காதலுக்கு மரியாதை படத்துல காகா ராதாகிருஷ்ணன் ஷாலினியைக் கூப்பிடற மாதிரி நான் உன்னை கூப்பிட்டிருக்கேன்னு கண்டுபிடிச்சிட்டே தானே? என்னம்மா பண்ணறது? சினிமா படம் பாத்து அதை உல்டா பண்ணி எழுதி எழுதியே பழகிப் போச்சு. காப்பியடிக்கிறது என்னமோ நமக்கு கஸாட்டா சாப்பிடற மாதிரி குளிர்ச்சியா இருக்கு. இப்ப இந்த பதிவையே எடுத்துக்கயேன். வெட்டி அங்கிள் பர்மிதா பாப்பாவுக்காக எழுதுன பதிவைப் பாத்து தான் பதிவு மூலமா கூட அப்பாக்கள் மகள்களுக்கு லெட்டர் எழுதலாம்னு தெரிஞ்சிக்கிட்டேன். உங்கப்பாவுக்கு ஒரிஜினலா ஐடியாக்களை உருவாக்கத் தெரியாட்டினாலும் காப்பியடிச்சு உல்டா பண்ணறது என்னமோ கைவந்த கலையாவே இருக்கு.
சென்னை வந்து கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கு மேல ஆகப் போகுதுமா. என்னமோ ஆன்சைட்ல அமெரிக்கால இருந்துட்டு வந்த மாதிரி என்ன பில்டப்பு வேண்டிக் கெடக்குன்னு ப்ளாக் படிக்கிற ஆண்ட்டிகளும் அங்கிள்களும் கேக்கற மாதிரியே நீயும் கேக்கறியா? போன மூனு வருஷமா கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத்னு இந்தியாவுக்குள்ளேயே சுத்திக்கிட்டு இருந்தாலும் நானும் ஆன்சைட்ல தான்மா இருந்தேன். இந்தியாவுக்குள்ளேயே ஆன்சைட் போற மக்களும் இருக்காங்கன்னு இப்ப அவங்க கூட சேர்ந்து நீயும் தெரிஞ்சிக்கிட்டே தானே. ஆனா வெளிநாடு போனா தான் அது ஆன்சைட்னு ஒரு கருத்து ரொம்ப பிரபலமா நிலவிக்கிட்டு இருக்கு. "நான் ஆன்சைட்ல இருக்கேன்"னு சொன்னா வர்ற அடுத்த கேள்வி "யூ.எஸ்ஸா?" அப்படின்னு தான். இல்லீங்க...
"சித்தூர்கட்"னோ "அகமதாபாத்"னோ நான் சொல்றதை கேட்டு பல பேரு நான் என்னமோ நக்கல் பண்ணறதா நெனச்சிருக்காங்க.
அதெல்லாம் இருக்கட்டும். மூனு வருஷமா ஆன்சைட்லேயே இருந்துட்டு...சரி...சரி...மூனு வருஷமா இந்தியாவுக்குள்ளேயே வெவ்வேறு இடங்கள்ல ப்ராஜெக்ட் பண்ணிட்டு...முதன்முறையா சென்னையில வேலை செய்யற வாய்ப்பு கெடைச்சிருக்குமா. வாய்ப்பென்ன வாய்ப்பு? "ஐயா நான் புள்ளைக்குட்டி காரன்...எனக்கு ஒரு சின்ன குழந்தை இருக்குது, குழந்தை வளர்றப்போ பக்கத்துல இருந்து பாத்துக்கனும். சென்னையில தான் ப்ராஜெக்ட் வேணும்னு" உன்னை காரணம் காட்டி தான் சென்னை வந்திருக்கேன். எனக்கு சென்னையில ப்ராஜெக்ட் கெடைச்சதுக்கு காரணம் நீ தான்மா. க்ளையண்ட் சைட்ல வேலை செய்யும் போது, தங்கியிருக்கற இடத்துலேருந்து ஆஃபிசுக்குப் போறதுக்கு பலவிதமான வழிகள் இருந்திருக்கு. சித்தூர்கட்ல இருந்தப்போ ஃபேக்டரிக்கு ஃபோன் பண்ணிச் சொன்னா ஜீப் அனுப்புவாங்க. சில சமயம் அந்த ஜீப் மைனுக்கு(mine) அதாவது லைம்ஸ்டோன் சுரங்கத்துக்குப் போயிட்டு வந்த ஜீப்பா இருக்கும். சீட்டு மேல செம்மண் ஒரு ரெண்டு லேயர் ஒட்டியிருக்கும். நாங்க அந்த ஜீப்புல போய் அந்த சீட்டைக் கம்பெனி காரங்களுக்காக பல தடவை இலவசமா சுத்தம் பண்ணிக் குடுத்துருக்கோம். அகமதாபாத்ல இருக்கறப்போவும் ஜீப் தான்...ஆனா இது கொஞ்சம் நல்ல ஜீப்...ஸ்கார்பியோ. கடைசியா பெங்களூருல வேலை செய்யறப்போ தான்மா ரொம்ப வசதியா இருந்துச்சு. கேக்கற நேரத்துல கேப்(Cab) கெடைச்சிட்டிருந்தது. BMTC பஸ்ல முண்டியடிக்காம சொகுசா கேப்ல போய் பழக்கமானதுனால உங்க டாடிக்குக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் எல்லாம் டெவலப் ஆயிடுச்சு.
இப்போ சென்னை வந்துட்டேன். ஆனா இப்ப நான் வேலை செய்யறது க்ளையண்ட் சைட் கெடையாது, அதாவது ஆன்சைட் கெடையாது. எங்க கமபெனியோட சொந்த ஆஃபிசுல இருக்கேன். க்ளையண்ட் சைட்ல இருந்தா தான் ஜீப், கேப் எல்லாம் கெடைக்கும். சொந்த ஆஃபிசுல வேலை செஞ்சா அதெல்லாம் கெடைக்காது. கிழக்கு கடற்கரை சாலைல இருக்கற நம்ம வீட்டுலேருந்து எம்ஜிஆர் தாத்தா வீட்டு பக்கத்துல இருக்கற எங்க ஆஃபிசுக்கு லேப்டாப்பைத் தூக்கிட்டு பஸ்சுல போனா முழி பிதுங்கிடுதுமா. நீ பொறக்கறதுக்கு ரொம்ப முன்னாடி, 2002ல வாங்குன ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பைக் ஒன்னு என்கிட்ட இருந்துச்சு. மூனு வருஷமா சென்னைக்கு வெளியே இருந்ததுனால, அந்த வண்டி ரொம்ப நாளா ஓட்டாம கொஞ்சம் மோசமான நெலைமையில இருந்துச்சு. அதையும் சரி பண்ணி கொஞ்ச நாள் ஓட்டுனேன். இருந்தாலும் ஏழு வருஷம் ஆயிட்டதுனால, அதிகமா ஓட்டாததுனாலயும் அதுக்கு மேல என்னென்ன செலவு வைக்குமோன்னு நெனச்சி ஸ்ப்ளெண்டரை வித்துட்டு ஒரு புது பைக் வாங்குனேன். அது தான் இப்போ நான் காலைல கிக் பண்ணும் போது சத்தம் கேட்டு நீ பயப்படறியே அந்த பஜாஜ் டிஸ்கவர் பைக். பைக் புக் பண்ணும் போது உன் நெனப்பு தான்மா முதல்ல வந்துச்சு. வண்டியோட பதிவு எண் 2308 தான் வேணும்னு தனியா பணம் கொடுத்து கேட்டு வாங்குனேன். ஆகஸ்ட் 23ஆம் தேதி நீ பொறந்தது தான் அதுக்கு காரணம்னு நான் சொல்லாமலேயே நீ புரிஞ்சிக்கிட்டு இருப்பேன்னு நம்பறேன். ஜனவரி மாசம் ஆரம்பத்துலேயே வண்டியை புக் பண்ணிட்டாலும் லாரி ஸ்ட்ரைக் காரணமா பல நாளு வண்டி கெடைக்காமலேயே இருந்துச்சு. நான் ரொம்ப நச்சரிச்சதுக்கப்புறம் "வண்டி வந்துடுச்சு, இன்னிக்கு வந்து டெலிவரி எடுத்துக்கங்க"னு பஜாஜ் டீலர் ஃபோன் பண்ணி சொன்ன அந்த நாள் ஜனவரி 23ஆம் தேதி. நான் வண்டி எடுத்த அன்னிக்கு சரியா உனக்கு வயசு ஆறு மாசம் முடிஞ்சிருந்தது.
வெட்டி அங்கிள் பர்மிதா பாப்பாவுக்குப் பேரு வச்சதுக்கான காரணத்தைத் தன்னோட பதிவுல எழுதிருக்காரு. அந்த ஐடியாவையும் நான் காப்பியடிச்சிட்டேன். உங்க அம்மாவும் நானும் சேர்ந்து உனக்கு "அர்ச்சனா ராஜ்"னு பேரு வச்சிருக்கோம். உனக்கு பிடிச்சிருக்காம்மா? கார்த்திகை நட்சத்திரத்துல நீ பொறந்ததுனால உனக்கு பேரு வைக்க அ, ஊ, இ, ஏ ன்னு நாலு எழுத்துகள் சொன்னாங்க. உனக்கு பேரு வைக்க, நீ பிறக்கறதுக்கு முன்னாடி நானும் உங்க அம்மாவும் பெங்களூர்ல நேம் புக் எல்லாம் வாங்குனோம். அதுல பல பேருங்க வாய்ல நுழையாத பேருங்களா இருந்துச்சு. பெரும்பாலான பேருங்க எதோ இதிகாச புத்தகத்துலேருந்து சுட்ட பேருங்களா இருந்துச்சு. "தாடகா"ன்னு(Tadaka) ஒரு பேரை பெண் குழந்தைகளுக்கு ஏத்த பேருன்னு அந்த புக்ல போட்டிருந்ததைப் பாத்ததும் தீ வைச்சு கொளுத்தனும் போல ஒரு கோபம் வந்துச்சு. தாடகா எவ்வளோ நல்ல பேராவே இருக்கட்டுமே...அது ராமாயணத்துல ஒரு அரக்கியோட பேருன்னு உலகத்துக்கே தெரியும். எந்த அம்மா, அப்பா தங்களோட குழந்தைக்கு தாடகான்னு பேரு வைப்பாங்க. அதுக்கப்புறம் அந்த பேரு வைக்கற புஸ்தகத்தை நாங்க தொடவே இல்லை. பேரு வைக்க நாலெழுத்து சொன்னதும் முதல்ல 'அ' எழுத்துல தான் யோசிச்சேன். எனக்கு "அர்ச்சனா"ன்னு பேரு வச்சா நல்லாருக்குமேன்னு தோனுச்சு. உங்கம்மாவுக்கு, உங்க தாத்தா, பாட்டி எல்லாருக்கும் அந்த பேரே ரொம்ப புடிச்சிப் போச்சு. அதுக்கப்புறம் ரொம்பெல்லாம் யோசிக்கலை. நீ பொறந்த 24 மணி நேரத்துக்குள்ள "அர்ச்சனா"னு உனக்கு பேரு வச்சாச்சு. ஜோசியர் உன்னோட பேரு ரெண்டு பகுதியா வர்ற மாதிரி இருந்தா நல்லாருக்கும்னு சொன்னதுனால அர்ச்சனாங்கிற பேர் கூட என் பேரில் பாதியான ராஜ்-ஐ எடுத்து, கூடுதலா நியுமராலஜியும் பார்த்து 'Archanaa Raj'னு பேரு பதிவு பண்ணிட்டோம். உனக்கு இனிஷியல் எல்லாம் கெடையாதும்மா. பிற்காலத்துல பாஸ்போர்ட் அப்ளிகேஷன், வேலைக்கு அப்ளிகேஷன் எல்லாம் நிரப்பும் போது First name, Last name பிரச்சனை எல்லாம் வராது. Archanaa-ங்கிறது First name, Raj-ங்கிறது Last name.
அப்புறம் உன்கிட்ட ஒரு ரகசியம் சொல்லணும். என்னோட நண்பர்கள் தங்களுக்கு குழந்தை பிறந்திருக்கற செய்தியை மெயில் மூலமா தெரிவிப்பாங்க. எனக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே ஒரு ஆசை இருந்துச்சு. இந்த மாதிரி ஒரு மெயில் அனுப்பற வாய்ப்பு எனக்கு வரும் போது "We have been blessed with a Baby Girl"னு அனுப்பனும்ங்கிறது தான் அது. அந்த ஆசையையும் நீ நிறைவேத்தி வச்சிருக்கே. நீ பொறந்ததும் உங்கம்மாவுக்கு முன்னாடி உன்னை பார்த்தது நான் தான். உங்கம்மாவுக்குப் பிரசவம் பாத்த டாக்டரும் நெறைய தமிழ் சினிமா பாப்பாங்க போல. ஆகஸ்ட் 23ஆம் தேதி சாயந்திரம் 3.35 மணிக்கு நீ பொறந்தே. ஒரு 20 நிமிஷத்துல உன்னை ஒரு துணியில சுத்தி வெளில நின்னுட்டிருந்த எனக்கு வாழ்த்து சொல்லி என் கைல குடுத்துட்டுப் போயிட்டாங்க. நான் அதை கொஞ்சம் கூட எதிர்பாக்கவே இல்லை. ஆனா என் வாழ்க்கைல என்னால மறக்கவே முடியாத ஒரு தருணம் அது. அவ்ளோ சின்ன குழந்தையை என் கைல நான் எடுத்து பாத்ததே இல்லை. ஏசி ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்து குளிர் தாங்க முடியாம உதடு துடிக்க நீ அழுதுக்கிட்டு இருந்தே. அதை பாத்து என் கண்ணு கலங்குனதுக்கான காரணம் என்னங்கிறது எந்த logic-க்குள்ளேயும் reasoning-க்குள்ளேயும் வராதது. இதே மாதிரி தான் விவசாயி அங்கிளும், சூரியா அண்ணன் பொறந்த அந்த தருணத்தை அழகா "ஜனனம்"னு பேரு வச்சி கவிதையா சொல்லிருக்காரு. உன்னோட ஒவ்வொரு அசைவையும், அழுகையையும், சிரிப்பையும் பாக்கும் போது அப்படியே நான் கரைஞ்சி போயிடறேன். "பெண் குழந்தைகள் அப்பாக்களுக்கு வரப்பிரசாதம்"னு ஒரு "பின்நவீனத்துவ பெருமான் அங்கிளும்" சொல்லிருக்காரு. அவரு பின்நவீனத்துவமா பல மேட்டர் சொன்னதுல இந்த ஒரு விஷயம் மட்டும் தான் எனக்கு புரிஞ்சிருக்கு. ஏனா இது நான் அனுபவிச்சித் தெரிஞ்சிக்கிட்டது.
உன்னை பாக்கனும்னு நீ பொறக்கறதுக்கு முன்னாலேருந்தே நண்பர்களா இருக்கற அங்கிள்ஸ் அண்ட் ஆண்ட்டீஸ் பல பேரு கேட்டிருந்தாங்க. அவங்களுக்காக உன்னோட இந்த படங்களை இங்கே போட்டிருக்கேன்.
இது 25-12-2008 அன்னிக்கு எடுத்தது. நீ முதன் முதல்ல குப்புற கவிழ்ந்தது 17-12-2008. ஆனா நான் அப்போ பெங்களூர்ல இருந்தேன், அதனால உன்னோட அந்த முதல் achievementஐ என்னால பாக்க முடியலை.
இது 27-12-2008 அன்னிக்கு எடுத்தது. உங்க ஆயா(நீ எப்படி கூப்பிட போறியோ தெரியாது) புடிச்சிருக்க, சாயந்திரம் நம்ம வீட்டுல எடுத்தது.
இது நாம திருவண்ணாமலை கோயிலுக்குப் போயிருந்த போது 03-01-2009 அன்னிக்கு எடுத்தது. உன்னை உங்க சித்தப்பாவும் ஆயாவும் கார்(வாடகை கார் தான்) மேல உக்கார வச்சிருக்காங்க.

