Wednesday, March 18, 2009

பட்டர்ஃப்ளை வைத்த ஆப்பு

ஆப்புகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம். டேமேஜர் ஆப்பு வைக்கிறதை பத்தி கேள்வி பட்டுருப்பீங்க, ஸ்கூல்ல டீச்சர் ஆப்பு வைக்கிறதை பத்தி கேள்வி பட்டிருப்பீங்க. பட்டர்ஃப்ளையினால் ஆப்பு வைக்கப் பட்டவனைப் பத்தி கேள்வி பட்டிருக்கீங்களா? இன்னிக்கு கேள்வி படுங்க.

என் வாழ்க்கையில் முதன் முதலா நான் நேர்காணல் எடுத்த நாள் நேத்திக்கு. அப்பா...இதையும் பதிவு பண்ணி வச்சாச்சு. நான் இப்போ இருக்கற ப்ராஜெக்டுல சில புதிய தேவைகள் இருப்பதால், ஒரு CVயைக் கொடுத்து தொலைபேசி நேர்காணல் எடுக்கச் சொன்னார் எங்க ப்ராஜெக்ட் மேனேஜர். உண்மையைச் சொல்லப் போனா நேர்காணல் எடுக்கனும்னு சொன்னதுமே ஒரு படபடப்பு. வழக்கம் போல "இது முதன்முறையாச்சே" அப்படீங்கற ஸ்டார்ட்டிங் டிரபிள் தான். நேத்திக்குத் தான் முதன்முதலா நேர்காணல் எடுத்தேன்னாலும் எப்படி எடுக்கனும்னு கேட்டுத் தெரிஞ்சும் ஓரளவு படிச்சும் வச்சிருந்தேன். நேர்காணல் எடுக்கும் போது எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு கேள்வி கேப்பவரை எப்படி நாம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். கேள்விகளைக் கேட்டு எப்படி மடக்கலாம் என நினைத்து நேர்காணல் எடுப்பவரிடம் நம்முடைய புத்திசாலித் தனத்தை எல்லாம் காட்ட வேண்டும் என்று நினைத்தால் இழப்பு நம்முடையது தான்னு எங்கேயோ படிச்சிருக்கேன். இதையெல்லாம் நினைவு படுத்திக் கொண்டு CVயில் கொடுக்கப் பட்டிருந்த செல்பேசி எண்ணை அழைத்தேன். அந்த நபர் ஏற்கனவே எங்கள் நிறுவன ஊழியர் என்பதால், எங்கள் ப்ராஜெக்டுக்கு அவர் தகுதியானவர் தானா என்பதை முடிவு செய்யும் பொறுப்பு மட்டுமே எனது. ஆகையால் எல்லோரும் வழக்கமாகக் கேட்கும் "Tell me about yourself" என்ற கேள்வி கேட்க வேண்டிய தேவை இருக்கவில்லை. முந்தைய பணியிடங்களில் அவருடைய அனுபவத்தைப் பற்றிக் கேட்டுக் கொண்டு SAP பற்றிய எனக்கு தெரிந்த கேள்விகளைக் கேட்கத் தொடங்கினேன்.

ஓரிரு கேள்விகளுக்குச் சரியான பதில் சொன்னார் என்றாலும், பெரும்பாலான கேள்விகளுக்கு அவருக்கு விடை தெரிந்திருக்க வில்லை. ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும், அவரை எங்கள் ப்ராஜெக்டில் அமர்த்தினால் விரைவாகக் கற்றுக் கொண்டு செயல்படுவார் என்ற நம்பிக்கையை அவர் எனக்கு நேர்காணலின் போது ஊட்டவில்லை. அதற்குண்டான ஆர்வமும் அவரிடம் இருந்ததாகத் தெரியவில்லை. "தொன்னூறு நாட்களாக பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறேன். புதிதாக எங்களுக்குக் குழந்தை பிறந்திருப்பதால் என்னுடைய நிலை க்ரிடிகலாக இருக்கிறது, அதனால் உங்கள் ப்ராஜெக்டில் சேர நான் ஆர்வம் உள்ளவனாக இருக்கிறேன்" என்று மட்டும் தெரிவித்தார். அவர் கூறியதைக் கேட்டு பரிதாபப்பட முடிந்தது என்றாலும் அவர் எங்கள் ப்ராஜெக்டுக்குத் தகுதியானவர் இல்லை என்பது மட்டும் நேர்காணல் எடுத்து முடிக்கும் போது தெரிந்தது. "இந்நேர்காணலைப் பற்றி உங்களுடைய ஃபீட்பேக் என்ன?" என்று என்னை கேட்டார். முதல்முறை என்பதால் என்ன சொல்வது என எனக்கு தெரியவில்லை. "We will let you know" என்று முடித்து விட்டேன். "உங்களை நீங்களே இன்னும் நன்றாக நேர்காணலுக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று உபயோகமான ஒரு ஃபீட்பேக் கொடுத்திருக்கலாமோ என்று பின்னர் தான் எனக்கு உரைத்தது. நேர்காணல் எடுப்பது எனக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்தது. அதன் மூலமாக நேர்காணல் எடுப்பவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று ஓரளவு தெரிந்து கொள்ளவும் முடிந்தது. உங்களுடைய நேர்காணல் அனுபவங்களையும் டிப்ஸ்களையும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

வழக்கமாக பைக் ஓட்டும் போது மனதில் எந்த விதமான சிந்தனைகளும் இருக்காது. ஆனால் ஓரிரு நாட்களாக வண்டி ஓட்டும் போது வேறு சில சிந்தனைகள் மனதில் ஓடுகின்றன. நேற்று மாலை அலுவலகத்தில் இருந்து திரும்பும் போது மேலே நேர்காணல் எடுத்த அனுபவத்தை மனதில் அசைபோட்டுக் கொண்டே வண்டி ஓட்டி வந்தேன். வருத்தப்பட்டாத வாலிபர் சங்கத்தில் நேற்று காலையிட்ட 501வது பதிவு, அப்பதிவு ஐம்பது அடிக்குமா அடிக்காதா, எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்துள்ள நாகை சிவா, ஜி.ரா அவர்கள் அன்புக்கிணங்க என்ன பதிவு போடுவது இப்படியாகப் பலவாறு யோசித்துக் கொண்டே ராமாபுரத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து கிண்டியைத் தாண்டி அடையாறு மத்திய கைலாஷ் சிக்னல் வரை வந்துவிட்டேன். சிக்னலிலிருந்து நான் வலது புறம் திரும்ப வேண்டும். எனக்கு முன்னாடியுள்ள வண்டிகள் திரும்பிக் கொண்டிருக்க நானும் திரும்பினேன். அப்போது தான் கவனித்தேன் எதிர்புறத்திலிருந்து வாகனங்கள் புறப்பட்டு வருவதை. எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரை ஒரு போக்குவரத்து காவலர் நிறுத்தினார். காருக்குப் பின்னாடி வந்து கொண்டிருந்த என்னை சார்ஜெண்ட் ஒருவர் கைகாட்டி நிறுத்தினார். தன்னருகே வருமாறு அழைத்தார். நான் அருகில் சென்றதும் என் பைக்கில் இருந்து சாவியை உருவி கையில் எடுத்துக் கொண்டார். "ஏன் சிக்னல் ஜம்ப் பண்ணீங்க? வந்து ஃபைன் கட்டுங்க" என்றார். "சாரி சார்" என்றேன். "லைசன்ஸ் எடுங்க" என்றார். கொடுத்தேன். "எங்கே வேலை செய்யறீங்க" என்றார். கம்பெனி என்ன என்றும் என் வேலை என்றும் சொல்லாமல் "ராமாபுரத்தில் சார்" என்றேன். என் போதாத நேரம் கழுத்தில் ஐடி கார்டு தொங்கிக் கொண்டிருந்தது. அவர் அதை பார்த்து விட்டார். "சிக்னல் ஜம்ப் பண்ணதுக்கு ஃபைன் ஆயிரத்து ஐம்பது ரூபாய்" என்றார். மறுபடியும் "சாரி சார்" இது நான். "ஃபைன் இங்கே கட்டறீங்களா? இல்லை கோர்ட்டுல கட்டறீங்களா?" என்றார். "சார் ஃபர்ஸ்ட் டைம் சார், கவனிக்காம வந்துட்டேன்" என்றேன். "கவனிக்காம வந்ததுக்கு தாங்க சார் ஃபைன்" என்றார். மறுபடியும் "ஃபர்ஸ்ட் டைம் சார், சாரி சார்" என்றேன். "ஃபைவ் ஃபிப்டி குடுத்துட்டு எடுத்துட்டு போங்க" என்றார். ஐநூறைக் கொடுத்து விட்டு ஐம்பதை தேடிக் கொண்டிருந்தேன். "பரவால்லை எடுத்துட்டு போங்க" என்று ரிசெஷனை முன்னிட்டு பத்து சதவீதம் சிறப்புத் தள்ளுபடி கொடுத்தார்.

வீட்டுக்கு வந்ததும் என் தம்பி நல்லா திட்டுனான். "மாங்கா மாதிரி ஐடி கார்டை மாட்டிக்கிட்டு வண்டி ஓட்டுவியா? நீ சாஃப்ட்வேர் ஆளுன்னு தெரிஞ்சிக்கிட்டு ஐநூறு ரூவா தாளிச்சிட்டாங்க. மத்தவங்கன்னா மேக்சிமமே முன்னூறு ரூவா தான்"அப்படின்னான். என்ன இருந்தாலும் தப்பு செஞ்சதுனால தான் தண்டம் கட்டுனேன்ற திருப்தி எனக்கிருக்கு:) அப்படி "தூ"ன்னு டீசெண்டா துப்பிட்டு போற வழியைப் பாருங்க. இப்ப எனக்கே துப்பனும் போல தான் இருக்கு. ப்ளாக்ல உக்காந்துக்கிட்டு "உத்தம புத்திரன்" மாதிரி பேசுறதுங்கிறது வேற. ஆனா நமக்குன்னு வரும் போது நாம நடந்துக்கற விதம்ங்கிறது வேற. தசாவதாரம் படம் மாதிரி... பட்டாம்பூச்சி விருதை ப்ளாக்ல போடறதுக்காக போலீஸ் கிட்ட கப்பம் கட்டி "பட்டர்ப்ஃளை எஃபெக்ட்"னா என்னன்னு ஒரு பாடமும் கத்துக்கிட்டேன். உன் முட்டாள் தனத்துக்கு ஏண்டா பட்டாம்பூச்சி விருதைக் காரணம் சொல்லறேன்னு விருது கொடுத்த புலியும், ஜி.ரா வும் கண்டிப்பா கேப்பாங்க. அவங்க கிட்ட மாப்பு கேட்டுக்கிட்டு அவங்க அன்புக்குத் தலை வணங்கி அவங்க குடுத்த விருதை சந்தோஷமா போட்டுக்கிடறேன். ஆனா எனக்கு ஒரு சந்தேகமும் இருக்கு...சங்கத்து 501வது பதிவைப் பாத்த கையோட ஒருத்தரு காலங்காத்தால பல்லு கூட வெளக்காம யாரோ ஒரு மலையாள மாந்த்ரீகரை வச்சி எதாச்சும் சாத்தானை ஏவி விட்டுருக்காங்களோன்னும் அந்த சாத்தான் தான் சார்ஜெண்டா வந்திருச்சோன்னும் எனக்கு கொஞ்சம் சந்தேகமாவே இருக்கு.


நான் பட்டாம்பூச்சி விருது கொடுக்க விரும்பும் மூவர்.

1. வெட்டிப்பயல்
2. கப்பி பய
3. நீங்க ஆதவன்


1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

Sunday, March 08, 2009

நினைவு மீட்டல்:தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்கள்

"ராமகிருஷ்ணன்"

"வரது குட்டி"

நான் சொல்றேன் "ராமகிருஷ்ணன் தான்".

நீ வேணா பாருடா "வரது குட்டி தான்"

7:59:56

7:59:57

7:59:58

7:59:59

8:00:00

ஒரு அஞ்சு நொடிக்கு இசை வருது...அடுத்ததா
"செய்திகள்"னு தலைப்பு. "வணக்கம் தலைப்புச் செய்திகள்"னு H.ராமகிருஷ்ணன் ஒரு மெல்லிய புன்னகையோடு செய்தி வாசிக்கத் தொடங்கறப்போ ராமகிருஷ்ணன் தான் இன்னிக்கு நியூஸ் வாசிக்க வருவாருன்னு பெட்டு கட்டுன தம்பி முகத்துல ஒரு சந்தோஷம். மெகா சீரியல்னும், 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக'ன்னும், 'லைவ் அண்ட் எக்ஸ்க்ளூசிவ்'னும் இந்தியாவில் தொலைக்காட்சி பார்த்தல் என்பது சிக்கலாய் இல்லாமல் இருந்த காலக்கட்டத்து நினைவுகள் தான் நான் மேலே சொன்னது. போட்டியில்லாத, உலகமயமாக்கல் இல்லாத, தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஏதுமில்லா அக்காலக் கட்டத்தில் இந்தியாவின் அரசுத் தொலைக்காட்சி நிறுவனமான 'தூர்தர்ஷன்' கோலோச்சிக் கொண்டிருந்தது. நம்முடைய வளர்கின்ற பருவத்தில் நாம் காணும், தெரிந்து கொள்ளும் விஷயங்கள் என்பது பல காலம் நம் நினைவில் இருக்கும். அதை பின்னொரு நாளில் நினைவு மீட்டும் பொழுது அது ஒரு சுகமான அனுபவமாக இருக்கும். இந்த அனுபவங்களை நம் வாழ்க்கையின் முக்கியமான மைல்கல்களுடன் தொடர்பு படுத்திப் பார்த்தால் இன்னும் சுகமாக இருக்கும்.

ஒரு நாள் திடீர்னு தூர்தர்ஷனின் ஆர்ப்பாட்டமில்லாத, சிம்பிளான செய்தி வாசிப்பாளர்களைப் பற்றிய நினைவு வந்தது. இப்போ தான் எதுவா இருந்தாலும் இணையத்துல தேடிப் பார்க்கலாமே...அதனால தூர்தர்ஷன்னு தட்டச்சு செய்து ஆங்கிலத்துலயும், தமிழ்லயும் தேடிப் பார்த்தேன். சொன்னா நம்ப மாட்டீங்க...வளர்ற வயசுல வெறுத்த தொலைக்காட்சியான தூர்தர்ஷனுக்கு அப்படியொரு ரசிகர் வட்டம் இருக்கறது தெரிஞ்சது. அந்த ரசிகர்களில் பெரும்பாலானவங்க தூர்தர்ஷனின் பொற்காலத்தின் போது பள்ளி செல்லும் சிறுவர், சிறுமிகளா இருந்தவங்க. அவங்க எழுதியிருக்கற பதிவுகளைப் படிச்சா அந்த நினைவுகள் இப்போது நினைவுகளாக மட்டும் இருக்கிறதே என்று கண்டிப்பாக ஏக்கப் பெருமூச்சும் தோன்றும். முதல் பத்தியில இருக்கற admiration, adulation எல்லாம் இப்போ தான். அப்போல்லாம் நான் கூட சே...என்னடா இது சொத்தை டிவி சேனல்னு வெறுத்திருக்கேன். இப்போ யோசிச்சுப் பாத்தா அந்த ஒத்தை சொத்தை டிவி சேனல் மூலமா நான் கத்துக்கிட்டதும் தெரிஞ்சிக்கிட்டதும் கொஞ்ச நஞ்சம் இல்லைன்னு புரியுது.

தூர்தர்ஷனின் தமிழ் செய்தி வாசிப்பாளர்களை நினைவு கூர்ந்தால் அவர்களில் முதலில் நம் நினைவுக்கு வருபவர் திரு.H.ராமகிருஷ்ணன். 1985ல எங்க வீட்டுல முதன் முதல்ல டிவி வாங்குன காலத்துலேருந்து '90களின் இறுதி வரை இவரை நான் செய்தி வாசிப்பாளராகப் பார்த்த நியாபகம். சில சமயம் வானொலியிலும்(ஆகாசவாணி) இவர் செய்தி வாசிப்பதை கேட்டிருக்கிறேன்.

1990களில் வெளிவந்த 'வானமே எல்லை' படம் வெளிவரும் வரை இவர் போலியோவினால் ஊனமுற்றவர் என்பது எனக்கு தெரியாது. ஏன்னு தெரியலை...என்னால அதை நம்பறது ரொம்ப கஷ்டமா இருந்தது. அந்த படத்துக்காக எதாச்சும் ட்ரிக் செய்து அந்த மாதிரி எடுத்துருப்பாங்களோன்னு ரொம்ப நாள் நெனச்சிட்டிருந்தேன். அவரைப் பத்தி இணையத்துல தேடும் போது அவரு தன்னோட சொந்த வலைதளத்தையும் வச்சிருக்காருன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதோட கர்நாடக சங்கீதத்தில் புலமை பெற்றவருன்னும் பல இசை கச்சேரிகள்ல பாடியிருக்காருன்னும் தெரிஞ்சிக்கிட்டேன். கர்நாடக இசை வித்வான்களை எல்லாம் நோண்டி நொங்கெடுக்கிற இசை விமர்சகர் சுப்புடு அவருக்கு பக்க வாத்தியமா கீபோர்டு வாசிக்கற படத்தையும் அவரோட வலைதளத்தில் பார்க்கலாம்.

செய்தி வாசிப்பாளர்கள்ல ராமகிருஷ்ணன் என் தம்பிக்கு ஃபேவரிட்னா என்னோட ஃபேவரிட் திரு.வரதராஜன். அப்போல்லாம் அவரை 'வரதுகுட்டி'னு தான் சொல்லுவேன். ஏன்னு சரியா நியாபகம் இல்லை. 1980களில் சிவாஜி கணேசன் நடிச்சி வெளிவந்த "பரிட்சைக்கு நேரமாச்சு"ங்கிற படம். அதுல சிவாஜியோட பையனா ஒரு கதாபாத்திரம் வரும். அந்த கதாபாத்திரமா வரதராஜனே நடிச்சிருக்கிறாரா இல்லை ஒய்.ஜி.மகேந்திரன் நடிச்சிருக்கிறாரான்னு நியாபகம் இல்லை.
ஆனா அந்த கேரக்டரோட பேரு "வரதுகுட்டி"னு நியாபகம். அதுலேருந்து வரதராஜனை "வரதுகுட்டி"ன்னு கூப்பிடறது பழக்கமாயிடுச்சு. இரவு எட்டு மணி செய்திகள்ல "வரதுகுட்டி" வருவாருன்னு தான் நான் அதிகமா பெட் வச்சிருக்கேன் :) இவர் ஒரு நாலஞ்சு வருஷம் முன்னாடி வந்த சன் டிவி தொலைக்காட்சித் தொடர் ஒன்னில் அப்பா கேரக்டரிலும் நடித்தார். அவரோட படமும் இன்னிக்குக் கெடைச்சிடுச்சு :) அதையும் வலையேத்தியாச்சு. இப்போது இவர் ஒரு பிரபலமான நாடக நடிகராவும் இருக்கிறார். இவருக்கு http://tvvvaradharajen.com எனும் சொந்தமான வலைத்தளம் ஒன்று உள்ளது.

தமிழ் செய்தி வாசிப்பாளர்கள்ல ஒரு ஸ்டார் அந்தஸ்து இருக்குன்னா...அது கண்டிப்பா இவருக்குத் தான். அவர் ஷோபனா ரவி. இவர் செய்தி வாசிக்கும் போது ரொம்ப தன்னம்பிக்கையோட வாசிக்கிறா மாதிரி தெரியும். பொதுவாக இவர் உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார். செய்திகளை முடிச்சிட்டு வணக்கம் சொல்லும் போது கூட பெரும்பாலும் புன்னகைக்க மாட்டார். ஆனா பெண்களுக்கு இவர் கட்டும் புடவைகளின் மீது ஒரு தனி கண்ணு இருக்கும். "நேத்து ஷோபனா ரவி கட்டியிருந்த புடவையின் கலர்..." அப்படின்னு மேல் வீட்டு ஆண்ட்டி ஆரம்பிச்சாங்கன்னா அந்த பேச்சு ஒரு அரை மணி நேரம் ஓடும்.

இவர் ஒரு புடவையை ஒரு முறைக்கு மேல் கட்டுவதில்லை அப்படின்னும் இவர் வீட்டில் புடவைகளை அடுக்கி வைக்க ஒரு மிகப் பெரிய பீரோ இருக்கு அப்படின்னு அவங்க வீட்டு சுத்து வட்டாரத்துல பேசிக்குவாங்கன்னு ஒரு இணைய நண்பர் எழுதிருக்கறதை படிச்சேன். இவரும் ராமகிருஷ்ணனும் மட்டும் தான் தூர்தர்ஷனின் நிரந்தர ஊழியர்களாக இருந்தார்கள் என்றும், மற்றவர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் செய்தி வாசித்ததாகத் தெரிந்து கொண்டேன். இவருடைய மகள் ராஜ் டிவியில் ஆங்கில செய்தி வாசிப்பாளராக இருக்கிறார்னு நெனைக்கிறேன்.

ஷோபனா ரவிக்கு அடுத்தபடியா பெண்கள்ல பிரபலமா இருந்தவங்க சந்தியா ராஜகோபாலும், ஃபாத்திமா பாபுவும். இவங்க ரெண்டு பேரும் இன்னைக்கும் தனியார் சேனல்களில் செய்தி வாசிச்சிக்கிட்டுத் தான் இருக்காங்க. மத்த செய்தி வாசிப்பாளர்கள்னு பாத்தா பாலசுப்பிரமணியன், செந்தமிழ் அரசு(நன்றி : நிலாக்காலம்/ஸ்ரீ), தமிழன்பன், இனியன் சம்பத், ஸ்ரீதர், ஹெலன் ப்ரமிளா, நிஜந்தன், நசீமா சிக்கந்தர், கண்ணாத்தாள், நிர்மலா சுரேஷ் இவங்க பேரெல்லாம் ஞாபகம் இருக்கு. இதுல தமிழன்பன் ரொம்ப திருத்தமாகவும் அழுத்தமாகவும் வாசிப்பார். எதோ ஒரு காரணத்துக்காக "இந்திய தேசிய கொடியை கோமணமாக அணிவேன்"ன்னு இவர் சொன்னதால இவரைத் தூக்கிட்டாங்கன்னு அப்பல்லாம் சொல்லுவாங்க.



நிஜந்தன் இன்னும் ராஜ் டிவியில செய்தி வாசிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் இருந்து கொண்டு இருக்கிறார். ஸ்ரீதரின் குரலை அவர் தொலைக்காட்சியிலிருந்து காணாத போன பின்பும் வானொலியில் கேட்டிருக்கிறேன். இணையத்தில் ஒருவர், ஸ்ரீதர் செய்தி வாசித்து முடித்து விட்ட பின் புன்னகைப்பதை பார்ப்பதற்காகவே அவருடைய அம்மா அடுப்படி வேலையில் ஈடுபட்டிருந்தாலும் வந்து தொலைக்காட்சியைப் பார்ப்பார் என்று எழுதியிருக்கிறார். இதை தவிர 'கல்யாண அகதிகள்' அப்படீங்கற கே.பாலச்சந்தர் திரைப்படத்தில் தூர்தர்ஷனில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த ஒருவர் கதாநாயகனாகவும் நடித்தார். அந்த படத்துலயும் அவர் தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளராவே நடிச்சிருப்பாரு. அவர் பேரு சௌந்தர்னு நெனக்கிறேன். ஆனா அதுக்கப்புறம் அவரை தொலைக்காட்சியில் அதிகமாப் பாக்க முடியலை.

சென்னை தொலைக்காட்சியில் தமிழ் செய்தி வாசிப்பாளர்களுக்குன்னு ஒரு ரசிகர் வட்டம் இருக்கறா மாதிரி தில்லி தூர்தர்ஷன்ல ஆங்கில செய்தி வாசிப்பாளர்களுக்கும் பெரிய ரசிகர் வட்டம் இருக்கு. கீழே சில ஆங்கில செய்தி வாசிப்பாளர்கள் படங்களைத் தேடிப் பிடிச்சிப் போட்டிருக்கேன். யாராச்சும் உங்க நியாபகத்துக்கு வர்றாங்களான்னு பாருங்க.

தேஜேஷ்வர் சிங்(Tejeshwar Singh) - இவர் போன வருஷம் காலமாயிட்டார். ஒரு ஆழமான குரலுக்குச் சொந்தக்காரர். "Sage Publications" எடிட்டராகவும் இருந்திருக்கிறார்.

சுனித் டண்டன்(Sunit Tandon) - இவருக்கும் இணையத்தில் ஏகப்பட்ட விசிறிகள் இருக்காங்க.

ரினி கன்னா(Rini Khanna) - இவங்க Facebookலயும் இருக்காங்க பாருங்க.

உஷா அல்புகெர்க்(Usha Albuquerque) - ரொம்ப சாந்தமான முகம் இவருக்கு. மத்தவங்க அளவுக்கு இவர் அவ்வளவு பிரபலம் இல்லைன்னாலும், இவர் முகமும் பெயரும் எனக்கு இன்னும் நல்லா நினைவில் இருக்கு.

நிர்மல் ஆண்ட்ரூஸ்(Nirmal Andrews) - இவரும் அவ்வளவு பிரபலமானவரு கிடையாது. ஆனா இவரோட பேரை வச்சித் தேடும் போது இணையத்துல இவரோட படம் கெடைச்சது. இப்போ ஐ.நா. சம்பந்தப்பட்ட ஒரு பணியில் வெளிநாட்டில் இருக்கிறார்.

ஆங்கில செய்தி வாசிப்பாளர்கள்ல பிரபலமானவங்கன்னு பாத்தீங்கன்னா சுகன்யா பாலகிருஷ்ணன், கோமல் ஜி.பி.சிங், கீதாஞ்சலி ஐயர், மீனு, நீத்தி ரவீந்திரன் (நன்றி: திரு.மாலன்), ரினி கன்னா(திருமணத்துக்கு முன் ரினி சைமன்), சங்கீதா பேடி(திருமணத்துக்கு முன் சங்கீதா வர்மா). இதுல சுகன்யா பாலகிருஷ்ணன் டெல்லியில் செட்டில் ஆகிவிட்ட தமிழர். நான் தில்லியில் இருந்த போது "The Asian Age" என்னும் பத்திரிகையில் தில்லி தமிழர்களைப் பற்றிய ஒரு ரிப்போர்ட் வந்தது. அதில் சுகன்யாவின் குடும்பத்தினர் பல வருடங்களாக தில்லியில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப் பட்டிருந்தது. கல்கட்டா தூர்தர்ஷனில் என்.விஸ்வநாதன் என்பவர் பிரபல ஆங்கில செய்தி வாசிப்பாளர் என்று இணையத்தில் ஒருவர் எழுதியிருந்தார். அநேகமாக இவர் "மூன்று முடிச்சு" படத்தில் ரஜினிக்கு அப்பாவாக நடித்த நடிகர் கல்கட்டா விஸ்வநாதனாகத் தான் இருப்பார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இவரை தூர்தர்ஷனில் கல்லூரி மாணவர்களுக்காக ஒளிபரப்பாகும் யூ.ஜி.சி(UGC) நிகழ்ச்சியில் ஒரு முறை நான் பார்த்திருக்கிறேன். அத்துடன் திரைப்படங்களிலேயே இவர் அருமையாக ஆங்கிலம் பேசுவார்.

'மே மாதம்' திரைப்படம் பாத்திருக்கீங்களா? அதுல கதாநாயகி சோனாலி குல்கர்னியின் அப்பாவாக வரும் நடிகர் கூட முன்னாள் ஆங்கில செய்தி வாசிப்பாளராக இருந்தார் என்று என் அம்மா சொல்கிறார்கள். அவருடைய பெயர் P.C.ராமகிருஷ்ணா(நன்றி : திரு.மாலன்)
மால்குடி சுபா 'வால்பாறை வட்டப்பாறை' என்று ஒரு ஆல்பம் வெளியிட்டார் தெரியுமா? அந்த ஆல்பத்தின் வீடியோவில் நடித்த பெண் P.C.ராமகிருஷ்ணா அவர்களின் மகள். 'மே மாதம்' திரைப்படம் வெளிவந்த காலத்தில் இவரை அடிக்கடி சின்னத் திரையிலும் பெரிய திரையிலும் பார்த்த ஞாபகம். தமிழ் நியூஸ் பாத்தாச்சு, ஆங்கில நியூஸ் பாத்தாச்சு. காது கேளாதோருக்கான நியூஸ் பாத்துருக்கீங்களா? நானும் என் தம்பியும் ஞாயிறு மதியம் காது கேளாதோருக்கான செய்தி அறிக்கையை தவறாமல் பார்ப்போம். அந்த செய்தி அறிக்கையின் வாசிப்பாளர்கள்ல ஷஷி பால்(Shashi Pal), சங்கீதா இவங்க ரெண்டு பேரு பேரும் நியாபகம் இருக்கு. அப்போல்லாம் ஒரு சில சைகைகளக் கத்து வச்சிக்கிட்டு அம்மா கிட்ட வம்பு பண்ணதுண்டு. சில சைகைகள் இன்னும் நியாபகம் இருக்கு. நெத்தியில பொட்டைத் தொட்டைக் காட்டுனா "இந்தியா"ன்னு அர்த்தம். கையோட முன் பாதி, பின் பாதியை முறையே முற்பகல், பிற்பகல் இதை தெரிவிக்க உபயோகிப்பாங்க.

திரு.மாலன் அவர்களின் பின்னூட்டம் எல்லோருக்கும் பயன் தரும் விதமாக :

>>'மே மாதம்' திரைப்படம் பாத்திருக்கீங்களா? அதுல கதாநாயகி சோனாலி குல்கர்னியின் அப்பாவாக வரும் நடிகர் கூட முன்னாள் ஆங்கில செய்தி வாசிப்பாளராக இருந்தார் என்று என் அம்மா சொல்கிறார்கள். அவருடைய பெயர் இப்போது நினைவில் வர மாட்டேன் என்கிறது<<

அவரது பெயர் பி.சி.ராமகிருஷ்ணா. சென்னையில் பிரபலமான ஆங்கில நாடகக் குழுவான The Madras Playersஐச் சேர்ந்தவர். இப்போதும் நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு காலகட்டம் வரை ஆங்கிலச் செய்தி என்பதும் அந்தந்த மாநிலச் செய்தியறிக்கைகள் போல அந்தந்த மாநிலத்திலேயே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. அப்போது சென்னைத் தொ.கா.வில் ராமகிருஷ்ணா, விசாலம் (தாமஸ் குக் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்தார்)சசிகுமார் (பின்னாளில் ஏசியாநெட்டை ஆரம்பித்தவர், இப்போது ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசத்தின் தலைவர்) ஆகியோர் ஆங்கிலச் செய்திகளை வாசித்து வந்தார்கள். தில்லி ஆங்கிலச் செய்தியாளர்களில் நீதி ரவீந்திரன் பெயரை மறந்து விட்டீர்கள்.

நிர்மலா சென்னைத் தொ.க.வில் செய்திவாசித்தாரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவர் அங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார்.லோகேஸ்வரி செல்வக்குமார் என்று இன்னொரு பெண்மணி வாசித்து வந்தார். அவர் பின்னால் அங்கு தயாரிப்பாளராகவும் ஆனார்.

தூர்தர்ஷனில் செய்திவாசிப்பாளருக்கான தேர்வில் உச்சரிப்புக்கு முக்கியத்துவம் உண்டு.தேர்வுக்கு வருகிறவர்களை தொழிலாளி என்ற சொல்லை உச்சரிக்கச் சொல்வார்கள்.ஏனெனில் ழ,ள,ல மூன்றும் வருகிற ஒரு சொல் அது (நான் அந்தத் தேர்வுக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறேன்) ஆரம்ப நாள்களில் வானொலி அறிவிப்பாளர்களைப் பயன்படுத்தி வந்தார்கள். வானொலி அறிவிப்பாளர்கள் என்பதால் உச்சரிப்பில் அவர்கள் தெளிவாக இருப்பார்கள்.

அதுபோல சட்ட மன்ற நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களுக்கும் வானொலி/தொலைக்காட்சிதான் நம்பத்தகுந்த ஆதாரம். அந்த செய்திகளை வழங்கும் போது தவறு நேர்ந்துவிட்டால் சட்டமன்றமே தண்டிக்க முடியும். அதனால் அச்சுப் பத்திரிகைக்கள் அந்த செய்தியாளர்களையும் consult செய்து கொள்வார்கள். அதில் ராமகிருஷ்ணன்தான் கிங்.

மாலன்


தூர்தர்ஷன் பத்தி எழுதுறதுன்னா கண்டிப்பா எக்கச்சக்கமா இருக்கு. செய்தி வாசிப்பாளர்களுக்காக மட்டுமே தனியா ஒரு கொசுவத்தி பதிவு போடுவேன்னு நானே நெனைக்கலை. எனக்கு எழுதும் போது ஒரு சுகமான நினைவு மீட்டலா இருந்தது. படிச்சவங்களுக்கு எப்படின்னு தான் தெரியலை :). வரும் நாட்களில் தூர்தர்ஷனைப் பத்திய இன்னும் சில நினைவுகளைப் பகிர்ந்துக்கறேன். நன்றி.

Monday, February 23, 2009

TN-07 BC-2308

ஹலோ மை டியர் டாட்டர்,

காதலுக்கு மரியாதை படத்துல காகா ராதாகிருஷ்ணன் ஷாலினியைக் கூப்பிடற மாதிரி நான் உன்னை கூப்பிட்டிருக்கேன்னு கண்டுபிடிச்சிட்டே தானே? என்னம்மா பண்ணறது? சினிமா படம் பாத்து அதை உல்டா பண்ணி எழுதி எழுதியே பழகிப் போச்சு. காப்பியடிக்கிறது என்னமோ நமக்கு கஸாட்டா சாப்பிடற மாதிரி குளிர்ச்சியா இருக்கு. இப்ப இந்த பதிவையே எடுத்துக்கயேன். வெட்டி அங்கிள் பர்மிதா பாப்பாவுக்காக எழுதுன பதிவைப் பாத்து தான் பதிவு மூலமா கூட அப்பாக்கள் மகள்களுக்கு லெட்டர் எழுதலாம்னு தெரிஞ்சிக்கிட்டேன். உங்கப்பாவுக்கு ஒரிஜினலா ஐடியாக்களை உருவாக்கத் தெரியாட்டினாலும் காப்பியடிச்சு உல்டா பண்ணறது என்னமோ கைவந்த கலையாவே இருக்கு.

சென்னை வந்து கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கு மேல ஆகப் போகுதுமா. என்னமோ ஆன்சைட்ல அமெரிக்கால இருந்துட்டு வந்த மாதிரி என்ன பில்டப்பு வேண்டிக் கெடக்குன்னு ப்ளாக் படிக்கிற ஆண்ட்டிகளும் அங்கிள்களும் கேக்கற மாதிரியே நீயும் கேக்கறியா? போன மூனு வருஷமா கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத்னு இந்தியாவுக்குள்ளேயே சுத்திக்கிட்டு இருந்தாலும் நானும் ஆன்சைட்ல தான்மா இருந்தேன். இந்தியாவுக்குள்ளேயே ஆன்சைட் போற மக்களும் இருக்காங்கன்னு இப்ப அவங்க கூட சேர்ந்து நீயும் தெரிஞ்சிக்கிட்டே தானே. ஆனா வெளிநாடு போனா தான் அது ஆன்சைட்னு ஒரு கருத்து ரொம்ப பிரபலமா நிலவிக்கிட்டு இருக்கு. "நான் ஆன்சைட்ல இருக்கேன்"னு சொன்னா வர்ற அடுத்த கேள்வி "யூ.எஸ்ஸா?" அப்படின்னு தான். இல்லீங்க...
"சித்தூர்கட்"னோ "அகமதாபாத்"னோ நான் சொல்றதை கேட்டு பல பேரு நான் என்னமோ நக்கல் பண்ணறதா நெனச்சிருக்காங்க.

அதெல்லாம் இருக்கட்டும். மூனு வருஷமா ஆன்சைட்லேயே இருந்துட்டு...சரி...சரி...மூனு வருஷமா இந்தியாவுக்குள்ளேயே வெவ்வேறு இடங்கள்ல ப்ராஜெக்ட் பண்ணிட்டு...முதன்முறையா சென்னையில வேலை செய்யற வாய்ப்பு கெடைச்சிருக்குமா. வாய்ப்பென்ன வாய்ப்பு? "ஐயா நான் புள்ளைக்குட்டி காரன்...எனக்கு ஒரு சின்ன குழந்தை இருக்குது, குழந்தை வளர்றப்போ பக்கத்துல இருந்து பாத்துக்கனும். சென்னையில தான் ப்ராஜெக்ட் வேணும்னு" உன்னை காரணம் காட்டி தான் சென்னை வந்திருக்கேன். எனக்கு சென்னையில ப்ராஜெக்ட் கெடைச்சதுக்கு காரணம் நீ தான்மா. க்ளையண்ட் சைட்ல வேலை செய்யும் போது, தங்கியிருக்கற இடத்துலேருந்து ஆஃபிசுக்குப் போறதுக்கு பலவிதமான வழிகள் இருந்திருக்கு. சித்தூர்கட்ல இருந்தப்போ ஃபேக்டரிக்கு ஃபோன் பண்ணிச் சொன்னா ஜீப் அனுப்புவாங்க. சில சமயம் அந்த ஜீப் மைனுக்கு(mine) அதாவது லைம்ஸ்டோன் சுரங்கத்துக்குப் போயிட்டு வந்த ஜீப்பா இருக்கும். சீட்டு மேல செம்மண் ஒரு ரெண்டு லேயர் ஒட்டியிருக்கும். நாங்க அந்த ஜீப்புல போய் அந்த சீட்டைக் கம்பெனி காரங்களுக்காக பல தடவை இலவசமா சுத்தம் பண்ணிக் குடுத்துருக்கோம். அகமதாபாத்ல இருக்கறப்போவும் ஜீப் தான்...ஆனா இது கொஞ்சம் நல்ல ஜீப்...ஸ்கார்பியோ. கடைசியா பெங்களூருல வேலை செய்யறப்போ தான்மா ரொம்ப வசதியா இருந்துச்சு. கேக்கற நேரத்துல கேப்(Cab) கெடைச்சிட்டிருந்தது. BMTC பஸ்ல முண்டியடிக்காம சொகுசா கேப்ல போய் பழக்கமானதுனால உங்க டாடிக்குக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் எல்லாம் டெவலப் ஆயிடுச்சு.

இப்போ சென்னை வந்துட்டேன். ஆனா இப்ப நான் வேலை செய்யறது க்ளையண்ட் சைட் கெடையாது, அதாவது ஆன்சைட் கெடையாது. எங்க கமபெனியோட சொந்த ஆஃபிசுல இருக்கேன். க்ளையண்ட் சைட்ல இருந்தா தான் ஜீப், கேப் எல்லாம் கெடைக்கும். சொந்த ஆஃபிசுல வேலை செஞ்சா அதெல்லாம் கெடைக்காது. கிழக்கு கடற்கரை சாலைல இருக்கற நம்ம வீட்டுலேருந்து எம்ஜிஆர் தாத்தா வீட்டு பக்கத்துல இருக்கற எங்க ஆஃபிசுக்கு லேப்டாப்பைத் தூக்கிட்டு பஸ்சுல போனா முழி பிதுங்கிடுதுமா. நீ பொறக்கறதுக்கு ரொம்ப முன்னாடி, 2002ல வாங்குன ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பைக் ஒன்னு என்கிட்ட இருந்துச்சு. மூனு வருஷமா சென்னைக்கு வெளியே இருந்ததுனால, அந்த வண்டி ரொம்ப நாளா ஓட்டாம கொஞ்சம் மோசமான நெலைமையில இருந்துச்சு. அதையும் சரி பண்ணி கொஞ்ச நாள் ஓட்டுனேன். இருந்தாலும் ஏழு வருஷம் ஆயிட்டதுனால, அதிகமா ஓட்டாததுனாலயும் அதுக்கு மேல என்னென்ன செலவு வைக்குமோன்னு நெனச்சி ஸ்ப்ளெண்டரை வித்துட்டு ஒரு புது பைக் வாங்குனேன். அது தான் இப்போ நான் காலைல கிக் பண்ணும் போது சத்தம் கேட்டு நீ பயப்படறியே அந்த பஜாஜ் டிஸ்கவர் பைக். பைக் புக் பண்ணும் போது உன் நெனப்பு தான்மா முதல்ல வந்துச்சு. வண்டியோட பதிவு எண் 2308 தான் வேணும்னு தனியா பணம் கொடுத்து கேட்டு வாங்குனேன். ஆகஸ்ட் 23ஆம் தேதி நீ பொறந்தது தான் அதுக்கு காரணம்னு நான் சொல்லாமலேயே நீ புரிஞ்சிக்கிட்டு இருப்பேன்னு நம்பறேன். ஜனவரி மாசம் ஆரம்பத்துலேயே வண்டியை புக் பண்ணிட்டாலும் லாரி ஸ்ட்ரைக் காரணமா பல நாளு வண்டி கெடைக்காமலேயே இருந்துச்சு. நான் ரொம்ப நச்சரிச்சதுக்கப்புறம் "வண்டி வந்துடுச்சு, இன்னிக்கு வந்து டெலிவரி எடுத்துக்கங்க"னு பஜாஜ் டீலர் ஃபோன் பண்ணி சொன்ன அந்த நாள் ஜனவரி 23ஆம் தேதி. நான் வண்டி எடுத்த அன்னிக்கு சரியா உனக்கு வயசு ஆறு மாசம் முடிஞ்சிருந்தது.


வெட்டி அங்கிள் பர்மிதா பாப்பாவுக்குப் பேரு வச்சதுக்கான காரணத்தைத் தன்னோட பதிவுல எழுதிருக்காரு. அந்த ஐடியாவையும் நான் காப்பியடிச்சிட்டேன். உங்க அம்மாவும் நானும் சேர்ந்து உனக்கு "அர்ச்சனா ராஜ்"னு பேரு வச்சிருக்கோம். உனக்கு பிடிச்சிருக்காம்மா? கார்த்திகை நட்சத்திரத்துல நீ பொறந்ததுனால உனக்கு பேரு வைக்க அ, ஊ, இ, ஏ ன்னு நாலு எழுத்துகள் சொன்னாங்க. உனக்கு பேரு வைக்க, நீ பிறக்கறதுக்கு முன்னாடி நானும் உங்க அம்மாவும் பெங்களூர்ல நேம் புக் எல்லாம் வாங்குனோம். அதுல பல பேருங்க வாய்ல நுழையாத பேருங்களா இருந்துச்சு. பெரும்பாலான பேருங்க எதோ இதிகாச புத்தகத்துலேருந்து சுட்ட பேருங்களா இருந்துச்சு. "தாடகா"ன்னு(Tadaka) ஒரு பேரை பெண் குழந்தைகளுக்கு ஏத்த பேருன்னு அந்த புக்ல போட்டிருந்ததைப் பாத்ததும் தீ வைச்சு கொளுத்தனும் போல ஒரு கோபம் வந்துச்சு. தாடகா எவ்வளோ நல்ல பேராவே இருக்கட்டுமே...அது ராமாயணத்துல ஒரு அரக்கியோட பேருன்னு உலகத்துக்கே தெரியும். எந்த அம்மா, அப்பா தங்களோட குழந்தைக்கு தாடகான்னு பேரு வைப்பாங்க. அதுக்கப்புறம் அந்த பேரு வைக்கற புஸ்தகத்தை நாங்க தொடவே இல்லை. பேரு வைக்க நாலெழுத்து சொன்னதும் முதல்ல 'அ' எழுத்துல தான் யோசிச்சேன். எனக்கு "அர்ச்சனா"ன்னு பேரு வச்சா நல்லாருக்குமேன்னு தோனுச்சு. உங்கம்மாவுக்கு, உங்க தாத்தா, பாட்டி எல்லாருக்கும் அந்த பேரே ரொம்ப புடிச்சிப் போச்சு. அதுக்கப்புறம் ரொம்பெல்லாம் யோசிக்கலை. நீ பொறந்த 24 மணி நேரத்துக்குள்ள "அர்ச்சனா"னு உனக்கு பேரு வச்சாச்சு. ஜோசியர் உன்னோட பேரு ரெண்டு பகுதியா வர்ற மாதிரி இருந்தா நல்லாருக்கும்னு சொன்னதுனால அர்ச்சனாங்கிற பேர் கூட என் பேரில் பாதியான ராஜ்-ஐ எடுத்து, கூடுதலா நியுமராலஜியும் பார்த்து 'Archanaa Raj'னு பேரு பதிவு பண்ணிட்டோம். உனக்கு இனிஷியல் எல்லாம் கெடையாதும்மா. பிற்காலத்துல பாஸ்போர்ட் அப்ளிகேஷன், வேலைக்கு அப்ளிகேஷன் எல்லாம் நிரப்பும் போது First name, Last name பிரச்சனை எல்லாம் வராது. Archanaa-ங்கிறது First name, Raj-ங்கிறது Last name.

அப்புறம் உன்கிட்ட ஒரு ரகசியம் சொல்லணும். என்னோட நண்பர்கள் தங்களுக்கு குழந்தை பிறந்திருக்கற செய்தியை மெயில் மூலமா தெரிவிப்பாங்க. எனக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே ஒரு ஆசை இருந்துச்சு. இந்த மாதிரி ஒரு மெயில் அனுப்பற வாய்ப்பு எனக்கு வரும் போது "We have been blessed with a Baby Girl"னு அனுப்பனும்ங்கிறது தான் அது. அந்த ஆசையையும் நீ நிறைவேத்தி வச்சிருக்கே. நீ பொறந்ததும் உங்கம்மாவுக்கு முன்னாடி உன்னை பார்த்தது நான் தான். உங்கம்மாவுக்குப் பிரசவம் பாத்த டாக்டரும் நெறைய தமிழ் சினிமா பாப்பாங்க போல. ஆகஸ்ட் 23ஆம் தேதி சாயந்திரம் 3.35 மணிக்கு நீ பொறந்தே. ஒரு 20 நிமிஷத்துல உன்னை ஒரு துணியில சுத்தி வெளில நின்னுட்டிருந்த எனக்கு வாழ்த்து சொல்லி என் கைல குடுத்துட்டுப் போயிட்டாங்க. நான் அதை கொஞ்சம் கூட எதிர்பாக்கவே இல்லை. ஆனா என் வாழ்க்கைல என்னால மறக்கவே முடியாத ஒரு தருணம் அது. அவ்ளோ சின்ன குழந்தையை என் கைல நான் எடுத்து பாத்ததே இல்லை. ஏசி ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்து குளிர் தாங்க முடியாம உதடு துடிக்க நீ அழுதுக்கிட்டு இருந்தே. அதை பாத்து என் கண்ணு கலங்குனதுக்கான காரணம் என்னங்கிறது எந்த logic-க்குள்ளேயும் reasoning-க்குள்ளேயும் வராதது. இதே மாதிரி தான் விவசாயி அங்கிளும், சூரியா அண்ணன் பொறந்த அந்த தருணத்தை அழகா "ஜனனம்"னு பேரு வச்சி கவிதையா சொல்லிருக்காரு. உன்னோட ஒவ்வொரு அசைவையும், அழுகையையும், சிரிப்பையும் பாக்கும் போது அப்படியே நான் கரைஞ்சி போயிடறேன். "பெண் குழந்தைகள் அப்பாக்களுக்கு வரப்பிரசாதம்"னு ஒரு "பின்நவீனத்துவ பெருமான் அங்கிளும்" சொல்லிருக்காரு. அவரு பின்நவீனத்துவமா பல மேட்டர் சொன்னதுல இந்த ஒரு விஷயம் மட்டும் தான் எனக்கு புரிஞ்சிருக்கு. ஏனா இது நான் அனுபவிச்சித் தெரிஞ்சிக்கிட்டது.

உன்னை பாக்கனும்னு நீ பொறக்கறதுக்கு முன்னாலேருந்தே நண்பர்களா இருக்கற அங்கிள்ஸ் அண்ட் ஆண்ட்டீஸ் பல பேரு கேட்டிருந்தாங்க. அவங்களுக்காக உன்னோட இந்த படங்களை இங்கே போட்டிருக்கேன்.

இது 25-12-2008 அன்னிக்கு எடுத்தது. நீ முதன் முதல்ல குப்புற கவிழ்ந்தது 17-12-2008. ஆனா நான் அப்போ பெங்களூர்ல இருந்தேன், அதனால உன்னோட அந்த முதல் achievementஐ என்னால பாக்க முடியலை.

இது 27-12-2008 அன்னிக்கு எடுத்தது. உங்க ஆயா(நீ எப்படி கூப்பிட போறியோ தெரியாது) புடிச்சிருக்க, சாயந்திரம் நம்ம வீட்டுல எடுத்தது.

இது நாம திருவண்ணாமலை கோயிலுக்குப் போயிருந்த போது 03-01-2009 அன்னிக்கு எடுத்தது. உன்னை உங்க சித்தப்பாவும் ஆயாவும் கார்(வாடகை கார் தான்) மேல உக்கார வச்சிருக்காங்க.

Wednesday, February 18, 2009

மீ ராத் டாக்கலி

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஞாயித்துக் கெழமை கலைஞர் டிவியில அப்துல் அமீது அவர்கள் நடத்துற "பாட்டுக்குப் பாட்டு" நிகழ்ச்சி பாத்துட்டு இருந்தேன். அதுல ஒரு ஆண் பாடகர் 16 வயதினிலே படப் பாட்டான "செந்தூரப் பூவே" பாட்டு பாடுனாரு. ரொம்ப அருமையா உணர்வு பூர்வமா பாடுனாரு. அப்துல் அமீது கூட அவரை அந்த பாட்டைச் சிறப்பா பாடுனதுக்காக நல்லா பாராட்டினாரு. நான் கூட அந்த நேரம் யோசிச்சிப் பார்த்தேன், நமக்கு ரொம்ப புடிச்ச பாட்டுகள்ல பல பாட்டுகள் ஃபீமேல் சோலோக்களாச்சென்னு(Female Solos). என் ப்ளேலிஸ்டுல இருக்கற எனக்கு ரொம்ப புடிச்ச அடிக்கடி விரும்பிக் கேக்கற பாடல்கள் என்னன்னு பட்டியல் போட்டப்போ கீழே இருக்கற பாடல்கள் எல்லாம் உடனே நியாபகத்துக்கு வந்துச்சு.
1. "காற்றுக்கென்ன வேலி", எஸ்.ஜானகி, அவர்கள்
2. "இவள் ஒரு இளங்குருவி", எஸ்.ஜானகி, பிரம்மா
3. "செந்தூரப்பூவே செந்தூரப்பூவே", எஸ்.ஜானகி, 16 வயதினிலே
4. "பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்", எஸ்.ஜானகி, இன்று நீ நாளை நான்
5. "கண்கள் எங்கே", பி.சுசீலா, கர்ணன்
6. "லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்", பி.சுசீலா, அன்பே வா
7. "மாலை பொழுதின் மயக்கத்திலே", பி.சுசீலா, பாக்கியலட்சுமி
8. "கற்பூர பொம்மையொன்று", பி.சுசீலா, கேளடி கண்மணி
9. "மாலையில் யாரோ", ஸ்வர்ணலதா, சத்ரியன்
10. "வானவில்லே வானவில்லே", சாதனா சர்கம், ரமணா
இந்தப் பாடல்களைப் பத்தித் தனித்தனியாவே பதிவெழுதி போடலாம். அவ்ளோ ஃபீலிங்ஸும் அவ்ளோ சிறப்புகளும் இருக்கு இந்த பாடல்கள்ல.

மேலே இருக்கற இந்த லிஸ்டுல இல்லாத, எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு தனி பெண்குரல் பாடல் ஒன்னு இருக்குங்க. அது இன்னான்றீங்களா? அது ஒரு மராட்டி பாட்டு. லதா மங்கேஷ்கர் பாடுனது. "கைப்புள்ளையாரே உமக்கென்ன விசறே? மராட்டிய மொழிப் பாட்டினைக் கூட்டிக் கொண்டு தமிழ்வலையுலகில் வந்துள்ளீர்?" அப்படின்னு கன்னத்தில் முத்தமிட்டால்" பசுபதி போல தானே கேக்கறீங்க. அதுக்கும் முன்னாடி இன்னொன்னும் சொல்லிடறேன் மராட்டி எனக்கு தாய் மொழியோ, தந்தை மொழியோ, புகுந்த வீட்டு மொழியோ இப்படி எதுவுமே கெடையாது. ஒரு சில வார்த்தைகளைத் தவிர எனக்கும் மராட்டி சுத்தமாப் புரியாது.

ஆனா என்ன பொறுத்தவரை இசைக்கு மொழி கெடையாது. இது தொடர்பா நான் அடிக்கடி சொல்ற உதாரணம் - மைக்கேல் ஜாக்சன். ஒரு காலத்துல நான் மைக்கேல் ஜாக்சனோட பயங்கரமான ரசிகன். அவரோட பாப் பாடல்களைக் கேட்டா ரொம்ப உற்சாகமா, துள்ளலா, எழுந்து ஆடணும் போல இருக்கும். இவ்வளோ ரசிச்ச மைக்கேல் ஜாக்சனோட பாடல்கள் எதுவும் எனக்கு அப்போல்லாம் புரிஞ்சது கெடையாது. இப்ப கூட பெருசா புரியறது இல்ல, ஆனா லிரிக்ஸ் தெரியணும்னா இணையத்தில் தேடுனா சுலபமா கெடைச்சுடுது. எல்லாத்தையும் நெட்ல தேடிப் பார்த்து படிச்சிட்டு பொறந்ததுலேருந்து நான் இங்கிலீஷ் பாட்டு தவிர எதையுமே கேட்டதில்லைங்கிற ரேஞ்சுக்குப் பீலா விடறதுக்கு வழியும் வகையும் இப்ப இருக்கு:) சரி அதையெல்லாம் விடுங்க. இந்த இங்கிலீஷ் பாட்டுகளை மாதிரியே நம்ம நாட்டு மொழிகள்ல வந்த சில திரைப்படப் பாடல்கள்லயும் மொழி புரியாட்டியும் பிடிச்சிப் போற பாடல்கள் இருக்கத் தான் செய்யுது. இசைக்காகவும் வேறு சில காரணங்களுக்காகவும் மொழி புரியாட்டியும் நாம அந்த பாடல்களை ரசிப்போம்.

ரெண்டு பத்தி பில்டப்புக்கப்புறம் உண்மையான மேட்டருக்கு இப்போ வருவோம். இந்த பாட்டைப் பத்தி முதல்லேயே ஒரு விஷயம் சொல்லிடறேன். இது ஒரு 100% அக்மார்க் "இஸம்" பாடல். இதை நான் சொல்லலை. நெட்ல பாத்தீங்கன்னா இந்த படத்தைப் பத்தி பல பேரும் இந்த மாதிரி தான் சொல்றாங்க. மராட்டி திரைப்பட உலகின் க்ளாசிக் பாடல்களில் ஒன்றாக இப்பாட்டைக் கருதுறாங்க. "மீ ராத் டாக்கலி"ன்னு தொடங்குற இந்த பாட்டு இடம்பெற்றிருக்கும் படத்தின் பேரு "ஜைத் ரே ஜைத்"(Jait re Jait). ஒரு காலத்தில் இந்தி திரைப்பட உலகில் கொடிகட்டி பறந்த மறைந்த நடிகை ஸ்மிதா பாட்டில் அவர்கள் நடிச்ச படம் இது. அருமையான மெலடி இது. கீழே இருக்கற வீடியோல இந்த பாட்டோட ஆங்கில மொழிபெயர்ப்பும் இருக்கு பாருங்க. "என்னோட பழசை எல்லாம் கழித்து இன்று நான் புதிதாய் பிறந்தேன்" அப்படின்னுட்டு ரொம்ப சந்தோஷமா இயற்கையை ரசிச்சுக்கிட்டே ஸ்மிதா பாட்டில் பாடிக்கிட்டே போகிற மாதிரியும் "எவ்ளோ திமிராப் போறா பாரு இந்த பொம்பள" அப்படின்னு ரெண்டு காலிப்பசங்க பாறை மேல குந்திக்கிட்டு கிண்டல் பண்ணிப் பாடற மாதிரியும் இந்தப் பாடல் படமாக்கப் பட்டிருக்கும். ஆனா அந்த கிண்டலை எல்லாம் பொருட்படுத்தாம புதிய வாழ்க்கையை எதிர் நோக்கி ரொம்ப எதிர்பார்ப்போட உற்சாகத்தோட நடந்து போய்க்கிட்டே பாடிட்டுப் போகிற மாதிரி இருக்கும் இந்த பாட்டு.

படம் : ஜைத் ரே ஜைத்(Jait re Jait 1977)
பாடல் : என்.டி.மஹானோர் (N.D.Mahanor)
இசை : ஹிருதயநாத் மங்கேஷ்கர்
பாடியது : லதா மங்கேஷ்கர்



mi raat taakli.mp3 - smita patil

பாட்டைக் கேட்டீங்களா? ஒரு சிலருக்காச்சும் இந்த பாட்டு பிடிச்சிருக்கும்னு நம்பறேன். இதை படிக்கிறவங்கள்ல யாராவது ஒருத்தராச்சும், இந்தப் பதிவைப் படிக்கிறதுக்கு முன்னாடியே கேட்டிருப்பீங்கன்னும் ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருக்கு. முன்னொரு காலத்தில் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக் கிழமை மதியங்களில் அவார்டு வாங்கிய பிற மொழித் திரைப்படங்கள் போடுவாங்க பாத்திருக்கீங்களா? அந்த வரிசையில் நானும் இந்த படத்தைப் பாத்துருக்கேன். இந்த படம் பாக்கும் போது எனக்கு ஒரு பத்து-பதினொரு வயசு இருக்கும். தக்கர் எனப்படும் பழங்குடியின வகுப்பினரைப் பற்றிய படம், மேளம் அடிச்சு பிழைப்பு நடத்தும் ஒரு ஆணுக்கும் விவாகரத்தான ஒரு பெண்ணுக்கும் நடக்கும் காதல் கதைனு விக்கிபீடியால சொல்லிருக்கு. ஆனா அதெல்லாம் எனக்கு எதுவும் ஞாபகமில்லை. க்ளைமாக்ஸ் மட்டும் தான் லேசா ஞாபகம் இருக்கு. ஸ்மிதா பாட்டிலோட வேலை தேன் எடுக்கறது. க்ளைமாக்ஸ் சீன்ல மலைமேல கூடு கட்டி இருக்கற ராணி தேனீயோட கூட்டைக் கலைக்கற மாதிரி எதோ ஒரு வேலை வரும் ஸ்மிதா பாட்டிலுக்கு. அதுக்குப் பின்னாடி எதோ காரணமும் இருக்கும், ஆனா என்னன்னு இப்போ ஞாபகம் இல்லை. மலை மேல ஏறி தனக்கு கொடுக்கப்பட்டிருந்த வேலையை முடிச்சிடுவாங்க. ஆனா அந்த சமயம் தேனீக்கள் கொட்டுறதுனால உயரத்துலேருந்து கீழே விழுந்து இறந்துடற மாதிரி படம் முடியும். இறக்கும் போது தான் கர்ப்பிணின்னு சொல்ற மாதிரி ஒரு காட்சி வரும்னு நெனைக்கிறேன். ரொம்ப நாள் ஆச்சு இந்த படம் பார்த்து - யாராச்சும் பை சான்ஸ் இந்த படம் பாத்துருந்தீங்கன்னா நான் சொல்றது சரியா தப்பான்னு சொல்லுங்க. இருந்தாலும் கண்டிப்பா இந்த காட்சியைப் பாத்த மாதிரி தான் ஞாபகம். அப்புறம் ஒரு அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி இதே பாட்டு ரீ-மிக்ஸ் பண்ணி ஒரு ஆல்பமா வெளியிட்டாங்க. பாலே நடனம் கத்துக்க நெனக்கிற தன்னோட பெண்ணுக்கு ஒரு அம்மா எப்படி ஊக்கமாயிருந்து வழிநடத்துறாங்கன்னு அந்த வீடியோல சொல்லப் பட்டிருக்கும். பின்னணியில் இந்த பாட்டு ஒலிச்சிட்டிருக்கும். அந்த ஆல்பத்தைப் பாத்து தான் இந்த பாட்டு பல வருஷங்களுக்கு அப்புறம் ஞாபகம் வந்துச்சு. வழக்கம் போல நெட்ல தேடுனா ஒரிஜினல் பாட்டைப் பத்தி பல தகவல்கள் கெடைச்சது.


இந்த நேரத்துல இந்த பாட்டுல நடிச்சிருக்கற ஸ்மிதா பாட்டில் பத்தி சொல்லி ஆகணும். 31 வயதில் தன்னுடைய பிரசவத்தின் போது இவங்க இறக்கலைன்னா கண்டிப்பா மிகப் பெரிய நடிகையா வந்துருக்க வேண்டியவங்க. அவங்களோட பையன் ப்ரதீக், அமீர்கானின் தயாரிப்பான "ஜானே தூ யா ஜானே நா" அப்படீங்கற இந்தி படத்தில் ஜெனீலியாவோட சகோதரரா நடிச்சிருக்காராம். தூர்தர்ஷன்ல செய்தி வாசிப்பாளரா தன்னுடைய பணியைத் தொடங்குன இவங்க மெல்ல திரைப்படங்கள்ல நடிக்க வந்தாங்க. இந்திலயும், மராட்டிலயும் முத்திரை பதித்த பல திரைப்படங்கள்ல நடிச்சிருக்காங்க. ஜைத் ரே ஜைத், அர்த் சத்யா மாதிரியான ஆர்ட் படங்கள்லயும் நடிச்சிருக்காங்க. பல மசாலா படங்கள்லயும் நடிச்சிருக்காங்க. பாயும் புலி படப் பாட்டான "பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்" இந்தி பதிப்புல அமிதாப்போட இவங்க நடிச்சிருக்கறதை நீங்க பாத்துருக்கலாம்.
'அழகி' படத்துல நந்திதா தாஸுக்குப் பதிலா வேற யாராச்சும் நடிக்கலாம்னா, இவங்க மட்டும் தான் பொருந்துவாங்கங்கிறது என்னோட தாழ்மையான எண்ணம். இவங்களைப் பத்தி சொல்றதானா என்னோட "சைல்ட் ஹூட் க்ரஷ்"னு சொல்லலாம். சில முகங்களைப் பாத்தா கறுப்பா களையா இருக்காங்கன்னு சொல்லுவாங்க இல்லை...அப்பேர்ப்பட்ட ஒரு களையான அழகான முகம் ஸ்மிதா ஆண்ட்டியோடது. ஐயயோ! கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலருன்னு சொல்லிட்டனா? பரவால்ல...இருந்துட்டு போவுது. சொல்லாம விட்டுப் போனது ஒன்னே ஒன்னு இருக்கு இன்னும்...இந்த பதிவு 16.02.2006லேருந்து அதாவது நான் பதிவெழுத ஆரம்பிச்ச ரெண்டாவது மாசத்துலேருந்து ட்ராஃப்டல இருந்த பதிவுங்கிறது தான் அது.

Saturday, February 14, 2009

காதலர் தின ஸ்பெஷல் வெண்பா

"குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள்" என்னும் பதிவை அம்மாக்களின் உலகம் வலைப்பூவில் படிச்சேன். குழந்தைகளுக்காக விற்பனைக்கு உள்ள விளையாட்டு பொம்மைகள் தற்போதெல்லாம் பெரும்பாலும் வெளிநாட்டுத் தயாரிப்புகளாகவே அதுவும் குறிப்பாக சீனத் தயாரிப்புகளாக இருக்கின்றன எனக் குறிப்பிட்டிருந்தார் ஆகாய நதி. ஆறு மாதக் குழந்தையின் தகப்பன் என்ற முறையில் அக்கூற்று சரியானதே என நம்புகிறேன். Fisher Price, Funskool, Mattel ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் விளையாட்டுப் பொருட்கள் தான் இப்போது பல கடைகளிலும் மலிந்துக் கிடக்கிறது.

அந்தப் பதிவைப் படிச்சதும் சங்க காலத்துல தமிழ் இலக்கியங்கள்ல சொல்லிருக்கற பெண் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் திடீர்னு ஞாபகம் வந்தது. ஊஞ்சல், அம்மானை, கழங்கு இப்படின்னு விளையாட்டு பேர்கள் எல்லாம் திடீர்னு ஞாபகம் வந்துச்சு. நம்ம குழந்தையைச் சங்க கால முறைப்படி விளையாட்டுகள் விளையாடச் சொல்லி பழக்குனா என்னன்னு ஒரு ஐடியா தோனுச்சு. அந்த தாய் ஐடியாவை ஒரு வெண்பாவா வடிச்சா எப்படியிருக்கும்னு இன்னொரு பிள்ளை ஐடியா உதிச்சுச்சு. சோ...கவிதை எழுதுறதுக்கே கைடு கேட்டுட்டு இருந்த நான் என் பொண்ணு பொறந்த நேரம் வெண்பா எழுதுற அளவுக்கு முன்னேறிட்டேன். இப்போ அந்த வெண்பாவைப் பாக்கலாமா...

"செம்மீனாடிடு காகமு மாலவன்தாள் தொழுநெடும்
புன்னை பாக்கமுறை கடைபருவ மலையவள்
மொழியாம் புள்ளும்பூவும் பூண்டும் கண்டனன்
இட்டும் தொட்டுமாடி பழக பார்பி பாவை
வேண்டுவ கரும்பனை தடந்தோள் இனிதுயில்
வயிரவன் வெள்ளை கொடியோன் வேல்தீட்டி
வினைசெய் போதினிலி றுத்தான் பிடிநடை
பெண்டிர் முறமது புலிபுறம்பட ஓடுவநாடே
வான்தொடு ஊசலாடி அம்மானைபாடி பின்நல்
தோழியர் களித்திட கழங்காடி மகிழுவ
புல்வேண்டா சிகையினன் இளையவன் பகரவே
தென்னன் தமிழின் உடன்பிறந்த சிறுகால்
வளை தவழ்கையள் கிள்ளை மொழியாள்
லூசாப்பாநீ என்றனள ங்கையற் கண்ணினளே!"


அசை, சீர், தளை எல்லாம் சரியாத் தானிருக்கும்னு உங்களுக்கே புரிஞ்சிருக்கும். ஆனா இப்படியொரு அருமையான வெண்பாவைப் படிச்சி புரிஞ்சிக்க உங்களுக்கெல்லாம் கஷ்டமாயிருக்கலாம். அதுக்காகத் தான் நான் எழுதுன வெண்பாவுக்கு நானே கோனார் நோட்ஸ் போட்டுருக்கேன் கீழே -

செந்நிறம் கொண்ட சங்கரா மீன்கள் மூச்செடுக்க கடல்பரப்பின் மீது வரும் போது கொத்தித் தின்னும் நீர் காகங்களும், கடற்கரை கோயிலின் தலவிருட்சமான புன்னை மரம் திருமாலின் கருணையை நினைத்து உருகி அவன் அடி தொடும் பொருட்டு வானம் தொட எண்ணுவதை போல மேல்நோக்கி உயர்ந்து வளரும் கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகிய பாக்கம் என்பது இப்பாடல் பாடப்பட்ட இடம்.

நீர் காகமும், புன்னை மரமும் கருப்பொருளாய்க் கொண்ட நெய்தல் திணை நகரமாகிய சென்னை மாநகரிலே வசிக்கும், பிள்ளைத்தமிழ் பருவங்களில் பெண்பிள்ளைகளின் கடைசிப் பருவம் எனச் சொல்லப்படும் ஊஞ்சலாடு பருவத்தில் இருக்கும் சிறு பெண்குழந்தையவள். அப்பெண் குழந்தையானவள் அறிவிலும் அழகிலும் சிறந்தவளாகப் போற்றப் பெறும் சிவபெருமானின் துணையான மலைமகள் பார்வதி தேவிக்கு ஒப்பானவள்.

அக்குழந்தை சொல்கிறாள் "பறவைகளையும்(புள்), பூக்களையும், செடிகொடிகளையும்(பூண்டு) வேடிக்கை பார்த்து பார்த்து எனக்கு அலுத்து விட்டது. ஆகவே நான் தொட்டு கீழே போட்டு பேசிப் பழகி விளையாட ஒரு பார்பி (Barbie) பொம்மை வாங்கித் தாருங்கள்" என்று கேட்கிறாள்.

யாரிடம் கேட்கிறாள்? கருமையான நிறத்தினைக் கொண்ட பனைமரங்களைப் போன்ற வலிமையான தோள்களையும், அல்வா எனும் இனிப்பினை மதிய உணவுக்குப் பின் உண்டு விட்டு தினமும் தூங்கிய காரணத்தால் செல்லமான தொப்பை விழுந்த வயிறையும் கொண்ட என்றுமே அமைதியையே விரும்பும் வெள்ளை கொடியோன் ஆகிய தன் தந்தையிடம் கேட்கின்றாள்.

வேலினைத் தீட்டிக் கொண்டிருக்கும் வேளையில் தன் குழந்தையின் வேண்டுதலுக்கு அத்தந்தையானவன் பதில் சொல்லுகின்றான். நிற்க. அமைதியையே விரும்புபவன் வேல் தீட்டும் காரணம் என்ன என்பதை நீங்கள் இங்கு யோசிக்க வேண்டும். இரவு உணவிற்காக வெங்காயங்களையும், தக்காளிகளையும் நறுக்குவதற்காக மேலிட உத்தரவின் பேரில் கத்தியைத்(வேல்) தீட்டிக் கொண்டிருக்கிறான் என்பது இவ்வரிகளில் புலவர் நமக்கு குறிப்பால் உணர்த்துவது.

காய்கறிகளை அரிந்து கொண்டே குழந்தைக்கு என்ன பதில் சொல்லுகிறான்? "பெண் யானையின் நடையைப் போன்ற ஒயிலைக் கொண்டவர்கள் தமிழ் பெண்கள். ஒயில் கொண்ட பெண்கள் ஆனாலும் வீரத்திலும் அவர்கள் மிகச் சிறந்தவர்கள். எத்தகைய வீரம் என்றால் அரிசி புடைத்துக் கொண்டிருக்கும் போது எட்டிப் பார்க்கும் புலியை முறத்தைக் கொண்டு அதன் பின்புறத்தில் அடித்து ஓட ஓட விரட்டியடிக்கும் வீரம் கொண்ட பெண்கள். அத்தகைய அழகும் வீரமும் ஒருசேர அமைந்த தமிழ் பெண்கள் கொண்ட நாட்டில் அவர்கள் வழியில் வந்தவள் நீ. பார்பி பொம்மை வைத்து விளையாடுவதற்குப் பதிலாய் வானம் தொடுமாறு ஊஞ்சலாடி, அம்மானை பாடி, தோழியருடன் மகிழ்ந்து கழங்கு ஆடுவாய் ஆனால் புத்துணர்ச்சி பெருகும், குரல் வளம் பெருகும், ஞாபக சக்தியும், செய்யும் செயல்களில் கவனமும் கூடும்" என்று தன் ஆருயிர் மகளுக்கு அறிவுரை சொல்கின்றான். அறிவுரை சொல்கின்றவன் எத்தகையவன் என்றும் பாடலாசிரியர் குறிப்பிட மறக்கவில்லை. புல்வேண்டா - புல்லினை எப்போதும் விரும்பாத, சிகை- கேசம்...அப்படின்னா புலி + கேசி...புலிகேசி. அதாவது இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசியின் வழிவந்த இளையவன் என்று சொல்கிறார்.

தமிழும், தென்றல் காற்றும் உடன் பிறப்புக்கள். இரண்டும் ஒரே தெற்குத் திசை மலை - பொதிகை மலையில் தான் தோன்றின! தெற்கில் இருந்து வீசுவதால் தானே தென்றல்ன்னு பேரு! சிறுகால் = தென்றல்; குட்டிப் பாப்பாவின் சிறு கால் போல தென்றல் தத்தித் தத்தி வீசுகிறதாம். அத்தகைய தத்தித் தத்தி நடக்கும் சிறுகால்களைக் கொண்ட சிறிய வளையல்களைத் தன் கையில் அணிந்துள்ள கிளியைப் போன்ற இனிய மொழியினைக் கொண்ட அழகிய பெரிய கண்களைக் கொண்ட அப்பெண் குழந்தை தன் தந்தையைப் பார்த்து கேட்கின்றாள் "லூசாப்பா நீ?".

(இப்போ பதிவுக்கும் அதன் தலைப்புக்குமான தொடர்பைச் சொல்லிடறேன். காதலர் தினத்தன்னிக்கு ஸ்பெஷலா முயற்சி பண்ணி எழுதுன வெறும்+பாடல் = வெண்பா ன்னு அர்த்தம்)

Friday, January 16, 2009

நந்தலாலா - கைவீசி நடக்கற காத்தே - சில்லுன்னு ஒரு பாட்டு

நேத்து சாயந்திரம் நந்தலாலா படத்து ஒலித் தகடு வாங்குனதுலேருந்து இந்த பாட்டை ஒரு 25-30 வாட்டி கேட்டிருப்பேங்க. சில பாடல்களைக் கேட்டால் ரொம்ப சந்தோஷமா இருக்கும். இது அந்த மாதிரியான அருமையான ஒரு டூயட் பாட்டு. டூயட் பாட்டுன்னாலும் இது காதல் பாட்டு இல்லை. பெரும்பாலும் இயற்கையை வர்ணிச்சு இருக்கற ஒரு துள்ளலான பாட்டு. நந்தலாலா ஆல்பத்துல மொத்தம் ஆறு பாட்டு. மூனு பாட்டை இளையராஜா பாடிருக்காரு, அதுல ஒரு பாட்டுல அவரோட பேரன் யதீஸ்வரனும்(கார்த்திக்ராஜா பையன்) ரெண்டு வரி பாடிருக்காரு. ஒரு பாட்டு நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவங்க மொழியிலேயே பாடற பாட்டு, ஒரு பாட்டு யேசுதாஸ் பாடிருக்காரு. கைவீசி நடக்கற காத்தேங்கிற இந்தப் பாட்டும், இளையராஜாவும் அவங்க பேரனும் பாடிருக்கற "ஒரு வாண்டுக் கூட்டமே"ங்கிற பாட்டும் படத்துல இல்லையாம். படத்துல இல்லன்னாலும் இந்த பாட்டு ஒரு ரவுண்டு வரும்னு நான் நெனைக்கிறேன்.

இளையராஜா- பழனிபாரதி கூட்டணி பத்தி சொல்லியே ஆகனும். ராஜாவின் பாடல்களுக்கு அநேகமா வாலி தான் பாட்டெழுதுவாரு. ஆனா எப்பவாச்சும் ஒரு பாட்டு எழுதுற பழனிபாரதி பாட்டுங்க செம ஹிட்டு ஆகிடும். உதாரணத்துக்குச் சொல்லனும்னா - காதலுக்கு மரியாதையில் வர்ற "என்னைத் தாலாட்ட வருவாளா?", பிதாமகன்ல வர்ற "இளங்காத்து வீசுதே" இதையெல்லாம் சொல்லலாம். இந்த பாட்டுலயும் பழனிபாரதியின் வரிகள் ரொம்ப அருமையா இருக்கு. நந்தலாலா படத்துல மத்த பாட்டுகளும் நல்லாருந்தாலும்(எனக்கு பிடிச்சிருந்தாலும்), எல்லாருக்கும் பிடிக்குமாங்கிறது சந்தேகம் தான்...ஏன்னா பாட்டுங்க கொஞ்சம் ஸ்லோவா இருக்கும். ஸ்லோவா இருந்தாலும் திரைக்கதைக்குப் பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன். ஆனா நான் சொல்லற இந்தப் பாட்டு இசையிலயும் சரி, வரிகள்லயும் சரி, குரல்லயும் சரி எல்லாருக்கும் பிடிக்கும்னு நெனக்கிறேன். கேட்டுப் பாருங்க.

படம் : நந்தலாலா(2009)
பாடல் : பழனிபாரதி
இசை : இளையராஜா
பாடியது : விஜய் ஜேசுதாஸ், ஸ்வேதா, மது பாலகிருஷ்ணன், ராகுல், சந்திரசேகர்

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே

காற்று வந்து தழுவிடும் அழகு இயற்கையின் அழகு
நேற்று இன்று தொடங்கியதல்ல இதயத்தின் உறவு
வானம் பூமி எங்கும் தாய்மை கொஞ்சும் இன்பம்
யாவும் நமது சொந்தம்

ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
அழகான கிளிக் குஞ்சே மெது மெதுவா கிளையில் நடந்திடப் பழகு

சிவப்பான இதழ் கூட்டி சுகமா சுகமா ஒரு சொல் பேசிடப் பழகு
பழக பழக உலகம் முழுதும் சொந்தம் ஒன்னு உண்டாகும்
பறந்து பறந்து ரசிக்கும் உறவில் வானமின்னும் பெரிதாகும்

மலரும் மலர்கள் உதிர்கிற பொழுதிலும்
குலுங்கி குலுங்கி சிரிப்பதை பாரு
கவலை மறந்து சிரிக்கிற இடம் தான்
கடவுள் இருந்து வசிக்கிற வீடு
ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
விளையாடும் அணில் குஞ்சே அழகாய் முதுகில் தடவிக் கொடுத்தது யாரு
உனக்காகப் பசியாற மரங்கள் முழுதும் பழங்கள் பழுக்குது பாரு
உருட்டி உருட்டி அழகா அழகா கோலிக் குண்டு கண்ணாலே
துருவித் துருவி தேடுவதென்ன சொல்லு உந்தன் மொழியாலே

வளைஞ்சு நெளிஞ்சி ஓடுது வழிகளில் உனக்கு தெரிஞ்ச திசையினில் ஓடு
வழியில் கெடைச்ச குயில்களின் பாட்டை உனக்கு புரிஞ்ச இசையினில் பாடு
ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே

காற்று வந்து தழுவிடும் அழகு இயற்கையின் அழகு
நேற்று இன்று தொடங்கியதல்ல இதயத்தின் உறவு
வானம் பூமி எங்கும் தாய்மை கொஞ்சும் இன்பம்
யாவும் நமது சொந்தம்

ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே

கேட்டுப் பாருங்கன்னு சொல்லிட்டு...பாட்டு கேக்கறதுக்கு லிங்க் தரவேயில்லையேன்னு தானே கேக்கறீங்க? சிடி விக்கறதுக்காகத் தான் படத்துல இல்லாத பாட்டைக் கூட சிடில வச்சிருக்காங்க. அதை கூட சுட்டு நெட்டுல போடறது நியாயமா? சிடியில கேட்டுப் பாருங்க. இங்க இருக்கற வரிகள் மாதிரி பாட்டும் அருமை...அதுக்கு நான் கியாரண்டி.

Thursday, January 01, 2009

மூனைத் தொட்டது யாரு - பதில்கள்

முதல்ல நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இப்போ, போன பதிவுல கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில்களைச் சொல்லிக்கிறேன்.

1. மகாபாரதம் மற்றும் பாபர்/அக்பர் காலத்து மொகலாயப் போர்களுடன் தொடர்புடைய இந்நகரம் நெசவாளர்களின் நகரம் என அழைக்கப்பட்டது. இந்த இந்திய நகரம் எது?
பானிபத்(Panipat). முன்னொரு காலத்தில் கைத்தறி போட்டு நெசவுத் தொழில் நடந்து கொண்டிருந்த காலத்தில் பானிபத் நகரம், புகழ்பெற்று விளங்கியது. பானிபத்தில் நெய்யப்படும் 'பாஞ்சா' எனப்படும் Dhurries(ஜமக்காளங்கள்), உலகெங்கிலும் புகழ்பெற்றவை.

2. பின்னோக்கி நடக்கத் தெரியாத/இயலாத ஒரே காரணத்தினாலேயே இப்பறவையும் இவ்விலங்கும் இந்நாட்டின் அரச முத்திரையில்(Coat of Arms) இடம் பெற்றிருக்கின்றன. பறவையோட விலங்கோட நாட்டோட பேரையும் சொல்லணும்.
ஈமு(Emu)எனும் பறவை, சிகப்பு கங்காரு(Red Kangaroo) எனும் விலங்கு, நாடு ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியா எனும் நாடு எப்போதும் முன்னோக்கியே செல்லும்(Advance Australia), எப்போதும் பின்னடைவு பெறாது என்பதை குறிப்பதனால், இவை தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

3. முதன்முதலில் நிலவில் கால் பதித்தவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங். அவருடன் நிலவில் இறங்கிய இன்னுமொரு ஆஸ்ட்ரோநாட்(Astronaut), இவர். நம்ம விஜய டி.ஆர். மாதிரி இவரோட பேருக்குப் பின்னாடி தங்கச்சி பாசக் கதை ஒன்னு இருக்கு.
பஸ் ஆல்ட்ரின்(Buzz Aldrin). அப்போலோ 11 எனும் விண்கலத்தில் 20 ஜூலை 1969 ஆம் ஆண்டு, நீல் ஆர்ம்ஸ்ட்ராங் உடன் முதன் முதலில் நிலவில் காலடி எடுத்து வைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ம்ஸ்ட்ராங் அளவு திறமையும் அனுபவமும் வாய்ந்தவராக இவர் விளங்கிய போதிலும், ஆர்ம்ஸ்ட்ராங் இவரை விட பொறுமை மிக்கவராகவும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தன்மையுடையவராகவும் விளங்கிய காரணத்தால், நிலவில் முதல் அடி எடுத்து வைக்கும் வாய்ப்பு இவருக்குக் கிட்டவில்லை. இவருடைய பெயருக்குப் பின்னால் ஒரு "என் தங்கை கல்யாணி" கதை இருக்கிறது. எட்வின் யூஜின் அல்ட்ரின் ஜுனியர்(Edwin Eugene Aldrin Jr.) என்ற தன்னுடைய இயற்பெயரை இவர் பஸ் அல்ட்ரின் என்று பல ஆண்டுகள் கழித்து மாற்றிக் கொண்டார். இப்பெயருக்கான காரணம் - சிறுவயதில் அவருடைய தங்கை மழலை மொழியில் "Brother" என்று அழைக்க முற்படும் போது "Buzzer" என்று கூறுவாராம். பஸ்ஸர் என்பதனைச் சுருக்கி பஸ் என்று 1988 ஆம் ஆண்டு தன் பெயரை மாற்றி வைத்துக் கொண்டார்.

4. உலகிலேயே பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய முதல் நாடு எது?
நியுசிலாந்து. 1893 ஆம் ஆண்டிலேயே பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய நாடு இது. அச்சமயத்தில் இந்நாடு இங்கிலாந்தின் ஆட்சியின் கீழ் இருந்தாலும், அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கும் முன்னதாகவே பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கி விட்டது. இச்சமயத்தில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவில் வருகிறது. பாரதியார் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்ததைப் பற்றித் தமிழ் வகுப்பில் எங்கள் தமிழாசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். இந்நேரத்தில் நான் படித்தது பாய்ஸ் ஸ்கூல் என்று தெரிவித்துக் கொள்ளக் கடமை பட்டிருக்கின்றேன். என் நண்பன் ஒருவன் "பாரதியார் காலத்துல வேணா ஆணாதிக்கம் இருந்திருக்கலாம். இப்பல்லாம் அப்படி எதுவும் கெடையாது. நீங்க வேணா பாருங்க, லேடீஸ்க்காக தனி பஸ் விட்டுருக்கோம். எல்லாருக்கும் பொதுவான பஸ்ல கூட லேடீஸ் சீட் தனியா குடுத்துருக்கோம். எங்கேயாச்சும் ஜெண்ட்ஸ் பஸ், ஜெண்ட்ஸ் சீட்னு தனியா எங்கேயாவது இருக்குன்னு கேள்வி பட்டுருக்கீங்களா மிஸ். இதுக்கு மேல இன்னும் என்ன குடுக்கனும்னு எதிர்பார்க்கறீங்க"னு கேட்டான். அதுக்கு மிஸ் சொன்ன பதில் இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. "நீ சொல்றதெல்லாம் சரிதாம்பா. ஆனா இதெல்லாம் நீங்க குடுத்து தான் பெண்கள் எடுத்துக்கனும்னு நெனக்கிறே பாரு அது தான் ஆணாதிக்கம்" அப்படின்னாங்க. ஏனோ அதை இன்னும் மறக்க முடியலை. இதெல்லாம் கேட்டுத் திரிந்திட்டோம்னு மட்டும் நெனச்சிக்காதீங்க...இன்னும் தம்பி புலிக்குட்டி நாகை சிவாவைச் சேர்ந்த எம்சிபி தான் நாங்களும் :)

5. "If it doesn't sell, it isn't creative" என்பது எந்த விளம்பரத்துறை பிரபலத்தின் கூற்று?
டேவிட் ஒகில்வி(David Ogilvy). இங்கிலாந்தில் பிறந்த இவர், விளம்பரத்துறையின் ஜாம்பவானாக ஆவதற்கு முன்னர் ஒரு சமையல்காரராகவும், ஒரு விற்பனை பிரதிநிதியாகவும், ஒரு காப்பி ரைட்டராகவும் பணியாற்றியிருக்கிறார். மேற்கண்ட இக்கூற்று ஒரு விளம்பரம் எப்படியிருக்க வேண்டும் என்பதை மிகச் சுலபமான மொழியில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் சொல்லியிருக்கிறார் என்பது என் எண்ணம். அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கு சுட்டவும்.

6. தபால் அட்டைகளைச் சேகரிக்கும் பொழுதுபோக்கின்(Hobby) பெயர் என்ன?
டெல்டியாலஜி(Deltiology). நினைத்தது போலவே பலரும் தபால் அட்டைகளை தபால் தலைகள் என்றெண்ணி "Philately" என்று பதில் அளித்திருந்தனர். உலகிலேயே மூன்றாவது பிரபலமான பொழுதுபோக்கு இது. வண்ணமிகு படங்கள் கொண்ட Picture Postcards சேகரிப்பதில் ஃபின்லாந்து நாட்டினர் மிக அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். இதை பற்றி விரிவாக வேறொரு சமயத்தில் எழுதுகிறேன்.

7. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இராமலிங்க அடிகளார் இயற்றிய "திருவருட்பா" என்பது மருட்பா அல்ல என்று அதன் பெருமைகளை சைவ சமயப் பெரியவர்களுடன் வாதிட்டு நிலைநிறுத்திய இஸ்லாமிய தமிழறிஞர் யார்?
சதாவதானி செய்குத் தம்பி பாவலர். எட்டாவது படிக்கும் போது என நினைக்கிறேன் - அப்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மாலை 7.30 அல்லது 8 மணியளவில் "உலாவரும் ஓளிக்கதிர்" எனும் நிகழ்ச்சி ஒன்று வரும். தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளைப் பற்றிய செய்தி தொகுப்பு தான் இந்நிகழ்ச்சி. அதில் ஒரு நாள் "சதாவதானி செய்குத் தம்பி பாவலர் அவர்களுக்கான விழா" பற்றிய செய்தி வந்தது. அதில் அப்போது என்ன சொன்னார்கள் என்றெல்லாம் எதுவும் நினைவில் இல்லை. ஆனால் அவருடைய பெயர் ஏனோ நினைவில் நின்றுவிட்டது. பின்னொரு நாள் அதே தூர்தர்ஷனில் "தசாவதானம்" நிகழ்ச்சியை ஒருவர் செய்துக் காட்டினார். ஒரே நேரத்தில் பத்து வெவ்வேறு செயல்களைச் செய்யக் கூடிய திறமை படைத்தவரை "தசாவதானி" என்றுச் சொல்வர். அப்போது தான் தசாவதானியே இவ்வளவு திறமையானவர் என்றால் நூறு வெவ்வேறு செயல்களைச் செய்யக் கூடிய "சதாவதானி" எத்தகையவர் என்ற வியப்பு மேலிட்டது. இணையம் என்ற ஒன்று வந்த பின் தான் சதாவதானி செய்குத் தம்பி பாவலர் குறித்து தேடினேன். தேர்ந்த தமிழறிஞரான இவர் வள்ளலார் எழுதிய திருவருட்பா அருளுடையது அன்று அது ஒரு "மருட்பா" எனும் யாழ்ப்பாணம் ஆறுமுகத்து நாவலர் கருத்தை மறுதலித்து திருவருட்பா மருட்பா அன்று என வாதிட்டுப் பேசி அதன் பெருமையையும் நிலைநிறுத்தினார்.

வள்ளலார் பற்றிய ஒரு வலைத்தளத்தில் எழுதப்பட்டிருப்பதிலிருந்து ஒரு பத்தியை எல்லோரும் படிப்பதற்காக இங்கு தருகிறேன். முழுவதும் வாசிக்க இங்குச் சுட்டுங்கள்.

"ஓர் இஸ்லாமியப் புலவர் சைவ சமய வாதிகளுக்கிடையே நுழைந்து, அவர்களது குதர்க்க வாதங்களைத்தம் தருக்கவாதத் திறமையால் தகர்த்துத் தவிடு பொடியாக்கியதைப் பாராட்டி காஞ்சிபுரத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அவரது இனிய சொற்பொழிவைப் பாராட்டி ' தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம் ' என்ற பட்டம் வழங்கப்பட்டது. பாவலரை யானை மேல் அமர்த்தி நகர்வலம் செய்வித்தனர். காஞ்சி ஆலயத்தார் ஓர் இஸ்லாமியப் புலவருக்கு பூரணகும்ப மரியாதை செய்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சிகளால் கவரப்பட்டு பாவலரையே குருவாக ஏற்றுக்கொண்டார் திரு.வி.க. பாவலர் என் குருத்தானத்தில் இருக்கிறார். இராமலிங்க சுவாமிகளின் பாடல்களை என் குரு கதிரைவேற்பிள்ளை 'மருட்பா' என்ற பொழுது, அவருக்கு எதிராகப் பாவலர் ' அவை அருட்பாதாம் ' என்று சொற்பொழிவாற்றினார். அவருடைய சொற்பெருக்கை நான் குறிப்பெழுதிக்கொண்டு போய் என் குருவிடம் காட்டுவேன் இப்பொழுது என் குரு இறந்து விட்டதால் தமிழ் மரபுப்படி அவருடைய எதிரியாகிய பாவலர் தாம் என் குருவாகின்றார் என்று தம் நாட்குறிப்பில் எழுதினார்"


8. மண்ணரிப்பைத் தடுக்க பயன்படுவது இத்தாவரம். இதன் தாவரவியல் பெயர்(Botanical name - இலத்தீன் மொழியில்), தமிழில் இது அறியப்பெறும் பெயரை ஒட்டியே இருக்கும். இத்தாவரம் எது?
வெட்டிவேர். இதன் தாவரவியல் பெயர் Vetiveria zizanioides. வாசனாதி திரவியங்கள் தயாரிக்கவும், மண்ணரிப்பைத் தடுப்பதற்கும் புல் வகையைச் சார்ந்த இத்தாவரம் பெரிதும் பயன்பெறுகிறது. வெட்டிவேரின் பயன்களைக் குறித்து தமிழ்மணத்தில் வின்செண்ட் எனும் பதிவர் எழுதியிருக்கும் பதிவுகளைக் காணலாம். உண்மையில் வின்செண்ட் அவர்களின் பதிவுகளைப் பார்த்த பின்னர் தான் வெட்டிவேரைக் குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் பிறந்தது. வெட்டிவேர் என்பது ஏதோ வெட்டித் தனமான ஒரு வேர் என்று இருந்த கருத்து அதன் பின்னர் பல நாடுகளிலும், வெட்டிவேர் எந்தளவுக்கு பயன்பாட்டில் இருக்கிறது எனத் தெரிந்ததும் தகர்ந்து போனது.

9. ஒரு நிறுவனத்துக்குள்ளேயே மற்ற துறைகளை விட கூடுதல் தன்னாட்சியையும்(autonomy), கூடுதல் ரகசியத்தன்மையையும், குறைவான அதிகாரிகளின் கண்காணிப்பும்(bureaucracy) கொண்ட ஒரு துறையை இவ்வாறு அழைப்பர். இப்பெயர் போர் விமானங்கள் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தினால் முதன்முதலாகப் பயன்படுத்தப் பட்டு இன்னமும் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது.
ஸ்கன்க் வர்க்ஸ்(Skunk Works). இக்கேள்விக்கு யாருமே பதில் சொல்லவில்லை. போதுமான அளவு க்ளூ கொடுத்திருக்கேன்னு தான் நெனச்சேன். க்ளூவை வச்சே பாப்போமா? போர் விமானம் அதுவும் அமெரிக்கப் போர் விமானம் என்றால் சட்டென்று எது நினைவுக்கு வரும்? F-16 வருமா? F-16 தயாரிக்கும் நிறுவனம் என்று கூகிளினால் Lockheed Martin என்று பதில் வரும். Lockheed Martin+Secrecy+Bureaucracy என்று கூகிளில் தேடினால முதல் பக்கத்தில் இரண்டாவது ரிசல்ட்டே "Skunk works" தான். லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தில் 1943ஆம் ஆண்டிலிருந்தே இப்பதம் பயன்படுத்தப் பட்டு வந்திருக்கிறது. கட்டுப்பாடுகள் குறைவாகவும், அதிக ரகசியத்தன்மை உடைய ப்ராஜெக்ட்களை லாக்ஹீட் நிறுவனத்தில் "ஸ்கன்க் வர்க்ஸ்" எனும் இத்துறை குறைந்த கால அவகாசத்தில் முடித்துக் கொடுத்திருக்கின்றது. இந்நிறுவனத்துக்கு மட்டும் ப்ரத்யேகமாக இருந்த இப்பதம், இப்போது மற்ற நிறுவனங்களாலூம் பயன்படுத்தப் படுகிறது. லாக்ஹீட் நிறுவனத்தின் ஸ்கன்க் வர்க்ஸ் லோகோ கீழே.

ஸ்கன்க் வர்க்ஸ் எனும் இப்பெயர் அக்காலத்தில் பிரபலமாக இருந்த "Skonk Works" எனும் காமிக் தொடரிலிருந்து வந்ததாகும்.

10. பத்ருத்தீன் ஜமாலுதீன் காஃஜி எனும் இயற்பெயர் கொண்ட இந்நகைச்சுவை நடிகரின் திரைப்பெயர் ஒரு உலகப் புகழ்பெற்ற மதுபானத்தின் வியாபாரப் பெயராகும்(Brand name). இவர் யார்?
ஜானி வாக்கர்(Johnny Walker). இந்தி திரைப்படங்களில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக இவர் விளங்கினார். மும்பையில் பெஸ்ட் பேருந்தில் நடத்துனராய் பணிபுரிந்து கொண்டிருந்த இவர், மக்களை மகிழ்விக்க சிலபல செயல்களைச் செய்வாராம். ஒரு முறை பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பல்ராஜ் சஹானி எனும் கதாசிரியரின் பார்வை இவர் மேல் படிந்த காரணத்தால் இவர் நடிகரானார். தன்னுடைய முதல் திரைப்படத்தில் ஒரு குடிகாரனுடைய வேடமேற்று நடித்தார். அதன் பின் புகழ்பெற்ற ஸ்காட்ச் விஸ்கி மதுபான பிராண்டான ஜானி வாக்கர் என்பதே இவருடைய பெயரானது.


ரொம்ப நாளா, குவிஸ் பதிவுகளைப் பத்தி ஒரு விஷயம் சொல்லணும்னு நெனச்சி வச்சிருந்தேன். அது என்னன்னா இத்தகைய குவிஸ்களின் மூலம் மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வம் உருவாக வேண்டியது அவசியம். தனக்கு தெரிஞ்சதை எல்லாம் காட்டிக் கொள்வதை போல ஒரு குவிஸ் பதிவு இருக்கக் கூடாது என்பதில் முடிந்த வரை கவனமாக இருந்து வருகிறேன். குவிஸ் என்றால் ஒரு 'teasing quality' இருக்க வேண்டும். எங்கோ கேள்வி பட்டது மாதிரி இருக்கே, க்ளூக்களைக் கொஞ்சம் யோசித்தால் பதில் தெரிந்து விடும் போலிருக்கே என்று முயற்சி செய்யத் தூண்ட வேண்டும். என்னுடைய குவிஸ் பதிவுகள் குறித்து மேலும் தங்கள் கருத்துகளைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நான் குவிஸ்ஸில் கேட்கும் கேள்விகள் எல்லாமே குவிஸ் புக்குகளிலிருந்தோ அல்லது இணைய தளத்திலிருந்து எடுப்பது கிடையாது. சில கேள்விகள் எங்கோ எப்போதோ கேள்வி பட்டவையாக இருக்கும், நான் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் இதை பார்க்கிறேன். உதாரணத்திற்கு பஸ் ஆல்ட்ரின் குறித்த கேள்வி. அப்போலோ 13 என்பது வெற்றிபெறாத ஒரு நிலவுப் பயணம். அப்போலோ 13 என்ற பெயரில் வெளிவந்த திரைப்படத்தை மிகவும் விரும்பி ரசித்துப் பார்த்தேன். அப்பயணத்தில் பங்கேற்ற விமானிகளின் பெயர் அனைத்தும் நெடுநாட்கள் வரை நினைவில் இருந்தது. ஏனோ அப்போலோ 11 பயணத்தில் பங்கேற்ற பஸ் ஆல்ட்ரினின் பெயரை அப்போலோ 13 பயணத்துடன் தொடர்பு படுத்திவிட்டேன். ஒவ்வொரு முறையும் குவிஸ் பதிவினன வலையேற்றுவதற்கு முன்பும் சில மணி நேரங்கள் செலவிட்டு விபரங்களைச் சரி பார்ப்பேன். இம்முறை அதை ஸ்ட்ரிக்டாகச் செய்யாத காரணத்தால் கேள்வியில் பிழைகள் புகுந்து விட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல இன்னும் கொஞ்சம் கவனமா இருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.

அப்படியே இன்னொரு விஷயம் - பெங்களூரில் என்னுடைய ப்ராஜெக்ட் முடிவுக்கு வந்துவிட்டது. 1 ஜனவரி 2009 முதல் வேலை நிமித்தமாகவும் அடியேன் சென்னைவாசி என்பது நியூஸ்.

Monday, December 29, 2008

மூனைத் தொட்டது யாருடா? - குவிஜ் பதிவு

பத்து கேள்விகளைக் கொண்ட ஒரு பொது அறிவு கேள்வி பதில் பதிவு இது.

1. மகாபாரதம் மற்றும் பாப்ர்/அக்பர் காலத்து மொகலாயப் போர்களுடன் தொடர்புடைய இந்நகரம் நெசவாளர்களின் நகரம் என அழைக்கப்பட்டது. இந்த இந்திய நகரம் எது?
2. பின்னோக்கி நடக்கத் தெரியாத/இயலாத ஒரே காரணத்தினாலேயே இப்பறவையும் இவ்விலங்கும் இந்நாட்டின் அரச முத்திரையில்(Coat of Arms) இடம் பெற்றிருக்கின்றன. பறவையோட விலங்கோட நாட்டோட பேரையும் சொல்லணும்.
3. முதன்முதலில் நிலவில் கால் பதித்தவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங். அவருடன் நிலவில் இறங்கிய இன்னுமொரு ஆஸ்ட்ரோநாட்(Astronaut), இவர். நம்ம விஜய டி.ஆர். மாதிரி இவரோட பேருக்குப் பின்னாடி தங்கச்சி பாசக் கதை ஒன்னு இருக்கு. ( இந்த கேள்வியின் இரண்டாம் பாதியை நேற்று தவறோடு வெளியிட்டு விட்டேன். நேற்று இக்கேள்வியின் முதல் பாதியைச் சரியாகச் சொல்லியவர்கள், இதனை மீண்டும் முயலும் தேவையில்லை. தவறுக்கு வருந்துகிறேன்)
4. உலகிலேயே பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய முதல் நாடு எது?
5. "If it doesn't sell, it isn't creative" என்பது எந்த விளம்பரத்துறை பிரபலத்தின் கூற்று?
6. தபால் அட்டைகளைச் சேகரிக்கும் பொழுதுபோக்கின்(Hobby) பெயர் என்ன?
7. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இராமலிங்க அடிகளார் இயற்றிய "திருவருட்பா" என்பது மருட்பா அல்ல என்று அதன் பெருமைகளை சைவ சமயப் பெரியவர்களுடன் வாதிட்டு நிலைநிறுத்திய இஸ்லாமிய தமிழறிஞர் யார்?
8. மண்ணரிப்பைத் தடுக்க பயன்படுவது இத்தாவரம். இதன் தாவரவியல் பெயர்(Botanical name - இலத்தீன் மொழியில்), தமிழில் இது அறியப்பெறும் பெயரை ஒட்டியே இருக்கும். இத்தாவரம் எது?
9. ஒரு நிறுவனத்துக்குள்ளேயே மற்ற துறைகளை விட கூடுதல் தன்னாட்சியையும்(autonomy), கூடுதல் ரகசியத்தன்மையையும், குறைவான அதிகாரிகளின் கண்காணிப்பும்(bureaucracy) கொண்ட ஒரு துறையை இவ்வாறு அழைப்பர். இப்பெயர் போர் விமானங்கள் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தினால் முதன்முதலாகப் பயன்படுத்தப் பட்டு இன்னமும் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது.
10. பத்ருத்தீன் ஜமாலுதீன் காஃஜி எனும் இயற்பெயர் கொண்ட இந்நகைச்சுவை நடிகரின் திரைப்பெயர் ஒரு உலகப் புகழ்பெற்ற மதுபானத்தின் வியாபாரப் பெயராகும்(Brand name). இவர் யார்? சினிமா இல்லாமே குவிஜே இல்லையான்னு ஒவ்வொரு தரமும் கேக்கற நம்ம கொத்ஸுக்காகவாக்கும் இந்த கேள்வி.

பல பதிவுகள்ல பதிவோட தலைப்புக்கும் பதிவுக்கும் உள்ள தொடர்பை எக்கச்சக்க பில்டப்பு எல்லாம் குடுத்து கடைசியிலே சொல்லிருக்கேன். இந்த பதிவோட தலைப்புக்கும் மூனாவது கேள்விக்கும் சம்மந்தம் இருக்குன்றதுனாலே இந்த தலைப்பை வைக்கலை. பின்ன?..."மூனைத் தொட்டது யாருடா"ன்னு நான் உங்களை யாரையும் மரியாதை குறைவா கேட்டேன்னும் நெனச்சிக்காதீங்க. அப்படியே கேட்டுட்டாலும் மூனைத் தொட்டது ஆர்ம்ஸ்ட்ராங்க் இல்லை அமிர்தலிங்கம்னு நீங்கல்லாம் ரொம்பச் சரியாச் சொல்லிடுவீங்கன்னும் எனக்குத் தெரியும். அப்புறம் மூனைத் தொட்டது யாருடான்னு எதுக்குடா தலைப்பை வைச்சேன்னு தானே கேக்கறீங்க? ஹி...ஹி...அதொன்னுமில்லீங்கண்ணா...இன்னையோட கைப்புள்ளக்கு மூனு வயசாச்சு. டிசம்பர் 29, 2005 அன்னிக்கு தமிழ் ப்ளாக் எல்லாம் நான் ஆரம்பிக்க சான்ஸே இல்லை, அதெல்லாம் தேவை இல்லாத வெட்டி வேலைன்னு என் நண்பன் திருமுருகன் கிட்ட கூகிள் சாட்ல வாய்ச் சவடால் விட்டுட்டு அன்னிக்கு சாயந்திரமே ஆரம்பிச்சது தான் இந்த கைப்புள்ள காலிங் ப்ளாக். இவ்வளவு நாளா எனக்கும் ஆதரவு தந்துட்டிருக்கற உங்க எல்லாத்துக்கும் என் மனமார்ந்த நன்றிங்கங்கோ.

Wednesday, December 24, 2008

'தலை'நகரம் - 6 : FDC மற்றும் M/s

ஃபிலாட்டெலி(Philately) என ஆங்கிலத்தில் வழங்கப்படும் பொழுதுபோக்கை நாம் தமிழில் "தபால் தலை சேகரிப்பு" என்று மொழிபெயர்த்தாலும், தபால் தலை அல்லது அஞ்சல் வில்லைகள் மட்டும் சேகரிப்பது தான் இப்பொழுதுபோக்கா என்று கேட்டால் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். இப்பதிவில் "தபால் தலை சேகரிப்பு" எனும் பொழுதுபோக்கில்வேறு என்னென்ன அடக்கம் என்பதைப் பற்றி எனக்கு தெரிந்தவற்றைச் சொல்கிறேன்.

அதற்கு முன்னாடி ஒரு நன்றி நவிலல். ரொம்ப நாளா வலைப்பூ பக்கமே வராம இருக்கோமே, இன்னிக்கு எதாச்சும் எழுதுவோம்னு நெனச்சேன். ஆனா அதே நேரம் சோம்பல் என்னை ஆட்கொண்ட காரணத்தால், போன வருடம் இதே நேரம் எழுதிய பதிவு எதையாவது எடுத்து மீள்பதிவு செய்திடுவோம்னு நெனச்சேன். அப்போ தான் போன வருடம் டிசம்பர் மாதம் "சருவாக்கள்" என்ற மனித இனம் அழிக்கப்பட்டதை நினைவு கூறும் உருகுவே நாட்டுத் தபால்தலை பற்றி எழுதியிருந்த "தலை நகரம் -3"என்ற பதிவைப் பார்த்தேன். அப்பதிவை விக்னேஸ்வரன் வலைச்சரத்தின் ஆசிரியராக செப்டம்பர் மாதம் இருந்த போது பொழுதுபோக்குகள் பற்றிய தன்னுடைய பதிவில் இணைத்திருந்ததையும் என் பதிவுகளைப் பற்றி எழுதியிருந்ததையும் கண்டேன். அதை கண்டதும், சோம்பல் பறந்து மனதில் ஒரு புதிய உற்சாகம் பிறந்தது. தபால்தலை சேகரிப்பு பற்றிய ஒரு புதிய பதிவை எழுதும் எண்ணமும் அப்போதே தோன்றியது. இவ்வேளையில் நண்பர் விக்னேஸ்வரனுக்கு காலம் கடந்ததாய் இருந்த போதிலும், என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தபால் தலை சேகரிப்பு என்றால் வெறும் அஞ்சல் உறைகளின் மீது ஒட்டப்பட்டு வெளிவரும் ஸ்டாம்ப்களைச் சேகரித்தல் என்று தான் நானும் ஐந்தாண்டுகள் முன்பு வரை நம்பி வந்தேன். ஆனால் தபால் தலை சேகரிக்கும் பொழுதுபோக்கில் தபால்தலைகளைத் தவிரவும் சேகரிக்கக் கூடிய வேறு பொருட்களும் உள்ளன.
அவற்றில் முக்கியமானவை -
1. முதல் நாள் அஞ்சல் உறை (First Day Cover)
2. குறுந்தாள் தபால் தலைகள் (Miniature Sheet)

சேகரிப்பிற்கான தபால் தலைகளை(Philately Stamps) வெளியிடும் போது ஒவ்வொரு நாட்டு தபால்துறையும் அவ்வாண்டில் என்னென்ன தபால்தலைகளை வெளியிடப் போகிறார்களோ, அதை மாதவாரியாக அட்டவணை படுத்தி ஒவ்வொன்றாக வெளியிடுவார்கள். இவ்வகை தபால் தலைகளை முதல் முறையாகப் பயன்பாட்டிற்காக வெளியிடும் போது ஒரு சிறப்பு அஞ்சல் உறையையும் வெளியிடுவார்கள். இவ்வஞ்சல் உறையை முதல் நாள் அஞ்சல் உறை(First Day Cover)என்கிறார்கள். கீழே உள்ளது 2 ஆகஸ்டு 2008 அன்று இந்திய தபால் துறையால் வெளியிடப்பட்ட அல்டாப்ரா ஆமைகளைப் பற்றிய தபால்தலையுடன் வெளியிடப்பட்ட சிறப்பு முதல் நாள் அஞ்சல் உறை. இவ்வுறையைப் பார்த்தீர்கள் ஆனால் சாதாரண உறை போல அல்லாமல், வெளியிடப்படும் தபால்தலையுடன் தொடர்புடையதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். மற்றும் சாதாரண அஞ்சல் உறைகள் போல அல்லாது வண்ணமயமாக இருக்கும். இச்சிறப்பு அஞ்சல் உறையின் மீது, அன்று வெளியிடப்படும் தபால்தலைகளை ஒட்டி அன்றைய தேதியுள்ள ஒரு சிறப்பு முத்திரையையும் குத்தி தபால்துறையினர் வெளியிடுவர். தபால் தலைகளின் மீது குத்தப்படும் முத்திரைகளை, தபால் துறையினரும் Philately ஆர்வலர்களும் "Cancellation" என்று அழைக்கின்றனர். இம்முத்திரை குத்தப்பட்டதும் பாவிக்கப்படாத தபால் தலையாக இருப்பது பாவிக்கப்பட்ட தபால் தலையாக மாறுவதன் காரணமாக, இம்முத்திரை குத்துதலை "Cancelling" என்று அழைக்கிறார்கள். முதல் நாள் அஞ்சல் உறைகளின் மீது குத்தப்படும் இம்முத்திரைகளை Special Cancellation என்று அழைக்கின்றனர். இந்த சிறப்பு முத்திரையும் தபால் தலை முதன்முதலில் வெளியிடப்படும் அந்தவொரு நாள் மட்டுமே பயன்படுத்தப்படும். அல்டாப்ரா ஆமைகளைப் பற்றிய தபால்தலை வெளியீட்டின் போது ஆமை வடிவிலான முத்திரை பயனபடுத்தப்பட்டதையும், அது வெளியான தேதியான 2 ஆகஸ்ட் 2008 என்பதனையும் முத்திரையில்(Cancellation) காணலாம். தபால்தலைகள் மட்டும் அல்லாது, இம்முதல் நாள் அஞ்சல் உறைகளுக்குகாகவும் அதன் மேல் குத்தப்படும் சிறப்பு முத்திரைகளின் அழகுக்காகவும் First Day Covers(FDC)களை சேகரிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.


புதிதாய் வெளியிடப்படும் தபால்தலைகளைப் பற்றிய தகவல்களைத் தாங்கிய ஒரு செய்தித்தொகுப்பானையும்(Brochure) தபால்துறை வெளியிடும். இத்தொகுப்பில் தபால் தலை சொல்லும் செய்தியையும், அதன் வரலாற்றையும், மற்றும் சில டெக்னிக்கல் குறிப்புகள்(அச்சான முறை, அச்சிடப்பட்ட எண்ணிக்கை, வடிவமைத்தவர் பெயர்) முதலியனவற்றையும் குறிப்பிட்டு இருப்பார்கள். அல்டாப்ரா ஆமையினைப் பற்றிய செய்தித் தொகுப்பான் கீழே உள்ள இரு படங்களில்.


இத்தொகுப்பில் கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் மிருகக்காட்சி சாலையில் வாழ்ந்த "அத்வைத்யா"வினைப் (Adwaitya) பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். அல்டாப்ரா ராட்சத ஆமையினத்தைச் சேர்ந்த இவ்வாமை 2006 ஆம் ஆண்டு இறக்கும் போது அதன் வயது கிட்டத்தட்ட 250 ஆண்டுகளாம். இந்திய பெருங்கடலில் உள்ள அல்டாப்ரா எனும் தீவில் இருந்து பெறப்பட்ட இவ்வாமை, 1757ஆம் ஆண்டு அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த ராபர்ட் க்ளைவ் என்பவருக்குப் பரிசளிக்க வேண்டி ஆங்கிலேய மாலுமிகளால், இன்னும் மூன்று ஆமைகளுடன் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் வழியில் கொண்டு வரப்பட்டதாம். 1857இல் நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போர், 1905இல் நடந்த பெங்கால் பிரிவினை, இரண்டு உலக யுத்தங்கள், இந்தியா விடுதலை அடைந்தது போன்ற இருநூறு ஆண்டுகளைக் கடந்த வரலாற்று நிகழ்வுகளைக் கண்டுள்ளதாம். அலிப்பூர் ஜூவில் பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் இவ்வாமையைக் கண்டிருக்கிறார்களாம்.

இந்திய இராணுவத்தின் சீக்கிய படையின் 14வது பிரிவான நாபா அகால் பிரிவின் 250ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி 21 ஜூலை 2008 அன்று இந்திய தபால் துறையினரால் வெளியிடப்பட்ட தபால் தலையும் முதல் நாள் அஞ்சல் உறையும் கீழே.


சிறப்பு முத்திரை குத்தப்பட்ட முதல்நாள் அஞ்சல் உறையைக் கண்டதும் நம் மனதில் ஒரு கேள்வி எழலாம். இவ்வஞ்சல் உறைகளை, மற்ற அஞ்சல் உறைகளைப் போன்று கடிதப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்த முடியுமா என்று. இதற்கான பதில் - ஆம், முடியும். முதல் நாள் அஞ்சல் உறையினுள் தங்கள் கடிதத்தை வைத்து வேறொருவருக்கு அனுப்ப முடியும். ஆனால் உறையின் மேல் ஒட்டப்பட்டிருக்கும் தபால்தலை வெளியிடப்படும் அன்று மட்டும் தான் இதைச் செய்ய முடியும். ஏனென்றால் தபால் தலையின் மீது குத்தப்பட்டிருக்கும் சிறப்பு Cancellation முத்திரையில் வெளியீட்டு நாள் குறிக்கப் பட்டு இருக்கிறது பாருங்கள், அதன் காரணத்தால். வெளியீட்டு நாள் அன்று கடிதப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பெறும் அஞ்சல் உறையினை சேகரிப்பவர்களும் இருக்கிறார்கள். இவற்றை Real Posted FDC என்று சொல்கிறார்கள். கீழே இருக்கும் படம் சீனாவைச் சேர்ந்த சேகரிப்பாளர் ஒருவருக்கு, அவருடைய முகவரியை எழுதி இந்தியாவிலிருந்து வெளியீட்டு நாள் அன்று அனுப்பி வைக்கப்பட்ட "மல்லிகைப்பூ" பற்றிய தபால் தலையும் முதல் நாள் அஞ்சல் உறையும். ஏப்ரல் 2008இல் வெளியிடப்பட்ட இந்த குறிப்பிட்ட "மல்லிகைப்பூ" தபால் தலை நறுமணம் மிக்க தபால் தலை (Perfumed Stamp) என்பது அதன் சிறப்பு. இத்தபால் தலையினை முகர்ந்து பார்த்தீர்கள் ஆனால் மல்லிகைப்பூ நறுமணம் கமழும்.


தபால் தலைகளை அச்சிடும் போது, அதன் நீள அகலத்தைக் கருத்தில் கொண்டு 100 அல்லது 150 தபால் தலைகள் கொண்ட ஒரு தாளாக அச்சிடுவது வழக்கம். ஆனால் சேகரிப்பிற்கான தபால் தலைகளை இவ்வாறான பல தபால் தலைகளைக் கொண்ட ஒரு தாளாக அச்சிடாமல், சில தபால் தலைகள் அடங்கிய ஒரு சிறிய தாளாகவும் அச்சிடுவார்கள். இதனை "Miniature Sheet" என்கிறார்கள். குறுந்தாள் தபால்தலைகள் என்பது இதனைத் தமிழில் குறிப்பிடுவதற்காக நானே செய்த மொழிபெயர்ப்பு :)

மினியேச்சர் தாள்களும் வண்ணம் மிக்கவை, காண்போர் மனதைக் கவறுபவை. இவைகளையும் தபால் தலை சேகரிப்பின் போது சேகரிக்கலாம். இந்த மினியேச்சர் ஷீட்களில் இருந்து தபால் தலைகளைத் தனியாகப் பிரித்தெடுத்தோ அல்லது முழு தாளையுமே அஞ்சல் உறையின் மீது ஒட்டியோ, கடிதப் போக்குவரத்துக்கும் பயன்படுத்தலாம். ஆனால் சேகரிப்பிற்காகக் குறைந்த எண்ணிக்கையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இத்தாள்களை யாரும் மேற்கூறியவாறு பயன்படுத்துவதில்லை.

கீழே இருப்பது இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் எழுதிய "டாக் கர்" எனும் நாடகத்தினை நினைவு கூறுவதற்காக வெளியிடப்பட்ட ஒரு குறுந்தாள் தபால் தலை. தபால் தலையைப் பிரித்தெடுப்பதற்கான perforation தாளுக்குள்ளே இருப்பதைக் காணுங்கள்.


இந்தியாவில் உள்ள பண்டிகைகளைப் பற்றிய ஒரு மினியேச்சர் தாள். இதில் ஒரே தாளில் மூன்று வெவ்வேறு தபால் தலைகள் இருப்பதைக் கவனியுங்கள். சில தபால் தலைகள் மினியேச்சர் ஷீட்களாக மட்டும் கிடைக்கும், சில பெரிய தாள்களாக மட்டுமே அச்சிடப்பட்டு வெளிவரும்(அவற்றிற்கு மினியேச்சர் இருக்காது), சில தபால் தலைகள் இரண்டு வகையாகவும் அச்சிடப்பெறும். பண்டிகைக்களைப் பற்றிய இம்மூன்று தபால் தலைகளும் தனித்தனியாகவும் பெரிய தாள்களிலும் அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டது.


இந்தியத் தபால் துறையும் சீனத் தபால் துறையும் கூட்டாக வெளியிட்ட "பௌத்த கோயில்கள்" பற்றிய இரு தபால் தலைகளைக் கொண்ட ஒரு மினியேச்சர் தாள் கீழே. இந்தியாவில் உள்ள மகாபோதி ஆலயமும், சீனாவில் உள்ள வெள்ளை குதிரை ஆலயமும் இத்தபால் தலைகளில் காட்டப்பட்டிருக்கின்றன.


அடுத்த கட்டமாக, தபால் தலைகளைச் சேகரிக்கும் முறைகள் என்னென்ன என்பதனைப் பற்றி வரும் பதிவுகளில் சொல்கின்றேன். வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

Saturday, November 22, 2008

Well...

"கிச்சன்ல கொஞ்சம் வேலையிருக்கு, பாப்பாவைப் பாத்துக்கங்க" என்று தங்கமணி சொல்லிவிட்டுப் போன ஐந்து நிமிடங்களுக்கு உள்ளாக, நேற்று தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த மகள் அழுகையை அலாரம் வைத்துத் தொடக்கினாள். வயிறு பசிக்கும் போதோ, அல்லது உச்சா போய் நேப்பி ஈரமாகி தூக்கம் கலையும் போதோ தான் அமைதியாக இருக்கும் குழந்தைகள் அழத் தொடங்கும் என்பது, தந்தை ஆன கடந்த மூன்று மாதங்களில் நான் கற்றுக் கொண்ட பாலபாடம். இது போக இன்னொரு கதையும் கேள்வி பட்டேன். தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் கனவில் பிள்ளையார் வருவாராம். "உனக்கு அம்மா வேணுமா, அப்பா வேணுமா"ன்னு கேப்பாராம். அம்மாவிடம் பால் குடிப்பதனால் குழந்தைகள் "அம்மா வேணும்" என்று சொல்லுங்களாம். அதனால பிள்ளையார் நறுக்கென்று குழந்தையின் தொப்புளில் கிள்ளி விட்டுப் போய்விடுவாராம். அதனாலும் குழந்தைகள் தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டு, பயந்து போய் அழத் தொடங்குமாம். இது கேக்கும் போதே சிரிப்பை வரவழைத்த கதை. ஏனென்றால் பிள்ளையார் தான் இருப்பதிலேயே ஃப்ரெண்ட்லியான கடவுள். அவர் பிறந்த குழந்தைகளின் தொப்புளில் நறுக்கென்று கிள்ளிவிட்டு ஓடிவிடுவார் என்று சொல்வதை சீரணிப்பது சற்று கடினமாகத் தான் இருக்கு:) அது போக என்னை வியக்க வைக்கும் இன்னொரு விஷயம் குழந்தைகளுக்கு, அது எப்படித் தான் அம்மா தன்னருகில் இல்லை என்பது அவ்வளவு துல்லியமாகத் தெரியவருகிறதோ? என்பது தான். அதுவும் பல சமயங்களில், தங்கமணி சாப்பிடப் போகும் நேரத்தில் தான் அழுகை பலமாகும். விபரம் தெரிந்த சிலர்(பெரியவங்க தான்...) "அம்மாவை இந்த மாதிரி குழந்தைங்க சோதிக்கும். என்னை விட உனக்கு சாப்பாடு தான் முக்கியமான்னு சரியா அம்மா சாப்பிடப் போகும் போது தான் அழ ஆரம்பிக்கும்" என்று சொல்லவும் கேட்டிருக்கிறேன்.

மேல் சொல்லிய இந்த காரணங்களுள் ஒன்றினால் தான் மகள் அழுகிறாள் போலிருக்கிறது என்று எனக்கு பதில் தெரிந்த FAQக்களைப் பரிசோதித்து விட்டு troubleshooting நடவடிக்கைகளில் இறங்கினேன். "குழந்தை அழுவுது. சீக்கிரம் வந்து கொஞ்சம் என்னான்னு பாரு" என்று சத்தமாகக் கத்துவது தான் என்னிடம் இருந்த FAQக்களுக்குச் சொல்லப்பட்டிருந்த முதல் விடை. சே! சே! நாமெல்லாம் "road not taken"இல் பயணப்படும் ஆட்கள் இல்லையா? என்ற எண்ணம் சுலபமான முதல் விடையைத் தெரிவு செய்வதிலிருந்து என்னை தடுத்தது. பசி இல்லை, நேப்பி ஈரம் ஆகவில்லை என்பதை எல்லாம் உறுதிப்படுத்திக் கொண்டு, இது பிள்ளையாருடைய வேலை தான் என்று முடிவுக்கு வந்தவனாய் குழந்தையைச் சமாதானம் படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினேன். நிற்க. ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை என்பதனை அடி முதல் நுனி வரை நம்புவதால் அழும் குழந்தையை ஏன் சமாதானப் படுத்த வேண்டும் என்று கேள்வி கேட்டு என் மகளின் பாட்டியிடம்(எங்க அம்மா தான்) வாங்கிக் கட்டிக் கொண்டு ஆமாமாம் அழும் குழந்தையைச் சமாதானப் படுத்தத் தான் வேண்டும் என்று உணர்ந்து கொண்ட கதையையும் இந்நேரத்தில் சொல்லிவிடுகிறேன். "குழந்தைங்கன்னா அப்படித் தான் இருக்கும். தூக்கம் கலைஞ்சிடுச்சுன்னா அழத் தான் செய்யும். கொஞ்சி கிஞ்சி பேசித் தான் சமாதானப் படுத்தனும்" என்று அம்மா சொல்லியதற்கு "நானும் உங்களுக்குக் குழந்தை தானே? நான் தூக்கத்துலேருந்து எழுந்தா அழவாச் செய்யறேன்"னு எகத்தாளம் பேசினேன். "...இப்ப நாலு கழுதை வயசானதால அழாம இருக்கே...அர்ச்சனா வயசுல நீ எல்லாம் என்ன பாடுபடுத்தியிருக்கே தெரியுமா? என்ன காரணம்னே தெரியாம ராத்திரி ரெண்டு மணி, மூனு மணிக்கெல்லாம் எழுந்து அழுவே"அப்படின்னாங்க. "நான் குழந்தையா இருந்த போதும் இப்படித் தான் கொஞ்சி கிஞ்சி சமாதானப் படுத்துவீங்களா?" என்று கேட்டதற்கு "உஹும்...ஒரு கரண்டி எடுத்து மண்டையிலேயே மடார்னு போடுவேன். வேணா மண்டையைக் கொஞ்சம் தடவிப் பாரு. ஒடுக்கு விழுந்துருக்கும் பாரு" என்று சொல்லப் பட்டதைக் கேட்டதும் கைப்புள்ள F/o.அர்ச்சனா கப்சிப்.

சரி, குழந்தையைச் சமாதானப் படுத்துவது என்று முடிவாகிவிட்டது. அதை செயல்படுத்தும் முறைகள் என்று பார்த்தோமேயானால் தொட்டிலை வேகமாக ஆட்டிவிட்டு குழந்தையைத் தூங்க வைக்க முயல்வது, அதற்கு குழந்தை சமாதானம் ஆகவில்லை எனில் கிலுகிலுப்பையை ஆட்டிக் காட்டுவது, அதற்கும் குழந்தை டிமிக்கி கொடுத்துவிடுகிறது என்றால் தமிழ் உயிர்மெய் எழுத்துக்களான 'ரி' 'ர' 'ரோ' போன்ற எழுத்துகளை பசு மாட்டினைக் குறிக்கும் உயிரெழுத்துடன் சேர்த்து ஒரு ஒலி எழுப்ப வேண்டும். அந்த ஒலியானது பசுமாட்டின் குரலை ஒத்ததாக இல்லாமை சாலச் சிறந்தது, அவ்வாறாக இருக்கும் பட்சத்தில் அதன் பலன் எதிர்மறையானதாக இருக்கும். இம்முறைகளைத் தனித் தனியாகவோ, அல்லது ஒன்றன் பின் ஒன்றனாகவோ அல்லது எல்லாவற்றையும் சேர்த்தோ கையாளுவதனால் குழந்தை அழுகையை நிறுத்தி சமாதானம் ஆகிவிடும் என்று கத்துக்குட்டி babysitterக்கும் தெரியுமென்கிறது அகநானூறு. ஆனால் என் மகளோ, இந்த முறைகளில் எதற்கும் சம்மதிக்காமல் அழுகையைத் தொடர்ந்தாள். அவளுடைய அழுகையை நிறுத்த சினிமா பாணியில் எதாவது ஒரு தாலாட்டு பாடல் பாடித் தூங்க வைக்கலாம் என்று முடிவு செய்தேன். அச்சமயத்தில் சட்டென்று நினைவுக்கு வந்த தாலாட்டுப் பாடல்கள் இவை.
1. "தண்ணீர் தண்ணீர்" படத்தில் பி.சுசீலா அவர்கள் குரலில் "கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே" என்று திரையில் சரிதா பாடுவதாக வந்த பாடல்.
2. "சித்தி" என்ற படத்தில் கண்ணதாசன் எழுதி பி.சுசீலா அவர்கள் பாடிய "காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே" என்று திரையில் பத்மினி அவர்கள் பாடுவதாக வரும் பாடல்.
3. "இணைந்த கைகள்" படத்தில் மனோஜ்-கியான் இசையில் திரையில் அருண் பாண்டியனும் ராம்கியும் பாடுவதாக வந்த "அந்தி நேரத் தென்றல் காற்று அள்ளித் தந்த தாலாட்டு" என்ற பாடல்.
4. "சின்னத்தம்பி" படத்தில் மனோ பாடிய "தூளியிலே ஆடுகின்ற வானத்து மின்விளக்கே" என்று திரையில் பிரபு பாடுவதாக வரும் பாடல்.
5. "முந்தானை முடிச்சு" படத்தில் பாக்யராஜ் பாடுவதாக வரும் "ஆரிராரிரோ ஆரிராரிரோ" என்ற பாடல்.
6. "என் தங்கை கல்யாணி" படத்தில் கரடி சார் தானே இசையமைத்து திரையிலும் பாடுவதாக வரும் "தோள் மீது தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு" என்ற பாடல்.

ஆனா பாருங்க. இதுல எந்த பாட்டுமே நம்ம சிச்சுவேசனுக்குச் சரியா வரலை. அதாவது ஒரு அப்பா தன் மூன்று மாத மகளைச் சமாதானப்படுத்தி தூங்க வைக்கிற மாதிரி ஒரு பாட்டு. எனக்குத் தெரிஞ்சு இந்த சிச்சுவேசனுக்கு தமிழ் படங்கள்ல ஒரு பாட்டு கூட இல்லைன்னே நெனக்கிறேன். நல்ல சிச்சுவேசன் தான். ஆனா எந்த இயக்குனரும் இதை இது வரைக்கும் பயன்படுத்திக்கிட்டதாத் தெரியலை. சரி இப்போ...மேலே இருக்கற பாட்டுகளையே ஒன்னொன்னா பாப்போம். "கண்ணான பூமகனே"ங்கிற தண்ணீர் தண்ணீர் படப்பாட்டு வறட்சியில வாடற ஒரு கிராமத்துல இருக்கற ஒரு ஏழைத் தாய் தன் கஷ்டங்களையும் தாலாட்டுப் பாட்டுலேயே தன் மகனுக்குச் சொல்லற மாதிரி வர்ற பாட்டு. "காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே" அப்படீங்கற சித்தி படத்துப் பாட்டு பெண்ணாய்ப் பொறக்கறதுனால அனுபவிக்கிற கஷ்டங்களை ஒரு தாய்(சித்தி) தன் மகளுக்குச் சொல்லற மாதிரி வர்ற பாட்டு. இரயிலில் போற ரெண்டு நண்பர்கள் இரயில் பெட்டியில் பாக்கற ஒரு குழந்தைக்காகப் பாடற பாட்டு தான் இணைந்த கைகள் படத்து "அந்திநேரத் தென்றல் காற்று" பாட்டு. குரல் நல்லாருக்கற ஒரு பேக்கு பாடற பாட்டு தான் சின்னத்தம்பி படத்து "தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே". ஒரு சோகமான சிச்சுவேசன்ல ஒரு அப்பா தன் மகனுக்காகப் பாடற பாட்டு முந்தானை முடிச்சு படத்துல வர்ற "ஆரிராரிரோ ஆரிராரிரோ" பாட்டு. தன் தங்கச்சி மகனைத் தோள்ல போட்டுக்கிட்டு கரடி மாமா பாடற பாட்டு "தோள் மீது தாலாட்ட"ன்ற என் தங்கை கல்யாணி படத்துப் பாட்டு.

இப்போ நீங்களே சொல்லுங்க...மேல இருக்கற பாட்டுகள்ல எதாச்சும் ஒரு அப்பா தன் மகளுக்குப் பாடற சிச்சுவேசன்ல இருக்கா? இருந்தாலும் பாட்டு பாடணும்ங்கிறது முடிவானதுனால மேலே இருக்கற பாட்டுகள்ல, கவிஞர் வைரமுத்து எழுதி எம்.எஸ்.வி இசையமைச்ச எனக்கு புடிச்ச பாட்டான "கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே" படத்து பாட்டைப் பாடுனேன். அது மகனுக்காக ஒரு அம்மா பாடுற பாட்டுங்கிறதால ஒரு மகளுக்காக ஒரு அப்பா பாடற மாதிரி இருக்கற நம்ம சிச்சுவேசனுக்குத் தகுந்த மாதிரி
"கண்ணான பூமகளே கண்ணுறங்கு சூரியனே
அப்பா அழுத கண்ணீர் ஆறாகப் பெருகிவந்து
தொட்டில் நனைக்கும்வரை உன் தூக்கம் கலைக்கும்வரை,
ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கரை சர்க்கரையே
நீ நான் பெத்த தங்கரதம் இடுப்பிலுள்ள நந்தவனம்"
அப்படின்னு லைட்டா மாத்தி பாடுனேன். பாடும் போது எனக்கே காமெடியாத் தான் இருந்துச்சு...ஆனா ஆச்சரியம் பாருங்க அது வரைக்கும் அழுதுட்டு இருந்த என் பொண்ணு அழுகையை நிறுத்திட்டு அமைதியாத் தூங்க ஆரம்பிச்சுட்டா. கண்டிப்பா மனசுக்குள்ள "லூசாப்பா நீ"ன்னு சொல்லிக்கிட்டே வேற வழியில்லாம தான் தூங்கிருப்பான்னு நெனக்கிறேன்.

ஒவ்வொரு வாரமும் பெங்களூரிலிருந்து சென்னைக்கு எப்போதும் வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு சனிக்கிழமை காலை வருவது வழக்கம். ஆனால் இவ்வாரம் வியாழக்கிழமை காலை பெங்களூரிலிருந்து கிளம்பி அன்று மாலையே சென்னை வந்து சேர்ந்து விட்டதால் மகளுக்காகத் தாலாட்டு பாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வியாழன் அன்றே வந்ததற்கான காரணம் - ஆயாவின் பிரிவு. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ராணுவத்தில் பணியாற்றும் சித்தியுடன் தங்கியிருந்த ஆயா(அம்மாவின் அம்மா) 20ஆம் தேதி காலை எங்களை விட்டுப் பிரிந்தார். அம்மாவும், அப்பாவும் இறுதிச் சடங்குகளுக்காக விமானம் மூலம் ராஞ்சி புறப்பட்டுச் சென்றார்கள். இந்த கதையில் கூட அவங்களைப் பத்திச் சொல்லிருக்கேன். ஏனோ நமக்கு ரொம்ப நெருக்கமானவங்களோட பிரிவை அவ்வளவு சீக்கிரம் ஏத்துக்க முடியறதில்லை. ஆயா இறந்த செய்தியைக் கேட்டு பெங்களூரிலிருந்து கிளம்பிச் சென்னை வந்த போதும், ஏன் அதற்கு பிறகும் கூட ரொம்ப நேரத்திற்கும் என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு மட்டும் தான் இவ்வாறு தோன்றுகிறதா என்ற சந்தேகமும் பல சமயங்களில் தோன்றும். இறுதிச் சடங்குகள் முடிந்ததும் "எல்லா காரியங்களும் முடிந்து விட்டது" என்று அம்மா தொலைபேசிய போது தான், நான் பிறந்ததிலிருந்து அறிந்த ஒரு நெருங்கிய சொந்தத்தை இனிமேல் பார்க்க போவதில்லை என்ற உண்மை உரைத்தது. தள்ளாத வயதிலும், தன் கொள்ளுப்பேத்தியான என் மகளைப் பார்ப்பதற்காக அக்டோபரில் சென்னை வந்திருந்ததையும், அது தான் நான் அவர்களை கடைசியாகப் பார்த்த சந்தர்ப்பம் என்றும் நினைத்த போது மனம் கனத்தது, கண்கள் பனித்தன.

Monday, November 10, 2008

ஏ...ஆக்காட்டி ஆக்காட்டி

இன்னைக்கு காலையில அலுவலகத்துக்குப் போற வழியில ஒரு பாட்டைக் கேட்டேங்க. ரொம்ப வித்தியாசமா இருந்தது. கிராமத்து மணம் கமழும் இந்தப் பாடலோட வரிகள் ரொம்ப இயல்பா நல்லாருந்தது. அப்புறமா அலுவலகம் வந்து இணையத்துல தேடுனப்போ அந்தப் பாடல் "தவமாய் தவமாயிருந்து" படப்பாடல்னு தெரிய வந்தது. பாடலோட முதல் பாதியில வாத்தியங்கள் அதிகமா இல்லாம பாடகர் ஏத்த இறக்கத்தோட உணர்ச்சியோட பாடறது ரொம்ப நல்லாருக்கும். பாடலோட ரெண்டாவது பாதியில உருமி மேளம் பின்னிப் பெடலெடுத்துருக்கும். இந்தப் படம் 2005லேயே வந்துட்டாலும், நான் இப்பாடலை இன்னிக்குத் தான் முதல் முறையாக் கேட்டேன். இந்தப் படத்துல வர்ற "ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு அம்மா அப்பா" அளவுக்கு இந்த "ஆக்காட்டி" பாட்டைப் பத்தி கேள்வி பட்டதில்லை. அதனால உங்களோட பகிர்ந்துக்கலாம்னு இந்தப் பாட்டை இங்கே கொண்டாந்துருக்கேன்.

படம் : தவமாய் தவமிருந்து(2005)
பாடல் : சா.பெருமாள்
இசை : சபேஷ் - முரளி
பாடியது : ஜெயமூர்த்தி

அந்த உருண்ட மலை ஓரத்துல...
உருண்ட மலை ஓரத்துல
உருண்ட மலை ஓரத்துல
உளுந்து காயப் போட்டிருந்தேன்...
அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே...
அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே
இந்த சண்டாளச் சீமையிலே இன்னைக்கு
உருமிச்சத்தம் தான் கேட்டதென்ன...

ஏ...ஆக்காட்டி ஆக்காட்டி
எங்கெங்கே முட்டையிட்டே?
எங்கெங்கே முட்டையிட்டே?
எங்கெங்கே முட்டையிட்டே...?
நாங் கல்லத் தொளைச்சி
கருமலையில் முட்டையிட்டேன்
கருமலையில் முட்டையிட்டேன்
கருமலையில் முட்டையிட்டேன்...

நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூனு குஞ்சு
ஐயா நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூனு குஞ்சு
அந்த மூனு குஞ்சுல
மூத்த குஞ்சிக்கெரை தேடி
மூனு மலை சுத்தி வந்தேன்
நடு குஞ்சிக்கெரை தேடி
நாலு மல சுத்தி வந்தேன்
இளைய குஞ்சிக்கெரை
தேடப் போகையிலே...போகையிலே...போகையிலே...

என்னை கானாங்குறத்தி மகன்,
ஐயா என்ன கானா...கானா...ங்
குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான்
என்னை கானாங்
குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான்

எங் காலு ரெண்டும் கண்ணிக்குள்ளே
றெக்க ரெண்டும் மாரடிக்க
றெக்க ரெண்டும் மாரடிக்க
றெக்க ரெண்டும் மாரடிக்க
நான் பெத்த மக்கா
நான் அழுத கண்ணீரு
ஆறாப் பெருகி ஆனை குளிப்பாட்ட
குளமாப் பெருகி குதுர குளிப்பாட்ட
ஏரி பெருகி எருது குளிப்பாட்ட
பள்ளம் பெருகி பன்னி குளிப்பாட்ட
நான்... பெத்த... மக்கா...
நான் பெத்த மக்கா
உங்கள பாதியில விட்டு
நான் இப்போ பரலோகம்
போறேனே...போறேனே...போறேனே...

(வேகமாய்)
ஏ...ஏழைக்குருவியே நீ ஏங்கி அழக் கூடாது
கத்துங்குருவியே நீ கதறி அழக் கூடாது (2)

வலை என்ன பெருங்கனமா?
அதையறுக்க வழிகளும் இருக்குதம்மா (2)

சின்னக்குருவியே நீ சிணுங்கி அழக் கூடாது
நொய்க்குருவியே நீ நொந்து அழக் கூடாது (2)

அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்
அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்

வலியும் வேதனையும் வலையோடு போயிடுச்சி
வாழ்க்க என்னான்னு போராடி தெரிஞ்சிடுச்சி (2)

வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்
வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

நிற்க. மேலே பாட்டோட க்ரெடிட்ஸ் போட்டு இருக்கேன் இல்ல. ஆமா அதுக்கென்னங்கிறீங்களா? அது தான் பிரச்சனையே? இந்தப் பாட்டு அந்தப் படத்துல வெளிவரலை. காரணம் கோர்ட் தடை. இருபது வருஷங்களுக்கு முன்னாடி நான் இயற்றி, இசையமைச்சு பாடுன பாட்டு இதுன்னு புதுவை பல்கலைக்கழகப் பேராசிரியர் குணசேகரன் அப்படீங்கறவரு கோர்ட் தடை உத்தரவு வாங்குனதால இந்தப் பாட்டு அந்தப் படத்துல வரலை. அதை பத்தி இங்கே படிக்கலாம். ஒரு அற்புதமான பாட்டுக்கு அதுக்கு தகுந்த அங்கீகாரம் கொடுக்காத காரணத்தினால திரைப்படத்திலிருந்து தடை செய்யப்பட்ட பாடல் இது என்பது இந்தப் பாடலோட (dubious)சிறப்பு. என்னை பொறுத்த வரை இது ஒரு நல்ல தன்னம்பிக்கை ஊட்டும் பாடல், கிட்டத்தட்ட ஊமைவிழிகள் படத்துல வர்ற "தோல்வி நிலையென நினைத்தால்" பாட்டை மாதிரி. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.