Monday, April 20, 2009

இப்படிக்கு செவ்வாழை சித்தப்பு...

அன்பு மகள் அர்ச்சனாவிற்கு,
உன் தந்தை உனக்காக எழுதும் இரண்டாம் கடிதம் இது. 'Letters from a Father to his Daughter'னு நம்ம நாட்டோட முதல் பிரதமர் பண்டித நேரு அவரோட மகளான இந்திரா பிரியதர்ஷினிக்கு(இந்திரா காந்தி) நிறைய கடிதங்கள் எழுதிருக்காரு. ஆனா என் கிட்ட நீ அந்த லெவலுக்கு எல்லாம் எதையும் எதிர்பாக்காதே. சரி...இப்போ அதை ஏன் என்கிட்ட சொல்றீங்கன்னு கேக்கறியா? நான் இதுக்கு மேல, நேரு போல பெரிய ஆளு ஆகப் போறதில்லை. ஒரு வேளை நீ வருங்காலத்துல இந்திரா காந்தி மாதிரி உலகத்தவரால் பேசப்படற ஒரு பெண்ணா ஆனால், அப்போ உன் நைனாவான என் பேரும் பேசப்படும்ங்கிற ஒரு நப்பாசை தான்.

இந்த லெட்டர் நான் உனக்கு எழுதிருக்கேன்னு தானே கேக்கறே? உனக்கு வந்த ரெண்டு லெட்டர்களைப் பத்திச் சொல்றதுக்குத் தான் நான் இந்த லெட்டரை எழுதறேன். என்னது? லூசாப்பா நீயா? அதுல என்ன சந்தேகம் உனக்கு. ஜார்கண்ட மாநிலம் ராஞ்சியில இருக்கற உங்க சின்ன சித்தப்பா ஹேமந்த் அவங்க மகளுக்காகன்னு ரெண்டு கடுதாசி போட்டுருக்காரு. உங்க பெரிய சித்தப்பா முரளிக்கும் எனக்கும் மூனு வயசு வித்தியாசம், ஆனா உங்க சின்ன சித்தப்பாவுக்கும் எனக்கும் பதினெட்டு வயசு வித்தியாசம். ஏன்னா உங்க சின்ன பாட்டிக்கும்(அதாவது ஹேமந்த் சித்தப்பாவோட மம்மி, அதாவது எங்க சித்தி) எனக்குமே பதினோரு வயசு தான் வித்தியாசம். இப்ப எட்டாவது பாஸ் பண்ணிட்டு ஒன்பதாவது போறாரு உங்க சின்ன சித்தப்பு. நீ உங்க அம்மா வயித்துல இருக்கும் போது உங்க ரெண்டு செவ்வாழை சித்தப்புக்களும் கூட்டிக்கிட்டு காடு மேடெல்லாம் சுத்தறதுக்கு ஒரு 'பருத்தி வீரன்' தான் மகனா வேணும்னு கேட்டாங்க.

ஆனா அவங்க எதிர்பார்த்த 'பருத்தி வீரன்' ஒரு கேர்ளா(girl) பொறந்ததுக்கு அப்புறமாவும் அவங்க உன் மேல வைக்கிற அன்புக்கு எந்த குறைவும் இல்லை. உங்க பெரிய செவ்வாழை சித்தப்பு காலைல உன்னை தூக்கி வச்சிக்கிட்டு வேடிக்கை வெளையாட்டு எல்லாம் காட்டறாரு. நீ ரொம்ப விரும்பி வெளையாடற ட்ரம்ஸ் வாசிக்கிற யானை பொம்மையும் வாங்கிட்டு வந்து குடுத்தாரு. மகள் உக்காந்து சாப்பிடறதுக்காக எங்கிருந்தோ அலைஞ்சு திரிஞ்சு உனக்காக குட்டி சைஸ்ல ஒரு ஈஸி சேர் வாங்கிட்டு வந்தாரு. உங்க சின்ன செவ்வாழை சித்தப்பு, எந்த கடைக்குப் போனாலும் அர்ச்சனாவுக்கு அர்ச்சனாவுக்குன்னு கவுன், வளையல், க்ளிப்னு என்னென்னமோ தேடித் தேடி வாங்கி போன தடவை ஆனுவல் லீவுக்குச் சென்னைக்கு வந்தப்போ உனக்காக குடுத்துட்டு போயிருக்காரு. இப்ப... உனக்காக ஜார்கண்ட்லேருந்து 'தமிழ்லேயே' ரெண்டு லெட்டர் எழுதி அனுப்பிருக்காரு. ஏன் 'தமிழ்லேயே'ன்னு இழுக்கறேன்னு பாக்கறியா? உங்க சித்தப்பு எல்கேஜி படிக்கும் போது சென்னையில இருந்தாரு... அப்போ மட்டும் தான் பள்ளிக்கூடத்துல தமிழ் படிச்சாரு. இப்போ அவரு படிக்கிறது எல்லாம் கேந்திரிய வித்யாலயா ஸ்கூல்ல. அங்கே அவர் தமிழ் ஒரு பாடமா இல்லை. இந்தி மட்டும் தான். தமிழ் அவரு எப்படியோ கத்துக்கிட்டு உனக்காக ரெண்டு கடுதாசி போட்டுருக்காரு. அவரு எழுதிருக்கற லெட்டரை உனக்குப் புரியற மாதிரி கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை எல்லாம் குறைச்சு இன்னொரு தடவை நான் எழுதிருக்கேன். Girl Child Day, ராணி வேலு நாச்சியார் அப்படின்னு உனக்கு கடுதாசி அனுப்பறதுக்கு First Day Coverகளைத் தேடித் தேடி வாங்கிருக்காரு சின்ன சித்தப்பு.

கடிதம் 1

20 மார்ச் 09, வெள்ளி

To
Dr. அர்ச்சனா ராஜ்

அன்பு மகள் அர்ச்சனாவுக்கு சித்தப்பு ஹேமந்த் எழுதுவது. நான் இங்கு நலம். நீ உந்தன் பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா மற்றும் செவ்வாழை சித்தப்பு நலமா? இங்கே உந்தன் சின்னபாட்டி, நான் மற்றும் அத்தை நலம். உன்னை விசாரிக்க தான் இந்த கடிதம் எழுதியிருக்கிறேன்.
- ஹேமந்த் சித்தப்பா

Note : This was my first letter in தமிழ்.
சிரிக்கவும்.
Happy Family
Daddy, Amma, Periya Anna, Anni, Chinna Anna, Archanaa, Rani, Dhava, Hemu




கடிதம் 2

01 ஏப்ரல் 09
டு
டாக்டர்.அர்ச்சனா ராஜ்

அன்புள்ள மகளுக்கு குட்டி சித்தப்பா எழுதுவது. நான் இங்கே நலம். நீ அங்கே நலமா. ஏப்ரல் 1ஆம் தேதிக்கு தேவையான ஒரு சில குறிப்பிட்ட செய்தி அது என்னவென்றால் எப்பவும் முட்டாள் ஆவக் கூடாது மற்றும் முட்டாள் ஆக்கக் கூடாது. இது தான் என் வேண்டுகோள்.
பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா, பெரிய சித்தப்பா மற்றும் அனைவரையும் கவனமாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.
அன்புடன்
ஹேமந்த்

அதோட இந்தியில வேற உனக்கு அன்பும் வாழ்த்துகளும் சொல்லிருக்காரு.





உனக்காக உங்க சித்தப்பு செஞ்சி அனுப்பன க்ராஃப்ட் ஐட்டம்

போன தடவை டாக்டர் கிட்ட போனப்போ டிவில வர்ற இந்த "Rota Virus Vaccination" பத்தி நானும் உங்கம்மாவும் கேட்டோம். அது என்ன நான் கேள்விப்பட்டதில்லையேன்னு டாக்டரே சொன்னாங்க. உனக்கு அந்த ரோட்டா வைரஸ் தடுப்பூசி மறக்காம போடச் சொல்லி உங்க சித்தப்பு நியாபகப் படுத்திருக்காரு.


இது 12 ஏப்ரல் 2009 அன்னிக்கு எடுத்தது - உங்க பாட்டி வாங்கிக் குடுத்த கவுனில்.


இது 18 ஏப்ரல் 2009 அன்னிக்கு எடுத்தது - குளிச்சு முடிச்சிட்டு ஃப்ரெஷா. உனக்கு இன்னும் நிக்க வராததுனால சேர்ல சாய்ச்சு நிக்க வச்சி இந்த ஃபோட்டோ எடுத்தோம்.


19 ஏப்ரல் 2009 அன்னிக்கு மாலை கப்பி மாமா உனக்கு வாங்கி குடுத்த Sphagetti Tops மற்றும் Overall போட்டு எடுத்த படம்.

Sunday, April 19, 2009

Rewind : தொலைக்காட்சி பிரபலங்கள்

நினைவு மீட்டல் : தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்கள் என்கிற பதிவில் பழம்பெரும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் பத்திய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேன். இப்பதிவில் வேறு சில தொலைக்காட்சி பிரபலங்களைக் குறித்த நினைவுகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த பிரபலங்கள் தொலைக்காட்சியில் பலவிதமான பொறுப்புகளை வகித்திருக்கிறார்கள் - Performerஆக, தொகுப்பாளராக, பேச்சாளராக இப்படி பல வித பொறுப்புகள். ஆனால் தொலைக்காட்சியில் தோன்றியதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு வேறு பெருமைகளும், சிறப்புகளும், திறமைகளும் இருக்கின்றன. அத்தகையவர்களைப் பற்றிய நினைவு பகிர்தலே இப்பதிவு. தொலைக்காட்சின்னு பொதுவா சொன்னாலும் இவர்கள் தூர்தர்ஷன் ஒற்றைத் தமிழ் அலைவரிசையோடு இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தவர்கள். இவர்களைப் பற்றி இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது மேலும் சில தகவல்களும் கிடைத்தன. அந்தச் சுட்டிகளையும் நான் ஆங்காங்கே கொடுத்திருக்கிறேன். அவர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால் "ஆ சுட்டிகளைக் கொறைச்சு ஆலோசிச்சால் மதி".

முனைவர் மா.நன்னன்



தொலைக்காட்சி பிரபலம் என்றதும், முதலில் என் மனதில் தோன்றியவர் முனைவர் மா.நன்னன் அவர்கள் தான். தூர்தர்ஷனில் 80-களின் பிற்பகுதியில் வெகு பிரபலமாக இருந்த "வாழ்க்கை கல்வி" நிகழ்ச்சியின் மூலம் மாலை வேளைகளில் தமிழ் மொழி பாடங்களை நடத்துவார். கனிவான குரலில் அவர் பேசுவதும் எளிமையான முறையில் தமிழ் கற்பித்ததும் நினைவுகளாக இன்னும் மனதில் பதிந்துள்ளன. தமிழில் எழுதும் போதும் பேசும் போதும் நாம் செய்யும் தவறுகளை உதாரணங்களுடன் ஒரு வகுப்பறைச் சூழலில் விளக்குவார். ஒரு முறை பாடங்களை விளக்கி விட்டு கரும்பலகையில் ஒவ்வொரு மாணவியாகக் கூப்பிட்டு எழுத வைத்தார். ஒரு மாணவி எழுதி முடித்ததும், அடுத்த மாணவியைக் கூப்பிடுவதற்காக அவர் சொன்னது "அடுத்த பாப்பா ஓடியா". இது கிட்டத்தட்ட 20+ ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தது, ஆனால் இன்றளவும் எங்கள் வீட்டில் மிகப் பிரபலமான வசனம் இது:) நன்னன் ஐயாவை இன்றும் 'மக்கள்' தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

சாரதா நம்பி ஆரூரான்


பட்டிமன்றப் பேச்சாளர், தமிழ் ஆர்வலர் என்பதனை மீறி சாரதா நம்பி ஆரூரன் அவர்கள் எனக்கு நினைவிருப்பதற்குக் காரணம் இவர் நன்றாகப் பாடக் கூடியவர் என்பதனால் தான். சைவ சமயப் பாடல்களை இவர் தூர்தர்ஷனில் சில நிகழ்ச்சிகளில் பாடக் கேட்டிருக்கிறேன். அதற்கென்றே ஒரு நிகழ்ச்சி இருந்தது தூர்தர்ஷனில். அந்நிகழ்ச்சியின் பெயர் நினைவிலில்லை. ஒரு வேளை "தேன் துளி"யா? இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் தமிழ்த் துறை தலைவராக இருந்தவர். இவர் மறைமலை அடிகள் குடும்பத்து மருமகள் என்பதனை 'தி ஹிண்டு' சுட்டியின் வழியாகத் தெரிந்து கொண்டேன்.

மேலும் தெரிந்து கொள்ள


சுவையாகவும் அதே நேரம் வாசகர்களின் கவனத்தைக் கவரக் கூடிய வகையில் சமய சொற்பொழிவுகள் ஆற்றுவதில் சிறந்தவராக இருந்தவர் புலவர் கீரன். இவருடைய நிகழ்ச்சிகளையும் தூர்தர்ஷனில் பார்த்திருக்கிறேன். புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவு தொலைக்காட்சியில் வந்தால் அதை கண்டிப்பாகப் பார்ப்பார் என் தந்தையார். திருவல்லிக்கேணியில் நாங்கள் இருந்த போது இரவு நேரங்களில் மேடைகளில் இவர் சொற்பொழிவாற்றுவதை குறித்து கேள்விப் பட்டிருக்கிறேன். அதை கேட்க என் தந்தையார் சென்றதும் நினைவிலிருக்கிறது. இவர் இறைவனடிச் சேர்ந்து பல்லாண்டுகள் ஆகிவிட்ட போதிலும், அவர் பேச்சுக்கள் எதுவும் எனக்கு நினைவில் இல்லாது போனாலும் அவருடைய சொற்பொழிவுகள் சிறப்பானவை என்று மனதில் இன்னும் பதிந்திருக்கிறது.

சுப்பு ஆறுமுகம்





"தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட...ஆமாம் வில்லினில் பாட வந்தருள்வாய் கலைமகளே" அப்படின்னு இவர் வில்லுப்பாட்டை ஆரம்பிச்சா சின்ன வயசுல செஞ்சிட்டிருக்கற வேலையை(படிக்கிற மாதிரி நடிக்கிறதை) எல்லாம் அப்படியே போட்டுட்டு டிவி பாக்க உக்காந்துருவோம். அப்பெல்லாம் வீட்டில் இருக்கும் எல்லாரும் இவருடைய நிகழ்ச்சிகளைப் பார்ப்போம் என்பதனால், மாலை ஆறு மணியளவில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இவருடைய பல நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். ஒரு நிகழ்வினைப் பற்றி எடுத்து சொல்வதற்கோ, அல்லது ஒரு செய்தியினைப் பரப்புவதற்கோ வில்லுப்பாட்டு நிகழ்ச்சியைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இவருடைய மகளையும், மகனையும் நான் இவருடைய வில்லுப்பாட்டு பார்க்கத் தொடங்கிய நாளிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றளவும் மக்கள் தொலைக்காட்சியில் சுப்பு ஆறுமுகம் ஐயா இருபதாண்டுகளுக்கு முன்னர் நான் பார்த்த அதே சுறுசுறுப்போடும், அதே சுவையோடும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை வழங்குவதைப் பார்க்கும் போது ஆச்சரியம் மேலிடுகிறது.

மேலும் தெரிந்து கொள்ள 1


மேலும் தெரிந்து கொள்ள 2

மேலும் தெரிந்து கொள்ள 3


ரேவதி சங்கரன்


சந்தனக் கூடு உருஸ் என்ற இசுலாமியத் திருவிழாவினைப் பற்றியும், கிறித்தவர்களின் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் பற்றியும், கும்பாபிஷேகம் என்பதனை தமிழில் குடமுழுக்கு என்றழைப்பர் என்பதனையும் நான் கேள்விபட காரணமாயிருந்தது தூர்தர்ஷனில் மாலை வேளைகளில் ஒளிபரப்பாக்கிக் கொண்டிருந்த "உலாவரும் ஒளிக்கதிர்" என்ற நிகழ்ச்சி. தமிழகம் எங்கிலும் நடைபெறும் விழாக்களைப் படம்பிடித்து அரை மணி நேரத் தொகுப்பாக்கி ஒளிபரப்புவார்கள். அந்த நிகழ்ச்சியில் தான் ரேவதி சங்கரன் அவர்களின் குரலை முதன்முறையாகக் கேட்டேன். இவருடைய குரலில் உச்சரிப்பு, ஏற்ற இறக்கம் அனைத்துமே பிரமாதமாக இருக்கும். 2005ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ஒரு ஆண்டு நான் இந்தூரில் வேலை செய்துக் கொண்டிருந்த போது, பல நாட்களில் நான் கேட்ட ஒரே தமிழ் குரல் இவருடையதாக மட்டுமே இருந்திருக்கும். காலை ஏழு மணிக்கு அலுவலகப் பேருந்து பிடிக்க ஓடுவதற்கு முன்னர் சன் டிவியில் காலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இவர் தொகுத்து வழங்கி வந்த ஏவிஎம்மின் மங்கையர் சாய்ஸ் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டுச் செல்வது வழக்கம். வடிவேலு, பிரபு நடித்த ஒரு திரைப்படத்தில் ஹக்கீஸ் கட்டிக் கொண்டு அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் மருமகனைக் கண்டு "குற்றால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா"என்று இவர் நக்கல் விடுவதும் ரசிக்கும் படியாக இருக்கும். இவர் சில காலம் மங்கையர் மலர் இதழின் ஆசிரியராக இருந்தார் என்றும் கேள்வி.

மேலும் தெரிந்து கொள்ள 1

மேலும் தெரிந்து கொள்ள 2

பர்வீன் சுல்தானா


சில சமயங்களில் எதோ ஒரு காரணத்தினால் நம்முடைய மனதில் ஒரு நம்பிக்கை விதைக்கப் பட்டிருக்கும். அது எப்படி நம் மனதில் வந்தமர்ந்தது என்று யோசித்துப் பார்த்தால் நம்மாலேயே அதற்கு விளக்கம் சொல்ல முடியாது. சிறு வயதில் இருந்த அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை தான் "இந்தி பேசுபவர்கள் வடநாட்டில் வசிப்பவர்களும் முஸ்லிம்களும்" என்பதாகும். இசுலாமியர்கள் பேசுவது உருது என்று கூட அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை. அதற்கேற்றாற் போல பள்ளியில் என்கூட படித்த பையன்களும் அவர்களுக்குள் உருதுவில் தான் பேசிக் கொள்வார்கள், அத்தோடு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறுவதற்கே மிகவும் சிரமப் படுவார்கள். இந்நிலையில் தான் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பட்டிமன்றங்களில் செல்வி பர்வீன் சுல்தானா(அப்போது அவர் மாணவியாகத் தான் இருந்தார்) அவர்கள் ராமனைப் பற்றியும், அனுமனைப் பற்றியும் கம்பராமாயணத்திலிருந்து மேற்கொள்கள் காட்டி விவாதம் செய்வதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப் பட்டேன். கவிக்கோ அப்துல் ரகுமான், சதாவதானி செய்கு தம்பி பாவலர் போன்ற மதத்தினை மீறிய தமிழ் மொழிப் பற்று கொண்ட அறிஞர்களைப் பற்றி பின்னாளில் தான் தெரிந்து கொண்டேன். உருதுவைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழை நன்றாகப் படிக்கக் கூடிய இசுலாமிய நண்பர்களும் பின்னாளில் அறிமுகம் ஆனார்கள். ஆயினும் நெடுநாளைய மூ(ம)டநம்பிக்கை தகர்வதற்கு காரணமாயிருந்தவர் பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்கள்( இவர் இப்போது சென்னை SIET கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்). விஜய் டிவியில் "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு சுட்டிகள்" நிகழ்ச்சியில் இவரை நடுவராகக் காணலாம்.

திருமதி.சுதா சேஷையன் என்றொரு பட்டிமனறப் பேச்சாளர் நினைவுக்கு வருகிறார். புள்ளிவிவரங்களோடு, மிகவும் தெளிவாகவும் அழகாகவும் விவாதம் செய்வார். ஆனால் ஜோக்கெல்லாம் அடிக்க மாட்டார், சீரியஸாகத் தான் பேசுவார். அவரை "ஸ்ரேயா அப்பா" ராஜா, பேராசிரியர் அறிவொளி(நீண்ட தாடி வைத்திருப்பார்) அவர்கள் எல்லாம் மிகச் சுலபமாக நகைச்சுவையாகப் பேசி அவருடைய வாதத்தை எதிர்த்து ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்று விடுவார்கள். ஆனால் சுதா சேஷையன் அவர்களுடைய வாதத்தில் எப்போதும் நேர்மை இருக்கும்.

மாலா மணியன்


தூர்தர்ஷனின் இரண்டாவது அலைவரிசை தொடங்கிய புதிதில் செவன்த் சேனல் நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் பலவும் ஒளிபரப்பாகும். அந்நிறுவனத்தைச் சேர்ந்த மாலா மணியன் அவர்கள் அக்காலத்தில் வெகு பிரபலம். நிகழ்ச்சித் தொகுப்பாளராக, பேட்டி காண்பவராக, தயாரிப்பாளராகப் பல பொறுப்புகளில் இருந்த இவர் "சின்னத்திரையின் புன்னகை அரசி" என்றால் அது மிகையாகாது.


மேலும் தெரிந்து கொள்ள


ரவி ராகவேந்தர்

இவர் சினிமாவில் பெரியளவு பேசப்படாதது கண்டு உண்மையிலேயே எனக்கு மிகவும் ஆச்சரியம் தான். எனக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சி நடிகர்களில் ஒருவர் இவர். Handsome, Dignified, Charismatic இவ்வாறு இவருக்குப் பல adjectiveகளைச் சொல்லலாம். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு தொடர் 'நிலாப் பெண்ணே'. அதில் இவருடைய பெயர் ரேவந்த். இவரைக் காதலிக்கும் ஒரு பெண் தன் முகம் காட்டாமல் இவருக்குத் தொலைப்பேசியில் பேசி தன்னை கண்டுபிடிப்பதற்காகப் பல புதிர்களைப் போடுவார். அப்புதிர்களை எல்லாம் விடுவித்து கடைசியில் அப்பெண்ணை அவர் சந்திப்பாரா என்பதே அப்பபதின்மூன்று வாரத் தொடரின் கதை. இவர் இப்போது ஜீ டிவியில் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' என்ற தொடரில் நடித்து வருகிறார்.

வி.வி.சுப்பிரமணியம்


'சிந்திக்க ஒரு நொடி', 'வினாடி வினா' ஆகியவை தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி வந்த குவிஸ் நிகழ்ச்சிகள். எனக்கு க்விஸ் போட்டிகளின் மீது ஆர்வம் ஏற்பட காரணமாயிருந்தது இந்நிகழ்ச்சிகள் தான். இந்நிகழ்ச்சிகள் சிலவற்றின் குவிஸ் மாஸ்டராகச் செயல்பட்டவர் திரு.வி.வி.சுப்பிரமணியம் அவர்கள். இவர் விவேகானந்தா கல்லூரியின் தாவரவியல் துறை பேராசிரியாராகவும் தலைவராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். இவர் பெயரை வைத்து கூகிளில் தேடியதில் அதே பேரில் வயலின் வாத்தியக் கலைஞர் ஒருவர் இருப்பதும் தெரிய வந்தது. இருவரும் ஒன்று தானா என்ற ஐயமும் மனதில் உள்ளது. இவருடைய க்விஸ் கேள்வி பதில்களை இன்றும் தி ஹிண்டுவின் "Young World" வார இதழில் காணலாம்.

ஹியூக் மற்றும் கொலீன் கேண்ட்சர்


Hugh and Colleen Gantzer - இவர்களைப் பற்றி பலருக்குத் தெரிந்திருக்காதென நினைக்கிறேன். ஏனெனில் இவர்கள் தொலைக்காட்சியில் நேரடியாகத் தோன்றியதில்லை. ஆங்கிலோ இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஹியூக் மற்றும் கொலீன் கேண்ட்சர் இவ்விருவரும் இந்தியாவின் தலைசிறந்த பயண எழுத்தாளர்கள். 1987-88 வாக்கில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான 'Looking Beyond with Hugh and Colleen Gantzer' தான் நான் தொலைக்காட்சியில் கண்ட முதல் பயண நிகழ்ச்சி. மகாபலிபுரத்தை முதன்முதலில் தொலைக்காட்சியில் கண்டது இந்நிகழ்ச்சியில் தான்.


மேலும் தெரிந்து கொள்ள


சுமந்த் சி.ராமன்



தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி வரும் 'BSNL Sports Quiz' பற்றிக் கேள்வி பட்டிருப்பீர்கள். அதை தொகுத்து வழங்குபவர் டாக்டர் சுமந்த் சி.ராமன் அவர்கள். இவரையும் டிவியில் வெகுநாட்களாகக் கண்டு வருகிறேன். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் விளையாட்டு வர்ணனைகள் திறம்படச் செய்வார். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்ற இவர், தற்போது டிசிஎஸ் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
BSNL Sports Quiz நிகழ்ச்சியில் இருமுறை நான் இவருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.
மேலும் தெரிந்து கொள்ள


நரோத்தம் பூரி


இவரை நியாபகம் இருக்குதுங்களா? இவரும் ஒரு டாக்டர் கம் வர்ணனையாளர் தான். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏதுமில்லாதிருந்த காலத்தில் தூர்தர்ஷனில் விளையாட்டு குறிப்பாக கிரிக்கெட்டின் ஆங்கில வர்ணனையாளராக இருந்தவர் இவர். இவரும் அனுபம் குலாட்டி என்ற பெயர் கொண்ட தாடிக்காரர் ஒருவரும் ஞாயிறு மாலைகளில் வரும் "World of Sport" நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார்கள். ESPN, Star Sportsஇல் வரும் ஆங்கில வர்ணனையாளர்களான ஹர்ஷா போக்லே, ரவி சாஸ்திரி போன்ற சிறந்த வர்ணனையாளர் என்று சொல்ல மாட்டேன். இருப்பினும் அக்காலத்தில் மிகப் பாடாவதியான இந்தி வர்ணனைகளுக்கு நடுவில் இவருடைய ஆங்கில வர்ணனை சற்று ஆறுதலாக இருக்கும்.


மேலும் தெரிந்து கொள்ள


டாம் ஆல்டர்


ஜூனூன் இந்தி தொடரில் 'கேஷவ் கல்சி' என்ற கதாபாத்திரத்திலும் பல இந்தி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் இவர். அமெரிக்கக் கிறித்தவ போதகர்களின் மகனாகப் பிறந்த இவர், இந்தியாவில் மசூரியில் தன்னுடைய இளமையைக் கழித்தார். மிகவும் சுத்தமான உருது மொழி பேசக் கூடிய இவர் நாடகங்களிலும் நடித்து வருகிறார். புகழின் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்த பதினைந்து வயது சச்சின் டெண்டுல்கரை 1988இல் இவர் எடுத்த நேர்காணல் சச்சினுடைய முதல் தொலைக்காட்சி நேர்காணல் ஆகும்.
மேலும் தெரிந்து கொள்ள

Monday, April 13, 2009

Deltiology என்ற பொழுதுபோக்கு - ஒரு அறிமுகம்

தபால் தலை சேகரித்தல்(Philately), நாணயங்கள் சேகரித்தல்(Numismatics) - இவ்விரண்டு பொழுதுபோக்குகளுக்கு அடுத்த படியாக உலகளவில் மூன்றாவது அதிகப் பிரபலமான பொழுதுபோக்கு தான் இந்த Deltiology. சரி Deltiology என்றால் என்ன? தபால் அட்டை சேகரிக்கும் பொழுதுபோக்கைத் தான் Deltiology என்கிறார்கள்.

தபால் அட்டை என்றதும், முன்னொரு காலத்தில் 25 பைசாவுக்குக் கிடைத்த புலி முத்திரை அச்சிடப்பட்ட "நான் நலம் நீ நலமா" என்று நாலு வரி ஆத்திர அவசரத்துக்கு எழுதிப் போடும் தபால் அட்டையையோ, தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சூப்பர் ஹிட் முக்காப்லாவில் அவர்கள் கொடுப்பதாகச் சொல்லும் அயர்ன் பாக்ஸையோ, டிவி பொட்டியையோ, வாஷிங் மெஷினையோ, நம்பி பதில் எழுதிப் போட்ட இரண்டு ரூபாய் மதிப்பு கொண்ட போட்டி தபால் அட்டையையோ(Competition Postcard) நினைத்துக் கொள்ளாதீர்கள். நான் சொல்வது படத் தபால் அட்டைகளைப் பற்றி(Picture Postcards). இவ்வகை தபால் அட்டைகளை ஹிகின்பாத்தம்ஸ், ஒடிசி, லேண்ட்மார்க் போன்ற பெரிய புகழ்பெற்ற புத்தகக் கடைகளில் நீங்கள் கண்டிருக்கலாம். நானும் இத்தபால் அட்டைகளை(Picture Postcards) புத்தகக் கடைகளில் சிறுவயதில் கண்டிருந்தாலும், அதை பற்றித் தெரிந்து கொள்ள பெரிதாக ஏதும் முயற்சி மேற்கொள்ளவில்லை. தாஜ்மஹால், குதூப் மினார் போன்ற வரலாற்றுச் சின்னங்களுக்குச் சுற்றுலா சென்ற போது அவ்விடங்களிலும் இச்சின்னங்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டத் தபால் அட்டைகளை வாங்கியிருக்கிறேன். ஆனால் அவை நான் எடுத்துச் செல்லும் ஃபிலிம் கேமராவின் மீது நம்பிக்கை இல்லாது, படங்கள் எதுவும் சரியாக வரவில்லை எனில் இப்படங்களாவது இருக்குமே என்ற எண்ணத்தில் மட்டுமே நான் வாங்கியவைகளாக இருந்தன.

சிறுவயது முதலே தபால் தலைகளை நான் சேகரித்து வந்திருக்கிறேன். ஆனால் அதுவும் கூட சரியான வழிகாட்டலும் இலக்குமின்றி ஏனோ தானோவென்று செய்து வந்தேன். நான்கு வருடங்களுக்கு முன் எங்கள் அலுவலகத்தில் வேலை செய்து வந்த ஒருவர் தந்த ஊக்கத்தின் பேரில் தபால் தலை சேகரிப்பை முறையாக குறிப்பிட்ட சில தலைப்புகளில் மட்டும் செய்யத் தொடங்கினேன். அச்சமயத்தில் தபால் தலைகளை எங்கிருந்து பெறுவது என்ற ஒரு கேள்வி எழுந்தது. தபால் தலைகளை eBay போன்ற வலைத்தளங்களில் பணம் கொடுத்தும் வாங்கலாம். ஆனால் பள்ளிக் கூடத்தில் படிக்கும் போது மற்ற சிறுவர்களுடன் தபால் தலைகளைப் பரிமாற்றம் செய்து கொண்டது போன்ற வழி ஏதேனும் இருக்கிறதா என்று நண்பன் திருமுருகனைக் கேட்ட போது Postcrossing எனும் வலைத்தளத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். சிறுவயதில் ஒரு செயின் கடிதம் எங்கிருந்தோ வரும் கேள்வி பட்டிருக்கிறீர்களா? அக்கடிதத்தில் ஐந்து விலாசங்கள் இருக்கும். அதில் கடைசி விலாசத்துக்கு நீங்கள் ஒரு தபால் அட்டையை அனுப்ப வேண்டும். அதன் நீங்கள் அக்கடிதத்தில் உங்கள் பேரையும் சேர்த்து கொண்டு மேலும் ஐந்து பேருக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு நீங்கள் அனுப்பினால் உங்களுக்குத் தபால் அட்டைகள் உலகின் பல மூலைகளிலிருந்தும் வரும் என்று சொல்லியிருக்கும். நான் கூட எட்டணாவுக்கு ரஜினி கமல் படங்கள் போட்ட தபால் அட்டைகளை அனுப்பி வைத்தேன். ஆனால் எனக்கு பதிலுக்கு ஒன்றும் வரவில்லை. அதன் பின்னர் தபால் அட்டை அனுப்பும் மோகம் நின்று போனது.

Postcrossing தளத்தை நண்பன் அறிமுகப்படுத்திய போது நமக்கு இதன் மூலம் எதுவும் பதிலுக்கு வருமா என்ற ஒரு சந்தேகம் இருக்கத் தான் செய்தது. ஆனால் அத்தளத்தின் மூலம் நண்பன் தனக்கு தபால் அட்டைகள் வந்திருப்பதாகவும், அதன் மூலமாக பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும் உறுதியளித்தான். சரி இதன் மூலம் தபால் அட்டைகளில் ஒட்டப்பட்டு வரும் தபால் தலைகளைச் சேகரிக்கலாமே என்று நானும் ஒரு கணக்கைத் துவக்கினேன். நிற்க. அதற்கும் முன் இது ஆம்வே(Amway) போன்றோ அல்லது Goldquest போன்றோ ஆள்பிடிக்கும் ஒரு விளம்பர முயற்சி இல்லை. உலகம் முழுவதும் இரண்டு மில்லியன் தபால் அட்டைகளுக்கும் மேலாகப் பரிமாற்றம் நடந்து முடிந்திருக்கும் ஒரு சேவையைப் பற்றிய தகவல் தான். மேலும் தபால் அட்டைகள் சேகரிப்பைப் பற்றியும் அதன் மூலம் தெரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களைப் பற்றியும் விளக்கக் கூடிய ஒரு அறிமுகப் பதிவு தான். இதில் எந்த வியாபார நோக்கமும், எனக்கு உங்களுக்கு இதை அறிமுகப் படுத்துவதின் மூலமாக எந்த பொருளாதார லாபமும் இல்லை :)

இது வேலை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
1. முதலில் நீங்கள் ஒரு Postcrossing கணக்கு(User ID) துவங்க வேண்டும். எல்லாம் இலவசம் தான்.
2. நீங்கள் ஒரே சமயத்தில் ஆறு தபால் அட்டைகள் வரை அனுப்பலாம். எந்த விலாசத்துக்கு அனுப்ப வேண்டும் என்று அந்த தளத்திலேயே உங்களுக்குத் தகவல் கிடைக்கும். மேலும் உங்களுக்கு மின்னஞ்சலும் வரும்.
3. நீங்கள் அனுப்பப் போகும் ஒவ்வொரு தபால் அட்டைக்கும் ஒரு அடையாள எண் இருக்கும்(Postcrossing ID). இது நீங்கள் விலாசம் வேண்டும் போது அந்த விலாசத்தோடு சேர்த்தே அத்தளத்திலேயே உங்களுக்குக் கிடைக்கும்.
4. உங்கள் தபால் அட்டை கிடைக்கப் பெற்றதும், தபால் அட்டையில் உள்ள ID கொண்டு உங்கள் தபால் அட்டை கிடைக்கப் பெற்றவர் பதிவு செய்வார்.
5. நீங்கள் அனுப்பிய ஒரு தபால் அட்டை சென்று சேர்ந்துள்ள படியால், நீங்களும் ஒரு தபால் அட்டை பெறுவதற்கு தகுதி உடையவர் ஆகிறீர்கள்.

உங்களுக்கு இந்த தபால் அட்டை எங்கிருந்து வரும் என்பது தான் இதிலுள்ள சுவாரசியமே. ஏதோ ஒரு நாட்டிலிருந்து யாரோ ஒருவர் உங்களுக்கு ஒரு Picture Postcard அனுப்பி வைப்பார். அவருடைய நாட்டினைப் பற்றி, அங்குள்ள கலாச்சாரத்தினைப் பற்றிச் சில தகவல்களை எழுதி உங்களுக்கு அனுப்பி வைப்பார்(நீங்களும் உங்கள் தபால் அட்டைகளை அனுப்பும் போது இதையே தான் செய்திருப்பீர்கள்). இது கேட்பதற்கு ஏதோ சின்னப்பசங்க விளையாட்டு மாதிரி தோன்றினாலும், மிகவும் உபயோகமானதும், பயனுள்ளதுமான ஒரு நல்ல பொழுதுபோக்கு இது. பொட்டித் தட்டுவது மட்டும் தான் என்னுடைய வாழ்க்கை என்று ஏனோ என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தபால் அட்டைகளைச் சேகரிக்கத் தொடங்கியதிலிருந்து நமக்கு தெரிந்தது எவ்வளவு குறைவானது என்பது புரிகிறது. I would say its also a humbling experience. இதற்கு எவ்வளவு செலவாகும். ஒரு picture postcard குறைந்த பட்சமாக ஐந்து ரூபாய் முதல் கிடைக்கிறது. ஆறு, எட்டு, பத்து, முப்பது என பல வகைகளிலும் அளவுகளிலும் இவ்வட்டைகள் கிடைக்கின்றன. விலையுயர்ந்த அட்டையைத் தான் அனுப்ப வேண்டும் என்றோ இந்த தலைப்பில் தான் அனுப்ப வேண்டும் என்றோ விதிமுறைகள் ஏதுமில்லை. ஆனால் இது நம் நாட்டைப் பற்றி நாம் ஒரு வெளிநாட்டவருக்குத் தெரியப்படுத்தும் முயற்சி என்பதால் நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமான அட்டைகளை அனுப்புவதை நான் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஒரு அட்டைக்கு எட்டு ரூபாய் தபால் தலை ஒட்ட வேண்டும் ஆக ஒரு அட்டைக்கு 13 ரூபாய்கள்(ஐந்து ரூபாய் அட்டை என்றால்) செலவு. ஒரு மாதத்தில் நீங்கள் ஆறு அட்டைகளை அனுப்புவதை வழக்கமாகக் கொண்டீர்கள் ஆனால் ஒரு மாதத்துக்கு 78 ரூபாய் செலவு. ஒரு பாரில் உக்காந்து ஹேப்பி ஹவர்சில் பீர் அடிப்பதை விட குறைவான செலவு தான். ஆனால் இதன் மூலம் கிடைக்கும் போதையை அனுபவித்தால் தான் தெரியும்.

தபால் தலைகளைச் சேகரிப்பதற்காக இத்தபால் அட்டைகளைச் சேகரிக்கத் தொடங்கிய நான் இப்போது தபால் அட்டைகளையே தனியாகச் சேகரிக்கத் தொடங்கிவிட்டேன். இது வரை 44 அட்டைகள் எனக்கு உலகத்தின் பல்வேறு மூலைகளிலிருந்தும் வந்திருக்கின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.


பிரான்சு நாட்டில் இருந்து வந்த ஈஃபிள் கோபுரம் தபால் அட்டை



வின்ஸ்டன் சர்ச்சில், பாப்லோ பிகாசா, அன்னை தெரசா போன்ற புகழ்பெற்ற பிரபலங்களைப் புகைப்படம் எடுத்த யூசுப் கார்ஷ்(Yousuf Karsh) என்ற புகழ்பெற்ற கனேடிய புகைப்படக்காரரைப் பற்றி நான் தெரிந்து கொள்ள உதவிய தபால் அட்டை.



சஸ்ஸெக்ஸ் எனும் ஊரின் அழகிய சுற்றுலா தளங்களைக் காட்டும் கிரெட் ப்ரிட்டன் நாட்டு தபால் அட்டை.



போர்ச்சுகல் நாட்டு தலைநகரான லிஸ்பன் இப்படித் தான் இருக்குமாம். இங்கெல்லாம் போய் பார்க்கும் வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும்?



Postcrossingஇல் அதிக பட்ச உறுப்பினர்களைக் கொண்ட நாடு பின்லாந்து. அந்நாட்டின் பிரபல ஓவியரான காஜ் ஸ்டென்வால்(Kaj Stenvall) என்பவரது சிறப்பு இது போன்ற வாத்து ஓவியங்கள். சாதாரண மனிதர்கள் செய்யும் அத்தனை செயல்களையும் ஒரு வாத்து செய்தால் எப்படி இருக்கும் என்பதே இவருடைய கற்பனை. ஸ்டென்வாலுடைய ஓவியங்கள் பதிப்பிக்கப்பட்ட தபால் அட்டைகளைத் தேடி சேகரிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.



ஹாரி பாட்டர் தபால் அட்டை ஹாலந்து நாட்டிலிருந்து



ஃபின்லான்ந்து நாட்டின் குளிர்காலத்தை நமக்கு விளக்கிக் கூறும் தபால் அட்டை.



மேலே இருப்பவை எல்லாம் எனக்கு கிடைத்தவை. நம் இந்திய நாட்டு தபால் அட்டைகளைப் பார்த்தால் உங்களுக்கே நம் நாட்டின் மீது ஒரு பெருமை ஏற்படும். மற்ற நாட்டவர்களிடமிருந்து நாம் எவ்வளவு வேறுபட்டிருக்கிறோம் என்றும், நாம் காட்டுவதற்கும் பெருமை படுவதற்கும் நிறைய இருக்கிறது என்பதும் விளங்கும். கீழே இருப்பவை நான் சிலருக்கு அனுப்பிய தபால் அட்டைகள். நம் நாட்டில் இப்பொழுதுபோக்கு அவ்வளவாகப் பிரபலம் அடையாது இருந்தாலும், சில தயாரிப்பாளர்கள் தொடர்ந்து இந்திய picture postcardsஐ வெளியிட்டுக் கொண்டு தானிருக்கிறார்கள்.


ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஒரு சிற்பம்.



கோவா மாநிலத்தில் கண்டோலிம் கடற்கரையில் சூரியன் மறையும் நேரம்.



பாண்டிச்சேரியைப் பற்றிய ஒரு அட்டை. இவ்வகை அட்டைகளை Multi-view cards என்கிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட காட்சிகள் இந்த ஒரு அட்டையில் இருக்கிறதென்பதால்.



இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மேர் கோட்டை.



யானை...Postcrossingஇல் இந்தியாவிலிருந்து வரும் யானை தபால் அட்டைகளுக்காகப் பல விசிறிகள் இருக்கின்றார்கள் என்பது நான் அனுபவித்துத் தெரிந்து கொண்ட ஒன்று.



இவை எல்லாம் தபால் அட்டையின் ஒருபுறம் தான். அதன் பின்புறம் கண்ணுக்குத் தெரியாத யாரோ ஒருவர் உங்களுக்காகக் கைபட எழுதி அனுப்புவதை வாசிக்கையில் ஒரு உவகை வருமே...அதை நான் எப்படி சொல்லி புரிய வைப்பது என்று தெரியவில்லை. என்னால் முடிந்த அளவுக்கு தபால் அட்டை சேகரிப்பைப் பற்றி ஒரு அறிமுகத்தை கொடுத்து விட்டேன். உங்கள் மனதில் இது ஒரு ஆர்வத்தைத் தூண்டியிருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். Postcrossing தளத்தில் என்னுடைய பக்கத்தையும் எனக்கு வந்த அட்டைகளையும் இங்கே பாருங்கள். இது பற்றி மேலும் என்னென்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என்று தகவல் வேண்டும் என்று பின்னூட்டமிட்டு ஊக்கமளித்தால் மேலும் எழுதுகிறேன் :)