசறதை மெய்நிகரா கேட்டுக்கிட்டே நான் ஓணான் கிட்ட போய் கேமராவை ஃபோகஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன். சரியா அந்த நேரம்னு பாத்து 'என்னய்யா சவுண்டே காணும்' னு நம்மாளு கொரலு வுட்டாரு பாருங்க...நானும் என் மெய்நிகர் நிலையிலேருந்து மெய்நிலைக்கு வந்து "இருக்கேஞ் சாமி"ன்னு கொரல் குடுத்தேன் பாருங்க...அந்த சத்தத்துல ஓணான் பயந்து போய் ஒரு 180 டிகிரி டர்ன் அடிச்சுடுச்சு. அதுனால ஓணானின் முன்னழகைப் பாத்து படம் எடுக்க இருந்த இருந்த நானு அதோட பின்னழகைப் படம் புடிக்கிற அவல நிலைக்கு ஆளாயிட்டேன். இப்ப சொல்லுங்க மகாஜனங்களே...சீதேவி மாதிரி இருந்த என்னோட ஓணானை மூதேவி ஆக்குனதுக்கு யாருங்க காரணம்? இவரை என்ன பண்ணா தகும்? ஆனாலும் அவருக்கு ரொம்பத் தான் ஓளவியமுங்க. நான் படம் எடுத்து பெரிய ஆள் ஆயிடக் கூடாதுன்னு அவரு பண்ண சூழ்ச்சியினால தான் இப்பிடி ஆகிப் போச்சு. "ஏற்கனவே நான் காதல் கவிதை எழுத டிரெயினிங் குடுங்க சாமி"ன்னு கேட்ட போதும் எதேதோ சொல்லி என்னை ஏமாத்திட்டாரு...இப்ப நானே என்னோட முயற்சியில பெரியாளு ஆக ட்ரை பண்ணறதுலயும் மண்ணள்ளிப் போடறாரு. ஒரு கலைஞனைத் தன்னோட கலை தாகதத்தைத் தணிச்சிக்க விடாம முட்டுக்கட்டை போடறாரு. நீங்களே என்னான்னு கேளுங்க. இதுக்கு எவ்வளவு செலவழிஞ்சாலும் நான் பாத்துக்கறேன்.
சரி...இவரு தான் இப்படின்னா...என் கூட இருக்குறவனுங்க அதுக்கு மேல "விவசாயி டு தி பவர் சிக்ஸ்". இவ்ளோ கஷ்டப் பட்டு ஓணான் படத்தை எடுக்க முயற்சி பண்ண எனக்கு திடீர்னு ஒரு சந்தேகம் வந்துச்சு. ஓணான் கடிக்குமா? ஓணான் கடிக்கு வெஷம் இருக்குமான்னு? அங்க பக்கத்துல நின்னுட்டு இருந்த என்னோட கலீக்(இந்தி பையன்) ஒருத்தன் கிட்ட கேட்டேன். "ஆமாங்க இதுக்குப் பேரு 'கிட்கிட்'(இந்தியில) இதோட கடிக்கு வெஷம் இருக்கு"ன்னு ஒரு குண்டைத் தூக்கி போட்டான். ஆனா எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் இந்தியில 'கிட்கிட்'னா பச்சோந்தின்னு அர்த்தம். "இல்லீங்க நீங்க படம்புடிச்ச அனிமல்ஸ் பேரு தான் கிட்கிட்"ங்கிறான். அதோட சிவாஜி இந்த 'கிட்கிட்'டை வச்சுத் தான் எதோ ஒரு கோட்டையைப் பிடிச்சாருன்னு சொன்னான். சிவாஜின்னா நடிகர் திலகம் சிவாஜி இல்ல...சத்ரபதி சிவாஜி. சத்ரபதின்னா சரத்குமாரான்னு யார்னா கேட்டீங்கன்னா நான் மனுசனா இருக்க மாட்டேன். அதாவது சிவாஜியின் வீரர்கள் 'கிட்கிட்' வாலுல கயித்தைக் கட்டி கீழே நின்னுக்கிட்டு தாங்க புடிக்க நினைக்கிற கோட்டை மதில் சுவரை நோக்கி வீசுவாங்களாம். நம்ம 'கிட்கிட்'டும் கோட்டை மதில் சுவத்தைக் கெட்டியமாப் பிடிச்சுக்குமாம்...அதுக்கப்புறம் வீரர்கள் கிடுகிடுன்னு(கிட்கிட்னு இல்ல)கயித்தைப் புடிச்சு மேலே ஏறி டிஷ்யூம் டிஷ்யூம் எல்லாம் போட்டு கோட்டையை மீட்டுடுவாங்களாம்.
"இந்த மாதிரி டைட்டா புடிக்கக் கூடியது உடும்பு, இவன் என்னடான்னா ஓணானுக்குப் பச்சோந்தியோடப் பேரை வச்சி உடும்புங்கிறானே"னு எனக்கு ஒரே கொழப்பம். "ஆர் யூ ஷ்யூர்"னு கேட்டேன். அவனும் நம்மளை மாதிரியே நேட்ஜியோ பாக்குற பார்ட்டியா...அத வச்சி அடுத்ததா அடிச்சி விட்டான் ஒரு மெகா பீலா "ஐ ஆம் வெரி ஷ்யூர்...இந்தோனேசியாவுல இந்த சின்ன கிட்கிட் மாதிரியே பெரிய சைஸ்ல கிட்கிட் ஒன்னு இருக்கு...அதுக்கு கோமோடோ டிராகன்னு பேரு...அது ஆளையே அடிச்சித் தின்னுடும். பயங்கர வெஷம்" அப்படின்னான். "டேய் எனக்குத் தெரிஞ்சு ஓணானுக்கு இங்கிலீசுல Garden Lizardனு பேரு...நீ சொல்ற 'கிட்கிட்'ங்கிறது கலர் மாறுற பச்சோந்தி(Chameleon). சிவாஜி கோட்டையைப் புடிக்க உபயோகிச்சது உடும்பு(Iguana). அந்த உடும்போட தோலை வச்சித் தான் கஞ்சீராங்கிற இசை வாத்தியம் செய்யிறாங்க" அப்படின்னேன். இம்புட்டு நேரம் பக்கத்துல நின்னு கதை கேட்டுட்டு இருந்த என்னோட டீம் லீடு(தமிழ் காரர்) "இந்த டும்டும்டும்டும்னு கோயில்ல வேப்பிலை அடிக்கும் போது அடிப்பாங்களே அதுவா அப்படின்னு வெறுப்பேத்துனாரு". "ஐயோ அது உடுக்கைங்க...நான் சொல்றது கஞ்சீரா...இது கர்நாடக இசை வாத்தியம்" அப்படின்னேன். "என்னவோ போங்க Garden Lizard, Chameleon, Iguana, Comodo Dragonனு என்னென்னமோ சொல்றீங்க...ஒன்னும் புரியலை. இப்ப உடுக்கைக்கும் கஞ்சீராவுக்கும் நடுவுல வேற ஒரே கொழப்பம். நீங்க வேலை செய்யிற SAPல ஒன்னும் கொழப்பம் இல்லியே"அப்படின்னு சந்துல சிந்து பாடிட்டாரு.
"ஆஹா இன்னிக்கு நமக்கு நாளு சூப்பராத் தாண்டா விடிஞ்சிருக்கு"ன்னு நெனச்சிக்கிட்டேன். மொதல்ல முன்னழகைப் படம் புடிக்கப் போனவனைப் பின்னழகு படம் புடிக்க வச்சாரு வெவசாயிங்கிற எனிமி. அப்புறம் '16வயதினிலே' படத்துல கிராமத்துப் பசங்க அடிச்சி கொல்ற ஒரு சின்ன ஓணானை கோமோடோ டிராகன் லெவலுக்குக் கொண்டு போய் நம்மளை பேக்கு ஆக்குறான் இன்னொருத்தன். இந்த கொழப்பம் தீருறதுக்குள்ள ஓணான் தோலுல...சே உடும்பு தோலுல செய்யிறது உடுக்கையா கஞ்சீராவான்னு வேற ஒரே கன்ஃபியூசன். இந்த கொழப்பத்துக்கு எல்லாம் நடுவுல ஓணானின் விஷக்கடியையும் பொருட்படுத்தாமல் உசுரைப் பணயம் வச்சித் தான் படம் எல்லாம் எடுத்து போடறோம்...அதுனால லேசா நெனச்சிடாதீங்க. சரியா?
(பி.கு: தொடர்ச்சியா மூணு படப்பதிவுகள் போட்டதால இது ஒரு ஹாட் ட்ரிக் பதிவு. 'Hat Trick' உடைய தமிழாக்கம் தான் 'தொப்பி தந்திரம்'. 'ஆன்மீகப் பேரொளி சொல் ஒரு சொல்' அண்ணன் குமரன் தான் சொல்லனும் தந்திரத்துக்கு உகந்த தூய தமிழ் சொல் என்னன்னு? அதோட சொல் ஒரு சொல்லுலேருந்து சுட்டப் பழங்கள் இந்தப் பதிவுல எங்கே எங்கே என்ன என்ன இருக்குன்னு சரியா கண்டுபுடிச்சி சொன்னீங்கன்னா, கம்பெனியின் சார்பா சிறப்பு பம்பர் பரிசா ஒரு அழகிய கோமோடோ டிராகனும், தாளம் போட ஒரு கஞ்சீராவும் வழங்கப்படும்)
Thursday, July 27, 2006
கிறுக்கு புடிச்சுடுச்சு...
என்ன கிறுக்குன்னு ஒரு எட்டு வந்து பாத்தீங்கனாலே புரிஞ்சிடும்...
1. வந்ட்டாருடா வெண்ரு வெட்டுக்கிளி கண்ணால அவுட் ஆஃப் ஃபோகஸ் படம் புடிக்க...
2. சில்ஹுவெட் படம் ஜஸ்ட் மிஸ் மாமே
3. ஹி...ஹி...வெள்ளை கலர் செம்பா :)
4. பயலுங்களோட ஒரு "செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்"
5. நேட் ஜியோ பாக்குறியா அவுட் ஆப் ஃபோகஸ்ல?
6. கலர்ஃபுல்லா சிரிச்சா கொறஞ்சா போய்டுவே?
7. ஏபிசிடி உங்கொப்பன் தாடி
8. சீபியா டோனில் ஒரு மெகா சைஸ் சட்டி
9. மேகம் கொட்டட்டும்...
10. மழை பேஞ்சு ஊரெல்லாம் தண்ணி
11. ஹ்ம்ம்...இப்பிடி கேப்மாரித்தனம் செஞ்சாத் தான் பளாக் எல்லாம் படிக்க முடியுது :(
படத்தை எல்லாம் பாத்துட்டு உங்க ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியாவையும் சொல்லுங்க சாமிகளா...
Saturday, July 22, 2006
செம்பருத்தி விநாயகர்
புதுசா வாங்கின டிஜிட்டல் கேமராவுக்குப் பளாக்ல செம்பருத்தி விநாயகரோட பிள்ளையார் சுழி போடறேன். இங்கே க்ளையண்ட் ஆபீசுல வச்சிருக்கிற விநாயகர் சிலைக்கு தினமும் ஒரு பூ அலங்காரம் நடக்கும். இன்னிக்கு செம்பருத்தி பூவுக்கு சான்ஸ்.
டிஜிட்டல் கேமரா வாங்க ஆலோசனைகளை வழங்கிய நாகை சிவா, பேராசிரியர் கார்த்திக், ஜனா, ஐயப்பன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நான் வாங்குன கேமரா Canon Ixus750. இது வரைக்கும் எடுத்த படம் எல்லாம் நல்லா வந்திருக்கு.
கெஸ்ட அவுஸ் வெளியில தன்னுடைய வேலையைப் பாத்துட்டு இருக்குற குருவி. (சிட்டுக் குருவி இல்லப்பா!). இதோட பேரு என்னன்னு சொன்னீங்கன்னா நல்லாருக்கும்.
மரத்து மேல அனகோண்டா. ஆனா எங்களை எல்லாம் ஒன்னும் செய்யாதில்ல...ஹ...ஹ...ஹஹ்ஹ
ஒரு மழை நாள் இரவில் சுவற்றில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் அட்டை. ஈரத்தின் மீது ஊர்ந்து செல்வதினால் அது வாலுக்குப் பின்னாடி பாருங்க ஈரமும் ஊறு(ர்)கிறது.
இந்த படங்களை பதிவிறக்கம் செஞ்சு Photo Editor இல்ல வேற எதாச்சும் image editing softwareஇல் ஜூம் செஞ்சு பாத்தீங்கன்னா இன்னும் பெருசாத் தெளிவாத் தெரியும்.
மேலே இருக்குற குருவியை மட்டும் ஜூம் செஞ்சு கீழே இன்னொரு படம் போட்டிருக்கேன் பாருங்க.
கீழே இன்னொரு படம் போட்டிருக்கேன்னு எழுதிட்டு படத்தை ஏத்த முயற்சி பண்ணறேன்...ஏறவே மாட்டேங்குது. இந்த மாதிரி கப்பித் தனமா எதாச்சும் பண்ணிட்டு அசடு வழியறதுக்காகவே வெள்ளைக்காரன் சூப்பரா ஒரு வார்த்தை கண்டுபுடிச்சி வச்சிருக்குறான்...Oops!!!
ஊப்ஸுக்குக் காரணமா இருந்த அந்த குருவி படம் தான் மேலே நீங்க பாக்குறது. இதோட பேரு என்னன்னு யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்க.
நான் எடுக்க முயற்சி செய்யும் அவுட் ஆப் போகஸ் படங்கள் இந்த மாதிரியானவை.
Philly
Bokeh
யாராச்சும் விஷயம் தெரிஞ்சவங்க உதவி செஞ்சா நல்லாருக்கும்.
Tuesday, July 04, 2006
'வருத்தப்படாத' அப்பாவிற்கு...
இவ்வளவு நாள் வெறும் வருத்தப்படாத வாலிபராய் இருந்து நேற்றிரவு ஒரு பெண் குழந்தைக்குத் தந்தை ஆனதன் மூலம் 'வருத்தப்படாத அப்பா'வாகப் பதவி உயர்வு பெறும் வ.வா.ச.வின் போர்வாள் கை தேவிற்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய உளங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குட்டி பாப்பாவிற்கும் அங்கிளுடைய வாழ்த்துகள்.
Sunday, July 02, 2006
ஆறு போட கூப்புட்டாக
இத்தனை வருச சர்வீசுல நாம செஞ்ச சாதனைகளைப் பத்தி ஆறு ஆறா எழுதச் சொல்லி 'மனதின் ஓசை' ஹமீது கூப்புட்டாக, நம்ம விவசாயி இளா கூப்புட்டாக... இப்பிடியே இன்னும் ஒரு நாலு "கூப்புட்டாக" வரிசையாப் போட்டா ரைமிங்கா படிக்கிறதுக்கு நல்லாத் தான் இருக்கும். அதுக்குன்னு பொய்யாச் சொல்ல முடியும்? இல்ல அதெல்லாம் சொல்லித் தான் நமக்குப் பழக்கமா?(சரி...சரி :) அடங்குறேன்) நம்மளப் பத்தி நாமளே தமுக்கு அடிச்சிக்கிறதுக்குத் தானே இப்பிடி ப்ளாக்கைத் தொறந்து வச்சி கல்லாவுல ஒக்காந்துருக்கோம்? அதுக்குன்னே ரெண்டு பேரு வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கும் போது கசக்குமா என்ன? நம்ம பதிவுகள்ல எங்கேயாச்சும் எப்படியாச்சும் சொருவிடனும்னு நெனச்சி ஸ்டாக்ல வச்சிருந்த பைசா பொறாத சில பல வெசயங்களை,, 'அவுக கூப்புட்டாக'வை சாக்கா வெச்சி இப்ப இங்கே கொண்டாந்து கொட்டறேன். கொட்டறதுக்கு வழிவகை ஏற்படுத்தி கொடுத்த மாவீரன்'மனசின் மைக்செட்' ஹமீது, எம்.ஏ.எல்.எல்.பி அவர்களே, வேளாண் தமிழன் 'விவ்' ரிச்சர்ட்ஸ் அவர்களே...ஒங்க ரெண்டு பேத்துக்கும் டேங்ஸ்பா.
மொதல்ல என்னைப் பத்தி ஆறு
1. பேரு : பேருக்கா பஞ்சம்? சென்னையில் வாழும்/வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான மோகன்களின் ஒரே பட்டப்பேரான 'லூஸ் மோகன்', மேல் வீட்டு ஆண்ட்டி சூட்டிய 'மோகு', வடநாட்டில் 'வாக்கப்பட்ட' பாவத்துக்காக 'மோகன் பியாரே', ஸ்கூலில் 'மோசி', காலேஜில் 'மாம்ஸ்' அல்லது 'மோகனா', ப்ளாக்கில் கைப்புள்ள
2. ஊரு : பல நாளா வெளியூரு தான். ஆனா நாப்பது வருசத்துக்கும் மேலா சென்னையில இருந்து, செம்பரம்பாக்கம் தண்ணி குடிச்சாலும் தோப்பனார் இன்னும் தன்னோட ஊரு சிதம்பரம்னு தான் சொல்லிக்கிறாரு.
3. படிப்பு/வேலை : எந்த கட்டைவிரலால கைநாட்டு வச்சா செல்லும்னு தெரியுற அளவுக்கு இருக்குது/ப்ளாக் படிக்கிறதுக்கு நடுவுல வேலை செய்யறதுக்கு வெளியூருல ஒக்காத்தி வச்சு பஞ்சப்படி அளக்கற ஒரு வேலையும் இருக்குது.
4. கடவுள் : இருக்காரு. நம்மோட மனசாட்சியும் கடவுளும் ஒன்னு தான் என்பது பல நாள் நம்பிக்கையா இருந்துச்சு. அதாவது இறை வழிபாடு என்பது அவசியமானது இல்ல அப்படிங்கிற மாதிரி. கொஞ்சம் பெரியவனா ஆனதும், நமக்கும் மேல ஒரு சக்தி இருக்கு. அந்த சக்தியின் தாக்கத்தினாலும் அருளினாலும் தான் நம்முடைய மனசாட்சியும் நல்வழியில் இயங்கி நமக்கு நல்வழி காட்டுகிறது, அதனால் அந்த சக்தியை(supreme power) வழிபடுதல், நம் மனசாட்சியினை(conscience) நல்வழியில் இட்டுச் செல்லவும், நாம் நல்ல செயல்களைச் செய்யவும், நல்ல எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளவும் உதவும் என்ற அளவில் தற்போது உள்ளது என்னுடைய கடவுள் நம்பிக்கை.
5. கொளுகை : அவரும் இருக்காருங்க. அவங்கவங்க அவங்கவங்களோட 'சொந்த வியாபாரத்தைக்' கவனிச்சாலே எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம்ங்கிறது நம்ம கொளுகை. என்னைப் போல ஒருவனும் இல்லை என நான் எண்ணுவது எவ்வாறு தவறாகாதோ அதே போல அடுத்தவன் எண்ணுவதிலும் தவறில்லை என்ற எண்ணம் எந்நாளும் என் மனதில் இருக்க வேண்டும். என்னைப் போலவே அனைத்து மனிதர்களும் இருக்க முடியாது என்பதனால் தான் பல நிறங்களிலும், உருவங்களிலும், மொழிகளிலும், மதங்களிலுமான மனிதர்கள் இருக்கிறார்கள். என்னை எவ்வாறு(எனது அனைத்து குறை நிறைகளுடன்)அடுத்தவர்கள் பார்க்க வேண்டும் என நான் நினைக்கிறேனோ, அதே கண்ணோட்டத்தில் அடுத்தவனையும் நான் காண முற்பட வேண்டும். முடிந்தவரை அடுத்தவனிடம் உள்ள நல்லவற்றைக் கற்பதிலும் காப்பியடிப்பதிலும் தவறொன்றுமில்லை. யாருக்கும் அறிவுரை சொல்லும் அளவுக்கு நமக்கு அறிவு இல்ல, அதே சமயத்தில் அடுத்தவர் நமக்கு சொல்லும் அறிவுரையை நாம் கற்றுக் கொள்வதில்(சரியானதாக படும் பட்சத்தில்) குறைந்து விடமாட்டோம், அடுத்தவர் நம்மிடம் அறிவுரை கேட்டால், 'கேட்டால் மட்டுமே' நமக்கு சரியென தோன்றுவதைச் சொல்லுவது என்பது இன்னொரு கொளுகை.
6. கொசுறு: பலவிதமான எதிர்மறைகளால்(paradox) உருவாக்கப் பட்டவன். அசைவம் சாப்பிட்டாலும் ஆட்டையோ, கோழியையோ அறுப்பதைப் பார்க்கப் பிடிக்காதவன். உணவுக்காக ஒரு உயிர் கொலையாவதைப் பார்ப்பதைத் தவிர்க்க frozen foodஐ தேடி ஒரு சூப்பர் மார்க்கெட் போய் வாங்குவேனே ஒழிய அதை உண்பதை நிறுத்தாதவன். இவ்வாறாகப் பல paradoxகளின் கூட்டே அடியேன்.
ஒன்னும் பிரிலை இல்ல? எப்படி பிரியும்? அல்லாமே பெளாசாஃபியாச்சே? :). அய்யா சாமிங்ளா! இதை படிக்கிற புண்ணியவான்களே, இது வரைக்கும் படிச்சிட்டு போர் அடிக்குதுன்னு அப்படியே ஓடிப் போயிடாதீங்க. இன்னும் கொஞ்சூண்டு தான் இருக்கு, அதையும் படிச்சிருங்க. ப்ளீஸ்!
இளையராஜாவின் அறுசுவை
மீஜிக்கைப் பத்தி வாயைத் தொறந்தாலே இளையராஜா பேரு தான் வரணுமான்னு என்னை நானே கேட்டுக்கறதுண்டு. ஆனா அதுக்குப் பதிலும் ஒடனே கெடச்சிடும் இவரு பாட்டுகள்ல இருக்குற 'கிக்' வேற எங்கேயும் கெடக்கறதில்ல...அதான். காலேஜ் படிக்கும் போது, இளையராஜா பாடல்களின் சிறப்பைப் பத்தி பேசி பரவசப்பட்ட அனுபவங்களும் பல உண்டு, நானும் எனது தனிமையும் ராஜா பாடல்களினால் உணர்ச்சி வயப்பட்டு திக்குமுக்காடி நின்ற அனுபவங்களும் பல உண்டு. இசைஞானியின் இசையில் ஆறு வெவ்வேறு சுவைகளைப்(சுவை என்பதை mood என்ற பொருளில் கொள்க) பத்தி எழுதறேன்.
1. வெகுளித் தனம்(Innocence) - இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுகளில் ஒன்னு. சின்னப் பசங்க(வளர்சிதை பசங்க!) ஒரு தோப்புக்குள்ள டிராமா போட்டு வெளாடுற மாதிரியான ஒரு வித்தியாசமான பாட்டு. அவுங்களோட சின்ன சின்ன ஆசைகள், கனவுகள் இதெல்லாம் சொல்ற மாதிரி பாடல் வரிகள். படம் கல்லுக்குள் ஈரம். கேக்கும் போதே ஒரு உற்சாகம் வந்து தொற்றிக் கொள்ளும். இதே மாதிரியான இன்னொரு பாட்டு அழகி படத்துல வர்ற டமக்கு டமக்கு டம்.
Saturday, June 17, 2006
இல்லாத காதலிக்காக
கடந்த சில நாளா நமக்கு ஒரு ஆசைங்க. களுதை...இந்த காதல் கவிதை காதல் கவிதைங்கிறாங்களே...அதை ஒன்னாவது எப்படியாச்சும் எளுதிப் போடோணுங்கிறது தாங்க அது. ஊருக்குள்ர நாலு பேரு நம்மளை பெரிய மனுசன்னு மதிக்கத் தேவையில்ல? அதுக்குத் தாங்க. நியாயமான ஆசை தானுங்ளே? ஆனானப் பட்ட ப்ளாக்கையே நாம மேட்டரு இல்லாமல்லாம் எழுதும் போது, காதல் கவிதை எழுதறது என்ன பெரிய கம்ப சூத்திரம், அப்படியே புஸ்ஸுன்னு ஊதித் தள்ளிரலாம்னு மண்டைக்குள்ள ஒரே கொடச்சலு. ஆனா நம்ம கூட்டாளி ஒருத்தன் அப்பப்ப சொல்ற "ஆசை இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க"ங்கிற பொன்மொழியும் வேண்டாத நேரத்துல நெனப்பு வந்துருச்சு.
கழுதை மேய்க்க...சாரி தாசில் பண்ண ஆசை வந்துருச்சு, என்ன பண்ணா ஒத வாங்காம மேய்க்க முடியும்னு யோசிச்சப்போ, காதல் கவிதை எழுதியிருக்குற எடத்துலெல்லாம் வேவு பார்க்கறது, "கவிஞ்சருங்க" யூஸ் பண்ணற வார்த்தையை எல்லாம் பொறுக்கி வச்சிக்கிறது, கிளாசிகல் ஸ்டைல்ல காதல் கவிதை எழுதணும்னா தேனு, மானு, வேல்விழி, கொடியிடை அப்படின்னு போட்டுக்கறது, இதுவே ஆரம்ப காலத்து பழனிபாரதி ஸ்டைல்ல வேணும்னா எஃப் எம்,அனகோண்டா,தோனி,ரூனி இந்த மாதிரி பொது அறிவு விசயத்துக்கு நடு நடுவால is, was போட்டு எப்படியாச்சும் ஒரு உவம-உவமேயம்-உவமானம் குடுத்துக்கறது, காதல்ல பல்பு வாங்கினவரு எழுதற மாதிரி எழுதனும்னா கொலைகாரி, சதாம் உசேன், சொல்லடி, செய்யடி இப்படின்னு, நேரா யாரையாச்சும் பாத்து சொன்னா விளக்குமாத்துக்கு வலி எடுக்கச் செய்யற வார்த்தைங்களை எல்லாம் போட்டு தெகிரியமா எழுதறது, இதுவே கொஞ்சம் கில்மாவா எழுதனும்னா அல்வா, ரங்கோலி, உதட்டுச் சிவப்பு, கூலிங் கிளாஸ் இந்த மாதிரியான குளுகுளு வார்த்தைங்களைப் போட்டுக்கறது, அப்படி இப்படின்னு குத்துமதிப்பா சேர்த்தோம்னா காதல் கவிதை மாதிரி ஒன்னு எப்படியும் வந்துரும்...அத ப்ளாக்ல போட்டு 'பெரிய மனுசன்' ஆகிடலாம்னு ஒரு அதிரடித் திட்டம் தயாராச்சு.
ஆனா பாருங்க...நமக்கு சில்பான்ஸாத் தோனுன இந்த காதல் கவிதை எல்லம் எழுதறதுக்கு மெய்யாலுமே நெறைய கிட்னி வேணும் போலிருக்கு. கிளாசிகல், செமிகிளாசிகல், கண்டெம்பரரி, கில்மா இப்படின்னு அததுக்குமுரிய கலைச் சொற்களை எல்லாம் சேர்த்து வச்சும் கூட நம்மால ஒன்னியும் கிழிக்க முடியலை. சத்தியமா தாவு தீர்ந்துடுச்சுங்க சாமியோவ். சே...சே...இந்த பழம் புளிக்கும்னு காதல் கவிதை கடையை ஏற கட்டறதுக்கு முன்னாடி ஏற்கனவே பெரிய மனுசனுங்களா இருக்கறவங்க கிட்ட கடைசியா ஒரு தடவை உதவி கேக்கலாம்னு வரப்போரம் குந்தியிருந்தவரு கிட்ட போய் கேட்டா, அதெல்லாம் ரொம்ப சுலபமுங்க...தானா வருமுங்கன்னு எதோ குக்கர்லேருந்து ஆவி சுலபமா வர்ற மாதிரி சொன்னாரு. கச்சேரி நடத்துறவரு, காதல் கவிதை எழுதறதுக்கெல்லாம் ஆட்டீன்(இதயம்ங்க...இது கூடவா புரியல்ல?) வேணும் அப்படின்னு நம்மளை "Iam a bad man" ரேஞ்சுக்கு கலாய்ச்சி விட்டுட்டாரு. என்னடா இந்த மதுரைக்கு வந்த சோதனை...ஆஃப்டரால் ஒரு காதல் கவிதை கூட நம்மால எழுத முடியலை அப்படின்னு சோர்ந்து போய் உக்காந்துட மாட்டேன் மகாஜனங்களே! உங்கள் கலாய்ப்புகளுக்குப் பாத்திரமான கைப்புள்ளயால ஒரு ருபையத்தையோ, ஒரு மேகதூதத்தையோ, இல்ல ஒரு ஜில்ஜில் நானூறையோ எழுத முடியா விட்டாலும் எங்கேருந்தாவது சுட்டாச்சும் சில காதல் கவிதைகளை உங்களுக்காக...கவனிக்க உங்களுக்காண்டி போட பாடுபடுவான். பாடுபடுவான் என்ன பாடுபடுவான்... பாடுபட்டுட்டான்யா... பாடுபட்டுட்டான்யா.
நான் இன்னிக்கு நாட்டு மக்களுக்காக கொண்டாந்திருக்குற காதல் கவிதைங்க சாதாரணமானது கிடையாதுங்க(நான் எழுதலியே...அதனால தான்..ஹி ஹி). காதல்னு சொன்னதும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் ஒரு மென்மையான மெல்லிதான உணர்வு தான் ஞாபகத்துக்கு வரும். ஆனா பக்தி நெறியிலயும் இந்த காதலோட பங்கு இருக்குன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். தன்னை காதலியாகவும் இறைவனைக் காதலனாகவும் உருவகப்படுத்திக்கிட்டு பலரும் பல பாடல்களைப் பாடியிருக்காங்க. முண்டாசு கவிஞர் தன்னை ஒரு பெண்ணா உருவகப்படுத்திக் கொண்டு கண்ணனைத் தன் காதலனா நினைச்சு எழுதுன இந்த பாடலைப் பாருங்க.
கண்ணன் - என் காதலன்
தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக - எனது
நெஞ்சந் துடித்த தடீ!
கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம் - மனது
வெறுத்து விட்டதடீ!
பாயின் மிசை நானும் - தனியே
படுத் திருக்கை யிலே,
தாயினைக் கண்டாலும் - சகியே!
சலிப்பு வந்த தடீ!
வாயினில் வந்ததெல்லாம் - சகியே!
வளர்த்துப் பேசிடுவீர்;
நோயினைப் போலஞ் சினேன்; - சகியே!
நுங்க ளுறவை யெல் லாம்
உணவு செல்லவில்லை; - சகியே!
உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை; - சகியே!
மலர் பிடிக்க வில்லை;
குண முறுதி யில்லை; - எதிலும்
குழப்பம் வந்த தடீ!
கணமும் உளத்திலே - சுகமே
காணக் கிடைத்ததில்லை
பாலுங் கசந்தடீ தடீ! - சகியே!
படுக்கை நொந்த தடீ!
கோலக் கிளிமொழியும் - செவியில்
குத்த லெடுத்த தடீ!
நாலு வயித்தியரும் - இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்;
பாலத்துச் சோசியனும் - கிரகம்
படுத்து மென்று விட்டான்
கனவு கண்டதிலே - ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்க வில்லை - எவனோ
என்னகந் தொட்டு விட்டான்.
வினவக் கண்விழித்தேன்; - சகியே!
மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே - புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ!
உச்சி குளிர்ந்ததடீ! - சகியே!
உடம்பு நேராச்சு,
மச்சிலும் வீடுமெல்லாம் - முன்னைப்போல்
மனத்துக் கொத்ததடீ!
இச்சை பிறந்ததடீ! - எதிலும்
இன்பம் விளைளந்ததடீ!
அச்ச மொழிந்ததடீ! - சகியே!
அழகு வந்ததடீ!
எண்ணும் பொழுதி லெல்லாம் - அவன்கை
இட்ட விடத்தினிலே!
தண்ணென் றிருந்ததடீ! - புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்; - அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் - அங்ஙனே
கண்ணின் முன் நின்றதடீ!
பல நாளாய் காணாதத் தன் தலைவனானக் கண்ணனை நினைந்து வருந்தி, தன் தோழியிடம் முறையிடும் ஒரு பெண்ணின் வாய்மொழியாய் அமைந்துள்ளது இப்பாடல். இறைவனின் திருவடியை அடைவது குறித்தானக் கவிஞரின் மன வெளிப்பாடே இதில் சொல்லப் பட்டிருக்கும் உட்கருத்து. பல வருடங்கள் கழித்து அழகு தமிழில் ஒரு எளிய பாடலைப் படித்ததும் மகிழ்ச்சி மேலிட்டது. உங்களுக்கும் பிடித்திருக்குமென நினைக்கிறேன். பாரதியாரின் கண்ணன் பாட்டை இங்கு வாசிக்கலாம்.
"வாரணமாயிரம்" என்ற ஆண்டாள் பாசுரப் பாடலை கேளடி கண்மணி படத்தில் தான் முதன்முதலாய்க் கேட்டேன். இசைஞானி வெகு அருமையாக இசையமைத்திருப்பார். இசையுடன் இப்பாடலை முதலில் கேட்க நேரிட்டதால் இப்போது இப்பாடலைப் படிக்கும் போது கூட இசையோடு சேர்ந்து தான் படிக்கிறேன். இறைவனுடனான தன்னுடைய திருமணக் கோலத்தை எண்ணி மகிழும் ஆண்டாளின் இப்பாசுரத்தையும் மேலும் பல பாசுரங்களையும் இங்கு காணலாம்.
வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்
நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான்
இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்
நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்
கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்
மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்
வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்
குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்
ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே
மேலே உள்ள பாடலில் இந்த 'அந்தரி', 'வரிசந்தம்' இச்சொற்களுக்குப் பொருள் யாருக்காச்சும் தெரிஞ்சாச் சொல்லுங்க.
கடைசியாக சுஃபி குருவான கபீர்தாஸ் 'வ்ரஜ் பாஷா' என்ற வட்டார வழக்கில் பாடிய 'தோஹா' (தமிழில் இரண்டடியார், ஆங்கிலத்தில் கப்லெட் 'Couplet')ஒன்றைக் காணலாம். நெசவாளரான கபீர்தாஸ் முறையான கல்வி இல்லாதவர், தானறிந்த ஞானக் கருத்துகளை இரண்டடிகளாக அவர் பாடுவதை, அவரது சீடர்கள் கேட்டு எழுதி வைத்துள்ளது தான் இன்று தோஹாக்களாக உள்ள இப்பாடல்கள். இறைவனின் பெருமைகளை அறிந்து அதை பாடுபவராக இருந்த போதிலும், கபீர்தாஸ் உருவ வழிபாட்டிலும், இறைவனின் பல்வேறு வடிவங்களிலும் நம்பிக்கையற்றவர். அவரைப் பொறுத்தமட்டிலும் இறைவன் 'நிற்குண' வடிவமானவன்.(Nirguna - attributeless). அவ்வாறு தன்னுள் இரண்டறக் கலந்திருக்கும் இறைவனைத் தன் காதலனாக உருவகப்படுத்தி அவர் பாடிய ஒரு பாடல்.
"ப்ரீத்தம் கோ பதியான் லிகூன் ஜோ கஹு ஹோய் விதேஸ்
தன்மே மன்மே நைன்மே வாகோ காஹே சந்தேஸ்"
இதன் பொருள் "என்னை விட்டு நீ பிரிந்திருந்தால் தலைவா என் உள்ளக்கருத்தை எடுத்துரைக்க உனக்கு மடல் வரைய இயலும், ஆயின் என்னுள் ஊனாய் உயிராய்க் கலந்துள்ளவனே உனக்கு என்ன மடல் நான் வரைய?"
Saturday, June 10, 2006
பைத்தியக்காரத் தவளையும் பாப்கார்னும்
சில பழைய விஷயங்களை...நாம ஒரு காலத்துல ரொம்பவே ரசிச்ச விஷயங்களை...கால ஓட்டத்துல நாம மறந்து போன விஷயங்களை...எங்கேயாச்சும் எப்பவாச்சும் திரும்ப நினைவு படுத்திப் பார்க்கும் போது ஒரு சந்தோஷம் வரும் பாருங்க...அதை என்னன்னு சொல்ல? இந்த விஷயம் எதுவா வேணா இருக்கலாங்க...ஒரு திரைப்படமாவோ, நண்பர் ஒருத்தரு நமக்கு எப்பவோ செஞ்ச ஒரு உதவியாவோ...குடும்பமா போன ஒரு சுற்றுலாவோ, இல்லை எதோ ஒரு சில்லறை விஷயமாக் கூட இருக்கலாம். அப்படி என்னத்த கண்டுட்டு இப்பிடி குதிச்சிட்டிருக்கேன்?
இன்னிக்கு காலையிலே ஆபீசு கெளம்பும் போது ஜீ மியூசிக் சேனல்ல ஒரு பாட்டு (பாட்டுன்னு சொல்ல கூடாது - இன்ஸ்ட்ருமெண்டல் இசை) கேட்டேங்க. அந்த இசையைச் சின்ன வயசுல கேட்ட ஞாபகம். அடிக்கடி நம்ம சென்னை தொலைக்காட்சி நிலையத்துல அந்த இசை வரும். பல முறை அதை கேட்டிருந்தாலும், அதை நான் அப்பத்துலேருந்து ரசிச்சிருக்கேங்கிறதை இன்னிக்குத் தான் உணர முடிஞ்சுது. நான் கேட்ட அந்த ஆல்பத்தோட பேரு "பைத்தியகார தவளையோட பாப்கார்ன்" (ஹி...ஹி...Popcorn by "Crazy Frog"என்பதோட தமிழாக்கம் தான் அது). இந்த ஆல்பத்தை 3டி அனிமேஷனோட டிவியில பாக்க நல்லாருந்துச்சு. கையைக் காலை ஆட்ட வைக்கிற துள்ளல் இசை. கேட்டுப் பாருங்களேன்...அட இதுவான்னு தோணும்.
நாம சின்னப் பையனா கேட்ட இசை இதுன்னா கண்டிப்பா ரீமிக்ஸாத் தான் இருக்கும்னு நினைச்சு கூகிளாடியதில் தெரிஞ்சது - பாப்கார்ன் என்றழைக்கப்படும் இந்த ஆல்பம் கெர்ஷான் கிங்ஸ்லி என்ற இசையமைப்பாளரால் 1969ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இசைக்கும் கணினிக்கும் சம்பந்தம் இல்லாதிருந்த அக்காலத்தில், கணினி மூலம் உருவாக்கப் பெற்ற இசையாக இது அறியப் பெறுகிறது. கிங்ஸ்லீ உருவாக்கிய ஒரிஜினலின் சின்ன பிட் கீழே.
அதன் பிறகு பல்வேறு இசையாளுநர்களால் எடுத்தாளப்பட்டு வெவ்வேறு வடிவங்களில் இவ்வால்பம் வெளிவந்துள்ளது. பல்வேறு விளம்பரங்களிலும் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. மேலே உள்ள பைத்தியக்காரத் தவளையின்(Crazy Frog) ரீமிக்ஸ் 2005இல் வெளிவந்தது. பூம்டேன்(Boomtan) என்ற இன்னுமொரு குழுவின் கைவண்ணத்தில் 2002இல் வெளியான இசை கீழே.
மேலும் விபரங்களுக்கு இருக்கவே இருக்கு நம்ம விகிபீடியா. இங்கேயும் பாருங்க
Monday, June 05, 2006
மீள்பதிவுங்ணா
நமக்கு ரொம்ப நாளா ஒரு ஆசைங்ண்ணா...இந்த மீள்பதிவு மீள்பதிவுன்னு சொல்றாங்களே...அது ஒன்னாச்சும் நம்ம வலைப்பூ வாழ்க்கையிலே எழுதிரணும்னு. எதுக்கு எனக்கு இந்த மாதிரி ஆசையெல்லாம்னு கேக்கிறீங்க...அதானே? தமிழ் வலைப்பூவை எல்லாம் படிக்க ஆரம்பிச்ச புதுசுல...இந்த பின்னூட்டம்னா என்னன்னு தெரிஞ்சிக்கிறதுக்கே ரொம்ப கஷ்டப் பட்டேன். பின்னூட்டத்துக்கு அர்த்தம் தெரிஞ்சதும், திடீர்னு மீள்பதிவு நம்ம கண்ணு முன்னால வந்து நிக்குறாரு. மீள்பதிவுன்னா இன்னான்னு தெரிஞ்சதும் - இந்த மைக்கேல் மதன காமராஜன் படத்துல தீயணைப்பு வீரரா வர்ற ராஜன் சொல்லுவாரே - "சோக்கா சொன்னய்யா...கேச் மை பாயிண்ட்...நானும் இதையெல்லாம் அப்பப்ப யூஸ் பண்ணறேன்"னு... அது மாதிரி ஒரு அல்ப ஆசை வந்து நம்மளை பாடாப் படுத்துது. முன்னே ஒரு தரம் கஷ்டப் பட்டு மீள்பதிவு எழுதுன போது, நம்ம ஆசையை நிரைவேத்திக்காம கோட்டை விட்டுட்டேன். ஆனா இந்த தடவை அந்த மாதிரி மிஸ்டேக் நடக்காது. அதனால பல்லாயிரக் கணக்கான நேயர்களின் விருப்பத்திற்கிணங்க நானே கஷ்டப்பட்டு எளுதுன ஒரு மீள்பதிவு...அதுவும் இங்கிலிபீசுல.
இது நான் சின்னப்பில்லயா இருக்கறச்சே எழுதுனது...கீழே அதோட சுட்டி இருக்குது...
ஏழு ரூபா பில்லு
முழுசையும் படிக்கிற அளவுக்குப் பொறுமை இருக்குறவங்க படிச்சிட்டு அங்கேயே மொத்தலாம்...இல்லை இங்கே வந்தும் மொத்தலாம். அப்பா...ஒரு மீள்பதிவு எழுதியாச்சு.
Friday, June 02, 2006
ஹே! காயத்ரி...
வா.மணிகண்டன் தன்னோட பேசலாம்ல நேத்து ஒரு சோக்கு சொல்லியிருந்தாரு. அதப் படிச்சி சிரிச்சிட்டு கீழே பாத்தா நம்ம தளபதி போதும் போதும்ங்கிற அளவுக்குக் கொம்பை நட்டு சங்கத்து கொடியை ஏத்திட்டிருக்காரு...ஒரே நேரத்துல ரெண்டு வருத்தப்படாத வாலிபர்களை(!) சமாளிக்கிறது அவருக்குக் கஷ்டம்னு நெனச்சி அந்நேரத்துக்கு ஜூட்டு வுட்டுக்கிட்டேன் :)- இன்னிக்கு காலையில என்னோட செல்போன்ல இருந்த பழைய எஸ்.எம்.எஸ்சை எல்லாம் அழிக்கும் போது, மணிகண்டனோட பதிவுல படிச்சது போலவே ஒரு எஸ்.எம்.எஸ் சிக்குச்சு. அது என்னாங்குறீங்களா?
நாலு கோவமான எறும்புங்க(Angry young ants) ஒரு காட்டுப் பாதையில போயிட்டிருக்காம். அதுங்க கண்ணுல ஒரு யானை மாட்டுதாம்.
முதல் எறும்பு கேக்குதாம்"டேய்! நான் அவன் காலை ஒடச்சிடவா?"
ரெண்டாவது எறும்பு சொல்லுதாம்"இல்ல மச்சான்! அவன் தும்பிக்கையைப் புடுங்கிடலாம்"
இதை கேட்டுட்டு மூணாவது எறும்பு சொல்லுதாம்"வேணாண்டா மாப்ளே! அவன் வயித்துல குத்தலாம்டா"
நாலாவது எறும்பு என்ன சொல்லியிருக்கும்னு நெனக்கிறீங்க?
என்னது தெரியலியா...அட உண்மையிலேயே தெரியலீங்களா?
நாலாவது எறும்பு சொல்லுச்சாம்"விடுங்கடா! நாம நாலு பேரு...அவன் ஒருத்தன்...பொழச்சுப் போட்டும்".
தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லியேன்னு கேக்கிறீங்களா? இந்த மாதிரி விசயத்துல எல்லாம் படு ஸார்ப்பா இருப்பீங்களே? ஒங்களை ஏமாத்த முடியுமா...
"ஹே! காயத்ரி! என்னயா...காலேஜ் விட்டதும் தனியாப் பேசணும்னு சொன்னியே? என்ன விஷயம்?"
"ஆமாம்யா..."
"ஹ்ம்ம்...என்னடா சொல்லு...உன் முகமெல்லாம் வாடியிருக்கு...எனிதிங் ராங்?"
"எப்படி சொல்றதுன்னு தெரியல்ல யா"
"என்ன காயூ...சொல்லு...எதாச்சும் லவ்...பாய்ஃபிரெண்ட்... அப்படின்னு..."
"சே...சே! அப்படியெல்லாம் ஒன்னுமில்லை யா..."
"அப்புறம் என்னடா?"
"ஃபாத்திமா! ஒனக்குத் தெரியாதது இல்ல...என்னோட கனவு லட்சியம் எல்லாம் காயத்ரி ஐ.ஏ.எஸ்னு என் பேருக்குப் பின்னாடி வரப் போற அந்த மூணு எழுத்து தான்...அதுக்காக நான் படற கஷ்டமெல்லாமும் ஒனக்குத் தெரியும்"
"சரி...அதுக்கு என்ன இப்போ?"
"அந்த கனவு பொய்யாயிடுமோன்னு எனக்கு கவலையாயிருக்குது யா...என்ன ஒருத்தன் ஒரு வாரமா ஃபாலோ பண்ணி தெனமும் தொல்லை குடுத்துட்டே இருக்கான்"
"சே! இவ்வளவு தானா? நீ அவனை இக்னோர் பண்ணிட்டு ஒன் பாட்டுக்கு ஒன் வேலையைப் பாத்துட்டே இரு"
"இல்லை ஃபாத்ஸ்...அவன் நான் போற எடமெல்லாம் என் பின்னாடியே வரான்...மோசமா கமெண்ட்ஸ் வேற பாஸ் பண்ணறான்பா"
"ஸ்கவுண்டிரல்ஸ்! நீ என் கூட வா... நான் வந்து அவனை நாலு கேள்வி கேக்கறேன்."
"வேணாம்யா! அவன் கிட்ட போக வேணாம்...அவனும் அவன் லேங்குவேஜும்...பாத்தா பெரிய ரவுடி மாதிரி வேற இருக்கான்"
"சே! உன்னை மாதிரி பயந்தாங்கொள்ளிங்க இருக்குறதுனால தான், செய்யறதை எல்லாத்தையும் செஞ்சிட்டு... தீஸ் ரோக்ஸ் ஆர் ரோமிங் ஸ்காட் ஃப்ரீ"
"நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு யா...அவன் எவ்வளோ மோசமானவன்னு ஒனக்குத் தெரியாது...நேத்து செமிகண்டக்டர் கிளாஸ் முடிய லேட் ஆயிடுச்சு...ஈவினிங் சிக்ஸ் பி.எம், நான் பஸ் ஸ்டாப்ல பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கும் போது...அவன் என் பக்கத்துல வந்து நின்னுட்டு...ஏதேதோ பேச ஆரம்பிச்சிட்டான்...இதப் பாருங்க இந்த மாதிரி பேச்செல்லாம் என்கிட்ட பேசாதீங்கன்னு சொன்னேன்...ஆனாலும் அவன் கேக்கலை...விசில்...சினிமா பாட்டு...கமெண்ட்ஸ் அப்படின்னு ரொம்ப டார்ச்சர் பண்ணான். அப்புறம் பஸ் வந்ததும் என் பின்னாடியே அவனும் ஏறுனான்...அப்புறம்...அப்புறம்... வந்து... வந்து... புஹூ...ஹூ"
"அழாதேடா காயூ...என்ன நடந்துதுன்னு சொல்லு"
"...புஹூ...ஹூ...ஐ லவ் யூ டா செல்லம்னு சொன்னான் யா...இன் ஃப்ரண்ட் ஆஃப் ஸோ மெனி பீப்பிள்"
"நீ அந்த ரேஸ்கலைச் சும்மாவா விட்ட? அங்கேயே செருப்பைக் களட்டி அவனை அடிச்சிருக்க வேணாம்? சே...இவனுங்கல்லாம் அக்கா தங்கச்சியோட பொறந்திருக்க மாட்டானுங்க?"
"இல்ல ஃபாத்ஸ்..."
"என்ன இல்ல ஃபாத்ஸ்?"
"..ஹூ..ஹூ...அவன் சொல்ற படியெல்லாம் கேக்கலைன்னா என் தங்கச்சி மாலதியையும் இதே மாதிரி ஃபாலோ பண்ணுவேன்னு மெரட்டனான்யா. அவச் சின்னப் பொண்ணு...இதெல்லாம் தாங்க மாட்டா...எங்க வீட்டுல ஜெண்ட்ஸ் யாரும் இல்லன்னு தெரிஞ்சிட்டு வீட்டு வரைக்கும் வேற வரான்...அதான் இது என்னோடேயே போகட்டும்னு..."
"திஸ் இஸ் இட்! திஸ் இஸ் தி லிமிட்!! ஸச் கேரக்டர்ஸ் டிஸர்வ் டு பீ பீட்டன் டு டெத்!!! நீ ஒன்னும் கவலை படாதே காயூடா...நாளைக்கு நான் எங்க பெரிய அண்ணன் தாஹிர் கிட்டச் சொல்லி, உன்னை ஃபாலோ பண்ணறவனை நல்லா கவனிக்கச் சொல்றேன்"
"எனக்கு ரொம்ப பயமாயிருக்கு யா"
"ஒனக்கு என்ன பயம்டா?...நான் இருக்கேன்...அவன் எப்படி இருப்பான் எங்கே இருப்பான்னு மட்டும் சொல்லு"
"அதோ பாரு...அங்கே விசில் அடிச்சிட்டு வேகமாப் போயிட்டிருக்கானே... அவனே தான்"
"ஹே! காயூ....வா...வா...நாம இப்போதைக்கு இங்கேருந்து போயிரலாம்...நீ சொல்லும் போது கூட நான் நம்பலை...பாத்தா பொறுக்கியாட்டம் தான் இருக்கான்"


