பாளையங்கோட்டையிலிருந்து பின் தொடர்ந்து வந்து தாக்குதல் மேற்கொண்ட சிறு படையினால் கோட்டையை வீழ்த்த முடியாது என அறிந்த வெள்ளையர்கள் சென்னையிலிருந்தும், திருச்சியிலிருந்தும் கூடுதல் படைகளையும், தளவாடங்களையும் தருவித்தனர். கடுமையான பீரங்கித் தாக்குதலுக்குப் பின் அக்கோட்டை தகர்ந்தது. கன்னிமரா நூலகத்தில் நாங்கள் மிக ஆவலாகத் தேடிய ஜேம்ஸ் வெல்ஷ் எழுதிய 'போர் நினைவுகள்' புத்தகத்திலும் நாங்கள் எதிர்பார்த்த வகையில் கோட்டையின் கட்டுமானத்தைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. கோட்டையின் நீளம், உயரம், அகலம் மற்றும் அமைப்பு ஆகியவற்றைப் பற்றி குறிப்புகள் இருந்த அளவுக்கு கட்டுமானத்தைப் பற்றி எதுவும் இருக்கவில்லை. ஒரு ஆங்கிலேய அதிகாரியினுடைய போர்க் குறிப்புகளில் எதிரியினுடைய கட்டுமானத் நுட்பத்தைப் பற்றிய குறிப்புகளை எதிர்பார்த்தது எங்கள் தவறு தான்.
அதன் பின்னர் போர்ட்லாண்ட் சிமெண்டின் மூலக்கூறுகளைக் குறித்து படித்தோம். அதிலிருந்து எதாவது பிடிபடுமா என்ற எண்ணத்தில். கட்டுமானத்தில் உபயோகப்படுத்தப் படும் எந்தவொரு பொருளுக்கும் தாங்குதிறன்(Strength) இன்றியமையாத மூலக்கூறு(attribute). இத்தாங்கு திறன் இருவகைப்படும் -அவையாவன அழுத்தம் தாங்குதிறன்(Compressive Strength), இழுவை தாங்குதிறன்(Tensile Strength). அழுத்தம் தாங்குதிறன் ஆனது ஒரு பொருளின் மீது அதன் கொள்ளளவைக்(Volume) குறைக்கும் அழுத்தம் கொடுக்கப்படும் போது அதனால் தாங்கக் கூடிய சக்தியின் அளவு ஆகும். இழுவை தாங்கிதிறன் ஆனது ஒரு பொருளின் மீது அதன் நீளத்தை அதிகரிக்கக் கூடிய இழுவை சக்தி கொடுக்கப்படும் போது அதனால் தாங்கக் கூடிய சக்தியின் அளவு ஆகும். சுண்ணாம்பு, சிலிகா மற்றும் பல கேல்சியம் தாதுக்கள் அடங்கிய வெறும் சிமெண்டுக்கு அழுத்தம் தாங்குதிறன் அதிகம், ஆனால் இழுவை தாங்குதிறன் குறைவு. சிமெண்டினை இந்த குறைபாட்டினைக் களையவே மணல், சிமெண்ட் மற்றும் கருங்கல் கலவையான கான்க்ரீட் உபயோகிக்கிறார்கள். இக்கலவை நீரோடு நடத்தும் வேதியியல் மாற்றத்தை Hydration என்கின்றனர். Hydration எனும் மாற்றத்தால் கான்க்ரீட் கல் போன்ற தோற்றத்தைப் பெறுகிறது. சிமெண்டினைக் காட்டிலும் கான்க்ரீட்டின் அழுத்தம் தாங்குதிறன் அதிகமானது. ஆயினும் இழுவை தாங்குதிறன் ஆனது அதே அளவீட்டில்(proportion) பெருகுவதில்லை.
சிமெண்டினை விட தாங்குதிறன் அதிகமாகக் கொண்ட கான்க்ரீட்டினால்(Plain Cement Concrete -P.C.C) கூட அதிகமான இழுவையைத் தாங்க இயலாது. இக்குறைபாட்டினைப் போக்குவதற்காக கான்க்ரீட்டுடன் அதிக இழுவை தாங்குதிறன் கொண்ட எஃகினைப்(steel) பயன்படுத்துகின்றனர். இவ்வகை கான்க்ரீட்டினை(Reinforced Cement Concrete -R.C.C) பயன்படுத்துகின்றனர். பாஞ்சாலங்குறிச்சி கோட்டையினைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கரும்புச் சக்கையின் பயன்பாடு களிமண், சுண்ணாம்பு, பதநீர் கலவையைப் பலப் படுத்துவதற்காகத்(reinforcement) தான் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் RCCயில் பயன்படுத்தப் பெறும் ஸ்டீல் வழங்கும் தாங்குதிறனைக் கரும்புச் சக்கை வழங்குமா என்பது சந்தேகமே. Reinforcement ஆன கரும்புச் சக்கையை விடுத்து வெறும் களிமண், பதநீர் கலவையானது போர்ட்லாண்ட் சிமெண்டினைக் காட்டிலும் அதிக அழுத்தத் தாங்குதிறன் கொண்டாலும் இழுவை தாங்குதிறன் இல்லாமல் தற்கால கட்டுமானப் பணிகளுக்கு நம் "பழங்கால சிமெண்டினைப்" பயன்படுத்துவது சிரமமே என்று சிறுவர்கள் ஆகிய நாங்கள் பரிசோதனை சாலைக்கு செல்லாமல் நாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்தோம். அதன் பிறகு நான் 'C' படிப்பதிலும் 'CAT'க்குத் தயார் செய்வதிலும், நண்பன் ஃப்ரான்சிஸ் GREக்குத் தயார் செய்வதிலும் கவனம் செலுத்தத் துவங்கி விட்டோம்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு 2008இல் அப்போது நாங்கள் அவ்வளவு கஷ்டப் பட்டு தேடிய "போர் நினைவுகள்" புத்தகம் கூகிளில் மின்நூல் வடிவில் கண்டேன். அப்புத்தகத்தை நீங்களும் தரவிறக்கம் செய்யலாம், படிக்கலாம். கல்லூரியில் படிக்கும் போது சிமெண்டிற்காக மட்டும் ஆராய்ச்சி செய்த அப்புத்தகத்தை தற்போது மீண்டும் "ஊமைத்துரை" எனும் தலைவனுக்காகப் படித்தேன். ஏன் எனில் ஊமைத்துரை பெரும்பங்கு வகித்து வெள்ளையர்களை எதிர்த்த இரண்டாம் பாளையக்காரர்கள் போர்(Second Poligar War), ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தமிழ் மண்ணில் விளைந்த முக்கியமான ஒரு போராகும். 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகத்திற்கு முன்னோடியாகவும் விளங்கியது இப்போர். அதுவரை கும்பினியர் கண்டிராத அளவு அவர்களுடைய தரப்பில் பெரும் உயிர்ச் சேதத்தையும் விளைவித்த ஒரு போருமாகும். அப்போரில் ஊமைத்துரையின் பங்கினைக் குறித்து தேடிக் கொண்டிருந்த போது, வெல்சின் "போர் நினைவுகள்(Military Reminiscences)" மின்நூலையும், தமிழ் அரங்கத்தில் வேல்ராஜன் அவர்கள் எழுதிய "தென்னிந்தியாவில் துவங்கிய முதல் சுதந்திரப் போரின் தமிழகக் களம்" என்ற பதிவையும் படித்தேன்.

"ஆங்கிலேயர்களால் தரைமட்டமாக்கப்பட்டு, உழுது, எருக்கு விதைக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை ஆறே நாட்களில் அதிசயம் போல் எழுந்து நின்றது. தலித் மக்கள், மீனவர்கள் என்று எல்லாப் பிரிவு உழைக்கும் மக்களையும் திரட்டி ஊமைத்துரையும், சிவத்தையாவும் மக்களோடு மக்களாய் மண் சுமந்து இரவும் பகலும் அந்தக் கோட்டையைக் கட்டினார்கள். வெள்ளையனுக்கு எதிராக மக்களைத் திரட்டும் கலையில் தம்பிகள் அண்ணனை விஞ்சினார்கள். சிவத்தையா பாஞ்சாலங்குறிச்சியின் அரசனாக அறிவிக்கப்பட்டார்" என எழுதுகிறார் வேல்ராஜன்.
ஆறு நாட்களில் எழுந்து நின்ற கோட்டையையும் அதை பாதுகாத்துக் கொண்டிருந்த பாளையக்காரர்களையும் கண்டு மலைத்த ஆங்கிலேயப் படைகள், போரிட்டு மடிவது மூடத்தனம் என எண்ணி பாளையங்கோட்டைக்கு திரும்பச் சென்றனர் என எழுதுகிறார் வெல்சு.
பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பி வரும் அவசரத்தில், சிறை இருந்த வழியிலிருந்து ஒரு மைல் தூரத்தில் விருந்தில் கலந்துக் கொண்டிருந்த ஆங்கிலேயரைக் கவனிக்காமல் வந்துவிட்டனர் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள். சிறையிலிருந்து தப்பிய அவர்கள் மட்டும் ஆங்கிலேய உயரதிகாரி வீட்டில் விருந்தில் ஆயுதங்கள் ஏதுமின்றி கலந்து கொண்டிருந்த படையினர் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் நாங்கள் அனைவரும் மடிந்திருப்போம் என எழுதுகிறார் கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ். பாஞ்சாலங்குறிச்சி வரலாறும் வேறு விதமாக இருந்திருக்கும்.

"போர் நினைவுகள்" நூலில் அச்சிடப்பட்டிருக்கும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் படம்.

1977 ஆம் ஆண்டு தமிழக அரசால் கட்டப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை நினைவுச் சின்னம்.

திருச்சியிலிருந்து கர்னல் அக்னியூ தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி வந்து சேர்ந்த பீரங்கிப் படையினர், அக்கோட்டையைக் கண்டதும் இதை அழிக்கவா உங்களுக்குத் தளவாடங்கள் போதவில்லை என்று அங்கு ஏற்கனவே சண்டையிட்டுக் கொண்டிருந்த படையினரைப் பார்த்து ஏளனம் செய்தனராம். அக்கோட்டையை முதலில் கண்டவர்களுக்கு அக்கோட்டை "முட்டைக்கோசுகளைச் சேமித்து வைக்கும் ஒரு கிடங்கு போலத் தோன்றியதாம்".
சென்னையிலிருந்தும் திருச்சியிலிருந்தும் படைகள் வந்து சேருவதற்கு முன்னர், பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் காடல்குடியிலும் தூத்துக்குடியிலும் ஆங்கிலேயப் படைகளைத் தாக்கி வெற்றி பெற்றனர். தூத்துக்குடி கோட்டையில் இருந்த ஆங்கிலேய அதிகாரி பேக்கார்ட் என்பாரைப் போர்க் கைதியாகத் தூக்கி வந்துவிட்டனர் வீரர்கள். அவர்களைத் தொடர்ந்து கோட்டைக்கு வந்த பேக்கார்ட்டுடைய மனைவி தன் கணவனுக்கு உயிர்ப் பிச்சை கொடுக்குமாறு வேண்டினார். அதற்கு செவிமடுத்து அவ்வதிகாரியின் உயிருக்கு ஆபத்தில்லாமல் விடுவித்த மனிதாபிமானம் 'கேட்' என்று ஆங்கிலேயரால் அழைக்கப்பட்ட 'கட்டபொம்மன் நாயக்"கிடம் இருந்தது என்று எழுதுகிறார் வெல்சு. ஆனால் 1799ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட கட்டபொம்முவைக் குறித்து 1801 ஆம் ஆண்டில் வெல்சு தன் குறிப்புகளில் ஏன் குறிப்பிட வேண்டும் என்ற ஐயம் எழுகிறது. வேல்ராஜன் அவர்கள் அவ்வாறு உயிர்ப்பிச்சை தந்தவர் ஊமைத்துரை என்றே எழுதுகிறார். அவர் சொல்வது போல் அது ஊமைத்துரையாகத் தான் இருந்திருக்க வேண்டும்.
மற்ற பாளையக்காரர்களோடு நெருக்கமாகப் பழகி அவர்கள் அன்பினைப் பெற்றது போல் அல்லாமல் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கட்டபொம்மனோடு பேனர்மேன் தலைமையிலான ஆங்கிலேயர் கடுமையான முறையில் நடந்து கொண்டது ஏன் என்று தனக்கு தெரியவில்லை எனவும், அதன் காரணமாகவே அவர்கள் தங்களை எதிரிகளாகக் கருதினர் என்றும் தெரிவிக்கிறார் வெல்சு.
பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வீழ்ந்ததற்குப் பின் ஊமைத்துரை வெள்ளையர்களிடமிருந்துத் தப்பிக்கும் போது கடும் காயமடைகிறார். அச்சமயத்தில் அவரருகே இன்னொரு போர்வீரனும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். அவனைக் காண வரும் தன் தாயிடம் "அம்மா நான் பிழைக்க மாட்டேன், என் தலைவரைக் காப்பாற்றுங்கள்" எனக் கூறி உயிர் விடுகிறான். அச்சமயத்தில் எட்டையபுர படையினர் பின் தொடர அத்தாய் ஊமைத்துரையின் மீது வெள்ளைத் துணி போர்த்தி, பின் தொடர்ந்து வந்த படையினரிடம் "என் மகன் அம்மை நோயினால் இறந்து விட்டான்" எனக் கூறுகிறாள். இதைக் கேட்ட வீரர்கள் தலைதெறிக்க ஓடுகின்றனர். இவ்வாறாக ஊமைத்துரையின் உயிரைக் காப்பாற்றுகிறாள் அந்த ஏழைத்தாய். அதன் பின்னர் ஊமைத்துரை கமுதி சென்றடைகிறார். மருது சகோதரர்களின் துணையோடு போரைத் தொடர்கிறார். ஆனாலும் 1801ஆம் ஆண்டின் இறுதியில் வெள்ளையரால் கைது செய்யப்பட்டுத் தன் சகோதரர் துரைசிங்கத்துடன் தூக்கிலிடப் படுகிறார்.
இரண்டாம் பாளையக்காரர் போரில் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட கர்னல் ஜேம்ஸ் வெல்சு "தான் இதுவரை கண்ட மனிதர்களிலேயே மிகவும் மேன்மையும் சிறப்பும் கொண்ட தங்கிய மனிதனாக ஊமைத்துரையைக் காணுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். ஊமைத்துரையின் தலைமையை ஏற்று அவர் சொல்படி நடப்பதற்கு ஒவ்வொரு பாளையக்காரரும் தயாராக இருந்தனர் என்றும், அவருடைய வாக்கை வேதவாக்காக ஏற்றனர் என்றும் எழுதுகின்றார். ஒரு கையில் வைக்கோல் துண்டுகளை ஏந்தி தன் வாயால் அவற்றை ஊதி இது போல வெள்ளையர்களையும் ஊதி அழித்துவிடுவேன் என சைகையாலேயே தெரிவிப்பாராம்.
கடைசியாக, மே 2006இல் கீற்று இதழில் "கதையாடல்களில் கட்டபொம்மன் வரலாறு" எனும் தலைப்பில் பேராசிரியர்.மாணிக்கம் அவர்களுடனான பேட்டியில் அவர் சொல்லியுள்ள கருத்துகள் நினைவில் நிறுத்தத் தக்கன -
"கடந்த கால வரலாற்றைச் சரியாக உணர்ந்து கொண்டால் தான் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பது வரலாற்றுத் தத்துவம். அது ஒருபுறம் இருக்க, கட்டபொம்மன் ஊமைத்துரை, மருது பாண்டியர் போன்றவர்கள் ஆதிக்க சக்தியின் அடக்குமுறையை எதிர்த்த ஒரு பண்பின் கூறு, அல்லது வடிவமாகும். இத்தகைய பண்பு மனித சமுதாயத்திற்கு வேண்டிய ஒன்று. எல்லாக் காலங்களிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள். அடக்கு முறையை ஏவி மக்களை ஒடுக்குவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளதை வரலாறு உணர்த்துகிறது. எல்லாக் காலங்களிலும் ஏதாவது ஒரு இயக்கம் உரிமைக்காகப் போராடிக் கொண்டே இருக்கிறது"
"விடுதலைப் போராட்ட காலத்தில் மக்களிடம் விடுதலை உணர்வை ஏற்படுத்த கட்டபொம்மன் கதைப்பாடல்கள் பாடப்பட்டதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். எனவே தென்னாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களாகிய அழகுமுத்து சேர்வை, புலித்தேவர், கட்டபொம்மன், மருதுபாண்டியர், ஊமைத்துரை, வ.உ.சி., பாரதி போன்றவர்களைச் சாதிக் கூண்டுக்குள் அடைத்துவிடாமல், ஆதிக்கச் சக்திகளின் கொடுமையை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரப் பண்பின் அடையாளமாக - வடிவமாகக் கொண்டு சென்றால் மனித குலத்திற்கு நன்மை விளையும்."
ஒரு வாரமாக தமிழ்மண நட்சத்திரமாகப் பதிவிட வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கும், பின்னூட்டமிட்டு பெருமளவு ஆதரவு அளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு என் நட்சத்திர வாரத்தை இனிய நினைவுகளுடன் நிறைவு செய்கிறேன். வணக்கம்.



